சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, February 23, 2015

வாரணாசியில் நடமாடும் சிவன்!

12 மகாசக்தி மனிதர்கள்


ன்னிடம் அளவற்ற சக்திகள் இருந்தாலும் அதை ஒரு பொருட்டாக த்ரைலங்க சுவாமி நினைத்தவரல்ல. பொருளாசை, புகழாசை, மற்ற ஆசைகள் என அனைத்தையும் துறந்த உண்மையான துறவியாகவே அவர் வாழ்ந்தார். அதிகம் பேசாமல் மௌனமாகவே பெரும்பாலும் கழித்த அவர் பல நேரங்களில் சைகைகளிலேயே மற்றவர்களிடம் தன் கருத்தைத் தெரிவித்து வந்தார்.

த்ரைலங்க சுவாமியைப் பற்றி கேள்விப்பட்டு இராமகிருஷ்ண பரமஹம்சர் அவரைச் சந்திக்க வாரணாசி வந்தார். அப்போது நல்ல வெயில் காலம். த்ரைலங்க சுவாமி கங்கைக் கரையில் சுட்டெரிக்கும் மணலில் படுத்துக் கிடந்தார். செருப்பு இல்லாமல் மணலில் காலை வைக்க முடியாத நிலையில் மற்றவர்கள் இருந்த போது குளுமையில் படுத்திருப்பது போல் த்ரைலங்க சுவாமி இருந்தார். அவரிடம் இராமகிருஷ்ண பரமஹம்சர் சைகையிலேயே பேசியதாக ஒரு சுவாரசியமான சம்பவத்தை த்ரைலங்க சுவாமியின் சீடர்கள் சொல்கிறார்கள்.

இராமகிருஷ்ண பரமஹம்சர் தன் சுட்டு விரலைக் காட்டி பின் அடுத்த விரலையும் காட்டினாராம். அதை, ஆத்மா ஒன்று தான் என்கிற அத்வைதம் சரியா அல்லது பரமாத்மா ஜீவாத்மா என்கிற இருநிலை உள்ள த்வைதம் சரியா என்ற கேள்வியாகச் சொல்கிறார்கள்.

த்ரைலங்க சுவாமி தன் சுட்டு விரலைக் காண்பித்து அடுத்த விரலையும் காண்பித்து கடைசியில் இரு விரல்களையும் சேர்த்துக் காண்பித்தாராம். ஆத்மா ஒன்று தான். ஆனால் பக்தி பாவனையுடன் விலகி நின்று ஜீவாத்மா பரமாத்மாவை வழிபடும் போது ஒன்று இரண்டாகிறது. மறுபடி ஜீவாத்மா, பரமாத்மாவோடு ஐக்கியமாகி விடும் போது மீண்டும் ஒன்றாகி விடுகிறது என்கிற பதிலாக த்ரைலங்க சுவாமியின் சைகையைச் சொல்கிறார்கள்.  

த்ரைலங்க சுவாமியின் தெய்வீக சக்திகளை உணர்ந்திருந்த இராமகிருஷ்ண பரமஹம்சர் அவரை “வாரணாசியின் நடமாடும் சிவன்என்று குறிப்பிட்டுள்ளார். சக்தி அலைகளை உணர்வதில் நிபுணரான இராமகிருஷ்ண பரமஹம்சர் த்ரைலங்க சுவாமியின் இருப்பால் வாரணாசியே தெய்வீக அலைகளில் தோய்ந்து போய் ஜொலிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

சைகையால் பெரிய தத்துவங்களை இராமகிருஷ்ண பரம்ஹம்சர் போன்ற மகான்களிடம் பேசலாம். ஆனால் அந்த தத்துவங்களை சாதாரண லௌகீக மனிதர்களிடம் பேசினால் புரியுமா? த்ரைலங்க சுவாமி ஆன்மிக தத்துவங்களை லௌகீக மனிதரிடம் அபூர்வமாய் பேசிய ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்.

உஜ்ஜயினியின் அரசர் ஒருவர் தன் படகில் வாரணாசிக்கு யாத்திரை வந்திருந்த போது கங்கையில் மிதந்து கொண்டிருந்த த்ரைலங்க சுவாமியைக் கண்டார். அவர் ஒரு யோகி என்று முன்பே கேள்விப்பட்டிருந்த அரசர் அவரைத் தன் படகிற்கு வருமாறு அழைத்தார். த்ரைலங்க சுவாமியும் வந்தார். அரசரிடம் ரத்தினங்கள்  பதிக்கப்பட்ட ஒரு வாள் இருந்தது. அது அவருக்கு வைஸ்ராய் பரிசளித்தது. அதை அவர் தன் மிகப்பெரிய பொக்கிஷமாக நினைத்து பெருமையோடு எப்போதும் தன்னுடனேயே வைத்திருந்தார். அந்த வாளையே த்ரைலங்க சுவாமி பார்க்க  அரசர் அந்த வாளின் முக்கியத்துவத்தைச் சொல்லி அதை எடுத்து த்ரைலங்க சுவாமி கையில் தந்தார். அந்த வாளை வாங்கி ஆராய்ந்த த்ரைலங்க சுவாமி பிறகு திடீரென்று அதை கங்கையில் வீசி எறிந்தார்.

அரசர் அதிர்ந்து போனார். பிறகு அந்த வாளைத் திருப்பித் தருமாறு கெஞ்சிக் கேட்டார். த்ரைலங்க சுவாமி அசையாமல் அமைதியாக அமர்ந்திருக்க அரசர் கோபத்துடன் அவரை மிரட்டிக் கேட்டார். என்னுடைய வாளை உடனடியாகத் தராவிட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன்என்றார்.

த்ரைலங்க சுவாமி கங்கையில் கையை விட்டு இரண்டு வாள்களை எடுத்தார். இரண்டும் ஒரே போல இருந்தன. “இதில் எந்த வாள் உங்களுடையதுஎன்று த்ரைலங்க சுவாமி கேட்டார். இரண்டு வாள்களும் தன்னுடைய வாள் போன்றே இருக்கவே அதில் எது தன்னுடையது என்று கண்டு பிடிக்க முடியாமல் அரசர் திணறினார்.

“உங்களுடையது என்று அவ்வளவு பெரிதாக சொல்லிக் கொள்கிறீர்கள். அதை அடையாளம் காணக் கூட உங்களால் முடியவில்லையேஎன்று த்ரைலங்க சுவாமி கேட்க அரசர் வெட்கத்துடன் தலை குனிந்தார். த்ரைலங்க சுவாமி ஒரு வாளை கங்கையில் எறிந்து விட்டு அரசரிடம் அமைதியாகச் சொன்னார். கர்மா மட்டுமே உன்னுடையது அரசனே. அதன் பலன்கள் மட்டுமே கடைசி வரை உன்னுடன் வரும். இந்த வாள் உட்பட மற்ற எதுவுமே உன்னுடையதல்ல. கடைசி வரை உன்னுடன் வரப் போவதல்ல. நேற்று வைஸ்ராயிடம் இருந்தது. இன்று உன்னிடம் இருக்கிறது. நாளை வேறொருவனிடம் போய் விடக்கூடியது.  அதனால் இது போன்ற பொருள்களைப் பெரிதாக நினைக்காமல் கடைசி வரை உன்னுடன் இருக்கப் போகிற உன் கர்மாவில் கவனமாய் இரு

அரசர் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இந்த அறிவுரை அந்த அரசருக்கு மட்டுமல்லாமல் நம் அனைவருக்கும் சொல்லப்பட்ட அறிவுரையாகவே எடுத்துக் கொண்டால் நல்லதொரு மாற்றத்தை நாமும் காண முடியும்!   

ஆசைகளே பிரச்னை என்றும் அவற்றிலிருந்து விலகுவதே தீர்வு என்றும் உபதேசித்து வந்த த்ரைலங்க சுவாமி உண்மைத் துறவியாகவே கடைசி வரை வாழ்ந்த போதும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கிறவர்களைக் குறைவாக நினைத்ததில்லை. ஒரு முறை பரமஹம்சரின் குருவின் குருவான லாஹிரி மஹாசாயாவை மிகவும் உயர்வாக த்ரைலங்க சுவாமி கருத்து தெரிவித்தார்.

