சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 24, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 4



சான் தலாய் லாமாவை சந்தித்ததும் பின்பு ரகசியமாக பேசியதும் மைத்ரேய புத்தர் சம்பந்தமாகத் தான் என்பது மட்டும் தான் லீ க்யாங்குக்கு இப்போதைக்குத் தெளிவாகத் தெரிந்த விஷயம். இல்லவே இல்லாத நபர் அல்லது இறந்து விட்ட நபர் என்று பல வருடங்களாக நம்பி இருந்த சீன உளவுத்துறைக்கு இப்படி மைத்ரேய புத்தர் பேசப்படுவதே பெரிய அதிர்ச்சி தான். சீனாவுக்கு அது பெரிய தலைவலி தான்.....

லீ க்யாங் கடவுளை நம்புபவனல்ல. நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது என்று ஒத்துக் கொண்டாலும் கூட அது நம்மை எல்லாம் ஆட்டிப் படைக்கும் கடவுள் என்றோ அது மனித வடிவில் அவதாரம் எடுத்து வரும் என்பதை அவனுக்கு சிறிதும் நம்ப முடிந்ததில்லை.  அதனால் புத்தரின் அவதாரமாக மைத்ரேய புத்தர் என்ற தெய்வப்பிறவி உலகத்தின் கூரையாம் திபெத்தில் அவதாரம் எடுப்பார் என்று திபெத்திய பழங்காலச் சுவடிகளில் இருக்கின்றது என்று சொல்லப்பட்ட போது அவனுக்குத் தமாஷாகத் தான் இருந்தது. திபெத்திலும், பூடானிலும்  புத்தமத்தைப் பரப்பிய பத்மஷாம்பவா என்ற எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தியத் துறவி மைத்ரேய புத்தர் அவதாரம் எடுக்கும் காலத்தைக்கூட துல்லியமாக எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறார் என்ற செய்தி காதில் விழுந்த போது அவன் கண்டு கொள்ளவில்லை. ஆனால் சரியாகப் பத்து வருடங்களுக்கு முன் மார்கழி மாத சுக்ல பக்‌ஷ (வளர்பிறை) காலத்தில் மைத்ரேய புத்தர் பிறக்கப் போகிறார் என்று திபெத்தில் எல்லா புத்த மடாலயங்களிலும் முன்கூட்டியே சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனைகள் எல்லாம் ஆரம்பித்த போது சீன அரசாங்கத்தால் சும்மா இருக்க முடியவில்லை.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், அதிகார மையத்தில் முக்கியமானவருமான ஒரு சீனத்தலைவர் லீ க்யாங்கை அழைத்து இது குறித்து தன் கவலையைத் தெரிவித்தார். லீ க்யாங்குக்கு இதில் கவலைப்பட என்ன இருக்கிறது என்று புரியவில்லை. திபெத்தில் மூட நம்பிக்கைகளுக்குப் பஞ்சமில்லை... தலாய் லாமாக்களே அப்படி அவதாரங்களாகத் தானே சொல்லப்படுகிறார்கள்

பொதுச்செயலாளர் தன் சோடாபுட்டிக் கண்ணாடி வழியாக அவனை வெறித்து பார்த்து விட்டு மெல்ல சொன்னார். “தலாய் லாமாக்கள் அவலோகிடேஸ்வரர் என்ற போதிசத்துவரின் மறுபிறவிகள் என்று சொல்லப்படுகிறார்கள். ஒரு தலாய் லாமா இறந்தால் இன்னொரு தலாய் லாமா பிறப்பார். மைத்ரேய புத்தர் அப்படியல்ல. ஒரு முறை மட்டுமே நிகழ்கிற அற்புத நிகழ்வு என்றும், கடவுள் தன்மை உள்ள ஒரு அவதாரமே அவர் என்றும் திபெத்திய மக்கள் நம்புகிறார்கள்.... அதை சீனாவில் உள்ள புத்தமதத்து ஆட்களும் நம்புகிறார்கள் என்ற தகவல்கள் கிடைத்திருக்கின்றன....

அதனாலென்ன என்பது போல் லீ க்யாங் அவரைப் பார்த்தான். அறிவு கூர்மைக்குப் பெயர் போன இவனுக்கு அரசியல் புரியவில்லையே என்று எண்ணிய பொதுச் செயலாளர் தொடர்ந்து சொன்னார்.

