சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, January 27, 2020

சத்ரபதி 109


சிவாஜிக்கு ஔரங்கசீப்பின் கடிதம் வந்து சேர்ந்தது. சிவாஜி முகலாய தர்பாருக்கு வர விரும்பியதற்கு மகிழ்ச்சி அடைவதாகவும் அவனை சகல மரியாதைகளுடன் வரவேற்கக் காத்திருப்பதாகவும் ஔரங்கசீப் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தான். பின்பு விருப்பப்பட்டால் முகலாய அரசவையில் இடம் பெறலாம் என்றும் தக்காணத்திற்கே திரும்பவும் செல்ல விருப்பமானால் அதற்கும் ஆட்சேபணை இல்லை என்றும் எழுதியிருந்தான்.

இரண்டு மாதங்களுக்கு முன் ஷாஜஹான் காலமாகியிருந்தார். அவர் மரணத்திற்குப் பின் ஏனோ முகலாய தர்பாரை ஔரங்கசீப் டெல்லியிலிருந்து ஆக்ராவுக்கே மாற்றி இருந்தான். அதனால் சிவாஜி ஆக்ராவுக்குக் கிளம்பத் தீர்மானித்தான்.

ஆக்ரா செல்வதற்கு சிவாஜியின் ஆலோசகர்களும், நண்பர்களும், ஜீஜாபாயும் ஒன்றாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஔரங்கசீப்பை அவர்கள் யாரும் நம்பத் தயாராக இல்லை. சிவாஜி அமைதியாகச் சொன்னான். “நான் போயே ஆக வேண்டும். இல்லா விட்டால் இந்த சமாதானம் நீடிக்காது. நானும் முகலாயச் சக்கரவர்த்தியை நம்பவில்லை. ஆனால் நான் ராஜா ஜெய்சிங்கை நம்புகிறேன். வாக்கு மாறாத மனிதர் அவர். அவர் என் பாதுகாப்புக்கு உத்திரவாதம் கொடுத்துள்ளார்.  எல்லாவற்றிற்கும் மேலாக அன்னை பவானி என்னைக் காப்பாற்றுவாள். கவலைப்படாதீர்கள்”

ஆனால் அவர்களால் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. சிவாஜி கிளம்புவதற்கு முன் தன் ஆலோசகர்களையும், அமைச்சர்களையும், நண்பர்களையும், தாயையும் அழைத்துப் பேசினான். அவன் இல்லாத சமயத்தில் யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு, என்னென்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று மிக விரிவாக அவன் எடுத்துரைத்த போது மகன் எல்லாவற்றையும் யோசித்து வைத்திருப்பதைக் கவனித்த ஜீஜாபாய் மகன் மீது பெருமை கொண்டாள்.

கடைசியில் சிவாஜி சொன்னான். “என்னுடைய இடத்தில் என் தாயை அமர்த்தி விட்டுச் செல்கிறேன்.  எல்லோரும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றி என்ன செய்திருக்கிறீர்கள் என்று என் தாயிடம் தெரிவித்தபடி இருக்க வேண்டும். அவருடைய ஆலோசனைக்கும் அறிவுரைக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.”

அனைவரும் தலையசைத்து சம்மதம் தெரிவித்தார்கள். ஜீஜாபாய் கனத்த மனத்துடன் மகனுக்காகப் பிரார்த்தனை செய்யச் சென்றாள்.

அவள் சென்ற பின் சிவாஜி மெல்லச் சொன்னான். “ஒருவேளை நான் திரும்பி வராவிட்டால்….”

அனைவர் முகங்களிலும் திகைப்பும், கவலையும் தெரிந்தன. யேசாஜி கங்க் கேட்டான். “இப்போது தானே சொன்னாய், அன்னை பவானி உன்னைக் காப்பாற்றுவாள் என்று, பின் ஏன் இந்த அபசகுன வார்த்தையைச் சொல்கிறாய்?”

சிவாஜி அமைதி மாறாமல் சொன்னான். “தனிமனிதனாக நான் என் தெய்வத்தைத் திடமாக  நம்புகிறேன். ஆனால் தலைவனாக நான் அனைத்துக் கோணங்களிலும் முன்கூட்டியே சிந்திக்க வேண்டியவனாக இருக்கிறேன். இது என் ஆசிரியரிடமிருந்து கற்றுக் கொண்ட பாடம். யார் இருந்தாலும் சரி, இல்லா விட்டாலும் சரி நிர்வாகம் எங்கும் எப்போதும் தங்கு தடையில்லாமல் சீராக நடந்து கொண்டிருக்க வேண்டும். என் மக்கள் என்றும் எப்போதும் சிரமத்திற்கு ஆளாகக் கூடாது.”

