சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 3, 2023

யாரோ ஒருவன்? 132



நாகராஜ் அவர்கள் யாரும் பேசாததைக் கண்டு தொடர்ந்து சொன்னான். “சுவாமிஜி உயிரோட இருந்தப்ப அவர்கிட்ட மாதவன் ஒரு நாள் ஏன் உயிர் நண்பர்களே இப்படி நடந்துகிட்டாங்கன்னு கேட்டிருந்தான். அவர் சொன்னார். ”எல்லார் வாழ்க்கைலயும் அப்பப்ப ஏதாவது சபலங்களை விதி வெச்சு சோதிக்கறது வழக்கம். மனசுல நன்மைகள் அதிகம் இருக்கறவங்க அந்த சபலத்துக்காளாகாம கடந்து போயிடறாங்க. மனசுல தீமைகள் அதிகம் இருக்கறவங்க தற்காலிக லாபத்துக்காக சோரம் போயிடறாங்க. ஒருவிதத்துல சபலங்கள் ஒருத்தனை அடையாளம் காட்டறதாயிருக்கு... இல்லாட்டி கடைசி வரைக்கும் நம்பி ஏமாந்துட வேண்டியிருந்திருக்கும்”...  கணக்கு தீர்க்க வந்த இந்த நேரத்துல இந்த நாகராஜ் அதை நினைச்சு தன்னை சமாதானப்படுத்திக்க நினைக்கிறான்.”

தண்டனை தர்றது பெரிசில்லை. ஆனா குற்றவாளிகளுக்குத் தர்ற தண்டனையில் நல்லவங்களுக்கும் வலிக்கும்கிறப்ப யோசிக்க வேண்டி இருக்கு. ஒருத்தன் மாதவன் மகனுக்கு  இனிஷியலா இருக்கறவன். இன்னொருத்தன் மாதவன் மகன் கட்டிக்கப் போற பொண்ணுக்குத் தகப்பனா இருக்கிறவன். ஏற்கெனவே உண்மைகளைத் தெரிஞ்சுகிட்ட வலியோட இருக்கறவங்க இந்தத் தண்டனை மூலமா கூடுதல் வலி அல்லவா அனுபவிப்பாங்கன்னும் தோணுது. எல்லத்துக்கும் மேலா, மாதவன் கடைசி வரைக்கும் நேசிக்க மட்டுமே தெரிஞ்சவன். இத்தனை ஆன பின்னும் ஏன் அப்படி அவங்க நடந்துகிட்டாங்கன்னு திரும்பத் திரும்பத் துடிச்சானே ஒழிய அவனால அவங்கள நண்பர்கள் இல்லைன்னு சொல்ல முடியல. அவனோட எத்தனையோ நல்ல நினைவுகள்ல அவங்களும் சேர்ந்திருந்தாங்க. அதுல அவங்கள பிரிச்சு எதிரிகளா சொல்லற வித்தையை அவன் இத்தனை ஆன பின்னும், நாகராஜா மாறி நாகசக்திகள் கிடைச்சதுக்கப்பறமும் கத்துக்கலை. அப்பப்ப கோபம் வந்தாலும் அவங்கள முழுசா வெறுக்க அவனால முடியல. அதனால அவன் அவங்களை மன்னிச்சுட்டு தான் இங்கேயிருந்து கிளம்பறான்....” நாகராஜ் எழுந்தான். அப்போது அவன் முகத்தில் அமைதி மட்டுமே இருந்தது.

அவனை அனைவரும் பிரமிப்புடன் பார்த்தார்கள். சில விழிகளில் கண்ணீர், சில விழிகளில் நன்றியுணர்வு, சில விழிகளில் திகைப்பு கூடுதலாகத் தெரிந்தது.

