சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 23, 2013

பரம(ன்) ரகசியம் – 45




குருஜி அனுப்பிய ஆள் காமாட்சியிடம் இருந்து அரக்கு வைத்து மூடிய அந்த உறையை வாங்கிக் கொண்டு வந்தான். அவன் வரும் வரை பொறுமை இல்லாமல் காத்திருந்த குருஜி அவனிடம் கேட்டார். “அந்தம்மா எதாவது சொன்னாங்களா?

“இல்லை குருஜி. கணபதிக்கு கொஞ்சம் சீடையும் கொடுத்து அனுப்பி இருக்காங்க. கணபதிக்கு சீடைன்னா இஷ்டமாம்

அவன் அந்த உறையோடு சீடையையும் தர குருஜி பொறுமை இழந்தவராக முகம் சுளித்தார். ‘சீடையை அவன் கிட்டயே அப்புறமா குடு.

உறையை வாங்கிக் கொண்டு அவர் அவனைக் கால் மணி நேரம் கழித்து வரச் சொன்னார். அவன் போன பின் அந்த உறையை அவசரமாகப் பிரித்தார்.

அதன் உள்ளே பழுப்பேறிய வெள்ளைத் தாளில் எழுதி இருந்த கடிதத்தைப் படித்தார்.

“சிரஞ்சீவி கணபதிக்கு,

அநேக ஆசிர்வாதம்.

இந்தக் கடிதம் உனக்கு விந்தையாக இருக்கலாம். முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு நபரிடம் இருந்து கிடைக்கும் இந்த விவரங்கள் நம்ப முடியாததாக இருக்கலாம். ஆனாலும் இதில் சொல்லி இருப்பது அனைத்தும் உண்மை என்பதை நீ தினமும் பக்தியுடன் வணங்கும் பிள்ளையார் மீது ஆணையாக நான் கூறுகிறேன். எக்காரணத்தைக் கொண்டும் இதில் சொல்லப்பட்டுள்ள இரகசியத் தகவல்களை உன் குடும்பத்தினர் உட்பட யாரிடமும் நீ சொல்லக் கூடாது என்று உன்னைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு மூன்று சித்தர்களால் ஒரு சிவலிங்கம் உருவாக்கப்பட்டது.  தங்கள் ஞானதிருஷ்டியால் எதிர்காலத்தில் கலி முற்றிப் போய் ஏற்பட இருக்கும் சீரழிவுகளை அறிந்த அந்த  சித்தர்கள் அக்காலத்தில் மனித குலத்தைப் பேரழிவில் இருந்து காக்கும் எண்ணத்தில் தங்களிடம் இருக்கும் அபூர்வ சக்திகளை எல்லாம் அந்த சிவலிங்கத்தில் ஆவாஹனம் செய்து அதை வணங்கினார்கள். விசேஷ மானஸ லிங்கம் என்று நாமகரணம் சூட்டிய அந்த சிவலிங்கத்தை  இரகசியமாய் மிகுந்த பக்தியுடன் பூஜித்து வந்தார்கள்.

அவர்கள் காலத்திற்குப் பின் தகுதி வாய்ந்த அடுத்த மூவர் குழுவிற்கு விசேஷ மானஸ லிங்கத்தைப் பூஜிக்கத் தந்து விட்டுச் சென்ற அந்த சித்தர்கள் பிற்காலங்களிலும் அதே போல் தூய்மையான பக்தி, கூர்மையான அறிவு, ஞானசித்தி பெற்றிருந்தவர்களுக்கே அந்த விசேஷ மானஸ லிங்கம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற விதியை விதித்து விட்டுச் சென்றனர். ஆரம்ப காலங்களில் சித்தர்களிடம் மட்டுமே அந்த விசேஷ மானஸ லிங்கம் இருந்து வந்தது. தொடர்ந்து பூஜை செய்த சித்தர்களும் அந்த லிங்கத்திற்கு சக்தி சேர்த்து வந்தார்கள்.

ஒரு கால கட்டத்தில் தற்செயலாக அந்த விசேஷ மானஸ லிங்கம் பூஜிக்கப்படுவதைக் காண நேர்ந்த சோழ மன்னன் முதலாம் இராஜாதி இராஜ சோழன் அதனால் ஈர்க்கப்பட்டு அதற்கு தன் பாட்டனார் இராஜ இராஜ சோழனை விடப் பெரிய கோயில் ஒன்றை கட்ட ஆசைப்பட்டு விசேஷ மானஸ லிங்கத்தை சித்தர்களிடம் கேட்டான்.

