சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 14, 2014

பரிணாம வளர்ச்சியில் தசாவதாரம்


அறிவார்ந்த ஆன்மிகம்-44

ரிணாமக் கோட்பாட்டின் தந்தை எனப்படுபவர் சார்லஸ் டார்வின்.  ஆரம்பத்தில் உயிரினங்கள் நீரினில் உருவாகின என்றும் காலப் போக்கில் பல்வேறு மாற்றங்களை அடைந்து கொண்டே சென்று முடிவில்  மனிதன் என்ற நிலையை அடைந்தது என்பது டார்வினின் கோட்பாட்டின் சுருக்கம். இந்தக் கோட்பாட்டை சார்லஸ் டார்வின் எளிதாக எட்டி விடவில்லை. தன் 22 ஆம் வயதில், 1831 ஆம் ஆண்டு, நண்பர் கேப்டன் ராபர்ட் பிட்ஸ்ராய் உடன் சேர்ந்து HMS Beagle என்ற கப்பலில் தென் அமெரிக்கக் கரையோரமாக தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பயணிக்க கிளம்பினார்.  தற்போது காணவும் கிடைக்காத ஊர்வன, பறப்பன, நடப்பன என எல்லா உயிரினங்களின் எலும்புகளையும் சேகரித்து ஆராய்ந்தார். இரண்டு வருடப் பயணம் ஐந்து வருடப் பயணம் ஆக நீண்டது. இதன் முடிவில் தான் சார்லஸ் டார்வின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையின் முடிவுக்கு வந்தார்.   

உலக அறிஞர்களின் சிந்தனையையும், நம்பிக்கையையும் புரட்டிப் போட்ட கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானதாக இதைச் சொல்லலாம். அப்படிப்பட்ட டார்வினின் கோட்பாடு வெளிவருவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நம் தேசத்தில் பக்தி இலக்கியங்கள் சொல்லும் திருமாலின் தசாவதார வரிசை டார்வினின் கோட்பாட்டை ஒட்டி இருப்பது யோசிக்கத் தக்க சுவாரசியமான விஷயம்.


பக்தியுடன் மட்டுமே பார்க்கையில் விடுபட்டுப் போகும் பல சூட்சும உண்மைகளை நாம் அறிவுபூர்வமாகவும் அலசினால் எளிதில் கண்டு விட முடியும். இனி திருமாலின் அவதாரங்கள் பத்தையும், அவை டார்வின் கோட்பாட்டோடு எப்படி ஒத்துப் போகிறது என்பதையும், பார்ப்போம்.

1.  மச்ச அவதாரம்:  மச்ச என்றால் மீன் என்று பொருள். பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் முதன் முதலில் நீரில் தோன்றியது என்பதே டார்வினின் கண்டுபிடிப்பு. அப்படியே தான் திருமாலின் முதல் அவதாரமான மச்ச அவதாரம் உள்ளது. பிரளய காலத்தில் மச்ச அவதாரம் எடுத்து திருமால் உலகைக் காப்பாற்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.


2. கூர்ம அவதாரம்:  கூர்மம் என்றால் ஆமை என்று பொருள். பரிணாம வளர்ச்சியில் நீர் வாழும் உயிரினம் நீர், நிலம் இரண்டிலும் வாழும் உயிரினமாக மாற்றம் அடையும் என்று உள்ளது. எனவே நீர் நிலம் இரண்டிலும் வாழக்கூடிய ஆமை அதற்கு ஏற்றதாக உள்ளது. பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து கடையும் போது மேரு மலையைத் தாங்கி நிறுத்த திருமால் இந்த கூர்மாவதாரம் எடுத்ததாக புராணங்கள் சொல்கின்றன.
 
3. வராக அவதாரம்: வராகம் என்றால் பன்றி என்று பொருள். பரிணாம வளர்ச்சியின் கொள்கைப்படி நீரிலும் நிலத்திலும் வாழ்ந்து கொண்டு இருந்தவை நிலத்தில் வாழ்பவையாக ஒரு காலக் கட்டத்தில் இருந்தவை முற்றிலும் நிலத்தில் வாழ்பவையாக மாறின என்று சொல்கிறார்கள். அதற்கு ஏற்றபடி, இரணியாசுரன் எனும் அரக்கனிடமிருந்து பூமியை காப்பற்ற திருமால் எடுத்த மூன்றாவது அவதாரமாக வராக அவதாரத்தை புராணங்கள் கூறுகின்றன.  

4. நரசிம்ம அவதாரம் நரனாகிய மனிதனும், சிம்மம் ஆகிய மிருகமும் சேர்ந்த கலவை நரசிம்மம்.  நிலவாழ்பவைகளாக இருந்த விலங்கினம் பரிணாம வளர்ச்சியில் அடுத்த நிலையாக சிந்தனை திறன் பெற்று மனிதன் பாதி, மிருகம் பாதியாக இருந்த தொடக்க நிலையை இந்த அவதாரம் குறிக்கிறது. இரணியன் என்ற அரக்கனை அழித்து உலகைக் காக்கவும், பிரகலாதன் என்ற பக்தனின் நம்பிக்கையை மெய்ப்படுத்தவும் திருமால் எடுத்த இந்த நான்காவது அவதாரத்தில் அவர் மனித உடலும், சிங்கத்தின் முகமும் கொண்டிருந்தார்.

