சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 12, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 98


”சம்யே மடாலயம் போயிருந்தேன். நாம் நியமித்திருந்த ஒற்றர்கள் இருவரும் அங்கில்லை. அங்கு மட்டுமல்ல, அவர்கள் வீடுகளிலும் இல்லை. எங்கே போயிருக்கிறார்கள் என்பது அவர்கள் வீட்டிலும் யாருக்கும் தெரியவில்லை. ஒற்றர்கள் என்பதால் ஏதோ வேலையாய் எங்காவது போயிருக்கலாம் என்று வீட்டவர்கள் நினைக்கிறார்கள்....” வாங் சாவொ அலைபேசி மூலம் சொன்ன போது லீ க்யாங் திகைக்கக்கூட இல்லை. அந்த ஒற்றர்கள் பார்க்கக் கிடைத்திருந்தால் தான் ஆச்சரியம்.... 

சீன உளவுத்துறையையே ஊடுருவ முடிந்த மாராவுக்கு இரண்டு கடைநிலை தற்காலிக ஊழியம் செய்யும் ஒற்றர்களை விலைக்கு வாங்க முடியாமல் போகுமா? அதனால் தான் சம்யே மடாலயத்துக்கு அவன் தைரியமாகப் போயிருக்கிறான்.

“சம்யே மடாலயத்து பிக்குகள் என்ன சொல்கிறார்கள்?”

“அவர்கள் மிகவும் பயந்து போயிருக்கிறார்கள். மாராவைப் பற்றிக் கேட்டேன். அவனை யாரும் பார்த்ததாகச் சொல்ல மாட்டேன்கிறார்கள். அதிகாலையில் பார்த்த போது கோங்காங் மண்டபத்தில் அரைகுறையாய் கருகிய ஒரு காவி உடை இருந்ததாகவும், அவர்கள் மடாலயத்து புத்தபிக்குகளில் இருவர் காணாமல் போயிருந்த்தாகவும் சொல்கிறார்கள்....”

“அந்தக் காவியுடை மைத்ரேயனுடையது என்று ஆசானிடம் அந்த தலைமை பிக்கு பேசிய பேச்சில் இருந்து தெரிகிறது. இப்போது உன்னிடம் அந்த ஆள் அதற்கு என்ன சொல்கிறார்?”

”அந்த காவி உடை மைத்ரேயர் சிலைக்குக் கட்டி வைத்திருந்த புனித ஆடை என்று அவர் மழுப்புகிறார்.....”

லீ க்யாங் புத்த பிக்குகள் சமாளிக்கும் விதத்தை ரசித்தான். ஆனால் அந்த ரசனை வாங் சாவொவுக்கு இருக்கவில்லை. மாறாக அவன் கோபப்பட்டான். “அது மைத்ரேயன் அந்த மடாலயத்தில் இருந்து அவன் உடுத்தி இருந்த உடையாகத் தான் இருக்க வேண்டும்..... நான் போய் விசாரித்த போது அவன் வந்ததையே அந்த பிக்கு ஒரேயடியாக மறுத்தது தான் தாங்க முடியவில்லை....”

லீ க்யாங் மெல்லச் சொன்னான். “நீ அவர் சொன்னவுடன் திரும்பி வந்து விடவில்லை. உன் ஆட்களை விட்டு மடாலயம் முழுவதும் தீவிரமாகத் தேடியிருக்கிறாய். அப்போதும் மைத்ரேயன் கிடைக்கவில்லையே....”

வாங் சாவொ ஒத்துக் கொண்டான். “அது தான் ஆச்சரியமாக இருக்கிறது....”

“பரவாயில்லை விடு. மைத்ரேயன் தான் நம் கையில் சிக்கப் போகிறானே....” லீ க்யாங் சமாதானப்படுத்தினான்.


