சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 26, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 35


ரகதத்தை வீடு வரை தொடர்ந்து வந்து அந்தப் பகுதியை ஆராய்ந்து விட்டுப் போன மர்ம மனிதன் விதி தனக்கு சாதகமாக இருப்பதாக எண்ணி சந்தோஷப்பட்டான். இல்லா விட்டால் அந்த வீட்டின் எதிர் வீட்டிலேயே “To Let”  பலகை தொங்கிக் கொண்டிருந்திருக்காது. விசாரித்ததில் அந்த வீட்டில் குடியிருந்த ஒரு பெரிய குடும்பம் பத்து நாட்கள் முன்பு காலி செய்து விட்டதாகவும் இப்போது வீட்டின் கீழ் பகுதியில் மட்டும் ஒரு சிறிய குடும்பம் குடிவரப் போவதாகவும், இரண்டு அறைகள் மட்டுமே உள்ள மாடிப் பகுதி காலியாக இருக்கிறதென்றும் தெரிய வந்தது.
                                        
மறுநாள் மாலை வரை அவன் காத்திருந்து பிறகு அந்தப் பகுதி புரோக்கர் ஒருவனை சந்தித்தான். ஒரு சினிமாவுக்கு கதை வசனம் எழுத தனிமையைத் தேடி வந்திருக்கும் எழுத்தாளனாக தன்னை அவன் புரோக்கரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டான். கோயமுத்தூரில் அந்தப் பகுதியில் நடப்பதாக ஒரு கதை எழுதுவதாகவும், அதை அந்தப் பகுதியிலேயே இருந்து கொண்டு எழுதினால் இயல்பாக இருக்கும் என்று எண்ணுவதாகவும் சொன்னான். அதற்கு ஏற்ற ஒரு வீடு வாடகைக்கு வேண்டும் என்று சொன்ன அவன் அந்த வீடு எப்படி இருக்க வேண்டும் என்று வர்ணித்து விட்டு வாடகை எவ்வளவாக இருந்தாலும் பரவாயில்லை என்று அவன் சொன்ன போது அந்த புரோக்கர் ஆச்சரியப்பட்டான்.

இருபது வருடங்களாக அந்தத் தொழிலில் அந்த புரோக்கர் இருக்கிறான். ஆட்கள் தேடி வரும் வகையான வீடுகள் பெரும்பாலும் காலி இருப்பதில்லை. காலியாக இருக்கும் வீடுகள் ஆட்களுக்குப் பிடிப்பதில்லை. தப்பித் தவறி இரண்டும் பொருந்தி விட்டாலோ வாடகை ஒத்துப் போவதில்லை. இத்தனையையும் மீறி தொழில் நடக்கிறது என்றால் பேச்சுத் திறமையால் இரண்டு சாராரில் ஒரு சாராரை தங்கள் எதிர்பார்ப்பைக் குறைத்து விடச் செய்வதன் மூலம் தான். ஆனால் முதல் முறையாக காலியாக, தயாராகவும் இருக்கிற ஒரு வீட்டை ஒரு ஆள் தேடிக் கொண்டு வந்திருக்கிறான்.

நீங்கள் சொன்ன மாதிரியே ஒரு வீட்டில் மாடி போர்ஷன் காலி இருக்கிறது சார். இப்போது கீழ் போர்ஷனில் ஒரு சின்ன குடும்பம் வாடகைக்கு வரப் போகிறது.... வீட்டுக்காரர் பக்கத்து வீட்டில் தான் இருக்கிறார். அதுவும் அவர் வீடு தான். எச்சில் கையால் காக்காயை ஓட்ட மாட்டார். அவ்வளவு தாராளமான ஆள்... பேச்சு மட்டும் சர்க்கரையாய் இருக்கும்.... வாடகை நாலாயிரம் சொல்கிறார். பரவாயில்லையா?

