என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, September 29, 2025

யோகி 122


 ல்பனா அவளுடைய பெற்றோருக்கு ஒரே மகள். அவளுடைய தந்தை ஒரு அரசாங்க வேலையில் இருந்தார். அவர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியிருந்தாலும் கூட அந்தச் செலவையும் மீறி அவருடைய மாத சம்பளம் அவர்களுடைய சிறிய குடும்பத்திற்குத் தாராளமாகப் போதுமானதாக இருந்தது. தாய் அதிகம் படிக்காதவள். கணவனுக்குப் பயந்து வாழ்ந்தவள். ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவள் என்பதால் பணப்பிரச்சினை இல்லாமல் வாழ முடிவதே பெரும் பாக்கியம் என்று நினைத்தவள். தந்தை அதிகமாய் அன்பு காட்டாதவராக இருந்தாலும், கல்பனாவும் வயதுக்கு வரும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வந்தாள். அதன் பின் தான் அவளுடைய வாழ்க்கை நரகமாய் மாறியது.

 காமாந்தகனான அவளுடைய தந்தை குடித்து விட்டு வந்த போதெல்லாம் அவளிடம் முறை தவறி நடக்க ஆரம்பித்தார். அவளுடைய தாயோ கணவனைக் கண்டிக்க முடியாமல் கண்ணீர் விடுவதோடு நிறுத்திக் கொண்டாள். எங்கு பாதுகாப்பாக ஒரு பெண் இருக்க முடியுமோ, அங்கு பாதுகாப்பாக இருக்க முடியாத நிலைமை அவளுக்கு ஏற்பட்டது. அந்தப் பிஞ்சு வயதில் என்ன செய்வது என்று அறியாமல் பெரும் மனப்போராட்டத்திற்குக் கல்பனா ஆளானாள். பல நாட்கள், தந்தை வருவதற்கு முன் தன் அறைக்குள் போய் புகுந்து கொண்டால் மறுநாள் காலை வரை அவள் வெளியே வராமல் இருப்பாள். ஆனால் குடித்து விட்டு வந்து அவர், அவளுடைய அறைக்கதவைத் தட்டி கலாட்டா செய்வார். அவளுடைய தாயை அடிப்பார். பகலில் கல்பனாவை அடித்துத் துன்புறுத்துவார். இதை வெளியே யாரிடமும் சொல்ல முடியாமல், வேறு போக்கிடமும் இல்லாமல் கல்பனா நரக வாழ்க்கை வாழ்ந்தாள்.

 அந்த சமயங்களில் அவளுக்குப் பெரிதாய் துணை நின்றவை நூலகத்தில் படிக்கக் கிடைத்த தன்னம்பிக்கை நூல்களும், சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளும் தான். அவை தான் அவளுக்குத் தைரியத்தையும், நம்பிக்கையையும் தந்து காப்பாற்றின. ஒவ்வொருவனும் தன்னைத் தானே காத்துக் கொள்ள வேண்டும், பிரச்சினைகளை நேராகவே சந்திக்க வேண்டும், சூழ்நிலைகளை மீறி அவனவனே முன்னேற வேண்டும் என்ற பாடங்களை அந்த நூல்கள் அவளுக்குக் கற்றுத் தந்தன. தன்னால் முடிந்த அனைத்தையும் ஒரு மனிதன் செய்தானானால், அவன் சக்திக்கு மீறியதை இறைவன் பார்த்துக் கொள்வான் என்ற தெளிவு பிறந்தது

 அதன் பின் ஒரு நாள் அவள் துணிந்து அவரை எதிர்த்து நின்றாள். இனி இது போல் அவர் துன்புறுத்தினால் அருகில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்குப் போய் புகார் கொடுப்பதாய் பயமுறுத்தினாள். அப்போது அவளுக்கு வயது பதினாறு. ஆரம்பத்தில் அவளுடைய தந்தை அதைப் போலி அச்சுறுத்தலாக எடுத்துக் கொண்டார். ஆனால் அன்று அவள் உண்மையாகவே எதற்கும் தயாராக இருப்பதை அவரால் உணர முடிந்தது. சட்டத்தில் குழந்தை பாலியல் சித்திரவதைக்கான தண்டனைகள் கடுமையானவை என்பதை அவர் அறியாதவர் அல்ல. அவள் அப்படிப் புகார் செய்தால், சிறை செல்ல வேண்டி வருவது மட்டுமல்லாமல், தன் அரசு வேலையையும் இழக்க வேண்டிவரும் என்ற பயம் அவருக்கு எழுந்தது.

