சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, January 26, 2015

எக்ஸ்ரே பார்வையின் கூடுதல் சாகசங்கள்!


9. மகாசக்தி மனிதர்கள்

ண்கள் பல அடுக்குகளாக மூடியிருந்த போதிலும் சபையினர் ஒரு புத்தகத்தில் இருந்து குறிப்பிட்ட பகுதிகளைக் காட்டிய போது அந்தப் பகுதிகளைப் படித்துக் காட்டிய குடா பக்ஸ் அடுத்ததாக யாராவது மேடைக்கு வந்து மேடையில் இருக்கும் கரும்பலகையில் ஏதாவது வாக்கியம் ஒன்றை எழுதச் சொன்னார்.

ஒருவர் எழுந்து சென்று கரும்பலகையில் ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் எழுதினார். எழுதி விட்டு “இதைப் படித்துக் காட்ட முடியுமா?என்று அந்த நபர் கேட்க குடா பக்ஸ் சிரித்துக் கொண்டே அதைப் படித்துக் காட்டியது மட்டுமல்லாமல் அவர் எழுதியதன் மீதே அப்படியே எழுதியும் காட்டினார். எழுதிய எழுத்துகளின் மீது அப்படியே எழுதிக் காட்டுவது என்பது கண்கள் உதவியில்லாமல் எப்படி சாத்தியமாகும் என்று எல்லோரும் வியந்து போனார்கள்.

அடுத்ததாக வேறு ஒருவர் வந்து வேறொரு வாக்கியத்தை அந்தக் கரும்பலகையில் எழுதினார். அதையும் அப்படியே ஒவ்வொரு எழுத்தின் மீதும் எழுதிய குடா பக்ஸ் இரண்டாமவர் எழுதிய ஆங்கில வார்த்தையில் ஓரிடத்தில் ஐ எழுத்தின் மீது புள்ளி விடுபட்டிருந்ததை சுட்டிக் காட்டி அதைச் சரி செய்து எழுதினார்.

பிறகு “இங்கிருப்பவர்களில் யாருக்காவது ஆங்கிலம் அல்லாமல் வேறு ஒரு அன்னிய மொழி தெரிந்திருந்தால் அதையும் இந்தக் கரும்பலகையில் எழுதலாம்என்று அழைப்பு விடுத்தார்.    
ஒருவர் மேடைக்கு வந்து கரும்பலகையில் அரபு மொழியில் எழுதி விட்டுப் போனார். அரபு மொழியில் இடமிருந்து வலமாக எழுதுவதில்லை. வலமிருந்து இடமாகத் தான் எழுதுவார்கள். அரபு மொழியில் எழுதிய நபரும் அப்படித்தான் எழுதினார். அதே போல குடா பக்ஸும் வலமிருந்து இடமாக அரபு எழுத்துகளின் மீது அப்படியே மேல் எழுதிக் காட்டி சபையினரை திகைப்பின் உச்சத்திற்கே போக வைத்தார்.

தெரியாத மொழி எழுத்துகளின் மேல் அப்படியே எழுத முடிவது கண்களின் உதவியில்லாமல் எப்படி சாத்தியம்? என்று சபையினரைப் போலவே வின்செண்ட் ஜே. டேக்சின்ஸ்கீயும் திகைத்தார்.  

பின் தன் கண்ணைச் சுற்றிக் கட்டி இருந்த கட்டுக்களைப் பிரிக்க வேறு இரு ஆட்களை வரச் சொன்னார். ஒவ்வொரு கட்டவிழ்ப்பின் போதும் அவர்கள் இருவரும் கண்களைச் சுற்றி கட்டி இருந்த கட்டுக்கள் ஏதாவது விதத்தில் விலகி இருக்கின்றனவா என்று உறுதிபடுத்திக் கொண்டே தான் பிரித்தார்கள். அவர்களாலும் கட்டுகள் முழுமையாகவே இருந்திருக்கின்றன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது.

கடைசியில் கண்களை மறைந்திருந்த மாவுக்கட்டில் கூட அவருடைய மூடிய கண்களின் அச்சுகளை சரிபார்க்க குடா பக்ஸ் கூறினார். ஆர்வத்துடன் சபையினர் அதையும் பார்த்தார்கள். மூடிய விழிகளின் அச்சுக்கள் கூட ஏமாற்று வித்தையின் அறிகுறிகளைக் காட்டாமல் சரியாக இருந்தன. சபையினர் அனைவரும் முழு திருப்தி அடைந்தனர்.

ஒருவர் குடா பக்ஸைக் கேட்டார். “கண்களால் அல்லாமல் உங்களால் எப்படிப் பார்க்க முடிகிறது?


உள்மனதைக் குவிப்பதன் மூலம் பார்வையின் சூட்சும சக்தியை எளிதாகப் பெற்று விட முடிகிறது. எனவே என்னால் பார்க்க முடிவதன் ரகசியம் உள் மனதை ஒன்றுபடுத்திக் குவிப்பதில் தான் இருக்கிறதுஎன்று குடா பக்ஸ் கூறினார்.

சாதாரணமாய் படிக்கையில் கண்ணாடியின் உதவியில்லாமல் படிக்க முடியாத குடா பக்ஸ் கண்களை பல அடுக்குகளால் கட்டிய பிறகும் பார்க்க முடிவது அகசக்தியின் உதவியால் தான் என்கிற போது புற உறுப்புகளின் பலவீனங்கள் அகசக்தியால் பெறப்படும் சக்திகளில் இருப்பதில்லை என்பது உறுதியாகிறது அல்லவா?

