சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 22, 2024

யோகி 46


செவென் ஸ்டார்ஸ் மருத்துவமனையில் டாக்டர் சுகுமாரனின் கைக்குட்டையை எடுத்துக் கொண்டு போன இளைஞன், சுகுமாரனின் வீடிருக்கும் தெருக்கோடியில் பொறுமையாகக் காத்திருந்தான். சுகுமாரனின் குடும்பத்தினர் கும்பகோணம் போயிருக்கிறார்கள். பெரிய பங்களாவாக இருந்த அந்த வீட்டில் சுகுமாரன் மட்டுமே இப்போது தனியாக இருக்கிறார். அவரும் சற்று நேரத்தில் வீட்டை விட்டுக் கிளம்பி விடுவார்.  மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்தால் சற்று இளைப்பாறி விட்டு மாலை ஐந்து மணியிலிருந்து ஐந்தே கால் மணிக்குள் அவர் வீட்டை விட்டுக் கிளம்பி விடுவார். இது வழக்கமாய் நடப்பது தான். அவரது வீட்டை, பகலில் ஒரு கூர்க்காவும், இரவில் ஒரு கூர்க்காவும் காவல் காக்கிறார்கள். வீட்டில் டாபர்மேன் நாய் ஒன்று இருக்கிறது. இப்போது அது வீட்டின் பின் பக்கமிருக்கும் கூண்டில் இருக்கிறது. இரவு சுகுமாரன் வந்த பின் தான் அது கூண்டிலிருந்து விடுவிக்கப்படும். மறுநாள் காலை வரை வீட்டைச் சுற்றி உலாவிக் கொண்டு தானிருக்கும். காலையில் மருத்துவமனைக்குப் போவதற்கு முன் தான் சுகுமாரன் அதை கூண்டில் அடைத்து விட்டுப் போவார். அதனால் இரவிலிருந்து காலை வரை அதன் ஆர்ப்பாட்டம் அதிகமாய் இருக்கும். தெருவில் செல்லும் பாதசாரிகள், தெரியாமல் அவர் வீட்டு கேட் பக்கம் நெருங்கி நடந்தால் கூட, அது மிக ஆக்ரோஷமாய் அவர்களை மிரட்டும்...

 

டாக்டர் சுகுமாரனின் கார் வீட்டை விட்டு வெளியேறியதை அந்த இளைஞன் பார்த்தான். அதன் பின் சரியாக ஏழு நிமிடங்கள் கழித்து அந்த இளைஞன் அவர் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.  இருபக்கமும் வேடிக்கை பார்த்தபடி நிதானமாய் நடந்த அவன் அவர் வீட்டருகே வந்த போது திடீரென்று மந்திரத்தால் கட்டுண்டவன் போல் நின்றான். அவன் பார்வை கேட் கம்பிகளின் இடையே தெரிந்த முன்புறத் தோட்டத்தில் லயித்து நின்றது. அதை கூர்க்கா கவனித்தான். வழிப்போக்கர்கள் சிலர் அப்படி அந்த அழகான தோட்டத்தை ரசித்து நின்று பார்த்து விட்டுப் போவது உண்டு என்பதால் அவன் அந்த இளைஞனை சந்தேகப்படவில்லை.

 

சில வினாடிகள் நின்று அந்தத் தோட்டத்தின் மஞ்சள் பூக்களை ரசித்துப் பார்த்த இளைஞன் கூர்க்காவை நெருங்கி சொன்னான். “அந்த மஞ்சள் செடியோட நாத்து ஒன்னெ ஒன்னு தருவீங்களா? பல தடவை நர்சரில இருந்து வாங்கி எங்க வீட்டுல வெச்சி பார்த்துட்டேன். இவ்வளவு நல்லா வர மாட்டேங்குது.”

 

கூர்க்கா சொன்னான். “ஓனர் திட்டுவாரு

 

நான் காசு வேணும்னாலும் தரேன். நர்சரில என்ன ரேட்டோ அதைக் குடுத்துடறேன். ஒரே ஒரு செடி கொஞ்சம் மண்ணோட குடுங்க போதும்.” என்று சொன்னவன் நூறு ரூபாய் தாள் ஒன்றை சட்டைப் பையிலிருந்து எடுத்தான்.

