சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 10, 2023

யோகி 4

 

கிருஷ்ணமூர்த்தி ஒரு கணம் பேச்சிழந்தார். அவர் மகளை அவர் மிக நன்றாக அறிவார். அவளுடைய தந்தை அவளுக்கு ஆபத்து என்று கேள்விப்பட்டு வந்திருக்கிறார், ஆபத்தில்லாமல் பாதுகாப்பாக இருப்பதாக அவளே நேரடியாகச் சொன்னால் நிம்மதியாகப் போய் விடுவார் என்ற நிலைமை இருக்கையில், ஆசிரமத்தின் அற்ப விதியைக் காரணம் காட்டி நேரில் வர மறுப்பவள் அல்ல அவர் மகள். இந்த மனிதர் பொய் சொல்கிறார். உண்மையில் அவர் மகளுக்கு இங்கே ஆபத்து இருக்கிறது

 

அவர் வெளிப்படையாகச் சொன்னார். “நீங்க பொய் சொல்றீங்க. என் மகள் அப்படிச் சொல்லியிருக்க மாட்டா

 

அந்த நடுத்தர வயதுத் துறவி அவரை இரக்கத்தோடு பார்ப்பது போல் பார்த்துச் சொன்னார். ”எல்லா உறவுகளையும் துறந்து வருவதற்குப் பெயர் தான் துறவு. நீங்கள் இன்னும் மகள் என்ற பழைய பாசத்தோடு தான் இருக்கிறீர்கள். அதை திரும்பவும் வளர்த்து விட விரும்பாமல் தான் அவர்கள் உங்களைச் சந்திக்க விரும்பவில்லை என்ற உண்மையைத் தயவு செய்து நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் ஐயா. தயவு செய்து நிம்மதியாகப் போங்கள். அவருக்கு ஆபத்து இல்லை. அப்படி அவருக்கு ஏதாவது ஆபத்து வர நாங்கள் அனுமதிக்க மாட்டோம்…”

 

அவர் இரக்கத்தோடு பார்த்ததும், சொன்னதும் கிருஷ்ணமூர்த்தியை மிகவும் ஆத்திரமடையச் செய்தது. வாசலில் நின்றிருந்த திடகாத்திரமான இளைஞர்கள் இப்போது உள்ளே விட்டார்கள். அவர்கள் கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்த பார்வையும் ரவுடித்தனமாக இருந்தது. அவர் இனியும் ஏதாவது முரண்டு பிடித்தால் அவரைத் தூக்கி வெளியே வீசவும் அவர்கள் தயங்க மாட்டார்கள் போலத் தோன்றியது.

 

கிருஷ்ணமூர்த்தி ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு உறுதியான குரலில் அந்த நடுத்தர வயதுத் துறவியைப் பார்த்து சொன்னார். என் மகள் நீங்க சொல்ற மாதிரி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை. எனக்கு இப்ப அந்த மொட்டைக் கடிதம் உண்மை தானோன்னு சந்தேகமாயிருக்கு. உங்க வார்த்தைகளை நம்பி நான் நிம்மதியாய் போக முடியாது.”

 

திரும்பவும் நீங்கள் அவரை உங்கள் மகள் என்றே சொல்கிறீர்கள். அந்த பந்தத்தை அவர் எப்போதோ துறந்து விட்டார். இப்போது அவர் எங்கள் ஆசிரமத்து சன்னியாசினி.”

 

கிருஷ்ணமூர்த்தி பொரிந்து தள்ளினார். “துறந்தது அவள் தான், நானல்ல. எனக்கு எப்பவும் அவள் என் மகள் தான். என்னய்யா பெரிய விதிமுறை. ஆனானப்பட்ட ஆதிசங்கரரே அம்மா இறந்தவுடன, அம்மாவுக்கு கொள்ளி போட ஓடோடி வந்தவருய்யா. அவரை விடப் பெரிய துறவிகளாய்யா நீங்கல்லாம்…”  

 

அதற்கு பதில் சொல்லும் அவசியம் இல்லை என்பது போல்  அந்தத் துறவி அமைதியாக நின்றார். கிருஷ்ணமூர்த்திக்கு இருந்த ஆத்திரத்தில் அந்த ஆளை ஓங்கி ஒரு அறை அறைந்தால் என்ன என்று தோன்றியது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு சொன்னார். “என் மகளைப் பார்த்துப் பேச எனக்கு அனுமதி தராட்டி நான் போலீஸ்ல  புகார் தர வேண்டியிருக்கும்….”

