என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, December 1, 2025

யோகி 132

 

குமரேசன் திடுக்கிட்டாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. “தெரியலை. யாரோ எதோ நம்பர் எழுதி வீசியிருக்காங்கஎன்று சாதாரணமாகச் சொன்னான்.

அந்தக் கண்காணிப்பாளன் குமரேசனிடமிருந்து அந்தக் காகிதத்தை வாங்கிக் கொண்டான். எழுதப்பட்ட எண் ஏதோ அலைபேசி எண் போலிருந்தது. அவன் சந்தேகத்தோடு குமரேசனைப் பார்த்தான். குமரேசனோ களைகளைத் தன் சட்டியில் போட ஆரம்பித்திருந்தான். அந்தக் காகிதத்தைத் திரும்ப வாங்கவும் அவன் ஆர்வம் காட்டவில்லை. இதில் அவன் பங்கு எதாவது இருந்தால் கண்டிப்பாக அதைத் திரும்ப வாங்கத்தான் அவன் பார்த்திருக்க வேண்டும்

சற்று முன் இந்த இடத்தில் ஷ்ரவன் தான் வேலை செய்து கொண்டிருந்தான். கண்காணிப்பாளன் ஷ்ரவனை அழைத்துக் கேட்டான். “ஜீ. இந்தக் காகிதம் உங்களுடையதா?”

ஷ்ரவன் திரும்பிப் பார்த்து, குழப்பம் காட்டிச் சொன்னான். “இல்லையே. என்ன அது?”

எதோ போன் நம்பர் போலத் தெரியுது.”

ஷ்ரவன் கேட்டான். “பெயர் இருக்கா?”

அவன் அந்தக் கேள்வியைக் கேட்டது அவன் அந்தத் தாளைப் பார்க்கவே இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியது.

கண்காணிப்பாளன் இல்லையென்றதும் ஷ்ரவன் தன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தான். அவனுக்கும் அந்தக் காகிதத்தை வாங்கிக் கொள்வதிலோ, என்ன என்று பார்ப்பதிலோ ஆர்வம் இருக்கவில்லை. கண்காணிப்பாளன் யோசித்தான். யாரோ எழுதி வைத்துக் கொண்டு, வேலை முடிந்த பிறகு வீசி எறிந்திருக்கலாம். அது காற்றில் இங்கே வந்திருக்கலாம். எதற்கும் கண்ணனிடம் கொடுத்து விடுவது உத்தமம் என்று எண்ணிய அந்தக் கண்காணிப்பாளன் அந்தக் காகிதத்தைத் தன் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான்.  பின் அவன் அங்கிருந்து நகர்ந்தாலும் அவன் பார்வை ஷ்ரவன் மீதும், குமரேசன் மீதுமே இருந்தது. ஆனால் அவர்களோ தங்கள் வேலையில் மும்முரமாக இருந்தார்கள். அதன் பின் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக்கூட இல்லை.    

குமரேசன் அங்கிருந்த வேலைகளை முடித்துக் கொண்டு எதிர்ப்புறம் சென்று விட்டான். அவனோ ஷ்ரவனோ அந்தக் காகிதம் என்னவாயிற்று என்று அறிந்து கொள்ளக்கூட ஆர்வம் காட்டவில்லை. ஷ்ரவனும் வேறு பக்கம் வேலைக்குப் போனவுடன் கண்காணிப்பாளன் அந்தக் காகிதத்தை, கண்ணனிடம் கொண்டு போய் கொடுத்தான்.

தோட்டக்காரன் மருதகாசி இந்தக் காகிதத்தை களைகள்ல இருந்து எடுத்து பார்த்துகிட்டு இருந்ததை நான் பார்த்தேன். அவனுக்கு அது என்னன்னே தெரியல.  கொஞ்சம் தள்ளி ஷ்ரவனானந்தா இருந்தார். அவர் கிட்ட கேட்டதுக்கு, கீழே விழுந்திருந்ததாகவும், அதை எடுத்து அவர் தான் அந்த களைகளோட போட்டதாகவும் சொன்னார். எதுக்கும் உங்க பார்வைக்குக் கொண்டு வந்துடலாம்னு தான் எடுத்துகிட்டு வந்தேன்.”

அந்தக் காகிதத்தை வாங்கி அவனை அனுப்பி விட்டு கண்ணன் அதிலுள்ள எண்ணைத் தன் அலைபேசியில் அழைத்தார். ”ஹலோ

வணக்கம். மாரிமுத்து நாடார் கடை. சொல்லுங்க.”

நாங்க யோகாலயத்துல இருந்து பேசறோம்.”

யோகாலயமா? அது எங்கே இருக்கு?”

உங்க கடை எங்கேயிருக்கு?”

சாத்தூர்.” 