யேசாஜி கங்கும் மற்றவர்களும் கண்கலங்கினார்கள். சிவாஜி தாயிடம் விடைபெறச் சென்றான். ஜீஜாபாய் மனமாரப் பிரார்த்தித்து மகனுக்கு வெற்றித் திலகமிட்டு அனுப்பினாள். அவனிடம் சொன்னாள். “மகனே சீக்கிரம் திரும்பி வா. ராஜ்ஜிய பாரம் நீண்ட காலம் சுமக்கும் வலிமை உன் தாய்க்கு இல்லை.”

சிவாஜியின் மகன் சிறுவன் சாம்பாஜியும் தந்தையுடன் கிளம்ப, பாட்டியை வணங்கினான். அவன் தாய் மறைவிற்குப் பின் ஜீஜாபாய் தான் அவனை வளர்த்து வருகிறாள். ஜீஜாபாய் பேரனுக்கு நிறைய புத்திமதி சொல்லி அனுப்பினாள். எல்லாவற்றிற்கும் தலையாட்டி விட்டு விளையாட்டுத் தனமாக அவன் ஓடி ஒரு குதிரையில் ஏறிக் கொண்டான்.

சிவாஜி வியப்புடன் கேட்டான். “எனக்கு நினைவு தெரிந்து நீங்கள் என் சிறுவயதிலும் கூட இப்படி  நிறைய புத்திமதியெல்லாம் சொல்லி அனுப்பியதேயில்லை. ஏன் உங்கள் பேரனுக்கு மட்டும்?”

ஜீஜாபாய் மகனைப் பெருமிதத்துடன் பார்த்தபடி சொன்னாள். “உனக்கு புத்திமதி அவசியம் இருந்ததில்லை. மகனே. பார்த்தும், உணர்ந்துமே நீ கற்றது அதிகம். ஆனால் என் மகன் அளவுக்கு உன் மகன் போதாது. அவன் வளர்கையில் அது அவசியமில்லாமல் இருந்தது கூட அதற்குக் காரணமாய் இருக்கலாம்…… அதனால் தான் அறிவுரை சொல்லி அனுப்புகிறேன்….”

சிவாஜி ஒரு படையுடன் புறப்பட்டான். சிவாஜிக்கு முன்னதாகவே அமைச்சர் ரகுநாத் பந்த் மற்றும் சில அதிகாரிகள், வீரர்கள் கொண்ட குழு ஆக்ராவுக்குக் கிளம்பியிருந்தது. சிவாஜி முகலாயப் பேரரசரின் அழைப்பில் செல்வதால் அங்கங்கே முகலாய அதிகாரிகளிடம் பேசி பயணத்தில் சிவாஜிக்கு வேண்டிய வசதிகளை வழிநெடுகச் செய்யும் வேலையை அந்தக் குழுவினர் மேற்கொண்டார்கள். 

சிவாஜி செல்கையில் ராஜா ஜெய்சிங்கையும் சென்று சந்தித்தான். அவர் முகலாயச் சக்கரவர்த்தியிடமிருந்து தனக்கும் கடிதம் வந்திருப்பதாகச் சொன்னார். “உங்கள் வழிச்செலவுக்கு ஒரு லட்ச ரூபாயைத் தரச் சொல்லி சக்கரவர்த்தி உத்தரவிட்டிருக்கிறார். அதைப் பெற்றுக் கொண்டு சென்று வாருங்கள் அரசே. இந்தப் பயணம் உங்களுக்கு இனியதாய் அமையட்டும்.”

சிவாஜி சின்னதாய் முறுவலித்தான். அவர் பெரிய விஷயமாய் சொன்ன தகவல் அவனைப் பெரிதாய் உற்சாகப்படுத்தி விடவில்லை என்பதை ராஜா ஜெய்சிங் கவனித்தார். அவன் மனநிலையை அவரால் படிக்க முடிந்தது.

அவர் அவனிடம் அன்பான குரலில் சொன்னார். “உற்சாகமாகப் போய் வாருங்கள் அரசே. இங்குள்ள உங்கள் பகுதிகளின் பாதுகாப்பும் நலனும் உங்கள் ஆட்களின் பொறுப்பு மட்டுமல்ல. என்னுடைய பொறுப்பும் கூட. அதை நான் பார்த்துக் கொள்கிறேன்….” கூடவே தன் மகன் ராம்சிங்குக்கு முன்பே எழுதி வைத்திருந்த கடிதத்தையும் ராஜா ஜெய்சிங் சிவாஜியிடம் கொடுத்தார். ”உங்கள் பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் கொடுத்திருப்பதாக என் மகனுக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். அங்கு அவன் உங்களைப் பாதுகாப்பான்….”