 

அந்தத் துறவி அலட்சியம் கலந்த அமைதியுடன் சொன்னார். “உங்கள் விருப்பப்படி செய்யுங்கள் ஐயா

 

கிருஷ்ணமூர்த்திக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. என்ன மனிதர்கள் இவர்கள் என்று தோன்றியது. அதற்கு மேல் அவர்களிடம் பேச ஒன்றுமில்லை என்று நினைத்தவராக அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.

 

யோகாலயத்தின் உள்ளே கண்காணிப்பு காமிரா பதிவில், வரவேற்பறையில் நடப்பதை எல்லாம் ஒரு மனிதர் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய கூர்மையான பார்வை கிருஷ்ணமூர்த்தியை விட்டு, கண நேரமும் அகலவில்லை. அங்கிருந்து கிருஷ்ணமூர்த்தி வெளியேறும் வரை பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர்,  அவர் வெளியேறியவுடன், தன்னருகில் நின்று கொண்டிருந்த அடியாளிடம் அமைதியாகச் சொன்னார். “அந்த ஆள் எங்கே போறான், என்ன செய்யறான்னு பாரு

 

அந்த அடியாள் தலையசைத்து விட்டு நகர்ந்தான்.

 

கிருஷ்ணமூர்த்தி யோகாலயத்திலிருந்து கிளம்பி சிறிது தூரம் சென்று காரை நிறுத்தி விட்டு யோசித்தார்.  அவர் காரைத் தொடர்ந்து, பைக்கில் வந்து கொண்டிருந்தவனும் தன் பைக்கை நிறுத்தி தன் கைபேசியை எடுத்துப் பேசுவது போல் பாவனை செய்தான். ஆனால் அதற்கு அவசியமே இருக்கவில்லை. கிருஷ்ணமூர்த்திக்கு, தன்னை ஒருவன் பின் தொடர்ந்து வருவதோ, தான் காரை நிறுத்தியவுடன் சற்று தொலைவில் அவனும் நின்று விட்டதோ தெரிந்திருக்கவில்லை. அவர் கவனமெல்லாம் அவர் மகள் பற்றிய யோசனைகளிலேயே இருந்தது.

 

சைத்ராவுக்கு உண்மையிலேயே ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்பது இப்போது அவருக்கு உறுதியாகத் தெரிந்து விட்டது. அப்படி ஆபத்து இருக்கா விட்டால் அவர்கள் அந்த முட்டாள்தனமான விதிமுறையைச் சொல்லி அனுமதி மறுத்திருக்க மாட்டார்கள். ஒரு நிமிடம் அவள் வந்து பேசி விட்டுப் போவதில் இருபக்கத்தாருக்கும் பிரச்சினை தீர்ந்து போயிருக்கும். அந்தச் சின்ன விஷயத்தையும் அவர்கள் செய்யாமல் விட்டது, அது அவர்களுக்குச் சின்ன விஷயமாக இல்லை என்பதையே காண்பிக்கிறது. அதனால் இனி யோசிக்க எதுவும் இல்லைபோலீஸில் புகார் செய்வதைத் தவிர வேறு வழியில்லை

 

ஒரு முடிவுக்கு வந்தவராக, கிருஷ்ணமூர்த்தி கைபேசியை எடுத்து, யோகாலயம் எந்தப் பகுதி போலீஸ் ஸ்டேஷனின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்று இணையத்தில் தேடிக் கண்டுபிடித்தார். பின் காரைக் கிளப்பினார். அப்போதும் சரி, அதன் பின்னும் சரி, தன்னை ஒருவன் பைக்கில் பின் தொடர்வதை அவர் அறியவில்லை. மகளும், மகளின் பாதுகாப்பும் மட்டுமே அவர் மனதில் நிறைந்திருந்ததால், வேறு எதற்கும் அவர் மனதில் இடம் இருக்கவில்லை.

 

போலீஸ் ஸ்டேஷனில் அவர் உள்ளே நுழைந்த போது போலீஸ் இன்ஸ்பெக்டர் இருக்கவில்லை. அவருக்குத் தன்னுடைய புகாரை ஏட்டிடம் தந்து விட்டுச் செல்ல மனமிருக்கவில்லை.

