சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, October 11, 2018

இருவேறு உலகம் – 104



ர்ம மனிதன் கேட்டான். “சட்டர்ஜி?”

“சட்டர்ஜி சில காலமாய் எங்கள் தொடர்பில் இல்லை. அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாது… அவருடைய மெய்ல் ஐடி மட்டும் தான் எங்களிடம் இருக்கிறது……”

அந்த மெயில் ஐடியை வாங்கிக் கொண்டு மர்ம மனிதன் மெல்லச் சொன்னான். “எனக்கு அவர்கள் மூன்று வருடங்களுக்கு முன் ஏறிய மலைப்பகுதி எது என்று தெரிய வேண்டியிருந்தது. அவர்கள் உங்கள் க்ரூப்பில் பகிர்ந்து கொண்டதில் அந்தத் தகவல் இருக்கவில்லை. அது தான் கேட்டேன்…..”

“அவர்கள் எல்லாம் மலையேற்ற வீரர்கள். எழுத்தாளர்களோ, எல்லா விவரங்களையும் முறைப்படி தந்து பதிவு செய்து பழகியவர்களோ கிடையாது.. எங்கள் குழுவில் அனைவரிடமும் நாங்கள் தொடர்ந்து எல்லாத் தகவல்களும் கொடுத்து அனுபவங்களைப் பகிரச் சொல்லி வருகிறோம். பாதி பேர் இப்படித்தான் தலை கால் இல்லாமல் எழுதுகிறார்கள்…….”

மர்ம மனிதன் சட்டர்ஜிக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பினான். அவர் மூன்று வருடங்களுக்கு முன் ரிச்சர்ட் டவுன்செண்ட் மற்றும் டேவிட்சனுடன் போன மலையேற்றப் பகுதி எது என்றும் ரிச்சர்ட் டவுன்செண்ட் பார்த்ததாகச் சொன்ன பகுதி எது என்றும் தெரிவிக்க முடியுமா என்றும் கேட்டிருந்தான். அந்தத் தகவல் மிக அவசரமாகத் தேவைப்படுவதாகவும், உடனடியாகத் தெரிவித்தால் என்றென்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன் என்றும் எழுதினான்.

கிருஷ்ணவேணி சொன்னதையே கூட்டத்தினரில் பலரும் ஆதரித்ததால் மாஸ்டர் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்ள, மூத்த துறவி அவர் ராஜினாமா கடிதத்தைக் கிழித்துப் போட்டார். கிழிந்தது ராஜினாமா கடிதம் மட்டுமல்ல தன் கௌரவமும் தான் என்று மாஸ்டரால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.  இது வரை அவருக்கிருந்த கௌரவம் அடுத்தவர் தந்து வந்ததல்ல. அவராக ஏற்படுத்தி வைத்திருந்தது. இப்போதும் அவர்கள் யாரும் அவரை கௌரவக்குறைவாகப் பார்க்கவில்லை….. ஆனால் அவராக அதை இழந்து விட்டார். இழந்தது பணமும், கௌரவமும் மட்டுமல்ல, அவருடைய அருமைக் குருவின் உயிரும் தான். முதலிரண்டைத் திருடியவன் அதையுமல்லவா சேர்த்து எடுத்து விட்டிருக்கிறான். மனம் கொதித்தது. மனம் அந்தக் கணத்தில் இந்தக் கணக்கைத் தீர்க்காமல் சாகக்கூடாது என்று உறுதி பூண்டது.

இந்தக் கூட்டத்திலும் ஓரிருவர் அவனுடைய ஆட்களாக இருக்கலாம். அவர்கள் யார் என்று யோகசக்தியால் கண்டுபிடிப்பது அவரைப் பொறுத்த வரை கஷ்டமான செயல் அல்ல. ஆனால் கண்டுபிடித்து ஒன்றும் ஆகப் போவதில்லை. இது வரை அவனைப் பற்றி அறிந்தது எல்லாம் வைத்துப் பார்க்கையில், கண்டுபிடித்தாலும் அவர்கள் மூலம் அவனை அடைய முடியாது என்பது அவருக்குத் தெரிந்தே இருந்தது.