அந்த மர்ம மனிதன் தலையசைத்தான். புரோக்கர் மகிழ்ச்சியுடன் அந்த மர்ம மனிதனை அக்‌ஷய் வீட்டுக்கு எதிர் வீட்டுக்கு அழைத்துப் போனான். அப்போது இருட்டி இருந்தது. வெளியிலேயே நின்று மாடி போர்ஷனைக் காண்பித்து விட்டுச் சொன்னான். “இது தான் வீடு”. 

வீட்டுக்காரரிடம் சாவி வாங்கிக் கொண்டு வர புரோக்கர் போன போது அந்த மர்ம மனிதனின் பார்வை அக்‌ஷய் வீட்டின் மீதே இருந்தது. வீட்டின் வெளியே யாரும் தெரியவில்லை..... 

புரோக்கர் சாவியோடு வந்தான். மாடி போர்ஷனைத் திறந்து காட்டினான். மர்ம மனிதன் வீட்டை மேலோட்டமாகவே பார்த்தான். பின் ஜன்னல் அருகே வந்து நின்று கொண்டான். ஜன்னல் வழியே எதிர் வீடு தெளிவாகத் தெரிந்தது. எதிர் வீட்டு ஹாலின் ஜன்னல் பெரிதாக இருந்தது. அது திறந்தே இருந்தது. அங்கு ஹாலில் நடப்பது இங்கிருந்து தெளிவாகவே தெரிந்தது. கையில் ஒரு பைனாகுலரும் இருந்து விட்டால் நேரில் பார்ப்பது போலவே பார்க்க முடியும்.... தற்போது அந்த ஹாலில் ஒரு சிறுவன் மட்டும் தான் தெரிந்தான். அவன் ஏதோ ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதிக் கொண்டிருந்தான்.....

புரோக்கர் அருகில் வந்து நின்றான். அந்த மர்ம மனிதனுக்கு எதிர் வீட்டைப் பற்றி அவனிடம் விசாரிக்கலாமா என்று ஒரு கணம் தோன்றினாலும் பின் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான். மூன்று செவிக்கு எட்டிய செய்தி மூடு மந்திரமாகாது!

“வீடு பிடித்திருக்கா சார்?புரோக்கர் கேட்டான்.

மர்ம மனிதன் பிடித்திருப்பதாகச் சொன்னான். புரோக்கர் அவனை வீட்டுக்காரரிடம் அழைத்துப் போனான்.

வாடகைக்கு வரப் போகும் ஆள் சினிமாக்காரன் என்று தெரிந்த பிறகு முதலில் புரோக்கரிடம் சொல்லி இருந்த நான்காயிரம் வாடகை குறைவாய் போனதாய் வீட்டுக்காரர் மனதிற்குள் அங்கலாய்த்துக் கொண்டார். சினிமாக்காரர்களுக்கு நான்காயிரம் எல்லாம் பிச்சைக்காசாயிற்றே, அதிகம் சொல்லி இருக்கலாமே என்று தோன்ற ஆரம்பித்தது. இது வரை வந்து பார்த்து விட்டுப் போன ஆட்கள் அந்தப் போர்ஷனுக்கு மூன்றாயிரத்துக்கு மேல் தருவது அதிகம் என்று சொல்லி விட்டுப் போனது எல்லாம் அவருக்கு மறந்து போனது.

‘எத்தனை மாதம் இருப்பீர்கள்?என்று மர்ம மனிதனைக் கேட்டார்.

“அதிக பட்சம் மூன்று மாதம்

“குறைந்த பட்சம் ஆறு மாதமாவது இருக்கிற ஆள் வந்தால் பரவாயில்லை என்று நினைக்கிறேன்.....வீட்டுக்காரர் இழுத்தார்.

மூன்று மாதத்தில் காலி செய்தால் கூட ஆறு மாத வாடகை கொடுத்து விட்டே போகிறேன்

வீட்டுக்காரருக்கு அதற்கு மேல் அந்த சினிமாக்காரனை எதுவும் கேட்டுத் தெரிந்து கொள்கிற அவசியம் இருப்பதாய் தோன்றவில்லை.
   
