சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 5, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 32



வுரவ் கையில் துப்பாக்கியைப் பார்த்த போது சந்திரகாந்த் முகர்ஜிக்கு ஒரு கணம் எதுவுமே புரியவில்லை. குழப்பத்துடன் அவனைப் பார்த்தார்.

அவன் கைத்துப்பாக்கியை அவர் நெஞ்சுக்கு நேராக குறி வைத்தபடி சொன்னான். அந்த ரகசியத்தை அறிய உங்கள் புத்தகம் வரும் வரை காத்திருக்கும் பொறுமை எனக்கு இல்லை... எனக்கு இப்போதே தெரிந்தாக வேண்டும்”.

அவன் முகத்திலும், குரலிலும் கடுமை தெரிந்த போதிலும் கூட அவர் தங்களைப் படம் எடுத்துக் கொண்டிருக்கும் வீடியோ காமிராக்களைப் பார்த்த போது அவருக்குப் பெரிதுபடுத்தத் தோன்றவில்லை. யாராவது காமிராக்களின் முன்பே இந்த மாதிரி செய்வார்களா?என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. அதனால் உடனேயே சந்திரகாந்த் முகர்ஜி அவன் தன் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சுவாரசியம் ஏற்படுத்தத் தான் இப்படி ஏதோ நடிக்கிறான் என்று நினைத்துக் கொண்டு விட்டார். ‘இந்த டிவிகாரர்கள் தங்கள் சீரியல்களின் ரேட்டிங் அதிகப்படுத்த என்னவெல்லாம் நாடகம் போடுகிறார்கள் என்று எண்ணி புன்னகையும் செய்தார்.

அவன் உணர்ச்சியே இல்லாமல் அவரைக் கூர்ந்து பார்த்தான். என்ன இந்தக் கிறுக்கன் சிரிக்கிறான்என்று அவனுக்கு உள்ளூர கோபமும் வந்தது. உடனே துப்பாக்கியை வலது கால் முட்டிக்குக் குறி பார்த்தபடி கேட்டான். “எவ்வளவு வலி தாங்குவீர்கள்?

அவன் கை விரல் துப்பாக்கியின் விசையில் தயாராக இருந்ததும் அவன் முகத்தில் குரூரமாய் ஒரு வன்மம் தெரிந்ததும் சந்திரகாந்த் முகர்ஜியை திகைக்க வைத்தன. லேசாக எழ ஆரம்பித்த பயத்தை மறைத்துக் கொண்டு அவர் பதட்டத்துடன் கேட்டார். “நீங்கள் தமாஷ் செய்கிறீர்களா?

கவுரவ் மெல்ல கேட்டான். “சுட்டால் தான் நம்புவீர்களா?அவன் கைவிரல் துப்பாக்கி விசையின் மேலும் அழுத்தம் தர ஆரம்பித்தது. அவன் எந்த தயக்கமும் இல்லாமல் அவர் முட்டியைப் பெயர்த்து விடுவான் என்பது நிதர்சனமாகப் புரிந்த போது அவர் பீதி அடைய ஆரம்பித்தார். வந்திருப்பவன் டிஸ்கவரி சேனல் ஆசாமி அல்ல என்ற செய்தி மூளைக்கு எட்டியது. பின் யார்? எதற்காக மைத்ரேயர் பற்றிய விவரங்களைப் புத்தகத்தில் வருவதற்கு முன்பே அறிய ஆசைப்படுகிறான் என்ற கேள்விகள் மனதினுள் எழ பயத்துடன் மெல்ல கேட்டார். “எதற்காக நான் கண்டு பிடித்த விஷயங்களை இப்போதே தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறீர்கள்?

இங்கே கேள்வி நான் மட்டும் தான் கேட்பேன். பதில் வரா விட்டால் உடம்பில் ஒவ்வொரு இடமாக குறி பார்த்து சுட ஆரம்பிப்பேன். ஆரம்பத்தில் உயிர் போகாத இடமாய் பார்த்து தான் சுடுவேன். அதனால் உடனேயே உயிர் போய் விடுமோ என்று பயப்பட வேண்டாம்... சுட ஆரம்பிக்கட்டுமா, இல்லை சொல்ல ஆரம்பிக்கிறீர்களா?