உங்களுக்குத் தெரிஞ்ச பழைய மாதவன் கணக்கு முடிஞ்சுடுச்சு. பழசு எல்லாத்துக்கும் அவன் முற்றுப்புள்ளியும் வெச்சுட்டான். கொஞ்ச நாள்ல அவன் நாகராஜாகவும் இருக்க மாட்டான். பெயர் முதற்கொண்டு எல்லாத்தையும் இழந்து ஒரு துறவியாயிடுவான். அதனால யாரும் இனி இந்த நிமிஷத்துல இருந்து பழைய மாதவனைத் தேடி எங்கேயும் போகவோ வரவோ வேண்டாம்பயப்படவும் வேண்டியதில்லை. மாதவனாகவோ, நாகராஜாகவோ அவனால யாருக்கும் எந்தக் கெடுதலும் வராது

கைகூப்பி விட்டு நாகராஜ் அமைதியாக அங்கிருந்து சென்றான். நாகராஜின் சக்தியால் கட்டுண்ட மூவரும் அந்தச் சக்தியிலிருந்து விடுபட்டார்கள். மூவரில் சரத் மட்டுமே கண்கலங்கியிருந்தான்.

கல்யாண் சத்தமாகச் சொன்னான். “என்னமா நாடகமாடிகிட்டுப் போறான்

வேலாயுதம் பேச்சில்லாமல் நாகராஜ் பின்னால் வேகமாக ஓடினார். அவன் வெளிகேட்டை எட்டும் போது அவர் அவனை எட்டியிருந்தார். “நாகராஜ், நீ மன்னிச்சதா சொன்னது உண்மையாயிருந்தா எங்க நாகரத்தினக்கல்லை திருப்பிக் குடுத்துடுஎன்று மூச்சிறைக்கச் சொன்னார்.

நாகராஜ் அமைதியாகச் சொன்னான். “அது யாருக்குச் சேரணுமோ அவனுக்குப் போய் சேர்ந்துடுச்சு.”

வேலாயுதம் திகைப்புடன் கேட்டார். “அந்தப் பிச்சைக்காரப் பாம்பாட்டிக்கா?”

இப்ப அவன் பிச்சைக்காரனல்லஎன்று சொல்லிக் கொண்டே நாகராஜ் வெளிகேட்டைச் சாத்தினான்.

வேலாயுதம் அவனைக் கடுங்கோபத்துடன் பார்த்தார். “பேச்செல்லாம் பெருசா தான் பேசறான். அந்தப் பாம்பாட்டிக்குக் குடுக்கறதுன்னா இவன் கிட்ட இருக்க நாகரத்தினத்துல ஒன்னை எடுத்துக் குடுக்க வேண்டியது தானே. கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிற மாதிரி இங்கே இருந்து எதுக்கு எடுத்துகிட்டு போகணும்? சனியன்என்று முணுமுணுத்துக் கொண்டே உள்ளே போனார்.

வீட்டினுள்ளே யாரும் யாரிடமும் பேசிக் கொள்ளவில்லை. எல்லோர் மனதிலும் ஏராளமான உணர்ச்சிகள். சுமக்க முடியாத கனங்கள், அடுத்து என்ன செய்வதென்ற கேள்விகள், இனி என்ன ஆகும் என்ற கவலைகள்....

ரஞ்சனி நடைப்பிணமாய் அழுது சிவந்த கண்களுடன் எழுந்து மகனைப் பார்த்தாள். தீபக் தர்ஷினியைப் பார்த்துத் தலையசைத்து விட்டு எழுந்தான்.

ரஞ்சனி மேகலாவைப் பார்த்து போகிறேன் என்று தலையசைக்க அவளும் கண்கலங்க சரியெனத் தலையசைத்தாள். ரஞ்சனி முன்னால் போக தீபக் பின் தொடர சரத் கல்யாணிடம்நாளைக்குப் பேசுவோம்என்று மெல்லச் சொல்லி விட்டு பின் தொடர்ந்தான்.

சரத் காரில் ஏறி அமர ரஞ்சனி மகனிடம் சொன்னாள். “அஞ்சே நிமிஷத்துல வந்துடறேன்சரத் காரிலேயே அமர்ந்திருக்க, தீபக் கார் அருகே நின்றிருக்க ரஞ்சனி பக்கத்து வீட்டுக்குப் போனாள்.

