சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 21, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 95


மைத்ரேயனின் பாதுகாவலுக்காக நின்றிருந்த உளவுத்துறை ஆட்களில் ஒருவனுக்கு மைத்ரேயனின் எதிர்வீட்டு மாடியில் குடியிருக்கும் நபர் மீது சிறிய சந்தேகம் எழுந்தது. இருட்டில் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வந்து போகிறான். வீட்டுக்குப் போன பிறகும் கூட வீட்டின் விளக்குகளைப் போட்டுக் கொள்வதில்லை. இருட்டிலேயே இருக்கிறான்.....

அந்த உளவுத்துறை ஆள் அக்கம் பக்கம் விசாரித்தான். அந்த மாடியில் குடியிருக்கும் நபர் சினிமாக் கதாசிரியர் என்று சொன்னார்கள். அவன் மைத்ரேயன் வருவதற்கு சில நாட்கள் முன்பே குடி வந்து விட்டதாகவும் சொன்னார்கள். ’மைத்ரேயன் அங்கு வந்து சேர்வான் என்பது உளவுத்துறை உட்பட யாருமே முன்பே அறிந்திராத செய்தி. அப்படி இருக்கையில் அந்த ஆள் தெரிந்து கொண்டு வந்து இங்கு குடிவந்திருக்க முடியாது. சினிமாவுக்குக் கதை எழுதுபவர்கள் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சூழல் தேவைப்படும். இருட்டில் உட்கார்ந்து கொண்டு தன் ‘லேப்டாப்’பில் கதை எழுதுபவராக இருக்கலாம். விளக்கு போட்டால் அக்கம்பக்கத்துக்காரர்கள் போய் சினிமா பற்றி வம்பளந்தோ, வாய்ப்பு கேட்டோ தொந்தரவு செய்வார்கள் என்று கூட அந்தக் கதாசிரியர் நினைத்திருக்கலாம்.....’ என்றெல்லாம் சிந்தித்த அந்த உளவுத்துறை ஆள் சந்தேகம் நீங்கினான்.


சேகரை அவன் நண்பன் அலைபேசியில் அழைத்துப் பேசினான். ”அதிர்ஷ்டம் மறுபடி உன் கதவைத் தட்டியிருக்கிறது சேகர்....”

“என்ன விஷயம். முதலில் அதைச் சொல்லு”

”அந்த திபெத் பையனைக் கடத்தவோ அல்லது கொல்லவோ அவர்கள் திட்டம் போட்டிருக்கிற மாதிரி தெரிகிறது. அந்த வேலையை யாரோ ஒரு மர்மநபரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அவனுக்கு என்ன உதவி தேவையோ அதைச் செய்து தர நம்மிடம் சொல்லி இருந்தார்கள். அவனுக்கு உன் ஒருவனைத் தவிர வேறு யார் உதவியும் வேண்டாமாம். உன்னை மட்டும் ரகசியமாய் சந்தித்துப் பேச அந்த ஆள் விருப்பம் தெரிவித்திருக்கிறான். உன் சேவைக்கு சரியான சன்மானம் தருவதாய் சொல்லி இருக்கிறார்கள்.....”

சேகருக்குப் பெருமையாக இருந்தது. நண்பன் சொன்னது போல் அதிர்ஷ்டம் அடுத்த தவணையைத் தரக் கதவைத் தட்டி இருக்கிறது. நண்பனைக் கேட்டான். “அந்த மர்ம நபரை எங்கு போய் சந்திக்க வேண்டுமாம்....”

நண்பன் ரேஸ்கோர்ஸில் உள்ள ஒரு மூன்று நட்சத்திர ஓட்டலின் பெயரைச் சொல்லி அங்கு சிவப்பு சட்டை அணிந்து கொண்டு மாலை ஏழரை மணிக்குச் சென்று வரவேற்பறையில் காத்திருக்கச் சொன்னான்.



மாராவுக்கு அந்த மர்ம நபர் குறித்த விவரங்கள் அனைத்தையும் இந்தியாவில் இருந்து ஒருவன் அலைபேசியில் தெரிவித்தான்.

“மைத்ரேயன் விஷயத்தில் லீ க்யாங் ஏற்பாடு செய்திருக்கும் ஆள் தேவராஜன். தேவ் என்ற பெயரில் தான் அவனைப் பலருக்குத் தெரியும். வயது 37. கடலூர்க்காரன். ஆனால் நிரந்தரவாசம் மும்பையில். தடயமே இல்லாமல் ஆள் கடத்துவது, கொல்வது, மாயமாக்குவது மூன்றிலும் நிபுணன். அவன் மேல் எத்தனையோ வழக்குகள் போடப்பட்டாலும் எல்லாமே நீதிமன்றங்களில் போதிய ஆதாரம் இல்லை என்று தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. பத்து லட்சத்துக்கும் குறைவான கூலி தரும் வேலையை அவன் ஏற்றுக் கொள்வதில்லை. அதிகபட்சமாய் ஒரு கோடி கூட வாங்கி இருக்கிறான்....”

