சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 19, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 99

சான் பைலகுப்பே மடாலயத்திற்கு அன்று காலை வந்திருந்த மூன்று வாகனங்களையும் ஆர்வத்துடன் பார்த்தார். இரண்டு பஸ்கள். ஒரு டெம்போ ட்ராவலர். பஸ்கள் தமிழ்நாட்டையும், கேரளாவையும் சேர்ந்தவை. டெம்போ ட்ராவலர் கர்நாடகா. பயணிகள் கிட்டத்தட்ட நூறு பேராவது இருப்பார்கள். இந்த சந்தடியில் இன்று தப்பித்து விட வேண்டும் என்று அவர் முடிவெடுத்தார். ஆனால் கண்காணித்துக் கொண்டிருந்த ஒற்றர்களும் அதை ஊகித்தது போல் இருந்தது. அவர்களில் ஒருவன் அங்கே கலைப் பொருள்கள் விற்கும் கடையில் வேலைக்கே சேர்ந்து விட்டிருந்தான். மற்ற இருவரில் ஒருவன் இளநீர் விற்பவனாகவும், இன்னொருவன் பிச்சைக்காரனாகவும் வேடத்தில் இருந்தார்கள். மூன்று பேரும் கண்கொத்திப் பாம்பாக அந்த வண்டிகளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். மற்ற சந்தர்ப்பமாக இருந்தால் அவர் துணிந்து தப்பிக்க முயற்சி எடுத்திருப்பார். ஆனால் மைத்ரேயரை அவர் மூலமாக யாரும் அடைந்து விடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வு அவரைத் தடுத்தது. 

பகல் ஒரு மணிக்கு முன் சுற்றுலாப்பயணிகள் கிளம்பினார்கள். கும்பலாக அவர்கள் வெளியே போய் பஸ்களில் ஏறியதில் ஒற்றர்கள் சந்தேகம் கொண்டது போல் இருந்தது. ஏனென்றால் மூன்று வாகனங்களும் போன பிறகு அந்த மூன்று ஒற்றர்களையும் காணோம். அந்த மூன்றில் ஒன்றில் ஆசான் ஏறிப்போயிருக்கலாம் என்று அவர்கள் எண்ணி விட்டார்களோ என்னவோ? மெல்ல ஆசான் வெளியே வந்து பார்த்தார். சிறிது தூரம் காலார நடந்து பார்த்தார். யாரும் பின்னால் இல்லை. அவருக்கு இது போதிசத்துவரின் அருளாகவே தோன்றியது. பைலகுப்பே மடாலய பிக்குகளிடம் விடைபெற்றுக் கொண்டு அவர் மைத்ரேயரைச் சந்திக்கக் கிளம்பி விட்டார்.

ஆனால் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் ஏமாந்து போய் விட்டதாக ஆசான் நம்பும்படி செய்து விட்டு கிளம்பிப் போய்விடும்படி முன்பே லீ க்யாங் ஒற்றர்களிடம் உத்தரவிட்டிருப்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. மைத்ரேயனையே கண்டுபிடித்து விட்ட பிறகு ஆசானைக் கண்காணிப்பது அர்த்தமற்றது என்றாலும் அந்தக் கண்காணிப்பைக் கைவிட்டு விட்டால் ஆசான், அக்‌ஷய் இருவருக்கும் சந்தேகம் பிறக்கலாம் என்பதால் பழையபடியே கண்காணிப்பைத் தொடர்ந்து தக்க சமயத்தில் போய்விட லீ க்யாங் சொன்னபடியே ஒற்றர்கள் போய் விட்டிருந்தார்கள். இது தெரியாத ஆசான் மைத்ரேயனை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆபத்தையும் அறியாமல் சந்தோஷமாக கோயமுத்தூர் நோக்கிப் பயணமானார்.


ன்று மதியம் இரண்டரை மணிக்கு ஒரு அனாமதேய அழைப்பு போலீசாருக்கு வந்தது. கோயமுத்தூர் புறநகர் பகுதிகளில் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சில வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்றும் முடிந்தால் கண்டுபிடித்துக் கொள்ளும்படியும் அழைத்தவன் சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்தான். போலீஸார் சுறுசுறுப்பானார்கள். அந்த அழைப்பு ஒரு பொதுத் தொலைபேசியில் இருந்து வந்தது என்பதைக் கண்டுபிடித்த போலீசாருக்கு ஆள் நடமாட்டம் அதிகமில்லாத அந்த இடத்தில் இருந்து அழைத்தவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.


