சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 18, 2019

இருவேறு உலகம் – 132


1939 ஆம் ஆண்டு சிகாகோவில் இருந்த பல அடுக்கு இல்லுமினாட்டி கோயில் இடிக்கப்பட்டு அதன் அஸ்திவாரத்தில் ரகசியமாய் வைக்கப்பட்டு இருந்த பழங்காலச்சுவடியைப் படித்து விட்டு உடனடியாக வாஷிங்டனில் இல்லுமினாட்டி ரகசியக் காப்பறையில் ஒரு லாக்கருக்குள் பத்திரமாய் பூட்டி வைத்தபின் அதைத் திரும்ப எடுத்து யாரும் படிக்கவில்லை. அதற்கான அவசியமும் வரவில்லை. அந்தப் பழங்காலச்சுவடியில் என்ன எழுதியிருக்கிறதென்று படித்துச் சொன்னதன் சாராம்சம் தோராயமாக அனைவருக்கும் நினைவு இருந்தது. ஆனால் வார்த்தைக்கு வார்த்தை என்ன இருக்கிறது என்று இப்போதைய இல்லுமினாட்டி உறுப்பினர்கள் யாருமே அறிந்திருக்கவில்லை. அந்தப் பழங்காலச்சுவடி எழுதி வைக்கப்பட்ட காரணமும் பெரும்பாலான இல்லுமினாட்டி உறுப்பினர்களே கூட அறியாத ரகசிய வரலாறாகவே இருந்தது. வாஷிங்டனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த எர்னெஸ்டோவும் வேறு இரண்டு மூத்த உறுப்பினர்களும் மட்டுமே அதை அறிவார்கள்.

மூடநம்பிக்கைகளையும், அராஜக அடக்குமுறைகளையும் எதிர்த்து பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பேரறிஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் தான் இல்லுமினாட்டி. ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே அரசர்களும், மதகுருமார்களும் எதிர்த்த இயக்கமாக இருந்த இல்லுமினாட்டி ஒரு காலக்கட்டத்தில் ரகசியமாக மட்டுமே இயங்க முடிந்த இயக்கமாய் மாறியது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் கழித்து கெடுபிடிகளும் அதிகமாகி, தகுதி வாய்ந்த உறுப்பினர்களும் குறைய ஆரம்பித்த போது அப்போதிருந்த அறிஞர்கள் ஆரகிள் என்று சொல்லப்படும்  தெய்வீகசக்தி வாய்ந்த, எதிர்காலத்தை முன்கூட்டியே கண்டு சொல்லக்கூடிய ஒரு  பெண்மணியிடம் குறி கேட்ட போது அவள் “எத்தனை அடக்குமுறை இருந்தாலும் இப்போதைக்கு இதற்கு அழிவில்லை. இது ரகசியமாய் சக்தி பெற்றுக் கொண்டே வளர்ந்து வந்து உலகத்தையே மறைமுகமாய் ஆளும். இதற்கும் உலகிற்குமே அழிவை ஏற்படுத்தக்கூடிய சூழல், ஒன்றே கால் நூற்றாண்டு கழித்து உருவாகும். அப்போது காப்பாற்றி வழிநடத்த தேர்ந்தெடுக்கப்பட்டவன் ஒருவன் வருவான்” என்கிற வகையில் சொல்லி அவனைப் பற்றிய குறிப்புகளையும் சொல்ல அதை அப்போதைய இல்லுமினாட்டியின் தலைவர் ஒரு சுவடியில் எழுதி வைத்துக் கொண்டார். எதிர்காலத் தலையெழுத்தை நிர்ணயிக்கும் குறிப்புகள் என்பதால் அந்தக் காலத்தில் சிகாகோவில் கட்டப்பட்ட மிகப்பெரிய கோயிலின் அடித்தளத்தில் ரகசியமாக அதை வைத்து விட்டுப் பின் கோயிலை எழுப்பினார்கள். 1892 கட்டப்பட்ட அந்தக் கோயில் 1939 ஆம் ஆண்டு இடிக்கப்படும் சூழல் உருவாகும் என்று அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. அப்படி இடிக்கப்பட்ட போது உடனே அதை வாஷிங்டனுக்கு மாற்றினார்கள்.