“மைத்ரேயன் வேலையில் எத்தனை கூலி கேட்டிருக்கிறான்....”

“ஆரம்பத்தில் எழுபது லட்சம் கேட்டிருக்கிறான். மைத்ரேயன் அமானுஷ்யனின் பாதுகாப்பில் இருக்கிறான் என்று தெரிந்தவுடன் கூலி ஒன்றரை கோடி வேண்டும் என்று சொல்லி விட்டானாம்....”

“அப்படியானால் தேவுக்கும் அமானுஷ்யனைத் தெரியுமா?...”

“மும்பையில் தான் நிரந்தரவாசம், செய்யும் தொழிலும் இது போன்றது, என்பதால் அமானுஷ்யனை அவனுக்குத் தெரியாவிட்டால் தான் ஆச்சரியம்.... லீ க்யாங் மறு பேச்சு பேசாமல் ஒத்துக் கொண்டானாம்....”

“இப்போது லீ க்யாங் அவனுக்குக் கொடுத்திருக்கும் வேலை தான் என்ன? கடத்தலா, கொலையா?... என்ன எதிர்பார்க்கிறான்....”

“அதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.... ”



சேகர் அந்த நட்சத்திர ஓட்டலின் வரவேற்பறையில் ஏழே கால் மணியில் இருந்தே காத்திருந்தான். ஆனால் யாரும் அவனை நெருங்கவில்லை. ஏன் என்று தெரியவில்லை. அங்கிருந்தவர்களில் யாருமே சிவப்பு சட்டை அணிந்தவர்கள் இல்லை. அப்படி வேறொருவர் கூட அங்கு இருந்திருந்தாலும் யார் தான் வரவழைத்த ஆள் என்ற குழப்பம் அந்த மர்மநபருக்கு ஏற்பட்டிருக்கலாம்.... சேகர் ஓட்டலுக்குள் நுழைந்த ஆட்களையும், ஓட்டலிலிருந்து வெளியேறிய ஆட்களையும் கூர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தான். இந்த ஆளாக இருக்குமோ, அந்த ஆளாக இருக்குமோ என்று ஊகித்து சலித்துப் போய் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி எட்டு. போய் விடலாமா என்று அவன் யோசித்த வேளையில் கோட்டும் சூட்டுமாய் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் ஓட்டலுக்குள் நுழைந்தான். அவனைப் பார்த்ததும் “ஹலோ சரவணன்..... வந்து நிறைய நேரமாயிற்றா...” என்று கேட்டபடி கை நீட்டிக் கொண்டே நெருங்கினான்.

சேகர் ஒரு கணம் தடுமாறினாலும் பின் சுதாரித்துக் கொண்டு “இல்லை......சார்” என்றபடியே கைகுலுக்கினான். அவன் கண்கள் அந்த ஆளை எடைபோட்டன. மாநிறம், ஆறடி உயரம், கறுப்புக் கண்ணாடி, வெள்ளையும் கறுப்பும் கலந்த தாடி, செல்வச்செழிப்பான தோற்றம்.... குலுக்கிய கை இரும்பாய் இருந்தது. சேகர் அவனையும் அறியாமல் ஒரு பயத்தை உணர்ந்தான்.

”வாருங்கள் போவோம்” என்று அவனை அழைத்துக் கொண்டு லிப்ஃடை நெருங்கினான். மூன்றாம் மாடியில் 317 ஆம் எண் அறையை அடையும் வரை அவனிடம் எதுவும் பேசவில்லை. உள்ளே நுழைந்த பிறகு கதவைத் தாளிட்டவன் அங்கிருந்த சோபாவில் அமரும்படி சேகருக்குக் கை காட்டினான். அவன் கறுப்புக் கண்ணாடியைக் கழட்டினால் பரவாயில்லை, அவன் என்ன நினைக்கிறான் என்பதை கண்களை வைத்து ஊகிக்கவாவது முடியும் என்று சேகர் நினைத்தான். ஆனால் அந்த மனிதன் கண்ணாடியையும் கழற்றவில்லை. உடைகளையும் மாற்ற முனையவில்லை. சேகருக்கு எதிர் சோபாவில் அமர்ந்தவன் உடனே கேட்டான். “நீ எப்படி அந்தப் பையன் வீட்டுக்கு எதிரே குடிபோனாய்?”

