சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, June 6, 2013

பரம(ன்) ரகசியம் – 47



ஸ்வர் காரில் இருந்து இறங்கியவுடன் சுற்றிலும் பார்த்தான். மிக விஸ்தாரமான இடம். சில வகுப்பறைகளில் இருந்து வேதகோஷம் கேட்டது.

சற்று முன் கேட்டைத் திறந்த வாட்ச்மேன் “அது தான் சார் ஆபிஸ் ரூம்என்று கை காட்டி விட்டுப் போனான். ஈஸ்வர் அங்கு உள்ளே போய்  வேதபாடசாலை நிர்வாகியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அவன் பெயரைக் கேட்டவுடன் அவர் எழுந்து நின்று அவனை வரவேற்றார். அவருக்குக் கிட்டத்தட்ட அறுபது வயதிருக்கும். அவர் நெற்றியில் திருநீற்றுப் பட்டை இருந்தது. குடுமி வைத்திருந்தார். முடியெல்லாம் பாதி நரைத்திருந்தது. தன்னை சிவராம ஐயர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் குரலில் ஏனோ படபடப்பு தெரிந்தது.

அவரே அவனை அழைத்துக் கொண்டு வேதபாடசாலையைச் சுற்றிக் காட்டினார். வகுப்பறைகள் மிக சுத்தமாக இருந்தன. வகுப்பறைகளை அவர்கள் கடந்த போது மாணவர்கள் அவர்களை வேடிக்கை பார்த்தார்கள்.  மாணவர்கள் தங்கும் இடங்கள், ஆசிரியர் தங்கும் இடங்கள் எல்லாம் தனித்தனியாக வசதியாக இருந்தன. பெரிய நூலகம் இருந்தது. பத்தாயிரத்திற்கும் மேல் புத்தகங்கள் இருப்பதாக அவர் பெருமையுடன் சொன்னார்.

சற்று தள்ளி இருந்த ஒரு வீட்டைக் காண்பித்து குருஜி வருடம் ஒரு முறை வந்து அங்கு தான் தங்குவார் என்று சொன்னார். இப்போதும் குருஜி அங்கு தான் இருக்கிறார் என்று சொன்னார். ஈஸ்வர் தலையாட்டினான். நூலகத்தைத்  தாண்டி நிறைய துளசிச்செடிகள், பூச்செடிகள், மரங்கள் கொண்ட தோட்டம் இருந்தது. எல்லாவற்றையும் தாண்டி ஒதுக்குப் புறமாக ஒரு பெரிய வீடு இருப்பதைக் காட்டி ஈஸ்வர் கேட்டான். அது என்ன?

சிவராம ஐயர் அவசர அவசரமாகச் சொன்னார். “அங்கு தட்டுமுட்டுச் சாமான் எல்லாம் போட்டு வைத்திருக்கிறோம். அங்கே யாரும் இல்லை....

ஈஸ்வர் தலையாட்டினான். அந்த கட்டிடத்திற்கு வெளியே இரண்டு பேர் மர வேலைகளில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்தான். ஈஸ்வர் ஒரு நிமிடம் நின்று அந்த ஒதுக்குப் புறக் கட்டிடத்தையே பார்க்க சிவராம ஐயருக்கு வயிற்றைக் கலக்கியது. நல்ல வேளையாக ஈஸ்வர் அவர் பக்கம் திரும்பிப் பார்க்காததால் அதைக் கவனிக்கவில்லை.

ஒரு ஆள் குருஜி தங்கியிருந்த வீட்டின் வாசலில் இருந்து சிவராம ஐயருக்கு சைகை காண்பித்தான். சிவராம ஐயர் ஈஸ்வரிடம் சொன்னார். “உங்களுக்கு குருஜியைப் பார்க்க விருப்பம் இருந்தால் இப்போது அவரைப் பார்த்துப் பேசலாம்....     

