சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 7, 2019

இருவேறு உலகம் – 122


விஸ்வம் மாஸ்டரின் சக்தி அலைவரிசைகளில் சிக்க நேரிடும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. மாஸ்டர் தத்துவார்த்த சிந்தனைகள், ஆன்மீக சிந்தனைகள், ஏமாற்றப்பட்ட சிந்தனைகள் என்று ஏதோ சிந்தனைகளில் ஈடுபட்டிருக்காமல் தன் மனதை உயர்சக்திகளில் முழுமையாகக் குவித்துக் கூர்மைப்படுத்தியிருப்பது புரிந்தது. இல்லா விட்டால் அவனை எட்டியிருப்பது சுலபமில்லை. இப்படித் தான் ஒரு முறை க்ரிஷ் அலைவரிசைகளிலும் விஸ்வம் அகப்பட்டான். ஆனால் அது தற்செயலாக நடந்த ஒரு அசாதாரண நிகழ்வாகவே இருக்க வேண்டும். ஏனென்றால் க்ரிஷ் அந்த அளவு வேகமாக அந்தச் சக்திகளை ஆட்கொண்டிருப்பது சாத்தியமே இல்லை. ’அதிவேகமாகச் சக்திகளைப் பெறுவதில் வல்லவனாக இருந்த எனக்கே பல வருடங்கள் தேவைப்பட்டன. இத்தனைக்கும் ஒவ்வொரு சக்தியையும் ஏகாக்கிரதையோடு அடைந்து பெற்றவன் நான். மனதை காதல், குடும்பம், மற்ற விஷயங்கள் என்று சிறிதும் சிந்தனைகள் சிதற விடாத எனக்கே அத்தனை காலம் தேவைபட்ட போது, இவை எல்லாவற்றிலும் ஈடுபாடு இருக்கும் க்ரிஷ் முழு மனதோடு சக்திகளில் ஈடுபட வாய்ப்பே இல்லை. இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று தெரியவில்லை. மாஸ்டர் சொல்லிக் கொடுத்த ஆரம்பப் பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கலாம்….. பாவம்!...” சிந்தனைகள் இப்படியாக ஓடியதில் மாஸ்டர் விஷயத்தில் எச்சரிக்கையும் க்ரிஷ் விஷயத்தில்  நிம்மதியையும் விஸ்வம் அடைந்தான்.

மாஸ்டரின் ஞான திருஷ்டியில் கிடைத்தது ஒருவிதத்தில் பின்னடைவே. மாஸ்டர் உடனே கிளம்பி வரலாம். ஆனால் ஞான திருஷ்டியில் தெரிந்த மலைப்பகுதி எங்கே என்பது துல்லியமாக அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அப்படியே அவர் கஷ்டப்பட்டு அதிர்ஷ்ட வசமாகக் கண்டுபிடித்தாலும் அவர் இங்கு வந்து சேர கண்டிப்பாக ஒரு நாளுக்கும் மேலாகி விடும். அதற்குள் அவன் வேலையை முடித்து அங்கிருந்து போயிருப்பான்….

இப்போது நடப்பது எல்லாமே தனக்கு சாதகமாக இருப்பதில் விஸ்வத்துக்குத் திருப்தியாக இருந்தது. சட்டர்ஜியின் விலாசம் கண்டுபிடித்த பின் எல்லாமே அவனுக்கு மடமடவென்று நடந்தன. இந்தியா திரும்பி வந்தவுடன் முதல் வேலையாக அவன் சட்டர்ஜியை சிலிகுரி விலாசத்தில் சந்தித்தான். சட்டர்ஜியிடம் தன்னை ஒரு மலை ஆராய்ச்சி நிபுணராக அறிமுகம் செய்து கொண்டான். இமயமலையில் பனி உருகி  ரிச்சர்ட் டவுன்செண்ட் பார்த்த மலைப்பகுதி எது என்று அறிய ஆர்வமாய் இருப்பதாக அவன் சொன்ன போது சட்டர்ஜியின் முகம் கருத்தது. அதைப் பற்றி சட்டர்ஜி பேச விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

சட்டர்ஜி தயக்கத்துடன் சொன்னான். “நானும் டேவிட்சனும் அந்தக் காட்சியைப் பார்க்கலை…… ரிச்சர்டு பார்த்ததாகச் சொன்னதைத் தவிர அப்படி நடந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை…… அதனால் இதில் நீங்கள் உங்கள் நேரத்தை வீணாக்காமல் இருப்பது நல்லது…..”

“அது உண்மையோ பொய்யோ நானே நேரில் போய் ஆராய்ந்து தெரிஞ்சுக்க ஆசைப்படறேன். அதனால் அந்த இடத்தை மட்டும் நீங்கள் சொன்னால் உதவியாய் இருக்கும்…..”

