சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, November 20, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 21



பார்வையாளர் நேரம் முடிந்த பின்னும் லீ க்யாங்கின் உளவாளிகள் டெர்கார் மடாலயம் முன்பு நின்று கொண்டிருப்பது ஆசானுக்கு லேசான கவலையை ஏற்படுத்தினாலும் அக்‌ஷய் அதில் சிறிதும் பாதிக்கப்படவில்லை. அது ஒரு விஷயமே அல்ல என்பது போல் அவன் ஆசானிடம் அடுத்த கேள்வியைக் கேட்டான்.

மைத்ரேயனின் குடும்பத்திற்கு அவன் தெய்வீகப்பிறவி என்பது தெரியுமா?

“தெரியாது. குடும்பத்தினர் வாயில் இருந்து தகவல் கசிந்து அதுவே பாதகமாகி விடக்கூடாது என்று எச்சரிக்கையாக இருந்தோம். சொல்லப் போனால் மைத்ரேயனை அடையாளம் தெரிந்து வைத்திருக்கிறவர்களே விரல் விட்டும் எண்ணும் எண்ணிக்கையில் தான் இருக்கிறோம்

“அவன் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள்

அவர் பெற்றோருக்கு அவர் மூன்றாவது மகன். அவர் தந்தை நான்கு வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். தாயும், இரு அண்ணன்களும் சின்னச் சின்ன வேலைகள் செய்து ஏதோ சம்பாதிக்கிறார்கள். ஆனாலும் வறுமையில் தான் அவர் குடும்பம் இருக்கிறது

ஆசான் மைத்ரேயனை “அவர்என்று மரியாதையுடன் அழுத்திச் சொன்னது, அக்‌ஷய் “அவன்என்று சொன்னதைத் திருத்துவது போல இருந்தது.  

ஆசான் தொடர்ந்து சொன்னார். “...மைத்ரேயர் அரசாங்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்....

தோற்றத்தில் சாதாரணம், அரசாங்கப் பள்ளியில் படிப்பு, வறுமையான குடும்பம், இன்னும் புத்தபிக்கு ஆகாமல்- இருப்பது எல்லாமாகச் சேர்ந்து லீ க்யாங்கின் பார்வையில் படாமல் மைத்ரேயனைக் காப்பாற்றி வருவதாக அக்‌ஷய்க்குத் தோன்றியது. கூழாங்கல்லாகவே தோன்றுவதால் தான் வைரம் பத்திரமாய் இருக்கிறதோ! ஆனால் இணையில்லாத அறிவாளி என்று ஆசானே எண்ணி பயப்படும் லீ க்யாங் சீக்கிரமே மைத்ரேயனை நெருங்கி விடுவான் என்பதில் சந்தேகமில்லை.

அக்‌ஷய் சொன்னான். “எனக்கு லீ க்யாங்கைப் பற்றி இன்னும் விவரமாகச் சொல்லுங்கள்....

“லீ க்யாங் ஒரு கண்டிப்பான அடிமட்ட கம்யூனிஸ்ட் தலைவரின் ஒரே மகன். தந்தை அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். தாயார் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். அவனுக்கு நாட்டுப்பற்று அதிகம். ஆனால் கம்யூனிஸம் மீது அவனுக்குப் பெரிய ஈடுபாடு இருந்ததில்லை. சுய கட்டுப்பாடு அதிகம். புகை, மது உட்பட அவனுக்கு எந்தக் கெட்ட பழக்கங்களும் இல்லை. பெண்களிடமும் விலகியே இருப்பான். அறிவு தாகம் மிகுந்தவன். என்னவெல்லாம் அவனுக்குத் தெரியும் என்பதை முழுமையாக இது வரை யாரும் கண்டுபிடித்ததில்லை. ஆள்களை எடை போடுவதில் நிகரில்லாதவன். ஒரு காலத்தில் செஸ் விளையாட்டில் ஒரு காலத்தில் அதிக ஈடுபாடு இருந்தது. தேசிய அளவில் போட்டிகளில் கலந்து கொண்டு பல ஆண்டுகள் முதலிடத்தில் இருந்திருக்கிறான். உளவுத்துறையில் நுழைந்தவுடன் செஸ் ஆடுவதையும் நிறுத்திக் கொண்டவன். தன் சுயலாபத்திற்காக இது வரை அவன் எதையும் செய்ததாக அவன் எதிரிகள் கூட சொல்ல முடியாது. ஆனால் தன் நாட்டுக்காக அவன் எதையும் செய்வான்....
 
நீங்கள் அவனை நேரில் சந்தித்திருக்கிறீர்களா?.... உங்களுக்கு நேரடி அனுபவம் எதாவது உண்டா?

திபெத்தில் என் பின்னால் அவன் ஒற்றர்கள் எப்போதும் இருப்பார்கள். அதற்கு தலாய் லாமாவிடம் நான் நெருக்கமாய் இருக்கிறேன், தலாய் லாமாவிடமிருந்து மற்றவர்களுக்கும், மற்றவர்களிடமிருந்து தலாய் லாமாவுக்கும் தகவல் பரிமாற்றத்திற்கு உதவியாய் இருக்கிறேன் என்பதுவும் ஒரு காரணம். பெரும்பாலும் நான் அவர்களுக்கு சிக்க மாட்டேன்.  ஏதாவது செய்து அவர்களிடம் இருந்து தப்பித்து விடுவேன் அல்லது அவர்களைக் கண்டபடி அலைய வைப்பேன். அவன் ஓற்றர்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் என்னைத் தவற விட்டு விடுவார்கள்.... ஒரே ஒரு தடவை அவனே நேரில் வந்தான். அவன் வந்த போது நான் தெருவில் சின்னப் பையன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தேன்...

அக்‌ஷய்க்கு தன் காதுகளை நம்ப முடியவில்லை. போலி மைத்ரேயனைப் பார்த்த நிகழ்ச்சியைச் சொன்ன போது கூட அவர் சின்னப் பையன்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததாகச் சொல்லவில்லை. விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அருகில் அவன் வந்த போது தான் பார்த்ததாக மட்டுமே அவர் சொல்லி இருந்தார்.  அதனால் அக்‌ஷ்ய்க்கு தன் காதுகளின் கோளாறோ என்று தான் தோன்றியது. அவன் முகத்தில் தெரிந்த திகைப்பைக் கண்டு ஆசான் கலகலவென்று சிரித்தார். “அன்பரே. நான் மனதளவில் இன்னும் முதுமை அடையவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நான் என் பிள்ளைப் பிராயத்தைத்  தொட்டு விட்டு வருவேன். அந்த வாய்ப்பு தத்துவ சிந்தனைகளில் மூழ்கும் போதும், புனித நூல்களை வாசிக்கும் போதும், லாமாக்களுடன் பழகும் போதும் கிடைப்பதில்லை. சிறு பிள்ளைகளோடு நாமும் ஒரு பிள்ளையாக மாறும் போது மட்டுமே வாய்க்கும்....

அக்‌ஷய் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. தத்துவங்கள் சொல்வதில் மட்டுமல்ல வாழும் முறையில் ஆசான் வித்தியாசமானவர் தான்....

ஆசான் தொடர்ந்தார். “அவன் என்னை அழைத்து நேரடியாக எதாவது கேள்விகள் கேட்பான் என்று எதிர்பார்த்தேன். ஏனென்றால் அவன் சாதாரண ஒற்றன் இல்லை. உளவாளிகளின் தலைமைப் பொறுப்பில் இருப்பவன். ஆனால் அவன் என்னை எதுவும் கேட்கவில்லை. என்னையே பார்த்தபடி தூரத்தில் நின்று கொண்டிருந்தான். நான் வழக்கமாக அவன் ஒற்றர்களை அலைக்கழிப்பதைப் போல லீ க்யாங்கையும் செய்யலாம் என்று நினைத்து வேகமாக ஓட்டமும் நடையுமாக எங்கெல்லாமோ போனேன். அவன் எப்போதும் பத்தடிகள் பின்னாலேயே இருந்தான். பாதி நாள் இப்படி ஓடிப்போனது.....

இது போன்ற குறும்புகள் எனக்கு சகஜம் என்பதால் எனக்கு சலிக்கவில்லை. ஆனால் அவனுக்கு சலித்தது போல் இருந்தது. ஒரு இடத்தில் என்னைப் பின் தொடராமல் லேசாய் சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்து விட்டு நான் போகும் திசைக்கு எதிர்ப்பக்கமாய் வேகமாய் போனான். எதிர் திசையில் போக ஆரம்பித்தவுடன் எனக்கு சுவாரசியம் போய் விட்டது. அடுத்ததாக சுற்றி வளைத்து நான் ஒரு இடத்திற்குப் போன போது அங்கே தான் போவேன் என்று முன்பே யூகித்து வைத்து அங்கே எனக்காக காத்துக் கொண்டு இருப்பது போல் அதே புன்னகையுடன் அவன் உட்கார்ந்திருந்தான். அவன் என்னை விடாமல் பின் தொடர முடிந்தது கூட என்னை பாதிக்கவில்லை. நான் அடுத்தது எங்கே போவேன் என்று யூகித்து அங்கே எனக்காக காத்துக் கொண்டிருந்தது எனக்கு இப்போதும் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது அன்பரே! ஏனென்றால் அது நான் அடிக்கடி போகும் இடமல்ல. அங்கே போகலாம் என்று நான் முன்பே நினைத்திருக்கவுமில்லை...

இப்போது சொல்லும் போது கூட ஆசான் முகத்தில் திகைப்பு தெரிந்தது.

அக்‌ஷய் புன்னகையுடன் சொன்னான். “அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை ஆசானே. நாம் எல்லோரும் பெரும்பாலும் பழக்கங்களின் அடிமைகள். வித்தியாசமாய் ஏதேதோ செய்கிறோம் என்று நினைத்து வேறு விதமாய் நாம் என்ன செய்ய ஆரம்பித்தாலும் ஏதோ ஒரு பழகிப்போன ஒழுங்கான, மாற்றாத வழிமுறையையே பின்பற்றுகிறோம். அது நமக்கே பல சமயங்களில் தெரிவதில்லை. லீ க்யாங் உங்களை நிறையவே ஆராய்ந்திருக்க வேண்டும். உங்கள் ஆழ்மனதில் பதிந்திருக்கிற அந்த வழிமுறையை அவன் கண்டுபிடித்திருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட இடத்திற்குப் போன பிறகு நேராகவோ சுற்றி வளைத்தோ நீங்கள் அடுத்தது இந்த இடத்திற்குத் தான் வருவீர்கள் என்று சரியாக அனுமானித்து அங்கே போயிருக்கிறான்....

ஆசான் பிரமித்துப் போனார். லீ க்யாங்குக்கு சரியான இணை இவன் தான் என்று தோன்ற ஆரம்பித்தது. லீ க்யாங்கிடம் மாட்டாமல் மைத்ரேயனைப் பாதுகாப்பாக இவனால் மட்டுமே கொண்டு வர முடியும் என்று அறிவும் சொன்னது. ஆசான் அக்‌ஷயை ஆவலுடன் பார்த்தார். நீ என்ன முடிவு செய்திருக்கிறாய்?என்று அவர் பார்வை கேட்டது.

அக்‌ஷய் யோசித்தான். அவனுக்கு அந்த மைத்ரேயனை அடையாளம் காணுவதில் இவர்கள் தவறு செய்து விட்டார்களோ என்ற சந்தேகம் இன்னமும் இருந்தது. மனதில் வரித்து வைத்த வடிவங்கள், கூழாங்கல்-வைரம் உதாரணம் பற்றி எல்லாம் ஆசான் சொன்ன போதும் மனம் முழுமையாக ஏற்றுக் கொள்ள மறுத்தது. இனி எதுவும் கேட்பதற்கு முன்னால் அவருக்கு அவன் ஒரு பதில் சொல்லியாக வேண்டும்.... அது தான் நியாயம்.... மனதில் வருணும், கௌதமும், சஹானாவும் வந்து போனார்கள். அவனுடைய திபெத்திய குரு வந்து போனார். ஆசான் பத்மசாம்பவாவின் ஓலைச்சுவடி பற்றி சொன்ன போது நாகமச்சத்தில் ஏற்பட்ட சிலிர்ப்பும் நினைவுக்கு வந்து போனது. கடைசியில் முடிவெடுக்க தன் அந்தராத்மாவின் குரலைக் கேட்க நினைத்தான்.

ஆசான் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அக்‌ஷய் சிலை போல் சமைந்தான். ஆசான் அறியாத தியானம் இல்லை. தியான நிலை என்பது உடனடியாக வாய்க்கும் அனுபவம் அல்ல. சில நொடிகள் தொடர்ந்து தியானத்தில் மனம் லயிக்க எத்தனையோ ஆண்டுகள் தொடர்ந்த பயிற்சி வேண்டும். அப்படி பயிற்சியில் தேர்ச்சி பெற்ற பின்பும் கூட ஆரமபித்தவுடனே தியான நிலை அமைந்து விடாது. குறைந்த பட்சம் சில நிமிடங்களாவது கண்டிப்பாகத் தேவைப்படும். ஆனால் அக்‌ஷயோ ஒரு கணத்தில் இயல்பு நிலையிலிருந்து ஆழ்தியான நிலைக்குப் போனது போல இருந்தது அவருக்கு அடுத்த பிரமிப்பை ஏற்படுத்தியது. என்ன மனிதனிவன்!