இரண்டு உலகப்போர்களுக்கு மத்தியில் இல்லுமினாட்டி மறுபடியும் ஒரு மந்த நிலையைக் கண்ட போது இல்லுமினாட்டியைச் சேர்ந்த அகஸ்டின் என்ற அறிஞர் இந்தியாவுக்குப் பயணமாகி யோகக் கலையைக் கற்றுக் கொண்டு வந்தார். அவரும் ஆரகிள் சொன்னபடியே ஒரு சூழல் உருவாவதை ஞானக்கண்ணில் கண்டு உலக நலனுக்காகவும், இல்லுமினாட்டியின் எதிர்கால மேன்மைக்காகவும் இமயமலையில் தவ வாழ்க்கை வாழப் போவதாகச் சொல்லி விட்டுப் போனார். பின் அவர் திரும்பி வரவில்லை. அவர் அங்கேயே எப்போதோ இறந்திருக்க வேண்டும் என்று இல்லுமினாட்டி இயக்கம் நினைத்தது. இப்போது விஸ்வம் கொண்டு வந்த செய்தியும், சின்னமும் அந்த வெள்ளைக்காரத் தவசி அகஸ்டின் ஆகவே இருக்க வேண்டும், அவர்  இப்போது தான் இறந்திருக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்தியது. அவர் கொடுத்து அந்தச் சின்னத்தோடு விஸ்வம் வந்ததால் அவனே அந்த தேர்ந்தெடுக்கப்பட்டவனாக இருக்க வேண்டும் என்று இல்லுமினாட்டி உறுப்பினர்கள் நினைக்க ஆரம்பித்தார்கள். அதற்கு முன்பே அவன் அந்த இல்லுமினாட்டிக் கோயிலுக்கு அஸ்திவாரப் பகுதியில் வைத்திருந்த குறிப்பு பற்றிக் கனவில் வந்ததாகத் தெரிவித்திருந்ததும், அவன் பல அமானுஷ்ய சக்திகள் பெற்றிருந்ததும் அவனையே ரட்சகனாக அடையாளம் காண்பித்தது.

விஸ்வம் ரட்சகன் என்றால் அழிக்கப் போகும் எதிரி யார் என்ற கேள்வியை எர்னெஸ்டோவால் கேட்காமல் இருக்க முடியவில்லை. அறிவுக் கூர்மைக்குப் பெயர் போனவர் அவர். இல்லுமினாட்டி இயக்கத்துக்கும், உலகுக்கும் அழிவு நேர முடிந்த காலம் இது என்று தோராயமாக முன்கூட்டியே அறிந்து வைத்திருந்ததால் விஸ்வம் என்ற ரட்சகன் வரும் முன்னாலேயே அவர் எதிரியைத் தேட ஆரம்பித்திருந்தார். அப்போது தான் ஒரு ஏலியன் பூமிக்கு வந்திருக்கிறது என்ற ஆதாரபூர்வமான தகவல் அவருக்கு இஸ்ரோ மூலமாகக் கிடைத்தது. அந்த ஏலியன் எதிரியாக இருக்க வாய்ப்பு இருக்கிறதோ என்று எர்னெஸ்டோ சந்தேகப்பட்டார். காரணம் உலகில் பெரும்பாலான நாடுகள் இல்லுமினாட்டியின் மறைமுகக் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அதனால் ஆபத்து அவர்களை மீறி ஏற்பட்டு விட முடியாது. வெளியே இருந்து வரலாம் என்பதால் தான் அவர் ஏலியன் குறித்த தகவல்களில் தனிக்கவனம் செலுத்தினார். ஆனால் ஏலியன் வரவைக் கண்டுபிடித்த இஸ்ரோ, வந்த ஏலியன் போய் விட்டதையும் தெரிவித்த போது குழப்பமே மிஞ்சியது. யோசித்த போது ஏலியன் தொடர்பு கொண்ட ஒரே மனிதனான க்ரிஷே எதிரியாகவும், அழிவுக்குக் காரணமாகவும் இருக்க முடியுமோ என்ற சந்தேகம் வந்தது. அதனால் தான் க்ரிஷைச் சந்தித்துப் பேச விஸ்வேஸ்வரய்யாவை அவர் அனுப்பினார்.

