சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, January 19, 2015

கண்களில்லாமல் எக்ஸ்ரே பார்வை!


8.மகாசக்தி மனிதர்கள்

பூர்வ மகாசக்தி வேறொன்றைப் பெற்றிருந்த இன்னொருவர் குடா பக்ஸ் (Kuda Bux). 1905 ஆம் ஆண்டு காஷ்மீரத்தில் பிறந்த இவர் 1935ல் இங்கிலாந்தில் குடியேறி, பிற்காலத்தில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்.  இவர் கண்களை மூடித் துணியால் எத்தனை இறுக்கமாகக் கட்டி விட்டாலும் கண்களின் துணையில்லாமலேயே பொருள்களைக் காணும் திறத்தையும், எழுதப்படிக்கும் திறத்தையும் பெற்று உலக நாடுகளில் மிகப் பிரபலமானார். அமெரிக்காவும் இவர் பக்கம் தன் கவனத்தைத் திருப்பியது. இவருடைய அபூர்வ சக்தியால் கவரப்பட்டு இவரை மையமாக வைத்து ‘குடா பக்ஸ்-இந்திய யோகி” (Kuda Bux, Hindu Mystic) என்ற திரைப்படத்தையும் ஹாலிவுட்டில் எடுத்தார்கள் என்றால் இவர் அடைந்த புகழைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.


இவரைப் பற்றி புத்தகங்களும் வெளியாகி உள்ளன, உலக அளவில் பத்திரிக்கைகளிலும் எழுதி இருக்கிறார்கள். அபூர்வ சக்திகளில் ஆர்வம் அதிகம் கொண்ட வின்செண்ட் ஜே. டேக்சின்ஸ்கீ (Vincent J. Daczynski) என்ற எழுத்தாளர் இவர் சக்திகள் கண்ட தன் நேரடி அனுபவத்தைக் கூறி இருப்பதை முதலில் பார்ப்போம்.

வின்செண்ட் ஜே. டேக்சின்ஸ்கீ இவரைச் சந்தித்தது 1958 ஆம் ஆண்டு அமெரிக்காவில், மன்ஹட்டன் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில். நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே மேஜிக் தந்திரங்களுக்கும் உண்மையான அபூர்வ சக்திக்கும் இடையே பெரிய வித்தியாசம் உண்டு என்பதை குடா பக்ஸ் விளக்கினார். மேஜிக் தந்திரங்கள் பார்வையாளர்களுக்குத் தெரியாத ரகசிய முன்னேற்பாடுகளாலும், மேஜிக் நடத்திக் காட்டுபவரின் அதிவேகமான சாமர்த்தியச் செயல்களாலும் தான் திறமையாக நடத்திக் காட்டப்படுகின்றன என்றும் அபூர்வ சக்திகள் அப்படியல்ல என்றும் குடா பக்ஸ் விவரித்தார். உதாரணத்திற்கு சீட்டுக்கட்டு வித்தைகள் சில செய்து காட்டினார்.

ஒரு சீட்டுக்கட்டை பார்வையாளர்களிடம் தந்து அவர்களிடம் சில சீட்டுகளை எடுத்துப் பார்க்கச் சொன்னார். பின் அந்த சீட்டுகளை அதிலேயே வைத்து விடச் சொன்னார். அந்தச் சீட்டுக் கட்டை அவர்களிடம் இருந்து வாங்கி அதை நன்றாகக் குலுக்கி கடைசியில் பார்வையாளர்கள் எடுத்த சீட்டுகளைப் பிரித்தெடுத்துக் காட்டினார். பார்வையாளர்கள் வியந்த போது இது அபூர்வ சக்தி அல்ல, கைஜாலமே என்றும் விளக்கி விட்டு உண்மையான அபூர்வ சக்தியை அவர்களுக்குக் காட்டப் போவதாகச் சொல்லி விட்டு நிகழ்ச்சியின் முக்கியப் பகுதியை ஆரம்பித்தார்.

