சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 7, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 93


பெரிய மனது பண்ணி பேருதவி செய்த ஒருவரிடம் அதற்கு மேலும் உதவி செய்யக் கேட்டு நிற்பது போல் கூச வைக்கும் சூழ்நிலை கண்ணியமான மனிதர்களுக்கு வேறொன்று இருக்க முடியாது. மேலும் சிறிது நாட்கள் மைத்ரேயனைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி அக்‌ஷயிடம் மறுபடியும் கேட்க நேர்ந்த போது ஆசான் அப்படியே தர்மசங்கடத்தை உணர்ந்தார். இந்திய உளவுத்துறை ஆளின் அலைபேசியில் அக்‌ஷயிடம் வேண்டிக் கொண்ட போது மிகுந்த பணிவுடன் சொன்னார். “அன்பரே, எங்களுடைய கஷ்டகாலம் உங்களைத் திரும்பத் திரும்ப உதவி கேட்க வைக்கிறது. எங்களைத் தவறாக நினைத்துக் கொள்ளக்கூடாது. மைத்ரேயரைப் பத்திரமாகத் திபெத்தில் இருந்து அழைத்து வந்த நன்றிக்கடனுக்கே ஒரு பிறவி முழுவதும் உங்களுக்குச் சேவை செய்தாலும் போதாது. அப்படி இருக்கையில் இதையும் கேட்பது சரியல்ல என்றாலும் தற்போதைய நிலைமையில் வேறு வழி இல்லை....”

அக்‌ஷய் சொன்னான். “புனிதரே, எல்லோரும் அவரவருக்கு முடிந்ததையே செய்கிறார்கள். அதைச் செய்வதற்காகத் தான் இந்தப் பிறவியே என்று கூடச் சொல்லலாம். அப்படி இருக்கையில் நன்றிக்கடன் போன்ற பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லாதீர்கள். மைத்ரேயன் இங்கிருப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை...”

சிறிய உதவிகள் செய்து விட்டே, அதற்கு உதவி பெற்றவர்கள் வாழ் நாள் முழுவதும் தனக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகம் இருக்கும் உலகில் தன் உயிரைப் பணயம் வைத்து பேருதவி செய்த அந்த மனிதன் பெருந்தன்மையாக இப்படிச் சொன்னது ஆசானை உணர்ச்சி வசப்படுத்தி ஒரு கணம் நாக்கைக் கட்டிப் போட்டது.

பேச முடிந்த போது அவர் கரகரத்த குரலில் கேட்டார். ”மைத்ரேயர் என்ன செய்கிறார் அன்பரே?”

“என் மகனுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான்.....”

மைத்ரேயரை ஒருமையில் அக்‌ஷய் அழைத்தது ஆசானுக்கு என்னவோ போல் இருந்தது. அதை வெளியில் காட்டாமல் சொன்னார். “இங்கே ஒரு கிழவன் அவருடன் விளையாடத் துடித்துக் கொண்டிருக்கிறான் என்று மைத்ரேயரிடம் சொல்லுங்கள் அன்பரே. இங்கிருக்கும் உளவாளிகளை ஏமாற்றி விட்டு விரைவிலேயே அங்கு வந்து சேர்கிறேன். பின் அடுத்தது என்ன என்று யோசிப்போம்....”

அக்‌ஷயிடம் அவர் பேசி முடித்த பின்னர் இந்திய உளவுத்துறையின் ஆள் அவரிடம் சொன்னான். “தேவைப்பட்டால் இங்கிருக்கும் வெளி உளவாளிகளை சிறைப்படுத்தி அப்புறப்படுத்தவும் முடியும்.... நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் போதும்....”

“தேவையில்லை அன்பரே.....” என்றார் ஆசான். ”இது போன்ற ஆள்களை நான் நிறையவே பார்த்திருக்கிறேன்.... சமாளித்தும் இருக்கிறேன்....”



லீ க்யாங் சிறிதும் எதிர்பாராத விதமாய் கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தான். அதிர்ஷ்டம் அடிக்கடி வந்து கதவைத் தட்டுவதில்லை....