கண்ணன் இணைப்பைத் துண்டித்தார். பின் யோசித்து விட்டு தலைகீழாய் அந்த எண்களை அடித்தார். “இந்த எண் உபயோகத்தில் இல்லைஎன்ற அறிவிப்பு வந்தது. கண்ணன் சற்று யோசித்து விட்டு, எழுதப்பட்டிருந்த எண்ணிற்கு அடுத்த எண்ணை அழைத்தார். “குட் மார்னிங். காவேரி நர்சிங் ஹோம் ஹியர்என்று ஒரு பெண்மணியின் குரல் கேட்டது. எழுதப்பட்டு இருந்த எண்ணுக்கு முந்தைய எண்ணை அவர் அழைத்த போது ஒரு பெண் டெய்லர் உச்சஸ்தாயியில் பேசினாள். சந்தேகம் தெளிந்த கண்ணன் அந்தக் காகிதத்தைக் கிழித்துப் போட்டு அதை மறந்தார். 

ஷ்ரவன் எழுதியிருந்த அலைபேசி எண்ணில் கடைசி இரண்டு எண்களை திருப்பிப் போட்டு கண்ணன் அழைத்திருந்தால் அவர் ஸ்ரேயாவிடம் பேசி இருக்கலாம். ஒரு பொது இடத்தில் ரகசியமாய் ஒரு அலைபேசி எண்ணைப் பகிரும் போது அது கவனிக்கப்படும் வாய்ப்பு இருப்பதால் கடைசி இரண்டு எண்களை மாற்றி எழுதுவது ஷ்ரவன் பின்பற்றும் வழக்கம். அதை அவன் ஏற்கெனவே குமரேசனிடமும் தெரிவித்திருக்கிறான். குமரேசன் அந்தக் காகிதத்தைக் கையில் எடுத்தவுடனேயே அந்த எண்ணை மனப்பாடம் செய்து விட்டிருந்ததால் அவனும், ஷ்ரவனும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லைஆனால் இனி அவர்கள் இருவரும் சந்தித்துப் பேச முயற்சி செய்யாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முதல் தடவை தெளிந்த சந்தேகம் இரண்டாவது சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு உறுதிப்பட்டு விடக்கூடாது

ஆனால் தொலைவில் இருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கல்பனானந்தாவின் மனம் படபடத்திருந்தது. அந்தக் கண்காணிப்பாளன் அந்தக் காகிதத்தை எடுத்துக் கொண்டு போகும் போது அவள் பெரும் பதற்றத்தோடு ஷ்ரவனைப் பார்த்தாள். அவனும், மருதகாசியும் அமைதியாய் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தது அவளுக்குத் திகைப்பாய் இருந்தது. உடனடியாக பாண்டியனின் ஆட்கள் வந்து அவர்களிருவரையும் ஆக்கிரமிக்கும் காட்சியை எண்ணி அவள் பயந்திருந்தாள். ஆனால் அப்படி எதுவும் நடக்காதது அவளை ஆச்சரியப்படுத்தியது. இரண்டு நாட்கள் முன்பு வரை யோகாலயத்தில் இப்படியெல்லாம் நடக்க முடியும் என்பதும், நடத்துபவர்கள் சிக்காமல் தப்பிக்க முடியும் என்பதும் அவளால் சிறிதும் கற்பனை செய்தும் பார்க்க முடியாததாக இருந்தது.

மனிதர்களைக் கூர்ந்து கவனித்து எடை போடுவதில் அவள் பாண்டியனுக்குச் சிறிதும் சளைத்தவள் அல்ல. பதின்மப் பருவத்திலிருந்தே சுற்றியிருக்கும் சூழ்நிலையையும், ஆட்களையும்  மிகுந்த எச்சரிக்கையுடன் கவனித்து, கணித்துச் செயல்படும் பழக்கம் அவளிடம் இருந்து வருகிறது. அதை அவள் சரிவரச் செய்து வருவதனால் தான் அவள் தன்னைத் தற்காத்துக் கொண்டு, இன்றும் தாக்குப்பிடித்து வாழ்ந்து வருகிறாள்.  இரண்டு நாட்களாகவே இது வரை நடந்திருக்கும் சம்பவங்களை எல்லாம் அவள் கோர்வைப்படுத்தி யோசித்து வருகிறாள். அவள் மட்டுமே அறிந்தது, அங்கு நடப்பதைக் கவனித்து அறிந்தது, தற்போது நடந்து வருவது எல்லாவற்றையும் சேர்த்துப் பார்க்கும் போது, உண்மையாக என்ன நடக்கிறது என்பதை அவளால் ஓரளவு யூகிக்க முடிந்தது.  

ஷ்ரவனிடம் என்ன வித்தைகள் எல்லாம் கைவசம் உள்ளன, அதையெல்லாம் வைத்து அவன் என்ன செய்ய உத்தேசித்திருக்கிறான் என்பதெல்லாம் தெரியா விட்டாலும் அவன்  வந்த நோக்கம் அவளுக்குத் தெரிந்து விட்டது. அவனுடைய பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதையும் அவள் யூகித்து விட்டாள். அதை பிரம்மானந்தாவுக்கும், பாண்டியனுக்கும் தெரியாதபடி அவன் பார்த்துக் கொண்டது மட்டுமல்லாமல் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்று, அவர்களோடு நெருக்கமாகியும் வருவது பேராச்சரியம் தான். முக்கியமாக, பாண்டியன் கண்களில் மண்ணைத் தூவி நெருக்கமாக முடிவது சாதாரண விஷயம் அல்ல. என்றோ அவள் எதிர்பார்த்திருந்த நல்ல காலம் நெருங்கி வருவது போல் அவளுக்குத் தோன்ற ஆரம்பித்தது. அதனால் தான் அவள் அவன் பக்கம் சாயத் தீர்மானித்தாள். அவனும் பிரச்சினையில் மாட்டி, அவளையும் மாட்டி விடக்கூடியவன் அல்ல என்ற நம்பிக்கையும் அவளுக்குப் பிறந்திருந்தது.