பக்கத்து வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்திருந்த நாகராஜ் அவளைக் கேள்விக்குறியுடன் கடுமையாகப் பார்த்தான்.

எனக்கு மாதவன் கிட்ட அஞ்சு நிமிஷம் பேசணும்ரஞ்சனி உறுதியாகச் சொன்னாள்.

நாகராஜ் சொன்னான். “நான் அப்பவே உங்க கிட்டே சொல்லிட்டேன். உங்க மாதவன் இப்ப இல்லை... எல்லாம் முடிஞ்சுடுச்சு.”

அப்பறம் ஏண்டா முதல் தடவை என்னைப் பாக்கறப்ப கருப்புக் கண்ணாடி போட்டுகிட்டே?” என்று அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு கேட்ட போது நாகராஜ் அதிரவில்லை என்றாலும் உள்ளே பெட்டிகளுக்குள் பொருள்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்த சுதர்ஷன் அதிர்ந்தான். அவனுக்குத் தெரிந்து மகராஜை டா போட்டுப் பேசியவர்கள் யாருமில்லை.

நாகராஜ் அவன் கட்டுப்பாட்டையும் மீறிப் புன்னகைத்தான். அவள் மாறவில்லை.. அவன் மென்மையாகச் சொன்னான். “நான் சத்தியமங்கலத்துல மாதவன் வீட்டுக்குப் போனப்பவும் கருப்புக் கண்ணாடியப் போட்டுட்டு தான் போனேன். மாதவன் ரொம்பவும் நேசிச்ச மனிதர்களை முதல் தடவை சந்திக்கிற போது கட்டுப்பாட்டையும் மீறி கண்ணீரை வரவழைச்சுடுவானோன்னு எனக்குப் பயம் இருந்துச்சு. அதனால தான்... ஆனா ரெண்டாவது தடவ அத்தனை பேரோட உங்களையும் பார்க்க வந்தப்ப கண்ணாடி போட்டுக்கலைங்கறத கவனிச்சிருப்பீங்க...”

அவன் அதை மறைக்காமல் சொன்னதைக் கேட்டுக் கண்கலங்கியபடி ரஞ்சனி அவனிடம் சொன்னாள். “பெத்தவங்க கிட்ட கூட நீ உயிரோட இருக்கறத சொல்லாம வந்தப்பவே பழைய மாதவனாய் நீ மாறப்போறதில்லைன்னு புரிஞ்சுடுச்சுஆனா எனக்கு என் மாதவன் கிட்ட அஞ்சே அஞ்சு நிமிஷம் பேசணும். அதுக்கப்பறம் எப்பவுமே நான் தொந்திரவு பண்ண மாட்டேன்.. அப்படிப் பேசலைன்னா செத்தாலும் இந்தக்கட்டை வேகாது....”

அப்படிப் பேசாமல் அவள் போவதாய் இல்லை.. நாகராஜ் போகையில் ஏற்கெனவே துக்கத்தில் இருக்கும் அவளை மேலும் துக்கப்படுத்திவிட்டுப் போவதாய் இல்லை. அவன் சொன்னான். “சொல்லு ரஞ்சனி

அந்த இரண்டு சொற்களில் அவள் கண்கள் மேலும் கலங்கின. ”நீ உயிரோட இருக்கிறாய்னு சின்ன சந்தேகம் வந்திருந்தா கூட நான் உனக்காக சாகற வரைக்கும் என் குழந்தையோட காத்திருந்திருப்பேன்டா. ஊர்ப்பழியை எல்லாம் ஒரு பொருட்டா நான் நினைச்சிருக்க மாட்டேன்.....”