 அன்று முதல் அவருடைய காமச்சேட்டைகளும், அவளை அடிப்பதும் நின்று போயின. ஆனால் அன்றிலிருந்து அவளை எதிரியாக நினைக்க ஆரம்பித்தார். அவள் முன்னிலையில் அவள் தாயை அதிகமாகத் துன்புறுத்த ஆரம்பித்தார். அது அவளுக்கு வேறு விதமான சித்திரவதையாக இருந்தது. ’உன்னை அடிப்பதற்குப் பதிலாகத் தான் உன் அம்மாவை அடிக்கிறேன்என்பதை எல்லா விதங்களிலும் தெரியப்படுத்தினார். அம்மாவோ அதையும் விதி என்றே ஏற்றுக் கொள்பவளாக இருந்தாள். அவருக்கு ஒத்துழைக்காமல் தண்டச்சோறாக இருக்கும் கல்பனா அங்கிருந்து வெளியேறினால் தான் அவள் அம்மாவைத் துன்புறுத்துவது நிறுத்தப்படும் என்பதை அவர் வெளிப்படையாகவே தெரியப்படுத்தினார். பதினெட்டு வயது வரை எப்படியோ அந்த வீட்டில் தாக்குப் பிடித்த அவள், பின் அங்கிருந்து வெளியேறினாள். இந்த நித்திய சித்திரவதையிலிருந்து அவளையும், அவள் தாயையும் காப்பாற்ற அவளுக்கு வேறுவழி தெரியவில்லை. வீட்டை விட்டு வெளியேறுகையில் அவள் ஆழ்மனதில் ஒரு அணையாத அக்னி இருந்தது. ஒரு நாள் அவளும் சாதித்துக் காட்டுவாள். அவளும் சிகரங்களை எட்டுவாள்

 வீட்டை விட்டு வெளியேறி வந்தவளுக்கு, அவளுடைய நிலைமையை முழுமையாக அறிந்திருந்து, அடைக்கலம் தந்தது பிரம்மானந்தா தான். அவர் அப்போது ஒரு வாடகை இடத்தில் யோகா வகுப்புகள் நடத்தி வந்தார். அவளுடைய தந்தை யோகா கற்றுக் கொடுக்க எல்லாம் தன்னிடம் பணம் இல்லை என்று பணம் தர மறுத்திருந்தார். ஆனாலும் ஒரு வருடத்துக்கு முன்பு இலவசமாக அவளுக்கு பிரம்மானந்தா யோகா/தியானம் கற்றுத் தந்திருந்தார். வீட்டை விட்டு வந்தவுடன் அவருடன் சேர்ந்து யோகா மற்றும் தியானம் கற்றுத் தரும் பணியில் கல்பனா தன்னை இணைத்துக் கொண்டாள்.

 அன்று அவர்கள் கற்றுத் தந்ததெல்லாம் பத்மநாப நம்பூதிரி கற்றுத் தந்த பெயரிலேயே இருந்ததுஅந்த யோகா மற்றும் தியான முறைகளை பத்மநாப நம்பூதிரி பள்ளியில் தான் கற்றது என்று சொல்லிக் கொள்ள அன்று பிரம்மானந்தா தயங்கியதேயில்லை. ஆனால் அதையும் மெருகேற்ற வேண்டும், மேம்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் பிரம்மானந்தாவிடம் அன்று உண்மையாகவே இருந்தது. அதை கல்பனாவிடமும், அவருடன் இருந்த மற்ற நண்பர்களிடமும் அவர் அன்று தெரிவித்திருக்கிறார். ஆனால் யோகாலயம் பிரபலமாக ஆரம்பித்த போது, அவர் பத்மநாப நம்பூதிரியின் பெயரைச் சொல்வதில் ஒரு பிரச்சினையை உணர்ந்தார். யோகாலயத்திற்கு வருவோர் அவரை விட அவர் குருவான பத்மநாப நம்பூதிரியை உயர்வாக நினைக்கவும், மதிக்கவும் ஆரம்பித்தார்கள். சிலர் அவரைப் பற்றியும், அவருடைய யோகா அமைப்பின் கிளைகள் எங்கேயெல்லாம் இருக்கின்றன என்பதைப் பற்றியும் விசாரிக்க ஆரம்பித்தார்கள். உடனே பிரம்மானந்தா பத்மநாப நம்பூதிரி பெயரைப் பயன்படுத்துவதை நிறுத்தினார். அவர் அந்த யோகா, தியான முறைகளின் பெயர்களையும் நவீனமும், விஞ்ஞானமும் கலந்த பெயர்களாய் மாற்றினார்.

 அப்போது கல்பனாவிடம் அவர் சொன்னார். “நாம் இந்த யோகாலயாவைப் பிரபலப்படுத்த வேண்டுமென்றால் அடுத்தவர்கள் பெயர்களை உபயோகப்படுத்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் நாம் மற்றவர்களுக்கு விளம்பரம் செய்வது போல் ஆகிவிடும். இது விளம்பர யுகம். எத்தனை தான் உயர்வாக இருந்தாலும், விளம்பரமில்லா விட்டால், வித்தியாசமாக எதையாவது செய்யா விட்டால், நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள். நாம் பின்தங்கி விடுவோம்

 முன்பெல்லாம் சத்சங்கத்தில் எல்லா அறிஞர்களுடைய புத்தகங்களையும், போதனைகளையும் பற்றி அவர்கள் பேசுவார்கள். அப்போது அவரும் பேராசிரியர் சிவசங்கரன் சொல்லியிருந்த அறிஞர்கள் பற்றி எல்லாம் சொல்வார். அந்தச் சமயத்தில் தான் ஒரு நாள் சிவசங்கரன் அடையாளம் காட்டியிருந்த ஒரு யோகியைப் பற்றியும் சொன்னார். நிஜமாகவே அமைதியும், சாந்தமும் அந்த யோகி முன்னிலையில் தான் உணர்ந்ததாகச் சொன்னாலும் அது மட்டும் போதாது என்றும், அது சொல்லிக் கொள்ளும் அளவுக்குப் பெருமையல்ல என்று தனக்குத் தோன்றியதாகவும் சொன்னார்.