எதிர்காலத்தில் வழிபாட்டுத் தலங்கள் எல்லாம் வியாபாரத் தலங்களாக மாறி விடும் என்பதை ஞானதிருஷ்டியால் அறிந்திருந்த சித்தர்கள் அதை மன்னனுக்குக் கூடத் தர சம்மதிக்கவில்லை. உடனே அந்த இடத்தை விட்டுச் சென்று விட்ட அவர்களும், அந்த சிவலிங்கத்தை வழிவழியாக பூஜித்து வந்தவர்களும் பொது மக்கள் கவனத்தை ஈர்க்காமல் இரகசியமாய் விசேஷ மானஸ லிங்கத்தைப் பூஜித்து வந்தார்கள்.

ஆரம்ப காலங்களில் சித்தர்களிடம் மட்டுமே இருந்த விசேஷ மானஸ லிங்கம் பின்பு தகுதி வாய்ந்த மற்றவர்களிடமும் கூடச் சென்றது. ஆனால் அதை ரகசியமாகவும், தூய பக்தி குறையாமலும் பூஜிக்கும் தன்மை உள்ளதா என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டே அவர்களுக்குத் தரப்பட்டது. அதில் இக்காலம் வரை எந்தச் சிறு விலகலும் ஏற்படவில்லை என்பது மட்டும் நிச்சயம்.

இதை எல்லாம் உன்னிடம் நான் தெரிவிக்கக் காரணம் என்ன என்று நீ வியக்கலாம். அதன் காரணம் விசேஷ மானஸ லிங்கத்தைப் பூஜிக்கும் பெரும் பாக்கியம் உனக்குத் தரப்பட்டிருக்கிறது என்பது தான். இந்தக் கடிதம் உன்னை வந்தடையும் காலத்திற்கு சற்று முன்னதாகவோ, சற்றுப் பிந்தியோ வர இருக்கும் இந்த வாய்ப்பை நீ ஏற்றுக் கொண்டு முறையாகவும், ரகசியமாகவும் விசேஷ மானஸ லிங்கத்தைப் பூஜித்து வருவாயாக!

சாதாரணமானவனாகவே உன்னை நீ நினைத்துக் கொண்டு இருப்பதால் இதற்குப் பொருத்தமானவன் தானா என்று உன்னையே நீ சந்தேகிக்கலாம். சுபாவத்தில் எளிமையானவனும், தூய்மையானவனுமான உனக்கு விசேஷ மானஸ லிங்கத்தைப் பூஜிக்கும் முழுத்தகுதியும் உண்டு. அதனால் தான் நீ தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாய் என்பதைப் புரிந்து கொள். விசேஷ மானஸ லிங்கத்தின் மற்ற இரண்டு பாதுகாவலர்களை இன்னேரம் நீ சந்தித்திருக்கலாம், அல்லது விரைவில் சந்திக்கலாம்.

உன்னிடம் விசேஷ மானஸ லிங்கம் வந்து சேரும் போது அது முழுமையான சக்திகளைப் பரிபூரணமாய் பெற்று இருக்கும். இனி அதற்குத் தேவை சக்தி வாய்ந்த, சக்தி சேர்க்கும் சித்தர்களோ, பூஜிப்பவர்களோ அல்ல. அதற்குத் தேவை அதை நன்மை நிறைந்த மனதுடன் தூய்மையாய் பூஜிப்பவர்களே.

விசேஷ மானஸ லிங்கம் தன் சரித்திரத்தில் மிக முக்கியமான காலகட்டத்தில் உன்னிடம் வந்துள்ளது. பூரண சக்திகளுடன் இருக்கும் விசேஷ மானஸ லிங்கம் தவறான மனிதர்களிடம் சேர்ந்து விட்டால் அந்த சக்தி தவறான வழிக்குப் பயன்படுத்தப்படும், உலகின் பேரழிவிற்கு அது காரணமாகி விடும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே அப்படி நேராமல் காக்கின்ற பொறுப்பு உங்கள் மூவருக்கு உண்டு. அந்த சிவலிங்கத்தின் அருகிலேயே எப்போதும் இருக்க முடிந்த உனக்கு பொறுப்பு அதிகம் என்றே சொல்லலாம்.