“கடவுள் என்று ஏதோ ஒரு குழந்தையைக் கொண்டாடுவதில் நமக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. அந்தக் குழந்தையை இந்த லாமாக்கள் நமக்கு எதிராகப் பயன்படுத்தி மக்களும் கடவுள் சொல்கிறாரே என்று அந்தக் குழந்தை பின்னால் ஒருமித்து நின்றால் அது நமக்குப் பிரச்னை தான்.... நம் மக்களில் கூட பலர் அந்தக் குழந்தையை கடவுளாக ஏற்றுக் கொண்டு விடலாம் என்கிற நிலைமையில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டி வருகிறது...... இந்தியாவையோ, அமெரிக்காவையோ நாம் எதிர்க்கையில் மக்கள் நம் பக்கம் தான் இருப்பார்கள். இந்தியாவையும் அமெரிக்காவையும் எதிரியாக நினைப்பார்கள். ஆனால் அந்தக் கடவுள் குழந்தையை நாம் எதிர்க்கையில் மக்களில் எத்தனை பேர் நம் பக்கம் இருப்பார்கள் என்று நம்மால் சொல்ல முடியாது.... அவர்கள் நம்மையே எதிரிகளாய் நினைத்தாலும் நினைக்கலாம்.... இது போன்ற விஷயங்களை முளையிலேயே வேரோடு பிடுங்கி விடுவது நல்லது...

லீ க்யாங் தலையசைத்தான். சீனத்தலைவர்கள் வல்லரசுகளையும் விட அதிகமாய் கடவுளுக்கு பயப்படுகிறார்களா என்ன?என்று தனக்குள் கேட்டுக் கொண்ட அவனுக்கு அவர் தன்னிடம் சொல்லாத வேறு ஏதோ இருக்கிறது என்று உறுதியாகத் தோன்றியது.

அன்று முதல் அவன் மைத்ரேய புத்தர் விவகாரத்தில் தன் முழுக் கவனத்தைத் திருப்பினான். திபெத்தின் புத்த மடாலயங்களில் சீன உளவுத் துறை ஆட்கள் ரகசியமாய் ஊடுருவினார்கள். மைத்ரேய புத்தர் பற்றிய எந்தப் பேச்சும், தகவலும் அவர்களிடமிருந்து தப்பவில்லை.

அந்த மார்கழி மாதத்து சுக்ல பட்சம் முழுவதும் பிரார்த்தனைகளும், சிறப்பு வழிபாடுகளும் புத்த மடாலயங்களில் தொடர்ந்து நடந்தன. அந்தக் காலம் முடிந்ததும் அந்தப் பிரார்த்தனைகள், சிறப்பு வழிபாடுகள் அனைத்தும் நின்றன. எதிர்பார்த்தது போல் மைத்ரேய புத்தர் யார் என்ற அடையாளம் காட்டும் சிரமத்தை லாமாக்கள் மேற்கொள்ளவில்லை. ஆர்வம் மிகுந்த பொதுமக்கள் லாமாக்களைக் கேள்விகளால் துளைத்த போது “தக்க சமயத்தில் காட்சி அளிப்பார்என்ற ஒரே பதில் தரப்பட்டது. தக்க சமயம் எது என்றும் அவர்கள் விளக்கம் அளிக்க முனையவில்லை. பதில் ஏதும் கிடைக்காத போதும் மக்கள் தாங்களாக சில யூகங்கள் செய்து அதையே உண்மைகளாக வெளியே உலவ விட்டனர்.

இதில் ஏதோ மூடுமந்திரம் இருப்பதாக சீன உளவுத்துறை எண்ணியது. மேலும் ஆழமாக விசாரித்த போது லாமாக்கள் ரகசியமாக ஒரு கூட்டம் கூட்டியதாகவும், அந்த கூட்டத்தில் பத்மஷாம்பவாவின் அந்த ரகசிய ஓலைக் குறிப்பு விவாதிக்கப்பட்டதாகவும்,  மைத்ரேய புத்தரின் உயிருக்கு சில காலம் ஆபத்து இருப்பதால் அவரைப் பற்றிய எந்த தகவலையும் வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாகவும் தெரிந்தது. அந்த சில காலம் என்பது எப்போது வரை என்றும் தெரியவில்லை. அது பற்றி முற்றிலும் அறிந்த லாமாக்களின் உயர்மட்ட ஐவர் குழுவிற்குள் சீன உளவுத்துறை புக முடியவில்லை.

