சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, November 13, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 20



டோர்ஜே நெருங்கியவுடன், அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் ஆட்டத்தை நிறுத்தி விட்டு அவனை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். மேட்டில் இருக்கும் வீட்டு ஜன்னல் வழியாக மட்டும் அவ்வப்போது முகம் மட்டுமே தெரியும் டோர்ஜேயை அவர்கள் அப்போது தான் முழுதாகப் பார்க்கிறார்கள். ஆசான் அவர்கள் ஆச்சரியத்தைக் கவனித்து விட்டு டோர்ஜேயைக் கூர்ந்து பார்த்தார். மிக வசீகரமான முகமும், புத்திசாலித்தனமான கண்களும் கொண்ட அந்தச் சிறுவனை அவரும் இது வரை பார்த்தது இல்லை.

ஆசான் அவனைப் பார்த்து புன்னகைத்தபடி கேட்டார். “நீ இந்தப் பகுதிக்குப் புதியவனா? உன் பெயர் என்ன?

டோர்ஜே சொன்னான். “நான் புதியவன் அல்ல. நான்கு வருஷங்களாக அந்த வீட்டில் தான் இருக்கிறேன்”. சொல்லியவன் அந்த வீட்டைக் கைநீட்டிக் காட்டவும் செய்தான். ஆசான் அந்த வீட்டைப் பார்க்க, ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த ஒற்றைக் கண் பிக்கு ஜன்னலில் இருந்து வேகமாகப் பின் வாங்கினார். ஆசான் கண்களில் தானும் பட அவர் விரும்பவில்லை.

டோர்ஜே அவருடைய இரண்டாம் கேள்விக்குப் பதில் சொன்னான். “என் பெயர் மைத்ரேயன்”. லீ க்யாங் அவனிடம் திரும்பத் திரும்ப சொல்லி இருந்தான். “இனி என்றும் உன் பெயர் மைத்ரேயன் தான். டோர்ஜே என்ற பெயரை நீ மறந்து விட வேண்டும்

மைத்ரேயன் என்ற பெயரை டோர்ஜே சொன்னவுடன் ஆசான் சில கணங்களுக்கு இருந்த இடத்திலேயே சிலையானார். மைத்ரேயன் இந்தியப் பெயர். அந்தப் பெயர் திபெத்தில் சாதாரணமாக வைக்கப்படும் பெயரல்ல...

அவர் அவனை மேற்கொண்டு கேள்விகள் கேட்க நினைத்த போது டோர்ஜே தூரத்தில் வந்து கொண்டிருந்த சமையல்காரனைப் பார்த்தான். அவனைப் பார்த்தவுடன் டோர்ஜே முகத்தில் பயம் பரவியது. அவன் தன்னைப் பார்க்கும் முன் பழையபடி வீட்டுக்குள் போய் விடுவது நல்லது என்ற எண்ணம் மேலிட வேகமாக வீட்டை நோக்கி டோர்ஜே ஓட ஆரம்பித்தான். கிட்டத்தட்ட போக ஆரம்பித்திருந்த ஒற்றைக்கண் பிக்குவின் உயிர், டோர்ஜே ஓடி வருவதைப் பார்த்த பின் திரும்பியது. தூரத்தில் சமையல்காரன் வந்து கொண்டிருப்பதையும் கவனித்த பின் தான் டோர்ஜே ஓடி வருவதற்கான காரணம் தெரிந்தது.

ஒற்றைக்கண் பிக்குவுக்கு ஒரு பக்கம் சமையல்காரன் வந்து கொண்டிருப்பது சந்தோஷமாக இருந்தது. அவன் வராமல் இருந்திருந்தால் டோர்ஜே ஆசானிடம் என்னவெல்லாம் சொல்லி இருப்பானோ! இன்னொரு பக்கம் வேறொரு பயம் அவரைப் பிடித்து உலுக்கியது. டோர்ஜே வெளியில் ஆசான் அருகிலும், மற்ற சிறுவர்கள் அருகிலும் நின்று கொண்டிருந்த்தை சமையல்காரன் பார்த்திருப்பானோ? பார்த்திருந்தால் கண்டிப்பாக லீ க்யாங்க் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு போய் விடுவானே!

வேக வேகமாக மூச்சு வாங்கியபடி வந்து நின்ற டோர்ஜேயிடம் பிக்கு கேட்டார். “அந்த தாத்தாவிடம் என்ன பேசினாய்”.  பேசியதை டோர்ஜே சொன்னான். அவன் மைத்ரேயன் என்ற பெயரை ஆசானிடம் சொல்லி இருந்தது பிக்குவை கலக்கமடையச் செய்தது. ரகசியமாய் ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். ஆசான் அந்த சிறுவர்களுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் பார்வை அடிக்கடி அவர்கள் வீட்டுப் பக்கம் வந்து போனது.

