சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Tuesday, June 15, 2021

பைத்தியமாக்கும் பணமும், ரசவாத வித்தையும்!

 

ஆன்மிகப் பயணத்தில் ஆத்மசக்திகள்27 

 

ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் கர்னல் ஓல்காட்டும் வாரணாசியில் எட்டு நாட்கள் தங்கியிருந்தார்கள். வாரணாசியின் மகாராஜா அவர்களுக்குத் தங்க சகல சௌகரியங்களும் சேர்ந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார். அவர்களைச் சந்திக்க வந்த மகாராஜா ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் ஏதாவது அற்புதங்கள் செய்து காட்டும்படி வேண்டிக் கொண்டு, அப்படிச் செய்து காட்டினால் ஆயிரக் கணக்கில் தியோசபிகல் சொசைட்டிக்கு நன்கொடை தரத் தயாராக இருப்பதாகச் சொன்னார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் என்பதால் ஆயிரக் கணக்கில் ரூபாய்கள் தருவது இப்போது லட்சக்கணக்கில் தருவதற்குச் சமமானது என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு ப்ளாவட்ஸ்கீ அம்மையார் மறுத்து விட்டார். தன் சக்திகளைப் பணத்திற்கு விலைபேசுவதில் அவருக்கு உடன்பாடு இருக்கவில்லை. அது வாரணாசி மகாராஜாவுக்கு ஏமாற்றத்தை அளித்தது. ஆனாலும் அவர் அவர்களுக்குத் தந்த உபசரிப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை. ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சில வருடங்களுக்கு முன் நடந்த கலவரத்தில் அரசாங்க ரகசிய ரிகார்டுகள் மற்றும் பணம் இருக்கும் இடத்தை மகாராஜாவுக்குக் காண்பித்துக் கொடுத்தார். அதில் மகாராஜா ஓரளவு திருப்தி அடைந்தாலும் தியோசபிகல் சொசைட்டிக்கு நன்கொடைகள் எதுவும் தரவில்லை. மகாராஜாவுக்கு மறுப்பு தெரிவித்த ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அவருக்குப் பத்து ரூபாய்கள் தர வழியில்லாத எத்தனையோ ஏழை எளியவர்களுக்கு சின்னச் சின்ன அற்புதங்கள் செய்து காட்டினார். இது கர்னல் ஓல்காட்டுக்கு வியப்பை அளித்தது.

 

அந்தக் காலத்தில் இரும்பைத் தங்கமாக்கும், கரியை வைரமாக்கும் ரசவாத வித்தை மேல் பலருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. பலரும் ஆங்காங்கே அந்தப் பரிசோதனைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். முகமது ஆரிஃப் என்ற பெரியவர்  அது குறித்த நிறைய தகவல்களைச் சேர்த்து வைத்திருந்தார். அவர் அடிக்கடி அது சம்பந்தமான ஆராய்ச்சிகளைச் செய்து வருவது பற்றி ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் தெரிவித்தார்.

 