எப்போது குடி வருகிறீர்கள்?என்று கேட்டார்.

“நாளைக்கே வருகிறேன்என்றான் அந்த மர்ம மனிதன்.


க்‌ஷயை அதிகாலைப் பட்சிகளின் ஒலி எழுப்பியது. கண்விழித்தான். மைத்ரேயன் இன்னும் அமைதியான உறக்கத்தில் தான் இருந்தான். குளிர் சற்று அதிகமாகவே இருந்ததால் அவன் தாய் தந்திருந்த சால்வையை நன்றாகப் போர்த்திக் கொண்டு அக்‌ஷயின் மடியில் படுத்திருந்தான். அக்‌ஷய் தூங்குகிற அந்தச் சிறுவனையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தலைமுடியை கிட்டத்தட்ட நுனி வரை வெட்டி இருந்த விதம் புத்தபிக்குச் சிறுவன் வேடத்துக்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்தி இருந்ததாக அக்‌ஷய் எண்ணிய அதே கணம் அந்த எண்ணம் அவனுக்கே வேடிக்கையாக இருந்தது. புத்தரின் மறு அவதாரம் என்று பலராலும் நினைக்கப்படுகிற அந்தச் சிறுவனின் இயல்பான உடையே இதுவாக அல்லவா இருக்க வேண்டும், இதை ஏன் வேடம் என்று நினைக்கிறோம் என்று அவன் தன்னைக் கடிந்து கொண்டான். 

அக்‌ஷய் அவனை மெல்லத் தட்டி எழுப்பினான். உடனே மைத்ரேயன் விழித்துக் கொண்டான்.

அக்‌ஷய் அவனிடம் சொன்னான். “முடிந்த வரை சீக்கிரமாகவே நாம் இங்கிருந்து போய் விடுவது நல்லது.

மைத்ரேயன் சரியென்று தலையசைத்தான். அக்‌ஷய் அவனிடம் கேட்டான். இப்போது நாம் இங்கிருந்து எப்படிப் போவது நல்லது என்று முடிவு செய்ய வேண்டும். பஸ், மினிபஸ், ஜீப் மூன்றில் பெரும்பாலும் நீ எதில் போவாயோ அதில் பயணம் செய்யாமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன். அதில் போனால் உன்னை அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளவும், நம்மை விசாரித்துக் கொண்டு வருபவர்களுக்கு அதைச் சொல்லி விடவும் வாய்ப்பு இருக்கிறது...

மைத்ரேயன் சொன்னான். “நான் எப்போதும் மினிபஸ் அல்லது பஸ்ஸில் தான் போவேன்.

முன்பே சேடாங் நகரப் பகுதிப் போக்குவரத்தைப் பற்றி முழுவிவரங்களையும் அக்‌ஷய் படித்து அறிந்திருந்தான். மைத்ரேயனை அடையாளம் கண்டுபிடிக்கும் சாத்தியமுள்ள பஸ், மினிபஸ் பயணங்களைத் தவிர்த்து விட அக்‌ஷய் தீர்மானித்தான். மிஞ்சி இருப்பது ஜீப் தான். அப்பகுதியில் ஜீப் பெரும்பாலும் தனியார் வாடகைக்கு அமர்த்திக் கொண்டு போகும் வாகனமாகவே இருந்தது. அதில் பயணிக்க கட்டணமும் அதிகம். சுற்றுலாப் பயணிகள் தனியாக ஏற்பாடு செய்து கொண்டு போகும் ஜீப்களில் இடம் காலியாக இருந்தால் அவர்கள் சம்மதத்துடன் வழியில் மற்ற பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்வதும் உண்டு.  அதிலும் ஆபத்து இருக்கத் தான் இருக்கிறது. குறைவான ஆட்களுடன் போகிற வாகனங்களில் ஒருவரை ஒருவர் அதிகம் கவனிக்கவும், நினைவு வைத்திருக்கவும் சாத்தியம் உண்டு. அதைத் தவிர்க்க முடியாது....