கல்பனானந்தா எல்லோர் வேலைகளையும் மேற்பார்வையிட்டுக் கொண்டே வருகையில் ஷ்ரவன் அருகிலும் வந்தாள். அவன் களைகளைப் பிடுங்கி, சரிப்படுத்தியிருக்கும் செடிகளைப் பார்த்தபடியே தாழ்ந்த குரலில் சொன்னாள். “நீங்கள் இருவரும் மாட்டிக் கொண்டீர்கள் என்று நினைத்து நான் பயந்து விட்டேன்.”

அவள் சொன்னது அவனை ஆச்சரியப்படுத்தியது. அவள் அவர்களுக்காகப் பயந்ததும், அதை வெளிப்படையாகத் தெரிவித்ததும் அவளுடைய அணுகுமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தையும் உறுதிப்படுத்தியது. “நன்றி சுவாமினிஎன்று அவனும் செடிகளைப் பார்த்துக் கொண்டே சொன்னான்.

ஆனாலும் பாண்டியனை தொடர்ந்து ஏமாற்ற முடிவது சுலபமல்ல. மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.”

தெரியும் சுவாமினி

அவள் நகர்ந்து விட்டாள். மற்ற துறவிகளுடன் அவள் பேசும் கால அளவு தான் அவனிடமும் பேசியிருக்கிறாள். அருகிலிருந்த தோட்டத்திற்குச் சென்ற அவள் அங்கே வேலை செய்து கொண்டிருந்த துறவியிடம் நின்று ஏதோ கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பது ஷ்ரவனின் காதுகளில் விழுந்தது.

ஷ்ரவனுக்கும் இப்போது ஒரு பெரிய கேள்விக்குப் பதில் கிடைத்து விட்டது. அவள் அவனை யூகித்தது போலவே அவனும் அவளை யூகித்து விட்டான். சைத்ராவின் தந்தைக்கு மொட்டைக் கடிதம் எழுதியது கல்பனானந்தாவாகவே இருக்க வேண்டும். சைத்ரா அவள் கண்காணிப்பில் தான் அதிகம் வேலை செய்திருக்கிறாள். சைத்ராவுக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதையும் மற்றவர்களுக்கு முன் அவளுக்குத் தெரியத்தான் வாய்ப்பு அதிகம். முக்தானந்தா அவளைப் பற்றிச் சொன்னதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது, பெண்களுக்கு நேரும் கொடுமையைச் சகிக்க முடியாதவள் அவள் என்றும் தெரிகிறது. தபால் அனுப்பக் கூட அவளுக்கே வாய்ப்பு அதிகம்

யோகாலயத்தில் கூடுதல் செல்வாக்கு இருப்பவளாக இருந்த போதும் அவளும் அலட்சியமாக இருந்துவிட முடியாது. ஒரு முறை அவள் தன் சாமர்த்தியத்தால் பிடிபடாமல் தப்பித்திருக்கலாம். ஆனால் எப்படி அவனும் குமரேசனும் சந்தேகத்தைக் கிளப்பும்படியான இன்னொரு முயற்சி எடுக்க மாட்டார்களோ அதே போல் அவளும் இனி சந்தேகத்தைக் கிளப்பும் எந்தக் காரியத்தையும் செய்து விட முடியாது. ஒரு முறை காப்பாற்றிய அதிர்ஷ்டம், இன்னொரு முறையும் காப்பாற்றும் என்பது நிச்சயமில்லை. ஷ்ரவனுக்கு அவளுடைய உண்மை மட்டுமல்லாமல் அவள் நிலைமையும் புரிந்தது.

(தொடரும்)

என்.கணேசன்





Thursday, November 27, 2025

சாணக்கியன் 189

 

ந்திரகுப்தனும், சாரங்கராவும் சாணக்கியரை வியப்புடன் பார்த்தார்கள். மற்றவர்களுடைய எல்லா சூழ்ச்சிகளையும், சதித்திட்டங்களையும் அவர் துல்லியமாக அறியும் அறிவு படைத்தவராக இருந்த போதும் கூட முடிந்த வரை சதிகாரர்களை முந்திக் கொண்டு அவர் சதிச்செயல்களில் ஈடுபட்டதில்லை. சதி செய்பவர்கள் முதல் அடியை எடுத்து வைத்த பின்பே அவர் பதிலுக்குச் செய்ய வேண்டியதைச் செய்வது அவரது மாறாத வழக்கமாக இருந்தது.

