சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 3, 2020

இல்லுமினாட்டி 79


னோகர் கொல்லப்பட்டது விஸ்வம் பழைய சக்திகளையும், ஆட்களையும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டான் என்பதை எர்னெஸ்டோவுக்குத் தெரியப்படுத்தியது. இந்த அளவு வேகமாக விஸ்வம் பலம் பெறுவான் என்பதை அவர் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. முந்தைய அனுமானங்களுக்குச் சிறிதும் பொருந்தாதபடி எல்லாம் நடக்கிறதே, எங்கே தவறு செய்தோம் என்று அவர் யோசிக்க ஆரம்பித்தார். அவருக்குப் பதில் எதுவும் புலப்படவில்லை. திடீரென்று இதற்கான பதில் அமானுஷ்யனிடம் கிடைக்கலாம் என்று அவருக்கு தோன்றியது. அவனிடம் பேசுவதற்கு முன் இம்மானுவலையும், ஜான் ஸ்மித்தையும் கூட வரவழைத்தார்.

அவர்கள் வந்த பின் அவர் அக்ஷயிடம் மனோகர் கொல்லப்பட்ட விதத்தைத் தெரிவித்து விட்டுக் கேட்டார். “ஜான் ஸ்மித் நரம்பியல் நிபுணர் ஒருவரையும் கலந்தாலோசித்து விட்டு ஓரளவு சக்தியைத் தான் விஸ்வம் டேனியலின் உடம்பில் பயன்படுத்த முடியும், அது சாத்தியமாவதற்கும் குறைந்த பட்சம் ஏழெட்டு மாதமாவது ஆகும் என்று சொன்னார். விஸ்வம் எதிலும் வேகமும், உறுதியும் கொண்டவன் என்பதால் ஏழெட்டு மாதங்களை ஆறு மாதமாக நாங்களே குறைத்துக் கொண்டோம். ஆனால் எங்கள் கணக்குகள் எல்லாம் தவிடு பொடி ஆக்கி விட்டு விஸ்வம் இவ்வளவு சீக்கிரம் இயங்க முடிந்தது எப்படி?”

அக்ஷய் அவசரப்பட்டு எந்தப் பதிலையும் அளிக்காமல் முதலில் ஜான் ஸ்மித்தும், அந்த நரம்பியல் நிபுணரும் எதை வைத்து அந்த முடிவை எட்டினார்கள் என்பதை அறிந்து கொள்ள விரும்பினான். ஜான் ஸ்மித் முதலில் ம்யூனிக் நகர மருத்துவமனையில் இருந்த ஸ்கேன் ரிப்போர்ட்களைக் காண்பித்து விளக்கினார். பின் அந்த திபெத்திய யோகியைச் சந்தித்த போது அவர் என்னவெல்லாம் சொன்னார் என்பதிலிருந்தே ஆரம்பித்து பின் அந்த நரம்பியல் நிபுணரைச் சந்தித்துப் பேசியது வரை விவரித்துச் சொன்னார்.

எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக் கொண்ட பின் அக்ஷய் சொன்னான். “நீங்கள் வந்த முடிவு தவறல்ல

எர்னெஸ்டோ கேட்டார். “பின் எப்படி இவ்வளவு சீக்கிரம் விஸ்வம்...?”