 யோகாலயம் வளர்ந்தது. முக்தானந்தா போன்ற சிலர் துறவறம் பூண்டு யோகாலயத்தில்  துறவிகளாகச் சேர்ந்த போது, கல்பனாவும் துறவறம் பூண்டு கல்பனானந்தாவாக ஆனாள். ஆனால் அதன் பின் அவள் பிரம்மானந்தாவிடம் காண ஆரம்பித்த மாற்றங்கள் ஏராளம்

 அவர் மற்ற அறிஞர்களின் கருத்துக்களைச் சொன்னாலும், அவர்களுடைய பெயர்களைச் சொல்வதையும் தவிர்த்து, தன் சொந்தக் கருத்தாக சொல்ல ஆரம்பித்தார். அவர் ஓஷோவின் தீவிர ரசிகராக இருந்தவர். ஓஷோ எல்லா மகான்கள், ஞானிகளையும் படித்திருந்து அவர்கள் ஞானத்தை விரிவாக விவரிப்பதைப் பார்த்து பிரமித்தவர். சொற்பொழிவுகளில் அவருடைய நூல்களில் இருந்து தாராளமாக எடுத்துக் கொண்டு பேசினாலும் ஓஷோவின் பெயரைச் சொல்வதையும் தவிர்த்தார். ஆனால் ஓஷோ போல் குல்லாயும், வண்ண வண்ண நீண்ட அங்கிகளையும் அவர் அணிய ஆரம்பித்தார்.

 குருவாகப் பிரபலமானதில் அவருக்கு ஆரம்பத்தில் திருப்தி இருந்தாலும், போகப் போக அதுவும் சலித்தது. அதற்கும் மேலாக இறையருள் பெற்ற ஒரு யோகியாகத் தன்னைக் காட்டிக் கொள்ள ஒரு நாள் திடீரென்று சதுரகிரி மலையில் சித்தர்கள், யோகிகள் மற்றும் சுந்தரமகாலிங்கம் காட்சியளித்த கதையை அவிழ்த்து விட்டார். அந்தக் கதையைச் சொன்ன தினத்தன்று அவர் கல்பனாவிடம் சொன்னார். “இது உண்மையாகவே நடந்தது. ஆனால் யோகி கோரக்கர் இதை நான் அனுமதி தரும் வரை நீ வெளியே சொல்லக்கூடாது என்று எனக்கு கட்டளை இட்டிருந்தார். அதனால் தான் இத்தனை நாள் இதை நான் வெளியே சொல்லியிருக்கவில்லை. இப்போது இதைச் சொல்லலாம் என்று யோகி கோரக்கர் நேற்றிரவு என் கனவில் சொன்னார். அதனால் தான் சொல்கிறேன்என்றார்.

 தொடர்ந்த காலத்தில் அந்தக் கதையும் அவருக்குச் சொல்லிச் சலித்து விட்டது. திடீரென்று அவர் முந்தைய பிறவியில் பதஞ்சலி மகரிஷியின் சீடர் என்று சொல்ல ஆரம்பித்தார். இந்த முறை அவர் கல்பனாவிடம் எந்த விளக்கமும் தரவில்லை. அதற்குப் பின் எப்போதும் எதற்கும் அவளிடம் அவர் விளக்கம் தந்ததில்லை.

 (தொடரும்)

என்.கணேசன்




Thursday, September 25, 2025

சாணக்கியன் 180

சுசித்தார்த்தக் பர்வதராஜனிடம் வந்து இரகசியமாகச் சொன்னான். “அரசே. ராக்ஷசரிடமிருந்து ஒரு தகவல் வந்திருக்கிறது

 

பர்வதராஜன் நிமிர்ந்து உட்கார்ந்தான். ஒரே நாளில் ராக்ஷசரிடமிருந்து தகவல் வரும் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் ஆவலோடு கேட்டான். “என்ன தகவல்?”

 

தங்களிடம் அவர் பேசியதை நிறைவேற்ற அரண்மனையில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டுமாம். அது இரண்டு மூன்று நாள் நடக்கும் நிகழ்ச்சிகளாக இருந்தால் நல்லது என்று சொல்கிறாராம்.”

 

உண்மையில் ராக்ஷசர் சொன்னது முதல் வாக்கியம் மட்டும் தான். இரண்டாவது வாக்கியம் சேர்க்கப்பட்டது என்பதை அறியாத பர்வதராஜன் மகிழ்ச்சியடைந்தான். இந்தப் போரை ஆரம்பித்த பின்னரே அவன் வாழ்க்கை சோபை இல்லாமல் தான் இருக்கிறது. அவன் எதிர்பார்க்கும் விஷயங்களும் அவன் விருப்பப்படி வேகமாக நடப்பதில்லை. அதனால் தங்கள் திட்டம் நிறைவேறப்போவது மட்டுமல்லாமல் களை இழந்த வாழ்க்கையில் இந்தக் கலை நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியைக் கூட்டுமென்று அவன் எண்ணினான்.

