என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, September 8, 2025

யோகி 119


 ஷ்ரவன் வாசலைத் தாண்டி உள்ளே சென்றான். முன் அறையில் ஒரு அமர்ந்திருந்த இளைஞனிடம்  தன்னை பாண்டியன் வரச்சொல்லி இருப்பதாக அவன் தெரிவித்தான். அந்த இளைஞன் உள்ளே சென்று விட்டு வந்து ஷ்ரவனை உள்ளே அனுப்பினான்.

பாண்டியனுடைய அறையில் நுழைந்து ஷ்ரவன் வணக்கம் தெரிவித்தான். பாண்டியன் பதில் வணக்கம் தெரிவித்து விட்டு அவனை அமரச் சொன்னார். “உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்க வேண்டும் ஷ்ரவனானந்தா. நேற்று நீங்கள் கண்ட காட்சியைப் பற்றி சுவாமினி கல்பனானந்தா என்னிடம் தெரிவித்தார். அதைப் பற்றி நேரடியாகவே உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று எனக்குத் தோன்றியது. அதனால் தான் வரச் சொன்னேன்.”

அவர் வணக்கம் தெரிவித்ததும், அவர் பேச்சில் தொனித்த மரியாதையும் கல்பனானந்தா ஷ்ரவன் கேட்ட கேள்வியை அவரிடம் தெரிவித்து விடவில்லை என்பதைத் தெரிவித்தன. அவனுக்குச் சற்று நிம்மதியாயிற்று.

ஷ்ரவன் தன் முகத்தில் சிறிது தர்மசங்கடத்தைக் காண்பித்தான். ”இது பல காலமாய் எனக்கு இருந்து வரும் பிரச்சினைஜி. திடீர் திடீர் என்று எதாவது காட்சி தெரிகிறது. சிலவற்றுக்குக் காரணம் தெரிகிறது. அர்த்தம் தெரிகிறது. சிலவற்றுக்குக் காரணம் தெரிவதில்லை. நான் நேற்று பார்த்தது உங்கள் வாசல் என்று கூட எனக்குத் தெரிந்திருக்கவில்லை. உங்கள் இருப்பிடம் இதுவென்று சுவாமிஜி கண்ணன் காண்பித்த பிறகு தான் தெரிந்து கொண்டேன். நான் கண்ட காட்சி எதோ பிரமை என்று இப்போது நினைக்கிறேன். ஏனென்றால் இப்போது உள்ளே வருகையில் அந்த இடத்தை நன்றாகப் பார்த்து விட்டு தான் வருகிறேன். அங்கே குழி எதுவும் இல்லைஜி...”

பாண்டியன் சொன்னார். “சில சமயங்களில் நம் மேல் பார்வைக்குத் தெரியாத விஷயங்கள் விசேஷ சக்தி இருக்கும் சிலருக்குத் தெரிய வரலாம். கல்பனானந்தாவிடம் உங்களுக்கு இருக்கும் அந்த விசேஷ சக்தி பற்றியும், உங்களுடைய சிறு வயது சம்பவங்களையும் நீங்கள் முன்பு சொல்லியிருந்தீர்களாம். அதையும் அவர் சொன்னதால், நீங்கள் பார்த்த காட்சியில் ஆழமான அர்த்தம் எதாவது இருக்குமோ என்று சந்தேகம் வந்ததால் தான் உங்களைக் கூப்பிட்டு பேசத் தோன்றியது.”

எனக்கு இன்னமும் யோகிஜி இருக்கும் புனித இடத்தில் துஷ்ட சக்திகள் உலாவ முடியும் என்பதில் நம்பிக்கை இல்லைஜி. அதனால் தான் எனக்கு நான் காணும் காட்சிகள் அர்த்தமுள்ளது தானா என்ற சந்தேகம் வருகிறது.”

இல்லாத சக்திகளை எல்லாம் இருப்பதாகச் சொல்லி ஒருவர் புகழ் தேடி அலைகிறார்அதை நம்பும் ஒரு பெரிய கூட்டமும் இருக்கிறது. இவனும் அந்தக் கூட்டத்தில் இருந்து கொண்டு தனக்கு இருக்கிற சக்தியைக் கூட உண்மை என்று நம்ப மறுக்கிறான். வேடிக்கை தான்.’ என்று எண்ணிய பாண்டியன் சொன்னார். “யோகிஜி ஒருவர் மட்டும் இங்கில்லை. நூற்றுக்கணக்கில் வேறு பலரும் இருக்கிறோம். யோகிஜி அடிக்கடி பயணம் போய் வருபவர். அவர் இங்கே இருக்கும் நாட்கள் அதிகமில்லை. அதனால் கூட இப்படி நடக்கலாம்.”

ஷ்ரவன் யோசிப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டான். அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த பாண்டியன் கேட்டார். “இப்போது இங்கே வரும் போது உங்களுக்கு அந்த ஓநாய் தென்படவில்லையா?”

இல்லைஜி. எதாவது சில சமயங்களில் தான் திடீர் என்று எனக்கு அப்படித் தெரிகிறது. ஹைதராபாதில் இருந்த மந்திரவாதி சோமையாஜுலு, ”நீ அதை அடிக்கடி நினைக்க வேண்டும், ஆழமாய் நினைக்க வேண்டும். அப்படியானால் தான் நீ அதோடு தொடர்பு கொள்ள முடியும். அதிகம் பார்க்க முடியும். அது சொல்லும் செய்திகளை நீ புரிந்து கொள்ள முடியும். பின் எப்போதும் உனக்கு அது தெரிந்து கொண்டிருக்கும்.” என்று என் சிறுவயதில் ஒரு முறை சொல்லியிருக்கிறார். ஆனால் என் அப்பாஅந்தக் கண்றாவியை எல்லாம் நீ நினைக்கவே வேண்டாம். ஒழுங்காகப் படிப்பைக் கவனிஎன்று திட்டியதால் நான் பின் அதிகம் நினைப்பதே இல்லை. இப்போது துறவியாகி விட்டேன். யோகிஜி சொல்லும் வழியில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனாலும் இந்த மாதிரியான காட்சிகள் வந்து தொலைகிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை...”