பிக்கு டோர்ஜேயிடம் பதற்றத்துடன் கேட்டார். “சமையல்காரன் உன்னைப் பார்த்தானா?

இல்லை. அவன் குடித்திருக்கிறான்...

சமையல்காரனுக்கு குடிப்பழக்கம் உண்டு. மற்ற சமயங்களில் அவர்களைக் கண்கொத்திப் பாம்பாக கண்காணித்து அங்கு நடக்கும் சின்னச் சின்ன விஷயங்களையும் லீ க்யாங்கிடம் விவரித்துச் சொல்லும் அவன் குடித்து விட்டால் தனியொரு உலகிற்குப் பயணிக்க ஆரம்பித்து விடுவான். ஏதோ கனவுலகில் மிதந்து கொண்டிருப்பான். எந்திரத்தனமாக வேலைகளைச் செய்வான். சுற்றிலும் என்ன நடந்தாலும் அதற்கு சிறிதும் சம்பந்தமில்லாதவன் போல் இருப்பான்.

பிக்குவுக்கு சிறிது நிம்மதியாயிற்று. ஜன்னல் வழியாக மறுபடி பார்க்கையில் ஆசான் சமையல்காரன் அவர்கள் வீடு நோக்கி வருவதையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. போதையில் இருந்த சமையல்காரன் ஆசானை கவனிக்காமல் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். வாங்கி வந்த சாமான்களை சமையலறையில் வைத்து விட்டு தன்னறைக்குப் போய் அவன் தாளிட்டுக் கொண்டான்.

பிக்கு மீண்டும் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த போது ஆசான் போயிருந்தார். அந்த சிறுவர்கள் மட்டுமே விளையாடிக் கொண்டிருந்தார்கள். பிக்கு டோர்ஜேவை இழுத்து மடியில் உட்கார வைத்துக் கொண்டு மெல்ல கேட்டார். “நீ ஏன் சொல்லிக் கொள்ளாமல் அங்கே ஓடினாய்

தலையைக் குனிந்து கொண்ட டோர்ஜே பதில் எதுவும் சொல்லவில்லை.

சமையல்காரன் மட்டும் பார்த்திருந்தால் என்ன ஆயிருக்கும் தெரியுமா?பிக்கு கேட்டார்.

“என்னை மன்னித்து விடுங்கள் ஆசிரியரேடோர்ஜே சொன்னான்.

பிக்கு அவன் முதுகை வருடியபடியே சொன்னார். லீ க்யாங் மிகவும் பொல்லாதவன் டோர்ஜே. தெரிந்தால் நம்மை கடுமையாக தண்டித்து விடுவான். நம்மால் அதை எல்லாம் தாங்க முடியாது

பிக்குவின் வார்த்தைகளை விட அதிகமாய் அவருடைய பயம் டோர்ஜேக்கு நிலைமையின் பூதாகரத்தைச் சொன்னது. இனி இப்படி செய்ய மாட்டேன் ஆசிரியரே. என்னை மன்னித்து விடுங்கள்

ஆசான் மைத்ரேயன் என்ற பெயரை டோர்ஜே சொன்னதை வைத்து எத்தனை யூகித்திருப்பார் என்பதை பிக்குவால் தீர்மானிக்க முடியவில்லை. இனி இங்கு இருப்பது பாதுகாப்பல்ல என்று தோன்றியது.  ஆனால் வேறு இடத்திற்கு மாற்றுங்கள் என்று லீ க்யாங்கிடம் வாய் விட்டு சொல்ல முடியாது. சொன்னால் ஏன்  என்று கேட்பான்.....

“ஆசிரியரே, அந்த தாத்தாவே விளையாடும் போது நீங்கள் ஏன் என்னுடன் விளையாடக் கூடாது”  டோர்ஜே மெல்லக் கேட்டான்.

அந்த நாளிலிருந்து, சமையல்காரன் இல்லாத போது பிக்கு டோர்ஜேயுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தார். அவருக்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்த ஆசான் தன்னை அறியாமல் விளையாட்டையும் சேர்த்துச் சொல்லித்தந்த மாதிரி இருந்தது. பிள்ளைப் பருவம் இரண்டாம் முறை வந்து விட்டது போல ஒரு உணர்வு மேலிட்டது. விளையாடும் போது டோர்ஜேயின் சின்னச் சின்ன குறும்புகளையும் அவரால் ரசிக்க முடிந்தது. ஆனாலும் அவன் பிராயத்தை ஒத்த பிள்ளைகளுக்குத் தான் இணையல்ல என்பதையும் உணர்ந்திருந்த அவருக்கு டோர்ஜேயை பார்க்க பாவமாய் இருந்தது. மைத்ரேயன் என்ற வேடத்திற்காக இந்தக் குழந்தை எத்தனை இழக்க வேண்டி இருக்கிறது!....