 

ஆனால் திடீரென்று ஒரு பலத்த சந்தேகம் வர அவன் எச்சரிக்கையுடன் கேட்டான். “எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்வதால் சந்திரகுப்தனை நான் தான் திட்டமிட்டுக் கொன்றேன் என்ற சந்தேகம் வந்து விடாதே

 

சுசித்தார்த்தக் சொன்னான். “ராக்ஷசர் இது ஒரு விபத்து அல்லது இயற்கையாக நடப்பது போலத் தெரியும்படி செய்வதாகச் சொல்லியிருக்கிறார் அரசே. அதனால் அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். உங்களுக்கும் அந்தக் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாக யாருக்கும் தெரியாது.”

 

நிம்மதியடைந்த பர்வதராஜன் உடனே சாணக்கியரைப் பார்க்கக் கிளம்பினான். முன்பு போல அவனைப் பல இடங்களைச் சுற்ற வைக்காமல் சாணக்கியர் அவர் மாளிகையிலேயே இருந்தார். பர்வதராஜனின் வணக்கத்தை ஏற்றுக் கொண்ட அவர்தங்கள் மாளிகையில் வசதிகள் எல்லாம் திருப்திகரமாக இருக்கிறதல்லவா?” என்று கேட்டார்.

 

தங்கள் தயவில் எந்த வசதிக்கும் எனக்குக் குறைவில்லை ஆச்சாரியரே. ஆனால் வேறு ஒரு குறை எனக்கும் என் மகனுக்கும் இருக்கின்றது. அதைத் தெரிவிக்கவே இப்போது வந்தேன்என்று பர்வதராஜன் சொன்னான்.

 

என்ன குறை பர்வதராஜனே?”

 

நாம் மகதத்தை வென்றது சாதாரண நிகழ்ச்சி அல்ல. இந்த மாபெரும் வெற்றியை நாம் இன்னும் கொண்டாடாதது எனக்கு அதிருப்தியைத் தருகிறது ஆச்சாரியரே.”

 

எப்படிக் கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறாய்?”

 

கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும். அதில் உங்களுக்கு ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். ஏனென்றால் நீங்கள் துறவியைப் போலவே வாழ்பவர். ஆனால் நாங்கள் அப்படி அல்லவே. நாங்கள் என்று நான் சொல்வது சந்திரகுப்தனையும் சேர்த்து தான். எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டிய இளம் வயதினனை நீங்கள் துறவியைப் போலவே இருக்க வைப்பது சரியல்ல ஆச்சாரியரேஎன்று பர்வதராஜன் உரிமையோடு சொன்னான்.

 

சாணக்கியர் மென்மையான குரலில் சொன்னார். “நீ சொல்வதும் சரி தான் பர்வதராஜனே. நான் இராஜாங்க காரியங்களையே கவனித்துக் கொண்டு இருப்பதால் லௌகீக காரியங்கள் சிலவற்றை என்னை அறியாமல் அலட்சியம் செய்து விடுகிறேன் என்பது எனக்கும் புரிகிறது. நாளையே உனக்குப் பிடித்தாற்போல் கலைநிகழ்ச்சிகளுக்கு நீயே ஏற்பாடு செய்து விடு.”

 

பர்வதராஜன் சொன்னான். “ஆச்சாரியரே. வெற்றி பெரிதாக இருக்கும் போது கொண்டாட்டங்களும் நீண்டதாக இருப்பது தான் பொருத்தமாக இருக்கும். ஒரு நாள் கலைநிகழ்ச்சிகள் போதாது. இரண்டு அல்லது மூன்று நாட்களாவது கொண்டாட வேண்டும்.”

 

உன் விருப்பம் போலச் செய். ஆனால் என்னால் அந்த நிகழ்ச்சிகளைச் சகித்துக் கொண்டு இருக்க முடியாது என்பதால் நான் பங்கு கொள்ள முடியாது. எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. இந்த மூன்று நாட்களில் நான்  அவற்றைச் செய்து முடிக்கிறேன்.”

 

பர்வதராஜன் பரம திருப்தி அடைந்தான். இது போன்ற சமயங்களில் சாணக்கியர் இல்லாமல் இருப்பது நல்லது. அவர் இருந்தால் அவர் கழுகுப் பார்வைக்கு எதுவும் தப்பாமல் இருக்காது. கலை நிகழ்ச்சிகளில் ஆர்வமில்லாததன் காரணமாக தானாக அவராகவே விலகுவது அவர்கள் அதிர்ஷ்டம் தான். ராக்ஷசரிடம் இந்தத் தகவலைச் சொன்னால் மிகவும் சந்தோஷப்படுவார். “நான் சொன்னதற்கு மதிப்பு தந்து அனுமதித்ததற்கு நன்றி ஆச்சாரியரே. நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்த உடனே ஏற்பாடு செய்கிறேன்என்று கைகூப்பிச் சொல்லி  விட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்தான்.

 

மிகவும் மகிழ்ச்சியுடன் வந்த தந்தையைப் பார்த்து மலைகேது கேட்டான். “என்ன தந்தையே மிக மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்? பாதி ராஜ்ஜியம் கிடைத்து விட்டதா?”   

