சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 31, 2025

யோகி 96

 

டிட்டர் திவாகரன் தான் சந்திரமோகனின் ஆடிட்டர் என்பது நிரூபணம் ஆகிவிட்டது. சேலத்தில் இருக்கும் சிறிய தொழிலதிபரான சந்திரமோகனுக்கு சென்னையில் இருக்கும் பிரபல ஆடிட்டர் திவாகரன் ஏன் ஆடிட்டராக இருக்கின்றார் என்ற கேள்விக்கு ஷ்ரவனுக்குப் பதில் கிடைக்கவில்லை. பதில் எதுவாக இருந்தாலும் அந்தப் பதிலில் யோகாலயம் ஏதோ வகையில் சம்பந்தப்படுகிறது என்று தான் அவனுக்குத் தோன்றியது.

 

சந்திரமோகனின் மனைவி யோகாலயத்தைப் பற்றிக் கேட்டாலும் பயப்படுகிறாள். ஆடிட்டர் திவாகரனைப் பற்றிக் கேட்டாலும் பயப்படுகிறாள். அவள் கணவன் என்ன ஆனார் என்று தெரிந்து கொள்ள பெரிய முயற்சிகள் எடுத்துக் கொள்பவள் போல் தெரியவில்லை. என்ன ஆனார் என்று தெரிந்து விட்டிருந்தால் அதற்கு முயற்சி எடுக்கும் அவசியம் இல்லை. அல்லது, என்ன ஆனார் என்று தெரிந்து கொள்ள முயற்சித்தால் அவளுக்கும், அவள் மகளுக்கும் ஆபத்து என்ற நிலைமை வந்திருந்தாலும் அதற்கு முயற்சி எடுக்க அவள் பயந்து கொண்டிருக்கலாம். இரண்டில் எது சரி என்பது தெரியவில்லை.

 

இன்னும் நான்கு நாட்களில் அவன் யோகாலயம் சென்று துறவியாகச் சேர்ந்துவிடும் உத்தேசத்தில் இருக்கிறான். போவதற்கு முன் ஹைதராபாத் சென்று பெற்றோரைப் பார்த்துவிட்டுச் செல்ல வேண்டும் என்று எண்ணியிருக்கிறான். அங்கிருந்து தான் யோகாலயம் போகப் போகிறான். அதனால் இந்த முறை போலி டிக்கெட் தயாரிக்கும் வேலை இல்லை. ஹைதராபாதிலிருந்தே அவர்களை அழைத்து, துறவியாவதற்கு அங்கு வருவது பற்றித் தெரிவிக்கலாம். ஒருவேளை அவர்கள் அலைபேசி அழைப்பு எங்கிருந்து வருகிறது என்று யோகாலயத்தில் தொழில் நுட்பத்தின் உதவியுடன் எச்சரிக்கையுடன் பார்த்தாலும் அவன் ஹைதராபாதிலிருந்து பேசுவதை அவர்கள் உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

 

இப்போதெல்லாம் அவன் இந்த விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் நேரத்துக்கு இணையாக ஸ்ரேயாவிடம் பேசுவதற்கும் எடுத்துக் கொள்கிறான். அவளுடன் பேசும் போது அவனுக்கு நேரம் போவதே தெரியவில்லை.  யோகாலயத்துக்குப் போன பின், திரும்பி வரும் வரை, அவனால் அவளுடன் பேச முடியாது என்பதால் இருவரும், முடிந்த நேரங்களில் எல்லாம், மனம் விட்டுப் பேசிக் கொண்டார்கள்.

 

செல்வம் இது வரை வேலை பார்த்த போலீஸ் ஸ்டேஷன்களில் எல்லாம், வருபவர்களில் ஒருசில விதிவிலக்குகள் தவிர மற்றவர்கள் பயபக்தியுடன் தான் நுழைவார்கள். அவர்களிடமிருந்து மரியாதை கலந்த வணக்கம் இருக்கும். ஆனால் அவர் இப்போது இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் பயபக்தியுடன் வருபவர்கள் தான் விதிவிலக்கு. இங்கே வருபவர்கள் எல்லாம் கம்பெனி முதலாளிகள் தங்கள் கம்பெனிக்குள் நுழைவது போல் தான் நுழைகிறார்கள்.

 

புகார் கொடுக்க வருபவர்கள்நான் சொல்கிறேன், எழுதிக் கொள், உடனடியாக நான் சொன்ன விஷயத்தைக் கவனிஎன்று கட்டளையிடுகிற பாவனையில் தான் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் புகார் தந்த வேலை நடக்கவில்லை என்றால், அடுத்த முறை விசாரிக்க வரும் போதுஉங்களுக்கு எல்லாம் தரும் சம்பளம் தண்டம்என்று முதலாளிகளைப் போலவே அதட்டுகிறார்கள். கத்தி, அரிவாள், கெட்ட வார்த்தைகள் எல்லாம் அங்கு வருபவர்களிடம் சகஜமாக இருக்கும்.

 

எவனாவது ஒருவன் அப்படி நடந்து கொள்பவனாக இருந்தால், அவனுக்கு அவர் போலீஸ்காரன் என்றால் யார் என்று, வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாதபடி காட்டியிருப்பார். ஆனால் வருபவர்கள் எல்லோருமே கிட்டத்தட்ட அதே போல் என்றால்  அவர் யாரையென்று சரி செய்வது? முடிவில் அவரே தான் அனுசரித்துப் போக வேண்டியதாயிற்று. சம்பளம் தவிர கூடுதலாய் கிடைக்கும் பணமும் ஒரேயடியாக நின்று போனதல்லாமல் இப்படியும் நடப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலானது.

 

போலீஸ் ஸ்டேஷனில் உள்ள சகாக்களோ அவருடைய முந்தைய போலீஸ் ஸ்டேஷனிலிருந்து தகவல்கள் வாங்கிக் கொண்டு, தள்ளி நின்று அவரை ஒருமாதிரியாகப் பார்த்தார்கள். என்னேரமும் அவர் ஏடாகூடமாக நடந்து கொள்ளக்கூடுமென்று அவர்கள் திகிலுடன் எதிர்பார்த்தது போலிருந்தது.

 

நேற்று இரவு அவர் வேலை முடிந்து, வசிக்கும் வாடகை வீட்டுக்குள் களைத்துப் போய் நுழைந்த போது எலுமிச்சை, கரித்துண்டு, குங்குமத் தண்ணீர், ஒரு பொம்மை ஆகியவை அவர் அறைக்குள் விழுந்து கிடந்தன. யாரோ அவற்றை ஜன்னல் வழியாக வீசியிருக்கிறார்கள். அவருக்கு ரத்தம் கொதித்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் யாரும் எதுவும் பார்க்கவில்லை என்றார்கள்.

 

பின் எதற்கடா அக்கம் பக்கத்தில் நீங்கள் குடியிருக்கிறீர்கள்?’ என்று அவர் மனதினுள் குமுறினார்.

