சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 3, 2023

யோகி 3

 


யோகாலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில், கிருஷ்ணமூர்த்தியால் அமைதியாக இருக்க முடியவில்லை. மகள் உயிருக்கு ஆபத்து என்று பொழுது போகாத போக்கிரிப் பயல் எவனாவது தான்  மொட்டைக்கடிதம் எழுதியிருப்பான் என்று நம்ப முயன்றார். ஆனால் உண்மை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் வரை                                                 நிம்மதியாக இருக்க முடியாமல் தவித்த  அவர் வேகமாக யோகாலயத்தைச் சென்றடைந்தார்.

 

யோகாலயத்தின் பெரிய வெளிக்கதவு வருபவர்களுக்கெல்லாம் உடனடியாகத் திறந்து விடப்படுவதில்லை. நடந்து வருபவர்கள், இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள், ஆட்டோரிக்ஷாவில் வருபவர்கள், கால் டாக்ஸியில் வருபவர்கள், சாதாரண கார்களில் வருபவர்கள் ஆகியோரை வெளியிலேயே விசாரித்து வடிகட்டி தான் வெளிக்காவலாளி உள்ளே அனுப்புவார். ஆனால் விலையுயர்ந்த கார்களில் வருபவர்களுக்கு உடனடியாக வெளிக்கதவு திறக்கப்பட்டு விடும். முதல் வெளிக்கதவு தாண்டியவுடன் வரவேற்பறை, தியானம் யோகா ஆகியவற்றைக் கற்றுத் தரும் வகுப்பறைகள், கற்பவர்கள் தங்கும் அறைகள், சமையலறை மற்றும் சாப்பாட்டு அறை ஆகியவை இருந்தன. யோகாலயத்துக்கு வரும் பெரும்பாலானவர்கள் அதையும் தாண்டி உள்ளே போவது எளிதல்ல. அங்கே இருக்கும் பெரிய கதவு எப்போதும் மூடியே இருக்கும். ரோல்ஸ் ராய்ஸ் காரிலேயே வந்தாலும் அங்கு இருக்கும் காவலாளி உள்ளிருந்து அனுமதி கிடைக்காமல் அந்தக் கதவைத் திறப்பது கிடையாது. அந்த இரண்டாவது கதவையும் தாண்டி யோகாலயத்தை நிறுவியவரான யோகி பிரம்மானந்தா முதலான முக்கியஸ்தர்களும், மற்ற துறவிகளும் வசிக்கிறார்கள். அங்கே போகிறவர்கள் அதிகமாக, யோகி பிரம்மானந்தாவைச் சந்திக்கப் போகிறவர்களாகத் தான் இருப்பார்கள். அந்தப் பாக்கியம் மிகச்சிலருக்கே கிடைக்கும். மற்றவர்கள் வரவேற்பறையில் உள்ளவர்களைச் சந்தித்து, அவர்கள் தரும் பதில்களில் திருப்தியடைந்து, யோகாலயம் விற்கும் படங்கள் மற்றும் பொருள்கள் வாங்கிக் கொண்டு போய் விடவேண்டியது தான்.

 

கிருஷ்ணமூர்த்தி விலையுயர்ந்த காரில் வந்ததால் வெளிக் காவலாளியின் விசாரணக்குட்படாமல் வெளிக்கதவைத் தாண்டி காரை உள்ளே நிறுத்த முடிந்தது. அவர் காரிலிருந்து இறங்கி அவசர அவசரமாக அலுவலக- வரவேற்பறையை அடைந்தார். வரவேற்பறையில் இருந்த ஒரு இளம் துறவி அவரைக் கேள்விக்குறியுடன் பார்த்தார்.

 

கிருஷ்ணமூர்த்தி அமைதியாகப் பேச, கடும் முயற்சி எடுத்துக் கொண்டார். “இங்கே சன்னியாசினியாய் இருக்கற சைத்ராவோட அப்பா நான். நான் அவசரமாய் அவளைப் பார்த்து பேச வேண்டியிருக்குஎன்று சொல்லும் போது அவர் குரல் நடுங்குவதை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

 

மன்னிக்க வேண்டும் ஐயா. சன்னியாசம் வாங்கிய பிறகு, குடும்பத்தாரைப் பார்க்க இங்கே அனுமதி தருவதில்லை.” என்று அந்த இளம் துறவி பணிவாகச் சொன்னார்.

 

கிருஷ்ணமூர்த்தி சுற்றி வளைத்துப் பேசாமல் வெளிப்படையாகவே சொன்னார். “நான் அவளைப் பார்த்தேயாகணும். அவ உயிருக்கு இங்கே ஆபத்துன்னு எனக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்திருக்கு. அப்படி எதுவும் இல்லை, அவ  நலமாய் பாதுகாப்பாய் தான் இருக்கான்னு எனக்குத் தெரிஞ்சா போதும்.”

