சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, September 29, 2014

சகாப்தத்தில் என் பேட்டி!


காஃபி வித் எனர்ஜிட்டிக் எழுத்தாளர்:

சகாப்தம் இணைய தளத்தின் நித்யா கார்த்திகன் அவர்களுக்கு நான் தந்திருந்த பேட்டி:


உலகை மாற்றிய புரட்சியாளர்களில் பலர் அடிப்படையில் சிறந்த எழுத்தாளர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய புத்தகங்கள் வாசிப்பவர்களின் மனதில் உத்வேகத்தையும் எழுச்சியையும் உண்டாக்கி உலகை பரிமாண வளர்ச்சியடைய செய்திருக்கிறது. இது ஒருபுறமிருக்க பல சிந்தனையாளர்கள் தனி மனிதனின் ஆளுமைக்கும் ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்திற்கும் வித்திடும் வகையில் தங்களுடைய படைப்புகளை உருவாக்குகிறார்கள். அந்த வகையில் தன்னுடைய எழுத்து வாசிப்பவர்கள் மனதில் அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும் விதைத்து ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளோடு எழுத்துலகில் கால் பதித்து வேகமாக வளர்ந்துவரும் எனர்ஜிட்டிக் எழுத்தாளர் இவர்.

ஆன்மீகம், ஆழ்மன சக்தி, தன்னம்பிக்கை, சுய முனேற்றம், இலக்கியம், ஜோதிடம், சமூகம் என பல துறைகளையும் ஆராய்ந்து  நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். மர்மங்களும் முடிச்சுகளும் நிறைந்த விறுவிறுப்பான நெடுங்கதைகள் எழுதுவதில் கைதேர்ந்தவர். சாதாரண நிகழ்வுகளில் மறைந்திருக்கும் பெரிய உண்மையை, எளிய மொழியிலும் சுருக்கென்று மனதை தைக்கும் விதமாகவும் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் படைப்பதில் வல்லவர்.

கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த இவருடைய தாய்மொழி துளு என்ற போதும் தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியத்தின் மீது பற்று கொண்டவர்... திரு என்.கணேசன் அவர்கள்... 


தற்போது இவர் எழுதிக்கொண்டிருக்கும் “மகாசக்தி மனிதர்கள் தொடர் ஒவ்வொரு வெள்ளியும் தினத்தந்தி ஆன்மிகம் பகுதியில் வெளிவருகிறது. இதில் அபூர்வ சக்திகள் கொண்ட யோகிகள், மனிதர்கள் பற்றி எழுதுகிறார். அது மட்டுமல்ல, இவருடைய வலைத்தளத்தில் “புத்தம் சரணம் கச்சாமி என்ற தொடர்கதையையும் எழுதிக்கொண்டிருக்கிறார்.  மிகவும் விறுவிறுப்பாகச் சென்றுக் கொண்டிருக்கும் இந்த நாவலின் தலைப்பு சற்று வித்தியாசமாக இருக்கிறதல்லவா...? தலைப்பு மட்டும் அல்ல கதையுமே அந்த வகையைச் சேர்ந்ததுதான். இது பற்றி அவரிடம் பேசும் பொழுது,

"புத்தரின் மறு அவதாரமாக நம்பப்படும் மைத்ரேய புத்தர் தான் இந்த கதையின் மைய கதாபாத்திரம். இந்துக்களுக்கு கல்கி அவதாரம் போல பௌத்தர்களுக்கு மைத்ரேய புத்தர். இது பற்றி பழைய பௌத்த ஏடுகளில் குறிப்புகள் உள்ளன. மனிதர்களிடையே தர்மம் குறைந்து நன்மைகள் அழிய ஆரம்பிக்கும் போது புத்தரின் மறு அவதாரம் நிகழும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. அப்படி ஒரு அவதாரம் நிகழ்ந்துவிட்டது என்று லாமாக்கள் அந்தக் குறிப்புகளை வைத்து அறிந்து அதை ரகசியமாய் வைத்திருக்க, அந்தக் கதாபாத்திரத்தைக் கொல்ல சீன உளவுத்துறை கடுமையாக ஏற்பாடுகள் செய்கிறது. இப்படி ஒரு களத்தில் ஆரம்பிக்கிற நாவல் இது. பௌத்தர்களின் திரிரத்னம் என்று சொல்லப்படும் வழிபாட்டில் முக்கியமான இந்த("புத்தம் சரணம் கச்சாமி") முதல் வரி இந்த நாவலுக்குப் பொருத்தமான பெயராகப் பட்டது. புத்தரை சரணடைகிறேன் என்பது இதன் பொருள்" என்று மேலும் நமக்கு விளக்கமளிக்கிறார்.

திரு கணேசன் அவர்கள் எதையுமே போகிற போக்கில் அல்லாமல் கூர்ந்தாராய்ந்து எழுதக் கூடியவர் என்பதை மற்றும் ஒருமுறை நிரூபிக்கிறது 'ஆழ்மனதின் அற்புத சக்திகள்'. தினமலர், தினத்தந்தி, தினமணி, துக்ளக் போன்ற பத்திரிக்கைகளில் பேசப்பட்ட நூல். ஒரே ஆண்டில் நான்கு பதிப்புகள் கண்டு வாசகர்களிடம் அமோக வரவேற்படைந்த நூல்.


