சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 12, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 33


ள்ளிரவு நேரத்தில் கதவு தட்டப்பட்டது மிகவும் மெலிதாய்த் தான் என்ற போதும் மைத்ரேயனின் தாய் கலவரமடைந்தாள். அவளுடைய முதல் இரண்டு மகன்களும் திடுக்கிட்டு படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தார்கள். அவர்கள் முகத்திலும் லேசாய் பயம் தெரிந்தது. இத்தனை நாட்கள் அவர்கள் யாரும் இது போன்றதொரு பயத்தை உணர்ந்ததில்லை. இழக்க எதுவும் அவர்களிடம் இருக்கவில்லை, யாருக்கும் அவர்கள் எதிரியும் அல்ல என்பதால் பயப்படக் காரணம் இருந்ததில்லை.  ஆனால் இப்போதோ குடும்பத்தின் இளைய மகன் மைத்ரேயன் என்பதும், அவன் உயிருக்கு ஆபத்து என்பதும் தெரிவிக்கப்பட்டது அச்சத்தின் விதைகளை அவர்கள் மனதில் ஊன்ற வைத்து விட்டன. வந்திருப்பது இந்தியாவில் இருந்து வந்த ஆளா இல்லை எதிரிகளா?

அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கையில் மறுபடியும் மெலிதாகவே கதவு தட்டப்பட்டது. இந்த முறை மைத்ரேயனும் கண்விழித்தான்.

தாய் தன் மூத்த பிள்ளைகளைப் பார்க்க அவர்கள் எழுந்து கதவைத் திறக்கப் போனார்கள். தாய் தன் கடைசிப் பிள்ளையை அரவணைத்து இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். வந்திருப்பது எதிரியாக இருந்தால் அவள் உயிரை எடுக்காமல் அவள் மகனை நெருங்க முடியாது. அவள் விட மாட்டாள்.

மூத்த மகன் கதவைத் திறக்க இரண்டாம் மகன் அவனை ஒட்டியே நின்றான். வாசலில் கருணையே வடிவாக ஒரு புத்த பிக்கு நின்றிருந்தார். அவர்கள் இருவர் முகங்களிலும் தெரிந்த பயத்தை உணர்ந்த புத்த பிக்கு உடனடியாக திபெத்திய மொழியில் சொன்னார். “புனிதர் தலாய் லாமா அனுப்பி இருக்கும் நபர் நான் தான். இந்தியாவிலிருந்து வருகிறேன்

இருவர் முகத்திலும் இருந்த பயம் அகன்றது. மூத்த மகன் அவரை உள்ளே வரச் சொன்னான். அவர் உள்ளே வந்ததும் அவன் அவசரமாகக் கதவைச் சாத்தினான். உள்ளே இடம் சிறியதாய் இருந்தாலும் தட்டுமுட்டுச்சாமான்கள் நிறைய கிடந்தன. இரண்டாம் மகன் அங்கிருந்த சில சாமான்களை ஒதுக்கி வைத்து விட்டு ஒரு மரப்பலகையைத் துடைத்து வைத்து அவரை அமர மரியாதையுடன் சொன்னான். புத்த பிக்கு அமர்ந்தார்.

இங்கே அதிக நேரம் எங்களால் தங்க முடியாது. என்னேரமும் எதிரிகள் வந்து விடலாம். மைத்ரேயரை உடனடியாக என்னுடன் அனுப்பி வைத்தால் நல்லது

அவர்கள் இருவரும் எதுவும் சொல்லாமல் தலையசைத்தார்கள். அந்த வார்த்தைகள் காதில் விழுந்தவுடன் உள்ளே இருந்த தாய் தன் கடைசி மகனைப் பார்த்தாள். அவன் முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவள் கண்கள் கலங்க ஆரம்பித்தன.

வீட்டின் மூத்த மகன் அந்த புத்த பிக்குவை ஆராய்ந்தான். முடிவில் அவனுக்கு தலாய் லாமா மீது கோபம் வந்தது. அவன் தம்பியைக் காப்பாற்ற இப்படி ஒரு புத்த பிக்குவை அவர் அனுப்பி வைக்கலாமா? எதிரிகளில் ஒருவன் வந்து ஒரு தட்டு தட்டினால் இந்த புத்த பிக்கு தாங்குவாரா?  

அவன் பார்த்த சந்தேகப் பார்வையின் அர்த்தம் அக்‌ஷய்க்குப் புரிந்தது. மெலிதாய் புன்னகைத்த அவனுக்கு அந்த சந்தேகத்தைப் போக்க நேரம் இல்லை என்பதால் நேரடியாக விஷயத்துக்கு வந்தான். “மைத்ரேயர் தயார் தானே?

