சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 22, 2024

யோகி 59

பாண்டியன் சொன்னார். “உங்க நாய் குரைக்கறதை நிறுத்த முடியுமா? சத்தம் கேட்டே தலை வலிக்குது.”

 

சுகுமாரனுக்கும் தலை வலிப்பது போல் இருந்ததால் அவர் தனதறைக்குப் போய் ஜன்னல் வழியே டாமியை அழைத்துச் சொல்லலாம் என்று எண்ணிப் போனார். அவர் பின்னாலேயே பாண்டியனும் போனார். ஜன்னல் வழியாக வெளியே தோட்டத்தைப் பார்த்த போது சுகுமாரனின் ரத்தம் உறைந்தது. தோட்டத்தில் காவியுடை உடுத்திய ஒரு சடலம் எரிந்து கொண்டிருந்தது. இது என்ன புதிதாய்?

 

சுகுமாரன் அதிர்ச்சியுடன் அதைப் பார்த்து விட்டுத் திரும்பி பாண்டியனைப் பார்த்து அதைத் தெரிவிக்க நினைத்தார். ஆனால் அவர் நாக்கு நகர மறுத்தது. அவர் ஊமை போல கையை ஜன்னல் பக்கம் காட்டினார்.

 

ஆனால் பாண்டியனின் பார்வை அவர் மேல் இல்லை. அவர் பார்வை, சுகுமாரன் வாங்கி வந்திருந்த மயான காளியின் படத்தின் மீது இருந்தது. கடவுள் நம்பிக்கை கடுகளவும் இல்லாத பாண்டியன் மனதிற்குள் சிரித்துக் கொண்டார். அப்படியே தப்பித் தவறி கடவுள் இருந்தாலும், அந்தக் கடவுளுக்கு மனிதர்களுடைய செயல்கள் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு உதவ முடியும் என்றோ, தீர்ப்பு எழுத முடியும் என்றோ அவரால் நம்ப முடியவில்லை. கோடானு கோடி உயிரினங்கள் இருக்கையில் அதில் ஒன்றான மனித குலத்திலும் கோடானு கோடி எண்ணிக்கை இருக்க, அதில் ஒவ்வொரு மனிதனும் தன் குறுகிய வாழ்நாளில் கோடானு கோடி செயல்கள் செய்து கொண்டேயிருக்க, ஆண்டவனுக்கே கூட, அத்தனையையும் கவனிக்க முடியுமா? இல்லை, கணக்கு வைத்துக் கொள்ளத் தான் முடியுமா? அப்படிக் கணக்கு எழுதித் தீர்ப்பு எழுத முயற்சித்தால், அந்தக் கடவுளுக்கு வேறு எதாவது வேலை செய்ய முடியுமா? எழுத ஆரம்பித்த சிறிது காலத்திலேயே அந்தக் கடவுளுக்குப் பைத்தியம் பிடித்து விடாதா?

 

இந்த ஆள் ஏற்கெனவே இந்தக் காளியின் பக்தரா, இல்லை, அந்த ஆவி தெரிந்த பின் இந்தக் காளியின் பக்தன் ஆனாரா?’ என்று பாண்டியன் தனக்குள் கேட்டுக் கொண்டார். அந்தக் காளியின் தோற்றமே அதிபயங்கரமாய் இருப்பதாய் பாண்டியனுக்குப் பட்டது. அவர் பார்வையைத் திருப்பி, சுகுமாரனைப் பார்த்த போது அவர் ஜன்னல் பக்கம் கைகாட்டி ஏதோ சைகை செய்து கொண்டிருந்தார். ‘இந்த ஆளுக்கு என்ன ஆச்சு? ஏன் ஊமை மாதிரி சைகைல எதோ சொல்றார்?’ என்று எண்ணியபடி பாண்டியன் கேட்டார். “என்ன ஆச்சு? என்ன சொல்ல வர்றீங்க?”

