சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, November 24, 2014

ஆதிசங்கரரின் யோக சக்திகள்

மகாசக்தி மனிதர்கள்-2


சித்தர்களும், யோகிகளும் மகாசக்திகள் படைத்தவராக இருந்தார்கள், அஷ்ட மகாசக்திகளும் அவர்கள் வசம் இருந்தன என்ற போதிலும் அவர்களில் பெரும்பாலானோர் வரலாற்றில் இடம் பெற்ற மனிதர்களாக இருக்கவில்லை. அவர்கள் பற்றி ஆதாரபூர்வமான குறிப்புகள் இருக்கவில்லை. பொது வாழ்வில் புலப்படாமல் ரகசியமாய் வாழ்ந்தவர்கள் தான் அநேகம். வரலாற்றில் பதியப்பட்ட மகா யோகிகளில் முதலாமவராக ஆதிசங்கரரைச் சொல்லலாம். 

ஆதிசங்கரர் மெய்ஞானத்திற்கும், உபதேசித்த அத்வைத தத்துவத்திற்கும் பெயர் போனவர் என்றாலும் தேவைப்பட்ட போது மகாசக்திகளை தன்வசப்படுத்திக் கொண்டார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் நிறையவே இருக்கின்றன.   

தன் 32 ஆம் வயதில் இறைவனடி சேர்ந்த ஆதிசங்கரர் தன் குறுகிய வாழ்நாளில் நிறைய நூல்களையும், ஸ்தோத்திரங்களையும் இயற்றி இருக்கிறார். ஏராளமான விவாதங்களில் பங்கு கொண்டிருக்கிறார். இந்தியாவின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளிலும் முறையே பூரி, துவாரகை, பத்ரிநாத், சிருங்கேரி ஆகிய இடங்களில் பீடங்களை ஏற்படுத்தி இருக்கிறார். அத்துடன் பாரதம் முழுவதும், தமிழகம் முதல் இமயம் வரை பல முறை பயணித்திருக்கிறார். இத்தனை சாதனைகள் மிகக் குறுகிய கால வாழ்க்கையில் அவர் சாதித்திருப்பதற்கு அஷ்டமகா சித்திகள் அவர் வசம் இருந்தது தான் காரணம் என்றால் அது மிகையாகாது.

ஆதிசங்கரர் வாழ்ந்த காலம் முடிந்து பதின்மூன்று நூற்றாண்டுகள் கழிந்து விட்ட நவீன காலத்திலும் கூட இமயமலையில் உள்ள பத்ரிநாத், கேதாரநாத் போன்ற இடங்களுக்குத் தரை மார்க்கமாகப் போக வேண்டுமென்றால் பல சிரமங்கள் இருக்கின்றன. ஒரு வருடத்தில் குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே போக முடிந்த அந்த இடங்களில், அந்தப் போக முடிந்த காலத்தில் கூட பாதைகளில் பனிப்பாறைகள் விழுமானால் பயணிக்க முடியாது. இராணுவத்தினர் அந்தப் பாதைகளைச் சீர் செய்யும் வரை காத்திருக்க வேண்டியது தான். இன்றும் கூட சில இடங்களில் சாதாரணமாய் நடந்து செல்ல முடியாது. அப்படி ஒரு நிலை இன்றே இருக்கையில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும் என யோசித்துப் பாருங்கள். தியானம், நூல் இயற்றல், போதித்தல், விவாதங்களில் பங்கு கொள்ளல், போன்ற பல்வேறு வேலைகளுக்கு நடுவே சில வருடங்கள் மட்டுமே வாழ்ந்த ஆதிசங்கரர் வாகன வசதிகள் இல்லாத, சாலை வசதிகளும் மேம்பட்டிராத பழங்காலத்தில், கால்நடையாக குறுகிய காலத்தில் இவ்வளவு தூரம் பயணம் செய்திருக்க வாய்ப்பே இல்லை என்பது சிந்திக்க முடிந்தவர்களுக்கு விளங்கும். ஆகவே அவர் இலகிமா சக்தியைப் பயன்படுத்தியே இந்த பிரமிக்கத் தக்க சாதனையை நிகழ்த்தி இருக்க வேண்டும் என்பதே அறிஞர்களின் கருத்தாக உள்ளது.