ஈஸ்வர் ஆவலுடன் குருஜியைச் சந்திக்கச் சென்றான். வாசல் வரை அவனை அழைத்துச் சென்ற சிவராம ஐயர் நிம்மதியாக அவனிடம் இருந்து விடை பெற்றார்.

குருஜி ஈஸ்வர் வந்திறங்கிய கணத்தில் இருந்து பார்வை எட்டிய தூரத்தில் அவன் இருக்கும் போதெல்லாம் அவனையே தான் ரகசியமாய் கண்காணித்து வந்தார். அவன் இறங்கியவுடன் செய்த முதல் காரியமே அவரைத் திகைப்பில் ஆழ்த்தியது. மண்ணைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு அவன் இறங்கக் காரணம் அவருக்குப் புரியவில்லை. அமெரிக்காவில் பிறந்து அமெரிக்காவிலேயே வளர்ந்த அவன் கோயில் மண்ணைத் தொட்டுக் கும்பிட்டாலே அது ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் தான். அப்படி இருக்கையில் அவன் இங்கு வந்தவுடன் தொட்டுக் கும்பிடக் காரணம் வேதங்கள் சொல்லித் தரப்படும் இடம் என்பதாலா இல்லை.... அதற்கு மேற்பட்ட காரணத்தை அவரால் நினைக்க முடியவில்லை. முக்கியமாய் சிவலிங்கம் இங்கு இருப்பதை அவன் உணர்ந்து செய்திருக்கக் காரணமே இல்லை.. அவருடைய குருநாதரான சித்தர் சித்து விளையாட்டு ஏதேனும் செய்திருந்தால் ஒழிய.....

ஈஸ்வரைச் சுற்றி ஏதாவது ஒளிவட்டம் தெரிகிறதா என்று குருஜி பார்த்தார். எதுவும் தெரியவில்லை. அப்படி இருந்திருந்தாலும் அவருக்குத் தற்போது தெரிய வாய்ப்பில்லை. கணபதியைச் சுற்றி பார்க்க முடிந்தவரை தாக்குப் பிடித்த அந்த சக்தி அப்படியே வடிந்து விட்டது. மூன்று நாட்கள் தவமிருப்பது போல் இருந்து பெற்ற அந்த கூர்சக்தி யதார்த்த வாழ்க்கைக்கு வந்தவுடன் காணாமல் போய் விட்டது.... அதை அவர் பெரியதாக நினைக்கவில்லை. நினைக்க இப்போது எத்தனையோ முக்கிய விஷயங்கள் இருக்கின்றன!

சிவலிங்கம் இருக்கும் கட்டிடத்தை ஈஸ்வர் ஒரு நிமிடம் பார்த்து நின்றது வேறு அவருக்கு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. கணபதி எந்தக் காரணத்தைக் கொண்டும் வெளியே வந்து விடாமல் இருக்க அவர் ஆட்களை ஏற்பாடு செய்திருந்தாலும் கூட ஈஸ்வர் அவரைச் சந்திக்க வரும் வரை பதட்டம் அவரை விட்டு விலகவில்லை.

வணக்கம் குருஜிஎன்று கைகூப்பி வணங்கிய ஈஸ்வர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.  “நான் ஈஸ்வர். அமெரிக்காவில் விர்ஜினியா யூனிவர்சிட்டியில் சைக்காலஜி டிபார்ட்மெண்டில் இருக்கிறேன். இங்கே அப்பாவின் பூர்விக வீடு இருக்கிறது. ஒரு மாச லீவில் வந்திருக்கிறேன். அமெரிக்காவில் இருக்கும் என் நண்பன் ஒருத்தன் உங்கள் வேத பாடசாலைக்கு அடிக்கடி பணம் அனுப்புகிறவன். முடிந்தால் ஒரு தடவை பார்த்து விட்டு வரச் சொன்னான். அதனால் தான் வந்தேன். போனஸாக உங்களைப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்ததில் சந்தோஷம்....