உன்னால் முடியுமா என்று நீ சந்தேகிக்க வேண்டியதில்லை. முடியாத பொறுப்புகள் அறிஞர்களால் தரப்படுவதில்லை. உனக்கு விசேஷ மானஸ லிங்கம் நிறைய கற்றுத் தரும். அதற்கு நீ செய்ய வேண்டியதெல்லாம் இது தான்....

குருஜி படித்துக் கொண்டிருக்கையில் ஜன்னல் வழியே திடீரென பெரும் காற்று வீசியது. அவர் சுதாரிக்கும் முன் அவர் கையில் இருந்த அந்தக் கடிதம் நழுவி காற்றில் பறந்தது. ஜன்னல் வழியே ஒரு பெரும்சக்தி அந்தக் கடிதத்தை வெளியே இழுத்தது போல் இருந்தது. குருஜி வேகமாய் அந்தக் கடிதத்தைக் கைப்பற்றும் முன் கடிதம் ஜன்னல் வழியே காற்றில் பறக்க ஆரம்பித்தது.

திகைத்துப் போன குருஜி அதி வேகமாக வெளியே ஓடினார். ஆனால் அந்தக் கடிதம் காற்றில் பறந்து சென்று தூரத்தில் சருகுகளை எல்லாம் சேர்த்து இரண்டு மாணவர்கள்  எரித்துக் கொண்டு இருந்த தீயில் விழுந்தது. அந்தக் காகிதம் எரிந்து கருகுவதையே பார்த்துக் கொண்டு குருஜி நின்றார்.  

குருஜியைக் கண்டதும் சருகுகளை எரித்துக் கொண்டிருந்த இரண்டு மாணவர்களும் பயபக்தியுடன் எழுந்து நின்றனர். தீயில் விழுந்த அந்தக் காகிதம் அவருக்குத் தேவைப்பட்ட முக்கியக் காகிதமா என்ற சந்தேகம் அவர்களுக்கு வந்தது. “குருஜி இந்தக் காகிதம்.....என்று ஒருவன் இழுத்தான்.

தன் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு குருஜி புன்னகைத்தார். “வேண்டாத காகிதம் தான்.

சொல்லி விட்டுத் திரும்பினவருக்கு அந்தக் கடிதம் மேற்கொண்டு சொல்ல வந்தது என்னவாக இருக்கும் என்ற சிந்தனையே மேலோங்கி நின்றது. எத்தனை சிந்தித்தும் அவரால் கணபதிக்குச் சொல்லப்பட்ட அறிவுரை என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்க முடியவில்லை.

அரக்கு வைத்து மூடிய உறையையும், முன்பு எப்போதோ எழுதியது போல் தெரிந்த பழுப்புக் காகிதத்தையும், அதற்குள் என்ன இருக்கிறது என்று தெரியாது என்று அவர் காமாட்சியிடம் சொன்னதையும் வைத்துப் பார்த்தால் யாரோ முன்பே அவருக்குக் கொடுத்து வைத்த உறையாகத் தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. மேலும் மூளை வேலை செய்த போது ஜோதிடரின் குருநாதர் சிதம்பரநாத யோகி சாவதற்கு முன் கொடுத்து விட்டுப் போன உறையாகத் தான் இருக்கலாம் என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

கணபதியை அவர்கள் முன்பே தேர்ந்தெடுத்து வைத்திருந்தார்கள் என்பதை நினைக்கையில் குருஜிக்கு சுருக்கென்றது. அவர் தானாகக் கணபதியைத் தேர்ந்தெடுத்தது போல நினைத்திருக்கையில் அவர்கள் தேர்ந்தெடுத்து வைத்திருந்த ஆளை அவர் தேர்ந்தெடுத்து பூஜை செய்ய ஏற்பாடு செய்தது அவரால் சகிக்க முடியாததாக இருந்தது.