க்ரிஷின் நேர்மையை அவர்கள் முன்பே அறிந்திருந்தனர்.  க்ரிஷ் பேசியதைக் கேட்ட போது அதில் சிறு பொய்யோ, புரட்டோ இருப்பதாகவும் அவருக்குத் தெரியவில்லை. ஏலியன் பேசிய விஷயங்கள் அழிக்க நினைக்கும் எதிரி பேசக்கூடிய விஷயங்கள் அல்ல. அதனால் எதிரி அவனோ, ஏலியனோ இருக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தது. ஒருவிதத்தில் பார்த்தால் க்ரிஷ் சக்தி வாய்ந்த ஏலியனால் உலகைக் காப்பாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டவன்.  அவன் விஸ்வமும் இல்லுமினாட்டியும் சேர்ந்தால் தீக்கதிரும், வெடி மருந்தும் சேர்ந்தது போல் என்கிறான். இது விஸ்வத்தையே எதிரியாகக் காட்டுகிறது. ஆனால் விஸ்வம் அகஸ்டின் கையில் இருந்து இல்லுமினாட்டியின் சின்னம் வாங்கி வந்தவன். அப்படிப்பட்டவன் எதிரியாக முடியுமா என்ன? குழப்பம் தொடர்ந்து நீளவே தான் எர்னெஸ்டோ ஒரு முறை அந்தப் பழங்காலச் சுவடியைத் தானே படித்துப் பார்க்க முடிவு செய்தார்.


வீன்சந்திர ஷா தெரிவித்தவுடன் காலத்தை வீணாக்காமல் விஸ்வம் ரகசியமாக மாறுவேடத்தில் வாஷிங்டனுக்குப் புறப்பட்டான். எந்த விதத்திலும் எந்த இல்லுமினாட்டி கண்ணிலும் அவன் தட்டுப்பட விரும்பவில்லை. எர்னெஸ்டோவும் உபதலைவரான அந்த வழுக்கைத் தலையரும் இல்லுமினாட்டியின் ரகசியக் காப்பறைக் கட்டிட வாசலில் காரில் வந்திறங்கிய போது அவன் முன்பே வந்துக் காத்திருந்தான்.

அவருடைய மெய்க்காப்பாளர் வந்து கார்க் கதவைத் திறக்க எர்னெஸ்டோ ராஜகம்பீரத்துடன் இறங்கினார். பின்னாலேயே வழுக்கைத் தலையரும் இறங்கினார். முன்னால் இரு மெய்க்காப்பாளர்களும் பின்னால் இரு மெய்க் காப்பாளர்களும் தொடர அவர்கள் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். மெயின் கேட்டில் இருந்து நூற்றைம்பது அடிகள் தள்ளி தான் வாசல் இருந்தது. வாசல் படிகளுக்குக் கீழே வரவேற்க இருவர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் பார்வை தலைவர்கள் மேல் இருக்கும் போது காற்றின் வேகத்தில் பக்கவாட்டில் இருந்து பறந்து விஸ்வம் உள்ளே போய் விட்டான். வரவேற்க நின்றிருந்த இருவரில் ஒருவருக்கு எதோ அசைவு தெரிந்தது போல் இருந்தது. திரும்பிப் பார்த்தார். யாரும் இல்லை. மனப்பிரமை என விட்டு விட்டார்.