 

சுகுமாரன் ஜன்னல் பக்கத்திலிருந்து விலகிநீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்என்று சைகை மூலம் சொன்னார்.

 

பாண்டியன் ஜன்னல் வழியாகப் பார்த்தார். அவர் கண்ணிலும் காவியுடை உடுத்திய சடலம் எரிந்து கொண்டிருப்பது பட்டது. அவரும் திகைத்தார்.

 

நேற்று வெறும் காவித் துணி எரிந்தது. இன்று காவித்துணியுடன் ஒரு சடலமும் எரிந்து கொண்டிருக்கிறது. அது எப்படி தோட்டத்திற்குள் வந்தது?’

 

பாண்டியன் ஒரு கணம் சிலையாக நின்று, மறுகணம் சுதாரித்துக் கொண்டு,  பொறுமையிழந்து சுகுமாரனிடம் சொன்னார். “முதல்ல உங்க நாய் வாயை மூடுங்க டாக்டர். இருக்கற பிரச்சன போதலையா? அது கத்தி என்ன ஆகப் போகுது?”

 

அதற்காகத் தான் வந்தேன். ஆனால் பேச்சு வர மாட்டேன்கிறதே என்ன செய்யஎன்று சொல்ல நினைத்தும் அதைச் சொல்ல முடியாமல் சுகுமாரன், அதையும் சைகை மூலம் சொல்ல முயற்சிக்க பாண்டியன் பொறுமை இழந்தார். ‘இனி இந்த ஆளை நம்பிப் பிரயோஜனம் இல்லைஎன்று கோபத்துடன் எண்ணியவராய் வேகமாய் வீட்டை விட்டு வெளியே வந்தார்.

 

நல்ல வேளையாக இப்போது வெளியே ஆவி தெரியவில்லை. பாண்டியன் சற்று நிம்மதி அடைந்தார். ஆனால் கேட்டிற்கு வெளியே நின்றிருந்த கூர்க்கா ஒட்டகம் போல் தலையை நீட்டி உள்ளே என்ன நடக்கிறது என்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்க்கையில் பாண்டியனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அவருக்கு மட்டுமல்லாமல் அவரைப் பின் தொடர்ந்து, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வெளியே வந்த சுகுமாரனுக்கும் அவனைப் பார்த்துக் கோபம் தான் வந்தது.  நேற்று காவியுடை எரிந்த போதாவது ஓடிப் போய் அதை அணைக்க முயற்சி செய்த கூர்க்கா இப்போது வேடிக்கை பார்க்கிறானே?

 

பாண்டியன் கூர்க்காவிடம் கடுமையான குரலில் கேட்டார். “இங்கே என்ன வேடிக்கை? யார் இதைச் செஞ்சது?”

 

கூர்க்காவுக்கு அவர் என்ன கேட்கிறார் என்று புரியவில்லை. இந்த மந்திரவாதியும், அவர் பின்னால் நிற்கும் முதலாளியும் ஏன் இப்படி கோபப் பார்வை பார்க்கிறார்கள் என்பது புரியாமல் அவன் திகைப்புடன் கேட்டான். “யார் எதைச் செஞ்சாங்க ஐயா?”

 

பாண்டியன் தோட்டத்தில் எரிந்து கொண்டிருக்கும் சடலத்தை கை காட்டினார். அவன் அங்கே குரைத்துக் கொண்டிருக்கும் நாயை மட்டும் தான் பார்த்தான்.அது அப்ப இருந்தே குரைச்சுகிட்டு தான் இருக்குங்க ஐயா.”

 

பாண்டியனுக்குப் பைத்தியம் பிடித்து விடும் போல் இருந்தது. ”தோட்டத்துல எரிஞ்சுகிட்டு இருக்கே அது எப்படின்னு கேட்டேன்?”