விசேஷ மானஸ லிங்கத்திடம் அவர் கேட்ட கேள்விகள் இப்போது அவர் செவிகளை அறைந்தன. “என் குருநாதர் போன்ற பெரிய சித்தர்கள் பூஜை செய்த உன்னை இப்போது கணபதி என்கிற ஒன்றும் தெரியாத ஒரு பையன் பூஜை செய்வது உனக்கு எப்படி இருக்கிறது. மௌனமும் அமைதியுமாக உன்னைப் பூஜித்து வந்தவர்களுக்குப் பிறகு இப்போது சலிக்காமல் எல்லாவற்றைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கும் பையன் கிடைத்திருப்பது எப்படி இருக்கிறது. உனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லாததால் நீ ஒரு சலனமும் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் கணபதியைத் தேர்ந்தெடுத்து நான் உன்னைப் பூஜை செய்ய வைத்திருப்பதற்கு என் குருநாதர் என்ன நினைப்பார்? இது வரை பூஜை செய்வது யார் என்பதை தீர்மானம் செய்தது அவர்கள் கூட்டமாகத் தான் இருந்தது. இப்போது அந்த அதிகாரத்தை நான் எடுத்துக் கொண்டதைப் பற்றி அவர் அபிப்பிராயம் என்ன?....

இந்தக் கடிதம் இன்னொரு முக்கியக் கேள்வியை அவர் மனதில் எழுப்பியது. இரண்டு முறை கணபதியைச் சந்தித்த அவருடைய குருநாதரான சித்தர் ஏன் நேரடியாகச் சொல்ல வேண்டிய அறிவுரையைச் சொல்லவில்லை. தக்க சமயத்திற்காகக் காத்திருந்தாரா? இல்லை வேறெதாவது காரணமா?

தனதறைக்குள் திரும்ப வந்து அமர்ந்த குருஜி ஜன்னல் வழியாகப் பார்த்தார். சற்று முன் அத்தனை பலமாகக் காற்றடித்ததின் அறிகுறியே காணோம். காற்று தற்செயலானது என்றோ, சரியாக முக்கியக் கட்டம் படிக்கும் முன் அந்தக் காற்றில் கடிதம் பறந்ததும், தீயில் விழுந்து எரிந்ததும் இயல்பானது என்றோ அவர் நினைக்கவில்லை. அவருடைய குருநாதர் சித்தர் தான் இதற்கெல்லாம் காரணம் என்பதை அவர் அறிவார். நேரில் தரிசனம் தரா விட்டாலும் குருநாதரின் இருப்பை இந்த நிகழ்ச்சியில் அவர் உணரவே செய்தார்.

ஆராய்ச்சிகளை ஆரம்பிக்கும் முன் குருநாதரைக் கட்டுப்படுத்தி வைக்கா விட்டால் எதுவும் நினைத்தபடி நடக்காது என்பதை அவர் அறிவார்.  கண்களை மூடிக் கொண்டு அவர் யோசிக்க ஆரம்பித்தார்.... தடைகள் என்றுமே அவரைத் தடுத்து நிறுத்தியதில்லை. இனியும் அப்படித் தடுத்து நிறுத்த அவர் அனுமதிக்க மாட்டார்.  எல்லா மோசமான சூழ்நிலைகளுக்கும் ஒரு தீர்வு இருக்கவே செய்கிறது. தீர்வு இல்லாத பிரச்சினை இல்லை. சொல்லப் போனால் பிரச்சினையும் தீர்வும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் தான். ஒன்று இருந்தால் இன்னொன்று இருக்கவே செய்யும்....

குருஜி கண்களைத் திறந்த போது என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்பதை யோசித்து முடித்திருந்தார். கணபதி வீட்டுக்குப் போய் அந்தக் கடிதம் வாங்கி வந்தவனை உடனே வரவழைத்தார். கணபதிக்குத் தர ஒரு புதிய கடிதம் உடனே தயார் செய்யச் சொன்னார்.

“சிரஞ்சீவி கணபதிக்கு,
நாங்கள் ஆன்மிக மார்க்கத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு தர்ம ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்கள். தங்கள் வரசித்தி விநாயகர் கோயிலிற்கு இத்துடன் ரூ.10000/- நன்கொடையாக அடுத்த மாதம் முதல் தேதியிட்ட காசோலை மூலம் அனுப்பி உள்ளோம். இப்பணத்தை கோயில் திருப்பணிகளுக்கு உபயோகித்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
பாரதீய ஆன்மிகப் பேரவை

பாரதீய ஆன்மிகப் பேரவை அவர் ஆதரவில் நடக்கும் பல டிரஸ்டுகளில் ஒன்று. அந்தப் பேரவையின் செக் ஒன்றை ரூ.10000/-க்கு எழுதி அக்கடிதத்துடன் இணைத்து அதை ஒரு உறையில் வைத்து உண்மையான உறையில் இருந்தபடியே விலாசம் எழுதி அரக்கு வைத்து மூடி விட்டு கணபதியை அழைத்து வரச் சொன்னார்.