சிவாஜி திறமையும், பொறுப்பும் மிக்க ஒரு மிக நல்ல மனிதரைத் தன் முன் கண்டான். மனம் நெகிழ்ந்து அவரை வணங்கி விட்டுக் கிளம்பினான்.

அது மிக நீண்ட பயணமாக அமைந்தது. ஆக்ரா சென்று சேர இரண்டு மாத காலம் தேவைப்பட்டது. அந்தக் காலத்தையும் அவன் மிக நல்ல விதமாகப் பயன்படுத்திக் கொண்டான். .பாரதத்தின் பல்வேறு புதிய பகுதிகள், மக்கள், பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகள் எல்லாம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக அவன் அந்தப் பயணத்தை எடுத்துக் கொண்டான்.  போருக்குப் போகின்ற காலங்களில் கவனம் எதிரிகளின் மீதும், தற்காப்பின் மீதுமே அதிகமிருக்கும். அதனால் பலவற்றைக் கவனித்துப் புரிந்து கொள்ள முடியாது. அதனால் தான் அன்னை பவானி இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறாளோ என்றும் அவனுக்குத் தோன்றியது.

சாம்பாஜியையும் அவனால் தொடர்ந்து கூர்ந்து கவனிக்க முடிந்தது. வீரம் அவன் இரத்தத்தில் இருந்தது. பயம் அறியாதவனாகவும் இருந்தான். விளையாட்டுகளிலும் மிக ஆர்வமாக இருந்தான். ஆனால் வீரத்திற்கும், விளையாட்டிற்கும்  இணையாக கூர்நோக்கும், கவனிக்கும் தன்மையும் மகனிடம் இருக்கவில்லை என்பதையும் சிவாஜி கண்டான். தந்தை அழைத்துச் சொல்கின்ற போதெல்லாம் சாம்பாஜி தந்தை கவனிக்கச் சொன்னதைக் கவனித்தான். கேள்விகள் கேட்ட போது பார்த்துப் புரிந்து கொண்டு பதிலும் அளித்தான். ஆனால் அடுத்த முறையும் சிவா கவனிக்கச் சொன்னால் தான் கவனித்தான். பார்க்கச் சொன்னால் தான் பார்த்தான். அவனுடைய அறிவு கூர்மை நன்றாகவே இருந்தது. ஆனால் எதிலும் அவன் ஆழத்திற்குப் போக விருப்பம் இல்லாதவனாகவும், தானாக ஆர்வத்தோடு கவனிக்க வேண்டிய விஷயங்களைக் கவனிக்காதவனாகவும் இருந்தான்.  சிறுவன் தானே. போகப் போக எல்லாம் வந்து விடும் என்று சிவாஜி நினைத்தான். அவசியங்கள் வரும் போது அனைத்தையும் ஒருவன் கற்றுக் கொண்டே ஆக வேண்டியிருக்கும் என்று எண்ணிக் கொண்டான்.

வழி நெடுக வசதிகளுக்குக் குறைவிருக்கவில்லை. செல்வச் செழிப்பில் இருந்த முகலாய சாம்ராஜ்ஜியத்தில் அரச விருந்தினர்களுக்கு உபசாரங்களும் நன்றாகவே நடந்தன. ஆனால் ஒருசில இடங்களில் அவனுக்கு அரச விருந்தினர் மரியாதை மட்டுமே கிடைத்தது. அரசனுக்குரிய மரியாதை கிடைக்கவில்லை. சில மரியாதைகளைக் கேட்டுப் பெற வேண்டி இருந்தது. கேட்ட பிறகும் வேண்டா வெறுப்பாகத் தான் அதிகாரிகள் செய்து கொடுத்தார்கள். அரசர்களும் சக்கரவர்த்தியின் சேவகர்களே என்று வார்த்தைப்படுத்தாமல் புரிய வைக்கும் செயல் முறை இருந்தது.


இனி சந்திக்க வேண்டியிருக்கும் ஒரு நிலைப்பாட்டுக்கு முன்னோடியோ இது என்று சிவாஜிக்குத் தோன்ற ஆரம்பித்தது.

(தொடரும்)
என்.கணேசன்

2 comments:

  1. Touching, realistic and interesting.

    ReplyDelete
  2. சிவாஜியின் பயணம் படிக்கும் போதே அற்புதமாக இருந்தது... நாங்களும் கூடவே பயணித்து போலவே உணர்கிறோம்...

    "அவசியங்கள் வரும் போது அனைத்தையும் ஒருவன் கற்றுக் கொண்டே ஆக வேண்டியிருக்கும்" என்ற தத்துவம் அற்புதம்...

    ReplyDelete