அவன் புரிதலுடன் மென்மையாகச் சொன்னான். “எனக்குத் தெரியும் ரஞ்சனி

நீ சொன்ன மாதிரி நம்ம குழந்தைக்கு ஒரு இனிஷியல் குடுக்க முன் வந்தவன் என் கிட்ட உங்கப்பா அம்மா கிட்ட எல்லாம் பழைய மாதிரி போய் வந்துகிட்டிருந்தா நம்ம குழந்தையை அவன் குழந்தையா நினைக்கிறது கஷ்டமாயிருக்கும்னு சொன்னான்.... அது ஒன்னு மட்டும் தான் அவன் போட்ட கண்டிஷன். அதை மீற முடியலைடா. இல்லாட்டி நான் அவங்கள கைவிட்டிருக்க மாட்டேன்....”

அதுவும் எனக்குத் தெரியும் ரஞ்சனி....” நாகராஜ் குரல் கரகரத்தது.

நீ உயிரோட இருக்கிறத நானும் உங்கம்மா அப்பா கிட்ட சொல்லப் போறதில்லை. அந்த துக்கம் அவங்க ஏற்கெனவே ஏத்துகிட்டதும் கூட. ஆனா உனக்கு ஒரு மகன் இருக்கறத நான் அவங்க கிட்ட சொல்லலாமில்லையா. கடைசி காலத்துல பேரன் இருக்கறான்கிற ஒரு சந்தோஷத்தை அவங்களுக்குத் தரலாமில்லையா

அது உன் விருப்பம் ரஞ்சனி...“

மாதவனாய் நீ நிறைய கஷ்டப்பட்டுட்டே. நாகராஜாகவோ அந்த துறவியாகவோவது உனக்கு நிம்மதியும், நிறைவும் கிடைக்கட்டும்டா. இனி எப்பவுமே உன் ரஞ்சனி உன்னைத் தொந்திரவு பண்ண வரமாட்டா


குரலடைக்கச் சொல்லி விட்டு ரஞ்சனி திரும்பிப் பார்க்காமல் நடந்தாள். மனதை அவன் எத்தனையோ கடினப்படுத்தியிருந்தாலும் அவனால் அவளைப் பார்த்துக் கண்கலங்காமல் இருக்க முடியவில்லை...

(தொடரும்)
என்.கணேசன்

11 comments:

  1. Great sir neenga.. "Different vision of love" among madhavan and ranjani..

    My eyes also melting automatically..

    ReplyDelete
  2. கண்களை நனைத்து விட்டது. நாகராஜன் என்ற மாதவனால் எல்லோரையும் மன்னிக்க முடிகிறது. மாதவனாக அவனுக்கு கிடைக்காத அமைதி இனி கிடைக்கட்டும்...

    ReplyDelete
  3. True love exists!

    ReplyDelete
  4. I also couldn't control my tears sir. Excellent.

    ReplyDelete
  5. அவர்களுக்கு ஏதாவது தண்டனை கிடைக்காமல் இருப்பது ஏமாற்றமாகவே உள்ளது.... ஏனெனில் மாதவன் மன்னித்தும் அவர்கள் திருந்தவில்லை....
    இருந்தாலும் நாகராஜ் போன்றவர்களின் உயர்ந்தவர்கள் நிலையில் இருந்து பார்த்தால்... இது தான் சரி...

    ReplyDelete
  6. இந்த பதிவின் இறுதியில் வரும் மாதவன் ரஞ்சனி உரையாடல்களை படிப்பவர் மனங்களை உருகச் செய்யும் விதமாக கொடுத்துள்ளீர்கள் மிகவும் அருமை

    ReplyDelete
  7. சில தப்புக்கு காரணமே மன்னிப்புதான், சில தப்புக்கு தண்டனையே மன்னிப்புதான். ஆனால் நரேந்தர் விடமாட்டான்.

    ReplyDelete
  8. heart and eyes melting touching episode. forgiveness is greatest punishment

    ReplyDelete
  9. நேரில் பார்ப்பது போல் இருக்கிறது. மிக அருமை...

    ReplyDelete
  10. What we throw on others will bounce back exponentially. That is the law of nature. Even though Maadhavan pardoned them wholeheartedly by following Thiruvalluvar advice as Inna Seithaarai Orutthal Avar Naana, Nannayam Seithuvidal, they will be punished before they die. By whom ? By God.

    ar Naana ,

    ReplyDelete