கணபதி வந்தான்.

புன்னகையுடன் அவனை வரவேற்ற குருஜி சொன்னார். “...இந்தா கணபதி. உனக்கு வந்த லெட்டர்... கூடவே உன் அம்மா சீடையும் தந்து அனுப்பிச்சு இருக்காங்க... உனக்கு சீடை ரொம்பப் பிடிக்குமோ...

கணபதி வெட்கப்பட்டான். ‘..இந்த அம்மாவுக்கு நான் இன்னும் சின்னப் பையன்னே நினைப்பு.. லெட்டர் கூட சீடையை யாராவது அனுப்புவாங்களா... ஆனா அம்மா செய்யற சீடையே தனி ருசி தான்...’ நினைக்கும் போதே அவனுக்கு நாக்கில் எச்சில் ஊறியது. கடிதத்தையும், சீடையையும் வாங்கிக் கொண்டான்.

குருஜி சொன்னார். “கணபதி, நாளைக்கு சிவனுக்கு விசேஷமான நாள். தொடர்ச்சியாக சில மணி நேரம் சிவலிங்கம் முன்னாடி இருந்து ருத்ர ஜபம் செய்ய இந்த வேதபாடசாலை மாணவர்கள் சிலர் கிட்ட சொல்லி இருக்கேன். நீயும் அந்த நேரத்துல சிவனுக்கு பூஜை செய்துகிட்டு இரு. உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே...

கணபதிக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. சீடையோடும், கடிதத்தோடும் அவன் போன பிறகு தன் ஆளை அழைத்துச் சொன்னார். “உண்மையான பக்தி இருக்கிற நாலு பசங்களை ருத்ர ஜபம் செய்ய நாளைக்கு காலைல ஒன்பது மணிக்கு அனுப்பு. அவர்களை பூஜை அறையில் இருந்து பத்தடி தள்ளி உட்கார்ந்து மௌனமாய் ருத்ர ஜபம் செய்யச் சொல்லு. எந்தக் காரணத்தை வைத்தும் மதியம் ரெண்டு மணி வரை கணபதி வெளியே வராத மாதிரி பார்த்துக்கோ. காலைல ஒன்பதரை மணிக்கு ஈஸ்வரை வேதபாடசாலைக்கு வரச் சொல்லி இருக்கேன். அவனை ஒன்றரை மணிக்குள் வெளியே அனுப்பிடறேன்....

அவர் ஆள் போனபின் தன் உதவியாளனுக்குப் போன் செய்து நாளை மறுநாள் அதிகாலையில் ரிஷிகேசம் செல்ல தனி ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யச் சொன்னார். ரிஷிகேசத்தில் மலைக்காட்டுப் பகுதியில் பயணம் செய்யத் தகுந்த ஜீப் ஒன்றையும் தயார் செய்யச் சொன்னார்.

போன் பேசி முடித்த போது அவருக்குப் பழைய தன்னம்பிக்கை திரும்ப வந்திருந்தது. மறுபடியும் அந்தக் கடித வரிகளை ஆரம்பத்தில் இருந்து மனதிற்குள் படித்துப் பார்த்தார். ஆர்வத்தோடு படிக்கும் விஷயங்களை அவர் ஒரு முறை படித்தாலே வரிக்கு வரி நினைவு வைத்திருக்கும் தனித்தன்மை பெற்றிருந்தார் என்பதால் மறுபடி நினைவுபடுத்திக் கொள்வதில் அவருக்குச் சிரம்ம் இருககவில்லை. அதில் சில வரிகள் அவரைப் புன்னகை பூக்க வைத்தன.


”...பூரண சக்திகளுடன் இருக்கும் விசேஷ மானஸ லிங்கம் தவறான மனிதர்களிடம் சேர்ந்து விட்டால் அந்த சக்தி தவறான வழிக்குப் பயன்படுத்தப்படும், உலகின் பேரழிவிற்கு அது காரணமாகி விடும் என்பதில் சந்தேகம் இல்லை....

அப்படி நடக்கும் சாத்தியம் உண்டு என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு அந்தப் பயம் இருக்கிறது.... சிவலிங்கம் இன்னும் அவர் வசம் தான் இருக்கிறது.... கூடவே கணபதியும் தான்.....