அக்ஷய் பொறுமையாக விளக்கினான். “முதலாவது விஸ்வத்தின் திறமையை நீங்கள் நன்றாய்ப் புரிந்து கொள்ள வேண்டும். அவன் கற்ற ஒவ்வொரு வித்தையும் கச்சிதமாகக் கற்றவன். ஒவ்வொன்றிலும் நூறு சதவீதம் நிபுணத்துவம் பெற்றே விட்டவன். எதிலும் ஒன்றிரண்டு சதவீதம் கூட குறையோடு முற்றுப்புள்ளி வைத்தவன் அல்ல. அதனால் ஒவ்வொரு செயலிலும் குறைந்த பட்ச சக்தியையே செலவழிக்கத் தெரிந்தவன். நீங்கள் சொல்வதை எல்லாம் வைத்துப் பார்க்கையில் அவன் பழைய உடலில் இருக்கும் போதே இது அவன் அவனுடைய இயல்பாக மாறியிருக்க வேண்டும். இந்த உடலுக்கு வரும் போது அவன் மூளையின் ஒவ்வொரு செல்லிலும் பதிவாகி இருந்த நிபுணத்துவத்தை அப்படியே இந்த மூளையிலும் அவன் மாற்றிக் கொண்டிருக்கிறான். இது ஒரு பிரம்மாண்ட சாதனை தான். ஆனால் அதை அவன் சாதித்திருக்கிறான். டேனியல் என்ற போதை மனிதனின் மூளையில் அவனால் சாதிக்க முடிந்ததை  நரம்பு மண்டலத்தில் சாதிக்க முடியவில்லை. அது சரி செய்ய முடியாத அளவு பலவீனமாக இருந்தது. மூளையில் பழைய டேட்டாக்களைப் பதிவு செய்த மாதிரி அவன் பழைய உடல் நரம்பு சக்தியை இதில் மாற்ற முடியவில்லை. அது ஒன்று மட்டும் முழுவதுமாகவே அந்தந்த உடல் மட்டுமே சம்பந்தப்பட்டது என்பது அவனுக்குத் தடையாகி விட்டது.   ஆனால் நீங்கள் யூகித்த மாதிரி அதை அவனால் எந்த அளவு சரி செய்ய முடியுமோ அந்த அளவு சரி செய்ய அவன் கடுமையான முயற்சிகள் எடுத்துக் கொண்டிருப்பான். இது வரை சுமார் பத்து சதவீதமாவது சரி செய்து முடித்திருப்பான்.”

அவர்கள் மூவரும் அவன் வார்த்தைகளில் முழுக் கவனமாக இருந்தார்கள். அவன் எளிமையாகவும் தெளிவாகவும் சொன்ன விதம் அவர்களுக்குப் பிடித்திருந்தது. புரிந்து கொள்ளவும் முடிந்தது.

அக்ஷய் தொடர்ந்தான். “அடுத்தவர் மனதில் இருப்பதை அறியவும், ஆதிக்கம் செலுத்தவும் முடிந்த அபூர்வ சக்தி விஷயத்தில் நரம்பு மண்டல சக்தி செலவாவது எந்த மனிதரிடம் பிரயோகிக்கிறோம் என்பதைப் பொருத்து ளைப் பொருத்து மாறும். நாம் மிக நேசிப்பவர்கள், முன்பே நாம் ஆக்கிரமிக்க நமக்கு அனுமதி தந்தவர்கள், நாம் அடிக்கடி ஆக்கிரமித்துப் பழகியவர்கள் போன்றவர்கள் விஷயத்தில் நமக்கு நிறைய சக்தி தேவைப்படாது. அதே போல் எந்த விதமான பாதுகாப்போ, எச்சரிக்கையோ, எதிர்ப்போ இல்லாத எளியவர்களின் மனதை ஆக்கிரமிக்கவும், தெரிந்து கொள்ளவும் கூட நமக்கு நிறைய சக்தி தேவைப்படாது. ஆனால் முதலிலேயே மனதில் நமக்கு எதிர்ப்பு இருக்கிறவர்கள், மனவலிமை மிக்கவர்கள், சக்தி படைத்த சாதுக்கள், யோகிகள் மனதை எல்லாம் ஆக்கிரமிக்க நிறைய சக்தியை நாம் பிரயோகிக்க வேண்டி இருக்கும். இதற்கும் ஒரு கணக்கைச் சொன்னால் புரியும் என்றால் மனதில் நமக்கு எதிர்ப்பு வைத்திருப்பவர்கள் விஷயத்தில் இரட்டிப்பு சக்தி தேவைப்படும். மனவலிமை மிக்கவர்கள் விஷயத்தில் நான்கைந்து மடங்கு தேவைப்படும். சக்தி படைத்த சாதுக்கள் யோகிகள் விஷயத்தில் நாற்பது ஐம்பது மடங்கு தேவைப்படும்....”

அவர்கள் பிரமிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இத்தனை விஷயங்கள், சூட்சுமங்கள் இந்த சக்தி பிரயோகத்தில் இருக்கின்றன என்பது அவர்களுக்குப் புதுத்தகவல்களாகவும், ஆச்சரியமாகவும் இருந்தன.  