மைத்ரேயனிடம் அக்‌ஷய் சொன்னான். “ஜீப்பிலேயே போவோம்.... எங்கே போகலாம் என்று நீ சொல்

“சம்யே மடாலயம் போகலாம்.என்று உடனடியாக மைத்ரேயன் பதில் அளித்தான்.  பத்மசாம்பவாவின் உதவியால் திபெத்தில் கட்டப்பட்ட முதல் புத்த மடாலயம்.... சுற்றுலாத் தலங்களில் முக்கியமான ஒரு இடம்...

அக்‌ஷய் சந்தேகத்துடன் கேட்டான். “அது சுற்றுலாப் பயணிகள் அதிகம் போகும் இடமல்லவா? அங்கு நம்மால் மறைவாய் இருக்க முடியுமா?

முடியும் என்பது போல் மைத்ரேயன் தலையசைத்தான். அதற்கு மேல் அவன் விளக்க முற்படவில்லை. அக்‌ஷய்க்கு அவனை எந்த அளவு நம்பலாம் என்று தெரியவில்லை. சில சமயங்களில் மந்த புத்திக்காரனாகத் தெரிகிறான். சில சமயங்களில் சாதாரணமாகத் தெரிகிறான். சில சமயங்களில் எல்லாம் அறிந்தவன் போலத் தெரிகிறான். இதில் உண்மையில் இவன் எந்த வகையில் சேர்த்தி?

குன்றின் பின் புறத்திலிருந்து இருவரும் தெருவுக்கு வந்தார்கள். அப்போது நன்றாக விடிந்து விட்டிருந்தது.... 


லீ க்யாங் நினைத்தபடியே அந்த புத்தபிக்குவின் பாஸ்போர்ட்டும், கூட வந்த சிறுவனின் பாஸ்போர்ட்டும் போலி என்பது தெரிந்து விட்டது. அதோடு அவன் திபெத்தில் கேட்டிருந்த முக்கியத் தகவல்கள் அவனுக்கு விரைவாக வந்து சேர்ந்தன. சேடாங் நகர சுற்று வட்டாரத்தில் அந்தக் குறிப்பிட்ட காலத்தில் பிறந்திருந்த குழந்தைகள் ஏழு பேர் மட்டுமே இருந்தார்கள். அவர்கள் யாரும் நீண்ட தூரம் இடமாற்றமும் ஆகவில்லை. அவர்கள் புகைப்படம், குடும்பம் பற்றிய தகவல்கள், தனிப்பட்ட குணாதிசயங்கள் ஆகியவற்றை லீ க்யாங் ஆராய்ந்தான். முடிவில் அந்த ஏழு பேரில் ஆறு பேரை எந்த விதத்திலும் மைத்ரேயனாக இருக்க சாத்தியமில்லாதவர்களாக லீ க்யாங் ஒதுக்கித் தள்ளி விட்டான். ஏழாவது சிறுவனைக் கூட மைத்ரேயன் என்று அவனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அவன் முகத்தில் ஒரு தெய்வீகக் களையோ, உடலில் வழுக்கைத் தலையன் சொன்னது போல புனிதச்சின்னம் இருப்பது போன்றோ தெரியவில்லை என்றாலும் அந்தச் சிறுவன் பற்றி கூறப்பட்டிருந்த சில விசித்திர குணாதிசயங்கள் ஒரு சாதாரண சிறுவனிடம் இருக்க முடியாதவை என்பது நிச்சயம். அவர்களில் ஒருவன் தான் மைத்ரேயன் என்றால் கண்டிப்பாக அந்த ஏழாவது சிறுவனாகத் தான் இருக்க முடியும்....! லீ க்யாங் உடனடியாக அந்தச் சிறுவனின் புகைப்படத்தையும் விலாசத்தையும் வாங் சாவொவிற்கு அனுப்பி வைத்தான்.

(தொடரும்)
என்.கணேசன்

6 comments: