சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 14, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 94

வாசக அன்பர்களுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

சூழ்ந்து கொண்டிருக்கும் ஆபத்தின் அறிகுறி அக்‌ஷயை சிறிதும் எட்டாதது போல் மாராவும், லீ க்யாங்கும் தனித்தனியாகப் பார்த்துக் கொண்டார்கள். மைத்ரேயனின் வீட்டை எதிர் வீட்டு மாடியில் இருந்து கொண்டு சேகர் மட்டுமே ரகசியமாய் தகவல்கள் அனுப்பிக் கொண்டிருந்தான். அந்த வீதியிலும் இரு பக்கத்து வீதிகளிலும் இந்திய உளவுத்துறை ஆட்கள் மட்டுமே இருந்தார்கள். அவர்கள் கவனத்தைக் கவராத தொலைவில் மட்டுமே லீ க்யாங்கின் ஆட்கள் இருந்தார்கள். அவர்கள் கவனத்தையும் கவராத தூரத்தில் மாராவின் ஆட்கள் இருந்தார்கள். அவர்கள் யாரும் தப்பித்தவறி கூட அந்த மூன்று வீதிகளில் பிரவேசித்து விடவில்லை.

இரண்டு நாட்களாக அக்‌ஷய் எதிர் வீட்டு மனிதர்கள் பேசக் கிடைக்கிறார்களா என்று ஆர்வமாகப் பார்த்தான். வந்தனா எதிர்வீட்டைப் பார்ப்பதில்லை என்ற உறுதிமொழி எடுத்தவளைப் போல் நடந்து கொண்டாள். வந்தனாவின் தாய் அடிக்கடி அவர்கள் வீட்டைப் பார்த்தாலும் அக்‌ஷய் பார்த்த போதெல்லாம் முகத்தைக் கடுமையாக மாற்றி திருப்பிக் கொண்டாள். சஹானா சொன்னது போல் சிறிதாவது பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொள்ளாதது வந்தனாவின் தந்தை தான். லேசாகப் புன்முறுவல் செய்தாலும் அடுத்த கணம் அந்த இடத்தை விட்டுப் போகிறவராக அவர் இருந்ததால் அவரிடமும் அக்‌ஷயால் பேச முடியவில்லை. காதலர்களின் பிரச்னையைத் தீர்த்து வைத்து வருணின் பழைய சந்தோஷத்தைக் காண அவன் ஆசைப்பட்டது நிறைவேறாமல் போனது.

மைத்ரேயனும், கௌதமும் இணை பிரியாத தோழர்களாய் மாறி விட்டிருந்தார்கள். கௌதமிற்கும் விடுமுறை நாட்கள் என்பதால் இருவரும் விளையாட்டிலேயே இருந்தார்கள். இவ்வளவு நெருக்கமாய் இருக்கும் மைத்ரேயனால் பிரியும் போது சிறிய பாதிப்பும் இல்லாமல் பிரிய முடியும் என்பதைச் சொல்லி இளைய மகனை எச்சரிக்க வேண்டும் என்று அக்‌ஷய்க்கு தோன்றியது. கௌதமால் அப்படி அந்தப் பிரிவைத் தாங்க முடியாது என்று அக்‌ஷய்க்குத் தெரியும். ஆனால் அதைச் சொல்லி கௌதமின் சந்தோஷத்தை இப்போதே கெடுத்து விட வேண்டாம் என்றும் கூடத் தோன்றியது.

அக்‌ஷய்க்கு மைத்ரேயன் தமிழ் பேசும் விதம் ஆச்சரியப்பட வைத்தது. அவன் சைத்தான் மலையில் கற்றுக் கொண்ட வார்த்தைகள் மட்டுமல்லாமல் மற்ற வார்த்தைகளையும் சரளமாய் கௌதமிடம் பேசினான். அக்‌ஷயும் பல மொழிகளை சரளமாகப் பேசுபவன் தான். ஆனால் அதற்கு காலமும், பயிற்சியும் நிறையவே தேவைப்பட்டிருக்கிறது. அந்த இரண்டும் இல்லாமலேயே மைத்ரேயன் தமிழ் மிக நன்றாகப் பேசுகிறான். எப்படி? ஏதாவது அசாதாரண சக்தி பெற்று விட்டிருக்கிறானா? புரியவில்லை.....