அக்ஷய் சொன்னான். “மனோகர் அவனுடைய வேலைக்காரன். அவன் மனதை விஸ்வம் எத்தனையோ முறை ஆக்கிரமித்திருப்பான். மனோகரும் அவன் ஆக்கிரமிக்க மானசீக அனுமதி மட்டுமல்லாமல் விருப்பமே வைத்திருக்கலாம். அவன் மீண்டும் தொடர்பு கொள்ள மாட்டானா என்று காத்துக் கொண்டிருக்கலாம். அதனால் அவன் மனதை ஆக்கிரமிக்கவும், தெரிந்து கொள்ளவும் விஸ்வத்துக்கு குறைந்தபட்ச சக்தி தான் செலவாகி இருக்கும். அதை நான் சொன்னபடி ஏற்கெனவே விஸ்வம் சேர்த்து வைத்திருப்பான். அதிலும் சிறுபகுதியைத் தான் இதற்குச் செலவு செய்திருப்பான். மனோகரை ஆக்கிரமிக்கும் போது அவன் உடலில் இருந்த சிப் தெரிந்திருக்கும். அதற்குப் பிறகு அவனைப் பயன்படுத்துவது ஆபத்து என்று புரிந்து கொண்டு அவனைக் கொல்ல முடிவெடுத்திருப்பான். அவ்வளவு தான். அதனால் இப்போதைக்கு நீங்கள் அவன் பழைய வலிமை அடைந்து விட்டான் என்றெல்லாம் பயப்பட வேண்டியதில்லை.”

அவன் சொன்ன தகவல்கள் மூவருக்கும் பெரும் நிம்மதியைத் தந்தது. எதுவும் எல்லை மீறிப் போய்விடவில்லை.

எர்னெஸ்டோ கேட்டார். “அந்த வாடகைக் கொலையாளியை எல்லாம் அவன் எப்படி தொடர்பு கொண்டிருப்பான்? அதற்கு அவன் கூட்டாளி உதவி இருப்பானா?”

அக்ஷய் சொன்னான். “உதவியிருக்கலாம். ஆனால் அதற்கு அவசியம் இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். அவன் மூளையில் சேகரித்து வைத்திருந்த டேட்டாக்களில் அவன் அக்கவுண்ட் நம்பர்கள், பாஸ்வர்டுகள், ஆட்கள் விவரங்கள் அடங்கியிருக்கும். அதை அவன் வெற்றிகரமாக டேனியல் மூளையிலும் மாற்றியிருப்பான் என்பதால் தெரிந்த பழைய ஆட்களைத் தொடர்பு கொள்ளவோ, அக்கவுண்டில் இருந்து பணம் அனுப்பவோ அவன் எந்தக் கஷ்டமும் பட்டிருக்க மாட்டான்

அவர்கள் மூவருக்கும்என்ன மனிதனவன்?” என்ற பிரமிப்பு மறுபடி வந்து தங்கியது.

ஜான் ஸ்மித் பழைய நினைவுகள் அலைபாயச் சொன்னார். “நான் இது வரை இந்தக் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை பற்றித் தெரிந்த நிறைய ஆட்களிடம் பேசி விட்டேன். எல்லாரும் திட்டமிட்டு சிறிது நேரம் போய் வருகிற சக்தி படைத்தவர்கள் பற்றி மட்டுமே பேசினார்கள். யாருமே இப்படிக் கிடைத்த உடலில் போய்ச் சேர்ந்து கொள்ள முடியும் என்று சொல்லவில்லை. அது முடியுமா என்று கேட்ட போது கூட சந்தேகத்துடன் தான் பேசினார்கள். விஸ்வம் அதையும் சாதித்து விட்டு இந்த ஆட்டம் ஆடுகிறானே என்று தான் ஆச்சரியமாக இருக்கிறது. அதைப் பற்றிக் கேட்ட போது திபெத்திய யோகி அதற்கு அவனுடைய கர்மாவும், சம்பந்தப்பட்டவர்கள் கர்மாவும் தான் காரணமாக இருக்கும் என்று சொன்னார். இத்தனை பேர் கர்மாவும் எதில் கொண்டு போய் முடியுமோ?”

(தொடரும்)
என்.கணேசன்

4 comments:

  1. The greatness of your novels is - we only get a thrilling and interesting story we get a lot of knowledge. God bless you sir.

    ReplyDelete
    Replies
    1. I mean - We not only get a thrilling and interesting story, we also get a lot of knowledge. Plus a lot of positive vibration.

      Delete
  2. சூப்பர் சார்..

    ReplyDelete
  3. அப்போ இன்னும் விஸ்வம் பழைய நிலையை எட்டவில்லையா? இருந்தாலும் அவனால் அதிகபட்சம் எது முடியுமோ? அதை செய்கிறான்.

    ReplyDelete