என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, July 28, 2025

யோகி 113


ஷ்ரவன் சொன்னது போல் அந்த நிஜ யோகியை ஏதோ ஒரு தனிப்பட்ட காரணத்திற்காக பிரம்மானந்தா யோகாலயத்திற்கு வரவழைத்திருக்க  வாய்ப்பிருப்பதாகத் தோன்றினாலும், அந்தச் சந்திப்பின் போது சைத்ரா இருந்திருக்க வாய்ப்பு இல்லை என்றே முக்தானந்தாவுக்குத் தோன்றியது. அவர் சொன்னார். “இங்கே நடக்கும் முக்கிய சந்திப்புகளில் தன்னுடன் இருக்க பிரம்மானந்தா பாண்டியன் அல்லது கல்பனானந்தாவை அனுமதிப்பாரே ஒழிய சைத்ரா போன்ற சாதாரண இளம் துறவியை எல்லாம் தன்னுடன் இருக்க அனுமதித்திருக்க மாட்டார் ஷ்ரவன். அதனால் நீ சொல்வது போல் அவர் அந்த யோகியை இங்கே வரவழைத்திருந்தாலும் கூட, அவருடன் சேர்ந்து சைத்ராவும் அந்த யோகியை இங்கே சந்தித்திருக்க வாய்ப்பில்லை.”

 

அப்படியானால் பிரம்மானந்தாவுடன் இல்லாமல் வேறு விதமாக சைத்ரா அவரை இங்கே சந்தித்திருக்கலாம்.”

 

நீ சொல்லும் யோகி சாதாரண தோட்டக்காரரின் உடையில் இருப்பவர் என்றால் அவர் வெளிகேட்டிலிருந்தே உள்ளே நுழைந்திருக்க முடியாதே.”

 

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இடிக்கிறதே என்று எண்ணிய ஷ்ரவன் தன் அடுத்த சந்தேகத்தை அவரிடம் கேட்டான். “சரி சுவாமிஜி. அந்த யோகியை சைத்ரா ஏன், எப்படி, எங்கே சந்தித்தாள் என்பதை விட்டு விடுவோம். சைத்ராவை என்ன காரணத்திற்காக அவர்கள் கொன்றிருப்பார்கள் என்பதை உங்களால் யூகிக்க முடிகிறதா?”

 

முக்தானந்தா இல்லை என்று தலையசைத்து விட்டுச் சொன்னார். “இங்கே சட்ட விரோதமான வேலைகள் நடக்கின்றன என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை ஷ்ரவன். ஏனென்றால் இங்கே சில நாட்களில் இரவு நேரங்களில் ஆட்களின் போக்குவரத்து அதிகமாக இருக்கும். துறவிகளை இரவு பத்து மணிக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் வெளியே உலாவக் கூடாது என்று சொல்லும் இவர்கள் மட்டும் அந்த நேரத்திற்குப் பின் ஏன் நடமாடுகிறார்கள் என்று தெரியவில்லை. அப்படி நடமாடுபவர்களில் ஒருசிலர் சில சமயங்களில் புதிய ஆட்களாகவும் இருக்கிறார்கள். அவர்களை அழைத்துப் போகிறவர்களும், அழைத்து வருபவர்களும் பாண்டியனின் ஆட்களாய் இருக்கிறார்கள். சில சமயங்களில் துறவிகளையும் அழைத்துக் கொண்டு போகிறார்கள். அந்த அகால நேரத்தில் என்ன வேலையாய் அழைத்துக் கொண்டு போகிறார்கள் என்பது தெரிவதில்லை. இரண்டு தடவை யாரையோ தூக்கிக் கொண்டு போவதைக்கூட நான் பார்த்திருக்கிறேன். உயிருடன் தூக்கிக் கொண்டு போகிறார்களா, இல்லை பிணத்தைத் தூக்கிக் கொண்டு போகிறார்களா என்பதும் தெரிவதில்லை…”

 

ஷ்ரவன் அவர் சொன்னதையெல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டு சிறிது யோசித்து விட்டுக் கேட்டான். “நீங்கள் பார்த்ததில் பெண்களும் இருந்திருக்கிறார்களா?”

 

ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு ஒரு முறை ஒரு பெண்ணையும் அழைத்துப் போவதை நான் பார்த்தேன். அதற்கு முன்பும், பின்பும் நான் பார்த்தவர்கள் எல்லாம் ஆண்கள் தான்.”

 

ஷ்ரவன் கேட்டான். “சைத்ராவுக்கு பாலியல் ரீதியாக எதாவது பிரச்சினைகள் வந்திருக்க வாய்ப்புண்டா சுவாமிஜி?”