பாண்டியன் அவனுக்கு ஆரம்பத்திலிருந்து இருக்கும் இரட்டை மனநிலையைப் புரிந்து கொண்டார்.  அவன் தொடர்ந்து கவனம் செலுத்தினால் அவனால் எல்லா சமயங்களிலும் அந்தச் சக்திகளைக் கண்டு கொள்ள முடியும் என்று சோமையாஜுலு சொன்ன செய்தி அவரை யோசிக்க வைத்தது. இப்போது அவன் அது தேவையில்லாத தொல்லை என்றே நினைப்பதால் அந்தக் காட்சிகளைக் காண விரும்பவில்லை. யோகிஜி சொல்லும் வழியில் போவதில் அவன் உறுதியாக இருப்பதால் யோகிஜியையே அவனிடம் சொல்ல வைக்க வேண்டும்

பாண்டியன் சொன்னார். “நீங்கள் நினைப்பது சரிதான் ஷ்ரவனானந்தா. யோகிஜி எல்லாம் தெரிந்தவர். இன்றிரவு அவர் வந்து விடுவார். நான் நேரம் கிடைக்கையில் உங்களுக்காக அவரிடம் பேசுகிறேன். நீங்கள் அவருடைய அறிவுரைப்படியே நடந்து கொள்வது நல்லது.”

ஷ்ரவன் தன் முகத்தில் பரவசம் காட்டினான். “நான் யோகிஜியின் கவனத்திற்கு வருவதற்கே பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்காக அவரிடம் பேசுவதாக நீங்கள் சொன்னது உங்கள் பெரிய மனதைக் காட்டுகிறதுஜி.”

பாண்டியன் புன்னகைத்தார்யோகிஜி உங்களுக்கு என்ன சொல்வார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு இது போன்ற அமானுஷ்ய விஷயங்களில் ஆர்வம் அதிகம். அதனால் இனி எதாவது காட்சிகள் உங்களுக்குத் தெரிந்தால் என்னிடம் நேரடியாக வந்து நீங்கள் சொல்லலாம்.”

சரிஜிஎன்று சொல்லி பாண்டியன் ஒரு கணம் காத்திருந்து விட்டு, அவர் கூடுதலாக எதுவும் சொல்லாமல் போகவே, மெல்ல எழுந்தான். “நன்றிஜி

அவன் போகும் போதும் அவருடைய வாசல் அருகே தரையை இருபக்கமும் பார்த்து விட்டுப் போவதை பாண்டியன் கவனித்தார்.

வெளியே வந்த ஷ்ரவன் நேராக சத்சங்கம் நடக்கும் கூட்டத்திற்குச் சென்றான்ஒரு நடுத்தர வயதுத் துறவி உபநிஷத்துக்கள் பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார். அவன் சென்று பின்னால் வரிசையில் அமர்ந்து கொண்டான். உரை முடிந்து திரும்பி வெளியே வரும் போது தான் முக்தானந்தா அவனைப் பார்த்தார். அவனைப் பார்த்ததும் ஒரேயடியாக அவர் முகம் மலர்ந்தது. ஆனால் உடனடியாக அதை மறைத்துக் கொண்டு விறுவிறுவென்று தனியாக அறைக்கு விரைந்தார். ஷ்ரவனும் அவருடன் சேர்ந்து கொள்ள விருப்பமில்லாதவன் போல் மெல்ல நடந்து சென்றான். தூரத்திலிருந்து அவர்களைக் கவனித்த கண்ணன் திருப்தி அடைந்தார்.  

ஷ்ரவன் அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டவுடன் முக்தானந்தா எழுந்து வந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னார். “உன்னைப் பார்க்கும் வரை எனக்கு தவிப்பாகத் தான் இருந்தது ஷ்ரவன். உன்னைப் பார்த்த பிறகு தான் நிம்மதியை உணர்ந்தேன்.”

ஷ்ரவன் அவரது அன்பில் நெகிழ்ந்தான். அங்கு நடந்ததை அவரிடம் தெரிவித்து விட்டுச் சொன்னான்.  “நீங்கள் சொன்னது போல் கல்பனானந்தா நான் கேட்ட கேள்வியை பாண்டியனுக்குத் தெரிவிக்கவில்லை சுவாமிஜி. அவர் அதைச் சொல்லியிருந்தால் பாண்டியன் எப்படி யோசிக்க ஆரம்பித்திருப்பார் என்று சொல்ல முடியாது.”

முக்தானந்தா கல்பனானந்தாவைப் பற்றிய தன் உள்ளுணர்வு சரியாக இருந்ததில் மகிழ்ச்சியடைந்ததாய் ஷ்ரவனுக்குத் தோன்றியது.

ஷ்ரவன் சொன்னான். “கல்பனானந்தா யோகியையும் பார்த்திருக்கிறார். சைத்ராவையும் கவனிக்க முடிந்த நிலையில் தான் இங்கே இருந்திருக்கிறார். அதனால் அவரிடம் விசாரித்தால் பல உண்மைகள் தெரியவரும் என்று நான் நினைக்கிறேன் சுவாமிஜி

ஷ்ரவன், நீ அவளையும் ஆபத்திற்குள்ளாக்காமல், நீயும் ஆபத்தில் சிக்கிக் கொள்ளாமல் ஜாக்கிரதையாகத் தான் அவளை விசாரிக்க வேண்டும். சாதாரண நேரத்தை விட இரண்டு நிமிடம் அதிகமாய் அவளிடம் பேசி இருக்கிறாய் என்று தெரிந்தாலே அவர்களுக்குச் சந்தேகம் எழுந்து விடும். அதனால் மிக எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.”

அவர் அவனுடைய பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்பட்டபடியே கல்பனானந்தாவின் பாதுகாப்புக்காகவும் கவலைப்பட்டது ஷ்ரவனுக்குப் புரிந்தது. அவள் மீது அவருக்கு பிரத்தியேக அன்பும், அக்கறையும் இருந்ததை ஷ்ரவன் உணர்ந்தான்.

 முக்தானந்தா அவனிடம் நெகிழ்ந்த மனதுடன் சொன்னார். “அவள் சின்ன வயதிலிருந்தே நிறைய கஷ்டப்பட்டவள். எங்களுடைய யோகாலயக் குழுவில் அவள் சேர்ந்த போது அவளுக்கு வயது 21 தான். எங்கள் எல்லோரையும் விட அவள் மிக இளையவள். அவளுடைய தந்தை காமாந்தகன். தன் மகளிடமே தவறாக நடந்து கொள்ள பலமுறை முயன்றவன். அவளுடைய தாய் கணவனை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத ஒரு கோழையாக இருந்தாள். அழுவதைத் தவிர அந்தத் தாய் வேறு எதுவும் செய்யவில்லை. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, வேறு வழி தெரியாமல், 18 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி வந்தவள் கல்பனானந்தா...”