 

ஒரு கணம் அந்த இளம் துறவி திகைத்தது தெரிந்தது. பின் சுதாரித்துக் கொண்டு அந்தத் துறவி சொன்னார். “பொழுது போகாத விஷமி யாராவது அதை எழுதி இருக்கலாம் ஐயா. இங்கே இருக்கற எல்லா சன்னியாசிகளும் நலமாய், பாதுகாப்பாய் தான் இருக்கிறோம். அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.”

 

இதை அவள் வாயாலயே கேட்டுட்டா நான் நிம்மதியாய் போயிடுவேன்கிருஷ்ணமூர்த்தி சொன்னார்.

 

அந்த இளம் துறவி தயக்கத்துடன் யோசித்து விட்டுச் சொன்னார். “நீங்கள் உட்காருங்கள் ஐயா. நான் கேட்டு விட்டுச் சொல்கிறேன்

 

கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தார். அந்த இளம் துறவி இண்டர்காமில் மிக மெல்லிய குரலில் பேசினார். பேசிய பின் அவர் கிருஷ்ணமூர்த்தியைப் பார்ப்பதைத் தவிர்த்தார்.

 

இரண்டு நிமிடங்களில் ஒரு நடுத்தர வயதுத் துறவி வந்தார். அவர் கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்து கைகூப்பினார். கிருஷ்ணமூர்த்தியும் கைகூப்பினார்.  அந்தத் துறவி அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து  அமைதியான குரலில் சொன்னார். “நமஸ்காரம். உங்கள் மகள் உயிருக்கு ஆபத்து இருக்கிறதாக உங்களுக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்திருப்பதாகவும், அதில் நீங்கள் பயந்து போய் சுவாமினி சைத்ராவைப் பார்க்க வந்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன். எங்கள் ஆசிரமத்து வளர்ச்சியில் வயிற்றெரிச்சல் கொண்டவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்தி எங்களுடைய ஆன்மீகச் சேவையைத் தடுத்து நிறுத்தி விடலாம் என்று பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட யாரோ செய்திருக்கிற வேலையாய் தான் இது இருக்க வேண்டும். நீங்கள் அதைப் படித்து பதறி வந்திருப்பதில் தவறில்லை. ஆனால் சன்னியாசம் வாங்கிய பிறகு நாங்கள் யாரும் குடும்பத்தினரைச் சந்திக்க ஆசிரமம் அனுமதிப்பதில்லை. அப்படிச் சந்திக்க அனுமதிப்பது எங்கள் துறவறத்தை அர்த்தமில்லாததாக்கி விடும் என்பது தான் காரணம்...”

 

வரவேற்பு மேசைக்குப் பின் இருந்த இளம் துறவியைக் கைகாட்டி கிருஷ்ணமூர்த்தி சொன்னார். “இதைத் தான் அவரும் சொன்னார். நான் என் மகள் கிட்ட குடும்ப விஷயங்களையோ, கதையோ பேசப் போகிறதில்லை. அவள் நேர்ல வந்துஅந்த மொட்டைக் கடிதத்துல எழுதின மாதிரி ஆபத்துல நான் இல்லை. நலமாயிருக்கேன்னு சொல்லிட்டு போயிடட்டும். நானும் நிம்மதியாய் போயிடுவேன்...”

 

எத்தனை விளக்கிச் சொல்லியும் புரிந்து கொள்ளாமல் அடம் பிடிக்கிற சிறு குழந்தையைப் பெரியவர்கள் பார்ப்பது போல் அந்தத் துறவி அவரைப் பார்த்தார். “உங்களுக்கு நான் என்ன சொல்கிறேன் என்று புரியவில்லை.  துறவு, தியானம் என்று இறைவழி போகிற வாழ்க்கையில் ஆபத்துக்கு என்ன காரணம் இருக்க முடியும்?”

 

அவர் அப்படிச் சொல்லும் போது வரவேற்பறை வாசலில் இரண்டு ஆஜானுபாகுவான இளைஞர்கள் தெரிந்தார்கள். கிருஷ்ணமூர்த்தி ஏதாவது பிரச்சினை செய்தால் அவரை அப்புறப்படுத்த வந்தவர்கள் போல் அவர்கள் இருவரும் தெரிந்தார்கள். துறவு தியானம் என்று ஆன்மீக வாழ்க்கை வாழ்கிற ஆட்களாக அவர்கள் தெரியவில்லை. அவர்களைப் பார்த்தவுடன் கிருஷ்ணமூர்த்தியின் சந்தேகம் அதிகரித்தது.