 

இங்கே அதற்கு வாய்ப்பு அதிகம் இல்லை ஷ்ரவன். வேறெதாவது காரணம் தான் இருக்கும். ஏனென்றால் நான் பார்த்த வரையில் இங்கே அந்த வகைப் பிரச்சினைக்கான சூழல் இருந்ததேயில்லை.“

 

சதாசர்வ காலம் ஜன்னல் அருகே அமர்ந்து கவனித்துக் கொண்டே இருக்கும் முக்தானந்தாவுக்கு அங்குள்ள சூழல் பற்றி எப்போதும் அறிந்திருக்க வாய்ப்பு உள்ளதால் ஷ்ரவன் அவர் சொன்னதை நம்பினான். அவனுக்குத் திடீரென்று இன்னொரு சந்தேகம் வந்தது.

 

நீங்கள் அப்படி ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டிப்பதில்லையா சுவாமிஜி?”

 

ஆரம்ப காலங்களில் சில முறை என்னை முறைத்தும், திட்டியும் இருக்கிறார்கள். எனக்குத் தூக்கம் வருவதில்லை, நான் என்ன செய்யட்டும் என்று கேட்டேன். அதன் பின் என்னால் பிரச்சினை எதுவும் வராததைப் பார்த்து அவர்கள் என்னைக் கண்டு கொள்ளாமல் இருக்கப் பழகி விட்டார்கள்.”

 

ஷ்ரவன் சொன்னான். “சைத்ராவோடு 206ல் இருந்தவர்களுக்கு, கொலைக்கான காரணம் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அவர்களைத் தொடர்பு கொள்ள வழியில்லை….”

 

முக்தானந்தா சொன்னார். “தொடர்பு கொள்ள முடிந்தாலும் கூட அவர்கள் வாய் திறந்து பேச வாய்ப்பில்லை.”

 

அவளுடன் இரண்டு அல்லது மூன்று பேர் அந்த அறையில் இருந்திருக்கலாம். அவர்களில் யாராவது ஒருத்தி சைத்ராவைக் காப்பாற்ற அவள் தந்தைக்கு மொட்டைக் கடிதம் எழுதி இருக்கலாம் அல்லவா?”

 

இருக்கலாம். ஆனால் இங்கே தபால் பெட்டி வெளிகேட்டுக்குப் பக்கத்தில் தான் இருக்கிறது. இங்கேயுள்ள உள் கேட்டைத் தாண்டி வெளியே போய் தான் அந்தப் பெட்டியில் தபாலைப் போட வேண்டும். ஆனால் இங்குள்ள துறவிகள் அனுமதியில்லாமல் உள்கேட்டைத் தாண்ட முடியாதே ஷ்ரவன். அப்படி இருக்கையில் அவள் எப்படி அந்தக் கடிதத்தை அந்தத் தபால் பெட்டியில் போட்டு இருப்பாள்?”

 

ஷ்ரவன் பெருமூச்சு விட்டான். எல்லா வழிகளிலும் அடைப்பு இருக்கிறதுபின் கேட்டான். “சைத்ராவுக்குக் கொடுக்கப்பட்ட தோட்ட வேலையிலும், நூலக வேலையிலும் அவளுக்கு மேற்பார்வையாளராக இருந்தது கல்பனானந்தா தான். அதனால் அவருக்கு சைத்ரா பற்றியும்,  இங்கு அவளுக்கு என்ன, ஏன் ஆனது என்பது பற்றியும் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு அல்லவா சுவாமிஜி?”

 

முக்தானந்தா தலையசைத்தார். “நிச்சயம் உண்டு. கல்பனானந்தா அதீத புத்திசாலி. அவள் இருக்கும் இடத்தில் நடப்பது எதுவும் அவள் கவனத்திலிருந்து தப்ப வழியேயில்லை.”

 

ஷ்ரவன் சொன்னான். “பிரம்மானந்தாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் அவர் இருப்பதால், அவர் பக்கத்திலிருந்தும் கல்பனானந்தாவுக்குத் தகவல்கள் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. இன்னொரு சாத்தியக்கூறும் இருக்கிறது சுவாமிஜி. பிரச்சினையே கல்பனானந்தா மூலமாகக்கூட ஏற்பட்டிருக்கலாம் அல்லவா? சைத்ரா இவர்களுடைய ரகசியம் எதையாவது கண்டுபிடித்து விட்டதை கல்பனானந்தா தெரிந்து கொண்டு பிரம்மானந்தாவிடமோ, பாண்டியனிடமோ சொல்லிக் கொடுத்திருக்கவும் வாய்ப்பு இருந்திருக்கிறது அல்லவா சுவாமிஜி.

 

முக்தானந்தா சொன்னார். ”காலப் போக்கில் எல்லாருமே சிறிதாவது மாறுகிறார்கள். அப்படி கல்பனானந்தாவும் ஓரளவு மாறியிருக்கலாம். அப்படி மாறியிருந்தால் ஒழிய அவளால் பிரம்மானந்தாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவளாக இப்போதும் இருந்திருக்க முடியாது. ஆனாலும் அவளால் இன்னொரு பெண்ணின் உயிர் போயிருக்க முடியாது என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் ஷ்ரவன். கல்பனானந்தாவுக்கு சைத்ராவின் கொலை பற்றிய உண்மைகள் தெரிந்திருக்கலாம் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அவளால் சைத்ராவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்க முடியாது.”