வாரணாசியில் பலவிதமான மக்கள் அந்த ஆராய்ச்சிகளில் ஆர்வம் காட்டுவது ப்ளாவட்ஸ்கீ அம்மையாருக்கும், கர்னல் ஓல்காட்டுக்கும் வியப்பாக இருந்தது.  முகமது ஆரிஃபிடம் அந்தப் பரிசோதனையைச் செய்து காட்ட முடியுமா என்று கர்னல் ஓல்காட் கேட்க முகமது ஆரிஃப் பல மூலிகைகளுக்கு நடுவில் ஒரு வெள்ளி நாணயத்தை வைத்து ஒரு காகிதத்தில் முகமது நபி காலத்திலிருந்து அக்காலம் வரை எழுதி வைத்திருந்த சுமார் 1500 மகான்கள் பெயர்கள் கொண்ட காகிதத்தை கண்களை மூடிப் பிரார்த்தித்து விட்டுத் தீப்பற்ற வைத்தார். அந்தக் காகிதம் பற்றி எரிந்து பின் மூலிகைகளும் பற்றி எரிய ஆரம்பித்தன. அந்தச் சூட்டில் வெள்ளி நாணயம் மெல்ல உருக ஆரம்பித்தது. ஆனால் அது முழுவதுமாக உருகி விடாமல் பாதி மட்டும் உருகி நின்று விட்டதால் அந்தப் பரிசோதனை முழுவதுமாக வெற்றி பெற்று விடவில்லை. ஆனாலும் முகமது ஆரிஃப் தன் நம்பிக்கையை இழந்து விடவில்லை. இது நவீன விஞ்ஞானத்திற்கு ஏற்புடையதாக இல்லையே என்று கர்னல் ஓல்காட் சுட்டிக் காட்டிய போது நவீன விஞ்ஞானத்தில் பல கேள்விகளுக்குப் பதில் இல்லை என்றும் இந்த ரசவாத வித்தை காலம் காலமாக நம்பப்பட்டு வருவதாகவும் முகமது ஆரிஃப்  தெரிவித்தார். ஏதோ சில சில்லறைத் தவறுகள் நடப்பதாகவும், அதைக் களைந்து முழுமையான ஞானம் பெற்று முயற்சித்தால் அது கண்டிப்பாக வெற்றி கிடைக்கக்கூடிய பரிசோதனை என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார். அவருடைய கருத்துக்களை எல்லாம் ஒரு கட்டுரையாக எழுதித்தர அவருக்கு கர்னல் ஓல்காட் வேண்டுகோள் விடுத்தார். அவரும் தன் கருத்துகளை பல பழங்காலச் சுவடிகளில் இருக்கும் ஆதாரத்துடன் எழுதி அந்தக் கட்டுரை தியோசபிகல் சொசைட்டி பத்திரிக்கையில் வெளிவந்தது. பிற்காலத்தில் அவர் தனிமையான வாழ்க்கை வாழ்ந்து பல பரிசோதனைகள் செய்து பார்த்ததாக கர்னல் ஓல்காட்டுக்குத் தகவல்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் கடைசி வரை அவர் தன் பரிசோதனைகளில் வெற்றி பெற்று விடவில்லை. இருந்த போதிலும் அவர் அதில் நம்பிக்கையையும் இழந்து விடவில்லை.

 

இதே போல சிலர் இந்தக் கலையில் ஆர்வம் காட்டியதை வாரணாசியில் வசித்த காலத்தில் அவர்கள் கண்டார்கள். ஹாசன் கான் என்பவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். அவர் தந்தை இந்த ரசவாத வித்தையில் பெரும் ஆர்வமும், ஞானமும் கொண்டிருந்தார். தந்தையிடமிருந்து அவர் அந்த ரகசியக் கலையைக் கற்றுக் கொண்டார். ஆனால் முகமது ஆரிஃப் போல அவருடைய ஞானம் முழுவதுமாக விஞ்ஞானமயமாக இருக்கவில்லை. அவருடைய வித்தை ஏழு ஆவிகள் அல்லது குட்டிச்சாத்தான்களை வசப்படுத்திக் கொண்டு செய்யும் அமானுஷ்ய வித்தையாக இருந்தது. அவர் தன் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்ட போது அந்தச் சக்திகளை முழுக்கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கத் தவறி விட்டு, அந்தச் சக்திகளின் ஆதிக்கத்தில் சிக்கி,  ஒரு காலத்தில் பைத்தியம் பிடித்து இறந்தார்.   காசிப்பூர் பகுதியில் வசித்த ஒரு பண்டிதரும் இது போல் ரசவாத வித்தையை தன்னுடைய சீடர்களில் திறமை வாய்ந்த ஒருவனுக்குச் சொல்லித் தரும் முயற்சியில் ஈடுபட்டு தன் கண் பார்வையை இழக்க நேரிட்ட செய்தியையும் கர்னல் ஓல்காட் அறிந்தார்.

 

இந்த ரசவாத வித்தையில் இருந்த ஆர்வம் ஒரு ஆங்கிலேயரையும் விட்டு வைக்கவில்லை. அவருடைய பாட்டனார் சில பிரெஞ்சுக் காரர்களுடன் திப்பு சுல்தான் காலத்தில் இந்தியா வந்தவர். திப்பு சுல்தானின் மரணத்திற்குப் பிறகு கிழக்கிந்தியக் கம்பெனியில் வேலை பார்த்தார். அப்போது இந்தியாவில் பிறந்த அவருடைய பிள்ளையும் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணி புரிய அவருடைய பிள்ளை பாவ்நகர் சமஸ்தானத்தில் ஒரு அதிகாரியாக வேலை செய்தார். அவருடைய பெயர் மிர்சா  மூரத் அலி பெக். அவரும் ரசவாத வித்தையில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். அது குறித்து நிறைய படித்துத் தெரிந்து வைத்திருந்தார். அவரைக் கர்னல் ஓல்காட்டும், ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் சந்தித்தார்கள்.