இந்நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையிலும் பிரம்மிப்பூட்டும் விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. தியானம், யோகா, ஆல்ஃபா அலைகள், வியாதிகளை குணப்படுத்தும் ஆழ்மன சக்தி, தீய பழக்கங்களிலிருந்து விடுபட ஆழ்மன பயிற்சி, உடலைவிட்டு வெளியேறும் ஆத்மா, மரணவிளிம்பு அனுபவங்கள், மரணத்திற்குப் பின் என்ன? என்று பல விஷயங்களை ஆராய்ந்து ஆதாரங்களை அடுக்கியிருக்கிறார். இந்த புத்தகத்தை வாசிக்கும் பொழுது நம்பமுடியாத ஆச்சர்யங்களை வாசகர்கள் தங்களுடைய சொந்த அனுபவங்களாகக் கூட சில இடங்களில் உணரக்கூடும்.

இந்த இடத்தில் என்னுடைய அனுபவம் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். 'இதயத்தில் ஒரு யுத்தம்' கதை எழுதிக் கொண்டிருக்கும் போது எவ்வளவு நேரம் சிந்தித்தும் என் கற்பனையில் சிக்காத சில நல்ல காட்சிகள், உறக்கத்தில் கோர்வை மாறாமல் திரையில் காண்பது போல் என் கனவில் வந்திருக்கின்றன. அவற்றை நான் அந்த கதையில் பயன்படுத்தியும் இருக்கிறேன். இதை பற்றி என்னுடன் நெருக்கமாக இருந்த தோழிகளிடம் கூறியபோது "ரொம்ப நேரம் ஒரே விஷயத்தை பற்றி யோசிச்சிட்டு இருந்தா இப்படி தான் கனவு வரும்..." என்று விளக்கம் கூறினார்கள். நானும் ஏற்றுக் கொண்டேன். ஆனாலும் ஒரு சிறு உறுத்தல் இருந்துக் கொண்டே இருந்தது. 

'அது எப்படி...  என் கதைக்கு என்ன மாதிரிக் காட்சி இருந்தால் நன்றாக  இருக்கும் என்று நான் நினைத்தேனோ...! என்ன மாதிரிக் காட்சியை கற்பனை செய்ய முயன்று தோற்றுப் போனேனோ...  அந்த காட்சி அப்படியே அச்சு பிசகாமல்... தொடர்ச்சி மாறாமல் என் கனவில் வரும்?' - இந்த கேள்விக்கான பதில் சில வருடங்களுக்கு பிறகு திரு என்.கணேசன் அவர்கள் மூலம் எனக்குக் கிடைத்தது.


"மிக அபூர்வமான நேரங்களில் ஆழ்மனம் நம் தேடல்களுக்கு பதில் சொல்ல கனவுகளை ஏற்படுத்துவதுண்டு" - இந்த வாசகத்தை படித்த போது ஆச்சர்யப்பட்டுப் போனேன்.

இந்த புள்ளியில் தான் ஆழ்மனத்தின் சக்தியை என் மனம் நம்பத் துவங்கியது. ஆனாலும் சில சந்தேகங்கள் துளிர்ப்பதை தவிர்க்க முடியவில்லை. அதற்கான விளக்கங்களை அவரிடம் கேட்டேன்.

நம்முடைய மனதின் நினைவுகளுக்கு சக்தி இருக்கிறது என்றால் நம்மைப் பற்றய பிறருடைய நினைவுகளுக்கும் சக்தி இருக்குமா? கண்படுதல், திருஷ்டி, சகுனம் இவைகளுக்கெல்லாம் அர்த்தம் இருக்கிறதா

"கண்படுதல், திருஷ்டி, சகுனம் இவை எல்லாம் முற்றிலும் அர்த்தமில்லாதவை என்று சொல்ல முடியாது. ஆனால் அவை எல்லாம் பாதிக்கும் அளவு நாம் பலவீனமாக இருந்தால் மட்டுமே நம்மை பாதிக்கும். ஆழ்மனசக்தியால் நாம் நம்மை பலப்படுத்திக் கொண்டால் அவை எல்லாம் பாதிக்க முடியாது"

ஆழ்மனதின் அற்புத சக்திகள் புத்தகத்தில் மரணவிளிம்பிற்கு செல்லாமலேயே ஆன்மா உடலை பிரிந்து மீண்டும் உடலை அடைய முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆன்மா உடலை பிரிந்துவிட்டாலே அது மரணம் தானே?

"உடலை விட்டு ஆன்மா மிகக்குறுகிய காலத்திற்கு பிரிந்து மீண்டும் உடலை அடைவது பற்றி ஆதாரங்களுடன் ஆழ்மனதின் அற்புத சக்திகள் நூலில் எழுதியிருந்தேன். OBE என்று சொல்லப்படும் Out of Body Experience பற்றி ஏராளமாக மருத்துவ நூல்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அவை எல்லாமே கிட்டத்தட்ட குறுகிய கால (சில நிமிட) அனுபவங்களாக இருக்கின்றன.

நீங்கள் கேட்டது போல உடலை ஆன்மா பிரிந்தாலே மரணம் என்றாலும் இந்த நிஜ சம்பவங்களில் மரணம் முழுமையாக நிகழ்ந்து விடவில்லை. திரும்பவும் உடலுக்கு ஆன்மாவை இழுக்கக்கூடிய ஏதோ ஒன்று உடலில் தங்கி இருந்திருக்கிறது என்றே தோன்றுகிறது".