சேகருக்கு அதற்குப் பதில் சொல்வதில் விருப்பமில்லை. அது அவன் தனிப்பட்ட விஷயம். அதை ஏன் இவன் கேட்க வேண்டும் என்று நினைத்தவனாய் தயங்கினான். அதுவும் மரியாதை இல்லாமல் ஒருமையில் கேட்கிறான்.

ஒரு நிமிடம் கழித்து தேவ் சொன்னான். “பரவாயில்லை. நீ போகலாம்......”

சேகர் அதிர்ந்தான். தேவ் மிக அமைதியாகச் சொன்னான். “தேவையான முழுவதும் தெரிந்து கொள்ளாமல் நான் யாரையும் எந்த வேலையிலும் சேர்த்துக் கொள்வதில்லை....”

இவனுடன் இந்த வேலையில் சேர்ந்து கொண்டால் பணமும் கிடைக்கும், பழி வாங்குவதில் பங்கெடுத்தது போலவும் இருக்கும். இரண்டையும் சேகர் இழக்க விரும்பவில்லை. அவன் மெல்லச் சொன்னான். “அந்த திபெத் பையன் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அவன் இப்போது தங்கியிருக்கும் வீடு என் எதிரியின் வீடு..... அதனால் தான் அவர்களைக் கண்காணிக்க எதிர் வீட்டுக்குக் குடிபோனேன்......”

தேவ் திகைத்தது போல் சேகருக்குத் தோன்றியது. அது உண்மை தான். தேவுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. அமானுஷ்யனுக்கு ஒரு எதிரி இருந்து அந்த எதிரி நடமாடிக் கொண்டிருக்கவோ, இப்படிப் பேசிக் கொண்டிருக்கவோ முடியும் என்பதை அவனால் நம்ப முடியவில்லை.

“எப்படி எதிரியானார்கள்?” தேவ் கேட்டான்.

சேகருக்கு அந்த மர்ம மனிதனைப் பிடிக்கவில்லை. தனிப்பட்ட விஷயங்களை இவன் ஏன் கேட்கிறான்? பணமும், பழிவாங்கும் எண்ணமும் அவனுக்கு ஏதாவது பதில் ஒன்றைச் சொல்லத் தூண்டியது. ஆனால் அவனையே பார்த்துக் கொண்டிருந்த தேவ் சொன்னான். “உண்மையைச் சொல்ல முடிந்தால் சொல். இல்லாவிட்டால் நடையைக் கட்டு..... எனக்கு வேலை நிறைய இருக்கிறது...”

சேகருக்கு அந்த நேரத்தில் பொருத்தமான பொய்யைக் கற்பனை செய்யவும் முடியாததால் உண்மையையே சுருக்கமாய் சொன்னான். “எதிர் வீட்டு ஆளின் மனைவியின் முதல் கணவன் நான். அவள் முதல் மகனுக்கும் நான் தான் தகப்பன்....”

உண்மையை மட்டுமே சொல்ல முடிந்த பழக்கம் இல்லாத அவனுக்கு கூடவே சொல்லத் தோன்றியது. “அவள் என்னை ஏமாற்றி விட்டு கைக்குழந்தையாக இருந்த என் மகனையும் எடுத்துக் கொண்டு அந்த ஆளோடு ஓடிப்போனாள்.....”

தேவ் கதை கேட்கும் மனநிலையில் இல்லை. இடைமறித்துச் சொன்னான். “எனக்கு அவர்கள் வீட்டையும் அவர்கள் வீட்டில் புழங்குவதையும் வீடியோ எடுத்துக் கொடு. அந்த திபெத் பையன் வீட்டை விட்டு வெளியில் எங்கெல்லாம் போகிறான், போன இடங்களில் எத்தனை நேரம் இருக்கிறான், அவனுடன் யாரெல்லாம் போகிறார்கள் என்பது மாதிரியான தகவல்கள் நாளை மாலைக்குள் வேண்டும். எனக்குத் திருப்தி தரும்படி நடந்து கொண்டால் உனக்கு மிக நல்ல தொகையை அவர்கள் தருவார்கள்....”

சேகர் உற்சாகமாய் தலையசைத்தான்.



ன்று இரவு மாரா சம்யே மடாலயம் போய்ச் சேர்ந்தான்.



(தொடரும்)

என்.கணேசன்

4 comments:

  1. Good plot and great characterization> Very interesting. Thank you for this weekly treat.

    ReplyDelete
  2. சூப்பர் சார். அடுத்தது என்ன என்று வாரா வாரம் திக் திக் கூடிக்கொண்டே போகிறது.

    ReplyDelete