 

ஷ்ரவன்எதனால் அந்த அளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டான்.

 

முக்தானந்தா சொன்னார். “ஆன்மீகத்தில் என்னுடைய ஈடுபாட்டுக்குச் சிறிதும் குறைந்ததல்ல அவளுடைய ஈடுபாடு. இளம் வயதில் அவள் நிறையவே கஷ்டப்பட்டு இருக்கிறாள். அவளுடைய கஷ்டங்கள் வாய்விட்டுச் சொல்ல முடியாதவை. அக்காலத்திலேயே அவளுக்கு ஆன்மீகம் தான் பெரிய ஆசுவாசமாக இருந்திருக்கிறது. நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறாள். யாராவது ஒரு பிரபல ஆன்மீக அறிஞரைப் பற்றி நீ பேச ஆரம்பித்தால், அவருடைய வாழ்க்கை வரலாற்றையும்,  அவருடைய பிரதான போதனைகளையும் தெளிவாக அவளால் விவரிக்க முடியும். பிரம்மானந்தாவின் சில பேச்சுக்கள் மிக நன்றாய் இருக்கின்றன என்றால், காரணம் அவை அனைத்தும் அவள் குறிப்பெடுத்துக் கொடுத்தவை. அவள் குறிப்பெடுத்துக் கொடுத்ததை மட்டும் அவர் பேசியிருந்தால் எவ்வளவோ சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் அவர் சிறிது தன் சொந்தப் புகழையும், கற்பனைக் கதைகளையும் புகுத்தி தான், கேட்பவர்களை சோதித்து விடுகிறார்...”

 

ஷ்ரவன் கேட்டான். “கல்பனானந்தாவிடமிருந்து நான் சைத்ரா பற்றிய உண்மைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பிருக்கிறதா சுவாமிஜி?”

 

முக்தானந்தா வறண்ட குரலில் சொன்னார். “அவள் உண்மைகளைச் சொல்வதாய் இருந்தால், தன் உயிரைப் பணயம் வைத்து தான் உன்னிடம் சொல்ல வேண்டியிருக்கும்.”

 

அப்படி யாரையாவது வற்புறுத்திக் கேட்க முடியுமா? அப்படிக் கேட்பது நியாயமாய் இருக்குமா?’ என்று ஷ்ரவன் திகைத்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்




Thursday, July 24, 2025

சாணக்கியன் 171

சாணக்கியர் என்ற பெயர் தனநந்தனை எரிச்சலடையச் செய்தது. என்றோ அவனை எதிர்த்து நின்ற சாணக் இப்போது மகன் மூலமாக வென்று விட்டது போலவும், சாணக்கின் பெயர் நிலைத்து நின்று விட்டது போலவும் தோன்றுவதை அவனால் தவிர்க்க முடியவில்லை. அவனே சாணக்கின் மகனே என்று அழைப்பதை நிறுத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். ஆனால் மனைவி சொன்ன தகவல் புதிராகத் தோன்றி மேலோங்கி இருந்ததால் அவன் ஆர்வத்துடன் கேட்டான். “யாரது?”

 

தாரிணி தயக்கத்துடன் சொன்னாள். “சந்திரகுப்தன்” 

 

அந்தப் பெயரைக் கேட்டதும் தனநந்தன் கண்களில் தீப்பந்தங்கள் எரிந்தன. முன்னொரு காலத்தில் இங்கே மாடு மேய்த்துக் கொண்டிருந்தவன், இன்று எதிரியாகி அவனிடமிருந்து ராஜ்ஜியத்தைப் பறித்துக் கொண்டவன் - அவன் மகளை மணப்பதா? நாடு இழந்தாலும் என் கௌரவத்தை நான் இழந்து விடவில்லை என்று சொல்லக் கோபத்தோடு வாய் திறந்தவனை தாரிணி பேச விடாமல் தடுத்துச் சொன்னாள்.

 

எதைச் சொல்வதற்கு முன்பும் இப்போதைய நம் நிலைமையையும், துர்தராவின் எதிர்காலத்தையும் சிறிது யோசித்து விட்டுச் சொல்லுங்கள். ராஜ்ஜியத்தை இழந்து விட்டோம். பிள்ளைகளையும் இழந்து விட்டோம். ஆசைப்படவோ, எதிர்பார்க்கவோ நமக்கு ஒரு நல்ல எதிர்காலம் இல்லை. அவளுக்காவது ஒரு நல்ல வாழ்க்கை அமையட்டுமே

 

என்ன சொல்வதென்று தனநந்தன் திகைக்கையில் அமிதநிதா சொன்னாள். “சந்திரகுப்தனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஒருவேளை அவன் துர்தராவைத் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் தான் நாளை மகத அரியணையில் அமர்வார்கள். நீங்கள் இழந்ததை உங்கள் பேரப்பிள்ளைகள் எதிர்காலத்தில் அடைந்தால் அது உங்களுக்கும் ஒருவிதத்தில் வெற்றியே அல்லவா?”