 

பர்வதராஜன் ஆரம்பத்தில் இருந்தே தன் இலாபத்திலேயே குறியாயிருந்தானேயொழிய அதற்கு வேண்டிய பொது முயற்சிகளில் அலட்சியத்தையே காட்டினான். கூடுமான வரை குறைவாய் கஷ்டப்பட்டு, இலாபத்தில் கூடுமான வரை அதிகப் பங்கை பிடுங்கிக் கொள்ள ஆசைப்பட்டான். அப்படிப் பெறுவது தன் சாமர்த்தியமென்று நம்பினான். சாமர்த்தியத்தில் சாணக்கியரை மிஞ்ச வேண்டும் என்பதில் குறியாக இருந்த அவன் உழைப்பிலும், பொதுநல அக்கறையிலும் அவரைப் பின்பற்றுவதைத் தவிர்த்தான்.  அவற்றை எல்லாம் தன் சாமர்த்தியமான பேச்சினாலேயே சரிக்கட்டி விடலாம் என்று நம்பினான். அப்படிப்பட்டவனை முழுமையாக அறிந்திருந்தாலும் கூட அவன் அவர்களுக்கு எதிராக இயங்க ஆரம்பிக்கும் வரை அவர் பொறுமையாக சகித்தே வந்ததை ஆச்சரியத்துடன் இருவருமே கவனித்து வந்திருக்கிறார்கள்.

 

சாரங்கராவ் சொன்னான். “நான் தனநந்தனிடம் பெருந்தன்மை காட்டியதைப் போல் பர்வதராஜனிடமும் காட்டி விடுவீர்களோ என்று பயந்தேன் ஆச்சாரியரே.”

 

சாணக்கியர் சொன்னார். “எதிரியிடம் பெருந்தன்மை காட்டலாம். ஆனால் துரோகியிடம் பெருந்தன்மை காட்டுவது அவனால் பலவீனமாகவே எடுத்துக் கொள்ளப்படும். அது அவன் கூடுதல் துரோகம் செய்ய வழிவகுத்து விடும். அதனால் துரோகத்திற்குத் தண்டனையே சரியான பதில். அந்த உத்தேசம் இருந்து நம்முடன் பழகுபவர்களுக்கும் அது சரியான எச்சரிக்கையாக இருக்கும். தனநந்தனிடம் நான் பெருந்தன்மையைக் காட்ட முக்கிய காரணங்கள் இரண்டு. ஒன்று  துர்தரா. சந்திரகுப்தனை மணந்து கொள்ளப்போகும் அவள் நாம் அவள் தந்தையை நடத்திய விதத்தில் வேதனையோடு மண வாழ்க்கையில் நுழைவதை நான் விரும்பவில்லை. இன்னொரு காரணம், சந்திரகுப்தனின் பெருந்தன்மை மக்களால் பாரபட்சமில்லாமல் பாராட்டப்படும். இனி ஆளப் போகும் மன்னனைப் பற்றிய உயர்வான அபிப்பிராயம் குடிமக்களுக்கும், அறிஞர்களுக்கும் இருப்பது நமக்குப் பயன்படும்.”

 

சந்திரகுப்தன் அவர் தன் சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து அவன் நன்மைகளையே உத்தேசித்து தனநந்தனை நடத்திய விதத்தில் மனம் நெகிழ்ந்தான். அவர் உயரத்திற்கு ஒருவன் உயர முடிவது கஷ்டம் என்று ஆத்மார்த்தமாக நம்பினான். துர்தராவைப் பார்த்த முதல் கணத்திலேயே மனதைப் பறி கொடுத்த போதே எத்தனையோ முறை அவளைஎதிரியின் மகள்’, ‘எதிரியின் மகள்என்று சொல்லி விலகிக் கொள்ள அவன் கடுமையாக முயற்சி செய்திருக்கிறான். ஆனால் மனம் அவன் முயற்சியைச் சிறிதும் இலட்சியம் செய்யவில்லை. அவர் மறுத்திருந்தால் நிச்சயமாக அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்திருக்க மாட்டான். ஆனால் அவரே அவனிடம் சொன்னது போல் மீதமுள்ள வாழ்க்கையில் ஒரு வெறுமையை அவன் உணர்ந்தபடியே வாழ வேண்டி இருந்திருக்கும். அவர் அதனைப் புரிந்து கொண்டு நடந்த விதத்திற்கு அவன் வாழ்நாளெல்லாம் நன்றிக்கடன் பட்டிருப்பதை அவன் திரும்பத் திரும்ப எண்ணுகிறான்

 

சந்திரகுப்தனுக்கு இப்போது விளங்காமல் இருப்பது ராக்ஷசர் விஷயத்தில் அவர் என்ன உத்தேசித்திருக்கிறார் என்பது தான். ராக்ஷசர் ஒளிந்திருக்கும் இடத்திலிருந்து கொண்டு செய்வதை எல்லாம் சாணக்கியர் அனுமதித்து, உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறாரேயொழிய எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

 

சந்திரகுப்தன் கேட்டான். “இனி ராக்ஷசரை நாம் எப்படி கையாளப் போகிறோம் ஆச்சாரியரே?”

 

சாரங்கராவும் ஆர்வத்துடன் கேட்டான். “பர்வதராஜனோடு சேர்ந்து கொண்டு சந்திரகுப்தனைக் கொல்லச் சதித்திட்டம் தீட்டிய அவருக்கும் துரோகத்திற்கான தண்டனை தானா?”