மைத்ரேயனின் புகைப்படமும், அவனது பாதுகாவலனின் புகைப்படமும், அவர்கள் தங்கி இருந்த வீட்டின் புகைப்படமும் அவன் முன்னால் இருந்தன. பாதுகாவலனின் புகைப்படத்தை அவன் ஆர்வத்துடன் ஆராய்ந்தான். மைத்ரேயனின் பாதுகாவலன் மிக இளமையாக, துடிப்பாகத் தான் தெரிந்தான். ”இவன் தான் லாஸா விமானநிலையத்திற்கு வந்து சேர்ந்த புத்தபிக்கு என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். எந்த நேரத்திலும் என்னவாகவும் முடிந்த சரியான பச்சோந்தி.....” என்று மனதுக்குள் சிலாகித்துக் கொண்ட லீ க்யாங் நிறைய நேரம் யோசித்தான்.

இப்போது ஆசானை வேவு பார்த்துக் கொண்டிருக்கும் குழு மூலமாகத் தான் தற்போது மைத்ரேயன் இருக்கும் இடம் தெரிந்துள்ளது என்ற போதும் அவன் மனதில் உதித்த திட்டத்திற்கு அந்தக் குழுவின் திறமையும், பலமும் போதுமானதல்ல. அவர்களுக்கென்று ஒரு பொறுப்பு தந்து உதவிக்குச் சேர்த்துக் கொள்ளலாமே தவிர முக்கிய வேலையை நிறைவேற்ற, அமானுஷ்யனைச் சமாளிக்க, தகுந்த ஒரு மனிதன் வேண்டும்..... அதுவும் இந்தியனாக இருந்தால் கச்சிதமாக இருக்கும்..... ஒரு பெயர் நினைவுக்கு வந்தது. அவனை நேரடியாகத் தொடர்பு கொள்வது இருவருக்கும் நல்லதல்ல....

உடனே இந்தியாவில் இருக்கும் தங்கள் ஒற்றன் ஒருவனுக்குப் போன் செய்து அந்த ஆளைச் சந்தித்துப் பேசச் சொன்னான். சொல்லி விட்டு ஆசானைக் கண்காணிக்கும் ஒற்றர் குழுத் தலைவனைத் தொடர்பு கொண்டான்.....


சேகருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவன் அனுப்பிய புகைப்படங்களுக்கு வெகுமதியாக அவன் சேமிப்புக் கணக்கிற்கு ஐந்து லட்சம் ரூபாய் அனுப்பி இருந்தார்கள். தொடர்ந்து எதிர் வீட்டைக் கண்காணிக்கும்படி வேண்டிக் கொண்டவர்கள், அதற்கு நல்ல முறையில் கவனித்துக் கொள்வதாகவும் உறுதி அளித்தார்கள். எதிரியை அழிக்க பணமும் தருகிறார்கள் என்பதற்கு இணையான இரட்டை மகிழ்ச்சி உலகில் வேறு எதாவது இருக்க முடியுமா என்ன!

சஹானாவின் இரண்டாம் கணவன் அழைத்து வந்த அந்த திபெத்தியச் சிறுவன் தனிப்பட்ட முறையில் அவனுக்கு எதிரி அல்ல. ஆனால் எதிரிகளின் வீட்டில் அவர்களுடன் சேர்ந்து வாழ்பவன் நண்பனும் அல்லவே. அந்தச் சிறுவனுக்கு ஆபத்து விளைவித்தால் அவனை அழைத்து வந்த அக்‌ஷய் தோற்றுப் போவான். வருணுக்கு உண்மையான கதாநாயகனும் சக்தி வாய்ந்தவனும் தன் சொந்தத் தகப்பன் தான் என்பது புரியும்.... நினைக்கும் போதே சேகருக்கு உடல் பூரித்தது.

தான் வந்திருப்பது கீழ் வீட்டாருக்கும் தெரியாமல் இருப்பது நல்லது என்று நினைத்த அவன் தன் வீட்டிலேயே பூனை போல் சத்தமில்லாமல் தான் இயங்கினான். தெரிந்து ஜானகி பேச மேலே வந்து விட்டால் எதிர் வீட்டைக் கண்காணிப்பது தடைப்படும். இல்லா விட்டாலும் அந்தப் பெண்மணி ஒரு தொந்தரவு தான்.