மைத்ரேயரை அழைத்துக் கொண்டு தாய் முன் அறைக்கு வந்தாள். அவள் கையில் மைத்ரேயரின் ஆடைகள் வைத்திருந்த பழைய துணிப்பை இருந்தது. அவள் கண்கள் ஈரமாக இருந்தன. அவளுக்கு வணக்கம் தெரிவித்த அக்‌ஷய்  அந்தச் சிறுவனைக் கூர்ந்து பார்த்தான். புகைப்படத்தில் பார்த்தது போல தான் அந்தச் சிறுவன் நேரிலும் தெரிந்தான்.  தெய்வப்பிறவி என்பதற்கு எந்த அறிகுறியும் அவனிடம் தெரியவில்லை. சொல்லப் போனால் அவன் மகன் கௌதம் கூட இந்த மைத்ரேயனை விட இலட்சணமாக இருந்தான்.

மைத்ரேயனும் அக்‌ஷயைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனாலும் அந்தப் பார்வையில் கூர்மை இருக்கவில்லை. கண் மூடிக் கண் திறக்கும் நேரத்தில் மைத்ரேயன் முகத்தில் ஒரு மந்தஹாசப் புன்னகை வந்து மறைந்தது போல் தோன்றியது நிஜமா பிரமையா என்பதை அக்‌ஷயால் ஊகிக்க முடியவில்லை. அவன் எண்ணத்தை அந்தச் சிறுவன் படித்துக் கொண்டிருந்தான் என்ற எண்ணம் பலமாக அவன் மனதில் எழுந்தது. இத்தனைக்கும் எந்த எண்ணங்களையும் அக்‌ஷய் வெளிப்பார்வைக்குக் காட்டுபவன் அல்ல. என்ன உணர்ச்சி வெளியே தெரிய வேண்டுமோ அதை மட்டுமே காட்டிப் பழக்கப் பட்டவன் அவன். அப்படி இருந்தும் அதை அந்தச் சிறுவன் படித்திருக்க முடிந்திருக்குமா?

அந்த சந்தேகத்தை அலச இப்போது அவனுக்கு நேரமில்லை என்பதால் அதை மனதில் ஒரு மூலைக்குத் தள்ளி விட்டு மைத்ரேயனின் குடும்பத்திடம் சொல்ல வேண்டி இருந்ததை அழுத்தம் திருத்தமாகச் சொன்னான். “இனி எந்த நேரமும் எதிரிகள் மைத்ரேயரைத் தேடி உங்கள் வீட்டுக்கு வரலாம். அப்படி வந்து கேட்கும் போது மூன்று பேரும் ஒரே மாதிரி தான் பதில் சொல்ல வேண்டும். குழப்பமோ, மாறி மாறி சொல்வதோ இருக்கக்கூடாது.

அவன் பேசிய தொனி ஒரு புத்த பிக்குவினுடையதாக இருக்கவில்லை. சகலத்தையும் முன்கூட்டியே அறிந்து அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு வலிமையான மனிதனின் தொனியாக இருந்தது. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று தொடர்ந்து அவன் விவரமாய் சொன்னதைக் கேட்கும் போதோ எல்லாமே அறிவு பூர்வமாக இருந்தது. மூவரும் கவனமாகக் கேட்டுக் கொண்டு தலையசைத்தார்கள்.  மைத்ரேயனின் மூத்த அண்ணன் தன் முந்தைய அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ள வேண்டி வந்தது.

அக்‌ஷய் எழுந்து நின்று மைத்ரேயனைப் பார்த்தான். மைத்ரேயன் தாயின் கையில் இருந்த துணிப்பையை வாங்கிக் கொண்டு அக்‌ஷய் அருகில் வந்தான். அவன் முகத்தில் கேள்விகள் இல்லை, தயக்கம் இல்லை, துக்கம் இல்லை..... இது ஒரு அசாதாரண நிகழ்வே அல்ல என்பது போல் இருந்தது அந்தச் சிறுவனின் நடவடிக்கை.