மைத்ரேய லாமாவின் உயிருக்கு ஆபத்து என்று கண்டு பிடித்து ரகசியம் காக்கிறார்கள் என்பது மட்டும் புரிந்த சீன உளவுத்துறை அந்த ஐவர் குழுவை ரகசியமாய் கண்காணிக்க ஆரம்பித்தது. அவர்கள் அந்த சுக்லபட்ச காலத்தில் பிறந்த குழந்தைகள் யாருடனாவது தொடர்பு கொள்கிறார்களா என்று கவனிக்க ஆரம்பித்தது. அப்படி தற்செயலாக நிகழ்ந்த இரண்டு சம்பவங்களில் அந்த இரண்டு குழந்தைகளும் சீக்கிரமே விபத்துகளைச் சந்தித்தன. மூன்று வருடம் கழித்து ஒரு குழந்தை புத்தர் சிலை ஒன்றைக் கட்டிப்பிடித்துக் கொண்டு இருப்பதாகவும், அந்த சிலையை விட மறுப்பதாகவும் ஒரு செய்தி வந்தது.  அந்தக் குழந்தையைப் பார்க்க திபெத்தின் பல பாகங்களில் இருந்தும் ஆட்கள் வர ஆரம்பித்தனர். உளவுத்துறை ஆட்களும் போய் பார்த்தார்கள். ஒரு வாரத்தில் அந்த குழந்தை ஒரு விபத்தில் இறந்து போனது.

அந்த குறிப்பிட்ட காலத்தில் பிறந்த குழந்தைகளில் மூன்று குழந்தைகள் சாதாரண பள்ளிகளில் சேராமல் புத்த மடாலயங்களில் சேர்க்கப்பட்டன. உளவுத் துறை அவர்களையும் கூர்ந்து கண்காணித்தது. அந்த மூன்று குழந்தைகளும் மிகச் சாதாரணமாக இருந்தனர். அந்த மடாலய பிக்குகள் அவர்களை நடத்திய விதமும் ஒரு தெய்வக் குழந்தையை நடத்திய விதமாய் தெரியவில்லை. அதனால் அவர்கள் உயிரும் தப்பியது. அக்காலத்தில் பிறந்திருந்த மீதமுள்ள குழந்தைகள் சாதாரண அரசுப்பள்ளிகள் போய்ப் படித்து சாதாரணமாய் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

கடைசியாக எல்லாம் வைத்து யோசித்த போது புத்தர் சிலையை பிடித்துக் கொண்டிருந்த குழந்தை தான் கொஞ்சமாவது அவதார சம்பந்தக் குழந்தை போல் தோன்றியது. அதுவும் இறந்து போன பிறகு, வேறெந்த புது செய்தியும் கிடைக்காததால் சீன உளவுத் துறை அந்த விஷயத்தைக் கைகழுவியது.

திடீரென்று இப்போது மைத்ரேய புத்தர் பேசப்படுகிறார்.....

ஆழ்ந்த சிந்தனையில் இருந்த லீ க்யாங்கிடம் வாங் சாவொ அடுத்த செய்தியைச் சொன்னான். “ஆசான் போன பிறகு தலாய் லாமா இந்தியப் பிரதமரிடம் அவசரமாய் அப்பாயின்மெண்ட் கேட்டிருக்கிறார்

லீ க்யாங் கேட்டான். “எதற்காம்?

“அதைச் சொல்லவில்லையாம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாய் அப்பாயின்மெண்ட் தரச் சொல்லிக் கேட்டிருக்கிறாராம். அவர் அவசரத்தைப் பார்த்தால் இந்த விஷயமாக இருக்கலாமோ என்று சந்தேகப்படுகிற மாதிரி இருக்கிறது என்று சோடென் சொல்கிறான்

சோடென் இன்னும் புத்திசாலியாகவும், தலாய் லாமாவிடம் நெருங்கிப் பழகுகிறவனாகவும் இருந்திருந்தால் எத்தனையோ அதிக விஷயங்கள் நமக்குக் கிடைத்திருக்கும்என்று லீ க்யாங் அபிப்பிராயப்பட்டான். சோடென் யாரிடமும் மிக நெருங்கி அன்பாகப் பழக முடியாத ஒருவன். இன்னும் சொல்லப்போனால் அவனுக்கு யாரையும் அதிகம் பிடிப்பது கிடையாது.