5. வாமன அவதாரம் – பாதி மனிதன், பாதி மிருகம் என்ற நிலையைத் தாண்டி முழு மனிதனாக மாறுவது பரிணாம வளர்ச்சியின் அடுத்த நிலை. இதில் மனிதன் முழு வளர்ச்சி அடைந்து விடாத குள்ள உருவமாக வாமனர் காட்சி அளிக்கிறார். அசுரர்களின் அரசனான மகாபலியின் ஆதிக்கத்தில் இருந்து தேவர்களைக் காக்கவும், மகாபலியின் கர்வத்தை அழிக்கவும் திருமால் எடுத்த ஐந்தாவது அவதாரம் இது.

6. பரசுராம அவதாரம் ஆதிமனிதன் மிருகங்களையும் எதிரிகளையும் மூர்க்கமாகத் தாக்கி தன் சக்தியை ஸ்திரப்படுத்திக் கொண்டது பரிணாம வளர்ச்சியின் அடுத்த நிலை. தசவதாரத்தின் ஆறாவது அவதாரமான பரசுராம அவதாரத்தில் திருமால் மிகவும் மூர்க்க மனிதராக சித்தரிக்கப்பட்டுள்ளார்.. கோடாரி ஆயுதத்தினை சிவனிடமிருந்து பெற்ற மனிதராக பரசுராமர் புராணங்களில் குறிப்பிடப்படுகிறார். இந்த அவதாரத்தில் பரசுராமர் போர்க்குணம் கொண்டவராகக் காட்டப்படுகிறார்.

7. இராம அவதாரம் –  காட்டிலும், நாட்டிலுமாக மாறி மாறி வசித்தது மனிதனின்  அடுத்த பரிணாம வளர்ச்சி நிலை. இராவணனைக் கொல்ல திருமால் எடுத்த இராமாவதாரத்தில் இராமர் அப்படியே காட்டிலும், நாட்டிலும் வாழ்ந்து வருகிறார். இந்த அவதாரத்தில் அறிவு கூர்மைக்கும், அசாத்திய பலத்திற்கும் பெயர் போன அனுமன் என்ற முக்கிய கதாபாத்திரம் மூலம் குரங்கினத்தின் அபார வளர்ச்சியும் சுட்டிக் காட்டப்படுகிறது.

(நீர் வாழ்வன, நீர்-நிலம் வாழ்வன, நிலம் வாழ்வன, மிருகம்-மனிதன் கலந்த இனம் என்று படிப்படியாய் தசாவதாரப் பரிணாம வளர்ச்சியில் அடுத்ததாக முழு மனிதன் என்று காட்டப்பட்டாலும், டார்வினின் குரங்கின் அபார வளர்ச்சி பின் மனிதனாக முடிந்தது என்னும் கோட்பாடு வேறு விதத்தில் இராமாவதாரத்தில் சுட்டிக் காட்டப்படுகிறது. இதில் மனிதனான இராமனுக்கு இணையாகவும் உதவியாகவும் நடந்து கொள்ளும் சுக்ரீவன், அனுமன் போன்ற கதாபாத்திரங்களில் குரங்கினங்களின் மிக உயர்ந்த நிலை வெளிப்படுகிறது.)

8. பலராம அவதாரம்: காட்டை முழுமையாக விட்டு விட்டு நாட்டில் வாழ ஆரம்பித்த மனிதன் தன் பசியின் தேவையை தீர்த்துக் கொள்வதற்காக உழுது பயிரிட்டு விவசாயம் செய்து வாழ்ந்தான் என்பது மனிதனின் அடுத்த பரிணாம வளர்ச்சி நிலை. திருமாலின் எட்டாவது அவதாரமான பலராமர் விவசாயம் செய்வதைக் குறிக்கும் விதத்தில் கலப்பையைத் தன் தோளில் சுமந்து கொண்டிருக்கிறார்.


9. கிருஷ்ண அவதாரம்: விவசாயம் செய்வதோடு கால்நடைகளையும் மேய்த்து வாழும் மனிதன் பரிணாம வளர்ச்சியின் அடுத்தக் கட்டம். இராம அவதாரத்தில் முழுமையான மனிதன், அதாவது புருஷோத்தமன், என்ற நிலையை அடைந்த பின் பலராம அவதாரத்தில் சற்று இறை தன்மையை எட்டி, கிருஷ்ணாவதாரத்தில் முழுமையாக  இறை தன்மையைப் பெற்று விடுவதாக தசாவதாரத்தில் காட்டப்படுகிறது. மனிதனின் உணர்வின் உயர்வுகள் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் அலசப்படவில்லை என்றாலும் தசாவதாரத்தில் இந்த உயர்வுகள் துல்லியமாய் வளர்ச்சி அடைவதும் காட்டப்பட்டுள்ளது என்பது சிறப்பு.