ஆழ்மன சக்தியின் மூலம் உடல் ஆரோக்கியத்தை பெற முடியும் என்றால் மரணத்தை மட்டும் ஏன் தவிர்க்க முடியவில்லை?

"உருவான எல்லாவற்றிற்குமே ஏதோ ஒரு நாள் அழிவு உண்டு. அது இயற்கையின் விதி. ஆழ்மனசக்தியால் இயற்கையின் எந்த மகத்தான விதிகளையும் மாற்றி விட முடியாது. ஆனால் இயற்கையின் சூட்சுமங்களைக் கண்டறிந்து அதைத் தனக்கு சாதகமாக ஆழ்மனசக்தி மூலம் ஒருவன் பயன்படுத்திக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியம், அபூர்வ சக்திகள் ஆகியவை இயற்கையின் விதிகளை அனுசரித்தே, அவற்றிற்கு உட்பட்டே சாத்தியமாகிறதே தவிர எதிர்த்து இயங்கி சாத்தியமாவதில்லை" 

எதிர்மறை எண்ணங்கள் இருக்கக் கூடாது என்று படித்திருக்கிறேன். ஆனால் நம்மை மீறி சில நேரங்களில் எழும் எதிர்மறை எண்ணங்களை பிடிவாதமாக தவிர்க்க வேண்டியது அவசியமா? அதை எப்படி செய்வது?

"எதிர்மறை எண்ணங்களை வெல்வது அதை எதிர்த்துப் போராடியல்ல. நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொண்டே போய் எதிர்மறை எண்ணங்களுக்கு இடமே இல்லாமல் போகும்படி வைத்துக் கொள்வது. நம்மை மீறி எதிர்மறை எண்ணங்கள் உருவாகும் போது பிடிவாதமாக தவிர்க்க முடியாது. போராடப் போராட அவை வலிமை தான் பெறும். அவை தோன்றும் ஆரம்ப கணங்களிலேயே அதற்கு எதிரான எண்ணங்களிலும், செயல்களிலும் ஈடுபட ஆரம்பித்தால் அவை போய் விடும். முறையான ஆழமான சிந்தனைகளாலும் கூட எதிர்மறை எண்ணங்களை ஒன்றுமில்லாமல் செய்து விட முடியும்" - கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் உடனுக்குடன் பதில் கிடைத்தது.

பொங்கிவரும் கடலாய் வாசகர்களை தனக்குள்ளே ஈர்த்துக்கொள்ளும் எந்த ஒரு புத்தகத்தையும் அதன் ஆசிரியர் அர்ப்பணிப்போடு தான் படைத்திருக்க வேண்டும். இந்த புத்தகமும் அந்த வகையைச் சேர்ந்தது தான் என்பது என் எண்ணம். அதை திரு கணேசன் அவர்கள் அடுத்து கூறுய வார்த்தைகள் உறுதிப்படுத்தின.

"இந்த புத்தகத்தின் கடைசி பத்து பன்னிரண்டு அத்தியாயங்களை நான் தியான மனநிலையில் இருந்து கொண்டே எழுதியிருக்கிறேன். அந்த நிலை அமையும் வரை எழுதாமல் காத்திருந்திருக்கிறேன். அதற்காக நிறைய உழைத்திருக்கிறேன். முடிக்கையில் ஒரு ஆத்ம திருப்தியை உணர்ந்திருக்கிறேன்". - எழுத்து என்பது சிலருக்கு பொழுதுபோக்கு. சிலருக்கு அது ஒரு தவம். இவர் எந்த வகையை சேர்ந்தவர் என்று நான் சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன்.

இவ்வளவு அர்பணிப்போடும்  ஈடுபாட்டோடும் எழுதும் இவருக்கு எழுத்தில் ஆர்வம் எப்போது எதனால் வந்திருக்கக் கூடும்? அதிலும் குறிப்பாக ஆன்மீக தேடலை சார்ந்தே இவருடைய எழுத்துக்கள் இருப்பதாக தோன்றுகிறதே!

"சிறு வயதில் இருந்தே நிறைய படிப்பவன் நான். சில எழுத்துக்களைப் படிக்கையில் இதை விட அழகாக நம்மால் எழுத முடியும் என்று தோன்றியதுண்டு. அந்த எண்ணமே எழுத வைத்தது என்று நான் நினைக்கிறேன். சிறு வயதில் இருந்தே ஆன்மீக நாட்டம் எனக்கு அதிகம். அதனால் அதிகமாக நான் எழுதுவதில் ஆன்மீகம் கலந்து விடும்"

ஆன்மீகம் என்றால் என்ன? அது கடவுள் நம்பிக்கை சம்மந்தப்பட்ட விஷயம் மட்டும் தானா? அல்லது வேறு ஏதேனும் கூட அதில் உள்ளதா?

