சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 18, 2022

சாணக்கியன் 18


ரப் போகின்ற ஆபத்தை உணராமல் தட்சசீல நகர வாயிற்கதவு அதிகாலை எப்போதும் போல திறக்கப்பட்டது. வாயிற்கதவின் மேல் மாடப்பகுதியில் இரண்டு வீரர்கள் தங்கள் வழக்கமான இடங்களில் நின்று கொண்டிருந்த போதும் அவர்களும் எந்த ஆபத்தையும் எதிர்பார்த்திருக்கவில்லை. இன்று எப்போதும் போல ஒரு நாள் என்ற எண்ணமே அவர்களிடமும், கீழே வாயிற்பகுதியில் நின்று கொண்டிருந்த காவல்வீரர்களுக்கும் இருந்தது.  தட்சசீல நகரத்தின் உள்ளே நுழைய முந்தைய இரவிலிருந்து காத்துக் கொண்டிருந்தோரும், நகரத்தின் வெளியே செல்ல அதிகாலைக்கு முன்பே வந்து காத்திருந்தோரும் உள்ளே வரவும், வெளியே செல்லவும் ஆரம்பிக்க வாயிற்காவலர்களின் கவனம் எல்லாம் பயணிகளின் மீதே தங்கியிருந்தது. நகரின் தலைமைக் காவல் அதிகாரி குதிரை மீதமர்ந்து தன் கூர்மையான பார்வையைப் பயணிகள் மீது வைத்திருந்தான். அவர்கள் எல்லோருக்கும் அது வழக்கமான ஒரு சாதாரணமான நாளாய் தான் ஆரம்பித்தது.

 

அப்போது தான் மூன்று மாட்டு வண்டிகள் நகரத்தின் உள்ளேயிருந்து வெளியேற வாயிற்கதவை நோக்கி வந்து கொண்டிருந்தன. பொதுவாக உள்ளே இருந்து வெளியே போவோர் மீது காவலர்கள் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. வருபவர்கள் மீதே அவர்கள் கவனம் மிகுதியாக இருக்கும். புதியவர்களாக இருந்தால் அவர்கள் யார் என்று அறிந்து கொள்ளும் வேலை தலைமைக் காவல் அதிகாரிக்கு உண்டு. வருபவர்கள் சரியான அடையாளச்சான்று வைத்திருக்கிறார்களா என்று சோதித்து அவர்களால் நகருக்கு எந்த ஆபத்துமில்லை என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய வேலை அவனுடையது. அதனால் அவனும் உள்ளேயிருந்து வெளியேற வந்து கொண்டிருக்கும்  மூன்று மாட்டு வண்டிகள் குறித்து பெரிய அக்கறை காட்டவில்லை. மற்ற காவலர்களும் வெளியே செல்வதற்காக வந்து கொண்டிருக்கும் அந்த மாட்டு வண்டிகள் மீது சந்தேகம் கொள்ள எந்தக் காரணமும் இருக்கவில்லை.

 

வாயிற்கதவை எட்டுவதற்கு சுமார் 120 அடிகள் இருக்கும் போது மாட்டு வண்டிகள் பின்னால் வருபவர்களுக்கு வழிவிட்டு ஓரமாக நின்றன. மூன்றாவதாக இருந்த மாட்டு வண்டியிலிருந்து ஒருவன் அவசரமாக இறங்கி வந்த வழியே ஓடிச் சென்றான். முதல் மாட்டு வண்டியை ஓட்டி வந்தவன் கத்தினான். “சீக்கிரம் வா. அதிக நேரம் காத்திருக்க முடியாது.”

 

அந்த ஓடிப் போனவனுக்காக மூன்று மாட்டு வண்டிகளும் காத்துக் கொண்டிருப்பது போல் பார்வையாளர்களுக்குத் தோன்றுவது போலத் தான் காவலர்களுக்கும் தோன்றியது. சிறிது நேரத்தில் வேறு சில வணிகர்கள் நகரை விட்டு வெளியேற வருபவர்கள் போல் வந்தார்கள். மாட்டு வண்டிகள் அருகே வந்ததும் அவர்கள் அந்த வண்டியில் இருப்பவர்களுடன் எதோ பேசிக் கொண்டு நின்றார்கள்.  இதிலும் காவலர்கள் சந்தேகப்படக் காரணமிருக்கவில்லை.   