குருஜி புன்னகையுடன் அவனை உட்காரச் சொன்னார். “உங்களைப் பார்த்ததில் எனக்கும் சந்தோஷம். வெளிநாட்டுக்குப் போனவுடனேயே தாய்நாட்டு சம்பந்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அறுந்து போகிறது. ஆனால் அப்படி இல்லாமல் இன்னும் தாய்நாட்டு மண் மேல் அக்கறை இருந்து அதிலும் இது மாதிரி வேதம், ஆன்மிகம் மேல் ஆர்வம் இருந்து, முடிந்த பண உதவி செய்யும் உங்கள் நண்பர் மாதிரி ஆட்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். இங்கே உங்கள் பூர்விக வீடு எங்கே இருக்கிறது? இங்கே யார் இருக்கிறார்கள்அவர் அறியாதது போலக் கேட்டார்.
ஈஸ்வருக்கு பரமேஸ்வரனைப் பற்றிச் சொல்ல வேண்டி வந்தது.

குருஜி ஆச்சரியம் காட்டினார். “ஓ அவர் பேரனா நீங்கள்? சமீபத்தில் கூட அவர் அண்ணா கொலை செய்யப்பட்டு சிவலிங்கம் ஒன்று திருட்டுப் போனதாகக் கேள்விப்பட்டேன்....

ஈஸ்வர் ஆமென்று தலையசைத்தானே ஒழிய அதைப் பற்றி எதுவும் சொல்லப் போகவில்லை. அவனாக அதைப் பற்றி ஏதாவது பேசுவான் என்று குருஜி எதிர்பார்த்தது நடக்கவில்லை.

தயவு செய்து பன்மையில் அழைக்காதீர்கள், ஒருமையிலேயே அழையுங்கள் என்று சொன்ன ஈஸ்வர்  பிறகு அவர் எழுத்துக்களை புத்தகங்களில் படித்திருப்பதைச் சொன்னான். அவர் பேச்சுக்களை யூட்யூபில் கேட்டிருப்பதைச் சொன்னான். பதஞ்சலியின் யோகசூத்திரங்கள் பற்றி அவர் பேசிய தொடர் உரைகள் தன்னை நிறைய சிந்திக்க வைத்தது என்று சொன்னான்.

அவன் பேச்சில் ஒன்றை குருஜி கவனித்தார். அவன் புகழ்ச்சியாகப் பேசிய போதும் தேவை இல்லாமல் அபரிமிதமாகப் புகழ்ந்து விடவில்லை. பலரும் அவரைக் கண்டு பேசச் சந்தர்ப்பம் கிடைத்த மகிழ்ச்சியில் ஆஹா ஓஹோ என்று புகழ்வார்கள். புளங்காகிதம் அடைந்து பேசுவார்கள். உங்களைப் பார்த்தது நான் செய்த பெரும் பேறு என்பது போலப் பேசுவார்கள். ஈஸ்வர் வித்தியாசப்பட்டான்.

அவர்கள் பேச்சு ஆன்மிகம் பக்கம் நகர்ந்தது. குருஜி மிக அருமையாகத் தன் கருத்துக்களைச் சொன்னார். நிறைய புனித நூல்களில் இருந்து உவமைகளை சிறிய சொல் கூட மாறாமல் சொன்னார். வரலாற்று உதாரணங்களைச் சொன்னார். ஈஸ்வரால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை. மனிதரா இவர் இல்லை என்சைக்ளோபீடியாவா?.....