 ஷ்ரவன் அதிர்ந்தான். ஒரு அன்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவனுக்கு அவர் சொன்னதை ஜீரணிக்க மிகவும் கஷ்டமாக இருந்தது.

(தொடரும்)

என்.கணேசன்






Thursday, September 4, 2025

சாணக்கியன் 177

 

ராக்ஷசர் நடந்த சம்பவங்களால் ஆரம்பத்தில் பெருந்துக்கத்தில் மூழ்கினார் என்றாலும் துக்கத்திலேயே தங்கியிருந்து எதையும் சாதிக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து அடுத்து ஆக வேண்டிய விஷயங்களை யோசிக்க ஆரம்பித்திருந்தார்ஆனாலும் நடந்ததை எல்லாம் ஜீரணிப்பது அவருக்குக் கஷ்டமாகத் தானிருந்தது. இளவரசர்களும், சேனாதிபதியும் போர்க்களத்தில் இறக்காமல் மாளிகைக்குள்ளே மரணமடைந்திருந்த விதமும், நள்ளிரவிலேயே எதிரிப்படைகள் உள்ளே நுழைந்த விதமும் குறித்து விரிவாக அவர் அறிய நேர்ந்த போது என்ன நடந்திருக்கும் என்பதை அவரால் சரியாகவே ஊகிக்க முடிந்தது. ஜீவசித்தியின் விசுவாசத்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாலும் அவர் எதிரிகளிடம் சிக்காமல் தப்பிக்க முடிந்ததும், தற்போது அவருடைய நண்பர் சந்தன் தாஸின் வீட்டில் மறைந்திருக்க முடிந்ததும்  மட்டுமே சமீப காலத்தில் நடந்த ஆறுதல் அளிக்கும் விஷயங்கள்

 

தற்போது அவர் பாதுகாப்பாக இருந்தாலும் கூட அவர் தொடர்ந்து கேள்விப்படும் விஷயங்கள் அவருக்கு ஆத்திரமூட்டுபவையாக இருக்கின்றன. அரசர் தனநந்தன் உயிரோடு மகதத்திலிருந்து செல்லும் அனுமதிக்காக மகளை எதிரி சந்திரகுப்தனுக்குத் திருமணம் செய்து தர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானது அவருக்கு ஜீரணிக்க முடியாததாய் இருந்தது. தனநந்தனும் சரி, துர்தராவும் சரி நிர்ப்பந்திக்கப்படாமல் அதற்குச் சம்மதித்திருக்க வழியே இல்லை என்று அவர் உறுதியாக நம்பினார். இனியும் ஏதாவது செய்யாமல் இருந்தால் பின் எப்போதுமே எதுவும் செய்து பலனில்லை என்று புரிந்ததால் அதிரடியாக என்ன செய்ய முடியும் என்று யோசித்து சில முடிவுகளை எட்டியிருந்தார்...

 

அவர் ஒளிந்திருந்த அறையின் கதவு இரு முறை தட்டப்பட்டு ஒரு கணம் தாமதித்து பின் மூன்று முறை தட்டப்பட்டது. காவலர்களின் தலைவனான ஜீவசித்தி ஏதோ தகவலுடன் வந்திருக்கிறான். அவர் வேகமாக எழுந்து கதவைத் திறந்தார்.

 

ஜீவசித்தி உள்ளே நுழைந்து வேகமாக கதவைத் தாளிட்டான்.

 

என்ன செய்தி ஜீவசித்தி

 

அரசர் வனப்பிரஸ்தம் சென்று விட்டார் பிரபுஎன்று ஜீவசித்தி தாழ்ந்த குரலில் சொன்னான்.

 

ராக்ஷசர் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டார். “அப்படியானால் இளவரசியின் திருமணம் முடிந்து விட்டதா?”

 

இல்லை பிரபு. இன்னும் பதினைந்து நாட்களுக்கு விவாக முகூர்த்தம் இல்லாததால் திருமணம் அதன் பின்னரே நடக்கும் போல் தெரிகிறது. திருமணம் முடியும் வரை இங்கிருக்க அரசருக்கு அனுமதி மறுக்கப்பட்டது போல் தெரிகிறது. பட்டத்தரசி மட்டும் திருமணம் முடியும் வரை இங்கிருக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார்அரசரும், இரண்டாவது அரசியாரும் வனப்பிரஸ்தம் போய் விட்டார்கள்.”

 

வேதனையுடன் கண்களை மூடி ஒரு கணம் யோசித்து விட்டு ராக்ஷசர் கேட்டார். “வனத்தில் நாம் மன்னரைச் சந்தித்துப் பேசுவதில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா?”

 

மன்னருடன் அனுப்பப்பட்டுள்ள வீரர்களில் இருவரும், பணியாட்களில் இருவரும் சாணக்கியரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆட்கள் பிரபு. அவர்கள் மூலம் உடனடியாக எல்லாவற்றையும் சாணக்கியர் அறிந்து கொள்ளும் வாய்ப்பிருக்கிறது

 

பெருமூச்சு விட்டபடி ராக்ஷசர் கேட்டார். “வேறென்ன செய்தி?”

 

தங்களைச் சந்தித்துப் பேச ஹிமவாதகூட அரசர் பர்வதராஜன் விருப்பம் தெரிவித்திருக்கிறார்

 

ராக்ஷசர் சந்தேகத்துடன் ஜீவசித்தியைப் பார்த்தார். ”நம் எதிரியுடன் கூட்டு சேர்ந்து படையெடுத்து வந்த பர்வதராஜனுடைய இந்தத் திடீர் விருப்பத்துக்கு என்ன காரணம்?”

