“ஏதோ ஒரு அசம்பாவிதம் ஏற்படும் போல் தோன்றுகிறது பிரபு. அதற்கான சூழலை என் உள்ளுணர்வால் உணர முடிகிறது. ஆனால் எது என்னவாக இருக்கும் என்று குறிப்பிட்டு என்னால் சொல்ல முடியவில்லை” என்று ஒற்றர் தலைவன் சொன்ன போது ராக்ஷசரால் அதை அலட்சியப்படுத்த முடியவில்லை. காரணம் அந்த ஒற்றர் தலைவன் மிக நீண்ட கால அனுபவம் கொண்டவன். அவனுடைய வேலையில் உள்ளுணர்வு மிக முக்கியமான அம்சம். அப்படிப்பட்ட அனுபவஸ்தனின் உள்ளுணர்வு ஒன்றைச் சொல்கிறது என்றால் அது பொய்யாக இருக்க வாய்ப்பேயில்லை.
“எதனால் அப்படித்
தோன்றுகிறது? அப்படித் தோன்றும்படியாக இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது?” என்று ராக்ஷசர்
கேட்டார்.
“இளவரசர் சுதானு
அரண்மனைக் காவல் வீரர்களில் பெரும்பானவர்களை மாற்றி விட்டார். புதிதாக வந்திருக்கும்
எல்லாருமே அவருடைய ஆட்களாக இருக்கிறார்கள் பிரபு”
“புதிய பொறுப்பை
எடுத்துக் கொண்டவன் தன்னுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆட்களை நியமிப்பது இயல்பேயல்லவா?”
“உண்மை பிரபு. ஆனால்
ஏதோ ஒரு ரகசிய சதி நடக்கவிருப்பதற்கான சூழலை அந்தப் புதியவர்கள் கண்களிலும், செயல்களிலும்
என்னால் காண முடிகிறது”
ராக்ஷசர் நாளை
காலையே சென்று ஆராய்ந்து ஆவன செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். திடீரென்று
இன்னொரு பாதுகாப்பு நிலவரமும் அறிந்து கொள்ள நினைத்து அவர் கேட்டார். “எதிரிகளின் முற்றுகையை
நம் வீரர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள்.”
“இதுவரை திறமையாகவே
சமாளித்து வருகிறார்கள் பிரபு. இருபக்கமும் சிறுசிறு தாக்குதல்கள் அவ்வப்போது நடக்கின்றன
என்றாலும் எதிரிகள் கை இன்னும் ஓங்கவில்லை. அவர்கள் தீவிரமாகத் தாக்குதல் நடத்த எதற்கோ
காத்துக் கொண்டிருக்கிறாற் போல் இருக்கின்றது. ஆனால் அப்படி அவர்கள் தாக்கினாலும் திருப்பித்
தாக்க நம்மவர்கள் தயார்நிலையில் தான் இருக்கிறார்கள்.”
“சந்திரகுப்தனும்,
விஷ்ணுகுப்தரும் வெளிப்பட்டு விட்டார்களா?
“இல்லை பிரபு”
அது தான் ராக்ஷசருக்கு
நெருடலாக இருந்தது. ஏன் இன்னும் மறைந்தே இருக்கிறார்கள்? தீவிரமாகத் தாக்குதல் ஆரம்பிக்கும்
முன் வெளிப்படலாம் என்று காத்திருக்கிறார்களோ? இல்லை வேறெதாவது உத்தேசம் இருக்குமா?
இன்று காலை தான்
ராக்ஷசர் கலிங்க மன்னனிடம் தூதனுப்பியிருக்கிறார். கலிங்கத்துடன் போர் புரியும் உத்தேசம்
தங்களிடம் சிறிதும் இல்லையென்றும், எதிரிகள் தவறான தகவலைக் கசிய விட்டதால் தற்காப்பு நடவடிக்கையாகத்
தான் அங்குள்ள எல்லையில் படைகளை நிறுத்தியதாகவும், இப்போது உண்மையை அறிந்து கொண்டு
விட்டதால் படைகளைத் திருப்பிக் கொள்வதாகவும், அவர்களும் அப்படியே செய்து இரு தேசங்களுக்கிடையே
இருக்கும் நட்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லி அனுப்பியிருந்தார்.
கலிங்க மன்னன் அதை ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கை அவருக்கிருக்கிறது. கலிங்க எல்லையிலிருந்து
அவர்கள் படை திரும்பி வரும் வரை எதிரிகளின் முற்றுகையைத் தாக்குப்பிடிக்க வேண்டியிருக்கும்.
அது முடியும் என்றும், அதற்கு முன் எதிரிகள் தாக்கினாலும் கூட அவர்களைச் சமாளிக்க முடியும்
என்றும் பத்ரசால் உறுதி கூறியிருந்தான்....
“மற்ற நம் எல்லைகளில்
என்ன நிலவரம்?”