 

திடீரென்று தொலைவில் ஒரு படை வந்து கொண்டிருப்பதை வாயிற் கதவின் மேல் மாடத்தில் நின்று கொண்டிருந்த காவலன் கவனித்தான். அவனுக்குத் தன் கண்களை ஒரு கணம் நம்ப முடியவில்லை. கண்களைக் கசக்கிக் கொண்டு மறுபடியும் பார்த்தவன் பிறகு கத்தினான். “ஆபத்து. ஒரு படை நம் நகரை நோக்கி வந்து கொண்டிருக்கிறது

 

மற்ற காவலர்களும், தலைமைக் காவல் அதிகாரியும் ஒரு கணம் சிலையாகி மறுகணம் சுறுசுறுப்பானார்கள் தலைமைக் காவல் அதிகாரி கத்தினான். “வாயிற் கதவை மூடுங்கள்வாயிற்காவலர்கள் வாயிற்கதவை மூடத் தயாராக வாயிற்கதவை ஒட்டி, அகழிக்கு மேல் இருந்த மரப்பாலத்தை எதிர்ப்புற சாலையிலிருந்து பின்னுக்கு இழுத்துக் கொள்ள வேக வேகமாக வாயிற்கதவருகே இருந்த சக்கர வளையத்தைச் சுற்ற ஆரம்பித்தார்கள்.

 

ஆபத்து வருகிறது என்றால் முதலில் வாயிற்காவலர்கள் செய்யும் வேலை அது தான். அந்த மரப்பாலம் பின்னுக்கு இழுத்துக் கொள்ளப்பட்டால் யாரும் ஆழமான அந்த அகழியைத் தாண்டி நகருக்குள் நுழைய முடியாது.

 

ஆனால் பெரிய வாயிற்கதவை மூடவும், மரப்பாலத்தை  பின்னுக்கு இழுக்கவும் காவலர்கள் அவசரமாக முயன்று கொண்டிருக்கையில், அவர்கள் அதைச் செய்ய விடாதபடி மூன்று மாட்டு வண்டிகளிலிருந்தும் வாள்கள், ஈட்டிகள், ஆயுதங்கள் எடுத்துக் கொண்டு பயணிகள், வணிகர்கள் வேடங்களில் இருந்த கேகய நாட்டு வீரர்கள் காந்தார நாட்டுக் காவலர்களைத் தாக்கப் பாய்ந்தார்கள். தலைமைக் காவலனும் மற்ற காவல் வீரர்களும் இதைச் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. மிக வீரமாகவும், ஆக்ரோஷமாகவும் சண்டையிட்ட கேகய நாட்டு வீரர்கள் தங்கள் படை வரும் வரை காந்தார வீரர்கள் வாயிலை மூடி விடாதபடியும், மரப்பாலத்தை அகழி மேலிருந்து விலக்கி விடாதபடியும் பார்த்துக் கொண்டார்கள்.

 

கேகயப் படை நெருங்கி விட்டதைப் பார்த்த தலைமைக் காவல் வீரன் இன்னொரு வீரனை ஆம்பி குமாரன் மாளிகைக்கு அனுப்பி விட்டு, சேனாதிபதி மாளிகைக்குத் தான் முதலில் விரைந்தான். சின்ஹரன் மாவீரன் மட்டுமல்லாமல் வேகமாகச் செயல்படுபவன். சேனாதிபதி முந்தைய இரவில் வெளியே சென்றவன் இன்னும் திரும்பி வரவில்லை என்ற செய்தி பேரிடியாய் அவன் மேல் இறங்கியது

 

ம்பி குமாரன் முந்தைய இரவுக் களியாட்டங்களில் களைத்துப் போய் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான். அவனுடைய காவல் வீரன் அவனை எழுப்பிச் சொன்ன செய்தி காதிலிருந்து மூளை வரை செல்ல சிறிது நேரம் ஆயிற்று. மூளைக்கு எட்டிய செய்தியை அவனால் உடனே நம்ப முடியவில்லை. “என்ன சொல்கிறாய் வீரனே?” என்று கேட்டு மறுபடியும் தகவல் பெற்றுக் கொண்ட  ஆம்பி குமாரன் அதன் பின் தாமதிக்காமல் துள்ளி எழுந்தான். “சின்ஹரனுக்குத் தகவல் தெரிவித்தாகி விட்டதா?” என்று குறுவாளை இடையில் சொருகிக் கொண்டு, பெரிய வாளைக் கையில் உருவிக் கொண்டு கேட்டான்.

 

சேனாதிபதி நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியே போனவர் இன்னும் வீடு திரும்பவில்லையாம்.” என்ற வீரனின் பதில் ஆம்பிகுமாரனையும் திகைக்க வைத்தது. கேகயப்படை தட்சசீலத்திற்குள் நுழைந்த தகவல் மற்ற சிறு படைத்தலைவர்களையும் வீரர்களையும் சென்றடைந்து அவர்கள் அனைவரும் தயாராகி ஒன்று கூடுவதற்குள் கேகய நாட்டுப்படையின் ஒரு பகுதி காந்தார அரசரின் அரண்மனையை ஆக்கிரமித்துக் கொண்டது. 