 

தனநந்தன் இந்த வகையில் சிந்தித்துப் பார்த்திருக்கவில்லை. ஆனாலும் சந்திரகுப்தனை மருமகனாக ஏற்றுக் கொள்ள அவனுக்கு மனம் வரவில்லை. “அவன் ஒரு காலத்தில் இங்கே மாடு மேய்த்துக் கொண்டிருந்தவன்...” என்றான்.

 

அமிதநிதா சொன்னாள். “அவன் பூர்விகத்தைப் பார்த்தால் நம் பூர்விகத்தையும் நாம் யோசித்துப் பார்ப்பது தானே நியாயம்.”

 

அவன் பூர்விகத்தை யாரும் நினைவுபடுத்துவது தனநந்தனுக்குப் பிடித்தமானதாக இருந்ததில்லை. சற்று முன் தான் சாணக்கின் மகனும் அதை நினைவுபடுத்தி அவமதித்தது நினைவுக்கு வந்தது. அவன் தன் மூத்த மனைவியை முறைத்தான். அவள் அதைப் பொருட்படுத்தாமல் சொன்னாள். “இப்போது அவன் வென்றவன். நீங்கள் தோற்றவர். யோசித்தால் அவன் தான் மறுக்க வேண்டும். சாணக்கியர் ஒத்துக் கொள்வாரா இல்லையா என்பது வேறு விஷயம்.”

 

துர்தரா அருகில் வந்து சொன்னாள். “இந்தப் பேச்சை நாம் இதோடு விட்டு விடுவது நல்லது. அவர் ஆச்சாரியர் பேச்சை மீறி எதையும் செய்ய மாட்டார் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆச்சாரியர் இதற்கு ஒத்துக் கொள்வார் என்று தோன்றவில்லை....”

 

சொல்லும் போது மகள் முகத்தில் தெரிந்த சோகமும், அவள் குரல் உடைந்ததும் தனநந்தனை என்னவோ செய்ததுமகதத்தை வென்ற சந்திரகுப்தன், அவன் மகள் மனதையும் இவ்வளவு விரைவில் வென்றிருப்பது விதியின் விளையாட்டாகவே  தோன்றியது.

 

அவன் எதுவும் சொல்வதற்கு முன்பாக தாரிணி சொன்னாள். “ஆச்சாரியர் வாக்கு கொடுத்திருக்கிறார். வரன் யார் என்று தெரிந்து அவர் மறுத்தால் அவர் கொடுத்த வாக்கு தவறியவராகிறார். அது அவருக்குத் தான் கேவலம். அதனால் அவர் வாக்கு தவற மாட்டார் என்று நினைக்கிறேன்.”

 

அமிதநிதா சொன்னாள். “ஜோதிடர்கள் அவள் கிரக அமைப்பை வைத்து அவள் ஒரு சாம்ராஜ்ஜியத்தின் சிம்மாசனத்தில் அமர்பவளாகவே இருப்பாள் என்று சொன்னதும் பொருந்துவதால் சாணக்கியர் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவும் வாய்ப்பு இருக்கிறது.”

 

தனநந்தன் களைப்புடன் தன் மனைவிகளைப் பார்த்தான். இப்போது அவன் அபிப்பிராயத்தைப் பற்றி அவர்கள் யாருக்குமே கவலையில்லை. சாணக்கின் மகன் அபிப்பிராயம் பற்றித் தான் அவர்களுக்குக் கவலை. ஆனால் மகளின் எதிர்காலத்தைப் பற்றி யோசித்தால் அவர்கள் சொல்வதில் தவறில்லை தான். அவன் இழந்ததை அவன் மகள் பெற்றால் அதை இழப்பு என்று சொல்ல முடியுமா?

 

அவன் முன்பே யோசித்துக் கவலைப்பட்டது போல அவன் வாழ்ந்து முடித்தவன். அவன் மகள் இன்னும் வாழவே ஆரம்பிக்கவில்லை. அவளுடைய நலன் பற்றி தான் இனி அவன் யோசிக்க வேண்டும்ஆனால் அவன் சம்மதித்தாலும் சாணக்கின் மகன் சம்மதிப்பான் என்று தோன்றவில்லை. வாக்கு கொடுத்து விட்ட காரணத்தாலேயே சம்மதிக்கும் அளவுக்கு பெருந்தன்மை சாணக்கின் மகனுக்கு இருக்குமா? இதற்கும் தன் எதிரியின் சம்மதம் தேவைப்படும் நிலைமையில் இருப்பது அவமானமாகத் தோன்றினாலும் ஒரு தந்தையாக அவன் மனது அதைப் பொருட்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியது. அவன் மனம் மாறி மாறி யோசித்தது.  

   

 

றுநாள் சாணக்கியர் தனநந்தனைக் காண வந்த போது யோசனையாலும், கவலையாலும் பீடிக்கப்பட்டவனாக அவன் தோன்றினான்அவர் அவனுக்கு வணக்கம் தெரிவித்த போது அவனையறியாமல் அவனும் கைகூப்பினான்.