 

இன்று போலீஸ் ஸ்டேஷன் வரும் போதே அவர் சோர்வுடன் தான் வந்தார். இதையெல்லாம் யோசித்து நேற்றிரவு தூக்கமில்லை. தபால்கள் வந்ததையும் அவர் பிரிக்க முற்படவில்லை. அப்போது ஒரு நடுத்தர வயதுக்காரர் போலீஸ் ஸ்டேஷனுக்குள் அலட்சியமாய் உள்ளே நுழைவதைப் பார்த்தார். ‘அடுத்த முதலாளி வந்துட்டான்.’

 

உள்ளே நுழைந்த அந்த நபர் நேராக வந்து செல்வத்துக்கு எதிரே இருந்த நாற்காலியிலமந்தார்.

 

என் வீட்டுப் பத்திரம் டவுன் பஸ்ஸுல வர்றப்ப எப்படியோ காணாமப் போயிடுச்சு. ரிஜிஸ்டர் ஆபிசுல போய் நகல் பத்திரம் ஒன்னு வேணும்னு கேட்டால் உங்க ஸ்டேஷன்ல இருந்து நான்-ட்ரேசபல் சர்டிபிகேட் கொண்டு வரச் சொல்றா. அது எப்ப கிடைக்கும்?”

 

எப்ப புகார் தந்தீங்க?” செல்வம் வேண்டா வெறுப்பாய் கேட்டார்.

 

காணாமல் போனதே காலைல தான

 

புகாரே கொடுக்காமல் நான்-ட்ரேசபல் எப்ப கிடைக்கும்னு தெனாவட்டாய் கேட்கறானே முட்டாள். இவன் முட்டில நாலு தட்டி உள்ளே வெச்சா என்ன?’

 

கஷ்டப்பட்டு பொறுமையுடன் செல்வம் சொன்னார். “முதல்ல நீங்க புகார் எழுதிக் கொடுங்க.”

 

நாம அதிகம் படிச்சதில்லை. நீங்களே எழுதிக்கொடுத்தால் கையெழுத்து போட்டுக் குடுத்துவேன்.” என்று சொன்ன அந்த ஆளின் கழுத்தைப் பிடித்துத் தூக்கி எறிய செல்வத்துக்குத் தோன்றியது. ’நான் என்ன உனக்கு செக்ரட்டரியா?’ அவர் இரத்தம் கொதித்தது. வாயில் வந்த கெட்ட வார்த்தைகளை விழுங்கி, ஒரு கணம் கண்களை மூடிப் பின் திறந்த போது அந்த நபர் மெல்ல எழுந்தார்.

 

முட்டாள்தனமாய்ப் பேசி விட்டோம் என்று புரிந்து கொண்டான் போலிருக்கிறதுஎன்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட செல்வம் அந்த நபரின் கண்கள் விரிந்து, முகத்தில் திகில் பரவியதைக் கவனித்தார்.என்ன ஆச்சு இவனுக்கு?’

 

யார் அவுக?” என்று நாக்கு குழற அந்த நபர் கேட்டார். அந்த நபர் செல்வத்தின் பின்பக்கச் சுவரைப் பார்த்துக் கொண்டிருப்பது போல் தெரிந்தது.

 

யாரைக் கேட்கிறான் இவன்?’ என்று நினைத்தபடி செல்வம் அந்த நபரின் பார்வை போன பக்கத்தைப் பார்த்தார். செல்வம் அவருடைய பின்பக்கச் சுவரைப் பார்த்தார். விளக்கு வெளிச்சத்தினால் அவருடைய நிழல் தான் சுவரில் தெரிந்தது.

 

ஆனால் அந்த நபர் மெல்ல எழுந்து பின்னால் நான்கைந்து அடிகள் வைத்தார்.  அடுத்த கணம் அந்த நபர் பீதியுடன் ஓடுவது தெரிந்தது. அதைப் பார்த்து விட்டு, ஸ்டேஷனில் இருந்த போலீஸ்காரர்கள், ஏட்டு எல்லாரும் ஓடி வந்து தள்ளி நின்றார்கள். எல்லோரும் அவரையே கூர்ந்து பார்த்தார்கள். அவர்கள் பார்வைக்கு ஒன்றும் தெரியவில்லை என்றாலும், ஓடிப் போன நபர் எதையாவது வில்லங்கமாய் பார்க்காமல் அப்படி ஓடிப்போயிருக்க மாட்டார் என்று அவர்களுக்குத் தோன்றியது. செல்வத்தின் முகம் பேயறைந்தது போல் இருந்தது. பேய் நிஜமாகவே அவரை அறைந்து விட்டுப் போய் விட்டதோ?

 

செல்வத்தின் பொறுமை அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டது. அவர் அறிந்த கெட்ட வார்த்தைகளை எல்லாம் சொல்லி, கண்டபடி திட்ட ஆரம்பித்தார்.   அவர்கள் அமைதியாக அங்கிருந்து போய் விட்டார்கள்.

 

இந்த ஆள் காலைல வர்றப்பவே சோர்வாய் தான் வந்தார். கவனிச்சீரா?”

 

கவனிச்சேன். முகமெல்லாம் அப்பவே ஒரு மாதிரியாய் தான் இருந்துச்சு. பழைய ஸ்டேஷன்ல சொன்னதெல்லாம் சரியாத் தான் இருக்குது ஓய். பேயோ, ஆவியோ, அது எப்ப வருது. எப்ப தாக்குதுன்னு தெரியறதில்லை. தாக்கிடுச்சுன்னா ஆளு வாயில இருந்து கெட்ட வார்த்தைகள் சரமாரியாய் வந்துடுது. பார்த்தீரல்ல

 

பயங்கரம். இந்தக் காலத்துல இப்படியும் நடக்கும்னு வேற யாராவது சொல்லியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன், ஓய்

 

இந்த ஸ்டேஷன்ல இதுவரைக்கும் பேய் ஒன்னு தான் குறைச்சலாய் இருந்துது. இப்ப அதுவும் வந்து சேர்ந்துடுச்சு. இனி பரிபூரணம் தான்

 

அவன் நம்மையே கவனிக்கிறான், ஓய். போய் வேலையைப் பாரும்.”