குருஜி விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் அவன் உளவியல் துறையில் என்னவாக இருக்கிறான் என்று விசாரித்தார். ஈஸ்வர் உதவிப் பேராசிரியராக இருப்பதாக மட்டும் ஈஸ்வர் சொன்னானே ஒழிய உலகப் புகழ்பெற்ற மனோத்த்துவக் கட்டுரைகளைத் தந்திருப்பதாகவோ, தன் துறையில் தான் பெரியவன் என்றோ சுற்றி வளைத்துக் கூடச் சொல்லவில்லை.  தன்னைப் பற்றியும் அவன் அதிகமாகப் புகழ்ந்து விடவில்லை. சிலர் அடுத்தவரைப் புகழ்வது என்றால் கஞ்சத்தனமாக இருப்பார்கள். ஆனால் தங்களை வியந்து கொள்வதில் அவர்களுக்குச் சலிப்பிருக்காது. ஈஸ்வர் இதிலும் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்பட்டான்.

இந்த வயதில் இந்த மன முதிர்ச்சி அபூர்வம் என்று குருஜி நினைத்தார்.

ஈஸ்வர் அடுத்ததாக ஆர்வத்துடன் அவர் இளமைக்காலத்தின் இமயமலை அனுபவங்களைப் பற்றிக் கேட்டான். குறிப்பாக சித்தர்களுடனான அவர் அனுபவங்களைக் கேட்டான்.

குருஜிக்கு பேச்சு தர்மசங்கடமான விஷயங்களை நோக்கித் திரும்புவது போலத் தோன்றியது. ஆனால் வேறு வழியில்லாமல் அவர் குருநாதர் தவிர மற்ற சித்தர்களைப் பற்றிப் பேசினார்.

“அதெல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள் ஈஸ்வர். ஒரு சித்தருடன் நான் ஆறேழு மாதம் கூட இருந்திருப்பேன். அவர் ஒரு வார்த்தை கூட வாய் திறந்து பேசினதில்லை. அவர் ஊமையோ என்று கூட எனக்கு சந்தேகமாக இருந்தது. ஆனால் அவர் ஊமையல்ல. அவசியம் இல்லாமல் பேசுவது வீண் என்று நினைக்கிற ரகம் அவர். அவ்வளவு தான். இன்னொரு சித்தர் இமயமலையில் மார்கழியில் கூட வெறும் கோவணத்தோடு தான் சுற்றிக் கொண்டிருப்பார். நமக்கெல்லாம் எத்தனை துணிகள் உடம்பில் சுற்றிக் கொண்டாலும் உடம்பு வெட வெடவென்று நடுங்கும். அவருக்கு அந்தப் பிரச்சினையே இல்லை..... பொதுவாக அவர்கள் மக்களோட கவனத்தைக் கவர விரும்புவதில்லை... மக்கள் கவனம் ஒரு தொந்திரவாகக் கூட அவர்கள் நினைக்கிறதுண்டு.... அதனாலேயே நகரங்களுக்கு அபூர்வமாய் போனாலும் ஏதோ ஒரு பாமரன் மாதிரி தான் தென்படுவார்கள். சில நேரங்கள்ல பொது இடங்களில் இருந்தால் கூட மற்றவர்கள் கண்ணுக்குத் தென்படாமலேயே இருந்துடறதும் உண்டு...

கண்கள் தீ மாதிரி ஜொலிக்கிற சித்தர் யாரையாவது நீங்கள் இதுவரைக்கும் பார்த்திருக்கிறீர்களா குருஜி

குருஜி ஒரு கணம் அப்படியே உறைந்து போனார். இந்த நேரடிக் கேள்வியை அவனிடமிருந்து அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. அவர் தன்னை சமாளிக்க அரை நிமிடம் தேவைப்பட்டது.

தன் கேள்வி அவரை அதிர்ச்சி அடையச் செய்து விட்டது என்று ஈஸ்வருக்குப் புரிந்தது. ஒரு கேள்விக்கு நேரம் கழித்து வரும் பதில் கூட பல உண்மைகள் சொல்லும் என்பதை உளவியலில் கரை கண்ட அவன் அறிவான். பல நேரங்களில் அப்புறமாக வரும் பதிலை விட அதற்கு முன் வரும் மௌனம் நிறைய விஷயங்களை உணர்த்தி விடும்... தெரியும் அல்லது தெரியாது என்று சொல்வதற்கு ஏன் இந்த அதிர்ச்சி?