மைத்ரேயர் உயிருக்கு ஆபத்து என்று சொல்லி வைத்த பத்மசாம்பவா மைத்ரேயர் பற்றி ஆராய்பவர்களுக்கும் ஆபத்து என்பதை சங்கேத வார்த்தைகளில் எழுதி வைத்திருக்கக் கூடுமோ என்கிற சந்தேகம் அந்த வரலாற்று ஆராய்ச்சியாளருக்கு அந்த நேரத்திலும் வந்தது. உயிருக்கு மிஞ்சி என்ன இருக்கிறது என்று நினைத்தவராக குரல் நடுங்க கேட்டார். “சொல்லி விடுகிறேன். சொன்னால் என்னை விட்டு விடுவீர்கள் அல்லவா?

“விட்டு விடுவேன். தனிப்பட்ட முறையில் உங்களுடன் எனக்கு எந்த விரோதமும் இல்லையே”  என்று நம்பிக்கை ஏற்படுத்தும் தொனியில் கவுரவ் சொன்னான். சந்திரகாந்த் முகர்ஜியின் பேச்சை அனுபவித்தவன் என்பதால் “சொல்வதை சுருக்கமாகச் சொன்னால் சீக்கிரம் போய் விடுவேன்என்பதை சேர்த்துச் சொன்னான்.

தன் இரண்டு வருட உழைப்பின் பலனை துப்பாக்கி முனையில் பயமுறுத்திக் கேட்கிறானே இந்த அயோக்கியன் என்று தனக்குள் புலம்பிய சந்திரகாந்த் முகர்ஜி அவன் சீக்கிரமாக இங்கிருந்து போனால் போதும் என்று நினைத்தவராக கஷ்டப்பட்டு சுருக்கமாகச் சொல்ல ஆரம்பித்தார். “பத்மசாம்பவா மர்ம முடிச்சுகளுடன் சொன்னது இது தான். “மைத்ரேயர் திபெத்திய பூமியில் முதல் மடாலயம்,  முதல் அரண்மனை, புனித குளம் லாமோ லாட்சோ என்ற மூன்றுக்கும் அருகே உள்ள இடத்தில் ஜனனம் எடுப்பார். அவர் உடலில் புனிதச் சின்னம் இருக்கும்....

கவுரவ் திபெத்திய வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை அறிந்தவன் அல்ல. லீ கியாங் கண்டிப்பாக அறிந்திருக்கலாம் என்றாலும் சந்திரகாந்த் முகர்ஜி வாயாலேயே அதை அறிந்து கொள்ள நினைத்து கேட்டான். “அந்த மூன்றுக்கும் அருகே மைத்ரேயர் பிறந்திருக்கும் இடம் என்ன?

இந்த நாசமாய் போனவனிடம் சொல்ல வேண்டி வந்து விட்டதே என்று நொந்தவராக சந்திரகாந்த் முகர்ஜி சொன்னார். “சேடாங்காக தான் இருக்க வேண்டும்

“பிறந்திருக்கும் ஊர் பெயர் தெரிந்து விட்டால் போதுமா? அங்கே மைத்ரேயரை எப்படிக் கண்டுபிடிப்பது?”  கவுரவ் கேட்டான்.

சந்திரகாந்த் முகர்ஜி சொன்னார். “சுமார் 52000 மட்டுமே ஜனத்தொகை இருக்கும் சின்ன ஊரில் பத்து வருடங்களுக்கு முன்னால் மார்கழி மாதத்தில் வளர்பிறை காலத்தில் எத்தனை குழந்தைகள் பிறந்திருக்கப் போகிறார்கள்? அப்படி பிறந்த குழந்தைகளில் எத்தனை குழந்தைகள் உடலில் புனிதச் சின்னம் இருக்க முடியும்?

அவர் சொன்னது சரியென்றே அவனுக்குத் தோன்றியது. உடனே அடுத்த சந்தேகம் எழுந்தது. “அங்கே பிறந்திருக்கும் குழந்தை அங்கேயே வளர்ந்து கொண்டிருக்கும் என்பது எப்படி நிச்சயம்?

“பத்மசாம்பவா அந்த பூமியிலேயே தான் மைத்ரேயர் வளர்ந்து வருவார் என்று சொல்லி இருக்கிறார். அதனால் மைத்ரேயர் அங்கேயே தான் வளர்ந்து கொண்டிருக்க வேண்டும்...

“நீங்கள் மைத்ரேயரை நேரில் சந்திக்க முயற்சி செய்திருக்கிறீர்களா?

“போக வேண்டும், அவரைக் கண்டுபிடித்து என் புத்தகத்தில் அவர் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்....