"ஆன்மீகத்தை சில வார்த்தைகளில் விளக்கி முடிப்பது கஷ்டம். எத்தனை சொன்னாலும் அதில் விட்டுப் போனது ஏதாவது கண்டிப்பாக இருக்கும். பொதுவாக நம்மிடம் உள்ள இறைநிலையை உணர்வதும் அதை அடைவதும் ஆன்மீகம். அல்லது நமக்கும் இறைசக்திக்கும் உள்ள தொடர்பை உணர்வது ஆன்மீகம். அதற்காக நாம் செய்யும் அனைத்துமே ஆன்மீகம்"

ஆன்மீகத்திற்கும் தன்னம்பிக்கைக்கும் தொடர்பு உள்ளதா

நிறைய உண்டு. நான் அறிந்த பெரும்பாலான தன்னம்பிக்கையாளர்கள் ஆன்மிகவாதிகளே. அவர்களது தன்னம்பிக்கை இறைவன் என்னுடன் இருக்கிறான், அவன் என்னைக் காப்பான் என்கிற நம்பிக்கையால் ஆழப்படுகிறது. ஆன்மிகத்தில் ஈடுபடாத, அதில் நம்பிக்கை இல்லாத ஆட்களுடைய தன்னம்பிக்கை பிரச்னைகள் ஓரளவு வரும் வரை மட்டுமே தாக்குப்பிடிக்கிறது. அதற்கு மேல் நிலைமை மோசமாகும் போது அறிவு இது நம் சக்திக்கு மிஞ்சியதுஎன்று எடுத்துரைக்க ஆரம்பிக்கிறது. தன்னம்பிக்கை தளர்கிறது. ஆனால் உண்மையான ஆன்மிகவாதிகளுக்கு இறைவனுக்கு மிஞ்சி எதுவும் இல்லை என்பதால் என் இறைவன் அருள் இருக்கும் வரை எதுவும் என்னால் சமாளிக்க முடியாதது அல்லஎன்கிற உணர்வு திடமாக இருக்கும். அதுவே அவர்களது தன்னம்பிக்கையை அசைக்க முடியாததாக மாற்றி விடுகிறது.

 இவருடைய கதைகளில் எனக்கு பிடித்த அம்சம், முக்கிய கதாபாத்திரகள் மிகவும் தன்னம்பிக்கையும் தைரியமும் உள்ளவர்களாக இருப்பார்கள். அதற்கு காரணம் அடிப்படையில் அவர் மனதில் உள்ள தன்னம்பிக்கையா? அல்லது வாசகர்களுக்கு முடிந்த அளவு தன்னம்பிக்கையை தன்னுடைய எழுத்தின் மூலம் ஊட்ட வேண்டும் என்கிற எண்ணமா? - என்னுடைய இந்த கேள்விக்கு "இரண்டும் தான்" என்று பளிச்சென்று பதில் சொன்னவர் "பல நூறு கட்டுரைகளில் தெரிவிப்பதை விட உயிருள்ள கதாபாத்திரங்கள் மூலம் தெரிவிக்க முடிந்தவை ஏராளம். அந்த தாக்கமும் வீரியம் உள்ளதாக இருக்கும்" என்று விளக்கமளித்ததோடு மனிதரில் எத்தனை நிறங்கள் சிவகாமியே தன்னுடைய மனதிற்கு நெருக்கமான கதாப்பாத்திரம் என்றும் கூறுகிறார்..

பிறருக்கு தன்னம்பிக்கை என்னும் ஊட்டச்சத்தை எழுத்தின் மூலம் கொடுக்கும் இவர் 'அடுத்து என்ன செய்வது?' என்று புரியாமல் நிலைதடுமாறி நின்ற தருணம் ஏதேனும் இருக்குமா? அப்படி இருந்தால் அந்த சூழ்நிலையை எப்படி கடந்து வந்திருப்பார்

"அப்படி சில தருணங்கள் என் வாழ்க்கையிலும் இருந்திருக்கின்றன. அப்போதெல்லாம் இறைவனையே நான் பலமாகப் பிடித்திருந்தேன். அந்த நேரங்களில் என்ன செய்வது சரி என்று உள்மனம் சொல்கிறதோ அதைச் செய்து பொறுமையாக காத்திருந்திருக்கிறேன். சூழ்நிலையை மிகச்சுலபமாக கடந்தது மட்டுமல்லாமல் அந்த தருணங்களுக்குப் பின் முன்பிருந்ததை விட ஒருபடி உயர்ந்தும் இருக்கிறேன்" 

தன்னம்பிக்கையை பற்றி பேசும் பொழுது அமானுஷ்யனைப் பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை. ஆசிரியர் வெகுவாய் திட்டமிட்டு ரசித்து உருவாக்கிய கதாப்பாத்திரம் அமானுஷ்யன் என்று கேள்விப்பட்டேன். அது உண்மை என்றால் அந்த கதாபாத்திரம் அவர்  மனதில் எந்த புள்ளியில் உதித்திருக்கும்?

"அமானுஷ்யன் நான் மிக ரசித்து உருவாக்கிய கதாபாத்திரம் என்பது உண்மை. பழைய ஆங்கிலத் திரைப்படங்களான கராத்தே கிட் போன்ற படங்கள் எனக்கு மிகப்பிடிக்கும். வர்மக்கலை மீதும் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அதெல்லாமாக சேர்ந்து தான் அமானுஷ்யன் கதாபாத்திரம் உருவாகக் காரணமானது"

வலைதள வாசகர்களிடம் அமோக வரவேற்பு பெற்ற அமானுஷ்யன் கதை முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகே புத்தகமாக வெளிவந்துள்ளது. எதனால் இந்த தாமதம்?