(தொடரும்)

என்.கணேசன்

 



Thursday, March 27, 2025

சாணக்கியன் 154

 

ராக்‌ஷசருக்கு எதிரிகளின் நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் விரைவாகவே ஒற்றர்கள் மூலம் வந்து சேர்ந்தன.  அவருடைய ஒற்றன் தலைவன் சொன்னான். “காஷ்மீர மன்னன் தன் படைகளுடன் நம் மேற்கு எல்லையை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறான் பிரபு. நம் ஒற்றர்கள் கண்ட நேரம், அவன் வந்து கொண்டிருக்கும் வேகம் இரண்டையும் கணக்கெடுத்துப் பார்த்தால் தற்போது அவன் மதுராவிலிருந்து இரண்டு யோஜனை* தூரத்தில் இருக்க வாய்ப்பிருக்கிறது. அவன் மதுரா அருகிலேயே இருப்பானா இல்லை மேலும் முன்னேறி வருவானா என்பது தெரியவில்லை. அதே போல் குலு மன்னனும், நேபாள மன்னனும், நம் வட எல்லைகளை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். நேபாள மன்னன் தன் படைகளுடன் நிதானமாகவும் குலு மன்னன் தன் படைகளுடன் சற்று வேகமாகவும் வந்து கொண்டிருக்கிறார்கள். அதை வைத்துப் பார்க்கையில் நேபாள மன்னன் நம் வட மேற்கு எல்லைப் பகுதியில் எங்காவது நின்று விட, குலு மன்னன் மேலும் முன்னேறி வருவான் என்று தெரிகிறது.”

 

ராக்‌ஷசர் யோசனையுடன் கேட்டார். “குலு மன்னன் தற்போது எங்கிருக்கிறான்?”

 

“அவன் தன் படையுடன் சிராவஸ்திக்கு இரண்டு காத@ தூரத்தில் இருக்கிறான்...“

 

“சந்திரகுப்தனும், பர்வத ராஜனும்?”

 

“அவர்கள் வடக்கு எல்லையிலிருந்து சுமார் ஒரு யோஜனை தூரத்திலேயே நேர் பாதையில் நகர்ந்தபடி முன்னேறி வந்து கொண்டிருக்கிறார்கள். ஏன் நம் எல்லையிலிருந்து அத்தனை தொலைவிலேயே நேர்கோட்டில் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் திடீரென்று தெற்கில் திரும்பி நம் எல்லைப் பகுதியை அவர்கள் தாக்க வாய்ப்பிருக்கிறது”

 

ராக்‌ஷசர் சாணக்கியரின் சூழ்ச்சித் திட்டம் என்னவாக இருக்கும் என்று யோசித்தார். பெரும்பாலும் முடிவில் பாடலிபுத்திரத்தின் வாயிலில் வந்து நிற்கும் வாய்ப்பு அதிகம். இந்த சந்தேகம் அவருக்கு ஆரம்பத்திலிருந்தே இருந்து வந்ததால் தான் சேனாதிபதியையும், இளவரசர்களையும் கூட மற்ற படைகளை வலுப்படுத்த அனுப்பாமல் அவர் தலைநகரிலேயே அவர்களை இருத்தி வைத்திருக்கிறார். தலைநகரைக் காக்க வலுவான படையும் இங்கேயே இருக்கிறது....

 

ராக்‌ஷசர் சொன்னார். “நம் ஒற்றர்கள் முழுவீச்சில் இயங்க வேண்டிய நேரமிது. எந்தத் தகவலும் உடனுக்குடன் கிடைத்துக் கொண்டிருந்தால் மட்டுமே நம்மால் சரியான முடிவுகளை எட்டி, செயல்படுத்த முடியும். அதனால் கூடுதல் ஒற்றர்களை நீங்கள் எல்லைப் பிராந்தியங்களுக்கும் அதற்கு அப்பாலும் அனுப்புவது நல்லது.”

 

ஒற்றர் தலைவன் தலையசைத்து விட்டு விடைபெற்றான்.

 

சிராவஸ்தியிலிருந்து வடக்கில் ஒரு யோஜனை தூரத்திலிருந்து ஒரு வீரன் குதிரையில் வந்து கொண்டிருப்பதை மகத ஒற்றன் ஒருவன் மரத்தின் பின்னால் மறைந்திருந்தபடி பார்த்தான். அந்த வீரன் சற்று இளைப்பாற இடம் தேடுவது போல இரு புறமும் பார்த்தபடி வந்து கொண்டிருந்தான். அவன் சற்று நெருங்கிய பின் தான் அவன் காலில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டு இருப்பது தெரிந்தது. ஒற்றன் அந்த வீரனைக் கூர்ந்து பார்த்தான். அவன் எந்த நாட்டின் வீரன் என்பதை உடையை வைத்தோ தோற்றத்தை வைத்தோ சரியாக யூகிக்க முடியவில்லை என்றாலும் எதிரிகளின் வீரனாக இருக்கலாம் என்று ஒற்றன் சந்தேகப்பட்டான்.

 

அந்த வீரன் சிறிது தொலைவில் இருந்த மூலிகைப் பச்சிலைச் செடியருகே குதிரையை நிறுத்தி சுற்றும் முற்றும் பார்த்தான். ஒற்றன் மறைவில் இருந்ததால் அவனை அந்த வீரன் பார்க்க வழியில்லை. யாருமில்லை என்று நினைத்துக் கொண்டவன் போல அந்த வீரன் இறங்கி குதிரையை மூலிகைச் செடி அருகிலிருந்த மரத்துடன் கட்டி விட்டு மூலிகைப் பச்சிலைகளைப் பறிக்க ஆரம்பித்தான். பின் காலில் இருந்த காயத்திற்கு அந்த இலைகளைக் கசக்கி சாறைப் பிழிந்தான். ஸ்ஸ்ஸ்ஸ் என்றபடி அவன் பற்களைக் கடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டான். பின் அந்தப் பச்சிலைகளை அவன் அந்தக் காயத்தின் மீது வைத்து அந்தப் பச்சிலைகளை வைத்து ஒரு துணியை எடுத்துக் கட்டினான். மறுபடியும் சுற்றும் முற்றும் எச்சரிக்கையோடு அவன் பார்ப்பது தெரிந்தது. பின் அவன் இடுப்பில் சொருகி வைத்திருந்த எதையோ தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

 

ஒற்றன் கூர்ந்து கவனித்தான். அந்த வீரன் இடுப்பில் சொருகி வைத்திருந்தது ஏதோ ஒரு மடல் போலத் தோன்றியது. அந்த வீரனின் எச்சரிக்கை உணர்வைப் பார்த்தால் அது ரகசிய மடலாக இருக்கலாம் என்று ஒற்றனுக்குத் தோன்றியது. வலி சற்று குறைந்ததாலும் பிரயாணத்தின் களைப்பினாலும் அந்த வீரனின் கண்கள் தானாக மூடின. அவன் உறக்கத்தில் ஆழ்ந்தது போல் தோன்றியது.  

 

ஒற்றன் சத்தமில்லாமல் மெல்ல பின் வாங்கினான். மிக அருகில் தான் மகதப்படை வீர்ர்கள் இருக்கிறார்கள். அவர்களை அழைத்து வந்தால் அந்த வீரனைச் சிறைப்படுத்தி அந்த ரகசிய மடலைக் கைப்பற்றலாம்.... இந்த யோசனை எழுந்தவுடன் சத்தமில்லாமல் வீரர்கள் இருக்குமிடத்திற்கு விரைந்து சென்ற ஒற்றன் அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி நான்கு வீர்ர்களை அழைத்துக் கொண்டு வந்தான். சிறிது சத்தம் வந்தாலும் அந்த வீரன் எச்சரிக்கையடைந்து தப்பி விடும் வாய்ப்பிருக்கிறது என்பதால் அவர்களும் சத்தம் செய்யாமல் தான் வந்தார்கள். ஆனால் ஒற்றன் மறைந்திருந்த மரத்தருகே வரும் போது ஒரு வீரன் சருகுகளில் கால் வைத்துவிட அந்த ஓசை கேட்டது.

