சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 2, 2014

ஞானத்தின் அளவுகோல்!


அறிவார்ந்த ஆன்மிகம் 41

பாரதம் ஞானிகளின் பூமி. மற்ற நாடுகளில் மனிதர்கள் அறிவுப் பாதையில் பயணம் செய்ய ஆரம்பிக்கும் முன்பே ஞானத்தின் சிகரத்தில் நம் முன்னோர் வாழ்ந்து வந்தார்கள். காலப் போக்கில் அறியாமையாலும், அலட்சியத்தாலும் நாம் நிறையவே சறுக்கி உண்மையான ஞானம் எது, போலித்தனம் எது என்று கூடத் தெரியாத அளவு குழப்ப நிலைக்கு வந்து விட்டிருக்கிறோம். ஒருவருக்கு எத்தனை தெரிந்திருக்கிறது என்பதை வைத்து ஞானத்தை எடை போடுகிறோம், அல்லது தோற்றத்தை வைத்து எடை போடுகிறோம், அல்லது அவரது சுய பிரகடனத்தை வைத்து எடை போடுகிறோம். ஆனால் அக்காலத்தில் ஞானம் அப்படி அளக்கப்படவில்லை. அதை சுகப்ரம்ம ரிஷியின் உதாரணத்தை வைத்துப் பார்த்தால் தெளிவாக விளங்கும்.

சுகப்ரம்ம ரிஷி வியாசரின் மகன். தந்தையிடம் கற்று  அனைத்து ஞானத்தையும் பெற்றவர். துறவறம் பூண்டவர். மகா ஞானி. மகனின் ஞானத் தேர்ச்சியில் வியாசர் மிகவும் பெருமிதம் அடைந்தார். ஆனால் தன் மகன் என்பதால் மகனுடைய ஞானம் அப்பழுக்கற்றது என்று நினைக்கிறோமோ என்ற சந்தேகம் அவருக்கு வந்தது. அந்தக் காலத்தில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது என்று எதையும் அவர்கள் சோதிக்காமல் விட்டதில்லை. அதனால் தான் போலித்தனம் உருவாகாமல் அவர்கள் அவ்வப்போது களைகளை களைய முடிந்தது. வியாசரும் தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள விரும்பினார். சுகப்ரம்ம ரிஷியின் ஞானத்தை சோதித்துச் சொல்லவும், குறை இருப்பின் அதை நிவர்த்தி செய்ய மேலும் கற்றுக் கொண்டு வரவும் ஜனகரிடம் அனுப்பினார்.

சுகப்ரம்ம ரிஷிக்கும் தான் பெற்ற ஞானம் முழுமையானதா, இன்னும் கற்க வேண்டி உள்ளதா என்ற அறிவார்ந்த சந்தேகம் இருந்தது. அதனால் அவர் தந்தை சொன்னபடி ஜனகரை நாடி மிதிலைக்குச் சென்றார். இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். தன் மகன் என்பதால் பாசத்துடன் பாரபட்சமாக எண்ணுகிறோமோ என்ற சந்தேகம் வியாசரைப் போன்ற தந்தைக்கு வந்ததும், பெற்ற ஞானத்தில் குறை இருக்குமோ, இனியும் பெற வேண்டிய ஞானம் உள்ளதோ என்ற சந்தேகம் சுகப்ரம்ம ரிஷியைப் போன்ற மகனுக்கு வந்ததும் ஆரோக்கியமான அறிவார்ந்த பக்குவநிலை அன்றைய ஆன்மிகத்தில் இருந்திருக்கிறது என்பதற்கு இது மிக நல்ல உதாரணம்.

மிதிலை அரண்மனையை எட்டிய சுகப்ரம்ம ரிஷி வாயிற்காவலனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு மன்னரைக் காண விரும்புவதாகச் சொன்னார். உள்ளே போய் விட்டு வந்த வாயிற்காவலன் மன்னர் அழைப்பார் என்று சொல்லி நின்று கொண்டான். காலம் சென்றபடி இருந்தது. வாயிற்காவலர்கள் மாறினார்கள்.  அந்த நாள் முடிந்து மறுநாள் வந்தது. மன்னர் ஜனகர் சுகப்ரம்ம ரிஷியை அழைக்கவேயில்லை. இப்படி ஒரு வாரம் சென்றது. சுகப்ரம்ம ரிஷி அமைதியாகக் காத்திருந்தார்.