ஒரு முறை அவர் பிக்‌ஷைக்குச் சென்ற போது அவர் பிக்‌ஷை கேட்ட வீடு பரம ஏழையினுடையது. தானே உண்ண உணவில்லாமல் வருந்திக் கொண்டிருந்த போதிலும் அந்த வீட்டுப் பெண்மணிக்கு ஆதிசங்கரருக்கு ஒன்றும் தராமல் அனுப்ப மனம் இருக்கவில்லை. அதனால் தன் வீட்டில் இருந்த ஒரே நெல்லிக்கனியை அவருக்குத் தந்து விட்டு இதற்கு மேல் தர இந்த வீட்டில் ஒன்றுமே இல்லை, எனவே அலட்சியப்படுத்தாமல் இந்த நெல்லிக்கனியை ஏற்றுக் கொண்டு என்னை மன்னித்தருள வேண்டும்என்று வேண்டி நின்றாள்.  ஏழ்மையிலும் அவளுக்கிருந்த உதார சிந்தையை மெச்சி, அவள் ஏழ்மையைப் போக்கி மகாலட்சுமியை வேண்டி கனகதாரா ஸ்தோத்திரம் பாடி அந்தப் பெண்மணி வீட்டில் தங்க நெல்லிக்கனிகள் மழையாகப் பெய்தனவாம்.  அந்தக் கணத்தில் அவர் இயற்றிய கனகதாரா ஸ்தோத்திரம் இன்றும் செல்வம் வேண்டி பலரும் சொல்லும் ஸ்தோத்திரமாக இருக்கிறது. இது ஈசத்துவம் என்ற இறைசக்தியைப் பயன்படுத்தியதற்கு உதாரணமாகச் சொல்கிறார்கள்.

அதே போல ஆதிசங்கரர் கூடு விட்டு கூடு பாயும் பிரகாமிய சித்தியையும் பயன்படுத்தினார் என்று அவர் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. ஒரு முறை ஆதிசங்கரர் மஹிஸ்மதி என்ற நாட்டின் ராஜகுருவான மந்தன மிஸ்ரா என்ற பேரறிஞருடன் ஞான மார்க்க சொற்போரில் ஈடுபட்டார். குடும்பஸ்தரான மந்தன மிஸ்ரா போட்டியில் தோற்றால் துறவியாக வேண்டும் என்றும், துறவியான ஆதிசங்கரர் தோற்றால் குடும்பஸ்தராக மாற வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. மந்தன மிஸ்ராவுடன் பதினேழு நாட்கள் நடந்த விவாதங்களின் முடிவில் ஆதிசங்கரர் வெற்றி அடைந்தார்.  மந்தன மிஸ்ராவின் மனைவி உபயபாரதி கணவரைக் காட்டிலும் அறிவில் சிறந்தவள். சரஸ்வதியின் அவதாரமாகக் கூட அவளைக் கூறுவதுண்டு. தன் கணவன் துறவியாவதை சகிக்க முடியாத உபயபாரதி குடும்பஸ்தரான தன் கணவரில் தானும் ஒரு பாதி என்றும், ஒரு பாதியை மட்டுமே ஆதிசங்கரர் வென்றிருப்பதாகவும், தன்னையும் வென்றால் மட்டுமே வெற்றி முழுமையாக இருக்கும் என்றும் வாதிட்டாள். அது வரை பெண்களிடம் ஞான விவாதங்களில் ஈடுபட்டிராத ஆதிசங்கரர் தயங்கினார். உபயபாரதி வேத காலங்களிலும் அப்படி விவாதங்கள் நடந்திருப்பதாக எடுத்துக்காட்டுகள் சொல்லி அவரை சம்மதிக்க வைத்தாள்.

உபயபாரதியுடன் ஆதிசங்கரரிடம் சொற்போரைத் தொடர்ந்தார். எந்த விதத்திலும் ஞானக் குறைவு இல்லாத ஆதிசங்கரரை உபயபாரதியால் வெல்ல முடியவில்லை. ஆனாலும் தோற்க மனமில்லாத உபயபாரதி கலவியல் சம்பந்தமான கேள்வி ஒன்றைக் கேட்க தூய பிரம்மச்சாரியும் துறவியுமான ஆதிசங்கரரால் அதற்கு பதில் அளிக்க முடியவில்லை. உடனே அவர் சில நாட்கள் அவகாசம் கேட்டு தன் உடலை விட்டு அச்சமயம் இறந்து போயிருந்த மன்னரின் உடலில் குடியேறி தங்கி கலவியல் ஞானம் பெற்று, மீண்டும் தன் உடலுக்குத் திரும்பி வந்து உபயபாரதியிடம் சொற்போரைத் தொடர்ந்து வென்றார் என்று குறிப்புகள் கூறுகின்றன.