சிறிது நேரத்தில் ஒரு பூங்காவில் விழுந்து கிடந்த ஒரு டிபன்பாக்ஸில் இருந்து மின்கம்பி நீட்டிக் கொண்டிருப்பதாகவும், சந்தேகமாய் இருக்கிறதென்றும் ஒருவர் போன் செய்து தெரிவித்தார். உடனே வெடிகுண்டு நிபுணர்கள் அங்கே விரைந்தார்கள். அது உண்மையாகவே வெடிகுண்டு தான் என்பதைக் கண்டுபிடித்து அங்கேயே அதை அவர்கள் செயலிழக்க வைத்தார்கள். சுமார் மூன்றரை மணிக்கு ஒரு கோயிலுக்கு வெளியே கிடந்த பூக்கூடையில் சந்தேகத்தைக் கிளப்பும் வகையில் ஏதோ ஒரு உருண்டையான பொருள் இருக்கிறது என்ற தகவல் கிடைத்தது. அங்கும் விரைந்து சென்றவர்கள் அதுவும் ஒரு வெடிகுண்டு என்பதைக் கண்டுபிடித்து அதையும் செயல் இழக்க வைத்தார்கள்.



ணி மூன்றே முக்காலுக்கு வருண் வீட்டை விட்டு டியூஷனுக்கு பைக்கில் கிளம்பினான். டியூஷன் படிக்கும் இடத்தை அவன் அடைந்த போது வெள்ளை நிற இன்னோவா காரில் இருந்து இறங்கி ஒருவர் ஒரு சீட்டைக் கையில் வைத்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தார். ஏதோ விலாசம் தேடுகிறார் என்று நினைத்த வருண் பைக்கை நிறுத்தி ”என்ன விலாசம் தேடுகிறீர்கள்” என்று கேட்டான்.

அந்த ஆள் அந்தச் சீட்டை நீட்டிக் கொண்டே அவனை நெருங்கினார். அருகில் வந்தவுடன் அந்தச் சீட்டை வாங்கி வருண் பார்த்தான். அது பக்கத்து தெருவில் உள்ள ஒரு கடையின் பெயர். “இது பக்கத்துத் தெருவில் தான் இருக்கிறது சார்” என்று புன்னகையுடன் கைகாட்டிய வருணுக்கு நன்றி சொல்லி விட்டு அவர் திரும்பினார். வருண் தலையை ஆட்டி விட்டுத் திரும்பி பைக்கை நிறுத்துகையில் பின்னால் இருந்து மயக்கமருந்து தடவிய கைக்குட்டையுடன் ஒரு கை அவன் முகத்தை அடைந்தது. அடுத்த கணம் வருண் சுயநினைவை இழந்தான்.

அவனை அப்படியே அள்ளிக் காரில் போட்டுக் கொண்டு அந்த ஆளும், சேகரும் அங்கிருந்து வேகமாகக் கிளம்பினார்கள். அந்த வெள்ளை நிற இன்னோவா கார் அந்தத் தெருக்கோடியை அடைந்த போது வருணின் நண்பன் தன் மோட்டார் சைக்கிளில் அந்தத் தெருவில் திரும்பினான். அந்த இன்னோவா காரைப் பார்த்துக் கொண்டே வந்த அவனுக்கு காரினுள்ளே தன் நண்பனைப் போன்ற தோற்றம் உள்ள ஒருவனைப் பார்த்தது போல் தோன்றியது. கார் வேகமாக அவனைக் கடந்து விட்டது. டியூஷன் ஆசிரியர் வீட்டை அவன் அடைந்த போது வருணின் பைக் நின்று கொண்டிருந்தது. அப்போதும் அவனுக்கு அதில் அசாதாரணமான எதையும் நினைக்கத் தோன்றவில்லை. தன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் நுழைந்த அவன் உள்ளே வருண் இல்லாமல் போன போது தான் ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று சந்தேகப்பட்டான். உடனே வருணின் வீட்டுக்குப் போன் செய்தான்....