 

கூர்க்கா யோசித்தான். வீட்டில் யாரும் இல்லை. வரிசையாக இருக்கும் பல நாற்றுகளில் ஒரே ஒரு நாற்றை எடுத்துக் கொடுத்தால் யாருக்கும் தெரியப் போவதுமில்லை

 

ந்த இளைஞன் நூறு ரூபாயை நீட்ட கூர்க்கா வாங்கிக் கொண்டான். இளைஞன் தன் கையில் மடித்து வைத்திருந்த ப்ளாஸ்டிக் பையையும், பாலிதீன் கையுறையையும் தந்து சொன்னான். “ஒருத்தர் சொன்னார். இந்தச் செடியை மட்டும் கைபடாமல் மண்ணோட எடுத்துட்டு போய் நட்டால் தான் நல்லா வளரும்னு. அப்படியே உங்க கையும் மண்ணுல படாம எடுத்துக் குடுங்க பார்ப்போம். இந்த தடவையாவது எங்க வீட்டுல வளருதான்னு….”  

 

அந்த இளைஞன் சொன்னது வினோதமாகவும், பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றினாலும், அவன் பணம் தந்திருந்ததால் கூர்க்கா மறுக்கவில்லை. மண்ணைத் தொட்டு, கைகழுவும் அவசியமும் இல்லை என்பதால் அந்தக் கையுறையை மாட்டிக் கொண்டு ப்ளாஸ்டிக் உறையை எடுத்துக் கொண்டு உள்ளே போய் ஓரமாய் இருந்த ஒரு நாற்றை எடுத்து சிறிது மண்ணையும் எடுத்து ப்ளாஸ்டிக் பையில் போட்டுக் கொண்டு வந்து கொடுத்தான்.

 

அந்த இளைஞன்தேங்க்ஸ்என்று சொல்லி அந்த ப்ளாஸ்டிக் பையை மிகக் கவனமாக வாங்கிக் கொண்டான்.  பின் தலையசைத்து விட்டு நகர்ந்தான். நடந்தபடி கைபேசியில் நேரத்தைப் பார்த்தான். 5.35. பரசுராமன் இந்த மண்ணை சரியாக 6.42க்கு அவர் வீட்டிற்குக் கொண்டு வந்து தரச் சொல்லி இருக்கிறார். தெருக்கோடியில் அவன் நிறுத்தியிருக்கும் பைக்கில் அவர் வீட்டுக்குச் செல்ல சுமார் ஒரு மணி நேரம் எப்படியும் தேவைப்படும்

 

தெருக்கோடியில் அந்த நாற்றை வீசி விட்டு மண்ணை மட்டும் பத்திரப்படுத்திக் கொண்டு அந்த இளைஞன் பைக்கைக் கிளப்பினான். 

 

ரியாக 6.42க்கு பரசுராமன் வீட்டு வாசலில் அந்த இளைஞன் சுகுமாரன் வீட்டு மண் இருந்த ப்ளாஸ்டிக் உறையுடன் நின்றான். பரசுராமன் கருப்புத் துணியைத் தலையில் கட்டியிருந்தார். கருப்பு சட்டை, கருப்பு வேட்டி அணிந்து முழுமையாக கருப்பு ஆடைகளில் இருந்தார். அவர் அவனிடமிருந்து அந்த ப்ளாஸ்டிக் உறையைத் தன் கையில் வாங்காமல் கீழே அவர் கைகாட்டிய இடத்தில் வைத்துவிடச் சொன்னார். அங்கே ஒரு முக்கோண வடிவம் சிவப்பு  நிறத்தில் வரையப்பட்டிருந்தது. அந்த இளைஞன் அங்கே வைத்து விட்டுப் போய் விட்டான்.

 

பரசுராமன் கண்களை மூடி ஏதோ மந்திரங்களை ஜெபித்தார். பின் கண்களைத் திறந்து அதை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றார். அவருடைய ஹாலில் ஏற்கெனவே நிறைய சின்னங்களும், யந்திரங்களும் பல வண்ண நிறங்களில் வரையப்பட்டு இருந்தன. எல்லாவற்றிற்கும் நடுநாயகமாய் மயான காளியின் பெரிய சிலை ஒன்று இருந்தது. அதன் அருகே ஒரு பெரிய விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

 

மயான காளியின் முன்னால் பெரியதாக ஒரு மண்டலம் வரையப்பட்டிருந்தது. அந்த மண்டலத்தின்  நடுவில் குங்கும நீரில் தோய்க்கப்பட்ட ஒரு சிறிய கத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த மண்டலத்தைச் சுற்றி சில சின்னச் சின்னங்களும், யந்திரங்களும் வரையபட்டிருந்தன.