யோசிப்பது போல பாவனை செய்த குருஜி சாதுர்யமாகப் பதில் சொன்னார். “அப்படி ஒரு சித்தரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை. நீ ஏன் ஈஸ்வர் கேட்கிறாய்?

எங்கள் பெரிய தாத்தாவிடம் அந்த சிவலிங்கத்தைக் கொண்டு வந்து கொடுத்த சித்தர் கண்கள் அப்படி அடிக்கடி ஜொலிக்குமாம். கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்களும் பல சித்தர்களோடு பழகியவர் அல்லவா அதனால் தான் கேட்டேன்...

பேச்சு சிவலிங்கம் பற்றி வந்தவுடன் குருஜி அதைப் பிடித்துக் கொண்டார். இவன் வாயில் இருந்து அந்த சிவலிங்கம் பற்றி என்னவெல்லாம் வருகிறது என்று பார்க்க வேண்டும்.  ஈஸ்வர் அந்தக் கொலைகாரனை அனுப்பினதும், சிவலிங்கத்தைத் திருடிகிட்டு போனதும் யார் என்று தெரிந்ததா?..

“இன்னும் தெரியலை குருஜி

அந்த சிவலிங்கத்தைத் திருடிகிட்டுப் போகற அளவுக்கு அதில் என்ன இருக்கிறது ஈஸ்வர்? அது ஸ்படிக லிங்கம் மரகத லிங்கம் மாதிரியான ரகமா என்ன?

“இல்லை குருஜி. அதை சக்தி வாய்ந்த சிவலிங்கமாக சிலர் நம்பற மாதிரி தெரியுது

குருஜி ஆச்சரியப்படுவது போல நடித்தார். சக்தி வாய்ந்த சிவலிங்கமாக இருந்தால் கும்பிட்டு விட்டுப் போகலாமே, ஏன் திருடிக் கொண்டு போக வேண்டும்?

தங்களிடம் அந்த சிவலிங்கம் இருந்தால் அந்த சக்தியைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சிலர் நினைத்திருக்கலாம்...

“ஆராய்ச்சியாளனாகிய நீ என்ன சொல்கிறாய் ஈஸ்வர் அது சாத்தியமா?

ஈஸ்வர் விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் உளவியல் உதவிப் பேராசிரியர் என்று சொல்லி இருந்தானே ஒழிய ஆராய்ச்சியாளன் என்று குருஜியிடம் சொல்லவே இல்லை. அப்படி இருக்கையில் எப்படி அதைச் சொன்னார் என்ற ஆச்சரியம் ஈஸ்வருக்கு எழுந்தாலும் அவன் காண்பித்துக் கொள்ளாமல், என்ன சொல்வது என்று யோசிப்பது போல் நடித்தான். ஆனால் அவன் மூளை வேகமாய் மற்ற சில விஷயங்களையும் கவனிக்கச் சொன்னது. அவர் பொதுவாக ஆன்மிகம், வரலாறு போன்றவை பற்றிப் பேசும் போது மிக இயல்பாகவே இருந்தாலும் சிவலிங்கம் பற்றிப் பேசும் போது மட்டும் அவர் குரலிலும் கண்களிலும் ஒரு கூடுதல் ஆர்வம் இருந்தது.