 

பர்வதராஜன் சொன்னான். “இப்போது பாதியும், பிற்பாடு மீதியும் கிடைக்க இன்று நல்ல சகுனம் ஒன்று தெரிந்திருக்கிறது மகனே. ஆச்சாரியருக்குக் கலை நிகழ்ச்சிகளில் ஆர்வம் இல்லாமல் இருப்பது நமக்கு இவ்வளவு பிரயோஜனப்படும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை

 

மலைகேது விளக்கமாகச் சொல்லும்படி கேட்க பர்வதராஜன் நடந்ததைச் சொன்னான். மலைகேதுவும் மகிழ்ந்தான். அவன் கேட்டான். “ராக்ஷசர் என்ன திட்டமிட்டு இருக்கிறார் என்பது தெரியுமா தந்தையே?”

 

அந்த ஆளும் ஆச்சாரியருக்குச் சளைத்தவரல்ல மகனே. அவரும் சொல்ல மறுக்கிறார். பரவாயில்லை விடு. நமக்குக் காரியமானால் சரி

 

மலைகேது தாழ்ந்த குரலில் கேட்டான். “சந்திரகுப்தன் இறந்தால் சாணக்கியர் என்ன செய்வார் என்று நினைக்கிறீர்கள்?”

 

சன்னியாசம் போகலாம். இல்லை ஏதாவது அதிகாரப் பதவியை நம்மிடம் எதிர்பார்க்கலாம்.” என்று பர்வதராஜன் அலட்சியமாகச் சொல்லி விட்டு சுசித்தார்த்தக்கை அழைத்து சாணக்கியர் சம்மதித்திருப்பதைத் தெரிவித்தான். திட்டத்தை நிறைவேற்ற என்ன நிகழ்ச்சிகள் வேண்டுமோ அந்த நிகழ்ச்சிகளை அவன் ஏற்பாடு செய்தது போல் செய்து கொள்ளும்படி தெரிவித்தான். சுசித்தார்த்தக் அந்தத் தகவலை ஜீவசித்தி மூலமாக ராக்ஷசருக்குத் தெரிவிக்க விரைந்தான்.

 

விஷாகா அரண்மனையின் நடன மண்டபத்திற்கு அருகே இருந்த ஒப்பனை அறைக்குள் நிறைய நாட்கள் கழித்து நுழைகிறாள். காலியாக இருந்த நடன மண்டபமும், தனநந்தன் அமரும் அரியணையும் பழைய நிகழ்வுகளை நினைவுபடுத்தின. மனம் கனமானது. மன்னன் இப்போது கானகத்தில்அங்கு இசையும் இல்லை, நடனமும் இல்லை. சுற்றிலும் விலங்குகளும், தாவரங்களும் மட்டும் தான் எப்படியெல்லாம் வாழ்ந்த மன்னருக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று யார் தான் எண்ணியிருப்பார்கள்...

 

அவள் ஒப்பனையை ஆரம்பித்த போது துர்தராவின் தோழி உள்ளே நுழைந்தாள். “அக்கா எப்படியிருக்கிறீர்கள்?”

 

விஷாகா அவளைக் கண்டதும் முகம் மலர்ந்தாள். துர்தராவின் தோழி வெகுளிப் பெண். மிக நல்லவள். அவளுக்கு ஒரு சகோதரி இருந்திருந்தால் இப்படி இருந்திருக்கலாம் என்று விஷாகா எப்போதும் நினைத்துக் கொள்வதுண்டு.

 

நான் நலம். நீ எப்படியிருக்கிறாய்? இளவரசி எப்படியிருக்கிறார்கள்?”

 

நாங்களும் நலம். இளவரசிக்கென்ன? அவர்கள் கனவு கண்டு கொண்டேயிருக்கிறார்கள்.”

 

துக்கத்துடன் சொல்வதற்குப் பதிலாக மகிழ்ச்சியுடன் தோழி சொல்வதைக் கேட்டு விஷாகா திகைத்தாள்.

 

விஷாகாவின் திகைப்பைப் பார்த்து விட்டு தோழி கேட்டாள். “என்ன அக்கா உங்களுக்கு விஷயமே தெரியாதா?”

 

விஷாகா சொன்னாள். “எந்த விஷயம்?”

 

இளவரசிக்கும் சந்திரகுப்தருக்கும் திருமணம் நடக்கவிருக்கும் விஷயம்

 

மகதத்தை வென்று மன்னரை கானகத்திற்கு அனுப்பிய எதிரியை இளவரசி திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று நீ மகிழ்ச்சியுடன் சொல்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறதே

 

காதலுக்கு விதிகளோ, காரணங்களோ, கட்டுப்பாடுகளோ கிடையாதல்லவா அக்கா. சந்திரகுப்தரை முதல் முதலில் பார்த்தவுடன் இளவரசி மனதைப் பறி கொடுத்து விட்டார்கள். ஆரம்பத்தில் மன்னரும், அரசிகளும் ஆதரிக்கும் மனநிலையில் இருக்கவில்லை. ஆனால் ஜோதிடர்கள் இளவரசிக்கு அரியணையில் அமரும் யோகம் இருக்கிறது என்று சொன்னது நினைவுக்கு வர, இது விதியின் தீர்மானம் என்றெண்ணிப் பின் சம்மதித்தார்கள். அப்போதும் சாணக்கியர் இதற்குச் சம்மதிக்க மாட்டார் என்ற பயம் அவர்களுக்கு இருந்தது. ஆனால் சாணக்கியர் இளவரசிக்கு விருப்பமுள்ளவனை மணமுடித்து வைக்கிறேன் என்று முன்பே மன்னரிடம் வாக்களித்திருந்தார். கொடுத்த வாக்கை மீற முடியாமல் அவரும் சம்மதித்தார். ஆனால் சந்திரகுப்தரும் இளவரசியிடம் மனதைப் பறி கொடுத்து விட்டதாகத் தான் தெரிகிறது. இருவரும் பார்த்துக் கொண்டால் உலகத்தையே மறந்து விடுகிறார்கள்என்று சொல்லி கலகலவென்று தோழி சிரித்தாள்.