 

பரசுராமன் மந்திரங்கள் ஜெபித்தபடி, இளைஞன் கொண்டு வந்த ப்ளாஸ்டிக் பையிலிருந்து மண்ணை ஒரு முக்கோணத்தில் சிறிது கொட்டினார். இன்னொரு முக்காணத்தில் செவென் ஸ்டார்ஸ் மருத்துவமனையில் இருந்து எடுத்து வரப்பட்ட கைக்குட்டையை வைத்தார். பரசுராமன் ஏற்கெனவே சேதுமாதவனிடம் இருந்து சைத்ராவின் சில புகைப்படங்கள் வாங்கி வந்திருந்தார். அவற்றிலிருந்து ஒரு புகைப்படத்தைத் தேர்ந்தெடுத்து மயான காளியின் சிலை மீது சாய்த்து நிறுத்தினார். அந்தப் புகைப்படத்தில் சைத்ரா மஞ்சள் நிறப் புடவை அணிந்து புன்னகைத்தபடி நின்றிருந்தாள்.

 

எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை பார்த்து, திருப்தியடைந்த பரசுராமன் தன் விசேஷ பூஜையை ஆரம்பித்தார்.

 

சுகுமாரன் அன்று இரவு நண்பர் ஒருவர் ஐந்து நட்சத்திர ஓட்டலில்    அளித்த விருந்தில் கலந்து கொண்டு கிளம்பும் போது நேரமாகி விட்டது. ஓட்டலில் இருந்து வெளியே வந்த போது பதினோரு மணி ஆகியிருந்தது. அந்த நேரத்தில் சென்னை நகர வீதிகளில் பயணிப்பது ஓரளவு சுலபம். போக்குவரத்து நெரிசல், ஊர்தல் இன்றி வேகமாய் போக முடிவது அவருக்கு மிகப் பிடிக்கும். பகல் நேரங்களில் எல்லாம், எத்தனை விலையுயர்ந்த காராய் இருந்தாலும், எத்தனை வேகமாய்ப் போக முடிந்ததாய் அது இருந்தாலும், ஒரு பயனும் இல்லை

 

திடீரென்று சுகுமாரன் வயிற்றுக்குள் ஏதோ எரிச்சலை உணர்ந்தார். சாப்பிட்டதில் ஏதோ ஒன்று மிகவும் காரமாய் இருந்திருக்க வேண்டும். பேசிக் கொண்டே சாப்பிட்டதில் அப்போது தெரியவில்லை போலிருக்கிறதுஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும் காசைக் கணக்கில்லாமல் வாங்குகிறார்களே தவிர தரமான உணவைத் தருவதில்லை. பகட்டுக்குத் தான் பணம்

 

கார் வீட்டை நெருங்க நெருங்க ஏதோ வித்தியாசமான அமானுஷ்யமான ரீங்காரம் அவர் காதில் ஒலிக்க ஆரம்பித்தது. அவருடைய கார் அவர் வசிக்கும் தெருவுக்குள் திரும்பிய போதே  அவர் நாய் டாமி குரைக்கும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. இன்று அவனை கூண்டிலிருந்து விடுவிக்கும் நேரம் கழிந்து விட்டதால் கோபத்தில் குரைக்கிறானோ?

 

அவர் கார் ஹாரன் சத்தம் கேட்டவுடன் கூர்க்கா அவசரமாக கேட்டைத் திறந்தான். போர்ட்டிகோவில் காரை அவர் நிறுத்தி விட்டு இறங்கிய போது சைத்ரா தோட்டத்தில் நின்றிருந்தாள். மஞ்சள் நிறச் சேலை அணிந்திருந்த அவள் அவரைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

 

மிகத் தத்ரூபமாகத் தெரிந்த அந்தக் காட்சியில் சுகுமாரனின் இதயம் துடிக்க மறந்தது. பீதியில் கண்கள் விரிய அவர் சிலை போல் நின்றார்.


(தொடரும்)

என்.கணேசன்

6 comments:

  1. It's getting interesting now. Can't wait to read the next episodes

    ReplyDelete
  2. எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்த விஷயம் சுகுமாரன் மூலம் வெளிப்பட போகிறது.,....

    ReplyDelete
  3. இனிமேதான் ஆட்டம் ஆரம்பம்

    ReplyDelete
  4. Deivam Mattumalla Aaviyum Nindru Kollum Endra Words Nijamaakirathu.

    ReplyDelete
  5. ஆவியின் அமானுஷ்யம் ஆரம்பம்

    ReplyDelete
  6. ஆவியின் அமானுஷ்யம் ஆரம்பம்

    ReplyDelete