 

சாணக்கியர் அவனுக்கெதிரே இருந்த ஆசனத்தில் அமர்ந்தபடி கேட்டார். “கானகம் செல்லத் தயாராகி விட்டாயா தனநந்தா?”

 

தனநந்தன் தலையை மெல்ல அசைத்தான். சாணக்கியர் கேட்டார். “மகளிடம் பேசினாயா? அவளுக்குப் பிடித்தவன் யாராவது இருக்கிறார்களா?”

 

தனநந்தன் மெல்ல சொன்னான். “அவளுக்கு ஒருவனைப் பிடித்திருக்கிறது என்று தெரிகிறது. ஆனால் இந்தத் திருமணம் நடக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.”

 

சாணக்கியர் முகத்தில் குழப்பம் காட்டிக் கேட்டார். “ஏன்?”

 

தனநந்தன் சிறிது தயங்கி விட்டுச் சொன்னான். “அவள் பிடித்திருப்பதாகச் சொன்னது சந்திரகுப்தனை

 

சாணக்கியர் அதிர்ச்சியைக் காட்டி சிறிது நேரம் மௌனமாக இருந்தார். தனநந்தன் படபடக்கும் இதயத்தோடு அவர் என்ன சொல்வாரோ என்று காத்திருந்தான். அவர் ஒத்துக் கொள்வார் என்ற நம்பிக்கை அவனுக்குக் குறைவாகவே இருந்தது. அவன் மனைவியரும், மகளும் கூட அதில் அதிக நம்பிக்கை வைத்திருக்கவில்லை. அவர் ஒத்துக் கொண்டால் அது அவள் பிறந்த நேரத்தின் கிரகச் சேர்க்கையும், அதிர்ஷ்டமுமே காரணமாக இருக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

 

சாணக்கியர் ஒரு முடிவுக்கு வந்தவர் போலக் காட்டிக் கொண்டு இறுகிய முகத்துடன் சொன்னார். “கொடுத்த வாக்கை மீறுவதும் மானமிழந்து வாழ்வதும் ஒன்று என்று நினைப்பவன் நான். அதனால் அவர்கள் திருமணம் நடப்பது உறுதி.”

 

தனநந்தனுக்கு இது நிஜம் தானா இல்லை கனவா என்ற சந்தேகம் எழுந்தது. அவரைத் திகைப்புடன் பார்த்தான். அவன் மனதில் இன்னொரு சந்தேகம் எழுந்தது. “சந்திரகுப்தன் சம்மதிப்பானா?”

 

சாணக்கியர் உறுதியான குரலில் முக இறுக்கம் மாறாமல் சொன்னார். “நான் சொன்னால் அவன் மறுக்க மாட்டான். ஆனால் இன்னும் பதினைந்து நாட்களுக்கு திருமண முகூர்த்த நாட்கள் இல்லை. அதனால் அதன் பின்னரே இந்தத் திருமணம் நடக்கும். அது வரை நீ இங்கே தங்கியிருக்க உனக்கு அனுமதி இல்லை தனநந்தா. வேண்டுமானால் திருமணம் முடியும் வரை உன் மகளின் தாய் மட்டும் இங்கிருக்க அனுமதியளிக்கிறேன். அது முடிந்த பின் அவள் உங்களுடன் வந்து இணைந்து கொள்ளட்டும். நீயும் உன் இரண்டாம் மனைவியும் இன்று சூரியாஸ்தமனத்திற்குள் கானகத்திற்குக் கிளம்பி விட வேண்டும். நான்கு வீரர்கள், நான்கு பணியாட்கள் உங்களுடன் வர அனுமதிக்கிறேன். நீ சந்திரகுப்தனுக்கு மாமனார் ஆகப் போகிறவன் என்பதால் உன்னை வெறும் கையோடு கானகம் அனுப்புவது உறவுக்குத் தரும் மரியாதை ஆகாது. அதனால் நீ கானகம் போகும் போது உங்களுடன் உன் ரதத்தில் எத்தனை கொண்டு செல்ல முடியுமோ அத்தனை உடைமைகளையும், செல்வத்தையும் கொண்டு செல்ல அனுமதிக்கிறேன்.... ”

 

சாணக்கியர் சொன்னதைக் கேட்டு தனநந்தன் பேராச்சரியம் அடைந்தான். இந்த அளவு பெருந்தன்மையை அவன் நிச்சயமாக சாணக்கியரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அவனும் அவன் மனைவியும், அவர்களுடைய உடைகளும் சேர்ந்தாலே ரதம் நிறைந்து விடும் என்பதால் கூடுதல் செல்வம் ஓரளவுக்கு மேல் கொண்டு போக முடியாதென்றாலும் அந்த ஓரளவுமே இப்போதைக்கு அவனுக்குப் பெரிது தான்....