 

உடனே கண்விழித்த அந்த காயமடைந்த வீரன் எழுந்து மின்னல் வேகத்தில் குதிரையைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்தான். அவனது இடது கை இடுப்பில் சொருகியிருந்த மடலையும், வலது கை அவன் வாளையும் இறுகப் பிடித்தன. ஆனால் அவன் அடுத்தபடியாக எதையும் யோசிப்பதற்குள் நான்கு வீரர்களும் அவன் மீது பாய்ந்து இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார்கள். அவன் திமிறத் திமிற ஒரு வீரன் அவன் இடுப்பில் சொருகியிருந்த மடலை எடுத்துக் கொண்டான். இன்னொரு வீரன் அவன் வாளை எடுத்துக் கொண்டான். அவை இரண்டையும் பறிகொடுத்த அவன் முகத்தில் பதற்றமும், கவலையும் தெரிந்தன. ஆனால் எதுவும் பேசாமல் அவன் மௌனமாக இருந்தான். இரு வீரர்களும் மடலையும், வாளையும் ஒற்றனிடம் தர நகர்ந்து வர அவர்கள் பிடி தளர்ந்ததால் அந்த வீரன் அசுர பலத்துடன் திமிறி தன்னை மீதமிருந்த இரு வீரர்களின் பிடியிலிருந்து விலகிக் கொண்டு மின்னல் வேகத்துடன் குதிரை மீதேறினான். அவர்கள் கண்மூடித் திறப்பதற்குள் அங்கிருந்து குதிரையை வேகமாக முடுக்கினான். அவர்கள் சுதாரித்துக் கொண்டு அவனைப் பிடிக்க முயற்சிப்பதற்குள் அவர்கள் பார்வையிலிருந்து மறைந்தும் விட்டான்.   

 

அவர்கள் ஏமாற்றத்துடன் ஒற்றனைப் பார்க்க ஒற்றன் சொன்னான். “பரவாயில்லை. நமக்குத் தேவையான இந்த மடல் கிடைத்து விட்டதல்லவா? அவன் கிடைத்திருந்தால் அவனை அனுப்பியவர்கள் யார் என்பதையும், இது யாருக்கு அனுப்பப்பட்டது என்பதையும் தெரிந்து கொண்டு இருக்கலாம். ஆனால் இந்த மடலை வைத்தும் அதை யூகித்துக் கொள்ள முடியும்….”

 

அவன் அந்த மடலை எடுத்துப் பார்த்தான். மடலில் முத்திரை ஏதுமில்லை. மிக ரகசியமான கடிதங்களை முத்திரை ஏதுமில்லாமல், கடிதத்தின் உள்ளேயும் பெயர்கள் எதையும் வெளிப்படையாகக் குறிப்பிடாமல் தான், சாணக்கியர் எழுதுவது வழக்கம். படிக்கிறவருக்கு மட்டுமே புரிகிறாற்போல் தான் உள்ளே வார்த்தைகளும் இருக்கும்.... ஒற்றன் திருப்தியுடன் புன்னகைத்தவனாகச் சொன்னான். “நன்றி வீரர்களே. நீங்கள் போர் முடிந்து வருகையில் தகுந்த சன்மானம் தர பிரதம அமைச்சரிடம் நான் பரிந்துரை செய்கிறேன்.”

 

உடனே அவனும் அங்கிருந்து வேகமாக ராக்‌ஷசரைக் காண பாடலிபுத்திரம் நோக்கி விரைந்தான்.

 

ராக்ஷசர் அந்த மடலைப் படித்தார்.

 

ஆசிர்வாதம். எதிரியின் தென்கிழக்கு தேச மன்னனுடனான நம் ரகசியப் பேச்சு சுமுகமாக முடிந்தது. அவன் நம் கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறான். எதிரிகள் வடக்கிலும் மேற்கிலும் தான் தாக்குதல்களுக்குத் தயாராகியிருக்கிறார்களே ஒழிய தெற்கிலிருந்து வரும் தாக்குதலுக்குத் தயாராக இல்லை என்பதால் அவன் தெற்கு எல்லைப் பகுதிகளில் செய்யும் தாக்குதல் எதிரிக்குக் கூடுதல் சிக்கல்களைத் தரும். தாங்களும், தங்கள் நண்பர்களும் நம் திட்டப்படி அவரவருக்குச் சொல்லியிருக்கும் பகுதிகளைத் தாக்குதல் செய்ய வேண்டிய நாளை வளர்பிறை திரையோதசியிலிருந்து பௌர்ணமிக்கு சில முக்கிய காரணங்களால் மாற்றியிருக்கிறோம். எதிரியின் தென்கிழக்கு தேச மன்னனும் அந்த நாளிலேயே திடீர்த் தாக்குதலை நடத்துவதாகத் தெரிவித்திருக்கிறான். குறிப்பிட்ட நாளில் தாக்குதலின் போது நாங்கள் உங்களுடன் வந்து இணைந்து கொள்கிறோம். எதிரியின் தலைநகரை நாங்கள் தாக்க வருவதாகச் செய்தி எதிரிக்குக் கிடைக்கும்படி பார்த்துக் கொள்கிறோம். சிறுபடையை அங்கு அனுப்பவும் செய்கிறோம். அதனால் அவர்கள் தலைநகரைக் காக்க கண்டிப்பாக ஒரு பெரும்படையை அங்கேயே தக்க வைத்துக் கொள்வார்கள். நம் மூன்று திசைத் தாக்குதலை எதிர்க்க மற்ற இடங்களில் அத்தனை படை குறைவது நமக்கு அனுகூலமாக இருக்கும். அதனால் வெற்றி உறுதி. மாற்றப்பட்ட நாளை நினைவில் கொள்ளுங்கள். இந்த மடலைப் படித்த பின் எரித்து விடுதல் நலம்.”


(*யோஜனை என்பது சுமார் 64 கிமி அல்லது 40 மைல் தூரம். @காத தூரம் என்பது 16 கிமி அல்லது 10மைல்) 



(தொடரும்)

என்.கணேசன்





என்.கணேசனுடைய நூல்களை வாங்க பதிப்பாளரின் வாட்சப் எண் 94863 09351 ஐ தொடர்பு கொள்ளவும்.

Wednesday, March 26, 2025

முந்தைய சிந்தனைகள் 122

 என் நூல்களிலிருந்து சில சிந்தனை அட்டைகள்...