 

சாணக்கியர் சொன்னார். ”இருவர் திட்டமும் ஒன்றே என்றாலும் ராக்ஷசர் செயல் துரோகமல்ல. நம்பிக்கைக்கோ, கடமைக்கோ எதிர்மாறாகவும் வஞ்சமாகவும் செயல்படுவது தான் துரோகம். எதிரியை அழிக்க ராக்ஷசர் திட்டமிடுவது இயற்கையே. சொல்லப் போனால் தனநந்தனின் பிரதம அமைச்சராக அவர் இந்தச் சூழலில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்கிறார். அவருடைய அறிவு, அனுபவம், செயல்பாடுகள் எல்லாம் யோசித்துப் பார்க்கையில் அவர் நம்முடன் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியவரே ஒழிய விலக்கப்பட வேண்டியவரோ, தண்டிக்கப்பட வேண்டியவரோ அல்ல.”

 

அவர்கள் இருவரும் திகைத்தார்கள்.

 

ராக்ஷசர் மலைகேதுவிடமிருந்து பதில் வரும் என்று நம்பிக் காத்திருந்து ஏமாந்து போனார். ஒரு நாள் ஜீவசித்தி வந்து அவரிடம் தகவல் சொன்னான். “ஹிமவாதகூட இளவரசர் ஹிமவாதகூடம் நோக்கிச் சென்று கொண்டு இருப்பதாகவும், நேபாள, குலு, காஷ்மீர மன்னர்கள் பாடலிபுத்திரம் நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது பிரபு

 

ராக்ஷசர் திகைத்தார். “அவர்களுடன் சேர்ந்து மலைகேதுவும் அல்லவா போர் தொடுத்து வர வேண்டும்? அவன் பிரிந்து ஹிமவாதகூடம் போவது ஏன்?”

 

ஜீவசித்தி சொன்னான். “அந்த மூன்று மன்னர்களும் கூட போர் தொடுத்து வரவில்லை பிரபு. சப்தமியன்று நடைபெறவிருக்கும் சந்திரகுப்தரின் திருமணத்திலும், தசமியன்று நடைபெறவிருக்கும் சந்திரகுப்தரின் பட்டாபிஷேகத்திலும் கலந்து கொள்ளத் தான் வருகிறார்கள்

 

ராக்ஷசரின் திகைப்பு இரட்டிப்பாகியது. அவர் பெரிதாக நம்பியிருந்த மலைகேதுவும் இப்படிப் பின்வாங்குவான் என்று அவர் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. இப்படி மனம் மாறும்படியாக என்ன நடந்து இருக்கும் என்று அவருக்குப் புரியவில்லை. அவர் விளக்கம் கேட்ட போது ஜீவசித்தியும் தெரியவில்லை என்று சொன்னான். காவலர் தலைவனான அவன் காதில் விழுந்த தகவல்களைச் சொல்லலாமே ஒழிய நேரடி நிலவரம் சொல்லக்கூடியவர்கள் ஒற்றர்களே. நிலைமை மோசமாகிக் கொண்டே போவதால் ராக்ஷசர் உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று அவசரப்பட்டார். உடனடியாக எதாவது செய்யா விட்டால் பிறகு செய்யும் படியாக எதுவுமிருக்காது....

 

ராக்ஷசர் சொன்னார். “நான் மன்னரை ஒரு முறை சந்திக்க வேண்டும் ஜீவசித்தி

 

ஜீவசித்தி சொன்னான். “சாணக்கியரின் அனுமதியில்லாமல் அது முடியாத காரியம் பிரபு. மன்னர் கானகத்தில் இருந்தாலும் அவரைச் சுற்றி இருப்பது சாணக்கியரின் வீரர்களும், பணியாட்களும் தான். மன்னரின் இருப்பிடத்தில் இருந்து ஒரு காத தூரத்தில் நீங்கள் எட்டினாலும் அது சாணக்கியரின் கவனத்தை எட்டாமல் இருக்காது

 

ராக்ஷசர் சற்று யோசித்து விட்டுச் சொன்னார். “அப்படியானால் நான் என் ஒற்றர் தலைவனைச் சந்திக்க வேண்டும் ஜீவசித்தி. அதற்கு ஏற்பாடு செய்

 

ஜீவசித்தி சற்று தயக்கம் காட்டினான். ராக்ஷசர் முடிவாகச் சொன்னார். “இதிலும் ஆபத்து இருப்பது எனக்கும் தெரியும். ஆனால் நான் முடிவெடுத்து எதாவது செய்தாக வேண்டும் ஜீவசித்தி. அதற்கு எனக்கு உண்மை நிலவரம் தெரிய வேண்டும். நான் பிடிபட்டாலும் பரவாயில்லை. இனியும் நான் பாதுகாப்பு கருதி மறைந்திருப்பதில் அர்த்தமில்லை. ஏனென்றால் துர்தராவின் திருமணமும், சந்திரகுப்தனின் பட்டாபிஷேகமும் முடிந்த பின் நான் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. செய்வது எதுவானாலும் நான் உடனடியாகச் செய்ய வேண்டும்.”