 

சாணக்கியர் எழுந்து நின்றார். “வெறுப்பு காலெமெல்லாம் சுமக்க முடிந்த சுமை அல்ல தனநந்தா. அது பக்குவமடைந்தவனுக்குத் தேவையில்லாத பாரமும் கூட. அதை ஏதாவது ஒரு கட்டத்தில் கடப்பது மீதமுள்ள வாழ்க்கையைச் சுதந்திரமாகவும், இலகுவான மனதுடனும் வாழ ஒருவனை அனுமதிக்கிறது. உன்னிடம் விடைபெற்றுக் கொள்கிறேன்.”

 

சொல்லி அவனைப் பார்த்துக் கைகூப்பிய அவர் பின் ஒரு கணமும் நிற்காமல் அங்கிருந்து சென்று விட்டார்.

 

(தொடரும்)

என்.கணேசன்  



Monday, July 21, 2025

யோகி 112

 

ரு ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்து, இந்த இளம் வயதிலேயே இத்தனை திறமைகளை வளர்த்துக் கொண்டும் ஷ்ரவன் அடக்கமாக இருந்தது, முக்தானந்தாவைப் பிரமிக்க வைத்தது. ஆனால் இங்குள்ள ஆபத்துகளை அவன் எவ்வளவு தூரம் அறிவான் என்று அவருக்குத் தெரியவில்லை. அவர் அக்கறையுடன் சொன்னார். “இங்கே ஆன்மீகத்தை விட ஆபத்துகள் அதிகம் ஷ்ரவன். நீ யார், எதற்காக வந்திருக்கிறாய் என்பது அவர்களுக்குத் தெரிந்தால் நீ உயிரோடு திரும்ப முடியாது.”

 

அது எனக்கு நன்றாகவே தெரியும் சுவாமிஜி. இது எனக்கு ஒதுக்கப்பட்ட வேலை என்பதால் மட்டும் நான் இங்கே வரவில்லை. இந்த மாதிரியான அக்கிரமங்களைத் தண்டிக்காமல் போனால், அவர்களுக்கு மேலும் நிறைய அக்கிரமங்களைச் செய்யும் தைரியம் வந்துவிடும். இனியும் நிறைய பேர் பாதிக்கப்படுவார்கள். அதைத் தடுக்க யாராவது எதாவது செய்து தானே ஆக வேண்டும். ஒரு நல்ல குடிமகனாகவும் இந்தப் பொறுப்பை உணர்கிறேன்.”  

 

முக்தானந்தா அவனைக் கனிவோடு பார்த்தார்.  அவனைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள் என்று அவருக்குத் தோன்றியது. அவருக்கு எதற்கு வியப்பதென்று தெரியவில்லை. பரசுராமன், அவருடைய ஏவல் சக்திகள், இறந்த பெண்ணின் ஆவியிடம் இருந்து பெற்ற தகவல். ஷ்ரவனின் உபதேச மந்திரத்தின் சக்தி என எல்லாமே அவருக்கு அதிசயங்களாகத் தான் தோன்றின. சொன்னது ஷ்ரவனாக இருப்பதால் தான் இதையெல்லாம் அவருக்கு நம்ப முடிந்தது. வேறு யாராவது வாயிலிருந்து அவர் இதைக் கேட்டிருந்தால் கற்பனை கலந்திருப்பதாகத் தான் நினைத்திருப்பார். மேலும் பாண்டியன் தாயத்து கட்டிக் கொண்டிருப்பது இன்னொரு அசைக்க முடியாத நிரூபணம். சாதாரணமான யாரும் நிகழ்த்த முடிந்த அதிசயம் அல்ல அது... 

 

ஷ்ரவன் கேட்டான். ”சுவாமிஜி. நீங்கள் ஒருவார காலமாக ஒட்டுக் கேட்டபடி நின்றார்கள், கண்காணித்தார்கள் என்று சொன்னீர்கள். ஆனால் சைத்ரா மாதக் கணக்கில் சிறைப்பட்டிருக்க வேண்டுமே.”

 

இருக்கலாம் ஷ்ரவன். ஆனால் யோகாலயத்தில் குற்றவாளிகள் எப்போதும் தனியாக எங்காவது அடைக்கப்படுவார்கள் என்பதே என் அனுபவம். அடைக்கப்படும் கட்டிடமே வேறு கட்டிடமாக இருக்கும். யாரும் அண்ட முடியாதபடியும், சென்று பேச முடியாதபடியும் ஒரு தனிமைச்சிறையில் அவள் அடைக்கப்பட்டு இருக்கலாம். நீ சொன்ன 206 ஆம் அறையைக் கூட அவர்கள் கண்காணித்தது அவளையாக இருக்காது. அவள் அறையில் அவளுடன் தங்கியிருந்த மற்றவர்களையாக இருக்கும். அவர்கள் அவளைப் பற்றி எதாவது பேசுகிறார்களா என்றும், அவர்களுக்கு எத்தனை தெரியும் என்பதை அறியக்  கண்காணித்திருப்பார்கள். அப்படி அவர்கள் பேசுவதைக் கேட்டு, அவர்களாலும் பிரச்சினை வருமென்றால் அவர்களையும் அப்படி சிறைப்படுத்தி இருப்பார்கள்...”

