சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 25, 2014

பத்திரகிரியாரும் மெய்ஞானப் புலம்பலும்!

அறிவார்ந்த ஆன்மிகம்-47

தினெட்டு சித்தர்களில் ஒருவர் பத்திரகிரியார். பத்ருஹரி என்ற பெயரில் உஜ்ஜயினியில் அரசராக இருந்த அவர் துறவியானது ஒரு சுவாரசியமான கதை. துறவியான பட்டினத்தார் யாத்திரை ஒன்றின் போது உஜ்ஜயினியில் மஹாகாளேஸ்வரர் ஆலயத்தில் இறை தரிசனத்தை முடித்து விட்டு ஊருக்கு வெளியே வந்து அங்கிருந்த காட்டுப் பிள்ளையார் கோயிலில் தியானத்தில் அமர்ந்திருந்தார்.

உஜ்ஜயினி அரண்மனையில் மிகுந்திருந்த செல்வத்தைக் கவர்வதற்காகச் செல்லும் முன் அந்தக் காட்டுப் பிள்ளையாரை வணங்கி விட்டுச் சென்றிருந்த காட்டுக் கொள்ளையர்கள் வெற்றிகரமாக அரண்மனைச் செல்வத்தைக் கொள்ளையடித்து விட்டு வந்து காணிக்கையாக அதில் ஒரு விலை உயர்ந்த முத்துமாலையினை பிள்ளையார் மீது வீசி விட்டுப் போனார்கள்.  அந்த முத்துமாலை அங்கே தியானம் செய்து கொண்டிருந்த பட்டினத்தாரின் கழுத்தில் விழுந்தது. தியானத்தில் மூழ்கி இருந்த பட்டினத்தார் அதையும் அறியாமல் இருந்தார். கொள்ளையரைத் துரத்தி வந்த அரண்மனைக் காவலர்கள் பிள்ளையார் கோயிலில் கழுத்தில் முத்து மாலையுடன் பட்டினத்தார் வீற்றிருந்த்தைப் பார்த்தார்கள். அவரிடம் முத்துமாலை எப்படிக் கிடைத்தது என்று கேட்டார்கள்.  நடந்தது எதையும் அறியாத பட்டினத்தார் பதில் சொல்ல முடியாமல் விழித்தார்.  காவலர்களோ  இவரே கொள்ளைக் கூட்டத் தலைவராக இருக்க வேண்டும்,  இப்போது ஏதும் அறியாதது போல் நடிக்கிறார் என நினைத்து அரசரிடம் சென்று நடந்ததைச் சொன்னார்கள்

மன்னர் பத்ருஹரியும் வந்து விசாரித்தார். பட்டினத்தார் பதில் ஏதும் சொல்லவில்லை. உடனே மன்னருக்குச் சினம் ஏற்பட்டு  “கள்வனைக் கழுவில் ஏற்றுக!என்று ஆணையிட்டார். கழுமரம் தயார் செய்யப் பட்டது.  பட்டினத்தாரும் கழுவில் ஏற்றப்பட்டார். கழுவில் ஏற்றப்பட்ட நிலையிலும் கலங்காத பட்டினத்தார்  விதியின் வலிமையை எண்ணி என் செயலாவது யாதொன்றுமில்லை, இனி தெய்வமே உன் செயலே என்று உணரப் பெற்றேன்எனத் தொடங்கும் பாடலைப் பாடக் கழுமரம் தீப்பற்றி எரிந்தது.  இதைக் கண்ட மன்னர் பட்டினத்தாரின் மகிமையை உணர்ந்து அறியாமல் இழைத்த தன் பிழை பொறுக்குமாறு அவரிடம் மன்னிப்புக் கேட்டார்.  

ஞான திருஷ்டியால் மன்னர் துறவுக்கான முழு பக்குவத்தோடு காத்திருப்பதை அறிந்த பட்டினத்தார் மன்னர் அறியாத மேலும் பல உள்ளன என்றும் மன்னரின் மனைவியே கணவருக்கு துரோகம் செய்வதையும் மன்னர் அறியவில்லை என்றும் தெரிவித்தார். உடனே அதை உறுதிப்படுத்திக் கொண்ட மன்னர் அரச வாழ்க்கையைத் துறந்து பட்டினத்தாரின் சீடனாக மாறி அவரைப் பின் தொடர்ந்தார். பட்டினத்தாரும், பத்திரகிரியாரும், திருவிடைமருதூர் சென்றடைந்தார்கள்.