Monday, March 24, 2025

யோகி 95

 

ஷ்ரவன் குமரேசனிடம் கேட்டான். “அந்த ஆடிட்டர் தனியாய் வர்றாரா, இல்லை அவரோட சேர்ந்து வேற ஆட்களும் வர்றாங்களா?”

 

குமரேசன் சொன்னான். ”பெரும்பாலும் அவர் தனியாய் தான் வர்றார். ஆனால் சில சமயங்களில் அவர் கூட வேறு யாராவது ஒருத்தர் அல்லது இரண்டு பேர் வர்றதுண்டு.”

 

ஷ்ரவன் ஆடிட்டர் திவாகரனைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தான். அவர் சென்னையில் மிகப் பிரபலமான ஆடிட்டர் என்பதும், பல முன்னணி நிறுவனங்களின் ஆடிட்டராக இருக்கிறார் என்பதும் தெரிய வந்தது. செல்வந்தராக இருக்கும் அவரை அவர் மனைவி மூன்று வருடங்களுக்கு முன் விவாகரத்து செய்து விட்டார் என்றும், அவரது ஒரே மகள், தன் தாயுடன் வசிக்கிறாள் என்பதும் தெரிந்தது.

 

திவாகரன் யோகாலயத்துக்கு வெறும் ஆடிட்டர் மட்டும் தானா, இல்லை கூடுதலாய் ஏதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆடிட்டர் திவாகரன் மீது இதுவரை எந்தப் புகாரும், சட்டவிரோதத்திற்கான நடவடிக்கையும் இல்லை. ஷ்ரவன் ஒரு நபருக்குப் போன் செய்து ஆடிட்டர் திவாகரன், யோகாலயம் தவிர யாருக்கெல்லாம் ஆடிட்டராக இருக்கிறார் என்ற தகவல்களை அனுப்பச் சொன்னான்.    

 

இரண்டு மணி நேரத்தில் விரிவான தகவல்கள் ஷ்ரவனுக்கு மின்னஞ்சலில் வந்து சேர்ந்தன. ஆடிட்டர் திவாகரனின்திவாகரன் & அஸ்ஸோசியேட்ஸ்அவர் ஏழு சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்கள் கொண்ட குழு. திவாகரன் & அஸ்ஸோசியேட்ஸில் 23 பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் 15 பேர் சி..இண்டர் முடித்தவர்கள். “திவாகரன் & அஸ்ஸோசியேட்ஸ்”  தமிழ்நாட்டின் பெரிய நிறுவனங்கள் சிலவற்றுக்கும், சிறிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பலருக்கும் ஆடிட்டர்களாக இருக்கிறார்கள் என்று ஆரம்பித்து மிகச்சிறிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தவிர அவர்களுடைய மற்ற எல்லா வாடிக்கையாளர்களின் பெயர்கள் விலாசங்கள் அந்த மின்னஞ்சலில் இருந்தன

 

அவற்றை எல்லாம் ஷ்ரவன் நிதானமாகப் படித்தான். டாக்டர் சுகுமாரனின் செவென் ஸ்டார்ஸ் மருத்துவமனையும் அந்தப் பட்டியலில் இருந்தது.  அந்தப் பட்டியலில் சந்தேகத்தைக் கிளப்பும்படியாக எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லை. ஆடிட்டர் திவாகரனின் வாடிக்கையாளர்களை ஆராய்வது யோகாலய வழக்குக்கு உதவுமா என்பதும் தெரியவில்லை.  ஆனாலும் குற்றவாளிகளுடன் நெருக்கமாய் இருக்கும் ஒரு நபர் பற்றிய புதிய தகவல் வரும் போது, அந்த நபரின் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும், எல்லா கோணங்களிலிருந்தும் சந்தேகக்கண்ணோடு பார்ப்பது அவசியம் என்பது அவன் தனது துறையில் கற்ற ஆரம்பப் பாடம்.

 

எல்லா விசாரணைகளிலும் ஒரு அதிமுக்கியமான தடயம் அல்லது ரகசியம் அறிய, ஆயிரம் குப்பைகளையும் சேர்ந்து அலச வேண்டியிருக்கிறது. எது குப்பை, எது அதிமுக்கியமான தகவல் என்பதை முன்கூட்டியே யாரும் தெரிந்து கொள்ள முடியாது. சில சமயங்களில் ஒரு குப்பைத் தகவல் மூலம் இன்னொரு நல்ல தகவல் கிடைக்கலாம். அதனால் எதையும் அலட்சியப்படுத்தி விட முடியாது.

 

சற்று முன் போன் செய்து பேசிய நபர் ஷ்ரவனை அலைபேசியில் அழைத்து இன்னொரு மிக முக்கியமான தகவலைச் சொன்னார். அவருக்கு அந்தத் தகவலைத் தந்தவர் ஆறு மாதங்களுக்கு முன்பு வரைதிவாகரன் & அஸ்ஸோசியேட்ஸ்ல்  வேலை செய்து கொண்டிருந்த ஒரு இளைஞனாம். அவன் அவருக்கு மிகவும் பரிச்சயமானவனாம். ஆடிட்டர் திவாகரன் தனிப்பட்ட முறையில் கையாளும் வாடிக்கையாளர்கள் சுமார் இருபது பேராவது இருப்பார்களாம். அவர்கள் ஆபிசுக்கு வந்தால் ஆடிட்டர் திவாகரனிடம் மட்டும் தான் பேசுவார்களாம். மற்ற ஆடிட்டர்களிடமோ, வேலையாட்களிடமோ  தாங்கள் வந்த விஷயம் பற்றிப் பேச மாட்டார்களாம். ஒருவேளை ஆடிட்டர் திவாகரன் அங்கு இல்லாவிட்டால் அவர் வரும் வரைக்கும் அவர்கள் காத்திருப்பார்களாம். ஒருவேளை அவர் அன்று வரவில்லை என்றால்,  போய் விட்டு இன்னொரு நாள் வருவார்களாம். அப்படிப்பட்ட வாடிக்கையாளர்கள் பற்றிய எந்த விவரமும், கணக்குகளும் மற்ற ஆடிட்டர்களுக்கோ, வேலை செய்பவர்களுக்கோ எப்போதுமே தெரிய வராதாம். அந்த இருபதில் யோகாலயம் இல்லை. யோகாலயத்தின் வழக்கமான கணக்கு வழக்குகளை மற்ற இரண்டு ஆடிட்டர்கள் தான் பார்த்துக் கொள்கிறார்களாம். ஆனால் ஆடிட்டர் திவாகரன் செய்யும் ஒரே வேலை அந்த இருபது வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது தானாம். அந்த வாடிக்கையாளர்கள் ஓரிரு வருடங்களில் வருவதை நிறுத்தி, வேறு சில புதிய வாடிக்கையாளர்கள் வர ஆரம்பிப்பார்களாம். இப்படி அவரை மட்டுமே சந்திக்க வரும் வாடிக்கையாளர்கள் மாறிக்கொண்டே இருப்பார்களாம்.