 

ஷ்ரவனுக்கு அவர் சொல்வது சரியாக இருக்கலாம் என்று தோன்றியது.

 

முக்தானந்தா தொடர்ந்து சொன்னார். “யோகாலயத்தில் அலறல் சத்தம் கேட்பது மிக அபூர்வம். ஏதாவது பிரச்சினை என்றால் ஆள் நடமாட்டம் தான் அதிகமிருக்கும். அதுவும் பாண்டியன் இருக்குமிடத்திற்கு அருகில் தான் அதிகமிருக்கும். அதை வைத்துத் தான் ஏதோ பிரச்சினை ஆகியிருக்கிறது என்பது தெரியவரும். மற்றபடி அமைதியாகத் தான் இங்கே எல்லாம் நடக்கும்.”

 

ஷ்ரவன் கேட்டான். “சைத்ராவுடன் தங்கியிருந்த பெண் துறவிகள் யார் என்று கண்டுபிடித்து விட்டால், அவர்களைத் தொடர்பு கொண்டு விசாரிக்க ஏதாவது வழியிருக்கிறதா?”

 

முக்தானந்தா சொன்னார். “இல்லவே இல்லை. ஒருவேளை கொல்லப்பட்டது ஆண் துறவியாக இருந்தாலுமே கூட நீ அப்படி, கூட இருந்தவர்களைக் கண்டுபிடித்து விசாரிக்கும் வாய்ப்பு கிடையாது. நீ யாரையுமே சாதாரணமாய் சந்தித்து ஓரிரண்டு வார்த்தைகளுக்கு அதிகமாகப் பேச்சுக் கொடுக்கவே வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கையில், சந்திக்கவோ, ஓரிரண்டு வார்த்தைகள் பேசவோ கூட வாய்ப்பில்லாத பெண் துறவிகளிடம் விசாரிப்பதற்கு வாய்ப்பு சுத்தமாக இல்லை.”

 

யோகாலயத்தில் அவர்களுடைய எந்த ரகசியமும் வெளியே போகவே முடியாத சூழலை எந்த அளவு கச்சிதமாக அவர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை ஷ்ரவன் புரிந்து கொண்டான். மூன்று அறை தள்ளி இருக்கும் துறவிக்கு என்ன நடக்கிறது என்பதைக் கூட ஒருவர் அறிந்து கொள்வது மிகச் சிரமம் தான். அதனால் தான் இங்கிருந்து வெளியே போகிறவர்களுக்குக் கூட சொல்ல அதிகம் இருப்பதில்லை. சொல்லும்படியாக முக்கியமான எதையாவது தெரிந்து வைத்திருப்பவர்கள் இங்கிருந்து உயிரோடு வெளியேறுவதில்லை....

 

ஷ்ரவன் கேட்டான். “சுவாமிஜி, சைத்ரா இங்கே ஒரு யோகியை எப்படியோ பார்த்திருக்கிறாள். அது எப்படி நிகழ்ந்திருக்கும்?”

 

முக்தானந்தா சொன்னார். “இங்கே ஒரே ஒரு யோகிக்குத் தான் இடமிருக்கிறது ஷ்ரவன். அது பிரம்மானந்தா. வேறொரு யோகிக்கு யோகாலயத்தில் அனுமதியும், அங்கீகாரமும் இல்லவே இல்லை.”

 

உண்மையான யோகிக்கு அங்கீகாரம் அவசியமும் இல்லையே சுவாமிஜி. அதனால் அப்படி ஒரு யோகி எப்போதாவது இங்கே வந்து போயிருக்கலாமோ?”

 

முக்தானந்தா யோசித்து விட்டுச் சொன்னார். “அப்படி எதுவும் இங்கே நடந்ததாய் எனக்கு நினைவில்லை. அப்படி ஒரு அதிசயம் இங்கே நடந்திருந்தால் அந்த யோகியைச் சந்திக்கும் பாக்கியத்தை நான் தவற விட்டு விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.... பார்வைக்குப் படும்படியாக நிறைய யோகிகள் தற்காலத்தில் நடமாடிக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. அப்படி அபூர்வமாய் இருக்கும் ஓருசிலர் பற்றி நீ சொன்ன பரசுராமனுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டுமே ஷ்ரவன். அவரே ஒரு யோகியைப் போன்றவர் தானே?”

 

நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் பரசுராமனை யோகி என்றழைப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர் தன்னை யோகி என்று சொல்லிக் கொள்வதில்லை. ’எப்போதும், எதிலும் சமநோக்குடனும், மாறாத அமைதியுடனும் இருப்பவனே யோகிஎன்கிறார் அவர். அது தனக்கு சாத்தியப்படுவதில்லை என்பதையும் அவர் வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறார். அவர் தன் சக்தியால் அந்த யோகி எங்கிருக்கிறார் என்பதை அறிய முற்பட்ட போது ஒரு தோட்ட சூழ்நிலை தெரிவதாகச் சொன்னார். சைத்ரா இங்கே தோட்ட வேலையில் நிறைய நாட்கள் இருந்திருக்கிறாள்...”

