சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, June 26, 2014

உங்கள் வாழ்க்கை நிறைவானதாய் இருக்கிறதா?



நிறைவான வாழ்க்கை தான் எல்லோரும் வாழ ஆசைப்படுகிறோம். ஆனால் அது எப்படி என்பது தான் நமக்கு புரிவதில்லை. வாழ்க்கையில் சேர்க்கவும், அனுபவிக்கவும், செய்யவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அத்தனையும் முடிவது இந்த குறுகிய வாழ்க்கையில் சாத்தியமா? ஒரு நாளில் இருபத்திநான்கு மணி நேரம் தானே இருக்கின்றது. நமக்கு இருக்கும் சக்தியும் ஒரு எல்லைக்குட்பட்டது தானே? அப்படியானால் என்ன தான் செய்வது? எப்படித் தான் வாழ்வது என்ற ஆயாசம் நமக்கு ஏற்படலாம். அப்படி குழம்பிய தன் மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் ஒரு நல்ல உதாரணத்துடன் வழி காட்டுகிற கதையை சமீபத்தில் இணையத்தில் படிக்க நேர்ந்தது. அதைப் பார்ப்போமா?

அந்த ஆசிரியர் ஒரு பெரிய கண்ணாடி ஜாடி ஒன்றில் கோல்ஃப் பந்துகளை நிரப்பி விட்டு தன் மாணவர்களிடம் கேட்டார். “ஜாடி நிறைந்திருக்கிறதா?மாணவர்கள் ஆம் என்றார்கள். அடுத்ததாக மிகச்சிறியதான கற்களை எடுத்து ஜாடியில் போட்டார். ஜாடியை சற்று ஆட்டியவுடன் அந்த கோஃல்ப் பந்துகளுக்கு இடையில் அந்த சிறிய கற்கள் போய் சேர்ந்து கொண்டன. இப்போது ஜாடி நிறைந்திருக்கிறதா?என்று அவர் கேட்டார். மாணவர்கள் ஆம் என்றார்கள். ஆசிரியர் ஒரு பெட்டியில் வைத்திருந்த மணலை அந்த ஜாடியில் போட்டு மறுபடியும் குலுக்கினார்.  அந்த மணல் ஜாடியில் மீதமிருந்த இடைவெளியையும் ஆக்கிரமித்துக் கொண்டது. “இப்போது ஜாடி நிறைந்திருக்கிறதா?என்று ஆசிரியர் கேட்டார். மாணவர்கள் ஆம் என்றார்கள். கடைசியில் இரண்டு கப் காபி எடுத்து அந்த ஜாடியில் ஊற்றினார். காபி அந்த ஜாடியில் மிச்சம் மீதி இருந்த நுண்ணிய இடைவெளியையும் ஆக்கிரமித்துக் கொண்டது. மாணவர்களுக்கு ஒரே சிரிப்பு. ஆம் என்றார்கள்.

ஆசிரியர் மாணவர்களிடம் சொன்னார். “அன்பு மாணவர்களே! இந்த ஜாடி உங்கள் வாழ்க்கையைப் போல. கோல்ஃப் பந்துகள் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான விஷயங்கள் போல். குடும்பம், உத்தியோகம், வியாபாரம், நண்பர்கள், ஆரோக்கியம், உங்களுக்கு மிகவும் பிடித்த அர்த்தமுள்ள விஷயங்கள் எல்லாம் இந்த வரிசையில் சேர்க்கலாம். முதலில் இந்த விஷயங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் இடம் தாருங்கள். வேறெதுவும் இல்லா விட்டாலும் கூட இவை உங்கள் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்றால் அந்த வாழ்க்கை நிறைவாகவே இருக்கும். அடுத்ததாக வீடு, வாகனம், மற்ற பொருள்கள், சௌகரியங்கள் எல்லாம் அந்த சிறிய கற்கள் போன்றவை. அவற்றை அடுத்தபடியாகவே உங்கள் வாழ்க்கையில் சேருங்கள். மற்றவை எல்லாம் அந்த மணல் போல. அவற்றை கடைசியாக வாழ்க்கையில் புகுத்த முடிந்தால் புகுத்துங்கள். முடியா விட்டாலும் வாழ்க்கை நிறைவாகவே இருக்கும்