மேலிருந்து ரகசியமாய் வேவு பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு தன் மகனும், அக்‌ஷயும் வாசலில் நின்று கொண்டு நண்பர்கள் போல் அன்னியோன்னியமாய் பேசிக்கொண்டிருந்தது வயிறெரிய வைத்தது. ‘எல்லாம் சில நாட்கள் தான்...’ என்று மனதினுள் கறுவினான்.

கீழ்வீட்டு ஜன்னல் வழியாக ஜானகியும் அவன் பார்த்ததையே பார்த்து சத்தமாய் அங்கலாய்த்தாள். “வருண் அந்த ஆளிடம் எவ்வளவு பாசமாய் இருக்கிறான். இந்தப் பாசம் சொந்த அப்பாவிடம் இல்லாமல் போனது ஏன் என்று தான் தெரியவில்லை....”

மாதவன் சொன்னார். “அந்த ஆள் சொந்த மகன் மாதிரி பாசமாய் இருப்பதால் தான் வருணும் பாசமாய் இருக்கிறான். அன்பும் பாசமும் கொடுத்தால் தான் திருப்பிக் கிடைக்கும்....”

“சொந்த அப்பாவுக்கு அப்படிப் பாசம் காண்பிக்க ஒரு வாய்ப்பு கூட அவன் தரவில்லையே. சேகர் அவன் கிட்ட போய் அப்படிக் கெஞ்சினதாய் சொன்னாரே. என்ன வந்தனா நான் சொல்வது சரிதானே”

“தயவு செய்து எதிர் வீட்டைப் பற்றிப் பேசுவதை இரண்டு பேரும் நிறுத்துகிறீர்களா? நமக்கு சம்பந்தமில்லாததைப் பற்றி நாம் ஏன் பேச வேண்டும்?” வந்தனா கத்த இருவரும் அமைதியானார்கள்.


மாரா காத்மண்டுவில் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு அவர்கள் ரகசிய இயக்கத்தின் ஆட்கள் ஏழு பேரை அவசரமாக வரவழைத்திருந்தான். அதில் மூவர் சீனர்கள். நால்வர் இந்தியர்கள்.

மாரா அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான். “.... நாம் உலகம் எல்லாம் ஊடுருவி இருக்கிறோம். ஊடுருவிய இடங்களில் செல்வத்திலும் அதிகாரத்திலும் வேரூன்றியும் இருக்கிறோம். இன்று எந்த நாட்டிலும் எதையும் நம்மால் சாதிக்க முடியும் என்பது தான் யதார்த்த நிலை. ஆனால் இது எதையுமே நான் ஒரு பெரிய சாதனையாக நினைக்கவில்லை.....” சொல்லி விட்டு மாரா ஒரு கணம் பேச்சை நிறுத்தினான். ஏழு பேரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொருவரையும் கூர்ந்து பார்த்து விட்டு மாரா சொன்னான். “மைத்ரேயனை வெல்வது ஒன்று தான் என்னைப் பொருத்த வரை சாதனை....”

சீனர்களில் மூத்தவர் கேட்டார். “உண்மையாகவே மைத்ரேயனை உனக்கு இணையாக நினைக்கிறாயா மாரா?”

“ஒருவனைப் பற்றி முழுமையாகத் தெரிந்தால் தான் உயர்ந்தவனா, இணையானவனா, தாழ்ந்தவனா என்பது தெரியும். தெரியாத புதிரை என்னவென்று நினைப்பது. உலகமே ஊடுருவ முடிந்த நமக்கு மைத்ரேயனை இன்னும் ஊடுருவ முடியவில்லை. அதற்கு அவன் நமக்குக் கிடைக்கவில்லை.. இப்போது கிட்டத்தட்ட கிடைத்திருக்கிறான். கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறான். சீக்கிரமே அவனைச் சிறைப்படுத்தி விடுவோம்... ”