 

ஜீவசித்தி சொன்னான். “அவருக்கும் சாணக்கியருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட ஆரம்பித்திருப்பதாகத் தெரிகிறது பிரபு. பர்வதராஜனைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக சாணக்கியர் முடிவுகள் எடுப்பதை பர்வதராஜன் விரும்பவில்லை என்று தெரிகிறது. இளவரசிக்கும், சந்திரகுப்தனுக்கும் இடையே நடக்கவிருக்கும் திருமணமும் அவரை அதிருப்தியடைய வைத்துள்ளது என்றும் தெரிகிறது. அவர் தன் மகன் மலைகேதுவுக்கு இளவரசியை மணமுடிக்கும் உத்தேசத்தில் முன்பு இருந்திருக்கிறார் போலத் தெரிகிறது. நமக்கு அவர்கள் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வசதியாக நம் நம்பிக்கைக்குரிய ஒருவனைப் பணியாளாக பர்வதராஜன் தங்கியிருக்கும் மாளிகையில் சேர்த்திருக்கிறேன். அவன் தங்கள் வீட்டில் பணிபுரிந்தவன் என்று சொல்லி, தங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் என்று அவர்களை நம்பவும் வைத்திருக்கிறான். அவன் மூலம் தங்களைத் தொடர்பு கொள்ள தற்போது பர்வதராஜன் முயற்சி செய்கிறார்…”

 

ராக்ஷசர் சொன்னார். ”பர்வதராஜன் நம்பத் தகுந்த ஆள் அல்லவே. சாணக்கியருடன் சேர்ந்து நம்மை வென்றவர் இப்போது அவரை எதிர்க்கிறார் என்றால், நம்முடன் சேர்ந்த பின் நம்மை எதிர்க்கவும் துணிய மாட்டார் என்று என்ன நிச்சயம்?”

 

ஜீவசித்தி தலையசைத்தான். “தாங்கள் சொல்வது சரியே. ஆனால் எதிரிக்கு எதிரியாகிறவர்களை நாம் பயன்படுத்துவது இலாபகரமானது என்று தாங்கள் எண்ணி அவரைத் தொடர்பு கொண்டு அவர் மனதில் இருப்பதைத் தெரிந்து கொள்ள நினைக்கலாம் என்று எனக்குத் தோன்றியதால் தங்களுக்குத் தெரிவிக்க வந்தேன் பிரபு.”

 

ராக்ஷசருக்கு ஜீவசித்தி நினைத்ததிலும் தவறில்லை என்று தோன்றியது. இப்போது எதிரணியில் எழுந்துள்ள இந்த விரிசலைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டால் அவர் ஏற்கெனவே யோசித்து வைத்திருந்த திட்டத்தை நிறைவேற்றுவதும், அதன் பின் எழும் பிரச்னைகளைத் சமாளிப்பதும் எளிதாக இருக்கும். பர்வதராஜனால் பெரிதாகப் பயன் இல்லை என்று தெரிந்தாலும் நஷ்டமில்லை. அலட்சியப்படுத்தி அனுப்பி விட்டு, பின் வேறெதாவது முயற்சி செய்து பார்க்கலாம்….   

 

ராக்ஷசர் மெல்லக் கேட்டார். “ஒருவேளை நானிருக்கும் இடத்தை அறிய வேண்டி சாணக்கியர் செய்யும் சூழ்ச்சியாக இது இருந்தால்…?”

 

அந்தப் பயம் எனக்குமிருக்கிறது பிரபு. நமக்குப் பாதுகாப்பான வேறொரு மறைவிடத்தில் சந்திக்க ஏற்பாடு செய்வோம். ஏதாவது சதி வலையாக அவர்கள் உத்தேசம் இருந்தால் அங்கிருந்து உடனடியாகத் தப்பிக்கும் வசதிகளை முன்கூட்டியே செய்து கொண்ட பிறகு சந்திப்பை உறுதிப்படுத்துவோம்.”

 

ராக்ஷசர் சம்மதித்தார்.

 

ர்வதராஜனும் மலைகேதுவும் உறங்காமல் விழித்திருந்தார்கள். சுசித்தார்த்தக் பர்வதராஜன் ஒருவனாகத் தான் வரவேண்டும் என்றும் மலைகேதுவுக்குக் கூட உடன் வரும் அனுமதியில்லை என்றும் தெரிவித்து இருந்தான்.  பர்வதராஜன் அதற்குச் சம்மதித்து நள்ளிரவு கழியட்டும் என்று காத்திருந்தான். மலைகேதுவுக்கும் உறக்கம் வரவில்லை. அதனால் அவனும் விழித்திருந்தான். அவனுக்கு இதில் ஏதாவது சதியிருக்கலாம் என்று உள்ளுணர்வு ஆரம்பத்திலிருந்தே எச்சரித்துக் கொண்டே இருந்தது. அதை அவன் தந்தையிடம் கவலையுடன் தெரிவித்தான்.

 

சதி யாருடையதாக இருக்கும் என்று நீ நினைக்கிறாய் மகனே?” என்று பர்வதராஜன் கேட்டான். மலைகேதுவுக்கு அதில் தெளிவு இல்லாததால் சொல்லத் தெரியவில்லை.

 

பர்வதராஜன் சொன்னான். “நமக்கு எதிராக சதி செய்ய முடிந்தவர்கள் இருவர். ஒருவர் சாணக்கியர், இன்னொருவர் ராக்ஷசர். சாணக்கியர் இதில் சதி செய்து பெறப்போவது எதுவுமில்லை. அவருக்கு ராக்ஷசர் இருக்குமிடம் தெரிந்தால் உடனே கைது செய்து சிறைப்படுத்தி விடுவார். அப்படியே என்னைச் சோதிக்க நினைத்து சாணக்கியர் இந்த நாடகத்தை அரங்கேற்றினாலும், அல்லது இதில் என்னை அவர் கண்டுபிடித்தாலும் நான் ராக்ஷசரைப் பிடித்துக் கொடுக்கும் உத்தேசத்தில் தான் இப்படி நடித்தேன் என்று சொல்லித் தப்பித்துக் கொள்வேன். ராக்ஷசருக்கு முக்கிய எதிரிகள் சாணக்கியரும், சந்திரகுப்தனும் தான். நான் ஒரு பொருட்டே அல்ல. என்னைத் தீர்த்துக் கட்டினால் கூட அதை வைத்து அவர் சாதிக்கப் போவது எதுவுமில்லைஅதனால் சதி செய்வதானாலும் அந்த இருவருக்கெதிராகத் தான் சதி செய்வாரேயொழிய என்னை வீழ்த்த சதி செய்யும் முயற்சியில் ஈடுபட மாட்டார். அதனால் எந்த வகையிலும் பயப்பட ஏதுமில்லை மகனே. இதில் நாம் இழப்பதும் ஏதுமில்லை.”

 

மலைகேது தந்தையின் வார்த்தைகளில் திருப்தி அடைந்தான்.