”அங்கு போர் துவங்கி
விட்டது பிரபு. மேற்கில் காஷ்மீர மன்னனுடனான போரில் நம் கை ஓங்கியிருக்கிறது. வடக்கில்
சிராவஸ்தி அருகிலான போரில் இரு பக்கங்களும் சரிசமமாக இருக்கின்றன.”
சுதானுவிடமும், பத்ரசாலிடமும் சின்ஹரன்
சொல்லிக் கொண்டிருந்தான். “எந்தவொரு வெற்றியும், தகுந்த
சமயத்தில் சரியாகச் செயல்படுவதிலேயே இருக்கிறது. செயல்படும்
போதும் கண நேரங்களும் மிக முக்கியமானவை தான். சிறிது
தாமதமானாலும் நம் முயற்சிகள் தோற்றுப் போய் விளைவுகள் நமக்கு எதிராக மாறிவிடும் வாய்ப்புகள்
உண்டு. அதனால் நாம் நிச்சயித்த வேலையை நிச்சயித்த நேரத்தில் முடித்து
விடுவது முக்கியம்.”
சுதானு சொன்னான். “அதை நான்
வீரர்களிடம் பல முறை சொல்லி அவர்கள் மனதில் பதிய வைத்திருக்கிறேன் நண்பரே. தந்தையும், ராக்ஷசரும்
எனக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதபடியான திட்ட ஏற்பாடுகளை
நீங்கள் சொல்லி விட்டீர்கள். இப்போது என் கவலையெல்லாம் வெளியே முற்றுகை
இட்டிருக்கும் எதிரிகளை எப்படிச் சமாளிப்பது என்பதில் தான் இருக்கிறது. இங்கே வெற்றி
பெற்று அவர்களிடம் நான் தோற்று விட்டால் எல்லாமே பறிபோய் விடுமே.”
“அதைப் பற்றிய
கவலையை விடுங்கள் இளவரசே. இங்கு அரியணையில் அமரும் ஆள் மாறுவதால் வெளியே உள்ள எதிரிகளைச்
சமாளிக்கும் விதத்தில் எந்த மாறுதலும் ஏற்பட்டு விடப் போவதில்லை. எதிரிகள் பெரும்படையுடன்
வெளியே வந்திருந்தாலும் நம்மைத் தீவிரமாகத் தாக்காமல் காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால்
அவர்கள் சந்திரகுப்தனின் வருகைக்காகக் காத்திருப்பது போல் தெரிகிறது. சந்திரகுப்தன்
சிராவஸ்தியில் தான் இருக்கிறான் என்று தோன்றுகிறது. அவன் உங்கள் படைகளை அங்கு வென்று
விட்டு இங்கே வரும் வரை எதிரிப்படை இங்கு மும்முரமாகத் தாக்குதல் நடத்தும் வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன், அப்படி அவர்கள்
தாக்க ஆரம்பித்தாலும் சிறிது காலம் சமாளிக்க இப்போதிருக்கும் உங்கள் படை தாராளமாகப்
போதும். கலிங்க எல்லையிலிருந்தும் உங்கள் படை வந்ததும் நாமே கூட தீவிரத் தாக்குதலை
ஆரம்பிக்கலாம். அதனால் இப்போதைக்கு அது பற்றிய கவலையை விடுங்கள். இப்போது
நம் முழு கவனமும் நீங்கள் அரியணையில் அமர்வதற்கான இலக்கிலேயே இருப்பது தான்
புத்திசாலித்தனம்..”
பத்ரசாலுக்கும், சுதானுவுக்கும் அவன்
சொன்னது சரியாகவே பட்டது. எல்லாக் கோணங்களிலிருந்தும் தெளிவாகச் சிந்திக்கும் கார்த்திகேயனைப்
போன்ற ஒருவன் இந்தச் சமயத்தில் தங்களுக்கு உறுதுணையாக இருப்பது தங்கள் பாக்கியம் என்றே
அவர்கள் நினைத்தார்கள். அரண்மனையில் முன்கூட்டியே
சில வீர்ர்களைத் தயார் நிலையில் நிறுத்தியாகி விட்டது. நடுநிசியில்
தான் தங்கள் திட்டத்தை ஆரம்பிப்பது என்று அவர்கள் தீர்மானித்திருந்ததால் நடுநிசியாகும்
வரை பொறுமையாகக் காத்திருந்தார்கள்.
சுகேஷின் அறைக்கதவு மெல்ல தட்டப்பட்ட போது அவன் மதுமயக்கத்தில்
ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான். கனவில் எங்கோ கதவு தட்டப்படுவது போல் அவனுக்குக் கேட்டது. உட்கார்ந்தபடியே
உறங்கிக் கொண்டிருந்த அவனுடைய தனிக்காவலன்
மெல்ல எழுந்து யாரென்று பார்க்கச் சென்றான்.