அந்த நிகழ்ச்சி முடிந்து மூன்று காலம் முடிந்த போது தான் அவருக்கு நிஜ மைத்ரேயன் பற்றி கேட்க நேர்ந்திருக்கிறது. மடியில் அமர்ந்திருந்த டோர்ஜே அவருக்குக் காய்ச்சல் இருக்கிறதா என்று மீண்டும் தொட்டுப் பார்த்தான்.

“காய்ச்சல் என்றால் படுத்துக் கொள்ளுங்கள் ஆசிரியரே. இன்றைக்கு பாடமோ விளையாட்டோ வேண்டாம்என்று கனிவான குரலில் டோர்ஜே சொன்னான். அவனுக்குக் காய்ச்சல் வரும் போது அவர் உபயோகிக்கும் அதே வார்த்தைகள், அதே தொனி.....

மனம் நெகிழ்ந்து போன பிக்கு அவனை இறுக்கி அணைத்துக் கொண்டார். அவதாரங்களை அவர் சந்தேகிக்க ஆரம்பித்து பல காலம் ஆகிறது. மனிதனுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும், பயத்தை ஏற்படுத்தவும் ஆன்மீகப் பெரியோர் ஏற்படுத்தியிருக்கும் கற்பனை யுக்தி என்றே அவர் நினைத்துக் கொண்டிருந்தார். அதற்கேற்றாற் போலவே மைத்ரேயரைப் பற்றி பெரிதாக பத்து வருடங்களுக்கு முன் பேசப்பட்டு அது புஸ்வாணமாகப் போயிருந்தது. அப்படித் தான் அவர் நினைத்திருந்தார்.  ஆனால் இப்போது லீ க்யாங்கே பேச ஆரம்பித்திருக்கிறான் என்கிற போது அலட்சியப்படுத்த முடியவில்லை. அவரையும் அறியாமல் அவர் உடல் ஏனோ நடுங்கியது.

அந்த நடுக்கத்தை உணர்ந்த டோர்ஜேக்கு அவர் காய்ச்சலால் பாதிக்கப்படவில்லை, பயத்தால் தான் பீடிக்கப்பட்டிருக்கிறார் என்பது புரிய ஆரம்பித்தது. இதற்கு முன் அவன் அவர் பயத்தை உணர்ந்தது அவன் திடீரென்று வெளியே விளையாட ஓடிப் போன போது தான். அவன் வெகுளித்தனமாக அவரைக் கேட்டான். “நான் தான் இன்றைக்கு வெளியே போகவில்லையே ஆசிரியரே, பின் எதற்காக நீங்கள் பயப்படுகிறீர்கள்?


சான் அக்‌ஷயிடம் சொல்லிக் கொண்டிருந்தார். “...அந்தப் பெயர் எனக்கு ஏற்படுத்திய சந்தேகம் பொய்யாகக் கூட இருக்கலாம் என்று ஆரம்பத்தில் எனக்குத் தோன்றியது அன்பரே! ஆனால் மேலும் விசாரித்ததில் சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது போல் வேறு சில தகவல்களும் கிடைத்தன. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது லீ க்யாங் அங்கு போய் வருகிறான் என்பது தெரிந்தது. ஒரு காரணமும் இல்லாமல் அவன் எதையும் செய்து யாரும் பார்த்திருக்க முடியாது..... சீன அதிகார வர்க்கத்திலும் எங்களுக்குத் தகவல் தர ஆள்கள் இருக்கிறார்கள். அவர்களால் எங்களுக்கு வெளிப்படையாக உதவ முடியா விட்டாலும் கசிகிற தகவல்களையாவது அனுப்பி வைப்பார்கள். அவர்களிடமிருந்து மைத்ரேயன் என்று ஒரு சிறுவன் உருவாகி வருகிறான் என்ற உறுதியான தகவல் இரண்டு வாரங்களுக்கு முன் கிடைத்தது....

“அந்தப் பையன் பார்க்க எப்படி இருக்கிறான்அக்‌ஷய் கேட்டான்.

“சினிமாவில் நடிக்கும் பையன் போல இருக்கிறான். களையான முகம்...

“உங்கள் நிஜ மைத்ரேயன் பார்க்க எப்படி இருக்கிறான்?அக்‌ஷய் ஆவலோடு கேட்டான்.