குடா பக்ஸ் மேலும் சொன்னார். “என் முதுகுத் தண்டு மூன்று இடங்களில் துண்டாகி இருக்கிறது. மருத்துவர்கள் நான் இனி எப்போதும் நடக்க முடியாது என்று கூறினார்கள். ஆனால் நான் என் உள்மனத்தை குவிப்பின் மூலம் அதைக் குணப்படுத்திக் கொண்டேன். எனக்கு இப்போது நடப்பதில் எந்த பிரச்னையும் இல்லை

அவருக்கு இப்போது நடப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்பது பார்வையாளர்கள் அனைவருக்கும் தெளிவாகவே தெரிந்தது. முதுகுத் தண்டு உடைந்தது பற்றி யாரும் எழுதவோ, ஆராயவோ இல்லை என்பதால் அந்தத் தகவலின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள நம்மால் முடியவில்லை.

இந்த வித்தையைப் பயன்படுத்தி குருடர்களால் பார்க்க முடியுமா?என்று ஒருவர் கேட்டார்.

“ஒரு முறை அது சாத்தியம் என்று நானே சொல்லி இருந்தேன். ஆனால் அது தவறு என்பது இப்போது புரிகிறது. அது குருடர்களுக்கு சாத்தியம் இல்லைஎன்றார் குடா பக்ஸ்.

தவறாகச் சொன்னதை ஒத்துக் கொண்டு திருத்திக் கொண்டு அவர் சொன்னதும் ஒரு ஏமாற்றுப் பேர்வழியின் செய்கையாக வின்செண்ட் ஜே. டேக்சின்ஸ்கீக்குத் தெரியவில்லை.  

“இதை ஒருவரால் கற்றுக் கொள்ள முடியுமா?என்று ஒருவர் கேட்டார்.

“முடியும்என்று குடா பக்ஸ் அழுத்தமாகச் சொன்னார். “கவனக் குவிப்பை நம்மிடம் அதிகப்படுத்திக் கொள்ள ஆரம்பத்தில் ஒரு எரியும் மெழுகுவர்த்தியில் தீயிற்கும் மெழுகுவர்த்திக்கும் இடையே உள்ள தூரத்தை உற்றுப் பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் சில வினாடிகள் அப்படிச் செய்யுங்கள். போகப் போக அந்த நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அதன் அற்புத விளைவுகளைக் காண சுமார் இருபது வருடங்கள் தேவைப்படும்.

யாராவது விரும்பினால் அவர்களுக்கு இலவசமாகக் கற்றுத் தர தான் தயாராய் இருப்பதாக குடா பக்ஸ் சொன்னார். ஆனால் யாரும் கற்றுக் கொள்ள முன் வரவில்லை. எத்தனை பெரிய சக்தியாக இருந்தாலும் அதைப் பெற இருபது வருடங்கள் எரியும் மெழுகுவர்த்தியை உற்றுப் பார்க்க யாரும் தயாராய் இருக்கவில்லை.

வின்செண்ட் ஜே. டேக்சின்ஸ்கீ கூட அந்த சக்தியைப் பெற பெரிதும் விரும்பினாலும் குறைவான காலத்தில் அதைப் பெற விரும்பினார். அவர் அந்த நிகழ்ச்சியிலிருந்து திரும்பி வந்த பிறகு கூட குடா பக்ஸின் அபூர்வ சக்திகள் பற்றியே அதிகம் சிந்தித்தார். இரண்டு வாரங்கள் கழிந்து குடா பக்ஸ் நடத்திய வேறொரு நிகழ்ச்சிக்குச் சென்று பார்த்தார்.

வந்திருந்த நபர்கள் பழைய ஆட்கள் தானா, காட்டப்பட்ட புத்தகம் அதே புத்தகம் தானா என்றெல்லாம் வின்செண்ட் ஜே. டேக்சின்ஸ்கீ கவனத்துடன் பார்த்தார். இந்த முறை பார்வையாளர்கள் பழையவர்கள் அல்ல, புத்தகமும் அதே புத்தகம் அல்ல, எல்லாமே புதியதாகத் தான் இருந்தது. இந்த முறையும் சந்தேகப்பட எந்தக் காரணமும் இருக்கவில்லை.  வின்செண்ட் ஜே. டேக்சின்ஸ்கீ இப்போது  குடா பக்ஸின் அபூர்வ சக்தியை முழுமையாக நம்பினார்.

வில்லியம் ராஷ்ஷர் (William Rauscher) என்ற பிரபல எழுத்தாளர் ‘மனதைப் படிப்பவர்கள்’ (The Mind Readers) என்ற புத்தகத்தில் குடா பக்ஸ் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதில் ஜுலை 1952 ல் அர்கோசி (Argosy Magazine) என்ற பத்திரிக்கையில் குடா பக்ஸிடம் இரும்புத் திரை ஒன்றின் பின்னால் இருப்பதையும் உங்களால் படிக்க முடியுமா என்று ரொவால்டு டால் (Roald Dahlஎன்ற பத்திரிக்கையாளர் கேட்டு ஆரம்பித்த ஒரு புதிய நிகழ்ச்சி பற்றி எழுதி இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார். அந்த சுவாரசிய நிகழ்ச்சியையும், குடா பக்ஸ் செய்து காட்டிய வேறு விதமான அபூர்வ நிகழ்ச்சிகளையும் பார்ப்போமா?

(தொடரும்)
-       என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 7.11.2014


3 comments:

  1. 20 வருடம்...! ஒரு வாரம் என்றாலே ஓடிப் போய் விடுவார்கள்... அவசர உலகம்...!

    ReplyDelete
  2. Dear friends, please see this video. This will give more proof to the above message.
    http://sooperhumans.blogspot.in/2015/01/this-is-amazing-gift-given-by-god-to.html

    Watch fully. The video is in hindi.

    ReplyDelete