கூட்டம் முடிந்த பின் மூத்த துறவி, கிருஷ்ணவேணி, மேலும் இரண்டு தலைமைக்குழு உறுப்பினர்களுடன் தனியாக மாஸ்டர் பேசினார். பேசும் போது அவர்கள் இயக்கத்தில் இருந்த அனிருத் என்ற கம்ப்யூட்டர், நெட்வர்க் விஷயங்கள், சர்வதேச ஆன்லைன் மோசடிகள் துப்பு துலக்குவது ஆகியவற்றில் மிகவும் தேர்ச்சி பெற்ற அனிருத் என்ற இளைஞன் உதவியை விஸ்வம் செய்த மோசடிகள் கண்டுபிடிக்க  நாடுவது என்று தீர்மானித்தார்கள்.  பின் மாஸ்டர் அவர்களிடம் மனம் விட்டுப் பேசினார். திருவனந்தபுரத்தில் சதாசிவ நம்பூதிரியைச் சந்தித்ததையும் அவர் சொன்னதையும் தெரிவித்தார். கடைசியில் சொன்னார்.  “எதிரி எங்க ரெண்டு பேர் ஜாதகத்தை சேர்த்தே கொண்டு போய் விசாரிச்சிருக்கறதுல இருந்து, நடந்த மத்ததயும் யோசிச்சா .விதி என்னையும் க்ரிஷையும் ஏதோ ஒரு வகைல சேர்த்து முடிச்சுப் போட்ட மாதிரி தெரியுது. ஒவ்வொரு சமயத்துலயும் நான் தப்பா எதையாவது செய்யப் போறப்ப அவன் தான் என்னை சரிப்படுத்தறான். எதிரியோட ஆளாகவே அவனைப் பார்த்து அப்படியே அவனை நடத்த இருந்த என்னை குரு ஸ்தானத்துக்கு உயர்த்தி நட்பு வளையத்துல கொண்டு வந்தான். அப்புறமா ’எதிரியோட கைப்பாவையா நீங்களும் கூட இருக்கலாம்’னு சொல்லி விஸ்வத்தை அடையாளம் கண்டுபிடிக்கவும் அவன் தான் காரணமாய் இருந்தான். கடைசியா நான் சாகத் தீர்மானிச்சப்ப கூட ஏதோ ஒரு உள்ளுணர்வுல என் கிட்ட பேச போன் செஞ்சு நான் சாகாம தடுத்ததும் அவன் தான்…..”

கிருஷ்ணவேணி சொன்னார். “அடுத்த நடவடிக்கை என்னன்னு தீர்மானிக்கறதுல இனிமே நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தே யோசிக்கிறது தான் சரின்னு தோணுது மாஸ்டர்…. “

மற்றவர்களும் ஒத்துக் கொள்ளவே மாஸ்டர் தலையசைத்தார். முடிவில்  க்ரிஷுக்குப் போன் செய்து ரிஷிகேசத்திற்கு வர முடியுமா என்று கேட்டார். அவன் உடனே சம்மதித்தான். அவருக்கு அவருடைய குரு வாழ்ந்த குடிலில் இரண்டு நாள் இருக்க வேண்டும் என்று தோன்றியது. மனபாரத்தை அவன் வருவதற்குள் அந்தக் குடிலில் அழுது இறக்கிவிட வேண்டும்… அவனுக்கும் அவருடைய குரு வாழ்ந்த குடிலைக் காண்பிக்க வேண்டும். அந்தக் குடிலில் உட்கார்ந்து அவர்கள் அடுத்து என்ன செய்வது என்று ஆலோசித்துத் தீர்மானிக்க வேண்டும்…..


ரிணிக்கு மயக்கம் தெளிந்த போது ஒரு அரையிருட்டு அறையில் இருந்தாள். தலை மிகவும் பாரமாக இருந்தது. தற்போதைய நிலையைத் தெளிவாக உணர சில நிமிடங்கள் தேவைப்பட்டன…..  நீல்கிரீஸ் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் அருகே போக்குவரத்து நெரிசல் இருந்ததால் அதை அடுத்திருந்த சிறிய தெருவில் ஸ்கூட்டியைத் திருப்பியதும், அந்தத் தெருவில் இருந்து குறுக்குத் தெருவுக்குத் திரும்பிய போது ஒரு மாருதி வேன் தெரு நடுவில் நிறுத்தப்பட்டு இருந்ததும், அதைத் தாண்டிப் போக முயற்சித்த போது ஒருவன் ‘ஒன் மினிட் ப்ளீஸ்’ என்று சொல்லி அதில் இருந்து இறங்கி அவளை நெருங்கியதும் நினைவுக்கு வந்தது. அதன் பின் ஒன்றும் நினைவில்லை. இப்போது இருக்கும் அறை அவளுக்குப் பரிச்சயம் இல்லாதது. கடத்தப்பட்டிருக்கிறோம் என்பது புரிந்தது. மெல்ல எழுந்து அமர்ந்தாள்.

அடுத்த நிமிடம் மனோகர் அந்த அறைக்குள் நுழைந்தான். ஒன்றுமே பேசாமல் அவளையே பார்த்தபடி அவன் நின்றான். அவளும் ஒன்றுமே பேசாமல் அவனையே பார்த்தாள். வழக்கமாக கடத்தப்பட்ட ஆட்கள், “நான் எங்கே இருக்கேன், யார் நீங்க, என்னை எதுக்காக கடத்துனீங்க என்றெல்லாம் பயந்து போய் கேட்பார்கள்’. ஒன்றுமே பேசாமல் அவனையே எடைபோடுகிற பார்வை பார்க்கும் இவள் அழுத்தமானவள், வித்தியாசமானவள் என்று அவன் எண்ணிக் கொண்டான்.