 

இந்தத் தகவல் ஷ்ரவனை சந்தேகம் கொள்ள வைத்தது. சில வாடிக்கையாளர்கள் தங்களுக்கென ஒரு ஆடிட்டரைத் தேர்ந்தெடுத்து வைத்துக் கொண்டு, அவரிடம் மட்டுமே நம்பிக்கையுடன் தங்கள் கணக்கு வழக்குகளை வைத்திருப்பது பொதுவாக எல்லா இடங்களிலும் வாடிக்கை தான். ஆனால் அந்த ரக வாடிக்கையாளர்கள் ஓரிரு வருடங்களில் மாறிக் கொண்டேயிருப்பதும், மாறி புதிதாக வருபவர்களும் சிலரும் திவாகரனிடமே வருவதும் இயல்பாக இல்லை. பொதுவாக இது போன்ற இடங்களில் தலைமை ஆடிட்டர் மிக முக்கியமான சில பெரிய வாடிக்கையாளர்களிடம் மட்டும் நேரடித் தொடர்பில் இருப்பார்கள். அவர்களிடமே கூட அதிமுக்கிய விஷயங்களைப் பற்றி பேசித் தீர்மானிக்கும் விஷயங்களுக்கு மட்டுமே நேரம் ஒதுக்குவார்களே ஒழிய மற்றபடி அந்த வாடிக்கையாளர்களின் வழக்கமான வருடாந்திரக் கணக்குகளை எல்லாம் ஆபிசில் உள்ள மற்றவர்கள் தான் பார்த்துக் கொள்வார்கள். அப்படியல்லாமல் அனைத்தையும் தலைமை ஆடிட்டரே பார்த்துக் கொள்ளும் வாடிக்கையாளர்கள் நிறைய பேர் இருப்பது விசித்திரம் தான். சேலம் தொழிலதிபர் சந்திரமோகன் சம்பந்தப்பட்ட மர்மம் போல இதிலும் ஏதோ மர்மம் இருக்கிறது என்றாலும் இதுவும் சைத்ரா வழக்கிற்கு சம்பந்தப்பட்ட மர்மமா, இல்லை வேறா என்று தெரியவில்லை....

 

மனதில் இப்படியொரு எண்ணம் வந்தவுடன் ஷ்ரவனின் மூளையில் ஒரு சிறு பொறி தட்டியது. ஒருவேளை தொழிலதிபர் சந்திரமோகனுக்கும், ஆடிட்டர் திவாகரனுக்கும் இடையே ஏதாவது சம்பந்தம் இருக்க வாய்ப்புண்டோ?

 

சேலத்தில் தொழிலதிபர் சந்திரமோகனின் மனைவி அலைபேசி அடிப்பதை திகிலுடன் பார்த்தாள். இப்போது அழைப்பது யார் என்று தெரியவில்லை. இப்போதெல்லாம் ஒவ்வொரு முறை அலைபேசி அடிக்கும் போதும், அவளுக்குத் திகிலாகவே இருக்கின்றது. சந்திரமோகன் காணாமல் போகும் வரை அவர்களைப் போல் அதிர்ஷ்டசாலிகள் யாருமில்லை என்றே அவள் நினைத்து இருந்தாள். ஆனால் விதி குறுகிய காலத்தில் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விட்டது. அவள் கணவன் காணாமல் போனதில் இருந்து அவளும் அவளுடைய மகளும் அனுபவிக்கும் பயமும், துயரமும் கொஞ்ச நஞ்சமல்ல.

 

கைநடுங்கியபடி அவள் மெல்ல அலைபேசியை எடுத்தாள். “ஹலோ

 

ஹலோ நான் மாயவரம் மாதவன் பேசறேன்ம்மா. பத்து நாளுக்கு முன்னாடி சேலத்துக்கு ஒரு வேலையாய் வந்தப்ப உங்க வீட்டுக்குக் கூட அவரைத் தேடிட்டு வந்தேனே, ஞாபகம் இருக்கா.”

 

உம்சொல்லுங்க சார்

 

அப்பறம் சந்திரமோகனைப் பற்றி வேறெதாவது தகவல் தெரிஞ்சுதா?”

 

இல்லைங்க…”

 

இன்னும் போலீசுக்கும் ஒரு துப்பும் கிடைக்கலையாக்கும்.”

 

அப்படி தான் தெரியுதுங்க. அவங்க எந்த தகவலும் தரலை.”

 

எனக்கு அங்கேயிருந்து வந்ததுலயிருந்து சந்திரமோகன் யோசனையே தான். என்னடா மனுசன் இப்படி யாருகிட்டயும் சொல்லிக்காமயே போயிட்டாரு. எங்கே போயிருப்பார், என்ன சமாச்சாரம்னு ஒரே யோசனை…”

 

அவள் ஒன்றும் சொல்லவில்லை.

 

எனக்கு திடீர்னு இன்னொரு விஷயம் நினைவுக்கு வந்துச்சு. நம்ம ஆடிட்டர் சென்னையில தானே இருக்கார். ஒருவேளை சந்திரமோகன் அவரைப் பார்க்கப் போயிருப்பாரோ? போனவர் அவர் கிட்ட ஏதாவது சொல்லியிருப்பாரோன்னு திடீர்னு யோசனை வந்துச்சு. அந்த ஆடிட்டர் பெயர் ஞாபகம் வரலை.  ஹா…. திவாகரன்…. திவாகரன் தானே அவர் பெயர்?”

 

சந்திரமோகன் மனைவியின் இதயம் சம்மட்டி அடிகள் அடிக்க ஆரம்பித்தன. “ஆமாஅங்கேயும் விசாரிச்சுட்டேன். அங்கேயும் இவர் போகலையாம்…. ஏதாவது தகவல் கிடைச்சால் நானே உங்களுக்கு போன் பண்ணி சொல்றேன்.”என்று சொல்லி அலைபேசி இணைப்பைத் துண்டித்து விட்டு, பேசியவர் எண்ணை அவள் உடனடியாகத் தடை செய்தாள். இந்த ஆள் வில்லங்கமான ஆள் போல் தான் தெரிகிறது! 