அதற்கு அவருடைய சீடர் ஒருவர் ஆட்சேபம் தெரிவித்தார். “லாஹிரி மஹாசாயா திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர். அவரை  தங்களைப் போன்ற துறவி பாராட்டுவது சரியல்ல

த்ரைலங்க சுவாமி மறுத்து சொன்னார். “இறைவன் அவரை வைத்திருக்கும் இடத்தில் இருந்து கொண்டே, கொடுத்திருக்கிற வேஷத்தை சரியாக செய்து கொண்டிருப்பவர் லாஹிரி மஹாசாயா. நான் உடையைக் கூட துறந்து அடைந்திருக்கிற ஆத்மஞானத்தை, குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டே பெற்றிருக்கிறார் அவர்.

தன் வழியே சிறந்த வழி என்று கருதாமல் இலக்கை அடைகிற மாற்று வழியும் சிறந்த வழியே என்று தெளிவாக இருந்த த்ரைலங்க சுவாமி தன் கடைசி காலத்தை நெருங்க நெருங்க பேசுவதை யோக நித்திரையில் அதிக காலம் தங்கியிருக்க ஆரம்பித்தார். ஒரு மலைப்பாம்பு எவ்வித அசைவும் இல்லாமல் மிக நீண்ட காலம் இருப்பது போல த்ரைலங்க சுவாமியும் இருக்க ஆரம்பித்தார்.

நோய்களைக் குணப்படுத்தும் யோகி, மகாசக்திகள் கொண்ட யோகி என்றெல்லாம் அவர் புகழ் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்ததால் அவரை தரிசித்து விட்டுச் செல்ல வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்க ஆரம்பித்தது. அவரை தரிசித்தே நலம் பல பெற்ற பக்தர்களில் செல்வந்தர்கள் தங்கள் காணிக்கையாக தங்க நகைகளை அவர் மீது அணிவித்தும், பணத்தை அவர் காலடியில் போட்டு விட்டும் செல்ல ஆரம்பித்தார்கள். அந்த நகைகளையும், பணத்தையும் அவர் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.

இரவு நேரங்களில் அவர் மீது போடப்பட்டிருந்த நகைகளை சில திருடர்கள் திருடிக் கொண்டு போனார்கள். அதையும் அவர் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. யாரோ தருகிறார்கள். யாரோ எடுத்துக் கொண்டு போகிறார்கள். இந்த இரண்டுமே எனக்கு சம்பந்தமில்லாதது என்பது போல இருந்தது அவர் நிலை.

இராமகிருஷ்ண பரமஹம்சர் வர்ணித்தது போல அந்திம காலத்தில் அவரை பக்தர்கள் சிவனின் வடிவாகவே பார்க்க ஆரம்பித்தார்கள். சிலர் அசைவற்று கிடக்கும் அவர் மேல் தண்ணீரால் அபிஷேகம் எல்லாம் செய்து வணங்க ஆரம்பித்தார்கள். அதுவும் அவரைப் பாதிக்கவில்லை. 1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் நாள் கங்கையிலேயே ஜலசமாதி அடைந்த த்ரைலங்க சுவாமியின் உண்மையான பெருமை அவர் கொண்டிருந்த மகாசக்திகளில் இல்லை, அந்த மகாசக்திகளும் மாற்றி விடாத அவருடைய மெய்ஞானத்திலும் பணிவிலும் இருந்தது என்று ஆர்வலர்கள் கருதுகிறார்கள்!

280 ஆண்டு காலம் வாழ்ந்த யோகியைப் பார்த்து விட்டோம். இனி 2000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருப்பதாக ரஜினிகாந்த் உட்பட பலரும் நம்பும் மகா அவதார் பாபாஜியைப் பற்றி அறிந்து கொள்வோமா!

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – 28.11.2014




1 comment:

  1. புதுசா இருக்கு....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி...

    மலர்

    ReplyDelete