அவன் சுமார் இரண்டு நிமிடங்கள் அப்படி இருந்திருப்பான். அவன் இயல்பு நிலைக்குத் திரும்பியவுடன் அவரால் அவனிடம் கேட்காமல் இருக்க முடியவில்லை. “என்ன திடீரென்று....

அக்‌ஷய் சொன்னான். “மன்னிக்க வேண்டும் ஆசானே. சில தீர்மானங்களை எட்டும் முன் என் அந்தராத்மா என்ன சொல்கிறதென்று கேட்பது என் வழக்கம். அது தான்....

இவ்வளவு விரைவாக அந்த நிலைக்குப் போக முடிந்தவர்களை நான் பார்த்தது இல்லை...ஆசான் உண்மையைச் சொன்னார்.

ஆனால் அக்‌ஷய் ஆசானின் வார்த்தைகளால் புளங்காகிதம் அடைந்து விடவில்லை. அமைதியாகச் சொன்னான். “சில சமயங்களில் வாழ்வா சாவா என்பது போன்ற சூழ்நிலைகளில் மாட்டிக் கொள்ள நேரிடும் ஆசானே. அப்போது நிறைய நேரம் யோசிப்பதற்கெல்லாம் நேரம் இருப்பதில்லை. உடனடியாகத் தீர்மானம் எடுத்து அதைச் செயல்படுத்தினால் தான் நாம் ஆபத்துகளில் இருந்து தப்பிக்க முடியும். அந்த மாதிரி சமயங்களில் பயன்படுத்த இந்த வித்தையைச் சொல்லித் தந்தவர் உங்கள் திபெத்தைச் சேர்ந்த ஒரு யோகி தான். நான் எத்தனையோ முறை இதை உபயோகப்படுத்தி மரணத்திலிருந்து தப்பித்திருக்கிறேன்....

அந்த வித்தை அவன் உயிரைப் பல முறை காப்பாற்றி இருக்கிறது என்று நன்றியுடன் சொன்னானே ஒழிய இந்த வித்தையைக் கற்றுத் தேர்ந்தவன் நான் என்கிற கர்வம் மறைமுகமாகக் கூட அவன் பேச்சில் இருக்கவில்லை என்பதைக் கவனித்த ஆசானுக்கு அவன் மீது மரியாதை பல மடங்கு பெருகியது.

ஆசான் தன் மனதைப் பெரிதும் வாட்டிக் கொண்டிருந்த கேள்வியை அவனிடம் மெல்ல கேட்டார். “உங்கள் அந்தராத்மா என்ன சொன்னது அன்பரே? மைத்ரேயரை திபெத்திலிருந்து நீங்கள் அழைத்து வருவீர்களா?

(தொடரும்)

என்.கணேசன்

(அமானுஷ்யனின் விறுவிறுப்பான பூர்வீகக் கதையை முழுமையாகப் படிக்க, தற்போது வெளியாகியுள்ள 600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட “அமானுஷ்யன்” நாவலைப் படித்து மகிழுங்கள். நூலை வாங்க  பதிப்பாளரை 9600123146 எண்ணில் அல்லது மின்னஞ்சல் blackholemedia@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.)

6 comments:

  1. சஸ்பென்ஸ் தத்துவம் இரண்டையுமே இவ்வளவு அழகாக கலக்க முடிந்த முதல் தமிழ் எழுத்தாளர் எனக்குத் தெரிந்து நீங்கள் தான் சார். சூப்பர் எபிசோட்.

    ReplyDelete
  2. செ.கந்தசாமிNovember 20, 2014 at 7:17 PM

    மாபெரும் தத்துவங்களை மயிலிறகால் தடவி சொல்கிறது உங்கள் எழுத்தின் வலிமை. எல்லோருக்கும் புரியவும் புரியும். உணரவும் முடியும். ஆவலோடு புத்தம் சரணம் கச்சாமியை நாங்கள் படித்து வருகிறோம்.

    ReplyDelete
  3. My guess is Goutham is " Mythrayon"!!!

    ReplyDelete
  4. உண்மையிலேயே அப்படியொரு வித்தை உள்ளதா அன்பரே? பிரம்மாண்டம்!

    ReplyDelete
  5. இடையில் சொல்லப்படும் தத்துவங்கள் வாசிப்பவர்களுக்கு கூறும் படி இருப்பது அருமை... பல வடிவங்களை ஒன்றாக காண்பது போல் உள்ளது

    ReplyDelete