 

நள்ளிரவு கழிந்ததும் சுசித்தார்த்தக் பர்வதராஜனை அழைத்துச் சென்றான். அவன் பர்வதராஜனை காவல் வீரர்கள் இருக்காத குறுகிய தெருக்கள் வழியாக அழைத்துக் கொண்டு போனான். இருவரும் போர்வையை உடலில் சுற்றிக் கொண்டு, முகத்தையும் பாதி மறைத்துக் கொண்டு போனார்கள். ஊரே உறங்கிக் கொண்டிருந்ததால் அவர்கள் யார் கண்ணிலும் பட்டிருக்க வாய்ப்பில்லை. ஒரு பெரிய வீட்டை அடைந்ததும் அந்த வீட்டைச் சுற்றிச் சென்று  பின் வாசற்கதவு வழியே சுசித்தார்த்தக் பர்வதராஜனை அழைத்துக் கொண்டு போனான். உள்ளே ஒரு சிறிய அகல் விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்ததுஅதன் அருகே ஒரு இருக்கை காலியாக இருந்தது. அது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. மற்ற இடங்களில் இருள் மண்டிக் கிடந்தது. சுசித்தார்த்தக் பர்வதராஜனை அந்த இருக்கையில் அமர வைத்து விட்டுநான் வெளியே காத்திருக்கிறேன் அரசேஎன்று சொல்லி விட்டுச் சென்றான்.

 

(தொடரும்)

என்.கணேசன்




Monday, September 1, 2025

யோகி 118

 

வல் சக்தியுடன் தொடர்புடையவனாய், ஒரு நிஜ யோகியைத் தேடும் இளைஞனை பாண்டியன் ஏற்கெனவே அறிந்திருக்கிறார் என்பது அவரும், சுகுமாரனும் அலைபேசியில் பேசிக் கொண்டதன் மூலம் ஷ்ரவனுக்குத் தெரியும். இப்போது அவன் கல்பனானந்தாவைக் கேட்ட கேள்வியை அவள் பாண்டியனிடம் அப்படியே தெரிவித்தால் புத்திசாலியான அவருக்கு உண்மையைத் தெரிந்து கொள்ள நிறைய நேரம் ஆகாது என்பதையும் ஷ்ரவன் உணர்ந்தான். ஏவல்சக்தி ஓநாயைத் தெரிந்து வைத்திருப்பவன், இளைஞன், நிஜமான யோகியைப் பார்த்திருக்கிறீர்களா என்று அவன் கேட்ட கேள்வி இந்த மூன்றையும் இணைத்துப் பார்த்தாலே போதும், கண்டிப்பாக பாண்டியனுக்கு அவன் மேல் சந்தேகம் பிறந்து விடும்....

இந்த ஆபத்தை அறிந்திருந்தும் ஷ்ரவன் அவளிடம் அந்தக் கேள்வியைக் கேட்க ஒரே காரணம் அவள் அவர்களுடன் சேர்ந்தவளா இல்லை முக்தானந்தா சொல்வது போல் நல்லவளா என்பதை அறியத் தான். கல்பனானந்தா அந்த நிஜ யோகியை அறிந்திருக்கிறாள் என்பது இப்போது உறுதியாகி விட்டது. ஆனால் பாண்டியனோ, டாக்டர் சுகுமாரனோ அப்படி ஒரு யோகியை அறிந்திருக்கவில்லை என்பதும் அவர்கள் பேசிக் கொண்டதில் இருந்து அவன் அறிவான். அப்படியானால் அவள் அவர்களிடம் அதைச் சொல்லவில்லை என்றாகிறது. ஆனால் அதைச் சொல்லாதவள், அவன் கேட்டதையும் அவர்களிடம் சொல்ல மாட்டாள் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அவள் பாண்டியனிடம் அவன் கேட்டதைச் சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படிச் சொன்னால் அது அவனுக்கு ஆபத்து என்பதை அறிந்த அவன் அவரிடம் சொல்லக்கூடிய பதிலை ஏற்கெனவே தயாராக வைத்து இருக்கிறான்.

அந்த ஓநாயுடன் தெரிந்த இளைஞன் அந்த ஓநாயிடம்நிஜமான யோகியை நீ பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டதைக் காட்சியாகப் பார்த்ததாய் அவன் சொல்லிக் கொள்ளலாம். முழுவதுமாக அவர் நம்பா விட்டாலும், முழுவதுமாக அவரால் நம்ப மறுக்கவும் முடியாது. ஏனென்றால் அவர் அவன் அந்த ஓநாயால் அரை மணி நேரம் மயங்கிக் கிடப்பதை ரகசியக் காமிரா மூலமாகப் பார்த்தவர். அவராகத் தான் அவனைத் தொடர்பு கொண்டு விசாரித்தாரேயொழிய அவனாகச் சென்று அவர்கள் யாரையும் இதுவிஷயமாகத் தொடர்பு கொள்ளவில்லை. பரசுராமனின் மந்திர உபதேசத்தால் விளைந்த மிகப் பெரிய உதவியாக இப்போதும் ஷ்ரவன், ஓநாய் அவன் மீது பாய்ந்து அரை மணி நேரம் நினைவிழந்ததை, நினைத்துக் கொள்கிறான். அது தான் ஒரு தொடர்பை அவர்களுக்குள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது...

ஆனால் கல்பனானந்தா அவன் கேட்ட கேள்வியை அவரிடம் சென்று சொன்னால் சிறிது சந்தேகம் கண்டிப்பாக அவன் மீது அவருக்கு இருந்துவரும் அபாயம் இருக்கிறது. அதை உணர்ந்திருந்தாலும் அவன் இந்த ஆபத்தான விளையாட்டில் இறங்கியிருக்கிறான். அப்படிக் கேட்டிருக்கா விட்டால், சைத்ராவைப் போலவே கல்பனானந்தாவும், சைத்ரா சொல்லும் நிஜ யோகியைச் சந்தித்திருக்கிறாள் என்ற மிக முக்கியமான தகவல் அவனுக்குத் தெரிய வராமலே போயிருக்கும். அதனால் தான் அன்று ஓநாயும் அவளையே பார்த்தபடி நின்றிருக்கிறது என்று இப்போது அவனுக்குப் புரிகிறது  

அவன் வேலை முடித்து விட்டுக் கிளம்பும் வரை கல்பனானந்தா அவன் கண்ணில் படவில்லை. அறையை நோக்கி அவன் செல்லும் போது கண்ணன் தான் எதிரில் வந்தார். அவனை நட்புடன் பார்த்துப் புன்னகைத்த அவர் சொன்னார். “எங்கள் மேனேஜர் பாண்டியன் உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறார். இன்று சத்சங்கத்தின் சமயத்தில் அங்கே போவதற்குப் பதிலாக மேனேஜரைச் சந்தித்துப் பேச முடியுமா?”