தலாய் லாமாவை அவர் இருப்பிடக் கோயிலில் வேவு பார்க்க அவர்களுக்கு அவனை விடப் பொருத்தமான ஆள் கிடைக்கவில்லை. இந்திய உளவுத்துறையால் நன்கு பரிசோதிக்கப்பட்டு பிரச்னை இல்லாதவன் என்று தேர்வு செய்யப்பட்டு தலாய் லாமாவின் உதவியாளனாய் சேர்ந்திருந்த சோடென் திபெத்தியனாக இருந்த போதும் இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்தவன். தாய் நாட்டின் மீது பெரிய பற்றோ, பிடிப்புணர்வோ இல்லாதவன். உண்மையில் பணம், பகட்டு வாழ்க்கை தவிர வேறு எதிலும், எந்த மனிதரிடமும் அவனுக்கு பிடிப்பு இருக்கவில்லை. அவன் தலாய் லாமாவிடம் உதவியாளனாய் சேர்ந்து ஓராண்டு முடிவில் தன் கிராமத்திற்கு விடுமுறையில் சென்றிருந்த போது சீன உளவுத்துறையினர் அவனை அணுகினார்கள். அவன் விலைபோனான்.

சோடென்னை கம்ப்யூட்டர், உளவுக்கருவிகள் பயன்படுத்துவதில் நல்ல தேர்ச்சி பெற வைக்க சீன உளவுத்துறைக்கு சீக்கிரமாகவே முடிந்தது. ஆட்களிடம் ஏற்படாத நெருக்கம் அவனுக்கு இது போன்ற எந்திரங்களிடம் ஏற்பட முடிந்தது.

லீ க்யாங் வாங் சாவொவிடம் சொன்னான். “தலாய் லாமாவிற்கு எப்போது அப்பாயின்மெண்ட் கிடைத்தாலும் உடனடியாகத் தெரிவிக்கச் சொல். வேறு யாராவது அவரை வந்து பார்த்தாலும், வேறு யாரையாவது அவர் தொடர்பு கொண்டாலும் கூட நமக்கு உடனே தெரிய வேண்டும்

வாங் சாவோ தலையசைத்தான். தயக்கத்துடன் லீ க்யாங்கிடம் கேட்டான். “அந்த ஆசானைப் பிடித்து வைத்துக் கேட்டால் எல்லாம் தெரிந்து விடாதா?

லீ க்யாங் சுவரில் இருந்த திபெத்திய வரைபடத்தைப் பார்த்தபடி சொன்னான். “அந்த ஆளைக் கஷ்டப்பட்டு பிடித்து விடலாம். ஆனால் பலன் எதுவும் கிடைக்காது. எத்தனை சித்ரவதை அனுபவித்தாலும் நமக்குத் தேவையான ஒரு தகவல் கூட அவர் வாயிலிருந்து வராது...

சீன உளவுத்துறையின் சித்ரவதைகள் சாதாரணமானவை அல்ல. அப்படி இருக்கையில் லீ க்யாங் இப்படிச் சொன்னது வாங் சாவொவிற்கு ஆசான் மீது ஒரு தனி மரியாதையை ஏற்படுத்தியது. இது வரை ஹாங்காங் சம்பந்தப்பட்ட விவகாரங்களைக் கவனித்துக் கொண்டிருந்த அவனுக்கு திபெத்திய விவகாரங்கள் இரண்டு வருடப் புதிது.  லீ க்யாங் அளவுக்கு அவனுக்கு அதில் அனுபவம் போதாது....

லீ க்யாங் அவனுக்கு விளக்கினான். “திபெத்திய லாமாக்கள் ஆழ்மனசக்திகளில் நல்ல தேர்ச்சி பெற்றவர்கள். தங்கள் எண்ணங்களை வேறெங்கோ குவித்து உடல் உணர்வுகளை அவர்களால் முற்றிலும் அகற்றி விட முடியும். சாவது கூட அவர்களுக்கு ஒரு பிரச்னை அல்ல.....

வாங் சாவொ சொன்னான். “அந்த மாதிரி மனிதர்கள் நம் பக்கம் இருந்தால் நாம் இன்னும் எத்தனையோ சாதிக்கலாம் அல்லவா....