 

ஷ்ரவன் சுட்டிக் காட்டியதையும் முக்தானந்தா யோசித்துப் பார்த்தார். ஆனாலும் அப்படி ஒரு நிகழ்வு நடந்த சூழல் அவருக்கு நினைவுக்கு வரவில்லை.

 

ஷ்ரவன் மெல்ல பேராசிரியர் சிவசங்கரனைப் பற்றிச் சொன்னான். அவர் பிரம்மானந்தா பற்றிச் சொன்னதையும், அவர் யோகி என்று சுட்டிக் காட்டியவரை பிரம்மானந்தா சென்று சந்தித்ததையும் சொன்னான். அதன் பின் பிரம்மானந்தா சிவசங்கரனைச் சென்று சந்திக்கவில்லை என்றும், பொது இடங்களில் பார்க்க நேர்ந்தாலும் கண்டு கொள்வதில்லை என்றும் அவன் சொன்ன போது முக்தானந்தா புன்னகைத்தார். 

 

அவர் சொன்னார். “அந்த யோகியைச் சந்தித்து தான், அந்த ஆள் சொல்லும் அளவுக்கு இல்லை என்று எங்களிடம் பிரம்மானந்தா சொன்னது போல் நினைவு இருக்கிறது. பிரம்மானந்தாவுக்கு சிவசங்கரனும், பரசுராமனும் சொல்லும் யோகி மீது மதிப்பு எதுவும் கிடையாது. எல்லா நேரங்களிலும் சமநோக்கும், மாறாத அமைதியும் அவரைக் கவரவில்லை. நீ யோகியின் சுயசரிதை படித்து இருக்கிறாய் அல்லவா? அந்தப் புத்தகத்தில் வருவது போல் சக்தி வாய்ந்த யோகிகள் மேல் தான் அவருக்கு ஆரம்பத்திலிருந்தே ஈர்ப்பு இருந்தது. அது போன்ற ஆட்களைத் தான் அவர் மதித்தார், விரும்பினார். தானும் அது போல் ஆகி எல்லோரையும் பிரமிக்க வைக்கத் தான் அவர் ஆசைப்பட்டார். அது நிஜத்தில் முடியாமல் போகவே கற்பனையாய் பல கதைகளையும் சொல்ல ஆரம்பித்தார். சதுரகிரியில் மெய்ஞானம், சுந்தரமகாலிங்கம், கோரக்கர், பதஞ்சலி கதைகள் எல்லாம் அப்படி ஆரம்பித்தவை தான். அதை நம்பி ஏமாற மக்கள் தயாராக இருக்கையில் அவரைச் சொல்லித் தப்பில்லை.”

 

ஷ்ரவன் சிரித்துக் கொண்டே சொன்னான். “அதையே தான் சிவசங்கரனும் சொன்னார். ஒருவனுடைய பேச்சை வைத்துப் பார்க்காமல், அவன் எப்படி வாழ்கிறான் என்பதை வைத்துப் பார்த்தால் யாரும் ஏமாற வேண்டியதில்லை என்று சொன்னார்….”   

 

முக்தானந்தா சொன்னார். “உண்மை தான். ஆனால் ஏமாற்றும் வாய்ப்புகள் இல்லாத போது எல்லாருமே ஒழுங்காகத் தான் வாழ்கிறார்கள் ஷ்ரவன். பணம், புகழ், அதிகாரம் எல்லாம் வந்த பின் தான் பெரும்பாலானவர்கள் மாற ஆரம்பிக்கிறார்கள். அதற்கு முன் அவர்கள் சொல்லும் வார்த்தைகளை வைத்துத் தான் நம்ப வேண்டியிருக்கிறது. அப்படி நம்பி ஏமாந்தவன் தான் நான். அப்படி ஏமாறாமல் இருந்திருந்தால் நான் இங்கேயே வாழும் துர்ப்பாக்கியத்தைத் தவிர்த்திருக்கலாம்...”

 

அவர் வருத்தத்துடன் சொன்னதைக் கேட்கையில் ஷ்ரவனுக்கும் வருத்தமாய் இருந்தது. சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு ஷ்ரவன் சொன்னான். “அந்த யோகியும் தோட்டக்காரராய் இருந்தவர். சைத்ரா சொல்லும் யோகியும் தோட்ட சூழலில் இருப்பதாக உணர்வதாக  பரசுராமன் சொன்னதால் இரண்டும் ஒரே நபர் என்று எனக்குத் தோன்றுகிறது சுவாமிஜி. அப்படி ஒரே நபர் என்றால் பிரம்மானந்தா ஏதாவது ஒரு காரணத்திற்காக ஒரு முறை அவரை இங்கே தருவித்திருக்கவும், சைத்ரா அந்த சந்தர்ப்பத்தில் அவரைச் சந்தித்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறதல்லவா?”


(தொடரும்)

என்.கணேசன்