மிர்சா மூரத் அலி பெக் ப்ளாக் மேஜிக் என்றழைக்கப்படும் அமானுஷ்யக் கலைகளில் புலமை பெற்றிருக்கும் ஒருவர் அவருக்குக் குருவாகக் கிடைத்திருப்பதாகவும் இனி மிகக்குறுகிய காலத்தில் அந்த ரசவாத வித்தையில் வெற்றி காணப்போவதாகவும் தெரிவித்தார்.

 

ஒரு மூடிய அறையில் நாற்பது நாட்கள் அடைபட்டுக் கிடந்து ஒரு சுவரில் இருக்கும் கரும்புள்ளியைப் பார்த்தபடி பாதி அரபுவும், பாதி சமஸ்கிருதமும் கலந்த மந்திரங்களை விடாமல் சொல்லிப் பயிற்சிகள் செய்து கொண்டு இருந்தார். ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அவருக்கு ப்ளாக் மேஜிக் கலைகள் என்றுமே ஒருவரை அழிப்பதில் தான் முடியும் என்று அறிவுரை சொன்னார். அதில் ஈடுபடும் யாருமே அந்த அழிவில் இருந்து தப்ப முடியாது என்பதைத் தெரிவித்து நல்ல சக்திகளின் பக்கம் கவனத்தைத் திருப்ப அறிவுரை கூறினார். இந்த நல்ல வழியில் விளைவுகள் நிதானமாகத் தான் இருக்கும் என்ற போதும் அழிவைக் கண்டிப்பாகத் தராது என்று அறிவுரை சொன்னார். நல்ல வழியில் செல்லும் போது மகாத்மாக்களின் பாதுகாவலையும் ஒருவர் பெற முடியும் என்று சொன்னார்.

 

பல அபூர்வ சக்திகளை வசப்படுத்தி இருந்த ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் அறிவுரையை மிர்சா மூரத் அலி பெக் ஏற்றுக் கொண்டு சில நாட்கள் ப்ளாக் மேஜிக் வழிகளில் இருந்து விலகி இருந்தார். தன்னுடைய ஞானத்தை கட்டுரைகளாக எழுதி தியோசபிகல் சொசைட்டிக்கு வழங்கவும் செய்தார். ஆனால் காலப்போக்கில் அந்தத் தீயசக்திகள் அவரை மறுபடியும் ஈர்த்தன. தீயசக்திகள் உடனடியாகத் தரும் சில அபூர்வ சக்திகள் பக்கம் அவர் மனம் திரும்பியது. அதன் பின் சில நாட்களில் பைத்தியம் பிடித்தவராக அவர் மாறினார். சிறிது காலத்தில் மரணமும் அடைந்தார். அவருடைய மரணம் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரை நிறையவே பாதித்தது. தீய வழிகளில் யாரும் சுபிட்சத்தையும், நன்மையையும் பெற்று விட முடியவே முடியாது என்பதை ஏன் சிலர் புரிந்து கொள்வதே இல்லை என்று வருந்தினார். எத்தனையோ சக்திகளைத் தன் வசமாக்கி இருந்த ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அந்த ரசவாத வித்தை மற்றும் தீய சக்திகள் மூலம் சில லாபங்களை அடைதல் முதலானவற்றில் என்றுமே ஈடுபட்டதில்லை என்பது அவருக்கு அபூர்வ சக்திகளில் இருந்த தெளிவான சிந்தனைகளில் புலனாவதாக கர்னல் ஓல்காட்டும் நினைத்தார்.

 

(தொடரும்)

என். கணேசன்

நன்றி: தினத்தந்தி 


 

2 comments:

  1. தீய சக்திகள் மூலம் விரைவில் பலன் கிடைக்கும் என நினைப்பவர்களுக்கு இந்த பகுதி ஒரு நல்ல பாடம்....

    ReplyDelete
  2. I came to know about Theosophical soceity from these series... Came across this book Concentration by Ernest Wood... It is the best book... there are practical exercises not like staring a black dot or object..

    ReplyDelete