அவன் கதவைத் திறந்து பார்த்த போது வெளியே
சுகேஷின் காவலர்கள் இருக்கவில்லை. சுதானுவும் சின்ஹரனும் வேறு சில வீர்ர்களும் நின்று கொண்டிருந்தார்கள். சுதானு
சைகையாலேயே அவனை வெளியே போகுமாறு கட்டளையிட்டான். ஏதோ முக்கியமாய்
சகோதரர்கள் பேசப் போகிறார்கள் என்று நினைத்தபடியே அந்தக் காவலன் வெளியே சென்றான். சுதானுவும், சின்ஹரனும்
இரண்டு வீரர்களுடன் சேர்ந்து உள்ளே சென்றார்கள்.
இரண்டு வீரர்களும் இருபக்கங்களிலும் சுகேஷின் கை கால்களை இறுக்கப்
பிடித்துக் கொள்ள சுகேஷ் அரைமயக்கத்துடன் கண்விழித்துப் பார்த்தான். எதிரே சுதானு தெரிந்தான்.
அவன் என்னவென்று கேட்க வாயைத் திறக்க முற்பட்டான். அவன் தலைமாட்டில் இருந்த சின்ஹரன் அவன் வாயை இறுக்க மூடினான். அப்போது தான் சுகேஷ் ஆபத்தை உணர்ந்து கண்களை விரித்துப் பார்த்தான்.
சுதானு தன் இடுப்பில் இருந்த கூரிய குறுவாளை எடுத்து சுகேஷின் மார்பில்
வேகமாகக் குத்த, சுகேஷின் இதயத்தில் அந்த வாள் ஊடுருவியது.
அவனுடைய பலத்த திமிறல்களை அடக்க அந்த வீரர்களும், அவனுடைய கூக்குரலை அடக்க சின்ஹரனும் தங்கள் முழுபலத்தையும் பிரயோகிக்க வேண்டியிருந்தது. வேகமாக சுகேஷ் உயிரிழந்தான்.
தனநந்தனின் உறக்கம் வெளியே ஏற்பட்டிருந்த
சத்தங்களால் கலைந்தது. அவன் படுத்திருந்தபடியே காதுகளைக் கூர்மையாக்கினான். வெளியே வீரர்கள் அங்குமிங்கும் ஓடும் சத்தம் கேட்டது. நள்ளிரவு
நேரத்தில் இப்படி வீரர்கள் ஓடுவது இயல்பானதாக இல்லாததால் அவன் துணுக்குற்றான். இனம்
புரியாத பயம் ஒன்று அவன் மனதைக் கவ்வியது. என்ன நடக்கிறது?...
இதயம்
படபடக்க அவன் சாமரம் வீசிக் கொண்டிருந்த பணிப்பெண்களிடம் சொன்னான்.
”காவலர்களிடம் என்ன சத்தம் என்று பார்க்கச் சொல்”
ஒரு பணிப்பெண் சென்று அவன் அறைக்கு வெளியே இருந்த காவலர்களிடம்
மன்னரின் கட்டளையைச் சொன்னாள். அந்தக் காவலர்களில் ஒருவன் வெளிக்கதவைத்
திறந்த போது வெளியே சுதானு நின்றிருந்தான். அவன் தாழ்ந்த குரலில்
மாபெரும் ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ளும் பாவனையில் சொன்னான். ”எதிரியின் வீரர்கள் சிலர் அரண்மனைக்குள் ரகசியமாகப் புகுந்திருக்கிறார்கள்.
அவர்களைச் சிறைப்படுத்தும் வரை அரசரைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு.
யார் கதவைத் தட்டினாலும் என் குரல் கேட்காமல் கதவைத் திறக்காதீர்கள்.
யாரையும் உள்ளே அனுமதிக்காதீர்கள். அரசரிடமும்
எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் சொல்லும் வரை வெளியே வரவேண்டாம் என்று சொல்லுங்கள்.”
காவலன் கலவரமடைந்து தலையசைத்து வேகமாகக் கதவைச் சாத்தி தாளிட்டான். அவன் சென்று தகவலைச் சொல்ல
தனநந்தன் திகைத்தான். எதிரியின் ஆட்கள் அவன் அரண்மனைக்குள் வரை
வந்து விட்டது அவனை அதிர வைத்தது. ஆனால் சுதானு அதைக் கண்டுபிடித்து
எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் பொறுப்பில் சிறப்பாகச் செயல்படுவது அவனுக்குத் திருப்தி
அளித்தது. “சுதானு கோபக்காரன் என்றாலும் சுறுசுறுப்பாகவும்,
புத்திசாலித்தனமாகவும் செயல்படுகிறான்” என்று மனதிற்குள்
இளைய மகனை சிலாகித்தான்.
(தொடரும்)
என்.கணேசன்