 

(தொடரும்)

என்.கணேசன்



என்.கணேசனின் நூல்களை வாங்க வாட்சப்பில் 94863 09351 எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Thursday, March 20, 2025

சாணக்கியன் 153

ராக்ஷசர் சற்று முன் ஒற்றன் சொல்லி விட்டுப் போன தகவலினால் மேலும் அதிக மன அமைதியைத் தொலைத்திருந்தார். சந்திரகுப்தனிடம் பாரசீகக் குதிரைகள் முன்பை விட அதிகமிருப்பதைப் பார்க்க முடிகிறது என்று ஒற்றன் சொல்லியிருந்தான். இங்கு குறைந்திருப்பதும், அங்கு அதிகமாகியிருப்பதும் என்ன நடந்திருக்கும் என்பதைத் தெள்ளத் தெளிவாகத் தெரிவித்தது. இந்தத் திருட்டில் சேனாதிபதி பத்ரசாலுக்குக் கண்டிப்பாகப் பங்கு இருக்க வேண்டும், அப்படி இருந்திருக்கா விட்டால் அவன் முன்பு அறிந்திருக்கா விட்டாலும் குதிரைகள் அணிவகுப்பின் சமயத்திலாவது அறிந்து அவர் போல பதறியிருப்பான் என்று எண்ணியிருந்தார். அப்போதும் கூட அவன் திருடன் என்ற அளவில் தான் அவர் அபிப்பிராயம் இருந்தது. இப்போதோ எதிரியுடன் அவன் கைகோர்த்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. இந்தப் போரையே தலைமை தாங்கி நடத்தக்கூடியவன் எதிரியுடன் சேர்ந்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகமே அவரை நிலைகுலைய வைத்தது.

 

இது வரை ஆலோசனைக் கூட்டங்களின் போதெல்லாம் அவன் எப்படி நடந்து கொண்டான், என்னவெல்லாம் சொன்னான் என்பதை அவர் யோசித்துப் பார்த்தார். அந்தச் சமயத்தில் அவன் இயல்பாகவே இருந்தான். நடித்தது போல் தெரியவில்லை.  ஆயுதங்கள் தயாரிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளிலும் அலட்சியமாக அவன் இருக்கவில்லை. எதிரியுடன் கைகோர்த்திருந்தால் அந்த அளவு ஈடுபாடு அவன் காண்பித்திருக்க வழியில்லை. அதை யோசித்துப் பார்க்கையில் அவன் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம், ஆனால் பலனடைவது  எதிரி என்று அறிந்திருக்காமல் இருக்கலாம் என்று தோன்றியது. அவன் யாருடன் இந்த விஷயத்தில் சேர்ந்திருந்தானோ அந்த ஆள் உண்மையை அவனிடமிருந்து மறைத்திருக்கலாம் என்றும் தோன்றியது.. இந்த எண்ணம் சிறிது அவரை ஆசுவாசப்படுத்தியது.

 

குதிரைகள் மாற்றப்பட்ட விஷயத்தை அவர் தனநந்தனிடம் சொல்ல முற்படவில்லை. ஏற்கெனவே பித்துப் பிடித்தது போல் இருக்கும் மன்னன் இதைக் கேட்டால் கோபம் அதிகமாகி மீண்டும் கத்த ஆரம்பிக்கும் வாய்ப்பிருக்கிறது. இப்போது ஓரளவாவது தணிந்திருக்கும் கோபத்தை மறுபடி அதிகமாக்குவது ஏற்கெனவே இருக்கும் சிக்கல்களையும் அதிகமாக்கும்.  

 

நேற்று சேனாதிபதியும், சுதானுவும் அதிக நேரம் பேசிக் கொண்டார்கள் என்ற செய்தியையும் அவர் கேள்விப்பட்டிருந்தார். இருவரும் ஏற்கெனவே நெருக்கமானவர்கள் அல்ல, ஒருசில வார்த்தைகளுக்கு மேல் முன்பு பேசிக் கொண்டதில்லை என்பதால் இதுவும் அவருக்கு நெருடலாக இருந்தது. இருவருமே பிரச்சினை செய்ய முடிந்தவர்கள்…. இதையெல்லாம் யாருடனும் மனம் விட்டு அவர் பகிர்ந்து கொள்ளவோ, ஆலோசிக்கவோ முடியாத நிலை இருப்பதால் அவர் மனதில் கனத்தையும், களைப்பையும் உணர்ந்தார்.

 

சாணக்கியர் சொன்னார். “மகதப் படைகள் கிளம்பிச் செல்லும் திசைகளை வைத்துப் பார்க்கையில்   மகதத்தின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் சம இடைவெளிகளில் மூன்று இடங்களில் படைகள் நிறுத்தப்படும் போலத் தெரிகிறது. அவர்கள் நிலையில் நாம் இருந்திருந்தாலும் அதைத் தான் செய்திருப்போம்.”

 

“இனி நாம் என்ன செய்வது ஆச்சாரியரே. நம் திட்டம் என்ன?” என்று பர்வதராஜன் கேட்டான்.

 

”நாம் இரண்டு இடங்களில் அவர்களது எல்லையை ஊடுருவுவோம். அந்த  இடங்கள் அவர்கள் படையை நிறுத்தாத இடங்களாக இருக்கும்படி பார்த்துக் கொள்வோம். அவர்கள் கண்டிப்பாக இருக்குமிடத்திலிருந்து வேகமாக நகர்ந்து வந்து நம்மைத் தாக்குவார்கள். அங்கு போர் புரிவோம்….”

 

அந்த இரண்டு இடங்களுக்கு எந்தப் படைகளை அனுப்புவது என்று அவர்கள் ஆலோசித்த போது பர்வதராஜன் கூர்ந்து கவனித்தான். அந்த இரண்டு இடங்களுக்கும் சாணக்கியரோ, சந்திரகுப்தனோ அவர்கள் படைகளோ செல்லப் போவதில்லை என்பதை அவன் அறிந்து கொண்டு நேபாள, குலு, காஷ்மீரப்படைகளை அனுப்பலாம் என்று அவன் ஆலோசனை சொன்னான். என்னவானாலும் சரி சாணக்கியர், சந்திரகுப்தன் இருவர் எங்கிருக்கிறார்களோ அங்கே தானும் இருப்பது என்று அவன் முடிவு செய்து வைத்திருந்தான். அப்படி உடன் இருந்தால் தான் அவர்களைக் கண்காணிக்க முடியும், அவனறியாமல் அவர்கள் எந்த முக்கிய முடிவுகளையும் எடுத்து விட முடியாதபடி இருக்கும் என்று அவன் கணக்கிட்டான்.

 

எந்த அளவில் செல்ல வேண்டும், எத்தனை வேகத்தில் செல்ல வேண்டும், போர் யுக்திகளை எப்ப்டி வகுக்க வேண்டும் என்பதை சந்திரகுப்தன் விரிவாக அவர்களுக்கு விளக்க ஆரம்பித்த போது சின்னச் சின்ன விஷயங்களையும் அவன் தொலைநோக்குப் பார்வையுடன் யோசித்து வைத்திருந்தது புலனாகியது. குலு, நேபாள, காஷ்மீர மன்னர்கள் அவனை வெளிப்படையாகவே பாராட்டினார்கள்.

 

பர்வதராஜன் பெருமை பொங்கும் குரலில் “ஆச்சார்யரின் சீடன் அதையெல்லாம் யோசிக்காமல் இருந்திருந்தால் தான் அது ஆச்சரியம்” என்று சொல்லி விட்டு “நாம் எங்கே போகப் போகிறோம்?” என்று கேட்டான்.