ஆசான் ஒரு புகைப்படத்தை அவனிடம் கொடுத்தார். சற்று தூரத்தில் இருந்து அந்த சிறுவனுக்குத் தெரியாமல் எடுத்த புகைப்படம் என்று நன்றாகவே தெரிந்தது.  மிக ஒல்லியாகவும், பார்க்க சாதாரணமாகவும் இருந்த ஒரு ஏழைச்சிறுவனை அதில் பார்த்த போது அக்‌ஷய்க்கு ஏமாற்றமாய் இருந்தது. புத்தரின் அவதாரமாக இருக்கும் சிறுவன் முகத்தில் ஒரு தேஜஸாவது தெரிய வேண்டாமோ! பார்வையிலும் கவர்ந்திழுக்கும் காந்தம் இல்லை. அந்தச் சிறுவன் எங்கோ தொலைவில் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனால் அவரிடம் கேட்காமல் இருக்க முடியவில்லை. “இது... இது... நிஜமாகவே நீங்க நம்பும் மைத்ரேயன் தானா?

ஆசான் லேசாகப் புன்னகைத்தார். “நம் மனதில் வரித்து வைத்திருக்கிற உருவங்களைத் தவிர வேறு உருவத்தில் வந்தால் நாம் கடவுளைக் கூட அடையாளம் கண்டு கொள்ள மாட்டோம் அன்பரே.

அக்‌ஷய்க்கு சுருக்கென்றது. அவர் சொல்வது உண்மையே அல்லவா! ஆனால் சாந்த சொரூபமாய் ஆழ்ந்த தியானத்தில் பார்த்திருந்த புத்த உருவங்களுக்கு சம்பந்தமே இல்லாமல் இருந்த ஒரு தோற்றத்தை மைத்ரேயன் என்று நம்ப இப்போதும் அவனுக்குக் கஷ்டமாய் இருந்தது.

ஆசான் கேட்டார். “பட்டை தீட்டாத வைரத்தைப் பார்த்திருக்கிறீர்களா அன்பரே?

இல்லையென அவன் தலையசைத்தான்.

அவர் சொன்னார். “ஒரு சாதாரண கூழாங்கல்லிற்கும் பட்டை தீட்டாத வைரத்திற்கும் இடையே பெரிய வித்தியாசம் எதையும் பார்த்து விட முடியாது அன்பரே. அதனால் நாம் போகும் பாதையில் அது கிடந்தாலும் அதை அப்படியே தள்ளி விட்டுத் தான் போவோமே ஒழிய அதை எடுத்துப் பயனடைய மாட்டோம்

அந்த நேரத்தில் அவசரமாக ஒரு பிக்கு உள்ளே நுழைந்தார். “மன்னிக்க வேண்டும் ஆசானே.... வெளியே பழையபடி அந்த உளவாளிகள் நின்று கொண்டிருக்கிறார்கள். அதைத் தெரிவிக்கத் தான் வந்தேன்....

ஒரு பெருமூச்சு விட்ட ஆசான் அக்‌ஷயிடம் சொன்னார். “இது லீ க்யாங்கின் அறிவு கூர்மைக்கு ஒரு சின்ன உதாரணம்


கூடவே அவருக்கு இவன் இதை எப்படி சமாளிக்கப்போகிறான் என்ற கவலை லேசாக எழுந்தது.

(தொடரும்)
என்.கணேசன்


6 comments:

  1. Really great writing.

    ReplyDelete
  2. சுவாரசியமாக போகுது கணேசன் சார். ஆசான் பேச்சு சூப்பர். வில்லன் பக்கத்தில் இருந்தாலும் ஒற்றைக்கண் பிக்கு டோர்ஜே இருவரை எக்ஸ்ப்ளைன் செய்யும் விதம் இயல்பாக இருக்கு.

    ReplyDelete
  3. ஆசானின் உதாரணங்கள் அருமை. சிந்திக்க வைக்கிறது.

    ReplyDelete
  4. அக்‌ஷய் ஆசான் லீ க்யாங் போல பிக்கு டோர்ஜே கேரக்டர்களும் மனதில் நிற்கின்றன. எல்லா கேரக்டர்களையும் அருமையாக வெளிக்கொணர்கிறீர்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
  5. அருமை... தொடருங்கள்... தொடர்கிறோம்...

    ReplyDelete
  6. ஆசானுக்கும், அக்‌ஷய்க்கும் இடையில் உள்ள உரையாடலில் வரும் தத்துவங்கள் அருமை..பிக்கு,டோர்ஜே பரிதபாபட வைக்கிறார்கள்...அக்‌ஷய் எப்படி சமாளிப்பார்?????

    ReplyDelete