க்‌ஷய்க்கு கேள்விப்பட்டதை ஜீரணிக்க சிறிது நேரம் தேவைப்பட்டது. பெரும் செல்வந்தர்கள் வீட்டுப் பிள்ளைகளைக் கடத்துவது எப்போதும் நடப்பது தான். ஆனால் கொடுக்கப் பெரிதாக எதுவுமே இல்லாத அவன் மகனை யாராவது கடத்துவார்களா? என்ன தான் நடக்கிறது.

கணவனின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைப் பார்த்த சஹானா திகைப்புடன் “என்னங்க” என்று கேட்டாள். அவன் சொன்னதும் அவளாலும் நம்ப முடியவில்லை. “ஆள் மாறிக் கடத்தி விட்டார்களா என்ன! ” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.

யார் கடத்தியிருப்பார்கள் என்று முதலில் யூகிக்க முடிந்தது மரகதத்திற்குத் தான். அவள் மகனைத் தவிர வேறு யாரும் இந்த ஈனச்செயலைச் செய்திருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தவளாய் சேகரின் வரவைப் பற்றியும், அவன் வருணைச் சந்தித்துப் பேசியது பற்றியும் அவர்களிடம் சொன்னாள்.

சஹானா வாயடைத்துப் போனாள். அக்‌ஷய் அதிர்ச்சியுடன் கேட்டான். “இதை ஏன் நீங்கள் முதலிலேயே எங்களிடம் சொல்லவில்லை....”

“வருண் தான் சொல்ல வேண்டாம் என்று சொன்னான். எதிர் வீட்டிலிருந்து அவன் போய் விட்டதால் முடிந்து போன ஒன்றைச் சொல்லி ஏன் வீட்டு நிம்மதியைக் கெடுக்க வேண்டும் என்று நினைத்தான்.....” என்றவள் நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் விரிவாக அப்படியே சொன்னாள்.

வருண் பயத்துடன் ”அப்பா அநியாயத்துக்கு நல்லவர். இந்த ஆள் அவரிடம் அழுது புலம்பி தன் பழைய நடவடிக்கைக்கு ஏதாவது கதை சொல்லி என் மகனை என்னோடு அனுப்பி வையுங்கள் என்று கெஞ்சிக் கேட்டால் மனம் இளகி என்னிடம் “என்ன இருந்தாலும் அவர் உனக்கு அப்பா. பாவம் அவருக்கு யாருமில்லை. நீ அவர் கூடப்போ..... எங்களைப் பார்க்கத் தோன்றும் போது வந்து பார்த்து விட்டுப் போ” என்கிற மாதிரி சொல்லவும் செய்யலாம்...” என்று சொன்னதாக மரகதம் தெரிவித்த போது அக்‌ஷயின் கண்கள் கலங்கின. “வருண் என் மகன்.... அவனை நான் எவன் கூடவும் அனுப்ப மாட்டேன்.....” என்று குரல் உடைந்து சொன்னான்.

மரகதம் சொன்னாள். “எனக்கும் தெரியும். ஆனால் அவன் ரொம்பவே பயந்து போயிருந்தான். “அந்த ஆள் கூடப் போகிறதை விட நான் செத்துப் போவது நல்லது பாட்டி. நான் என் அப்பாவை விட்டு எங்கேயும் போக மாட்டேன் பாட்டி.....”ன்னு சொன்னான்...”

அக்‌ஷய்க்குத் தன் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சஹானா அதிர்ச்சி தாளாமல் சிலை போல அமர்ந்திருந்தாள்.

துக்கப்படும் நேரம் இதுவல்ல என்று உடனடியாக சுதாரித்துக் கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்ட அக்‌ஷய் “பெரியம்மா நீங்கள் இவளைப் பார்த்துக் கொள்ளுங்கள். பேச வையுங்கள்....” என்று மரகதத்திடம் சொல்லி விட்டு வெளியே விரைந்தான்.