சட்டர்ஜி தர்மசங்கடத்துடன் நெளிந்தான். பின் மெல்லச் சொன்னான். “அந்த இடம் ஏதோ சபிக்கப்பட்ட இடம் மாதிரி….. நீங்கள் அங்கே போகாமல் இருப்பது தான் நல்லது”

விஸ்வம் மூடநம்பிக்கைகளை அறவே வெறுப்பவன். இகழ்ச்சியாக அவனை நினைப்பதைக் காட்டாமல் ஆர்வத்தையே காட்டி சட்டர்ஜியிடம் விஸ்வம் கேட்டான். “ஏன் அப்படிச் சொல்றீங்க”

”அடுத்த வருஷமே பழையபடி அதே மலைப்பகுதிக்குப் போகணும்னு ரிச்சர்ட் ஆசைப்பட்டான். கூடவே டேவிட்சனும் போனான். எனக்கு என் தங்கை திருமணம் அந்த சமயத்தில் இருந்ததால போக முடியலை. அதனால அவங்க ரெண்டு பேர் மட்டும் போனாங்க. போனவங்க உயிரோட திரும்பலை. அதனால் தான் நான் அது சபிக்கப்பட்ட இடம்னு சொன்னேன். ஒரு பெரியவர் சொன்னார். சில அமானுஷ்ய சம்பவங்களைப் பார்க்க நேர்ந்தால் அதுபத்தி அதிகம் பேசறதோ அந்த இடங்களுக்கு அடிக்கடி போகிறதோ, அது சம்பந்தமான ஆள்களை அடிக்கடி பார்க்கிறதோ நல்லதல்ல. அதெல்லாம் தெய்வீக நிகழ்ச்சிகள். பார்க்கக் கிடைத்ததே புண்ணியம்னு விட்டுடணும். அதை ஆராயப்போகிறது ஆபத்துன்னு அவர் சொன்னார். அவர் சொன்ன மாதிரி இவங்க ரெண்டு பேரும் அப்படி அடுத்த வருஷம் ஆராயப் போனது தப்புன்னு எனக்கு ஏதோ ஒரு உள்ளுணர்வு. அது தான் அவங்களைப் பலி வாங்கிடுச்சுன்னு தோணுச்சு….. நானும் கூடப் போயிருந்தா நானும் கூடச் செத்துருப்பேன்னு நம்பறேன். அதனால நான் அதோட அந்த விஷயத்தை விட்டுட்டேன். சொல்லப் போனா மலை ஏறுறதையே விட்டுட்டேன். அது சம்பந்தமான தொடர்புகளை விட்டுட்டேன்…..” சட்டர்ஜியின் குரலில் சோகம் இழைந்தோடியது.

அதைப் பற்றிப் பேசுவதே மரணத்தை விளைவிக்கும் என்றும், ஆராய்ச்சிக்காக நீ போனாலும் மரணத்தை வரவழைத்துக் கொள்வாய் என்றும் அவன் நினைத்தது விஸ்வத்துக்குத் தெரிந்தது. அதிக காலம் கைவசம் இல்லை என்பதால் விஸ்வம் தன் சக்தியால் சட்டர்ஜியை செயல் இழக்க வைத்து அவன் மனதை ஊடுருவி அந்தச் சம்பவ இடத்தை அறிந்து கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

அடுத்தபடியாக அந்த மலைப்பகுதிக்கு தன்னுடன் வந்து அந்தப் பழங்கால குகைக் கோயிலுக்கு மேலே இருக்கும் பனியை விலக்க தகுந்த ஆட்கள் ஐவரைத் தேர்ந்தெடுத்தான். பனி மலையில் ஏற்படும் விபத்துக்களில் ராணுவத்துடன் சேர்ந்து மீட்புப் பணியில் ஈடுபடுபவர்கள் அவர்கள். அவர்களும் ஆரம்பத்தில் தயங்கினார்கள்.

அவர்களில் ஒருவன் சொன்னான். “பனி பார்வைக்குத் தான் அழகு. ஆனால் நிஜத்தில் அது ஆபத்தானது. விபத்தில் சிக்கியவர்களை மீட்பது வேறு. பனியைக் குடைவது வேறு…..”