 

கூர்க்கா பதற்றத்துடன் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே ஓடி வந்தான். ”எங்கே எரியுது?’’ அவன் தோட்டத்திற்கு ஓடிச் சென்று சுற்றும் முற்றும் பார்த்த போது அவன் கண்களுக்கு, அந்தச் சடலம் எரிவது தெரியவில்லை என்பது பாண்டியனுக்கும், சுகுமாரனுக்கும் புரிந்தது. ஆவி தெரிவது போல் இதுவும், அவர்கள் கண்களுக்கு மட்டுமே தெரியும் ஒரு காட்சி தானா?  

 

பாண்டியன் திகைப்புடன், சடலம் எரிவது போல் மிகத் தத்ரூபமாய்த் தெரிந்த அந்தக் காட்சியைக் கூர்ந்து பார்த்தார்.  சுகுமாரனுக்குச் சற்றுத் தாமதமாகத் தான் அந்த உண்மை புரிந்தது. மருத்துவ விஷயங்களிலும், மற்றபடி அவர் சமாளிக்கும் விவகாரங்களிலும் அனாயாசமாக வேலை செய்யும் மூளை, ஏனோ இது போன்ற விஷயங்களில் வேகமாக வேலை செய்ய மறுத்தது.

 

பாண்டியன் கூர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தாரேயொழிய, சைத்ராவின் உருவத்தைப் பார்த்துக் கல்லெறிந்த வேலையை இப்போது செய்யத் துணியவில்லை. டாமி முதலாளியைப் பார்த்ததும், குரைத்துக் கொண்டே ஓடி வர, சுகுமாரன் தட்டிக் கொடுத்து சைகையால் பேசமாலிரு என்றார். நல்ல வேளையாக டாமி குரைப்பதற்கு ஓய்வு கொடுத்து அமைதியாகியது.

 

கூர்க்கா திரும்ப வந்து மெல்லக் கேட்டான். “எங்கே எரியுதுன்னு சொன்னீங்க ஐயா?”

 

பாண்டியனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. பைத்தியம் பிடிக்காமல் இங்கிருந்து போக முடியுமா என்ற யோசனையுடன்சரி போஎன்று அவரும் கூர்க்காவிடம் சைகை காட்டினார்.

 

அவரும் சைகை காட்டிப் பேசுவதைப் பார்த்த சுகுமாரனுக்கோ, பாண்டியனுக்கும் பேச்சு வரவில்லையோ என்ற சந்தேகம் வந்து விட்டது. அவர் சைகையில் கேட்டார். “என்ன உங்களுக்கும் பேச்சு வரமாட்டேன்கிறதா?”

 

பாண்டியனுக்கு, அவருக்குப் பதில் சொல்லுமளவு பொறுமை இருக்கவில்லை. ஒரு புறம் வில்லங்கமாய் தெரியும் விஷயம், இன்னொரு கோணத்தில் வேடிக்கையாகவும் இருக்கிறது. ஒன்றுமே சொல்லாமல் பெருமூச்சு விட்டபடி அவர் தோட்டத்தைப் பார்த்தார். இப்போது அங்கே எந்தக் காட்சியும் தெரியவில்லை. இது நல்ல அறிகுறியா இல்லையா என்று அவருக்குத் தெரியவில்லை. அடுத்தபடியாய் எங்கே என்ன புதிய பிரச்சினை உருவாகுமோ என்ற யோசனை அவருக்குள் எழுந்தது.

 

கூர்க்காவுக்கு அவர்கள் இருவர் செய்கைகளும் வினோதமாக இருந்தன. ஆனால் டாமி குரைப்பதை நிறுத்தியது அவனுக்கு ஆறுதலாக இருந்தது. அவன் வெளியே சென்று கேட்டைச் சாத்தினான்.  ஆனால் சாத்தியவன் அடுத்த கணமே பதறியபடி ஓடி வந்தான். “ஐயா தீ…. தீ….”

 

(தொடரும்)

என்.கணேசன்





1 comment:

  1. பாண்டியன் என்னவென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளது போல் தான் தெரிகிறது.... அவர் பயத்தில் இருப்பது போல தெரியவில்லை.....🤣🤣🤣🤣

    ReplyDelete