அதில் தவறு ஒன்றையும் அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. சிலருக்கு சில விஷயங்களை அதிகமாகத் தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும்.... ஈஸ்வருக்கு அந்த ஆர்வத்தின் ஆழத்தைச் சோதித்துப் பார்க்கத் தோன்றியது. அதனால் சொன்னான். எனக்கென்னவோ சிவலிங்கத்தின் சக்தியை அப்படி யாரும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்று தான் தோன்றுகிறது

ஏன் ஈஸ்வர்? இறைவனின் சக்தியோ இயற்கையின் சக்தியோ என்ன பெயர் வைத்துக் கொண்டாலும் சரி அது விருப்பு வெறுப்பு இல்லாதது, அதை யாரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன். உதாரணத்திற்கு மின்சாரத்தை எடுத்துக் கொள்ளேன். யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இந்த ஆள் ஸ்விட்ச் போட்டால் தான் எரிவேன் என்று அது பாரபட்சம் காட்டுமா என்ன?

ஈஸ்வர் சொன்னான். அது இறைவன் சக்தியாக மட்டும் இருந்தால் நீங்கள் சொல்வது சரி. அது சித்தர்கள் தங்கள் சக்தியை எல்லாம் ஆவாகனம் செய்து வணங்கப்பட்ட சிலை என்று சொல்கிறார்கள். அந்த சித்தர்கள் எந்த மாதிரி சக்திகளை எல்லாம் எந்த நோக்கத்திற்காகவெல்லாம் ஆவாகனம் செய்து வைத்திருக்கிறார்கள் என்று யாருக்குத் தெரியும். சித்தர்கள் கூட ஒன்றிரண்டு பேர் அல்ல. பல நூறு வருஷங்களாய் பல விதமான சித்தர்கள் அப்படிச் செய்து வணங்கி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட இதெல்லாம் கம்ப்யூட்டர் ப்ரோகிராம் மாதிரி. சித்தர்கள் எந்த ப்ரோகிராம் போட்டு வைத்திருக்கிறார்களோ அப்படித் தான் அந்த சிவலிங்கம் இயங்கும் என்று நினைக்கிறேன்...

குருஜி ஒரு கணம் பேச்சிழந்து போனார். ஆழமாய் யோசித்தால் அவன் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை என்று தோன்றியது. அவன் சொன்னது ஏதோ ஒரு விதத்தில் அவரைப் பாதித்தது போல ஈஸ்வருக்குத் தோன்றியது.

குருஜி சில நொடிகளில் இயல்பு நிலைக்கு மாறினார். “நீ சொல்வதும் சரி தான் ஈஸ்வர். ஆனால் ஒரு கம்ப்யூட்டரை ஒரு ப்ரோகிராம் போட்டு ஒரு விதமாக இயக்க முடியும் என்றால் இன்னொரு ப்ரோகிராம் போட்டு வேறு விதமாகவும் இயக்க முடியும் இல்லையா?

“முடியும். ஆனால் அந்த சித்தர்கள் போட்ட ப்ரோகிராமைப் புரிந்து கொண்டால் தான் வேறு ப்ரோகிராம் எப்படிப் போடுவது என்று சிந்திக்கக் கூட முடியும். அந்த அளவுக்கு திறமை இருக்கிறவர்கள் கைகளுக்கு அந்த சிவலிங்கம் போயிருந்தால் தான் இந்த வாதம் பொருந்தும்....

இது பற்றி அதிகமாகப் பேசி விட்டோமோ என்ற சந்தேகம் குருஜிக்கு வந்தது. அவன் வாயில் இருந்து வார்த்தைகளை வரவழைப்பதற்குப் பதிலாக, தானும் பேசிக் கொண்டிருப்பது அபாயம் என்று உள்ளுணர்வு எச்சரிக்க குருஜி மெல்ல பேச்சை மாற்றினார்.

“நீ சித்தர்கள் யாரையாவது பார்த்திருக்கிறாயா ஈஸ்வர்?

“இல்லை குருஜி. நிறைய சக்தி வாய்ந்த ஆட்களைப் பார்த்திருக்கிறேன். அமெரிக்காவிலும் அது போல ஆட்கள் உண்டு. ஆனால் சித்தர்கள் அந்த சக்திகளையும் கடந்து போகக் கூடியவர்கள் அல்லவா? அப்படிப்பட்ட ஆட்கள் பார்க்கக் கிடைக்கவில்லை.