திறமைகளை சிலாகிப்பதில் சிறிதும் தயக்கம் இல்லாத லீ க்யாங் அவன் சொன்னதை ஆமோதித்துத் தலையாட்டினான்.

வாங் சாவொவின் கைபேசி குறுந்தகவல் வந்த சத்தத்தை ஏற்படுத்த வாங் சாவொ வந்திருக்கும் தகவல் என்ன என்று பார்த்தான்.

“தலாய் லாமாவுக்கு இந்தியப்பிரதமர் நாளை மாலை ஆறு மணிக்கு அப்பாயின்மெண்ட் தந்திருக்கிறார். தலாய் லாமா நாளை காலை விமானத்தில் புறப்படுகிறார்.

தகவலை வாங் சாவொ லீ க்யாங்கிடம் தெரிவித்தான்.

லீ க்யாங் சொன்னான். “தலாய் லாமாவை டெல்லி இறங்கிய நேரம் முதல் அங்கிருந்து கிளம்பும் வரை தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடு செய். நிருபர்கள், பக்தர்கள், திபெத் தனிநாடாக ஆதரவு தெரிவிப்பவர்கள் என்று நம் ஆட்கள் எல்லா வேஷங்களிலும் அவரைத் தொடர்ந்து சுற்றி இருக்கட்டும். முக்கியமாய் அவர் யாரை எல்லாம் சந்திக்கிறார், அவர்களிடம் என்னவெல்லாம் பேசுகிறார் என்பது நமக்குத் தெரிந்தாக வேண்டும்...

வாங் சாவொ சரியென்று தலையசைத்தான். லீ க்யாங் அவனை அனுப்பி விட்டு யோசனையில் ஆழ்ந்தான். இந்த விவகாரத்தில் இந்தியாவை எதற்காக தலாய் லாமா அணுகுகிறார்? எந்த வித உதவியை அவர் எதிர்பார்க்கிறார்?

(தொடரும்)
-          என்.கணேசன்



11 comments:

  1. very interesting sir.

    ReplyDelete
  2. விஷ்ணுJuly 24, 2014 at 7:32 PM

    மைத்ரேய புத்தர் பிறப்பு ரகசியம் சுவாரசியம் ஏற்படுத்துகிறது. அடுத்த வியாழனுக்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  3. மிகவும் சுவாரஸ்யமாகக் கொண்டு செல்கிறீர்கள். சீனப் பெயர்கள் தான் என்னை கொஞ்சம் குழப்புகிறது. மீண்டும் இதன் முதல் பகுதிகளுக்கு சென்று யார் என்று உறுதி செய்து கொண்டேன்.

    ReplyDelete
  4. Interesting story as usual. Humble request Sir, You could have avoided the words or rephrased it "சோடா புட்டி" கண்ணாடி

    ReplyDelete
  5. அருமையான ஆரம்பம், ஒரு சந்தேகம்..நீங்க முழு கதையும் யோசிசுட்டுதான் இந்த நாவலை எழுதுரிங்களா?

    http://en.wikipedia.org/wiki/Maitreya

    ReplyDelete
  6. சுவராஸ்யமாக நகர்கிறது
    மைத்ரேய புத்தரின் பிறப்பின் மறைக்கப்பட்ட ரகசியம் என்ன நு அறிய ஆவலாக இருக்கு

    ReplyDelete
  7. சிவசந்திரன்July 25, 2014 at 8:01 PM

    நாவல் சூப்பராக இருக்கு.

    ReplyDelete
  8. Naval karpanaiyaka irunthalum... ''Almanathin Sakthi'' pontra unmaiyana visangalai vaithu nagarvathu...padikkum pothu Unmai sambavam pola irukinrathu...

    ReplyDelete
  9. Nice narration........Very good and interesting story.. my view is that "there is a contrast in the spy(soden who is working with thalai lama) background story. In the Previous episodes soden is worked as a sweeper in the MSS and lee kyong appointed him as a spy where as in this episodes , it is said that soden has appointed as a lala secretary by the indian government and after one year , MSS bought him" this is the contrast what i observed..

    ReplyDelete
    Replies
    1. In third episode I've mentioned Wang Chao has joined in MSS as sweeper and later got promotion, not Choden. Becuase of the Chinese names you got confused, I think.

      Delete