 

இந்திரதத் ஆரம்பத்திலிருந்தே இந்த முயற்சியில் வேகமும் காந்தார அரண்மனையை ஆக்கிரமிக்கும் கவனக்குவிப்பும் மட்டுமே  முக்கியம் என்று தன் படைவீரர்களிடம் சொல்லியிருந்தார். ஆம்பிகுமாரன் தயாராகி படை திரட்டுவதற்குள் இது நடந்து விட வேண்டும் என்று கேகயப்படை ஒரே குறிக்கோளோடு வேகமாக முன்னேறியது அவர்கள் வெற்றியை மிக எளிதாக்கி விட்டது. காந்தாரம் போரைத் துவக்குவதற்கு முன்பே கேகயம் அங்கு வெற்றிக் கொடி நாட்டி விட்டது.

 

காந்தார அரசர் முன் வந்து தலை தாழ்த்தி நின்ற வீரன் சொன்னான். “கேகய அமைச்சர் இந்திரதத் தங்களைக் காண அனுமதி கேட்கிறார் அரசே

காந்தார அரசர் விரக்தியுடன் சொன்னார். “தோற்றவர்களிடம் வென்றவர்கள் என்றும் அனுமதி கேட்க வேண்டியதில்லை என்று சொல் வீரனே. அவர்களது கைதி அவர்கள் கட்டளை என்னவென்று அறிந்து கொள்ளக் காத்திருப்பதாகச் சொல்

 

வீரன் கண்கள் ஈரமாக அங்கிருந்து தயக்கத்துடன் நகர்ந்தான். சிறிது நேரத்தில் கூப்பிய கரங்களுடன் இந்திரதத் நுழைந்தார். “காந்தார அரசருக்கு இந்த அடியவனின் வணக்கங்கள். இந்தச் சூழலில் தங்களைக் காண்பதில் தங்களை விட அதிகமாக அடியவன் வருந்துகிறேன் அரசரே. ஆனால் தங்கள் மகன் எல்லா அமைதிப் பாதைகளையும் அடைத்து விட்டதால் எங்களுக்கு இந்த வழியிலேயே வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது….”

 

இந்திரதத் மிகுந்த பணிவுடன் தலை தாழ்த்தி வணங்கி நிற்க காந்தார அரசர் வருத்தத்துடன் சொன்னார். “நான் அறிவேன் கேகய அமைச்சரே. பிள்ளைகள் சரியில்லாமல் இருக்கையில் முதுமை மனிதனுக்குப் பெரிய பாரமே. அந்த மனிதன் அரசாள்பவனாக இருந்தால் அது அவனுக்குக் கூடுதல் துர்ப்பாக்கியம். அதை விடுங்கள். எங்களை வென்று வந்திருக்கும் நீங்கள் எனக்கு என்ன கட்டளை வைத்திருக்கிறீர்கள் என்று சொன்னால் நலமாயிருக்கும்

 

இந்திரதத் சொன்னார். “தயவு செய்து கட்டளை போன்ற பெரிய வார்த்தைகளைத் தாங்கள் பயன்படுத்த வேண்டாம் என்று அடியவன் தங்களை வேண்டிக் கொள்கிறேன். தங்கள் நண்பரான எங்கள் மன்னர் உங்களுக்குத் தன் மரியாதை வணக்கத்தை என் மூலம் அனுப்பி இருப்பதுடன் தங்களிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறார் காந்தார அரசே. நட்பு ரீதியாகவும், அமைதி மார்க்கத்திலும் அனுப்பிய செய்திகள் தங்கள் மகனிடம் மாற்றத்தை ஏற்படுத்தத் தவறி விட்டதால் எங்கள் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள நாங்கள் எடுக்க வேண்டியிருந்த இந்த நிர்ப்பந்த முடிவில் எங்களுக்கும் வருத்தமுண்டு அரசே….”

 

பெருந்தன்மையின் காரணமாகச் சொல்லப்படும் வார்த்தைகளில் காந்தார அரசரின் மனம் தங்கவில்லை. அடுத்தவர் கருணையிலும் தயவிலும் கிடைக்கும் மரியாதைகள் மனக்காயங்களுக்கு மருந்தாகி விடுவதில்லை.  கேகய நாட்டின் இந்த அதிர்ச்சி வைத்தியமாவது அவர் மகனை மனம் மாற வைக்குமானால் கடைசி காலத்தை அவர் சிறிது நிம்மதியுடன் கழிப்பார். ஆம்பி குமாரன் மாறுவானா?

 

(தொடரும்)

என்.கணேசன்

இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.


2 comments:

  1. Interesting developments.

    ReplyDelete
  2. கேகய நாட்டினரின் திறமை மற்றும் நல்ல குணம் இரண்டும் அற்புதம்... அவர்கள் காந்தரத்தில் நுழைந்து வெற்றி பெற்ற விதம்‌ அற்புதம்...

    ReplyDelete