பேஸ் பால் அளவு இரண்டு மாவு உருண்டைகளைப் பிசைந்து தயாரித்த அவர் பார்வையாளர்களில் இருவரை தன்னருகே வரச் சொன்னார். இரு இளைஞர்கள் எழுந்து சென்றார்கள். அந்த இரு மாவு உருண்டைகளையும் ஒவ்வொரு அங்குல பருமனில், ஆறங்குல நீளத்தில் தட்டையாகத் தட்டி அவருடைய கண்கள் மேல் வைத்து சிறிய இடைவெளி கூட இல்லாதபடி ஓரங்களை ஒட்டி விடச் சொன்னார். சற்று தயங்கி விட்டு அவர்களும் அவர்  சொன்னபடியே படியே செய்தார்கள். 

வின்செண்ட் ஜே. டேக்சின்ஸ்கீ மிக அருகில் அமர்ந்து கொண்டு கூர்மையாக இந்த நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். குடா பக்ஸின் கண்களைச் சுற்றி போடப்பட்டிருந்த மாவுக்கட்டு அவர் கண்களைத் திறக்க வழியில்லாமல் செய்து விட்டிருப்பது தெளிவாகவே தெரிந்தது.

குடா பக்ஸ் அந்த இரு இளைஞர்களிடம் அங்கிருந்த இரண்டு பருத்தித் துணி மடிப்புகளை எடுத்து அந்த மாவுக்கட்டின் மீது வைக்கச் சொன்னார். அந்த பருத்தித் துணி மடிப்புகள் ஆறு அங்குல நீளம், நான்கு அங்குல அகலம்,  ஒரு அங்குல பருமனில் இருந்தன. அவர் சொன்னபடியே அந்த இளைஞர்கள் அவர்கள் அந்தத் துணிமடிப்புகளையும் மாவுக்கட்டின் மீது வைத்தார்கள்.

பின் அவர் கட்டளைப்படி பெரிய டேப் எடுத்து அந்த துணிமடிப்புகளையும் சேர்த்துக் கட்டினார்கள். மறுபடி டேப்பால் குறுக்காகவும் கட்டி எந்த விதத்திலும் அந்தக்கட்டு விலகி விடாதபடியும், சிறிய இடைவெளி கூட இருந்து விடாதபடியும் பார்த்துக் கொண்டார்கள். ஒருவேளை அந்த மாவுக்கட்டில் இடைவெளி இருந்திருந்தால் கூட அதற்கு மேல் இருந்த துணிமடிப்புகள், அதற்கு மேல் இருந்த டேப் எல்லாம் தாண்டி பார்க்க வழியே இல்லை. ஆனாலும் அதுவும் போதாதென்று மூன்று அங்குலம் பத்து அடி நீளம் உள்ள கருந்துணிகளைக் கொண்டு கண்களைச் சுற்றித் தலையின் பின் பக்கம் கட்டிவிடவும் குடா பக்ஸ் சொன்னார். அந்த இளைஞர்கள் அந்த கருப்பு துணிகளை இறுக்கமாக அவர் சொன்னபடியே கட்டி முடிச்சு போட்டார்கள்.

இப்போது அவர் முகத்தில் மூக்கின் துவாரங்கள் தவிர மேற்பகுதி முழுவதும் முற்றிலும் மூடப்பட்டிருந்தது. இப்போதும் யாருக்காவது சந்தேகம் வந்துவிடக் கூடும் என்றவர் ஒரு கருப்புப் பையையும் தலைகீழாக அவர் தலை வழியே போட்டு முகவாய்க்கட்டையில் முடிச்சு போடச் சொன்னார்.   மூச்சு விடுவதே அவருக்கு கஷ்டமாகத் தானிருந்திருக்கும். இந்த நிலையில் எந்த விதத்திலும் அவர் கண்களால் பார்க்க வழியே இல்லை. 

அங்குள்ள மரப்பெட்டியில் பல நிறங்களில் நிறைய பலூன்கள் இருந்தன. கூட்டத்தில் இருப்பவர்களில் யாராவது வந்து பலூன்களை எடுத்தால் எடுக்கும் பலூன்களின் நிறத்தை சரியாகச் சொல்வேன்என்று குடா பக்ஸ் சொன்னார்.