ஏழு நாட்கள் கழிந்த பின் ஜனகர் தானே மந்திரி பரிவாரங்களுடன் சுகப்ரம்மரிஷியை வரவேற்க வெளியே வந்தார்.  ஒரு மன்னனுக்குரிய மரியாதை சுகப்ரம்ம ரிஷிக்கு வழங்கப்பட்டது. அவரை ஜனகர் மிகுந்த மரியாதையுடன் உள்ளே அழைத்துச் சென்றார். அரசவையில் அவர் கவுரவிக்கப்பட்டார். அவரை சகல வசதிகளுடன் கூடிய விருந்தினர் மாளிகையில் ஜனகர் தங்கச் செய்தார். அவர் முன்னிலையில் அழகிய நர்த்தகிகள் நடனமாடினார்கள். அவருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. ஒரு வார காலம் இப்படி ராஜ உபசாரம் நடைபெற்றது. சுகப்ரம்ம ரிஷி அதிலும் பாதிக்கப்படாமல் அமைதியாகவே இருந்தார்.

ஒரு வாரம் அவமானப்படுத்துவது போல் காக்க வைத்த போதும் சரி, பின் அடுத்த வாரம் ராஜ உபசாரம் செய்த போதும் சரி சுகப்ரம்ம ரிஷியின் அமைதி பாதிக்கப்படவில்லை. எதுவுமே சொல்லாமல் காக்க வைத்தது  அவரைக் கோபத்தில் கொதிக்க வைக்கவும் இல்லை.  அரண்மனை விருந்தினர் மாளிகையில் சக்கரவர்த்திகளுக்கு இணையாக உபசரித்து கௌரவிக்கப்பட்டது அவரை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடிக்கவும் இல்லை.  சுகப்ரம்ம ரிஷி அசைவற்ற மனதோடு அமைதியாக இருந்தார்.  

பின்னர் தான் ஜனகர் வந்த காரியம் என்ன என்று சுகப்ரம்ம ரிஷியைத் தனியாக அழைத்துக் கேட்டார். சுகப்ரம்ம ரிஷி ஜனகரைத் தேடிவந்த காரணத்தைச் சொன்னார்.

வியாசரின் மகனுக்கு ஞானம் எந்த அளவு உள்ளது என்பதைக் கடந்த இரண்டு வாரங்களிலேயே ஜனகர் தெரிந்து கொண்டிருந்தார். உண்மையான பரீட்சை நடந்து முடிந்து விட்டது. மாணவன் சிறப்பாகவே தேர்ச்சி பெற்று விட்டான் என்ற போதிலும் ஜனகர் சுகப்ரம்ம ரிஷியைச் சில கேள்விகள் கேட்டார்.

“இங்கு வரும் போது வழியில் கடைத்தெருவில் என்னவெல்லாம் கண்டாய்?

“கடைத்தெருவில் சர்க்கரைப் பணியாரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன்என்றார் சுகப்ரம்ம ரிஷி.

“வேறு என்ன பார்த்தாய்?

“பேசிக் கொண்டே வளைய வரும் சர்க்கரைப் பொம்மைகளைப் பார்த்தேன்

“இங்கே என்ன பார்த்தாய்?

“இங்கும் சர்க்கரைப் பொம்மைகள் பல பார்த்தேன்

“இப்போது என்ன பார்க்கிறாய்?

“ஒரு சர்க்கரைப் பொம்மை, இன்னொரு சர்க்கரைப் பொம்மையோடு பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்

ஜனகர் சொன்னார். “உனக்கு எல்லா ஞானமும் இருக்கிறது. தெரிந்து கொள்ள இனி எதுவும் இல்லை. நீ இனி போகலாம்

ஜனகரிடம் இருந்தே சுகப்ரம்ம ரிஷிக்கு அத்தாட்சிப் பத்திரம் கிடைத்து விட்டது. சுகப்ரம்ம ரிஷி அவரை வணங்கி விட்டுப் புறப்பட்டார்.

சர்க்கரையில் பல வேறு உருவங்களுள்ள பொம்மைகளை உருவாக்கினாலும் கரைத்தால் அத்தனையும் இனிப்புச்சுவை உள்ள சர்க்கரையே. அதே போல பல்வேறு உருவங்கள் கொண்ட மனிதர்களுக்கும் அடிப்படை ஆத்மாவே. உருவங்கள் மறையும் போது மிஞ்சுவது ஆத்மாவே. வாயிற்காவலனும், ஜனகரும், மந்திரிகளும், நர்த்தகிகளும், சுகப்ரம்ம ரிஷியும் ஒரே ப்ரம்மத்தின் பல்வேறு உருவங்கள்.