 

ஜீவசித்தியிடம் சாணக்கியர் அன்று காலை தான் இந்தக் கோரிக்கை இனி எந்த நேரத்திலும் ராக்ஷசரிடமிருந்து வரும் என்று சொல்லி இருந்தார். ”தயக்கம் காட்டி விட்டு ஒத்துக் கொள். அவர்கள் சந்தித்துக் கொள்ள ஏற்பாடும் செய்து கொடுஎன்று அனுமதியும் தந்திருந்தார். அதனால் ஜீவசித்தி மேலும் சிறிது யோசிப்பது போல் காட்டி விட்டுச் சம்மதித்தான்.

 

அன்றிரவு பர்வதராஜனைச் சந்தித்த அதே கட்டிடத்திற்குச் சென்று ராக்ஷசர் காத்திருந்தார். நள்ளிரவு கழிந்த பின் ஒற்றர் தலைவன்  பதுங்கியபடி வந்தான். ராக்ஷசரைக் கண்டவுடன் அவன் கண்கலங்கினான். எப்போதும் அதிகார நிலையிலேயே அவரை இது வரை கண்டிருந்த அவனுக்கு இப்போது அவர் இப்படித் தலைமறைவாக இருக்க நேர்ந்த சமயத்தில் காண்பதுது மிகுந்த வேதனையாக இருந்தது. பரிதாபகரமாக இருந்த தனநந்தனை கானகத்தில் தொலைவில் பார்த்த போது கூட அவன் இப்படி உணரவில்லை. மனதின் ஒரு ஓரத்தில் தனநந்தன் செய்ததற்கெல்லாம் சேர்த்து அனுபவிக்கிறான் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் ராக்‌ஷசர் கடுமையாகத் தன்னைக் காட்டிக் கொண்டாலும் நோக்கத்தில் தவறில்லாத மனிதர் என்று அவன் அனுபவத்தில் அறிந்திருந்தான்.  

 

ராக்ஷசர் அவன் கண்கலங்கியதில் மனம் நெகிழ்ந்தபடி அவனிடம் கேட்டார். “மகதம் எப்படி இருக்கிறது?”

 

(தொடரும்)

என்.கணேசன்       



 

Wednesday, November 26, 2025

முந்தைய சிந்தனைகள்-128

என்னுடைய ‘ ஆழ்மனதின் அற்புத சக்திகள்’ நூலில் இருந்து சில சிந்தனைத் துளிகள்...












Monday, November 24, 2025

யோகி 131


ஷ்ரவன் எதிரிகளை அவன் வகுத்த பாதையில் ஓட விட்டிருக்கிறான். அவனுடைய வேலையை இப்போது அவர்களுடைய வேலையாக அவன் மாற்றியிருக்கிறான். நிஜ யோகியை இனி அவர்களும் தேட ஆரம்பிப்பார்கள். சைத்ரா மட்டுமல்லாமல் கல்பனானந்தாவும் பார்த்திருக்கும் நிஜ யோகி கிடைத்தால், எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைத்து விடும் என்பது நிச்சயமில்லை. ஆனால் அவர் கிடைப்பதன் மூலம் இப்போதிருக்கும் பல குழப்பங்கள் தெளியும் என்பது நிச்சயம்.

 

ஆரம்பத்தில், நிஜ யோகியைப் பற்றி இளைஞனான அவன் எதாவது பேசினால், அவர்களும் இரண்டையும் சம்பந்தப்படுத்திப் பார்த்தால், அவனுடைய அடையாளம் வெளிப்பட்டு விடலாம் அல்லது அவன் மீது அவர்களுக்கு சந்தேகம் எழுந்து விடலாம் என்ற பயம் அவனுக்கு இருந்தது. இப்போது அவனுடைய அபூர்வ சக்தி மீது அவனை விட அவர்களுக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டு விட்டதால், அவனால் இந்த ஆபத்தான செயலில் ஈடுபட முடிந்திருக்கிறது. இப்போது அவனல்லாத வேறு ஒரு இளைஞனை அவர்களே எதிரியாக கண்டுபிடித்து விட்டது போல் ஆகி விட்டது. அவர்கள் அந்த இளைஞனின் புகைப்படத்தைக் காட்டி ஷ்ரவனிடம் உறுதிப்படுத்திக் கொள்ளும் நிலைமை வந்திருக்கிறது. அந்த இளைஞன் நிஜ யோகியைத் தேடுவதும் அவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்த உண்மை. அதனால் அவர் காலடி மண் பற்றியும், விசேஷ பூஜை பற்றியும் சொல்லி நிறுத்திக் கொண்டான்.