சொந்த மகனையே கடத்த ஒத்துக் கொண்ட முதல் தகப்பனாக இருப்பதில் சேகருக்கு எந்த விதக் கூச்சமும் இல்லை. அப்படி மகனைக் கடத்தி தன் வலிமையையும், அவனுடைய வளர்ப்பு அப்பனின் கையாலாகத்தனத்தையும் அவனுக்குப் புரிய வைக்க வேண்டும் என்கிற ஆவலே அவனிடம் மேலோங்கி நின்றது. அதற்கு இந்த ஆள் ஐந்து லட்சம் வேறு தருகிறேன் என்கிறான். கரும்பு தின்னக் கூலியும் கொடுக்கும் அந்த ஆளை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

தேவ் சேகர் எடுத்திருந்த வீடியோக்களையும் மிக உன்னிப்பாகப் பார்த்தான். பின் அவனிடம் அந்தச் சிறுவனின் தினசரி நடவடிக்கைகள் பற்றிக் கேட்டான். சேகர் சொன்னான். காலை ஒன்பதரை மணி முதல் மதியம் ஒன்றரை மணி வரையிலும், மாலை நான்கு முதல் ஏழு மணி வரையிலும் அருகில் இருக்கும் மைதானத்தில் மற்ற சிறுவர்களோடு சேர்ந்து விளையாடுவான் என்கிற தகவலை மனதில் குறித்துக் கொண்டான். இது தினமும் நடக்கிறது என்பதால் தன் திட்டத்தை நிறைவேற்ற மைதானமே சிறந்த இடம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டான்.

“அக்‌ஷய் மைதானத்துக்கு அவர்களுடன் போவானா?”

“ஆரம்ப நாள் போனான். இப்போதெல்லாம் போவதில்லை. ஆனால் காவலுக்கு இருக்கும் ஆட்களில் மூன்று பேர் கூடவே போகிறார்கள். அவர்கள் விளையாடி விட்டு வரும் வரை கூடவே இருக்கிறார்கள்....”

“உன்னால் உன் மகனை மாலை நான்கு மணிக்கு மேல் ஆறு மணிக்குள் கடத்த முடியுமா?”

“முடியும். அவன் மாலை நான்கு மணிக்கு டியூஷனுக்குப் போகிறான். ஆறு மணிக்கு டியூஷன் முடிகிறது. போகும் போதோ, வரும் போதோ அவனைக் கடத்த முடியும்”

தேவ் ஆயிர ரூபாய் கட்டொன்றை சேகரிடம் தந்தான். “இது அட்வான்ஸ். டியூஷனுக்கு அவன் போகும் போதே கடத்தி விடு. வேலையை முடித்தவுடன் மீதி தருகிறேன். ஆனால் வேலை கச்சிதமாய் முடிய வேண்டும். கடத்தியவுடன் எனக்குப் போன் செய்து தகவலைச் சொல்ல வேண்டும்....”

மிக சந்தோஷமாகப் பணத்தை வாங்கிக் கொண்ட சேகர் கேட்டான். “என்றைக்குச் செய்ய வேண்டும்?”

”நாளை.... இன்றே தயாராகிக் கொள். கவனமாக இரு.....”

சேகரை அனுப்பி விட்டு தேவ் கதவைச் சாத்திக் கொண்டு ஒரு காகித உறையில் இருந்து சில தாள்களை எடுத்தான். நாளை கோயமுத்தூர் வரவிருக்கும் இந்தியப் பிரதமர் பங்கு பெறும் நிகழ்ச்சிகள் பற்றிய விரிவான தகவல்கள் அந்தத் தாள்களில் இருந்தன. தொலைக்காட்சியிலும் செய்திகளைப் பார்த்தான். கிடைத்திருந்த தகவல்களில் எந்த மாற்றமும் இல்லை. சாலைப் போக்குவரத்தில் செய்திருக்கும் மாற்றங்களை உயர் போலீஸ் அதிகாரி விவரித்தார். பிரதமரின் பாதுகாப்புக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மிகவும் கவனமாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட தேவ் அலைபேசியில் ஒரு ஆளை அழைத்தான்.

அரை மணி நேரத்தில் வந்த ஆள் இரண்டு காகித உறைகள் தந்தான். முதலாம் உறையில் மைத்ரேயன், கௌதம் இருவரும் மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து ஆடும் அந்த விளையாட்டு மைதானத்தின் வரைபடம் இருந்தது. தேவ் அந்த வரைபடத்தை ஆராய்ந்தான். மூன்று பக்கமும் சுவர், ஒரு பக்கம் பெரிய இரும்புக்கதவு. அந்த இரும்புக் கதவுக்கு எதிர்ப்புறம் தெருவைத் தாண்டி இரண்டு பெரிய பங்களாக்கள் இருந்தன.