இதைக் கதாகாலட்சேபத்தில் சொல்லும் ஞானியாக சுகப்ரம்ம ரிஷி இருக்கவில்லை. சொல் திறம் இருந்தால் சொல்வதை யாரும் சிறப்பாகச் சொல்லலாம். மணிக்கணக்கில் பேசலாம். கைதட்டல் வாங்கலாம். ஆனால் நிஜ வாழ்க்கை என்பதும் வாழ்ந்து காட்டுவது என்பதும் வேறு. சுகப்ரம்ம ரிஷி வாழ்ந்து காட்டி தன் ஞானத்தை நிரூபித்தார்.

நான் வியாசரின் மகன், ஞானி, என்னை அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்தி அரண்மனை வாசலில் நிற்க வைப்பதா என்று அவருக்குக் கோபம் வரவில்லை.  ஆஹா, என்ன ஒரு உபசரிப்பு, என்ன ஒரு மரியாதை என்று விருந்தினர் மாளிகையில் கிடைத்த ராஜோபசாரத்தில் அவர் அகமகிழ்ந்து விடவுமில்லை. அரண்மனை வாசலும், விருந்தினர் மாளிகையும் இரண்டும் ஒன்று தான் என்று ஒரே அமைதி நிலையில் சுகப்ரம்ம ரிஷி நிற்க முடிந்தது உண்மையாக அவர் பெற்றிருந்த ஞானத்தால் தான்.

பரீட்சை எங்கும் எப்போதும் நடக்கலாம். தயாராய் தன்னிலை பிறழாமல் இருப்பது ஞானம். அப்படி அசைக்க முடியாத ஞானமே ஞானத்தின் அளவுகோலாய் அன்று இருந்தது என்பதற்கு சுகப்ரம்ம ரிஷி ஒரு மிக நல்ல உதாரணம்.

இன்று ஞானிகள் என்று பலரை அழைக்கிறோம். அதற்கும் ஒரு படி மேலே சென்று கடவுளின் அவதாரம் என்று அவர்களைக் கொண்டாடுகிறோம். அவர்கள் பேச்சையும், எழுத்தையும், ஆன்மிகச் சின்னங்களையும் வைத்து ஞானிகள் என்ற அபிப்பிராயத்திற்கு வருவதை விட அவர்கள் தினசரி வாழ்க்கையில் அந்த ஞானம் எப்படி வெளிப்படுகிறது என்று கவனித்து அவர்கள் எப்படி என்ற முடிவுக்கு வருவதே அறிவார்ந்த ஆன்மிக அணுகுமுறையாக இருக்கும்.

-என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 17.12.2013



5 comments:

  1. My Pranams..........

    ReplyDelete
  2. Hello Ganesan, Could you please explain this(தன்னிலை பிறழாமல் இருப்பது) in real time scenario? Seems I knew, but I am not sure.

    Thanks
    Satya

    ReplyDelete
    Replies
    1. தன் இயல்பான ஆன்மஞான நிலையிலேயே உறுதியாக இருப்பது தான் உண்மையான ஞானம். படிக்கும் போதும், கேட்கும் போதும் எல்லாம் புரிந்து கொண்டாலும், நிஜ வாழ்க்கையின் சம்பவங்களின் தாக்கத்தில் அதை மறந்து ஒரு சராசரி மனிதனாக நடந்து கொள்வது அஞ்ஞானம் தான். முடிவான ஞானம் செயல்படும் விதத்திலேயே அளக்கப்படுவது. அறிவதை அறிவுள்ள யாரும் அறியமுடியும். அறிந்தபடி செயல்படுவது ஞானிக்கே சாத்தியம்.

      Delete
  3. Thanks Ganesan for responding. I have too many questions, anyway let us see this one. Should we limit our exposure and maintain our core or expand ourself and fight to maintain our core? or kind of a balanced approach will it be better? There is no one formula for all. Thanks.

    ReplyDelete
  4. Ganesan sir....! Nee sollura vitham elimaiyavum... Puriyum padiyavum irukku....! Nantri

    ReplyDelete