 

இது போன்ற சமயங்களில் கீழ்மட்ட ஆட்களிடம் பேசுவதை விட தலைமைப் பொறுப்பில் இருப்பவரிடமே பேசுவது பலன் தருவதாக இருக்கும் என்று கிருஷ்ணமூர்த்திக்குத் தோன்றியது. அவர் சொன்னார். “வேணும்னா நான் ப்ரம்மானந்தா கிட்டயே பேசறேன்

 

கிருஷ்ணமூர்த்தி அப்படிச் சொன்னதை அந்தத் துறவி ரசிக்கவில்லை என்பது அவர் முகபாவனையில் தெரிந்தது. அவர் சொன்னார். “நீங்கள் ஒரு கோரிக்கையோடு ஒரு அரசாங்க அலுவலகத்துக்குப் போகிறீர்கள்.  அங்கேயிருக்கிற அதிகாரிஅரசு விதிப்படி அதற்கு அனுமதி தர முடியாதுஎன்று சொன்னால் நீங்கள் உடனேவேண்டுமானால் நான் முதலமைச்சரிடம் பேசுகிறேன்என்பது சரியாய் இருக்குமா?”

 

இது ஒரு அரசு அலுவலகம் போன்ற அமைப்பு, பிரம்மானந்தா மாநில முதலமைச்சருக்கு இணையானவர்என்ற வகை ஒப்பீட்டில் கோபம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி சொன்னார். “அந்த அரசாங்க அலுவலகத்துக்குள்ளே என் மகள் இருந்து, அந்த அதிகாரி முட்டாள்தனமான ஏதாவது விதிமுறையை காரணம் காட்டி, அவளை நான் சந்திக்க அனுமதிக்கலைன்னா, நான் அங்கே என்ன சொன்னாலும் அது தப்பாயிருக்காது. முதல்ல நான் சொல்றதைப் புரிஞ்சுக்க பாருங்க. என் மகள் உயிருக்கு ஆபத்துன்னு ஒரு மொட்டைக் கடிதம் வரலைன்னா, அவள் சன்னியாசியான பிறகும் நான் ஏன் இங்கே வரப்போறேன்?”

 

அந்தத் துறவி சொன்னார். “அந்த மொட்டைக் கடிதத்தைக் காட்ட முடியுமா?”

 

அதை நான் கொண்டு வரலை. அது வீட்ல இருக்கு.”

 

தேவையான ஒரு மிக முக்கிய ஆவணத்தை எடுத்துக் கொண்டு வராமல், பெரிய கோரிக்கையை முன் வைக்கிற நபரை ஒரு உயரதிகாரி பார்ப்பது போல், அந்தத் துறவி கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்தார். பின் ஒரு தீர்மானத்திற்கு வந்தவர் போல் எழுந்து நின்று சொன்னார். “இது விதிமுறைக்கு எதிரானது என்றாலும் உங்களுக்காக நான் சுவாமினி சைத்ராவிடம் நீங்கள் சொல்வதைச் சொல்றேன்... அவர் சம்மதித்தால் நீங்கள் அவருடன் பேசலாம்...”

 

கிருஷ்ணமூர்த்திக்கு அவர் சொன்னது பெரும் ஆறுதலாக இருந்தது. கோபம் தணிந்துநன்றி சுவாமிஜிஎன்றார்.

 

அந்தத் துறவி தலையசைத்து விட்டுச் சென்றார். ஆனால் வாசலில் இருந்த இரண்டு திடகாத்திரமான இளைஞர்களும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள்.

 

கிருஷ்ணமூர்த்திக்கு காத்திருக்கும் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாகக் கழிவது போல் இருந்தது. ரிசப்ஷனில் இருந்த இளம் துறவி, தப்பித் தவறியும் அவரைப் பார்த்து விடக்கூடாது என்று சங்கல்பம் எடுத்துக் கொண்டவர் போல் எதோ ஒரு ரிஜிஸ்டரைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

சிறிது நேரத்தில் அந்த நடுத்தரத் துறவி வந்தார். ஆனால் அவருடன் சைத்ரா இருக்கவில்லை. வந்தவர் அமரவில்லை. நின்று கொண்டே கிருஷ்ணமூர்த்தியிடம் சொன்னார். “சுவாமினி சைத்ரா ஆசிரம விதிமுறைக்கு புறம்பாக நடந்து கொள்ள விரும்பவில்லை. அவர் பரிபூரண பாதுகாப்போடு இங்கே இருப்பதாகவும், அதனால் கவலைப்படாமல் இருக்கும்படியும், உங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்.”

 

(தொடரும்)

என்.கணேசன்


தற்போது விற்பனையில்




3 comments:

  1. Nivhayamsomething wrong. Phone la pesa vaikalam video call pesa vaikalam.

    ReplyDelete
  2. இதை படிக்கும் போது... தற்போது இருக்கும் ஆசிரமங்களில் நடக்கும் நிகழ்வைப் போல உள்ளது...

    ReplyDelete
  3. Got my book...busy in reading day and night

    ReplyDelete