 
கௌதம் காலை எழுவதற்கு ஒரு மணி நேரம் முன் எழுந்து தியானத்தில் ஆழ்ந்து விடும் மைத்ரேயன் இரவு அவன் உறங்கிய பின் ஒரு மணி நேரம் தியானத்தில் இருப்பதை வழக்கமாய் கொண்டிருந்தான். அவன் தியானம் வருணை ஏனோ அதிக எரிச்சல் அடையச் செய்தது. அவனுடைய தியான நேரத்தில் அவன் அடுத்தவர் மனதிற்குள் எல்லாம் உலா வருவது போல் ஏற்படும் பிரமையை வருணால் தவிர்க்க முடியவில்லை.

ஒரு நாள் இரவு அவன் மைத்ரேயனிடம் கேட்டே விட்டான். “நீ ஏன் தினமும் தியானம் செய்கிறாய்?”

“தினமும் ஏன் சாப்பிடுகிறோம்?” என்று பதிலுக்கு மைத்ரேயன் கேட்டது வருணுக்குப் பிடிக்கவில்லை. என்ன அதிகப்பிரசங்கித்தனமான கேள்வி என்று அவனுக்குத் தோன்றியது.

கௌதமைப் போலவே அக்‌ஷயிடம் நெருங்கி உரிமை பாராட்டி அந்த வீட்டில் மைத்ரேயன் இருப்பதும் அவனுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. ஒரு நாள் மைத்ரேயன் குளிக்கப் போயிருக்கையில் வருண் அக்‌ஷயிடம் கேட்டே விட்டான். “இவன் எப்போது போவான்?”

அக்‌ஷய் வாய் திறப்பதற்குள் கௌதம் கேட்டான். “அவன் இங்கே இருந்தால் உனக்கென்ன?”

வருணுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. கௌதமே சொன்னான். “அவன் இங்கே அப்பாவிடம் பாசமாய் நெருங்கி இருப்பது உனக்குப் பொறாமையாய் இருக்கிறது...”

வருண் மறுக்கவில்லை. “யாரானாலும் அவரவர் இடத்திலேயே இருப்பது தான் சரி”

கௌதம் எப்போதும் இல்லாத கோபத்துடன் சொன்னான். “அவனுக்கு அப்பா இல்லை. அதனால் தான் நம் அப்பாவிடம் அப்படிப் பாசமாய் இருக்கிறான். உனக்கு அப்பா இல்லாமல் இருந்தால் அவன் நிலைமையைப் புரிந்து கொள்ள முடிந்திருக்கும்....”

வருண் தம்பியைக் கொலைவெறியுடன் பார்த்தான். சஹானாவும், மரகதமும் திகைப்புடன் கௌதமைப் பார்க்க, அக்‌ஷய் வருணை சமாதானப்படுத்த வாய் திறப்பதற்குள் மைத்ரேயன் குளியலறையில் இருந்து வந்தான். அது சம்பந்தமான பேச்சு நின்றது.

அன்று மைதானத்திற்கு விளையாடப் போகும் போது கௌதம் மைத்ரேயனிடம் கேட்டான். “உனக்கு என் அப்பாவைப் பிடிக்குமா?”

“பிடிக்கும்”

”என் அப்பாவை எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும்” என்று பெருமையாகச் சொல்லி விட்டு கௌதம் மெல்ல மைத்ரேயனிடம் சொன்னான். “நான் ஒன்று சொன்னால் கோபித்துக் கொள்வாயா?”

”இல்லை. சொல்” என்று மைத்ரேயன் சொன்னான்.