 

யோகாலயம் வருவதற்கு முன் அவன் படித்த, மாந்திரீகம் குறித்த ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில், யோகி, சித்தர்களின் காலடி மண்ணை, செய்வினை, பில்லி சூனியம் ஆகியவற்றிலிருந்து காப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளும் வழிபாட்டு முறைகள் பற்றி எழுதியிருந்ததைப் படித்திருந்தான். இந்தியா, திபெத், எகிப்து போன்ற நாடுகளில் இந்த வழிமுறைகள் இருக்கின்றன என்று அந்த ஆராய்ச்சியாளர் எழுதியிருந்தார். அப்படியானால் அதைக் கண்டிப்பாக  தேவானந்தகிரியும் அறிந்திருக்க வேண்டும். அதனால் தான் அவன் யோகியின் காலடி மண், பூஜை என்று சொல்லி நிறுத்திக் கொண்டான். இரண்டும், இரண்டும் என்று சொல்லி அவன் நிறுத்திக் கொண்டால் நான்கு என்ற பதிலை அவர்களுக்குக் கணிதம் தெரியா விட்டாலும், தெரிந்தவரோடு பேசி எட்டி விடுவார்கள் என்று அவன் கணக்கிட்டான். அதன்படியே அவர்கள் அவன் சொன்னதை வைத்து தேவானந்தகிரியிடம் பேசி அந்த முடிவை எட்டி விட்டார்கள். செய்வினையிலிருந்து தப்பிக்கப் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் அவர்கள் இந்த மிகப்பெரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தவற மாட்டார்கள் என்று அவன் கணக்கிட்டது சரியாகப் போய் விட்டது.

 

அடுத்ததாய் மோகன் ராவுக்குப் பதிலாய் அந்த வேலையை யாரிடம் ஒப்படைப்பது என்ற தீவிர ஆலோசனையில் ஷ்ரவன் இறங்கினான். அவன் ஏற்றுக் கொள்ளும் ஆபத்தான, ரகசியமான வேலைகளில் மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ள ஆட்களையே அவன் நம்பினான். ஒவ்வொரு வேலைக்கு ஒவ்வொருவர் என்று அவர்களுடைனேயே அவன் எப்போதும் ஒரு குழுவாகச் செயல்பட்டவன். அவர்களுடைய அரசுத் துறையில் எத்தனையோ வல்லுனர்கள் இருந்தாலும் அவன் அவர்களுடைய உதவியை நாடியது கிடையாது. காரணம், அவர்கள் திறமைக்கு இணையாக நேர்மை இருக்கிறதா என்பதை அவன் தனிப்பட்ட முறையில் சோதித்துத் தெளிந்து கொண்டதில்லை. மோகன் ராவ் போன்ற அவன் குழு ஆட்கள் முன்பே அவனால் சோதிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் அவன் தன்னை நம்பும் அளவுக்கே முழுமையாக நம்பினான். அதனால் இப்போது மோகன் ராவை இந்த வேலையில் ஈடுபடுத்த முடியாததை  அவன் கையுடைந்ததைப் போல உணர்ந்தான்.

 

ராவ் வரும் வரை அவனால் காத்திருக்க முடியாது. அவனுக்கு முழு நம்பிக்கை இல்லாதவர்களிடம் அவனால் இந்த வேலையை ஒப்படைக்கவும் முடியாது. காரணம் யோகாலயத்திற்கு எதிரான எதாவது தகவல்களைக் கண்டுபிடிக்கும் திறமைசாலிகள், கண்டுபிடித்ததை அவனிடம் சொல்வதற்குப் பதிலாக யோகாலயத்திடம் சொல்லி, அதை அவர்களுக்கு விற்று, பல கோடிகள் சம்பாதித்து விட முடியும். அது அவர்களுடைய பேரம் பேசும் சாமர்த்தியத்தைப் பொறுத்தது.

 

ஆயிரங்களில் விலை போகாதவர்கள், இலட்சங்களில் விலை போகலாம். இலட்சங்களில் விலை போகாதவர்கள். கோடிகளில் விலை போகலாம். சில கோடிகளில் விலை போகாதவர்கள், பல கோடிகளில் விலை போகலாம். ஒரே ஒரு முறை நேர்மை தவறினால், பின் வாழ்நாள் முழுதும் வேலை எதுவும் செய்யாமல் ஆடம்பரமாய் வாழ முடியும் என்றால் எத்தனை நேர்மையாளர்கள் மிஞ்சுவார்கள் என்பது கேள்விக்குறியே. அதனால் பல கோடிகளுக்கும் விலை போகாதவர் என்று அவன் நம்பி இந்த வேலையை யாரிடம் தருவது என்ற பெருங்குழப்பத்தில் ஷ்ரவன் இருந்தான். திறமையும் நேர்மையும் சேர்ந்து உச்சத்தில் இருக்கும்படியான, ராவுக்கு நிகரான நபரை இங்கிருந்து கொண்டு அவன் எப்படித் தேடுவது?

 

நீண்ட நேரம் யோசித்துச் சலித்த போது தான் அவனுக்கு ஸ்ரேயாவின் நினைவு வந்தது. அவளும் கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்தவள். அவளுடைய வேலையும் கிட்டத்தட்ட அவன் வேலை சார்ந்ததே. கூடுதலாக சூட்சும உள்ளுணர்வும் இருக்க வேண்டும். அதுவும் அவளிடம் இருக்கிறது. அவளிடம் கொடுத்தால் என்ன? அவளும் இந்த வழக்கில் ஏதாவது வேலை செய்யும் ஆவலை அன்று சொல்லியிருக்கிறாள்அலுவலக வேலை வேறு, இது போன்ற துப்பறியும் வேலை வேறு…. இருந்தாலும் ஆர்வம் இருந்தால் இந்த வேலையும் அவளுக்கு முடியாதது அல்ல. நேர்மை விஷயத்தில், அவளை அவன் தனக்கு நிகராக நம்பினான். அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை.   