ஜவுளிக்கடையில் பார்த்தது சித்தர் என்று அவனுக்கு விளங்கவில்லையா என்று குருஜிக்கு சந்தேகம் வந்தது. கணபதி சொல்வதை வைத்துப் பார்த்தால் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களில் சித்தர் கண் மறைந்து போயிருக்க வேண்டும். ஈஸ்வர் அவரைச் சரியாகப் பார்க்கக் கூட நேரம் இருந்திருக்காது. கணபதியைப் பற்றிப் பேச்சு எடுக்க எந்த முகாந்திரமும் இல்லாததால் குருஜிக்கு அவன் பேச்சை எடுக்க முடியவில்லை. முடிந்திருந்தால் கணபதி பற்றி என்ன நினைக்கிறான் என்பதை அவர் தெரிந்து கொண்டிருப்பார்.

குருஜி தன் மற்ற முக்கிய சந்தேகத்தைக் கேட்டார். ஈஸ்வர் தற்செயலாய் நான் நீ வேதபாடசாலைக்குள் நுழைந்த போது இந்த மண்ணைத் தொட்டுக் கும்பிட்டதைக் கவனித்தேன். என்ன காரணம்?

ஈஸ்வர் இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. ஆனால் சமாளித்தான். “வேதங்கள் சொல்லித் தரப்படும் இடம் என்கிறதால் அப்படிக் கும்பிடத் தோன்றியது...

குருஜிக்கு நம்ப முடியவில்லை. இவன் ஆள் செண்டிமெண்ட் ரகமோ, வேதங்கள் மீது ஈடுபாடு உள்ள ரகமோ அல்ல. எதையோ மறைக்கிறான்.... என்னவாக இருக்கும்?

கடிகார முள் ஒன்றரை மணியைக் காட்டியது. குருஜி அவனைச் சீக்கிரம் அனுப்பி விட நினைத்தார். “சரி... ஈஸ்வர்.. உன்னை சந்தித்ததில் ரொம்ப சந்தோஷம்.... உன் நேரத்தை நிறைய எடுத்துக் கொண்டேன் என்று நினைக்கிறேன்...

ஈஸ்வர் எழுந்தான். “நான் சொல்ல வேண்டியதை நீங்கள் சொல்கிறீர்கள் குருஜி.....

“இன்னும் எத்தனை நாள் இந்தியாவில் இருப்பாய் ஈஸ்வர்?

இனி மூன்று வாரம் வரை இருப்பேன் குருஜி. நீங்கள் இந்த வேதபாடசாலையில் எத்தனை நாள் இருப்பீர்கள் குருஜி?

“நான்.... நான்... நாளைக்குப் போய் விடுவேன்

“இந்த வேதபாடசாலையில் தங்குகிற சமயம் ஒரு சிறப்புச் சொற்பொழிவு தருவீர்கள் என்று கேள்விப்பட்டேன். இந்த முறை இல்லையா குருஜி

இந்த தடவை இல்லை ஈஸ்வர்.

ஈஸ்வர் அவருக்கு நன்றி தெரிவித்து விட்டுக் கிளம்பினான். போகும் போது திடீரென்று ஒரு உண்மை உறைத்தது. அந்த சிவலிங்கம் ஒரு சித்தர் தந்தது  என்று மட்டும் தான் ஆரம்பத்தில் அவன் குருஜியிடம் சொன்னான். பல நூறு வருடங்களாக சித்தர்கள் பூஜித்தது போன்ற தகவல்களை அவன் சொல்லி இருக்கவில்லை. ஆனாலும் கூடக் கடைசியில் அதைச் சொல்லி சித்தர்கள் சக்திகளை எந்த நோக்கத்திற்காக அந்த சிவலிங்கத்தில் ஆவாகனம் செய்திருக்கிறார்களோ என்று அவன் வாய் தவறிச் சொன்ன போது கூட அவர் ஆச்சரியப்பட்டு விடவில்லை. முதல் முறை அறிவதாக இருந்தால் கேட்டிருக்கக் கூடிய கேள்விகள் எதையும் குருஜி கேட்கவில்லை.....