உஜ்ஜயினி மகாராணி கணவர் பிரிந்தவுடன் தன் குற்றத்திற்காக வருந்தி இறந்து போய் அடுத்த பிறவியில் நாயாகப் பிறந்து பத்திரகிரியாரையைச் சுற்றிச் சுற்றி வருகிறாள். அங்கே கோபுர வாசலில் பிச்சை எடுத்து தாமும் உண்டு தம் குருவுக்கும் உணவு கொடுத்து வந்த. தம்மைச் சுற்றி வந்த பத்திரகிரியார் அந்த நாய்க்கும் உணவிட்டு வந்தார். அப்போது ஒரு நாள் பட்டினத்தாரிடம் ஒரு துறவி வந்து பிட்சை கேட்க,  பட்டினத்தார் சிரித்தபடி  “நானோ சந்நியாசி, என்னிடம் கொடுக்க ஏதுமில்லை. அதோ இருக்கிறானே என் சீடன், அவன் சம்சாரி. சோற்றுச் சட்டி மட்டுமில்லாமல் கூடவே ஒரு நாயையும் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். அவனைக் கேளுங்கள்.என்று கை காட்டி விட்டார்.

இதைக் கேட்ட பத்திரகிரியார் ஆஹா, துறவியாக மாறிய என்னை இந்தச் சோற்றுச் சட்டியும், நாயும் சம்சாரியாக அல்லவா ஆக்கிவிட்டன.  என்று வருந்தி சோற்றுச் சட்டியைத் தூக்கிப் போட்டு உடைத்து விடுகிறார். அப்போது சிதறிய சட்டித்துண்டு ஒன்று நாயின் தலையில் வேகமாய்ப் படவே நாய் இறந்து விடுகிறது. அதைக் கண்ட பத்திரகிரியார் திகைத்து நிற்க பட்டினத்தார் தெளிவு படுத்துகிறார். பத்திரகிரியாரின் மனைவியே அந்த நாய் எனவும், இப்போது அவள் பாவம் தீர்ந்து விட்டதென்றும், அடுத்த பிறவியில் நல்லதொரு அரசகுடும்பத்தில் பிறந்து மீண்டும் நாடி வருவாள்  என்றும் சொல்கிறார்.

அதன்படியே தன் தவறை உணர்ந்து வருந்திநாய்ப் பிறவி எடுத்து தன் பாவத்தைக் கழித்த மகாராணி காசிராஜனுக்கு மகளாய்ப் பிறக்கிறாள். பேரழகு வாய்ந்த பெண்ணாள் வளர்கிறாள். அவளைத் திருமணம் செய்து கொள்ள மன்னாதி மன்னர்களும், இளவரசர்களும் போட்டி போட்டனர். காசிராஜனும் மகளுக்கு மணமகன் தேடவேண்டிச் சுயம்வரம் நடத்த ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தான். ஆனால் அந்தப் பெண்ணோ சுயம்வரத்திற்கு ஒப்புக்கொள்ள மறுத்தாள். தான் வேறொருவருக்குச் சொந்தமானவள் என்றாள். திருவிடைமருதூரில் ஈசனோடு ஐக்கியமாகி இருக்கும் பத்திரகிரியாரைக் குறித்துச் சொல்லி அவரிடம் தன்னைச் சேர்ப்பிக்கச் சொல்கிறாள். மன்னன் மகளை அழைத்துக் கொண்டு திருவிடைமருதூர் வந்து சேர்கிறான். பத்திரகிரியாரைத் தேடிக் கண்டு பிடிக்கிறான். தன் பெண்ணை அவரிடம் ஒப்படைத்து ஏற்றுக் கொள்ளுமாறு கூறுகிறான்.

காசிராஜன் மகளும் தங்களின் அடிமையாகிய இந்த நாய் மீண்டும் தங்கள் திருவடி தேடி வந்திருக்கிறது என்று அவர் பாதம் பணிந்தாள். அவளுக்குத் தன் பூர்வ ஜன்ம நினைவுகள் மறையவே இல்லை என்பதைக் கண்ட  பத்திரகிரியார் இது என்ன புதுத் தொல்லை என எண்ணி தன் குருநாதரான பட்டினத்தாரிடம் போய் இந்த பழைய பந்த சிக்கலில் இருந்து தன்னை மீட்க வேண்டிக் கொண்டார். பட்டினத்தாரும்  ஈசன் திருவருளை நினைத்து வேண்ட அப்போது தோன்றிய பெரும் ஜோதியில் அந்தப் பெண்ணும் பத்திரகிரியாரும் ஐக்கியம் ஆனார்கள்.

பத்திரகிரியாரின் மெய்ஞானப் புலம்பல் என்ற பாடல்கள் மிகவும் பிரசித்தமானவை. அவை மெய்ஞானம் குறித்த ஆன்மீகத் தேடலை வெளிப்படுத்துவதோடு மெய்ஞானம் அடையும் வழிகளையும் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிற பாடல்கள். ‘எக்காலம்?என்று முடியும் இருநூற்றிற்கும் மேற்பட்ட பாடல்களில், சிலவற்றைப் பார்ப்போம்.

ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்?
கூறரிய நால் வேதம் கூப்பிட்டும் காணாத
பார ரகசியத்தைப் பார்த்திருப்பது எக்காலம்?
பற்றற்று நீரில் படர்தாமரை இலைபோல்
சுற்றத்தை நீக்கி மனம் தூரநிற்பதெக்காலம்?

புல்லாய் விலங்காய் புழுவாய் நரவடிவாய்
எல்லாப் பிறப்பின் இருள் அகல்வது எக்காலம்?
நீரில் குமிழிபோல் நிலையற்ற வாழ்வை விட்டுநின்
பேரின்பக் கருணை வெள்ளம் பெருக்கெடுப்பது எக்காலம்?
கள்ளக் கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து இங்கு
உள்ளக் கருத்தை உணர்ந்திருப்பது எக்காலம்?
அடர்ந்த மனக்காட்டை அஞ்செழுத்தாம் வாளாலே
தொடர்ந்து தொடர்ந்து வெட்டிச் சுடுவது இனிஎக்காலம்?
காந்தம் வலித்து இரும்பைக் கரத்திழுத்துக் கொண்டதுபோல்
பாய்ந்து பிடித்திழுத்துன் பாதத்தில் வைப்பது எக்காலம்?
உள்ளம் அறியாது ஒளித்திருந்த நாயகனை
கள்ள மனம் தெளிந்துகாண்பது இனி எக்காலம்?
என்னை விட்டு நீங்காமல் என்னிடத்து நீ இருக்க
உன்னை விட்டு நீங்காது ஒருப்படுவது எக்காலம்?


இந்தப் பாடல்களில் ஆன்மிக இலக்கை அடைய எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்கிற அறிவுரை, விருப்பமாக முதல் ஒன்றரை அடிகளில் வெளிப்படுகின்றது. அப்படி இருக்க முடிவது எக்காலம் என்ற ஏக்கத்தையும் அது பிரதிபலிக்கின்றது.

நான் என்ற ஆங்காரத்தை ஏற்படுத்தக் கூடிய ஐம்புலன்களின் ஆதிக்கத்தை அறுத்தல், தாமரை இலை தண்ணீரில் இருந்தாலும் அதனுடன் ஒட்டாது இருப்பது போல பந்தங்களில் இருந்து விலகி இருத்தல், புல்லில் இருந்து மனிதப் பிறவி வரை ஒவ்வொரு பிறவியாக எடுத்து மாயை என்ற இருளில் சிக்குவதிலிருந்து விடுபடுதல், பொய்யான இரவல் வாங்கி வைத்திருக்கும் கருத்துக்களை விட்டு உள்ளத்தின் உண்மையான கருத்தை அறிதல், காந்தம் இரும்பை இழுப்பது போல் இறைவனுடைய திருவடி நம் மனதை இழுத்தல், நம்மில் இருந்து நீங்காமல் உள்ளேயே இருக்கும் இறைவனை அறிந்து மனதளவில் அவனிடம் இருந்து நீங்காமல் இருத்தல் போன்ற ஆன்மிக இலக்கின் பரிமாணங்களை விளக்கிக் கொண்டே போகும் பத்திரகிரியார் பாடல்களில் பக்குவப்பட்ட மனிதனின் அந்தராத்மாவின் கதறலைக் கேட்க முடிகிறது. அந்தப் பாடல்கள் மனிதன் போக வேண்டிய ஞான வழியையும் காட்டுகிறது என்பது ஆன்மிக அன்பர்களுக்கு நற்செய்தி!

-          என்.கணேசன் 

நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம்- 28.01.2014

4 comments:

  1. மனதுக்கு ஆறுதலான பதிவு

    ReplyDelete
  2. nallator pativu.manita samutayam yenrendum tedum onru " kadavul". atai adayum oru "guideline or formula"-tan inta padalkal enru nan nambukiran.

    ReplyDelete
  3. நன்றாக உள்ளது. ஆனால் ஏன் பட்டினட்டார் முதலிலேயே தன் ஞான திருஷ்டியை பயன்படுத்தி திருடர்களை கண்டுபிடிக்கவில்லை?

    ReplyDelete
  4. நல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன சித்தர்கள் பாடலை பல மக்களுக்கு எழுத்து உபதேசமா கொடுக்கும்போது மகான்கள் அருள் நமக்கு உண்டு ஓம் குருவே சரணம்

    ReplyDelete