கௌதம் தயக்கத்துடன் சொன்னான். “என் அண்ணா அப்பா செல்லம். அவனைத் தவிர யாரும் அப்பாவிடம் நெருக்கமாய் இருந்தால் சின்னக் குழந்தை போல் பொறாமைப்படுவான். அவன் இருக்கையில் நீயும் நானும் அப்பாவுடன் நெருக்கமாய் இருக்க வேண்டாம். சரியா?”

மைத்ரேயன் கௌதமைப் பார்த்துப் பெரியதாய் புன்னகைத்தான். ”சரி” என்று சொன்னவன் மெல்லக் கேட்டான். “உனக்கு அப்படி பொறாமை இல்லையா?”

“சேச்சே. எனக்கெல்லாம் பொறாமை கிடையாது....” என்ற கௌதம் களங்கமில்லாமல் சிரித்ததை மைத்ரேயன் புன்னகையுடன் பார்த்தான்.

அன்றிரவு வருணுக்கு உறக்கம் வரவில்லை. கௌதம் காலையில் பேசினது பெரிய காயத்தை அவன் மனதில் ஏற்படுத்தி இருந்தது. உண்மையை அறியாமல், நண்பனுக்காக யதார்த்தமாகத் தான் தம்பி அப்படிப் பேசினான் என்பதை அவன் அறிவான். ஆனாலும் வலித்தது. புரண்டு புரண்டு படுத்தவன் அப்படியும் தூக்கம் வராமல் எழுந்து உட்கார்ந்தான்.

கௌதம் உறங்கி விட்டிருந்தான். வருணையே பார்த்துக் கொண்டிருந்த மைத்ரேயன் மெல்லச் சொன்னான். “உன்னை உன் அக்‌ஷய் அப்பா நிறையவே நேசிக்கிறார். இடையில் யார் வந்தாலும் சரி அந்த பாசம் சிறிதும் குறையாது.....”

வருண் திகைத்தான். இடையில் யார் வந்தாலும் என்று சொன்ன போது மைத்ரேயனின் ஒரு கை தன்னையே காண்பித்துக் கொண்டு இன்னொரு கை எதிர் வீட்டு மாடியையும் காண்பித்தது பொத்தாம் பொதுவாகக் காட்டியது போல் தோன்றவில்லை. மைத்ரேயனையே திகைப்பு மாறாமல் தொடர்ந்து பார்த்த வருணுக்கு அவன் வார்த்தைகள் மனக்காயத்துக்கு மருந்து தடவுவதாக இருந்தன. கண்கள் கலங்க எழுந்து போய் அந்த சிறுவனை அணைத்துக் கொண்டான். அணைத்துக் கொண்டு நிறைய நேரம் அழுதான்.....



ன்றைய இரவு சம்யே மடாலயத்தின் தலைமை பிக்குவும் உறக்கம் வராமல் தவித்தார். சில நாட்களாக நள்ளிரவு நேரங்களில் சம்யே மடாலயத்தில் பரவும் அலைகள் தீய சக்திகளின் ஆதிக்கத்தை அவருக்கு உணர்த்தி வருகிறது. அது போதாதென்று இன்று மைத்ரேயரின் காவி உடையும் காணாமல் போனது அவர் மன அமைதியைக் குலைத்தது. அவரால் அறிய முடியாத ஒரு சதித்திட்டம் அந்த மடாலயத்தில் நடப்பதாக அவர் உணர்ந்தார். ஆனால் கோங்காங் மண்டபத்தில் நடக்கும் ரகசிய நடவடிக்கைகள் அந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியே என்பது மட்டும் அவருக்குப் புரிந்தது. அதை நிறுத்த முடியாத கையாலாகாத்தனம் அவரை மிகவும் உறுத்தியது.