இதயம் படபடத்தாலும் ஷ்ரவன் இயல்பாகச் சொன்னான். “கண்டிப்பாக. அவரை எங்கே சென்று சந்திப்பது?”

கண்ணன் பாண்டியனின் இருப்பிடத்தைச் சுட்டிக் காட்டினார். “அந்தக் கட்டிடம் தான் அவர் தங்கியிருக்குமிடம்.”

நன்றி. கண்டிப்பாகச் சென்று சந்திக்கிறேன்என்று ஷ்ரவன் சொன்னவுடன் அவர் பழையபடி நட்புடன் புன்னகைத்து தலையசைத்து விட்டுச் சென்றார்.

அறைக்கு வந்தவுடன் ஷ்ரவன் முக்தானந்தாவிடம் அன்று மாலை நடந்ததை எல்லாம் சொன்னான். கல்பனானந்தா ஒரு நிஜ யோகியைச் சந்தித்து இருக்கிறாள் என்ற தகவலில் வியப்படைந்தார் என்றால், அவனை பாண்டியன் அழைத்திருக்கிறார் என்ற தகவலில் முக்தானந்தா துணுக்குற்றார். அது நல்ல தகவலாக அவருக்குத் தெரியவில்லை. அதை அவர் அவனிடம் வாய்விட்டுத் தெரிவித்தார்.

ஷ்ரவன் புன்னகையுடன் சொன்னான். “இப்போது அவர் என்னை அழைப்பது நேற்றைய தகவலுக்கா, இல்லை இன்று நான் கல்பனானந்தாவிடம் கேட்ட கேள்விக்கும் சேர்த்தா என்பது அங்கே போனால் தெரிந்து விடும். எதுவாக இருந்தாலும் நான் சமாளித்தாக வேண்டும்.”

அவர் அவனைக் கவலையுடன் பார்த்தார். அவன் சொன்னான். “ஒரு மனிதன் தயார்நிலையில் இருந்தால் அவனால் எதையும் சிறப்பாய் சமாளிக்க முடியும் சுவாமிஜி. பல நேரங்களில் அவனைக் கவிழ்ப்பதே அவன் தானிருக்கும் சூழ்நிலையை ஏற்க மறுப்பது தான். இப்படி ஆகியிருந்திருக்கக் கூடாது, ஏனிப்படி ஆகிவிட்டது என்று புலம்பும் மனநிலையில் இருக்கையில் அவன் மூளை ஒழுங்காக வேலை செய்வதில்லை. அவனால் மாற்ற முடியாத அந்தச் சூழ்நிலையை மறுக்காமல் சந்திக்கும் தயார் மனநிலையில்  அவன் இருந்தால், மனம் மூளையை ஒழுங்காக வேலை செய்ய அனுமதிக்கும். அவன் அறிவு அவனுக்குக் கண்டிப்பாக ஏதாவது வழியைக் காட்டும்.”

சொல்லி விட்டு அவன் கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஆறு. 6.15க்கு சத்சங்க சமயத்தில் தான் அவன் பாண்டியனைச் சந்திக்கப் போக வேண்டும். இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருக்கின்றன. அமைதியாக அமர்ந்து கண்களை மூடி உபதேச மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்தான். இப்போது அவனுக்கு உதவிக்கு செய்யவும், உடன் வரவும் முடிந்தது பரசுராமனின் அந்த மந்திரக்கவசம் தான்.

முக்தானந்தா அவனைத் திகைப்புடன் பார்த்தார். படபடப்பு, கவலை இல்லாமல் அவனுடைய மந்திர தியானத்தை அவன் செய்ய ஆரம்பித்தது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றது என்று அவருக்குத் தோன்றியதுவழக்கம் போல் அந்த நேரத்தில் அவன் ஆத்மார்த்தமாய் ஒரு மகாசக்தியுடன் ஐக்கியமாவது போல் தோன்றியது. ஆரம்பத்திலிருந்தே அவரை மிகவும் கவர்ந்தது அது தான். சாதாரண சமயங்களில் மட்டுமல்லாமல் ஆபத்தின் விளிம்பில் இருக்கும் போதும் அவனால் அது முடிவது பேராச்சரியம் தான்.

சரியாக ஆறேகாலுக்கு சத்சங்கத்திற்காக மணியடித்த போது கண்களைத் திறந்தவன் மெள்ள எழுந்தான். புன்னகையுடன் அவரிடம் சொன்னான். “நானும் கிளம்புகிறேன் சுவாமிஜி. நான் திரும்பி வந்தால் சந்திப்போம்

அவன் சொன்னதில் அவர் பதறிப்போனார். “ஏன் அபசகுனம் போல் இப்படிப் பேசுகிறாய்.”

அவர் அக்கறையில் நெகிழ்ந்து போன அவன் அவர் காலைத் தொட்டு வணங்கி எழுந்தான். “இது அபசகுனமாய்ப் பேசுவது அல்ல சுவாமிஜி. எதுவும் ஆகலாம் என்ற புரிதலில் இருப்பது. இது எச்சரிக்கையாக மட்டுமல்லாமல், நம்மை எதற்கும் தயாராகவும், எல்லா சமயங்களில் கவனமாகவும் இருக்க வைக்கும்.”

அவர் அவன் தலையை இரு கைகளாலும் தொட்டு ஆசிர்வதித்து விட்டுத் தன்னையே கேட்டுக் கொண்டார். “துறவி இவனா, நானா?”

அவன் போய் விட்டான். சத்சங்கத்துக்குப் போய் அமர்ந்த போதும் அவர் மனம் அந்தப் பேச்சில் இருக்கவில்லை. அவர் அவனுக்காகப் பிரார்த்திக்க ஆரம்பித்தார்.

 

பாண்டியன் ஷ்ரவன் வருவதை ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டு இருந்தார். பொதுவாக ஒருவர் நடந்து வருவதைப் பார்த்தாலே அவர் அந்த மனிதரின் ஒருசில தன்மைகளைக் கணித்து விடுவார்.  ஷ்ரவனின் நடை சீரான நடையாக இருந்தது. எதையும் கணக்குப் போட்டு நிதானமாகச் செய்ய முடிந்தவர்களுடைய நடை அது. அப்படிப்பட்ட ஒருவன் பிரம்மானந்தாவின் தீவிர பக்தனாக மாறியது ஆச்சரியம் தான்....