கடைசியில் அவன் தான் அவளிடம் பேசினான். ”இந்த இடத்துல இருந்து தப்பிக்கற எண்ணம் எதாவது இருந்துச்சுன்னா அதை இந்த நிமிஷமே விட்டுடு. உன்னால முடியாது. வீட்டை சுத்தி காவல் இருக்கு. நீயா பிரச்சனை பண்ணாத வரைக்கும். எங்களால  உனக்கு எந்த ஆபத்தும் வராது. பிரச்சனை பண்ண நினைச்சா உன்னை கடவுள் கூட காப்பாத்த முடியாது…”

“நீ யாரு? முதல்ல அதச் சொல்லு” என்றாள் ஹரிணி. அவள் குரலில் பயமோ, நடுக்கமோ இல்லை.

“இப்போதைக்கு என்னை எக்ஸ்ன்னு வெச்சுக்கோயேன்” என்றான் மனோகர்.

“சரி எக்ஸ். உனக்கு என்ன ப்ரச்சன. என்னை ஏன் கடத்தினே?”

இது கடத்தப்பட்ட பெண் பேசுவது போல் இல்லை. என்ன நடந்தது என்று அறிய ஆசைப்படும் மூன்றாம் நபர் பேசுவது போல் இருக்கிறது…. நடப்பது ரகசியமாய் நேர் ஒளிபரப்பு ஆகிக் கொண்டிருப்பதால் இதைக் கேட்டுக் கொண்டிருக்கும்  ‘தலைவன்’ எதிர்வினை எப்படி இருக்கும் என்று புரியாமல் மனோகர் நெளிந்தான்.

“எங்களுக்கு உன் கிட்ட ப்ரச்சன இல்லை. உன் காதலன் கிட்ட தான் ப்ரச்சன?”

“என்ன ப்ரச்சன?”

மனோகருக்கு இந்தக் கேள்வி-பதில் ஆரம்பமான விதமே பிடிக்கவில்லை. இதை நிறுத்த நினைத்தான். “நாங்க அதை அவன் கிட்ட பேசிக்கிறோம்…..”

“பேசியாச்சா, இல்லை இனிமே தான் பேசணுமா?”

“சமயம் பாத்து பேசறோம். அது ஒரு முடிவுக்கு வர்ற வரை நீ கலாட்டா பண்ணாம ஒத்துழைச்சா உனக்கு நல்லது.”

”அவன் எப்பவுமே சரியானதை மட்டும் தான் செய்வான். அதை நான் உட்பட அவன் யாருக்காகவும் மாத்திக்க மாட்டான்…..” அவள் சூரியன் கிழக்கில் தான் உதிக்கும் என்ற உலக உண்மையைச் சொல்வது போல் இதைச் சொன்னது மனோகருக்கு ஆச்சரியமாய் இருந்தது.

“ஆனால் உன்னைக் கடத்தினது தெரிஞ்சவுடனேயே துடிச்சுட்டான்னு கேள்விப்பட்டேன்.”

“அதெல்லாம் துடிப்பான். ஆனா அவன் தன்னை மாத்திக்க மாட்டான்” அவள் நிச்சயமாகச் சொன்னாள்.

”இப்படிப்பட்டவன காதலிக்கிறோமேன்னு வருத்தமாய் இல்லயா?” மனோகரால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

“நான் அவனைக் காதலிக்கிறதே அந்த கேரக்டருக்காகத் தான்”


“நல்லது. நாங்க சொல்றத அவன் கேட்கலைன்னா நீ இங்கே சித்திரவதை அனுபவிக்க வேண்டியிருக்கும். அதைப் படமாவோ, வீடியோவாகவோ நாங்க அவனுக்கு அனுப்பி வைக்க வேண்டி வரும். பார்க்கலாம்” சொல்லி விட்டு குரூரமாய் புன்னகைத்து விட்டு மனோகர் போனான்.

(தொடரும்)
என்.கணேசன் 

5 comments:

  1. Thrilling, touching and interesting. Now waiting for next Thursday.

    ReplyDelete
  2. Wow Harini
    Krish Rishikesh pogum pothu Hariniyai vaithu marma manitha thadai erpaduthuvaana?
    waiting

    ReplyDelete
  3. கிரிஷ் மாஸ்டர் சந்திப்புக்காக காத்திருக்கிறேன்...
    ஹரிணியின் துணிச்சலான பேச்சு அருமை...

    ReplyDelete
  4. தைரியமானவளாய் இருந்தால் ஓகே
    அதை காண்பிக்காமல் இருந்திருக்கலாம் என்று தோன்றியது
    அவர்களுக்கு மேல் கொண்டு செயல்களை நோக்கி தள்ளிவிட்டுவிடுவாள் போலவே ...........

    ReplyDelete
  5. Release chatrapathi sivaji book fast... we very much interested in Shivaji bro... all other novels compared to that feels nothing

    ReplyDelete