"வாசகர்களிடையே அமானுஷ்யன் பெற்ற வரவேற்பு நீங்கள் கூறியபடி அமோகமானது தான். எழுதி முடித்து மூன்றாண்டுகளுக்குப் பிறகும் அந்த கதாபாத்திரத்தை தங்கள் அபிமான கதாபாத்திரமாகச் சொன்ன வாசகர்கள் பலர். அத்தனை பெரிய நாவலை பதிக்க பதிப்பாளர்கள் தயக்கம் காட்டினார்கள். அதன் நீளத்தைக் குறைத்தால் வெளியிடலாம் என்று சொல்லப்பட்ட போது நான் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.  அப்படிச் செய்வது நாவலின் உயிரோட்டத்தைப் பாதிக்கும் என்று நினைத்தேன். திரும்பத் திரும்ப படித்ததாக வாசகர்கள் சொன்ன நாவலை குறைத்து சிதைக்க என் மனம் ஒப்பவில்லை. தற்போதைய என் அனைத்து நூல்களையும் வெளியிட்ட ப்ளாக்ஹோல் மீடியா பப்ளிஷர்ஸ் பரம(ன்) இரகசியம் நாவலின் வெற்றியைத் தொடர்ந்து அமானுஷ்யனையும் பதிக்க முன்வந்தார்கள். 600க்கும் மேற்பட்ட பக்கங்களில் அமானுஷ்யன் வெளியாகியது"

இவருடைய படைப்புகள் ஒவ்வொன்றும் இவரை ஒரு நல்ல எழுத்தாளர் என்று எடுத்துரைக்கின்றன என்றால், இவர் நல்ல எழுத்தாளர் மட்டும் அல்ல... நல்ல ப்ளாகரும் கூட எனதை இவருடைய வலைத்தளம் நிரூபிக்கிறது. கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று அனைத்தும் வகை பிரிக்கப்பட்டு அடுக்கில் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆசிரியர் பற்றிய செய்திக் குறிப்பும் அவருடைய புத்தகங்கள் பற்றிய விபரங்களும்  வாசகர்களின் பார்வைக்கு சுலபமாகக் கிடைக்கின்றன.

"மதங்களில் சிறைப் பட்டுவிடாத ஆன்மீகம்" இது அவருடைய வலைதளத்தில் நான் படித்த வாசகம். மதங்களில் மனிதன் ஏன் சிறைப்படக் கூடாது? மதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக தோன்றுகிறதே! மதத்தை துறந்துவிட்டு ஆன்மீகத்தை மட்டும் பற்றிக்கொள்வது என்பது சாத்தியமா? - இதை பற்றி கேட்ட போது

"இறைவன் அல்லது இறைநிலை இலக்கு என்றால் மதங்கள் வழிகள் மட்டுமே. பல நேரங்களில் இலக்கான இறைவனை விட அதிகமான முக்கியத்துவத்தை பாதைகளான மதங்கள் பெற்று விடுவதுண்டு. அப்போது இலக்கான இறைவனை அடைய முடியாமல் மனிதன் அப்பாதையிலேயே சிறைப்பட்டு விடுகிறான். அதைத் தான் நான் அப்படிக் குறிப்பிட்டுள்ளேன். எத்தனை அழகான பாதையானாலும் கடக்க வேண்டியது தான். இலக்கே பிரதானம்.

எந்த மதத்தையும் சாராமல் இருந்தும் ஆன்மீகமாக ஒருவரால் இருக்க முடியும். ஆனால் சாதாரண மனிதர்களால் அது சாத்தியப்படாது. ஞானம் பெற்ற மனிதர்களால் மட்டுமே அது சாத்தியம்" என்று பதிலளித்தார்.

'ஆறாத மனக்காயங்களை ஆற்றுவது எப்படி?' - இந்த கட்டுரையை படித்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை இவரிடம் இந்த கேள்வியை கேட்க தோன்றியது. தாங்க முடியாத இழப்பு அல்லது துக்கத்திலிருந்து குறுகிய காலத்தில் எப்படி மீள்வது

"சில இழப்புகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது பாதிப்பது இயல்பே. அப்படி பாதிக்கப்படாமல் இருப்பது மனதளவில் விலகி இருக்கின்ற விஷயங்களில் மட்டுமே சாத்தியம். ஆனால் பாதிக்கப்பட்டாலும் அந்த துக்கங்களிலேயே தங்கி விடுவது அறிவோ, பக்குவமோ அல்ல. எதிலுமே மிக அதிகமான பற்றுதல் என்றுமே துக்க காரணி தான். அதனால் முதலில் மிதமாக இருத்தல் முதல் படி. புத்தரின் போதனைகளில் மிக முக்கியமான அம்சம் இது தான். Middle Way என்று அவர் சொல்வது இதைத் தான். நல்ல பொழுதுபோக்குகள், நல்ல நட்புகள், நல்ல புத்தகங்கள் ஆகியவை எல்லாம் நம்மை சீக்கிரம் துக்கத்தில் இருந்து மீள வைக்கும் வலிமை படைத்தவை"

உடல்நலம் மனநலம் இரண்டிலுமே நண்பர்களின் பங்கு அதிகமாக இருப்பதாக டாக்கர் பெலர்லி ஃபெர் கூறியருப்பதை, 'ஆராய்ந்து பழகுங்கள்' கட்டுரையில் படித்தேன். அதை பற்றி விளக்கம் கேட்ட போது,