 

விஷாகா திகைத்தாள். பர்வதராஜன் சொன்னதற்கும் இவள் சொல்வதற்கும் சம்பந்தமே இல்லையே என்று குழம்பியபடி கேட்டாள். “ஆனால் மன்னரை நாட்டை விட்டு வெளியேற்றி விட்டார்களே? மகளது திருமணம் வரை கூட இங்கிருக்க சாணக்கியர் சம்மதிக்கவில்லையே.”

 

வெற்றிக்குப் பின் யார் தான் பழைய மன்னரை அங்கேயே தங்கியிருக்க அனுமதிப்பார்கள் அக்கா. சபதம் போட்டுச் சென்ற சாணக்கியர் மன்னரைச் சிறைபிடிப்பார் அல்லது கொன்று விடுவார் என்று கூட எல்லோரும் பயந்து கொண்டிருந்தோம். அதை ஒப்பிடும் போது வனப்பிரஸ்தம் என்பது கௌரவமானதல்லவா? மன்னருடன் நான்கு பணியாட்களும், காவலர்களும் உடன் சென்றிருக்கிறார்கள். மேலும் திருமணம் முடியும் வரை இளவரசியின் தாய் இங்கிருக்க சாணக்கியர் சம்மதித்திருக்கிறார் என்பதும் ஆறுதல்...”

 

தொடர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு துர்தராவின் தோழி சென்று விட்டாள். பிறகு கதவைத் தாளிட்டுக் கொண்டு, விஷாகா மனக்குழப்பத்துடன் ஒப்பனையைத் தொடர்ந்து செய்ய ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் கதவு தட்டப்பட்டது. விஷாகா யாரென்று யோசித்தவளாய் கதவைத் திறந்தாள். சாணக்கியர் நின்றிருந்தார்.

  

(தொடரும்)

என்.கணேசன்   




Monday, September 22, 2025

யோகி 121


ஷ்ரவன் எதிர்பார்த்தது போலவே, அவன் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் தோட்ட வேலையைச் செய்து கொண்டிருக்கும் போது, கல்பனானந்தா அவனிடம் வந்தாள். அவன் அவளைப் பார்த்துப் புன்னகைத்த போது அவளும் பதிலுக்குப் புன்னகைத்தாள். அவன் அவளிடம் சொன்னான். “ரொம்ப நன்றி சுவாமினி

 எதற்கு?”

 ஷ்ரவன் எச்சரிக்கையுடன் சொன்னான். “இங்கே நான் இன்னொரு யோகியைப் பார்த்திருக்கிறீர்களா என்று உங்களிடம் கேட்டது தவறு தான். யோகிஜி இருக்கும் இடத்தில் இன்னொரு யோகியை நான் கேட்டிருக்கக்கூடாது. அது உங்களை வருத்தமடையச் செய்து விட்டது என்பது நீங்கள் பதில் எதுவும் சொல்லாமல் போனவுடன் தான் எனக்குப் புரிந்தது. அதைப் பெரிதுபடுத்தாமல் மன்னித்து நீங்கள் மறுபடியும் இயல்பாக என்னிடம் பழகுவதற்கு தான் நான் நன்றி சொன்னேன்.”

 நீங்கள் கேட்டதில் தவறில்லை. கேட்டதில் எனக்கு வருத்தமுமில்லை. அதனால் மன்னிக்க எதுவுமில்லை.” என்று கல்பனானந்தா அமைதியாகச் சொன்னாள்.

 சற்று நம்பிக்கை வர, ஷ்ரவன் தாழ்ந்த குரலில் சொன்னான். “நான் கேட்ட கேள்வியை நீங்கள் அவர்களிடம் சொல்லி விடாததற்கும் சேர்த்து தான் நன்றி சொன்னேன் சுவாமினி.”

 கல்பனானந்தா திகைப்புடன் அவனையே கூர்ந்து பார்த்தாள். அவன் இப்போது சொன்னதும் முன்பு போலவே அவளைப் பாதித்தது போல் தோன்றியது. அவள் மெல்ல சொன்னாள். “நீங்கள் அந்தக் கேள்வியைச் சும்மா கேட்டீர்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை ஷ்ரவனானந்தா. ஏதோ ஒரு காரணத்தோடு தான் கேட்டீர்கள் என்று இப்போதும் நான் நினைக்கிறேன்...”

 ஷ்ரவன் அவளிடம் கேட்டான். “இப்போது நான் எதாவது சொன்னாலும், அதையும் நீங்கள் வேறு யாருக்கும் சொல்ல மாட்டீர்கள் என்று நான் நம்பலாமா?”

 கண்டிப்பாக நம்பலாம். சொல்லுங்கள்.”