 

சந்திரகுப்தன் சொன்னான். “நாம் மகதத்தின் வடபகுதியில் எல்லைகளைத் தொடாமல் மெல்லப் போய்க் கொண்டிருப்போம். நம் திட்டம் தயாரான பின் எங்கே தாக்கத் தீர்மானிக்கிறோமோ அங்கே தாக்குவோம்”

 

இப்போதும் அவன் எங்கே என்று சொல்லாமல் இருந்தது பர்வதராஜனுக்கு எரிச்சலாக இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் தலையசைத்தான்.   

 

அனைவரும் சென்று விட்டு இருவர் மட்டும் தனியாக இருக்கையில் சந்திரகுப்தன் சொன்னான். “பர்வதராஜன் எவ்வளவு விவரமாக அவர்களைத் தூரங்களுக்கு அனுப்பி விட்டு நம்முடனேயே ஒட்டிக் கொண்டு விட்டான் பார்த்தீர்களா ஆச்சாரியரே”

 

சாணக்கியர் புன்னகைத்தார். ”நமக்கும் அது நல்லது தான். பிரச்சினையான மனிதர்கள் நம் பார்வையிலேயே இருப்பது நல்லது சந்திரகுப்தா. அப்போது தான் நமக்கும் அவர்கள் மீது கட்டுப்பாடு இருக்கும்.”

 

சந்திரகுப்தன் சிரித்துக் கொண்டே சொன்னான். “அவனும் நம்மைப் பற்றி அப்படித் தான் நினைப்பான் என்று தோன்றுகிறது ஆச்சாரியரே”

 

சாணக்கியரும் சிரித்தார். “இருக்கலாம்”

 

அவர்கள் திட்டப்படியே நிச்சயித்த நாளில் நிச்சயித்த பாதைகளில் அவர்கள் படைகள் கிளம்பின. ஆனால் இரண்டு நாட்கள் கழித்து இன்னொரு பெரும்படை வாஹிக் பிரதேசத்திலிருந்து முந்தைய படைகள் போன வழியில் அல்லாது வேறு வழியில் கிளம்பிப் போக ஆரம்பித்தது பர்வதராஜனுக்கோ மற்ற மன்னர்களுக்கோ தெரியவில்லை.

 

முன்பு கிளம்பிய படைகளில் மற்ற படைகள் வேகமாகச் சென்றாலும் சந்திரகுப்தன் படைகளும், பர்வதராஜன் படைகளும் சற்று வேகம் குறைந்தே செல்ல ஆரம்பித்தன. நாட்கள் நகர நகர பொறுமை இழந்த பர்வதராஜன் பல விதங்களில் சாணக்கியரின் திட்டத்தைத் தெரிந்து கொள்ள முயற்சித்தான்“இப்போது நாம் மட்டும் தானே இருக்கிறோம். நம் ரகசியம் நம்மை விட்டுப் போக வழியில்லை ஆச்சாரியரே. இனி நீங்கள் தாராளமாகச் சொல்லலாம். என் மீது நம்பிக்கை இல்லையா?”

 

“நான் சந்திரகுப்தனிடமே கூட இன்னும் தெரிவிக்கவில்லை பர்வதராஜனே. இது நம்பிக்கை சம்பந்தமான விஷயமல்ல. எந்த விதத்திலும் நம் திட்டம் மகதத்திற்குத் தெரிந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை. வெற்றியைத் தான் நீயும் விரும்புகிறாய், உனக்கும் தோல்விக்கான சிறு சாத்தியக்கூறையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் நம் இருவரின் உத்தேசமும் ஒன்றல்லவா. அதனால் பொறுமையாக இரு.” என்று சாணக்கியர் சொல்ல வேறு வழி தெரியாமல் தலையசைத்தான்.

 

அவன் சென்ற பிறகு சந்திரகுப்தன் தங்கள் திட்டத்தில் ஏற்பட்டிருந்த சந்தேகத்தைக் கேட்டான். “சுதானு நம் திட்டப்படி தான் நடந்து கொள்வான் என்று எப்படி நம்புகிறீர்கள் ஆச்சாரியரே? நாம் அவன் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை அவனுக்கு வழங்கவில்லையே. உத்தேசமாக அல்லவா சொல்லியிருக்கிறோம். அப்படி இருக்கையில் வளர்பிறை ஏகாதசி அன்று நீங்கள் எதிர்பார்க்கிறபடியே கண்டிப்பாக நடந்து கொள்வானா? பத்ரசாலும் அவனுக்குச் சரியாகத் துணை நிற்பானா?”

 

சாணக்கியர் சொன்னார். “தண்ணீர் எப்போதும் பள்ளத்தை நோக்கியே செல்கிறது சந்திரகுப்தா. எத்தனை காலம் கழிந்தாலும் தண்ணீரின் அந்தப் போக்கு மாறப் போவதில்லை. இங்கே ஊற்றியிருக்கிறோமே அங்கே போய்ச் சேருமா என்று நாம் கவலைப்பட வேண்டியதில்லை. சுதானுவைப் போன்றவனின் மனமும் அப்படியே நாம் உத்தேசித்த விஷயத்தை நோக்கியே திட்டமிட்டு நகரும் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. பத்ரசாலும் அவனுக்கு உதவ வேண்டிய அவசியத்திலேயே இருக்கிறான். இருவருக்கும் ஏதாவது தயக்கம் இருந்தால் அந்தத் தயக்கத்தைத் தாண்ட வைக்க சின்ஹரன் அங்கிருக்கிறான் என்பதால் நமக்கு விளைவுகள் குறித்த சந்தேகம் வேண்டியதில்லை”

 

சந்திரகுப்தனுக்கு இப்போதும் ஆச்சாரியரை நினைக்கையில் பிரமிப்பு குறைவதில்லை. பல சமயங்களில் அவனுக்கு முயற்சிகள் எந்த அளவு பலன் தரும் என்பதில் சந்தேகம் வருவதுண்டு. ஆனால் அவர் பெரும்பாலான சமயங்களில் இது இப்படித் தான் முடியும் என்று தீர்மானித்து நிச்சலனமாக இருக்க முடிந்தவர். அப்படி உறுதியாகச் சொல்ல முடிந்த அளவு மனித மனதையும், இயல்பையும் அவர் புரிந்து வைத்திருந்தது அவர் திறமைகளில் உச்சத்திறமை என்று அவனுக்குத் தோன்றியது.

 

“அடுத்தது என்ன ஆச்சாரியரே?”

 

“முக்கியமான ஒரு ஓலையை நாம் ரகசியமாக அனுப்ப வேண்டும் சந்திரகுப்தா.”

 

(தொடரும்)

என்.கணேசன்





என்.கணேசனின் நூல்களை வாங்க 94863 09351 எண்ணில் வாட்சப்பில் தொடர்பு கொள்ளுங்கள்.