 

ஏட்டிடம் அவர் கேட்டார். “இன்ஸ்பெக்டர் எப்ப வருவார்?”

 

அரை மணி நேரத்துல வந்துடுவார் சார்.”

 

கிருஷ்ணமூர்த்தி தலையசைத்து விட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார். அங்கு காத்திருக்கும் போதும் அவர் மனம் மகளுக்காக மிகவும் கவலைப்பட்டது. அவளுக்கு என்ன ஆபத்து, அது நிகழ்ந்து விட்டதா, இல்லையா என்று எதுவுமே புரியாத நிலைமை கொடுமையாகத் தோன்றியது. இன்ஸ்பெக்டருக்காகக் காத்திருக்கும் சமயத்தில் அப்பாவுக்குப் போன் செய்து தெரிவிக்க வேண்டும் என்று தோன்றினாலும், இந்த கவலைக்குரிய தகவலை அவருக்குத் தெரிவித்து அவர் நிம்மதியையும் கெடுக்க வேண்டாம் என்றும் தோன்றியது.

 

நல்ல வேளையாக இருபது நிமிடங்களிலேயே இன்ஸ்பெக்டர் வந்து விட்டார். கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்தபடியே தன் அறைக்குள் அவர் போக, ஏட்டு சொன்னார். “நீங்க போய்ப் பாருங்க சார்

 

கிருஷ்ணமூர்த்தி இன்ஸ்பெக்டரிடம் சென்று விசிட்டிங் கார்டு தந்து  தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இன்ஸ்பெக்டரின் மேசையில் இருந்த பெயர்ப்பலகை அவர் பெயர்செல்வம்என்று தெரிவித்தது. 

 

டாக்டர் என்று பார்த்தவுடனேயே இன்ஸ்பெக்டர் முகத்தில் மரியாதை தெரிந்தது. “உட்காருங்க சார்

 

உட்கார்ந்த கிருஷ்ணமூர்த்தி, தான் வந்த காரணத்தை அவரிடம் சொன்னார். இடைமறிக்காமல் அவர் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்ட இன்ஸ்பெக்டர் கேட்டார். “அந்த மொட்டைக் கடிதத்தைக் கொண்டு வந்திருக்கீங்களா சார்?”

 

அது வீட்டுல இருக்கு. நான் எடுத்துகிட்டு வரல. யோகாலயத்துல சைத்ராவைப் பார்க்க அனுமதிக்க மாட்டாங்கங்கற யோசனையே எனக்கு வரல…”

 

இன்ஸ்பெக்டர் புரிகிறது என்பது போல் தலையசைத்து விட்டுச் சொன்னார். “சார் அவங்க பெரிய இடம். யோகி பிரம்மானந்தாவைப் பார்க்க முதலமைச்சர், கவர்னர், பிரதமர் எல்லாம் வந்துட்டுப் போறாங்க. அதனால நீங்க அந்த மொட்டைக் கடிதத்தோட உங்க புகாரையும் எழுத்து வடிவுல தந்தா தான் நான் அங்கே போய் விசாரிக்கவே முடியும்... இல்லாட்டி சரியான காரணம் இல்லாமல் நான் போய் அவங்கள தொந்தரவு செய்யறதா அவங்க மேலிடத்துல புகார் செய்யக்கூடியவங்க…”

 

கிருஷ்ணமூர்த்திக்குப் புரிந்தது. அவர் சொன்னார்  தாராளமா புகாரை எழுதித் தர்றேன். அந்த மொட்டைக் கடிதத்தையும் உடனே போய் எடுத்துகிட்டு வந்து தர்றேன்ஆனா நீங்க எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விசாரிக்கணும்….”

 

சொல்லி விட்டு வேகமாகப் போகும் அவரையே பார்த்துக் கொண்டு இருந்த, அவர் கார் கிளம்பும் சத்தம் கேட்டவுடன் யோகாலயத்துக்குப் போன் செய்தார்.


(தொடரும்)

என்.கணேசன்






1 comment:

  1. தற்போது பிரபலமான ஆசிரமங்களில் இது தான் நடக்கிறது.... அங்கு சென்று பார்த்தவர்களுக்கு தெரியும் அவர்கள் கற்று தருவது யோகாவே அல்ல என்பது...

    ReplyDelete