"எந்த மாதிரி மனிதர்களுடன் அதிகம் பழகுகிறோமோ அவர்களது குணாதிசயங்கள் நம்மையும் அறியாமல் சிலவாவது நம்மை ஒட்டிக் கொண்டு விடும். அதனாலேயே ஆராய்ந்து பழகுவது மிக முக்கியமாகிறது. அற்ப சகவாசம் பிராண சங்கடம் என்று சொல்லும் பழமொழி மிக அர்த்தபூர்வமானது.  ஆயந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாந் துயரம் தரும் என்று வள்ளுவரும் சொல்லி இருக்கிறார். அதே போல அவர் வார்த்தைகளிலேயே இடுக்கண் களைவதும் நட்பு தான்" என்று கூறுகிறார்.

நிறைவான வாழ்க்கையை தீர்மானிப்பது எது? பூர்த்தி செய்யப்பட்ட ஆசைகளா? ஆசையை துறந்துவிட்ட வெற்று மனமா

"ஆசைகள் அனைத்தும் பூர்த்தியான மனிதன் இது வரையில் பிறக்கவில்லை. இனியும் பிறக்கப் போவதில்லை. ஏதோ சில ஆசைகளாவது கைகூடாமல் போவது தான் யதார்த்த வாழ்க்கை. ஆசையைத் துறக்க வேண்டும் என்பதே ஒரு ஆசை தான். அதனால் ஆசைகளில் இருந்து தப்பிக்கவும் வழியில்லை. பூர்த்தி செய்து திருப்தி அடைவதும் சாத்தியமில்லை.

மிக முக்கியம் என்று ஒருவன் நினைக்கும் விஷயங்களில் ஓரளவு திருப்தி எட்டும் வரையாவது சாதித்திருப்பதும், உண்மையாக நேசிக்கும் சிலரையாவது சம்பாதித்திருப்பதும், மனசாட்சி உறுத்தாத அளவுக்கு எதையும் செய்யாமலிருப்பதும் தான் நிறைவான வாழ்க்கையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள் என்று நினைக்கிறேன்" 
தெளிவான வார்த்தைகளில் நம்முடைய அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்துக் கொண்டிருக்கும் திரு கணேசன் அவர்கள் ஜாதகத் துறையிலும் பரிட்சயம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாதகத்தை பற்றிய சில பொதுவான சந்தேகங்கள் நம்மில் பலருக்கும் இருக்கக் கூடும். அதை பற்றியும் கேட்டு தெரிந்துக்கொள்ள நினைத்தேன்...

ஜாதகம் என்றால் என்ன? எதற்காக ஜாதகம் பார்க்க வேண்டும்?

"இந்த கேள்விகளுக்கு சரியாக பதில் எழுத எனக்கு சிறிய புத்தகமே எழுத வேண்டி வந்தது. அதை சுருக்கமாகச் சொல்வதென்றால் ஜாதகம் என்பது நம் பூர்வஜென்ம கணக்கு. சம்பாதித்திருக்கும் பாவ புண்ணியங்களை  இந்த இந்த கால கட்டத்தில் அனுபவிக்க வேண்டும் என்று கிரகநிலைகள் தெரிவிக்கின்றன. அந்தக் காலங்கள் பற்றி முன்பே தெரிந்து கொள்வது நம் செயல்களை அதற்கேற்றாற்போல வகுத்துக் கொள்ள உதவும். மேலும் விரிவான தெளிவான விளக்கங்கள் அந்த சிறிய நூலில் கிடைக்கும்"

பிறந்த நேரத்தைக் கொண்டுதான் ஜாதகம் கணிக்கப் படுகிறதா? அப்படியென்றால் ஆபரேஷன் செய்து பிரசவிக்கப்படும் குழந்தைகளின் ஜாதகம் பலிக்குமா பலிக்காதா?

"பிறந்த நேரத்தைக் கொண்டு தான் ஜாதகம் கணிக்கப்படுகிறது. ஆபரேஷன் செய்து பிரசவிக்கப்படும் குழந்தைகளின் ஜாதகத்திலும் மாற்ற முடியாத பல விஷயங்கள் உள்ளன. கிரகங்களில் சந்திரன் மட்டுமே இரண்டரை நாளில் ஒரு ராசி விட்டு மறு ராசிக்கு மாறுகிறது. மற்ற கிரகங்கள் பெரும்பாலும் ஒரு மாதம், ஒரு வருடம், இரண்டரை வருடங்கள் என்று ஒரு ராசி விட்டு அடுத்த ராசிக்கு மாறுபவை. இவையெல்லாம் மாற்ற முடியாத மிக முக்கிய கிரகநிலைகள். பிறந்த நட்சத்திரம், லக்னம் இவையெல்லாம் மாற்ற முடிந்த நேர காலத்தில் வருபவை. இது கூட விதி நிச்சயித்திருந்த நேரத்தின் படியே உங்கள் உத்தேசமும் இருந்தால் தான் உங்களால் மாற்ற முடியும். இல்லா விட்டால் மருத்துவர் தாமதம், தவிர்க்க முடியாத மற்ற ஏதோ ஒரு காரணம் வைத்து தள்ளிப் போய் விதிப்படியான நேரத்தில் தான் குழந்தை பிறக்கும்"

ஜென்ம பலன்கள் உண்மையா? மறுபிறவி உள்ளதா?