அவர் காபியைப் பற்றி சொல்லாமல் போகவே ஒரு மாணவர் அதைப் பற்றிக் கேட்டார். ஆசிரியர் சிரித்துக் கொண்டே சொன்னார். “எத்தனை தான் வாழ்க்கை வேறெதற்கும் இடமில்லாமல் நிறைந்திருந்தாலும் கூட நண்பனுடன் சேர்ந்து காபி குடித்தபடி சிறிது நேரம் பேச கண்டிப்பாக இடம்/நேரம் இருக்கும். அதைக் காட்டுவது தான் அந்த காபி

வாழ்க்கையில் முதலில் மிக முக்கியமான விஷயங்களுக்கு நம் நேரத்தையும் கவனத்தையும் செலுத்துவது அவசியம். அதை விட்டு அதிமுக்கியம் அல்லாத, குறைவான முக்கியத்துவம் அல்லது முக்கியத்துவமே இல்லாதவற்றிற்கு வாழ்க்கையில் இடம் கொடுத்தால் பின் முக்கியமானவற்றிற்கு நம் வாழ்க்கையில் இடம் இருக்காது. வாழ்க்கை நிறைவற்றதாகவே தங்கி விடும்.

இந்த ஜாடி உதாரணத்திலேயே முதலில் சிறிய கற்களையும், மணலையும் நிரப்பி இருந்தால் கோல்ஃப் பந்துகளை நிரப்பி இருக்க முடியாது. கோல்ஃப் பந்துகள், சிறு கற்கள், மணல் போன்ற அத்தனையும் அந்த ஜாடியில் அந்த அளவில் புகுத்த வேண்டும் என்றால் அதே வரிசையில் போட்டால் மட்டுமே அது சாத்தியமாகும். வாழ்க்கையிலும் அது போலத்தான்.

ஜாடிக்கென்று ஒரு குறிப்பிட்ட கொள்ளளவு இருப்பது போல வாழ்க்கையிலும் ஒரு குறிப்பிட்ட கால அளவே தரப்பட்டிருக்கிறது. அதை எதற்கெல்லாம் எந்த அளவில் பயன்படுத்துகிறோம் என்ற பிரக்ஞை ஒரு மனிதனுக்கு என்றுமே இருக்க வேண்டும். ஆரோக்கியத்திற்கு தேவையான உடற்பயிற்சியோ, நடையோ, கவனம் தருதலோ செய்ய வேண்டிய நேரத்தில் டிவி பார்த்துக் கொண்டோ, வம்பு பேசிக் கொண்டோ கூட பொழுதைப் போக்கலாம். அது கோல்ஃப் பந்துகளுக்கு பதிலாக ஜாடியில் மணலை நிரப்புவதற்கு சமம். குடும்பத்திற்கு ஒதுக்க வேண்டிய நேரத்திலும் கூடுதலாக பணத்தையும், பொருள்களையும் சேர்த்துக் கொண்டே போக நேரத்தைச் செலவழித்தால் கோல்ஃப் பந்துகளுக்கு பதிலாக சிறுகற்களை ஜாடியில் போடுவதற்கு சமம்.

ஒவ்வொரு கணமும் நாம் வாழ்க்கையை நிரப்பிக் கொண்டே இருக்கிறோம். வாழ்க்கையை எதை வைத்து நிரப்புகிறோம் என்பது தான் முக்கியம். நிறைவான வாழ்க்கை என்று கருதுவது முக்கியமானவை எல்லாமே நிறைந்த வாழ்க்கையைத் தான். அதை விட்டு கேளிக்கைகளையும், பொருள்களையும் வைத்து நிரப்பி விட்டு அதை விட முக்கியமான அர்த்தமுள்ள விஷயங்களை இழந்து விடாதீர்கள்!

-          என்.கணேசன்
   

3 comments:

  1. Hello Ganesan sir. I have always been a big admirer of your impeccable tamil words' spellings as equal to your brilliant skill in writing. Thats why I would like to point this out to you. So please dont feel offended and consider me being nosy.

    Typo: Veedu was spelled as vidu in this post. Please change it when you have free time. I sincerely apologise to you again if you think this behavior of mine is inappropriate.

    ReplyDelete
    Replies
    1. The typing error is rectified. Thank you for bringing it to my notice.

      Delete
  2. Very nice article well translated into Tamil even though I read it before, when I read it in Tamil it gives me more meaningful and appealing...

    ReplyDelete