அவன் தாய் கண்கள் தான் குளமாயின. அண்ணன்களுக்கும் அந்தக் கணத்தில் துக்கத்தைக் கட்டுப்படுத்துவது கஷ்டமாக இருந்தது. இளைய அண்ணன் தன் தம்பி கையில் திபெத்திய பண (Renminbi (RMB) நோட்டுகள் சிலவற்றைத் திணித்தான். அது பெரிய தொகை அல்ல என்றாலும் சிறிதாவது தம்பிக்குப் பயன்படும் என்று அவன் எண்ணினான். அதைப் பார்த்து விட்டு மூத்த அண்ணனும் சில நோட்டுகளைத் தம்பி கையில் திணித்தான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த தாய் கதறி அழுதாள். அண்ணன்களைப் பார்த்துப் புன்னகைத்த மைத்ரேயன் தாய் அருகே வந்து அவள் கண்ணீரைத் துடைத்து விட்டு அழாதே என்பது போலத் தலையசைத்தான். மகன் அப்படிச் செய்வது அந்தத் தாயின் துக்கத்தை அதிகப்படுத்தியதே ஒழிய குறைக்கவில்லை. ஆனால் அதற்கு மேல் அந்தச் சிறுவன் தாய் அருகில் நிற்கவில்லை. அண்ணன்கள் தந்த பணத்தை தன் துணிப்பையில் வைத்துக் கொண்டே அக்‌ஷய் அருகே வந்தான்.

அக்‌ஷய் அவனை அழைத்துக் கொண்டு கிளம்பும் போது அந்தத் தாய் அழுகையினூடே சொன்னாள். “என் குழந்தை எதையுமே வாய் விட்டுக் கேட்க மாட்டான். பசித்தால் கூட சொல்ல மாட்டான். நாமாய் ஏதாவது தந்தால் தான் உண்டு.....அதற்கு மேல் அவளால் எதுவும் பேச முடியவில்லை. கண்ணீர் அருவியாகக் கொட்டிக் கொண்டிருக்க இருகைகளையும் கூப்பி அக்‌ஷயை அவள் வணங்கி நின்றாள்.
அதைப் பார்த்த போது அக்‌ஷய்க்குத் தன் தாயின் நினைவு வந்தது. அவன் காணாமல் போன பின் மகன் வயிறு நிறைந்திருக்க வேண்டும் என்று வருடக்கணக்கில் அவள் விரதம் இருந்த விதம் நினைவுக்கு வந்தது. அவன் கண்களும் ஈரமாயின. “கவலைப்படாதீர்கள் அம்மா. உங்கள் மகன் வயதில் எனக்கும் ஒரு மகன் இருக்கிறான். நான் பார்த்துக் கொள்கிறேன்என்று குரல் கரகரக்கச் சொன்னான்.

மைத்ரேயனின் அண்ணன்களுக்கும் கண்ணீரைத் தவிர்க்க முடியவில்லை. அங்கே பாதிப்பே இல்லாமல் இருந்தது மைத்ரேயன் மட்டுமே. அவன் ஜன்னலுக்கு வெளியே பிரகாசமாய் மின்னிக் கொண்டிருந்த ஒரு நட்சத்திரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

மைத்ரேயனின் இளைய அண்ணன் முதல் முறையாக வாயைத் திறந்து அக்‌ஷயிடம் உருக்கமாகக் கேட்டான். “ஒரு வேளை இவன் மைத்ரேயன் இல்லை என்று தெரிய வந்தால் இவனை அப்படியே எங்காவது கைவிட்டு விட மாட்டீர்களே? இவனை எங்களிடம் மறுபடி கொண்டு வந்து விட்டு விடுவீர்கள் தானே?

அக்‌ஷய் தலை அசைத்து தைரியம் தந்தான். அவர்களுக்கும் அவன் மைத்ரேயன் தான் என்று பூரண நம்பிக்கை இல்லாமல் இருப்பது புரிந்தது... இனி தாமதிக்க நேரம் இல்லை என்று உணர்ந்தவனாக அங்கிருந்து கிளம்ப மைத்ரேயனின் கையைப் பற்றினான். மைத்ரேயனின் கை மென்மையாக இருந்தது. அவனைத் தொட்டவுடன் அக்‌ஷய் தன் நாகமச்சத்தில் ஏதோ ஒரு சிலிர்ப்பை உடனடியாக உணர்ந்தான். ஆசான் பத்மசாம்பவாவின் ஓலைச்சுவடி பற்றி சொன்ன போது உணர்ந்த அதே சிலிர்ப்பு இப்போதும்.... பிரமையா இல்லை நிஜமா?

திகைப்புடன் மைத்ரேயனை அவன் கூர்ந்து பார்த்தான். மைத்ரேயனின் பார்வை இன்னும் அந்த நட்சத்திரத்தின் மீது தான் இருந்தது. அக்‌ஷயின் அந்தச் சிலிர்ப்பு மெள்ள அடங்கியது.  

மைத்ரேயனின் கைகளைப் பிடித்துக் கொண்டு அக்‌ஷய் வெளியேறினான். வெளியே குளிர் கடுமையாக இருந்தது. ஓடி வந்து மகன் மீது ஒரு பழைய சால்வையைப் போர்த்திய மைத்ரேயனின் தாய் அந்தக் கணமே தன் பாரபட்சத் தன்மையை உணர்ந்தவளாக புத்தபிக்கு உடையில் இருந்த அக்‌ஷய்க்குத் தான் போர்த்தியிருந்த நைந்து போயிருந்த சால்வையைத் தர முன் வந்தாள்.