துறவு பூண்ட போது வருந்தி நின்ற தாயிடம் “உன் அந்திம காலத்தில் நான் கண்டிப்பாக வருவேன்என்று வாக்குக் கொடுத்து விட்டுக் கிளம்பியவர் ஆதிசங்கரர்.  அவர்  சிருங்கேரியில் இருக்கும் போது தாயின் அந்திமக் காலம் வந்து விட்டது என்பதும், தன்னை இப்போது நினைக்கிறார் என்பதும் ஆதிசங்கரருக்கு ஞான திருஷ்டியில் தெரிய வந்து உடனே காலடியில் மரணப்படுக்கையில் இருந்த தாயருகே சென்றார் என்று குறிப்புகள் சொல்கின்றன. கர்னாடக மாநிலத்தில் இருக்கும் சிருங்கேரிக்கும், கேரள மாநிலத்தில் இருக்கும் காலடிக்கும் இடையே நூற்றுக் கணக்கான மைல்கள் உள்ளன. அவரால் உடனே அந்த இடைவெளியைக் கடக்க முடிந்தது இலகிமா சக்தியாலேயே இருந்திருக்க வேண்டும்.

அக்காலத்தில் ஒரு துறவி தன் தாய் சிதைக்குத் தீ மூட்டுவது சம்பிரதாயத்துக்கு முரணானது.  யாருக்கும் அந்திமக்கிரியை செய்யும் உரிமை துறவிக்குக் கிடையாது. எனவே காலடியில் இருந்த மற்ற அந்தணர்கள் அவருடைய தாயின் அந்திமக்கிரியைக்கு அவருக்கு துணை நிற்க மறுத்தார்கள். சிதை மூட்ட தீயைக் கூட கொடுத்துதவ அவர்கள் மறுத்த போது ஆதிசங்கரர் தன் சக்தியாலேயே தீ மூட்டினார். இது அஷ்டமகா சித்திகளில் பிராப்தி என்கிற, இயற்கை சக்திகளைத் தன்வசப்படுத்திக் கொண்டதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளை 14 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை எழுதி வைக்கப்பட்ட சங்கர விஜயநூல்களில் காணப்படுகின்றன. அந்த நூல்கள் அனைத்திலும் பொதுவாக ஏற்றுக் கொண்டு கூறப்பட்ட குறிப்புகளை இங்கு தந்திருக்கிறோம். அஷ்ட மகாசக்திகள் தன்வசமிருந்தும் தேவைப்பட்ட போது மட்டும் தேவையான அளவு மாத்திரம் உபயோகித்த ஆதிசங்கரர் அந்த மகாசக்திகளை விட அதிக முக்கியத்துவத்தை மெய்ஞானத்திற்கே தந்திருந்தார் என்பதே அந்த மகாயோகியின் மாபெரும் சிறப்பு!

என்.கணேசன்

நன்றி. தினத்தந்தி 12-09-2014

3 comments:

  1. நல்ல பதிவு. இன்றும் குருவாயூர் கோயிலில் ஆதி சங்கரர் ஆகாய மார்கமாக சென்றதாகவும், அந்த கோயில் கிருஷ்ணரை வணங்காததால் அந்த கோயிலின் ஒரு மூலையில் வந்து வீழ்ந்ததாகவும் ஸ்தல புராணம் கூறுகின்றது.

    ReplyDelete
  2. Human birth is such a blessing and so superior!!. It is amazing that we have so much potential!!!
    அஷ்ட மகாசக்திகள் தன்வசமிருந்தும் தேவைப்பட்ட போது மட்டும் தேவையான அளவு மாத்திரம் உபயோகித்த ஆதிசங்கரர் அந்த மகாசக்திகளை விட அதிக முக்கியத்துவத்தை மெய்ஞானத்திற்கே தந்திருந்தார் என்பதே அந்த மகாயோகியின் மாபெரும் சிறப்பு!
    There is no use of neither spiritual power nor material (worldly) power, if self-realization is not attained. Such human birth seems to be a wasted opportunity. A very inspiring and wonderful series. Many Thanks....

    ReplyDelete
  3. அருமையான தகவல்... அவரை பற்றி கூடுதலான தகவல் இல்லதாது...அவர் எந்த அளவு அந்த சக்திகளை ரகசியாமாய் வைத்து இருப்பார்? என்பதற்க்கு நல்ல உதாரணம்

    ReplyDelete