ஷ்ரவன் அவர் வாசலுக்கு வந்தவுடன் ஒரு கணம் நின்று தரையைக் கூர்ந்து பார்ப்பது தெரிந்தது. அவரும் அவனையே கூர்ந்து பார்த்தார். அவன் முகத்தில் திகைப்பும், ஆச்சரியமும் கலந்து தெரிந்தன. என்ன பார்க்கிறான்? அவனுக்கு என்ன தெரிகிறது?


(தொடரும்)

என்.கணேசன்


 



Thursday, August 28, 2025

சாணக்கியன் 176

ர்வதராஜன் மகனிடம் சொன்னான். “மகனே. ஆச்சாரியரைப் போன்ற ஆளுக்குப் பேச்சு சாமர்த்தியத்தால் எதையும் அவருக்கு வேண்டியபடி மாற்றிக் கொள்வது முடியாதது அல்ல. நியாயமாக நடந்து கொள்ளும் மனிதராக இருந்திருந்தால் பாடலிபுத்திரத்தை வென்று நாம் உள்ளே வந்த பிறகு அவர் எல்லாத் தீர்மானங்களையும் என்னைக் கலந்தாலோசித்தே எடுத்திருக்க வேண்டும். ராக்ஷசர் கிடைத்தால் தான் வெற்றி முழுமையாக இருப்பதாக அர்த்தம் என்றும், அதுவரை அவரே எல்லா முடிவுகளையும் எடுப்பது தான் அனுகூலமாக இருக்கும் என்றும் சாமர்த்தியமாகச் சொல்லி அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு விட்டார். ராக்ஷசர் பிடிபட்டாலும் அதை ஆச்சாரியர் சொன்னால் ஒழிய நமக்குத் தெரியாது என்கிற நிலைமையில் நாம் இருக்கிறோம். அவர் சந்திரகுப்தனின் திருமணம் முடிந்து, ராக்ஷசரின் ஆதரவையும் பெற்ற பின் கூட நமக்கு அதைத் தெரிவிக்கும் அபாயம் இருக்கிறது. அவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்த பின் ஏதாவது ஒரு சில்லறைக்காரணம் சொல்லி சமபாதி தருவதை அவர் தட்டிக் கழித்தால் நாம் என்ன செய்ய முடியும்? எல்லாம் நம் கைமீறிப் போன பிறகு நாம் செய்ய முடிந்தது ஒன்றும் இல்லை என்பதால், ஏதாவது செய்வதானால் இப்போதே அதைச் செய்வது தான் புத்திசாலித்தனமாக இருக்கும்.”

 

மலைகேது கேட்டான். “முதலாவது இவனுக்கு ராக்ஷசர் இருக்கும் இடம் தெரியுமா, தெரிந்தாலும் சொல்வானா என்பதே நிச்சயமில்லை. அப்படியே ராக்ஷசர் இருக்குமிடம் நமக்குத் தெரிந்தாலும் அந்த ஆள் இப்போதிருக்கும் நிலையில் என்ன செய்ய முடியும் என்பதும் நமக்கு நிச்சயமில்லை. அப்படி இருக்கையில் இந்த ஆபத்தான வேலையில் நாம் ஏன் இறங்க வேண்டும் தந்தையே

 

பர்வதராஜன் திருப்தியுடன் புன்னகைத்தான். மகன் ஓரளவு அறிவுபூர்வமாக யோசிக்கக் கற்றுக் கொண்டு விட்டான். “மகனே. இப்போதே வெளிப்படையாக நாம் ஆச்சாரியரை எதிர்க்கப் போவதில்லை. சுசித்தார்த்தக் மூலம் ராக்ஷசரைச் சந்திக்க முடியுமா என்று பார்ப்போம். அப்படிச் சந்தித்தால் அவரால் ஆச்சாரியரையும் சந்திரகுப்தனையும் எதிர்த்து ஏதாவது செய்ய முடியுமா என்று பார்ப்போம். ராக்ஷசர் ஆச்சாரியருக்கு இணையான அறிவாளி. அதனால் அவரால் முடியும் என்றால் அவரிடம் பேரம் பேசுவோம். உனக்கும் துர்தராவுக்கும் திருமணம் செய்து கொடுத்து, ஆச்சாரியர் நமக்கு வாக்களித்த சமபாதி நிதி, நிலம் தர முடியுமா என்று கேட்போம். அவர் சம்மதித்தால் அவருக்கு நட்புக்கரம் ரகசியமாக நீட்டுவோம். அவரால் முடியா விட்டால் அவரைக் கைவிட்டு விடுவோம். அவரால் முடிந்தால் ஆச்சாரியரைக் கைவிட்டு விடுவோம். யாரைக் கைவிடுவது என்பதை முடிவில் தீர்மானித்துக் கொள்வோம். அதுவரை இருபக்கத்திலுமே தொடர்பில் இருப்போம். என்ன சொல்கிறாய்?”

 

மலைகேது தந்தையின் அதிபுத்திசாலித்தனத்தை மெச்சியபடி தலையாட்டினான்.

 

சுசித்தார்த்தக் அன்று முழுவதும் ஆழ்ந்த ஆலோசனையில் இருப்பது தெரிந்தது. ஏதோ இரு முடிவுகளுக்கிடையே எந்த முடிவை எடுப்பது என்று அவன் குழப்பத்தில் இருந்தது போல் தெரிந்தது. பர்வதராஜன் அவனிடம் வேடிக்கையாகச் சொன்னான். “சுசித்தார்த்தக், நாங்கள் மகதத்தை வெல்வது   எப்படி என்று கூட இந்த அளவுக்கு ஆலோசிக்கவில்லை. நீ ஆலோசிப்பதைப் பார்த்தால் நீ அதை விடப் பெரிய ராஜ்ஜியம் ஏதோ ஒன்றைப் பிடிக்க யோசிக்கிறாய் என்றல்லவா எனக்குத் தோன்றுகிறது

 

சுசித்தார்த்தக் வெட்கப்பட்டான். “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அரசே. இந்த ஏழைக்கு அந்த அளவு பெரிய ஆசையெல்லாம் இல்லைஎன்றவன் அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை. சிறிது நேரம் கழித்து எச்சில் விழுங்கியபடி வந்து அவரிடம் கேட்டான். “அரசே. நீங்கள் பிரதம அமைச்சர் ராக்ஷசரைச் சந்திக்க ஆசைப்பட்டது நிஜம் தானா? இல்லை சும்மா வேடிக்கையாகச் சொன்னீர்களா?” 