மெல்ல எழுந்து மடாலயத்தின் மூன்றாவது தளத்திற்குப் போனார். அங்கே பத்மசாம்பவாவின் தலைமுடி கைத்தடி ஆகியவற்றை வைத்திருந்த கண்ணாடிப் பேழையின் முன் தளர்ச்சியுடன் அமர்ந்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார். மனம் சிறிது அமைதியடைய ஆரம்பித்தது.

ஆனால் திடீரென்று அங்கிருந்த தாரா தேவதைச் சிலை பேசியது போல் உணர்ந்தார். “நாளை இங்கு தீமை மகுடம் சூடும்”. அதிர்ந்து போன தலைமை பிக்குவுக்குத் தான் உணர்ந்தது உண்மையா அல்லது கற்பனையா என்று உடனடியாகப் பிரித்தரிய முடியவில்லை. தாரா தேவதைச் சிலை பேசக்கூடியது என்று பலரும் சொல்லி அவர் சிறுவயதில் இருந்தே கேட்டிருக்கிறார். அவர் அதைப் பெரிதாய் நம்பி இருக்கவில்லை. ஆனால் யோசித்துப் பார்க்கையில் இன்று அவருக்குக் கிடைத்ததாய் உணர்ந்த செய்தி பயத்தில் எழுந்ததாகத் தெரியவில்லை. பயம் குறைந்து மனம் அமைதியடைய ஆரம்பித்த சமயத்தில் கேட்டதால் அது தாரா சிலை சொன்னதாகவே இருக்க வேண்டும். பதற்றத்துடன் எழுந்த அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.



று நாள் புதுடெல்லியில் இந்திய உளவுத்துறைக்கு வந்து சேர்ந்த எண்ணற்ற தகவல்களில் ஒரு தகவல் இருந்தது. “கோயமுத்தூரில் சில புகழ்பெற்ற தனியார் துப்பறியும் நிறுவனங்களின் ஒற்றர்கள் கணிசமான அளவில் கூடி இருக்கிறார்கள்....”

பொறுமையாக எல்லாத் தகவல்களையும் படித்துக் கொண்டு வந்த அதிகாரி கோயமுத்தூர் அலுவலகத்திற்கு அந்தச் செய்தியை மின் அஞ்சலில் உடனடியாக அனுப்பி வைத்தார்.

கோயமுத்தூர் அலுவலகத்தில் அந்தச் செய்தியை வாசித்த அதிகாரி முதல் வேலையாக அந்தச் செய்தியை நிரந்தரமாக அழித்து விட்டான். மைத்ரேயனின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்த அதிகாரி ஒரு மணி நேரத்தில் அங்கு வந்து “ஏதாவது முக்கியமான செய்தி வந்திருக்கிறதா?” என்று கேட்ட போது, மாராவிடம் கூலி வாங்க ஆரம்பித்திருந்த அந்த அதிகாரி “ஒன்றுமில்லை” என்று கூசாமல் சொன்னான்.

(தொடரும்)

என்.கணேசன்

11 comments:

  1. சுஜாதாApril 14, 2016 at 6:00 PM

    அருமையா போகுது. ஆனா இப்படி சீக்கிரம் சீக்கிரம் தொடரும் போட்டு டென்ஷன் பண்றீங்களே சார்.

    ReplyDelete
  2. மைத்ரேயர்-வருண் அன்னியோன்யம் அட்டகாசம். . .

    இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் அண்ணா. . .

    ReplyDelete
  3. andru maithanathukku vilayada poogumbothu gowtham akshy yidam keattan ... pl change ..

    super super .. every week amazing ..

    ReplyDelete
  4. Thrilling but 7 days waiting is too too long................

    ReplyDelete
  5. சிறந்த பதிவு

    இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  6. அன்று மைதானத்திற்கு விளையாடப் போகும் போது கௌதம் அக்‌ஷயிடம் கேட்டான். “உனக்கு என் அப்பாவைப் பிடிக்குமா?”

    I think its wrong name u put. Please chceck it.

    Very interesting :)

    ReplyDelete
    Replies
    1. மாற்றி விட்டேன். நன்றி.

      Delete