இருவரும் உள்ளே நுழைந்தவுடன் கூடவே இரண்டு மெய்க்காப்பாளர்கள் உள்ளே நுழைந்தார்கள். வெளியே இரு மெய்க்காப்பாளர்கள் நின்று கதவைச் சாத்திக் கொண்டார்கள். உள்ளே ஒரு பெரிய இரும்பு லாக்கர் இருந்தது. அந்த இடத்தில் மட்டும் ஒளிவெள்ளம் பாய்ந்திருந்தது. மற்ற இடங்களில் லேசான இருட்டும், அதற்கும் மேலான இருட்டும் இருந்தன. அதிகமான இருட்டில் விஸ்வம் மறைந்து நின்றிருந்தான். அந்த லாக்கரின் கதவில் ரகசிய சங்கேத எண்ணை அழுத்தினார் எர்னெஸ்டோ. கதவு திறந்தது உள்ளே பல பாகங்கள் இருந்தன. அவற்றில் கீழே கடைசி பாகத்தில் ஒரு ரகசிய சங்கேத எண்ணை எர்னெஸ்டோ அழுத்தினார். அது மட்டும் திறந்து கொண்டது. அதிலிருந்து ஒரு பழங்காலச் சுவடியை வெளியே எடுத்தார்.

இருட்டில் இருந்த விஸ்வம் தன் சக்தியை எல்லாம் வழுக்கைத் தலையர் மீது செலுத்தினான். அவன் எர்னெஸ்டோவிடம் இந்தப் பிரயோகத்தை விடுக்க விரும்பவில்லை. வழுக்கைத்தலையர் ஏதோ ஒரு சக்தி தனக்குள் புகுவது போல் உணர்ந்தார். எர்னெஸ்டோ படிக்க ஆரம்பித்த அந்தச் சுவடியை எட்டிப் பார்த்த அவருடன் சேர்ந்து அந்த சக்தியும் செய்தியைப் படித்தது…

“உயர் சக்தியால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் தேஜஸுடன் இமயமலைக்குத் தெற்கில் இருந்து வருவான். எல்லாம் பார்க்கும் விழி அவனை அடையாளம் காட்டி உணர்த்தும். எது சரியென்றும் எது வழியென்றும் உணர்த்தி அவன் வழி காட்டுவான். உய்யும் வழி அது ஒன்றே. அன்றேல் அழிவது உறுதி”

எர்னெஸ்டோ அந்த வாக்கியங்கள் மனப்பாடம் ஆகும் வரை படித்தார். பக்கத்தில் சிலை போல நின்றிருந்த வழுக்கைத் தலையரிடம் வித்தியாசத்தைக் கண்டு என்ன என்று கேட்டார். உடனே வழுக்கைத் தலையர் மீது வைத்த தன் சக்திப் பிரயோகத்தை விஸ்வம் விடுவித்துக் கொண்டான். உபதலைவர் பழைய நிலைக்குத் திரும்பி நிம்மதியடைந்து அசட்டுச் சிரிப்பு சிரித்து ஒன்றும் இல்லை என்றார்.

அந்தச் சுவடியை அப்படியே லாக்கருக்குள் வைத்து பூட்டி விட்டு வெளியே அவர்கள் இருவரும் போனார்கள். மெய்க்காப்பாளர்களும், அவர்களை வழியனுப்ப வெளியே இருந்த இருவரும் போன போது காற்றின் வேகத்தில் ரகசியமாய் விஸ்வமும் வெளியே வந்தான். பழஞ்சுவடியில் படித்த தகவலில் தனக்கு எதிராய் எதுவும் இல்லை என்பதில் அவனுக்குப் பரம திருப்தி. எல்லாம் அவனுக்குச் சாதகமாகவே இருக்கிறது…..

(தொடரும்)
என்.கணேசன்                                                


4 comments:

  1. Tension is building up. What will happen next?

    ReplyDelete
  2. The eye which sees everything... Is alien's eye?

    ReplyDelete
  3. answer: Vizhi unarthum

    ReplyDelete
  4. ஒருவேளை.... அந்த இல்லுமினாட்டியின் போக்கை மாற்றக் கூடியவன் "கிரிஷ்"ஆக இருக்குமோ...?

    இல்லை விஸ்வம் மனம்மாறிவிடுவானா???

    ReplyDelete