கவுரவ் துப்பாக்கியை அவர் நெற்றிப் பொட்டைக் குறி வைத்தபடி அமைதியாகச் சொன்னான். “எங்கேயாவது யாருக்காவது ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தால் அது போன்ற சமாச்சாரங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது தான் புத்திசாலித்தனம். ஏனென்றால் ஆபத்து, சம்பந்தப்படுபவர்களை எல்லாம் கூடத் தொற்றிக் கொள்ளலாம்

அவன் துப்பாக்கியால் குறி வைப்பதைப் பார்த்த சந்திரகாந்த் முகர்ஜி நடுநடுங்கிப் போனார். அவசரமாக அவனுக்கு நினைவூட்டினார். “நான் கண்டுபிடித்ததை எல்லாம் சொல்லி விட்டால் என்னை ஒன்றும் செய்ய மாட்டேன் என்று சொன்னீர்களே

“நான் சும்மா சொன்னேன்என்ற கவுரவ் அவர் அதற்கு மேலே எதுவும் சொல்வதற்கு முன் லீ க்யாங்கின் இரண்டாம் திட்டத்தை நிறைவேற்றினான்.

அந்த ஆளுக்கு மைத்ரேயர் பற்றிப் புதிதாக எதுவும் தெரியவில்லை, இது வரை பொதுவாக எல்லோருக்கும் தெரிந்திருப்பது மட்டும் தான் தெரியும் என்றால் வீடியோ எடுத்து விட்டு சும்மா வந்து விடு. அந்த ஆளுக்கு மைத்ரேயர் பற்றி நமக்குத் தெரியாத கூடுதல் தகவல்கள் தெரியும், மைத்ரேயரை அந்த ஆள் மற்றவர்களுக்கு அடையாளம் காட்டி விடக்கூடும் என்று தோன்றினால் அந்த ஆளைத் தீர்த்துக் கட்டிவிடுஎன்று இரண்டு திட்டங்களை லீ க்யாங் சொல்லி இருந்தான்.

அந்த இரண்டாம் திட்டத்தின்படி சந்திரகாந்த் முகர்ஜி அவன் துப்பாக்கி ரவைக்குப் பலியானார். கீழே சாய்ந்த அவர் முகத்தில் கடைசி உணர்ச்சியாய் அதிர்ச்சியே தங்கிப் போனது. சீக்கிரமாகவே உயிர் பிரிந்தது.

முதலில் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்ததை எல்லாம் வேகமாக அழித்து விட்டு கைகளில் உறைகளை மாட்டிக் கொண்டு கவுரவ் வேகமாக இயங்கினான். எங்கெல்லாம் தன் கைரேகை பதிந்திருக்கக் கூடிய இடங்களை எல்லாம் வேகமாய் அழித்தான். பின் சந்திரகாந்த் முகர்ஜி கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை கழற்றி எடுத்துக் கொண்டான். அவர் அறையில் பீரோவில் வைத்திருந்த பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டான். தன் பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு விட்டு வெளியே யாராவது இருக்கிறார்களா என்று ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். யாரும் இருக்கவில்லை.

சந்திரகாந்த் முகர்ஜி வீட்டு சாவியை  வரவேற்பறையில் ஒரு ஆணியில் மாட்டி வைத்திருந்தார். கவுரவ் அதை எடுத்துக் கொண்டு வெளியே வந்து கதவைப் பூட்டி விட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தான். நல்ல வேளையாக வீட்டில் இருந்து அவன் வெளியே வந்ததை யாரும் பார்க்கவில்லை.   

பிணம் கண்டுபிடிக்கப்பட்ட பின், பணம் மற்றும் நகைக்காகத் தான் இந்தக் கொலை நடந்திருக்கிறது என்ற கோணத்தில் தான் விசாரணை நடக்கும். மைத்ரேயர் விவகாரம் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் யாருக்கும் வர வாய்ப்பில்லை..

அந்தத் தெருவைக் கடந்து அவன் போவதற்குள் அவன் சிலர் கண்ணில் பட்டான். ஆனால் யாருக்குமே அவன் சந்திரகாந்த் முகர்ஜி வீட்டில் இருந்து வெளியே வந்தவன் என்றோ ஒரு கொலை செய்து விட்டு வந்திருக்கிறான் என்றோ சந்தேகம் கூட வரவில்லை.  ஏதோ ஆழ்ந்த சிந்தனையுடன் நடந்து போகும் ஒரு வாட்ட சாட்டமான கண்ணியமான நபரையே அவர்கள் பார்த்தார்கள்.