 ஷ்ரவன் தோட்ட வேலையைத் தொடர்ந்து செய்தபடியே தலையை உயர்த்தாமல் சொன்னான். “எனக்கு அடிக்கடி ஆவிகள் மூலமாகவும் ஏதாவது செய்திகள் வருவதுண்டு சுவாமினி. அப்படி ஒரு நாள், இங்கிருந்த ஒரு பெண் துறவியின் ஆவி என்னிடம் பேசியது...”

 கல்பனானந்தா திகைத்து அவளையுமறியாமல் இரண்டடி பின்வாங்கினாள். படபடப்புடன் அவள் கேட்டாள். “எந்தப் பெண் துறவியின் ஆவி?”

 ஷ்ரவன் சைத்ராவின் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. “தெரியவில்லை சுவாமினி. அது யோகாலயத்தில் வாழ்ந்த துறவியின் ஆவியாக என்னிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டது. அந்த ஆவி இங்கே வாழும் காலத்தில் ஒரு யோகியைச் சந்தித்ததாகவும், தன் தாத்தாவும் அந்த யோகியைச் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் சொன்னது. நான் யோகி பிரம்மானந்தாவைச் சொல்கிறதா என்று சந்தேகப்பட்டுக் கேட்டேன். அதற்கு அதுஅவரைச் சொல்லவில்லை, நிஜ யோகியைச் சொல்கிறேன்”  என்று சொல்லிவிட்டுப் போய் விட்டது. எனக்கு எதுவுமே புரியவில்லை...”

 கல்பனானந்தா அவனைத் திகைப்புடன் பார்த்தாள். அவளுடைய  அதிர்ச்சி கூடியதை ஷ்ரவன் கவனித்தான். “எனக்குத் தெரிந்த ஒரே யோகி, யோகிஜி பிரம்மானந்தா தான். அதனால் அந்த இன்னொரு நிஜ யோகி யாரென்று தெரிந்து கொள்ளத் தான், நீங்களும் பார்த்திருக்கிறீர்களா என்று உங்களைக் கேட்டேன்.”

 கல்பனானந்தா பதில் எதுவும் சொல்லாமல் சிலை போல் நின்றாள். அவனை எந்த அளவு நம்புவது, அவனிடம் என்ன சொல்வது என்று அவளால் தீர்மானிக்க முடியவில்லை என்பது அவளைப் பார்க்கையில் ஷ்ரவனுக்குப் புரிந்தது.

 அந்த சமயத்தில்  தூரத்தில் இருந்த கண்காணிப்பாளன் மெல்ல அவர்களை நோக்கி நடந்து வர ஆரம்பித்தான். கல்பனானந்தா அவனை ஓரக்கண்ணால் கவனித்து விட்டு அவசரமாகசாயங்காலம் பேசுவோம்என்று செடிகளைக் காட்டியபடி ஷ்ரவனிடம் சொன்னாள்.

 தூரத்தில் அதைக் கவனிக்கும் கண்காணிப்பாளனுக்கு அவள் அந்தச் செடிகள் பற்றி என்னவோ சொல்கிறாள் என்று தான் எண்ணத் தோன்றும். அவளுடைய புத்திசாலித்தனம் அவனுக்குப் பிடித்திருந்தது. அவள் நிதானமாக அங்கிருந்து நகர்ந்தாள்.

 வெளிப்பார்வைக்கு அவள் நிதானமாகவே நடந்தாலும் அவளுக்குள் பல்வேறு உணர்ச்சிகள் கொந்தளித்துக் கொண்டிருந்தன. ஆரம்பத்திலிருந்தே அவளுக்கு ஏனோ ஷ்ரவன் மேல் சந்தேகம் இருந்து கொண்டேயிருந்தது. அவனுக்குத் தெரியும் காட்சிகள் கூட நடிப்போ என்று கூடத் தோன்றியிருந்தது. ஆனால் பிரம்மானந்தாவும், பாண்டியனும் அவனை நம்பினார்கள் என்பது புரிந்த போது சற்று குழப்பமாகவும் இருந்தது. பிரம்மானந்தா அவசியம் வந்தால் ஒழிய யாரையும் அதிகம் கவனிப்பவர் அல்ல. அவரையும், அவருக்கு ஆக வேண்டிய காரியங்களையும் தவிர வேறு யார் மீதும், வேறெதிலும், அவருக்கு இப்போதெல்லாம் அக்கறை கிடையாது. அதனால் அவர் ஷ்ரவனுக்கு அதிக முக்கியத்துவம் தந்து கவனித்திருக்காமல் போகலாம். ஆனால் பாண்டியன் தன்னைச் சுற்றி நடக்கும் எதிலும் கவனக்குறைவாக இருப்பவர் அல்ல. சோதித்துப் பார்க்காமல் யாரையும் நம்பும் ரகமும் அவரல்ல. அப்படிப்பட்டவர் ஷ்ரவனை முழுமையாக நம்பியது முன்பே அவர் அவனைச் சோதித்துப் பார்த்திருப்பார் என்பதையே காட்டியது. அதனால் ஷ்ரவனை நம்பாமலும் அவளுக்கு இருக்க முடியவில்லை.