 

மறுநாள் காலை சித்தானந்தா குளிக்கச் சென்றிருக்கும் போது ஷ்ரவன் அவசர அவசரமாக ஒரு சிறிய காகிதத்தில் எதோ ஒரு அலைபேசி எண்ணை எழுதுவதை முக்தானந்தா கவனித்தார். அவர் அவனிடம் எதையும் கேட்கவில்லை. சித்தானந்தா காய்ச்சல் குணமாகி அறைக்குத் திரும்பி வந்ததிலிருந்தே அவர் முன்பு போலவே மாறி விட்டிருந்தார். சித்தானந்தா முன்னிலையில் அவர் ஷ்ரவனிடம் மிக அபூர்வமாகவே பேசினார். அப்படி எதாவது பேசியதும் ஓரிரு வார்த்தைகளுக்கு உள்ளாகவே இருந்தது. ஷ்ரவனும் முக்தானந்தாவிடம் நெருக்கமாகி விட்டதை வெளிக் காட்டவில்லை.   

 

ஷ்ரவன் அந்தச் சிறிய காகிதத்தை மறைத்து வைத்துக் கொண்டு காலையில் தோட்ட வேலைக்குப் போனான். குமரேசன் தொலைவில் ஒரு பகுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். இன்று எப்படியாவது இந்தக் காகிதத்தை அவனிடம் கொடுத்துப் பேசிவிட வேண்டும் என்று ஷ்ரவன் உறுதியாய் இருந்தான். கல்பனானந்தா அவனுக்கு எங்கே வேலையைத் தருகிறாளோ, தெரியவில்லை. யோசனையுடன் கல்பனானந்தாவை அவன் நெருங்கிய போது அவள் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. குமரேசனை அவன் பார்த்து நின்றதைக் கவனித்திருப்பாளோ?

 

கல்பனானந்தா அவனுக்கு குமரேசன் வேலை பார்த்துக் கொண்டிருந்த இடத்திற்கு சுமார் நூறடி தள்ளி இருந்த தோட்டத்திலேயே வேலையை ஒதுக்கினாள். அவன் தேவையைப் புரிந்து கொண்டு அந்த வேலையை ஒதுக்குகினாளா, இல்லை தற்செயலாக ஒதுக்கினாளா என்று அவனுக்குப் புரியவில்லை. ஒருவேளை தெரிந்தே அதைச் செய்தாள் என்றால், நேற்று வரை கூடுதல் உதவி எதுவும் செய்யத் தயாராக இருக்காத அவளுடைய  மனமாற்றத்திற்கு எதாவது காரணம் இருக்க வேண்டும். “நன்றி சுவாமினிஎன்று ஆத்மார்த்தமாக அவன் சொன்ன போது அவள் புன்னகையுடன் தலையசைத்தாள்.

 

குமரேசன் ஷ்ரவன் வருவதைக் கவனித்தான். அருகிலிருக்கும் கண்காணிப்பாளன் யார் என்பதைப் பார்த்தான். இருபதடி தள்ளி நின்று கொண்டு எதிர்ப்பக்கம் பார்த்துக் கொண்டிருந்த அந்தக் கண்காணிப்பாளன் மிகவும் கூர்மையான பார்வை உடையவன் என்பது குமரேசனின் அனுபவம். ஷ்ரவனுக்கு எச்சரிக்க வேண்டியதேயில்லை. அவன் கவனமாகத் தான் இருப்பான்குமரேசன் தன் வேலையை அமைதியாய் பார்க்க ஆரம்பித்தான்.

 

ஷ்ரவனும் அருகிலிருந்த தோட்டத்தில் தன் வேலையைச் செய்ய ஆரம்பித்தான். களைகளைப் பிடுங்கிப் போட்டவன், கண்காணிப்பாளன் வேறு ஒரு பக்கத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, களைகளோடு சேர்ந்து அந்தச் சிறிய காகிதத்தையும் போட்டான். அதை குமரேசன் கவனித்தான்.

 

கண்காணிப்பாளன் வேறொரு துறவியை நோக்கி நடப்பதைப் பார்த்து அவன் அவசரமாக ஷ்ரவன் போட்ட களைகளை எடுக்க வந்தான்.  ஷ்ரவன் வேலை பார்த்துக் கொண்டே குமரேசனிடம் சொன்னான். “இது ஸ்ரேயாவின் போன் நம்பர். அவ கிட்டே இந்த வேலையை ஒப்படைக்கலாம்னு நினைக்கிறேன். நம்ம அவசியம் என்னங்கறத மட்டும் ராகவன் சார் அவ கிட்ட சொன்னால் போதும்…”

 

ஷ்ரவன் சற்று தள்ளி உள்ள செடிகளைப் பராமரிக்கப் போனான். குமரேசன் அந்தச் சிறிய காகிதத்தை எடுத்து அதில் உள்ள அலைபேசி எண்ணை மனப்பாடம் செய்து கொண்டிருக்கையில் பின்னாலிருந்து கண்காணிப்பாளன் குரல் பின்னால் இருந்து கேட்டது. ”என்ன காகிதம் அது?”

 

(தொடரும்)

என்.கணேசன்