அந்த ஆள் சொன்னான். “ஒரு பங்களாவில் மூன்று நாளைக்கு ஆள் இல்லை சார். வெளியூர் போயிருக்கிறார்கள். இரவு மட்டும் காவலுக்கு ஆள் வருவான். இன்னொரு பங்களாவில் வயதான தம்பதி மட்டும் இருக்கிறார்கள். அதிகம் வெளியே வர மாட்டார்கள்...... “

தேவ் கேட்டான். “விளையாட இந்தப் பையன்கள் மட்டும் வருவார்களா? இல்லை வேறு எதாவது பையன்களும் வருவார்களா?”

“இவர்களை விடப் பெரிய பையன்கள் குழு ஒன்று இருக்கிறது சார். சுமார் பத்து பையன்கள் இருப்பார்கள். அவர்களும் விளையாட வருவார்கள்.....”

“நாளை அந்தப் பையன்கள் வராமல் பார்த்துக் கொள். எதாவது புது சினிமாவுக்கு இலவசமாய் டிக்கெட் வாங்கிக் கொடு.....”

அந்த ஆள் தலையசைத்தான்.

இரண்டாம் உறையில் இருந்து இன்னொரு வரைபடத்தை தேவ் எடுத்தான். வருண் டியூஷன் போகும் இடத்தின் வரைபடம். அது ஒரு தெருக்கோடியில் இருந்தது. பக்கத்தில் சிறிது காலியிடம். அதற்கும் முன்னால் ஒரு பெரிய தொழிற்சாலை..... ஆள்நடமாட்டம் அதிகமாக தொழிற்சாலையின் வேலை மாற்ற நேரங்களில் மட்டுமே அந்த சாலையில் இருக்கும். மற்ற நேரங்களில் ஆள் நடமாட்டமே இருக்காது.

தேவிடம் அந்த ஆள் சொன்னான். “சேகர் அந்தப் பையனைக் கடத்துவதில் பெரிய பிரச்னை இருக்காது. டியூஷனுக்கு வரும் ஒன்றிரண்டு பையன்கள் தான் கூட இருக்கலாம்.....”

“ஒருவேளை அவன் சொதப்பி விட்டால் அந்தப் பையனை நீங்கள் கடத்திக் கொண்டு போகத் தயாராக இருக்கிறீர்கள் அல்லவா?”

அவன் தலையசைத்தான். அவனுக்குப் பணத்தைத் தந்து அனுப்பி விட்ட தேவ் அடுத்ததாக வெடிகுண்டு தயாரிக்கும் ஒருவனிடம் அலைபேசியில் பேசினான். ”தயார் தானே?’

“தயார் தான் சார்.... ஆனால் பிரதமர் வருவதால் போலீஸ் சோதனை எல்லா தெருக்களிலும் பலமாய் இருக்கிறது.....”

“அது பிரச்னை இல்லை. எங்கள் ஆள்கள் நாளை காலை வந்து மீதி பணம் தந்து வாங்கிக் கொள்வார்கள்.....”

அன்று இரவு வரை தேவ் நான்கு ஆட்களைத் தனித்தனியாக தனதறையில் சந்தித்தான். ஒவ்வொருவரும் அரை மணி நேரத்திற்கு மேல் அவன் அறையில் தங்கவில்லை. ஒருவர் போய் வேறொருவர் வரவும் அதே இடைவெளி இருந்தது. வேறு இருவரிடம் அலைபேசியில் பேசினான்.

ஒவ்வொருவரும் அவன் திட்டத்தில் ஒவ்வொரு பகுதியில் இருந்தார்கள். அவர்கள் யாருக்கும் அடுத்தவர்கள் பங்கு என்ன, முழுமையான திட்டம் என்ன என்பது தெரியாது. அனைத்தும் அறிந்த, அவர்களை இயக்கும் தலைவனான தேவ் அன்றிரவு திருப்தியாக உறங்கினான்.


ன்றிரவு அக்‌ஷயும் திருப்தியாகத் தான் உறங்கிக் கொண்டிருந்தான், அந்தக் கனவு வரும் வரை. அந்தக் கனவிலும் அவன் உறங்கிக் கொண்டு தான் இருந்தான் மைத்ரேயன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வரும் வரை. கனவிலும் கூட”தாளிட்டு விட்டு தானே உறங்க வந்தோம், இவன் எப்படி உள்ளே வருகிறான்” என்று அக்‌ஷய் ஆச்சரியப்பட்டான்.