 ஷ்ரவன் அவளிடம் சொன்னதை எல்லாம் பிரம்மானந்தா, பாண்டியன் இருவருக்கும் அவள் தெரிவித்தாலும் கூட தனிப்பட்ட முறையில் அவன் மீது எந்த உறுதியான அபிப்பிராயமும் சற்று முன்பு வரை அவளுக்கு இல்லாமலிருந்தது. ஆனால் நேற்று அவன் சுவாமினி, நீங்கள் யோகிஜி தவிர வேறு எந்த நிஜ யோகியையாவது சந்தித்திருக்கிறீர்களா?” என்று கேட்டதும், இன்று, இறந்து போன ஒரு பெண் துறவி நிஜமான யோகியைப் பார்த்து இருக்கிறாள் என்றும் அவளுடைய தாத்தா அந்த யோகியை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்றும் அவள் ஆவி விரும்புகிறது என்று அவன் சொன்னதும், அவனிடம் உள்ளதாகச் சொல்லி இருந்த சக்திகள் பொய்யல்ல என்பதை நிரூபித்து விட்டது. அவன் அந்தத் துறவியின் பெயரைச் சொல்லா விட்டாலும் அவன் யாரைச் சொல்கிறான் என்பதையும் அவள் அறிவாள். சைத்ரா அந்த யோகியைச் சந்தித்தது கல்பனானந்தாவைத் தவிர வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பேயில்லை. ஏனென்றால் சைத்ரா உயிரோடு இருக்கையில் யாரிடமும் அதைத் தெரிவிக்கவில்லை என்பது அவளுக்கு நிச்சயமாகத் தெரியும். அப்படி இருக்கையில் ஷ்ரவன் அதைச் சொல்ல முடிந்தது சைத்ராவின் ஆவி மூலமாகக் கேள்விப்பட்ட தகவலாகவே தான் இருக்க வேண்டும். கல்பனானந்தாவின் மனம் பழைய நினைவுகளால் நிம்மதி இழந்தது

 எத்தனை தான் ஆன்மீகத்தில் ஆழமாகப் போயிருந்தாலும், எத்தனை தான் தத்துவங்களைப் புரிந்து வைத்திருந்தாலும், பிரச்சினையான சூழ்நிலைகள் வரும் போது மனம் ஞானத்திலிருந்து வழுக்கி அஞ்ஞானத்தில் அமிழ்ந்து விடுகிறது. ஆத்ம சொரூபம் மறந்து போய், சூழ்நிலைகளை மனம் எடுத்துக் கொள்ளும் விதமே நிஜமாகி விடுகிறது. எதையும் கடந்து போக மனம் அனுமதிப்பதில்லை. பயனில்லாத விஷயங்களையும், கற்பனையான புரிதல்களையுமே பிடித்து வைத்துக் கொண்டு மனம் கஷ்டப்படுகின்றது. விலகி நின்று பார்க்கும் போது புரிகின்ற எதுவும், ஒன்றில் கலந்து நின்று அனுபவிக்கும் போது புரிவதில்லை. அதனாலேயே அவள் விலகி நிற்கும் துறவறத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறாள். ஆனாலும் மனம் விலகி நிற்கும் கலையை சுலபத்தில் கற்றுக் கொள்வதில்லை. திரும்பத் திரும்ப நினைவலைகளில் சிக்கிக் கஷ்டப்படும் முட்டாள்தனத்திலிருந்து மனம் தப்பிக்க முடிவதில்லை...

 இதை மணிக்கணக்கில் அவளால் பேச முடியும். இதை பக்கம் பக்கமாய் அவளால் எழுதவும் முடியும். பல சமயங்களில் அந்தப் புரிதலோடு அவள் வாழ்க்கையை அமைதியாக வாழ்ந்திருக்கிறாள். ஆனால் எல்லாச் சமயங்களிலும் அந்த ஞானமும், மாறாத அமைதியும் அவளுக்குச் சாத்தியப்பட்டதில்லை. தற்சமயமும் அது போன்றது தான்...

 ஆனால் அந்த நிஜ யோகியால் வாழ்க்கையின் எந்தச் சூழலையும், எல்லாச் சமயங்களிலும் ஞானத்தெளிவுடனும், மாறாத அமைதியுடனும் சந்திக்க முடியும். ஒரு நாடகத்தில் நடிக்க வேண்டியிருப்பதைப் போல் அவரால் வாழ முடியும். அவள் அதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறாள். அவளைப் போல் அவர் நீண்ட சொற்பொழிவுகள் ஆற்றியதில்லை. யாருக்கும் எந்த உபதேசமும் அவர் செய்ததும் இல்லை. அவர் வாழ்க்கையே உபதேசமாக இருந்திருக்கிறது. அதுவே வழிகாட்டியாக அமைந்திருக்கிறது. சில காலமாக பிரச்சினையான சூழ்நிலைகளைச் சந்திக்க நேரும் போது, அவள் அவரை நினைத்து தான் அமைதியை மீட்டு எடுக்கிறாள். உடைந்து போகாமல் சூழ்நிலைகளைச் சந்திக்கிறாள். தத்துவங்களை விட, ஆன்மீகத்தை விட அது தான் அதிகமாக அவளுக்கு உதவுகிறது

 ஆனால் இன்று மட்டும் ஏனோ அவர் நினைவும் அவளுக்கு அமைதி தரவில்லை. காரணம், ஷ்ரவன் அவர் நினைவை மட்டுமல்லாமல் அவள் மனதில் புதைந்திருந்த கடந்த கால நினைவுகளையும் சேர்த்துக் கிளறி விட்டிருந்தான்...

(தொடரும்)

என்.கணேசன்