"ஜென்ம பலன்கள் உண்மை. இப்பிறவியின் கர்மவினைகளுக்கேற்ப மறுபிறவி அமையும்"

கடவுள், பிறப்பு இறப்பு பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

"கொஞ்சமாய் சொல்லி விளங்க வைக்கும் விஷயங்கள் அல்ல இவை. அப்படி சொல்ல முயற்சி செய்தாலும் ஒவ்வொரு விளக்கத்திலும் நூறு கேள்விகள் எழும். முடிவில் தெளிவை விட குழப்பமே மிஞ்சும்.  
உதாரணத்திற்கு பிரபஞ்சத்தை உருவாக்கி அதில் உள்ள அனைத்தையும் ஒரு ஒழுங்குமுறையோடு இயக்கிக் கொண்டிருக்கும் மகாசக்தி கடவுள் என்று சொல்லலாம். அந்த கடவுள் ஏன் பிரபஞ்சத்தை உருவாக்க வேண்டும். ஏன் அதை வழி நடத்த வேண்டும், அவரால் சும்மா இருக்க முடியாதா, அவரைப் படைத்தது யார் என்பது போன்ற கேள்விகள் எழும். உள்ளுணர்வினால் நம்மால் உணர முடியும் போது கேள்விகள் அற்றுப் போகும். ஆனால் உள்ளுணர்வின் மூலமாகவே அடுத்தவருக்கு உணர்த்த முடியாமல்  நாம் வார்த்தைகளையே பயன்படுத்தியாக வேண்டி இருப்பதால் இந்தப் பிரச்னை எழுகிறது"

ஜாதகக்காரர்கள் பரிந்துரைப்படி கோவிலில் செய்யப்படும் பரிகாரங்கள் நேர்த்திக்கடன்களை ஏன் செய்ய வேண்டும்

"சில கோயில்களுக்கு சில விசேஷ சக்திகள் இருக்கின்றன. அங்கு சென்று பக்தியுடன் தொழுவதால் அந்த சக்திகளால் சில நன்மைகள் ஏற்பட்டு நம் பிரச்னைகளின் தீவிரம் குறையலாம். ஆனால் விதிப்படி அனுபவிக்க வேண்டியிருப்பவற்றில் இருந்து ஒருவர் முழுவதுமாக தப்பித்து விட முடியாது"

ஏவிவிடுதல்... பில்லி... சூனியம் எல்லாம் உண்மையா?

"இவை முழுப் பொய்கள் அல்ல. இவற்றில் உண்மையின் அம்சங்கள் உண்டு. ஆனால் இவை பலவீனமாக இருப்பவர்களையே பாதிக்க முடிந்தவை. நோய்க்கிருமிகள் மிக  ஆரோக்கியமாக இருப்பவரை ஆக்கிரமித்து நோயில் ஆழ்த்தி விட முடியாது. நோய்க்கிருமிகளை தோற்கடிக்கக்கூடிய எதிர்ப்பு சக்திகள் நிறைய உள்ளவரைத் தாக்கினாலும் அவை தோற்று அழிந்து விடும். எதிர்ப்பு சக்திகள் குறைவாக இருக்கும் பலவீனமானவரை ஜெயித்து நோயில் தள்ளிவிடும். அது போலத் தான் நீங்கள் சொல்லி இருக்கும் மூன்றும். ஆன்மீகம் மற்றும் மனோபலத்துடன் இருப்பவர்களை எதுவும் செய்ய முடியாது. பயம், மன பலவீனம் உடையவர்களை தாக்கி கஷ்டப்படுத்தும்.

ஆனால் மிகப்பெரிய நிரந்தர பாதிப்பு பில்லி, சூனியம், ஏவல் ஆகியவற்றை செய்பவர்களுக்குத் தான் நேரும். அப்படிச் செய்யும் நபர்கள் முடிவில் தாங்கள் ஏற்படுத்திய துன்பங்களுக்கு ஆயிரம் மடங்கு துன்பங்கள் அனுபவித்து அழிந்து போவார்கள்"

வெகு நேரம் திரு நாராயண கணேசன் அவர்களுடைய படைப்புகளையும் அதை சார்ந்த சந்தேகங்களையும் கேட்டு தெளிவடைந்த எனக்கு தனிப்பட்ட முறையில் அவரைப் பற்றியும் அவர் குடும்பத்தைப் பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

"தொழிலில் நான் வங்கி ஊழியன், எழுத்தாளன். நிறைய படிப்பவன். சாமானிய ஜனங்களுக்கும் நல்ல விஷயங்கள் போய்ச் சேர வேண்டும் என்ற பேராவல் கொண்டவன். என் எழுத்தினால் புகழும், செல்வமும், விருதுகளும் கிடைப்பதை விட படிப்பவர்களுக்கு பயன்பாடு அதிகம் கிடைப்பதே உண்மையான வெற்றி என்று ஆத்மார்த்தமாக நம்புகிறவன். அன்பும், அமைதியும், திருப்தியும் உடையவன். எதிர்மறை உண்மைகளைச் சொல்ல வேண்டுமென்றால் சில விஷயங்களில் கொஞ்சம் சோம்பேறி, சில விஷயங்களில் அடிப்படையான சாதாரண விஷயங்கள் கூட அறியாதவன்...