ஈஸ்வர் காரை நெருங்கும் வரை குருஜியின் பார்வை தன் மேல் இருப்பது போலவே அவனுக்கு உள்ளுணர்வு சொல்லியது. காரை நெருங்கியவுடன் திடீர் என்று திரும்பிப் பார்த்தான். ஜன்னல் வழியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்த குருஜி சடாரென்று ஜன்னலில் இருந்து விலகினார்.

வேதபாடசாலையை விட்டுக் காரில் கிளம்பும் போது ஈஸ்வருக்கு மனதில் மேலும் நிறைய கேள்விகள் இருந்தன.


(தொடரும்)


-          என்.கணேசன்

6 comments:

  1. வேதபாடசாலையை விட்டுக் காரில் கிளம்பும் போது ஈஸ்வருக்கு மனதில் மேலும் நிறைய கேள்விகள் இருந்தன.

    விரைவில் பதில் கிடைக்கட்டும் ..!

    ReplyDelete
  2. ஈஸ்வர் மன முதிர்ச்சி அபூர்வம் தான்... பல கேள்விகள் எங்கள் மனதிலும்... ஆவலுடன் - தொடர்கிறேன்...

    ReplyDelete
  3. வரதராஜன்June 6, 2013 at 6:54 PM

    உளவியல் ஆராய்ச்சியாளாகிய ஈஸ்வர் குருஜி மீது சந்தேகம் கொள்ளும் விதம் சுவாரசியமாக உள்ளது. கம்ப்யூட்டர் ப்ரோகிராம் போல சித்தர்கள் போட்ட ப்ரோகிராம் படி தான் சிவலிங்கம் இயங்கும் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டு குருஜியை ஆழம் பார்த்தது சபாஷ் போட வைக்கிறது. அமானுஷ்யன் நாவலில் அமானுஷ்யன் மட்டுமே அதிகமாய் நின்றான். பரமன் ரகசியத்தில் கணபதி, ஈஸ்வர் என்று இருவருமே மனதில் நிற்கிறார்கள். சுவையான ஒரு நாவலைத் தந்து கொண்டிருப்பதுக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  4. // ”கண்கள் தீ மாதிரி ஜொலிக்கிற சித்தர் யாரையாவது நீங்கள் இதுவரைக்கும் பார்த்திருக்கிறீர்களா குருஜி”

    குருஜி ஒரு கணம் அப்படியே உறைந்து போனார். இந்த நேரடிக் கேள்வியை அவனிடமிருந்து அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. அவர் தன்னை சமாளிக்க அரை நிமிடம் தேவைப்பட்டது.

    தன் கேள்வி அவரை அதிர்ச்சி அடையச் செய்து விட்டது என்று ஈஸ்வருக்குப் புரிந்தது. ஒரு கேள்விக்கு நேரம் கழித்து வரும் பதில் கூட பல உண்மைகள் சொல்லும் என்பதை உளவியலில் கரை கண்ட அவன் அறிவான். பல நேரங்களில் அப்புறமாக வரும் பதிலை விட அதற்கு முன் வரும் மௌனம் நிறைய விஷயங்களை உணர்த்தி விடும்... தெரியும் அல்லது தெரியாது என்று சொல்வதற்கு ஏன் இந்த அதிர்ச்சி?//

    very nice observation. Going very interesting. Thank U

    ReplyDelete
  5. Ganesan,


    Story is very interesting and awesome. but this week it is a very short update. I didn't get the satisfaction with this update. Not very impressive. I had a very big expectation about Eswar and Guruji's meeting.

    ReplyDelete