ஏழு பேரும் உற்சாகமாகக் கைதட்டினார்கள். மாரா அதிகமாய் உணர்ச்சி வசப்படாதவன். ஆனால் அன்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினான். “மைத்ரேயன் திபெத்தில் நம் கோயில் இருக்கும் மலையில் இருக்கிறான் என்று தெரிந்தவுடனேயே அவனைப் பிடிக்க நினைத்தேன். நம் தெய்வத்திடம் ஆலோசனை கேட்ட போது முதலில் சம்யே மடாலயத்தில் நம் சக்தி நிலையை மறுபடி ஸ்தாபித்துக் கொள்ள ஆணை வந்தது. அந்த நேரத்தில் எனக்கு அது ஏமாற்றமாகத் தான் இருந்தது. ’இப்போது விட்டால் பிறகு மைத்ரேயன் திரும்பவும் கிடைப்பானா’ என்ற சந்தேகம் நிறையவே இருந்தது. ஆனால் சம்யே மடாலயத்தில் நம் வேலை பூரண நிலையை எட்டிக் கொண்டிருக்கிறது. நம் தெய்வத்தின் அருளால் மைத்ரேயன் இருக்கும் இடமும் தெரிந்து விட்டது. மைத்ரேயனை எப்படி நம் வசம் கொண்டு வருவது என்று யோசித்துக் கொண்டிருந்த போது அதிர்ஷ்டவசமாய் அதற்காகவே உதவ வந்தது போல் லீ க்யாங் களத்தில் நுழைந்திருக்கிறான். அவன் நம் வேலையை நமக்குச் செய்து தருவான்.....”

மாரா புன்னகை செய்தான். ஏழு பேரும் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அவர்களுக்கு அவன் விளக்கப் போகவில்லை. மாறாக அவர்களை அழைத்த காரணத்தை விளக்க ஆரம்பித்தான்.

“இப்போது மிக முக்கியமான கட்டத்தை எட்டி இருக்கிறோம். இந்தியாவிலும், சீனாவிலும் உளவுத்துறையிலும், அதிகாரவர்க்கத்திலும் நம் செல்வாக்கை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகமாய் கவனத்திற்கு வராமல் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான்.....”

அவன் சொல்லி முடித்த போது அவர்களால் அவன் அறிவு கூர்மையை வியக்காமல் இருக்க முடியவில்லை.


ம்யே மடாலயத்தில் அதிகாலையில் தலைமை பிக்கு பிரார்த்தனைக்கு வந்த போது அவர் பத்திரமாய் பூஜை பீடத்தில் வைத்திருந்த மைத்ரேயனின் காவியுடை காணாமல் போயிருந்தது.

  (தொடரும்)

என்.கணேசன்

8 comments:

  1. tension tension. great.

    ReplyDelete
  2. சுஜாதாApril 7, 2016 at 6:49 PM

    என்ன சார் இது. பல்முனை தாக்குதல் ரெடியாகி கொண்டு இருக்கிறது. அக்‌ஷய்க்கு அது தெரியாதபடி நீங்களும் ஏமாற்றுகிறீர்களே. அதகளம்.

    ReplyDelete
  3. anna , vaara vaaram viruviruppai ethikitte poreengale.. enakku ippove full kadhayum padikanum pola irukku .. weekly twice publish panna nalla irukkum :)

    ReplyDelete
    Replies
    1. அருமை சார்! ஒவ்வொரு வாரமும் திகதிக் என்று எங்களை ஒரு பதற்றத்திலேயே வைத்திருக்கின்றீர்கள் சார்!

      Delete
  4. எஸ்.கோபாலன்April 7, 2016 at 9:14 PM

    குமுதம் ஆனந்த விகடனில் வாரா வாரம் காத்திருந்து சில தொடர்கதைகள் படித்த நினைவு வருகிறது. இப்போதெல்லாம் அப்படிப்பட்ட விறுவிறுப்பான கதைகள் வருவதில்லை என்ற குறை உங்களால் தீர்கிறது. கதை அமைப்பும் பாத்திர அமைப்பும் மிக அருமை. சொல்லும் விதம் காட்சியாகவே அமைவது அதை விட சிறப்பு. வாழ்க கணேசன் அவர்களே. தொடர்கிறேன் வியாழன் தோறும்.

    ReplyDelete