 

பர்வதராஜன் மகனை ஒரு அர்த்தமுள்ள பார்வை பார்த்துவிட்டு சுசித்தார்த்தக்கிடம் சொன்னான். “சுசித்தார்த்தக், உண்மையாகத் தான் சொன்னேன். ஏன் கேட்கிறாய்? உனக்கு அவர் இருக்குமிடம் தெரியுமா?”

 

சுசித்தார்த்தக் பயமும், ஆர்வமும் கலந்த பார்வை பார்த்து விட்டுத் தாழ்ந்த குரலில் சொன்னான். ”எனக்குத் தெரியாது அரசே.”

 

பர்வதராஜன் அவனிடம் உரிமையோடு கோபித்துக் கொண்டான். “நீ என்னை இன்னும் நம்ப மறுக்கிறாய் என்பது எனக்கு வருத்தத்தைத் தருகிறது சுசித்தார்த்தக்.”

 

சுசித்தார்த்தக் சொன்னான். “உண்மையைத் தான் சொல்கிறேன் அரசே. அவரிருக்குமிடம் எனக்குத் தெரியாது. ஆனால் உண்மையாக அவரிருக்கும் இடம் தெரிந்த ஆளை எனக்குத் தெரியும்.”

 

யாரவன்?” பர்வதராஜன் ஆர்வத்துடன் கேட்டான்.

 

சுசித்தார்த்தக் தயக்கத்துடன் சொன்னான். ”நான் சொன்னது தெரிந்தால் அவன் என்னைக் கொன்றே விடுவான்..... என்னை நீங்கள் வேலைக்காக வெளியே  அனுப்பிய போது நீங்கள் சொன்னதை எல்லாம் அவனிடம் சொல்லி நீங்கள் பிரதம அமைச்சர் ராக்ஷசரைச் சந்திக்க ஆசைப்படுவதாகச் சொன்னேன். அதற்கு அவன் என்னை அதிகப்பிரசங்கி என்றும், முட்டாள் என்றும் திட்டினான். நீங்களும், ஆச்சாரியரும் ஒரே நோக்கத்தை உடையவர்கள் என்றும், பிரதம அமைச்சர் ராக்ஷசரைச் சிறைப்பிடிக்க நீங்கள் போடும் திட்டம் தான் இது என்றும் சொல்கிறான்.”

 

பர்வதராஜன் சொன்னான். “அவனைத் தவறு சொல்ல முடியாது சுசித்தார்த்தக். அவன் பார்வையில் நானும், சந்திரகுப்தனும், சாணக்கியரும் சமமான எதிரிகள். மகதம் மீது படையெடுத்து வந்து வென்ற எதிரிகள். உண்மை அதுவாக இருப்பதால் அவன் நிலைமையில் நான் இருந்திருந்தால் நானும் அவனைப் போலவே சந்தேகித்திருப்பேன். சூழ்ச்சியும், சதியும் நிரம்பிய உலகமல்லவா இது. யாரும் சொல்லும் வார்த்தைகளை மட்டும் நம்பி எச்சரிக்கையாக இல்லாமல் இருந்தால் ஏமாந்தல்லவா போக வேண்டி இருக்கும்.”

 

சுசித்தார்த்தக் பர்வதராஜனை மிகுந்த மரியாதையுடன் பார்த்தான். “எத்தனை பக்குவத்துடன் அவனையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் அரசே. உங்களைப் போய் அவன் சந்தேகப்பட்டு விட்டானே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது.”

 

பர்வதராஜன் சொன்னான். “சுசித்தார்த்தக் நீ அவனிடம் போய் சொல். நான் என் மகன் மலைகேது தலை மீது கை வைத்து சத்தியம் செய்து சொல்கிறேன். கண்டிப்பாக என் உத்தேசம் ராக்ஷசரைக் காட்டிக் கொடுப்பதல்ல. அவரைப் பார்த்துப் பேச ஆசைப்படுகிறேன் அவ்வளவு தான். அதுவும் ஆச்சாரியரின் சூழ்ச்சிகளைப் புரிந்து கொண்டு மனமொடிந்து போனதால் தான் அந்த விருப்பமும் கொண்டேன். நான் ராக்ஷசரைச் சந்தித்துப் பேசினேன் என்று தெரிந்தாலே ஆச்சாரியர் என்னை எதிரியாக நினைக்க ஆரம்பித்து விடுவார் என்ற ஆபத்து எனக்கும் இருக்கிறது.  அதை அவனுக்கு எடுத்துச் சொல்

 

சுசித்தார்த்தக் யோசித்து விட்டுச் சம்மதித்தான். பிறகு அவன் வெளியே சென்று சிறிது நேரம் கழித்து வந்து பர்வதராஜனிடம் சொன்னான். “அரசே. அந்த ஆளிடம் நீங்கள் கூறியதைச் சொன்னேன். அவன் தற்போதும் முக்கியப் பொறுப்பில் உள்ள அதிகாரியாக இருப்பதால் தங்களிடம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. அவன் ராக்ஷசர் தற்போது மறைந்திருக்கும் இடத்தையும் தெரியப்படுத்த மறுத்து விட்டான். ஆனால் அவன் ராக்ஷசரை நீங்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்வதற்குச் சம்மதித்திருக்கிறான்.”

 

பர்வதராஜன் சொன்னான். “அது போதும் சுசித்தார்த்தக். நான் உன் நண்பனின் எச்சரிக்கையுணர்வை மதிக்கிறேன். அவரவர் பாதுகாப்பு அவரவருக்கு முக்கியம். நான் எப்போது ராக்ஷசரைச் சந்திப்பது? எப்படிச் சந்திப்பது?”

 

அவன் ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேர்ந்தெடுத்த பின் சொல்கிறானாம். அதிகாலையில் மாறுவேடத்தில் வரச் சொல்கிறான். நள்ளிரவு வரையும் கூட ஆச்சாரியரின் ஒற்றர்கள் முக்கிய இடங்களையும், மனிதர்களையும் கண்காணிக்கிறார்கள் என்று அவன் சொல்கிறான். அதன் பின் அவர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதில்லையாம்.”

 

எப்போது எங்கே எப்படி அவன் வரச் சொல்கிறானோ அப்படியே வருகிறேன் சுசித்தார்த்தக். இந்த சூழ்நிலையில் ஆச்சாரியரின் கவனத்திற்கு வர நானும் விரும்பவில்லை.” என்று பர்வதராஜன் சொன்னான்.  

        

(தொடரும்)

என்.கணேசன்        


சாணக்கியன் தற்போது வெற்றிகரமான இரண்டாம் பதிப்பில் ...