10. கல்கி அவதாரம்:  மனிதன் என்ற நிலையை அடைந்த வரை ஆராய்ந்து வந்த சார்லஸ் டார்வினின் ஆராய்ச்சி அத்துடன் நின்று விட்ட போதிலும் பரிணாம வளர்ச்சி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அதற்கு ஒரு முடிவு இல்லை. கல்கி அவதாரம் கலியுகத்தின் முடிவில் திருமால் எடுக்கும் கடைசி அவதாரமாக புராணம் கூறுகிறது. ஆயுதங்களும், வாகனங்களும் கொண்ட அவதாரமான கல்கி தினம் தினம் மனிதன் சிந்தனையில் வளர்ந்து கொண்டிருப்பதையும், விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் அவன் மகாசக்தியாக மாறுவதையும் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

மேலைநாட்டு அறிஞர்கள் சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆய்வு செய்து அறிந்து கொண்ட பரிணாமவியல் கொள்கை இந்து மதத்தின் தசவதாரத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஏறத்தாழ தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது வியப்பானதல்லவா?

-        -   என்.கணேசன்
-          நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 7.1.2014




7 comments:

  1. அவதாரங்களை அறியத் தந்தீர்கள்...
    மிகவும் அருமையான பகிர்வு...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. an exhaustive analysis ... informatie too.

      Delete
  2. ஒரு சிறு சந்தேகம்! இவ்வளவு அவதாரங்களும் மனிதரை காக்கவே அவதரித்தன என நினைக்கிறேன்
    அப்படியென்றால் பரிணாம வளர்ச்சி அப்போதே மனிதனை தோற்றுவித்து இருக்க வேண்டுமே?

    ReplyDelete
    Replies
    1. அவ்வாறில்லை.தமிழர்காகள் பரிணாம வளர்ச்சியை ஆய்ந்தரிந்தபிறகே உருவாக்கினார்கள்.காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர்ஆலயம் மச்சே ஞஸ்ரர்,கும்ப ாேணம் அருகிலுள்ள தேவராயன் பேட்டை(சேல்-மீன்+ஊர்=சேலூர்)மச்சேஸ்வரர்.காஞ்சிபுரம் திருக்கச்சூர் ஆமைமடு தீர்த்தம்,கச்சம்(ஆமை)கச்சபேஸ்வரர்.கன்னியாகுமரியிலுள்ள திருபன்றி ாேடு வராகம்(பன்றி).காஞ்சிபுரத்திலுள்ள தாமல் தலத்தில் நரசிம்மேஸ்வரர்,புதுச்சேரி அடுத்துள்ள வில்லியனூர் தலத்தில் காமீஸ்வரர்.கடலூரிலுள்ள திருமாணிக்குழியில் வாமன அவதாரம் பூசித்தாராம்.பரசுராமர் பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் அருகிலுள்ள பழுவூர்,மயிலாடுதுறை அருகேயுள்ள திருநின்றியூர்.ராமர் பூசித்த தலங்கள் ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயம்,தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராமலிங்கேஸ்வரர்.பலராமர் பூசித்த தலங்கள் காஞ்சிபுரம் பலபத்ர ராமேஸ்வரம்,நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம்(திருமறைக்காடு)அருகிலுள்ள ாேடியக்கரை குழகர் ாேவில்.கண்ணன் பூசித்த தலங்கள் திருவாரூர் மாவட்ட திருவீழிமிழலை,தஞ்சாவூர் மாவட்ட திருவிடைமருதூர்.

      Delete
  3. கொஞ்சம் சந்தேகம் இருக்கு. இந்த பத்து அவதாரங்களின் பின்புலத்தில் சொல்லப்பட்டிருக்கும் மாபெரும் அறிவியல்பூர்வமான விஞ்ஞானத்தை எண்ணி பெருமை படுவதா? இல்லை, இந்த அவதாரங்களில் சொல்லப்பட்டுள்ள பலராமன், இராமன், கிருஷணன் என அனைவரும் வாழ்ந்தவர்களாகத்தானே இருக்கின்றனர். அப்பறம் எப்படி இது பரிமாண வளர்ச்சியோடு பொருந்துகிறது? பரிமாண வளர்ச்சியை எப்படி இதிகாச கதைகளில் சொன்னார்கள்? இரண்டும் உண்மை தான் என்றால் மிகப்பெரிய ஆச்சரியமாய் இருக்கிறது. நம்மை விட நம் முன்னோர் அறிவாளிகள் என்பதை மீண்டுமொரு முறை உணரக்கூடிய மற்றொரு சந்தர்ப்பம் இது. பதிவு நல்லாருக்கு அண்ணே.

    ReplyDelete
  4. Ungal pathivu.... Aanmekathai,ariviyal poorvamaha nirupikkum padi ullathu... Ith ennai pola pala vasikkum vasakarkalukku.... Anmmega nattathai athikarikkum... Mikka natri sir....

    ReplyDelete
  5. drogba::: இத்தனை அவதாரங்களும் மனிதனை காக்க என்பதை விட.,
    ''தர்மத்தினை நிலை நாட்ட'' என பொருள் கொண்டால் சரியாக இருக்கும்.

    ReplyDelete