விஸ்வம் சொன்னான். “தகுந்த தற்காப்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்டு கவனமாக வேலை செய்தால் எதுவும் ஆபத்தல்ல.” ஆனால் அவனுடைய தத்துவத்தில் அவர்கள் மனம் மாறவில்லை. பெரியதொரு தொகையைத் தர அவன் ஒத்துக் கொண்ட பிறகு தான் அவர்களும் அந்த வேலைக்கு ஒத்துக் கொண்டார்கள். எந்தத் தொகையும் இப்போதைக்கு விஸ்வத்துக்குப் பெரியதொரு தொகை அல்ல. ரகசிய ஆன்மிக இயக்கத்தில் அவன் எடுத்துக் கொண்ட தொகை அவனிடம் இருக்கிறது. சில நாட்களிலேயே அதற்கு இணையான தொகையை மாணிக்கத்திடமிருந்தும் அவன் வசூல் செய்து விட்டிருந்தான். அரசியல் போல பணம் காய்ச்சி மரம் வேறு இருக்க முடியாது என்பது சொந்த அனுபவத்திலேயே அவனுக்குப் புரிந்தது. அவன் நோக்கம் பணமாக மட்டும் இருந்திருந்தால் அவன் சக்திகளை அது போன்ற வழிகளிலேயே செலவு செய்திருக்கலாம். ஆனால் அவனுக்கு பணம் இலக்கிற்கான ஒரு மார்க்கமே ஒழிய இலக்கே அதுவல்ல. இப்போது கூட பணம் தான் அந்தப் பனிமலையைக் குடைய உதவுகிறது. அந்த அளவில் மட்டுமே அதை அவன் வைத்திருப்பான்…..

கிட்டத்தட்ட அந்தக் குகைக் கோயில் இருக்க முடிந்த பகுதியை எட்டிய போது விஸ்வம் உடன் வந்த ஆட்களை சிறிது இளைப்பாறச் சொல்லி விட்டு தன் சக்திகளைக் குவித்து அமானுஷ்யமான அலைவரிசைகள் அகப்படுகின்றனவா என்று பார்த்தான். சீக்கிரமே அவை அவன் தேடலில் தட்டுப்பட்டன. அந்த அலைவரிசையிலேயே பயணித்து அவை கிளம்பும் மூலத்தை உணர்ந்தான். சுமார் 270 அடிகள் தூரத்தில் அது இருந்தது. அந்த ஆட்களிடம் அந்த இடத்தைச் சுட்டிக் காட்டினான். “அந்த இடத்தைத் தோண்டுங்கள்…”

அவர்கள் உயிரைப் பணயம் வைத்தே அவர் சொன்னதைச் செய்ய வேண்டி இருந்தது. அவர்கள் கொண்டு வந்திருந்த உபகரணங்கள் நவீனமானவை. லாவகமாக அதைப் பயன்படுத்தி அவசரப்படாமல் பாதுகாப்பாகவே இருந்து கொண்டு நிதானமாகவே வேலை செய்தார்கள். விஸ்வம் அவசரத்தை மனதில் அவ்வப்போது உணர்ந்தாலும் அமைதி காத்தான். அவர்களில் ஒருவனுக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டால் கூட அத்தனை பேரும் அவனைக் காப்பாற்றப் போய் விடுவார்கள்.  விஸ்வத்தின் வேலை நடக்காமல் போய் விடும். இன்று அந்த வேலை நடக்கா விட்டால் பின் எப்போது நடக்கும் என்று சொல்ல முடியாது.  மாஸ்டர் நாளையே இங்கு வர வாய்ப்பிருக்கிறது. இந்த ஞானம் அவனைப் பொறுமையுடன் இருக்க வைத்தது.

இரண்டரை மணி நேரம் கழித்து திரிசூலம் தெரிந்தது. அது தெரியும் வரை அவர்கள் விஸ்வம் எதிர்பார்க்கும் குகைக் கோயில் அங்கு இருக்கும் என்று நம்பி இருக்கவில்லை. திரிசூலத்தைப் பார்த்தவுடன் அவர்கள் உற்சாகம் அடைந்தார்கள். சுறுசுறுப்புடன் இயங்கினார்கள். அந்தக் குகைக் கோயில் மேல் இருந்த உறைபனியை நீக்கி விட்ட பின்பு குகையின் பெரிய நுழைவு துவாரம் அவர்கள் பார்வைக்குத் தெரிந்தது. தவழ்ந்த நிலையிலேயே தான் ஒருவர் உள்ளே செல்ல முடியும்…. 

விஸ்வம் பெரும் சக்தி வீச்சை அங்கிருந்து உணர ஆரம்பித்தான். அவர்கள் இனி என்ன செய்வதென்று அவனைக் கேட்டார்கள். எப்போதும் எதையும் முன்கூட்டியே யோசித்து என்ன செய்வதென்று தீர்மானிக்கும் விஸ்வம் முதல் முறையாகத் தன் வாழ்க்கையில் முடிவுக்கு வரத் தயங்கினான். அதற்குக் காரணம் இருந்தது.

(தொடரும்)
என்.கணேசன்  

6 comments:

  1. Tension builds up. Each thodarum creates more tension. Superb

    ReplyDelete
  2. அந்த பனிமலை குகைக் கோவிலில் என்ன தான் இருக்கிறது... அங்கு உள்ள யோகி யார்...????

    விஸ்வம் என்ன செய்யறப் போகிறான்...?

    ReplyDelete
  3. Do you have any idea of publishing in English? My son wants to read

    ReplyDelete
    Replies
    1. If a good translator is willing I am ready to publish in English.

      Delete