அக்‌ஷய் புன்னகையுடன் மறுத்தான். “எனக்கு இந்தக் குளிர் பழக்கமானது தான் அம்மா

அக்‌ஷயும் மைத்ரேயனும் தெருவில் நடக்க ஆரம்பித்தார்கள். ஊரே உறங்கிக் கொண்டிருந்ததால் யாருமே தெருவில் இல்லை. சிறிது தூரம் சென்ற பின் அக்‌ஷய் திரும்பிப் பார்த்தான். மைத்ரேயனின் தாயும் அண்ணன்களும் நின்று அவர்களைப் பார்த்துக் கொண்டே இருப்பது தெரு விளக்கின் மங்கலான ஒளியில் தெரிந்தது. தாய் தன் பிள்ளைகளை விட சில அடிகள் முன்னால் நின்றிருந்தாள்.  அவள் கையை அசைத்தாள். அதைப் பார்த்த அவள் பிள்ளைகளும் கையசைத்தார்கள்.

அக்‌ஷய் மைத்ரேயனைப் பார்த்தான். மைத்ரேயன் பின்னால் திரும்பிப் பார்ப்பதாய் இல்லை. அக்‌ஷய் மைத்ரேயனிடம் சொன்னான். “உன் அம்மாவும், அண்ணாக்களும் கையசைக்கிறார்கள்

அவன் சொன்னது மைத்ரேயனைச் சென்றடைந்ததாகத் தெரியவில்லை. அக்‌ஷய்க்கு அந்தச் சிறுவனின் உணர்ச்சியற்ற தன்மை பிடிக்கவில்லை. ‘மைத்ரேயனாக இருக்கிறானோ இல்லையோ குறைந்த பட்சம் மனிதனாகவாவது இருக்கலாம் என்று தோன்றியது.

மைத்ரேயன் திடீரென்று திரும்பிப் பார்த்துக் கையசைத்தான். அவன் தாயும் அண்ணன்களும் வேகமாக உணர்ச்சிகரமாகக் கையசைத்தார்கள். மைத்ரேயன் அக்‌ஷயை ஒரு முறை பார்த்து விட்டு அவனுடன் சேர்ந்து முன்னோக்கி நடக்க ஆரம்பித்தான்.

‘இந்தச் சிறுவன் முன்னால் நினைப்பது கூட ரகசியமாக இருக்காது போல் இருக்கிறதேஎன்ற எண்ணம் அக்‌ஷய்க்கு வந்து போனது. உடனே மைத்ரேயனை ஒரு முறை அவன் பார்த்துக் கொண்டான். இப்போது மைத்ரேயன் அவனைப் பார்க்கவில்லை.

அந்த நள்ளிரவில் அவர்கள் இருவரும் மௌனமாக நடந்தார்கள்.

(தொடரும்)

என்.கணேசன்

10 comments:

  1. turavi tan annai-yai marakalam anal amma tan pillai-yai(turavi) marappatillai... very very emotional chapter...

    ReplyDelete
  2. Till this, thrilling... Logical flow....very nice sir.
    But what would be the Maithrayen's role in this plot is a question of thought for me.

    ReplyDelete
  3. அடுத்த வாரத்தை நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன் அண்ணா. . .

    ReplyDelete
  4. கதை நல்லா இருக்கிறது...பகிர்வுக்கு மிக்க நன்றி...
    மலர்

    ReplyDelete
  5. நல்லாயிருக்கு அண்ணா...

    ReplyDelete
  6. வழக்கம் போல் மிக சுவாரிசியமாகவே செல்கிறது... ஒவ்வொரு வாரமும் நாவலை ஒட்டி படத்தை தேர்ந்தெடுத்தே பதிவிடுகிறீர்கள்... அருமை.... வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்....

    ReplyDelete
  7. slow n steady going!

    ReplyDelete
  8. சரோஜினிFebruary 15, 2015 at 8:49 AM

    அற்புதமான படைப்பு. வியாழன் மாலை ஒரு தடவை வேகமாக படித்து விடுவேன். பின் மறுபடி இரண்டு நாள் விட்டு ஒரு முறை படிப்பேன். கதையும், பாத்திரங்களும் மனதில் நிற்கிறார்கள். அடுத்தது என்ன என்கிற ஆர்வம் அதிகமாகி கொண்டே வருகிறது.

    ReplyDelete