மஞ்சள் நிற உடைகள் அணிந்திருந்த ஒரு இளம் பெண் தன் கைகளை உயர்த்தினாள். குடா பக்ஸ் மிகச்சரியாக அவளிருக்கும் பக்கம் கையை நீட்டி மேடைக்கு வரச் சொன்னார்.  அந்தப் பெண் திகைப்புடன் முன்வர “உனக்கு  மஞ்சள் நிற ஆடை நன்றாகப் பொருந்துகிறதுஎன்று பாராட்டினார். அந்தப் பெண்ணின் வியப்பு அதிகமாகியது. பின் அவள் சில பலூன்களைத் தேர்ந்தெடுத்துக் காட்டினாள். அந்தப் பலூன்களின் நிறங்களை குடா பக்ஸ் பிழையில்லாமல் சொன்னார்.

அடுத்ததாக ஒரு ஊசியையும் நூலையும் எடுத்து சபைக்குக் காட்டி விட்டு அனைவரும் ஆச்சரியப்படும் வண்ணம் அந்த ஊசியில் நூலைக் கோர்த்துக் காட்டினார்.

அடுத்ததாக அவர் சபையில் இருப்பவர்களில் யாரிடமாவது புத்தகம் இருக்கிறதா என்று கேட்டார். ஒரு பெண் தன்னிடம் இருப்பதாகச் சொன்னாள்.

“பொதுவாக எனக்கு கண்களை உபயோகித்துப் படிக்க கண்ணாடி தேவை.என்று தன் சட்டைப் பையில் வைத்திருந்த கண்ணாடியைக் காண்பித்த குடா பக்ஸ் அந்தப் பெண் அருகே வந்து சொன்னார். “ஆனால் நீ இந்தப் புத்தகத்தைப் பிரித்து ஏதாவது பக்கத்தைக் காட்டு. நான் கண்ணாடி இல்லாமலேயே அதைப் படித்துக் காட்டுகிறேன்

அந்தப் பெண் அந்தப் புத்தகத்தை எடுத்துப் பிரித்து ஒரு பக்கத்தைக் காட்ட குடா பக்ஸ் அந்தப் பெண் காட்டிய பகுதியை சிறிதும் சிரமம் இல்லாமல் படித்துக் காட்டினார். எல்லோரும் சூழ்ந்து நின்று கொண்டு அவர் படித்ததை சரி பார்த்தார்கள். சபையில் இருந்த அனைவருக்கும் அப்படி புத்தகத்தைப் பிரித்துக் காட்டும் வாய்ப்பு தரப்பட்டது. அவர் அவர்கள் ஒவ்வொருவர் தேர்ந்தெடுத்துக் காட்டிய பகுதிகளையும் அனாயாசமாகப் படித்துக் காட்டினார்.

அனைவரும் அவர் படித்ததை பெரு வியப்புடன் பார்த்தார்கள். இது எப்படி சாத்தியம். அந்தப் புத்தகம் தந்த பெண் அவர் முன்பே ஏற்பாடு செய்த பெண்ணாய் இருந்திருந்தால் கூட அந்தப் புத்தகத்தை அவர் முழுவதும் மனப்பாடம் செய்து வைத்திருக்க முடியுமா என்ன? என்ற எண்ணம் அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த வின்செண்ட் ஜே. டேக்சின்ஸ்கீ மனதில் ஓடியது.

இதற்கெல்லாம் உச்சாணிக் கொம்பாய் இன்னொரு சாகசத்தை அந்த சபையில் குடா பக்ஸ் செய்து காட்டினார். அது என்ன என்று பார்ப்போமா?

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 31-10-2014


3 comments:

  1. ஆஹா... இப்படி ஒரு மனிதரா...
    வியக்க வைக்கிறது.

    ReplyDelete
  2. வியப்பை தவிர வேறு ஒன்றுமில்லை...

    அடுத்து... ஆவலுடன்...

    ReplyDelete
  3. நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    ReplyDelete