மைத்ரேயன் திடீரென்று ஒளிமயமாய் தோன்றினான். அவனுக்குள் ஏதோ பிரம்மாண்ட விளக்கு ஒளிர ஆரம்பித்தது போல் இருந்தது. அக்‌ஷய் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மைத்ரேயன் அவனை நெருங்கினான். அகஷயின் கழுத்துக்கும் கீழ் முதுகுப் பகுதியில் உள்ள நாக மச்சத்தைத் தொட்டான். அந்த இடம் அக்னியால் தொட்டது போல எரிந்தது. அவன் முதுகுத்தண்டில் ஏதோ ஊர்ந்தது. நிஜமாகவே நாகம் போல இருந்தது. அந்த நாகம் விரிந்து சிலிர்த்தது. உடல் முழுவதும் மின்சாரம் தீண்டியது போல் அவன் உணர்ந்தான்.

மைத்ரேயன் அவனை ஒரு கணம் அமைதியாக, அன்பாகப் பார்த்தான். அவனிடம் இருந்து ஒரு ஒளிப்பிரவாகம் அக்‌ஷயை அடைந்தது. பின் மைத்ரேயன் திரும்பிப் போய் விட்டான். அக்‌ஷய் கண்விழித்த போது தொப்பலாக வியர்வையில் நனைந்திருந்தான். தன் நாகமச்சத்தை அக்‌ஷய் தொட்டுப் பார்த்தான். இன்னும் அங்கே தனிச்சூடு இருந்தது. அருகில் படுத்திருந்த சஹானாவைப் பார்த்தால் அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

எழுந்து கதவருகே வந்து பார்த்தான். கதவு தாளிடப்படாமல் வெறுமனே சாத்தப்பட்டிருந்தது. அவனும், சஹானாவும் என்றுமே கதவைத் தாளிடாமல் உறங்குவது இல்லை. பின் எப்படி?....

அக்‌ஷய்க்குக் குழப்பமாக இருந்தது. கடிகாரத்தைப் பார்த்தான். மணி இரவு மூன்று. யோசித்தபடி வெளியே வந்தவன் பிள்ளைகள் அறை ஜன்னலில் எட்டிப் பார்த்தான். மூவரும் உறக்கத்தில் இருந்தார்கள். மைத்ரேயன் உறக்கத்தை அவன் நம்பவில்லை.....

தண்ணீர் குடித்து விட்டுத் திரும்பவும் தன் அறைக்கு வந்த அக்‌ஷய்க்கு உறக்கம் வரவில்லை. நடந்தது கனவென்று அவனால் ஒதுக்கி விட முடியவில்லை. புத்த கயாவிலும் இப்படித்தான் புரியாத ஏதோ நிகழ்வு கனவு போல நடந்தது. இன்று இப்படியொரு புதிரான கனவு.... என்ன தான் நடக்கிறது?.....

(தொடரும்)

என்.கணேசன்

10 comments:

  1. சுஜாதாMay 12, 2016 at 6:30 PM

    செம சூப்பரா போகுது கணேசன் சார். என்ன நடக்கப் போகுதுன்னு மனசு திக் திக்குங்குது.

    ReplyDelete
  2. Fantastic story. I heard about this novel from my friend. Started reading from sunday. I couldn't do any other thing in these five days. Story is gripping me like anything. I loved your way of writing. Simple at the same time powerful. Thank you sir.

    ReplyDelete
  3. Super update. Couldn't wait for next.

    ReplyDelete
  4. சூப்பர்

    ReplyDelete
  5. எதிர்பார்ப்பு..எதிர்பார்ப்பு..எதிர்பார்ப்பு..

    ReplyDelete
  6. Ganeshan sir,
    IT is superb as usual. you are maintaining the tempo also. Great.

    ReplyDelete
  7. //அருகில் படுத்திருந்த சஹானாவைப் பார்த்தாள். அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். //
    பார்த்தால் or பார்த்தான் entru varanum

    ReplyDelete
    Replies
    1. நன்றி. மாற்றி விட்டேன்.

      Delete