என் மனைவி அன்பானவர், சுறுசுறுப்பானவர். எங்களுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் இன்ஜீனியரிங் முதலாமாண்டு படிக்கிறார். இரண்டாம் மகள் ப்ளஸ் ஒன் படிக்கிறார். இருவரும் நன்றாகப் படிக்கிறார்கள். மூத்த மகள் ஓவியம் அழகாக வரைவார். இரண்டாம் மகளுக்கு இசையில் நல்ல ஆர்வம்.

எனக்கு ஒரு சகோதரன், இரு சகோதரிகள். நாங்கள் நான்கு பேரும் திருமணமாகி குழந்தைகள் ஆன பின்னும், (ஒரு சகோதரி பேரன் எடுத்து விட்டாள்), இன்றும் மிக அன்பாகவும் நெருக்கத்தோடும் இருக்கிறோம்".

ஆன்மீகம் சார்ந்த இவருடைய எழுத்துக்களை இவருடைய குடும்பத்தார் எப்படி பார்க்கிறார்கள்?

"அவர்கள் பாராட்டுவதும் இல்லை. சிறுமைப்படுத்துவதுமில்லை. குறுக்கீடுகள் செய்யாமல் இருப்பதே அவர்கள் செய்யும் மிகப்பெரிய உதவி என்று நான் நினைக்கிறேன்"

இவர் எப்பவுமே சீரியசான மனிதர் தானோ! விளையாட்டு மற்றும் சிறு கேளிக்கைகளுக்கு இவர் வாழ்வில் இடம் இருக்கிறதா இல்லையா?

"என் எழுத்தின் அளவு நான் ஆள் சீரியஸ் இல்லை. வீட்டில் கேலியும் கிண்டலும் நானும் செய்வேன். வீட்டிலும் செய்வார்கள். அதையும் ரசிப்பேன். வீட்டில் வேண்டும் என்றே அவ்வப்போது அவர்கள் வம்புக்குப் போய் வாங்கிக் கட்டிக் கொள்ளவும் செய்வேன். இது போன்ற விஷயங்கள் இல்லாத வாழ்க்கையில் என்ன சுவாரசியம் இருக்க முடியும்?

ஏப்ரல் மாதம் என் குடும்பமும், தம்பி குடும்பமும் சேர்ந்து காஷ்மீர் போய் வந்தோம். சென்ற வருடம் சகோதர சகோதரியர் குடும்பங்களும் சேர்ந்து கர்னாடகாவில் கோயில் தலங்களுக்குப் போய் விட்டு வந்தோம். ஆனால் தினசரி வாழ்க்கையில் கொஞ்சம் பிசி தான். வங்கி வேலையும், எழுத்து வேலையும், மற்ற வேலைகளும் சேர்ந்து கொள்வதால் பொழுதுபோக்குக்கு நேரம் குறைவு"

இப்படி நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இவருடைய இலக்கு தான் என்ன?

"ஆன்மீகத்திலும், எழுத்திலும் சிகரங்களை எட்ட வேண்டும் என்பது என் இலக்கு. அந்தப் பயணத்தில் முன்னேற்றம் தொடர்ந்து இருந்தாலும் அவ்வப்போது சில சறுக்கல்களும் உண்டு. அதிலிருந்து கற்றுக் கொண்டு திரும்பத் திரும்ப மீண்டு பயணத்தைத் தொடர்கிறேன். இலக்கை அடைகிறேனோ இல்லையோ ஆரம்பித்த இடத்தில் இருந்து நிறைய தூரம் வந்திருக்கிறேன் என்பதே என் இப்போதைய ஆறுதல்!"

இலக்கை நோக்கி வேகமாக பயணித்துக் கொண்டிருக்கும் இவர் நிச்சயமாக கூடிய விரைவில் சிகரத்தை எட்டுவார் என்னும் நம்  நம்பிக்கை நிஜமாக கடவுள் துணை நிற்கட்டும்.  


நன்றி: சகாப்தம்
http://www.sahaptham.com/article/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D

6 comments:

  1. Simpliity and clarity are your plus points sir. You reach more people. Congrats

    ReplyDelete
  2. ஆன்மீகத்திலும்,எழுத்திலும் சிகரங்களை எட்ட வேண்டும் என்பது என் இலக்கு/// ettiyavudan engalukkum(vasakarkalukkum) valikattungal anna...!

    ReplyDelete
  3. ரசிக்கும் படியான பேட்டி. பகர்வுக்கு நன்றி.
    மேலும் வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. very interesting! your answers are crystal clear!

    ReplyDelete
  5. Excellent insight ganesan sir. Really wanted to meet you in Coimbatore. God bless you Sir. Uday.

    ReplyDelete
  6. ஒவ்வொரு விஷயத்திலும் உங்களுக்கு இருக்கும் ஆழ்ந்த சிந்தனைகள்,தெளிவான
    உங்கள் பதில்கள் மூலம், வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.
    சிவகாமியை,ஒரு முழுமை பெற்ற கதாபாத்திரமாக தான் என்னால் உணரமுடிந்தது....
    உங்களுக்கும் மிக நெருங்கிய கதாபத்திரம் என்று அறிய மிகவும் மகிழ்வாக இருந்தது...
    உங்கள் இலக்கை அடைய வாழ்த்துகள்.....

    ReplyDelete