நினைக்க நினைக்க குருஜிக்கு தன்னம்பிக்கை மேலும் வளர்ந்தது. அவர் புன்னகை பூத்தார். குருவிடம் அவர் மானசீகமாகப் பேசினார். “....கணபதிக்கு என்ன அறிவுரை சொல்லப்பட்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியா விட்டாலும் பரவாயில்லை குருவே. அதை இனி அவனும் தெரிந்து கொள்ளப் போவதில்லை. அவனுக்கு நேரடியாகவே சொல்ல முடிந்த இரண்டு சந்தர்ப்பங்களை நீங்கள் தவற விட்டு விட்டீர்கள் குருவே. இனி நீங்கள் எப்போதும் தனியாக அவனை சந்திக்கப் போவதில்லை. அவனிடம் அதைச் சொல்லவும் போவதில்லை. ஏனென்றால் இனி எப்போதும் என் ஆட்கள் பார்வையிலேயே அவன் இருப்பான்...

குருஜி திருப்தியுடன் எழுந்தார். ரிஷிகேசம் போய் வந்த பின் எல்லாம் இனி அவர் கட்டுப்பாட்டில் வரப் போகிறது. அவர் விதியின் கைப்பாவை அல்ல. அவர் ஒரு விதி செய்வார்....

(தொடரும்)

-என்.கணேசன்



12 comments:

  1. அவர் விதியின் கைப்பாவை அல்ல. அவர் ஒரு விதி செய்வார்....

    விதி வலியது ...!

    ReplyDelete
  2. Excellent . Again waiting for next thursday

    ReplyDelete
  3. வணக்கம் அண்ணா...


    நான் பரமன் ரகசியம் படிக்கவில்லை கதையோடு வாழ்ந்து வருகிறேன்...

    சிதம்பரம் ரகசியம் போல பரமன் ரகசியமும் இரகசியமாகவே பயணிக்கிறது...


    பழனிமணி
    திருச்சி

    ReplyDelete
  4. சுந்தர்May 23, 2013 at 5:31 PM

    பிரமாதமா கதை போகுது. குருஜி கேரக்டர் நல்ல மெருகேறி வருகிறது. ஆனால் கணபதி சின்ன நிகழ்ச்சியில் கூட மனசில் நிற்கிறான். சீடை சம்பந்தமான அவன் எண்ணத்தை சொல்கிறேன். குருஜி வெல்வாரா அவர் குரு வெல்வாரா என்ற பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. அடுத்த வியாழனுக்காக வெய்ட்டிங்.

    ReplyDelete
  5. விதி மாறும் என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
  6. ""எதிர்காலத்தில் வழிபாட்டுத் தலங்கள் எல்லாம் வியாபாரத் தலங்களாக மாறி விடும் என்பதை ஞானதிருஷ்டியால் அறிந்திருந்த சித்தர்கள் .. ""

    கோவில்களின் இன்றைய நிலைமையை ஒரு வரியில் சொல்லி அசத்தி விட்டீர்கள்.

    ReplyDelete
  7. best episode,,best wishes sir..

    ReplyDelete
  8. excellent twist not revealing all the details of the letter.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  10. அருமையாகப் போய்க் கொண்டிருக்கிறது சகோதரரே. வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    பவள சங்கரி

    ReplyDelete
  11. "பரம(ன்) (இ)ரகசியம்" தொடரை படிக்க ஒரு தோழர் எழுதியதால் அதைப் படிக்கத்தொடங்கி, இன்னும் நிறுத்தவில்லை.-45 --இன்னும் சில மணி நேரங்களில் current chapitarக்கு வந்துவிடுவேன்.

    உங்கள் எழுத்தும், புகுத்தியுள்ள கருத்தும் எங்களைக் கட்டுப் போட்டு இருக்கிறது உண்மை.

    But, இந்த குருஜிக்கு இத்தனை வருடங்கள் பயிற்சி, ஆன்மீகத்தைக் கரைத்துக் குடித்து எல்லாம் அறிந்தவராக இருந்தாலும், ஏன் இந்த EGO?
    அவருடைய குருஜி ஸ்தானத்துக்கு இந்த குணங்கள் வெறித்தனமாக இருக்கே? இவரின் charaterஐ வேறே மாதிரி மாற்றுங்களேன் ப்ளீஸ்.

    prana

    ReplyDelete