மைத்ரேயனும், கௌதமும் விளையாடிக் கொண்டிருக்கும் விளையாட்டு மைதானத்தில் உளவுத்துறை ஆட்கள் மூவர் இருந்தார்கள். அதனால் அவர்களுக்காக பயப்பட வேண்டியதில்லை. இந்த கடத்தலையே சேகர் செய்யாமல் வேறு யாராவது செய்திருந்தால் மைத்ரேயனை மையம் வைத்து கூட செய்யப்பட்டதாக இருக்குமோ என்ற கோணத்தையும் யோசிக்க வேண்டி இருக்கும் என்று நினைத்துக் கொண்ட அக்‌ஷய் அந்த வீதியிலும் பக்கத்து வீதியிலும் இருந்த மற்ற நான்கு உளவுத்துறை ஆட்களை அழைத்து வருண் கடத்தப்பட்டதைத் தெரிவித்தான்.

அடுத்த கால் மணி நேரத்தில் தேவுக்குச் செய்தி போய் சேர்ந்தது. “அக்‌ஷயும் நான்கு உளவுத்துறை ஆட்களும் இப்போது வருணைத் தேடும் வேலையில் நாலா பக்கமும் போயிருக்கிறார்கள். இப்போது தெருவில் போகும் எல்லா வெள்ளை நிற இன்னோவா கார்களையும் போலீசார் சோதனை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்....”

“இப்போது மைதானத்தில் எத்தனை பேர் காவலுக்கு இருக்கிறார்கள்.”

“மூன்று பேர்”

தேவ் புன்னகைத்தான்.



ரண்டு வெடிகுண்டுகளுக்கு மேல் வெடிகுண்டுகளைக் கைப்பற்ற முடியாத கவலையில் காவல் துறை இருந்த போது ஏதோ ஒரு குப்பை மேட்டுப் பகுதியில் ஒரு வெடிகுண்டு வெடித்த செய்தி கிடைத்தது. பிரதமரின் போக்குவரத்து வழியில் முன்பே காவல்துறை சோதனைகள் செய்து விட்டிருந்ததும், தற்போதும் பலத்த காவல் இருப்பதும், அந்த தடங்களில் எந்த வெடிகுண்டும் வெடிக்க வாய்ப்பில்லை என்ற நம்பிக்கை தந்த போதும் அவர் நகரில் இருக்கையில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது காவல்துறையின் கையாலாகாத்தனம் என்று ஊடகங்கள் பேசத் தொடங்கின. சென்னையில் இருந்து முதல்வரும் இனி எந்த வெடிகுண்டும் வெடிக்காமல் பார்த்துக் கொள்ளும்படி கண்டிப்பான உத்தரவு போட்டார்.

வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் உளவுத்துறை ஆட்களை இந்தப் பணியில் ஈடுபடுத்த இரு துறைகளும் சேர்ந்து முடிவெடுத்தன.

“மைத்ரேயனுக்கு ஆபத்து என்கிற வகையில் இது வரை ஏதாவது தகவல் அல்லது ஆதாரம் கிடைத்திருக்கிறதா?” என்று ஒரு அதிகாரி கேட்க “இல்லை” என்ற பதில் வந்தது.

“அப்படியானால் அந்தக் கண்காணிப்பு ஆட்களிலும் சிலரை இந்த வேலைக்குத் திருப்பலாம்” என்ற உத்தரவு பிறந்தது.

(தொடரும்)

என்.கணேசன்

6 comments:

  1. anna , ippide vara varam suspense laye kondu vidareengale.I am waiting for thursdays every week :) ..

    ReplyDelete
  2. சுஜாதாMay 19, 2016 at 6:46 PM

    பிரமாதம் கணேசன் சார். சஸ்பென்ஸ் தாங்க முடியல. எலெக்சன் ரிசல்ட் பரபரப்பு முடிந்து விட்டது. ஆனால் புத்தம் சரணத்தில் என்ன ஆகும் என்கிற பரபரப்பு தொடர்கிறது. கதையை அருமையாய் நகர்த்துகிறீர்கள்.

    ReplyDelete
  3. Very Thrilling and mind blowing. Super sir.

    ReplyDelete
  4. Maintaining excellent tempo.

    ReplyDelete
  5. Ganesan sir, evvalavu twist vaikireenga ovvoru varamum!

    ReplyDelete