அவன் அவர்கள் கண்டது போல உண்மையிலேயே ஆழ்ந்த சிந்தனையில் தான் இருந்தான். இந்த வழுக்கைத் தலையர் சொல்வது போல் அந்த மைத்ரேயர் அந்த வருட மார்கழி மாத வளர்பிறை காலத்தில் பிறந்தவராக இருந்து உடலில் புனிதச்சின்னமும் இருந்தால் எப்படி இது வரை மற்றவர்களால் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருக்க முடியும்?என்ற கேள்வி அவனைக் குழப்பியது.


ந்தக் கேள்விக்குப் பதில் மைத்ரேயரின் தாய்க்கே முந்தின நாள் இரவு தான் கிடைத்திருந்தது. மகன் எந்த நேரமும் போய் விடுவான் என்ற துக்கத்தில் அவள் தூக்கம் வராமல் அமர்ந்து அவ்வப்போது அழுது கொண்டிருந்தாள். அவளுடைய முதல் இரண்டு மகன்களும் அன்று கேள்விப்பட்ட தகவலை ஜீரணிக்க முடியாமல் தூக்கமும் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தனர்.

நடப்பதற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் கடைசி மகன் உறங்குவது அந்தத் தாய்க்கு துக்கத்தின் நடுவே வேடிக்கையாகவும் இருந்தது.  அவனையே மிகுந்த பாசத்துடன் பார்த்தாள். அவன் போர்த்திக் கொண்டிருந்த போர்வையில் இரண்டு இடங்களில் கிழிந்திருந்தது.

‘இவன் புத்தரின் மறு பிறவியாக இருந்திருந்தால் ஏன் இந்த தரித்திர வீட்டில் பிறந்திருக்க வேண்டும். இந்த வறுமையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று நூறாவது தடவையாக தனக்குள்ளேயே அந்தத் தாய் கேட்டுக் கொண்டாள். அவளுடைய கடைசி மகன் புரண்டு படுத்தான். அவன் வலது கால் பாதம் போர்வையின் கிழிசலின் வழியாக வெளியே வந்தது. குளிரை அவன் உணர்ந்து விடக்கூடும் என்று எச்சரிக்கையோடு அந்தப் போர்வையை சரி செய்ய நெருங்கியவள் மகனுடைய பாதத்தைப் பார்த்து அதிர்ந்தாள். மகனுடைய பாதத்தில் தர்மசக்கரம் தெளிவாகத் தெரிந்தது.

அவன் சிறு குழந்தையாக இருந்த போது அந்தப் பாதத்தில் முத்தமிட்டுக் கொஞ்சிய போது ஏராளமான ரேகைகள் அதில் இருந்ததை அவள் பல முறை கவனித்திருக்கிறாள். ஒரு வடிவமில்லாமல் கலைந்திருந்த அந்த ரேகைகள் இப்போது தெளிவாக தர்மசக்கர வடிவத்தில் சேர்ந்து விட்டிருந்தன.

அந்த தர்மசக்கரத்தை புத்த மடாலயத்தில் ஒரு தூணில் அவள் பார்த்திருக்கிறாள்.... பல விதமான உணர்ச்சிகள் அவளுக்குள் ஒரே நேரத்தில் எழுந்தன.....

அந்த நள்ளிரவு நேரத்தில் அவர்கள் வீட்டுக்கதவு தட்டப்பட்டது.

(தொடரும்)
என்.கணேசன்

5 comments:

  1. அர்ஜுன்February 5, 2015 at 6:39 PM

    சூப்பர் சார்.

    ReplyDelete
  2. Stopped at a very thrilling stage. story moving very fast !!!!

    ReplyDelete
  3. கனகசுப்புரத்தினம்February 5, 2015 at 9:50 PM

    அழகான நடையில் நாவல் விருவிருப்பாக போகிறது. காட்சிகள் கண் முன் விரிந்து கதாபாத்திரங்களை நேரில் பார்க்கிறோம். பாராட்ட வார்த்தை இல்லை. தமிழில் இது போல் நீண்ட நாவலை சுவைபட இக்காலத்தில் எழுதுபவர்கள் அரிது.

    ReplyDelete
  4. மிக அழகாக கதையை கொண்டு போயிருக்கீங்க....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி...
    மலர்

    ReplyDelete