சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, October 4, 2018

இருவேறு உலகம் – 103


புதுடெல்லி உயரதிகாரி உடனே இஸ்ரோ டைரக்டரிடம் போனில்  பேசினான். அந்த ரகசிய மனிதன் கேட்கச் சொன்ன கேள்வியைக் கேட்டான்.  டைரக்டருக்கு அந்த உயரதிகாரி புரியாத புதிராக விளங்கினான். தங்கள் ஆராய்ச்சி சம்பந்தமாக என்ன தெரிவித்தாலும் கிட்டத்தட்ட வேண்டாவெறுப்பாகக் கேட்டுக் கொள்வது போலவே இருக்கும் அந்த ஆளுக்கு உண்மையில் இதில் எந்த ஈடுபாடும் இல்லை என்றே அந்த டைரக்டர் நினைத்திருந்தார். ஆனால் போன் செய்து கூப்பிட்டுக் கேட்கும் அளவுக்கு அந்த ஆள் இதில் அக்கறை காட்டுவது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.

“நேற்று தான் அந்த நாஸா விஞ்ஞானி பேசினார் சார். கிட்டத்தட்ட அதே போன்ற அலைவரிசைகள் இமயமலையில் சில  இடங்களில் அபூர்வமாக சில சமயங்களில் அகப்படுகின்றன என்கிறார் அவர். அதை நாஸா முன்பே கவனித்திருக்கிறது. அது உச்ச தவநிலையில் இருக்கும் யோகிகள் வெளிப்படுத்தும் அலைவரிசைகள் போல் இருக்கின்றது என்று   அவர்கள் சொல்கிறார்கள்…. சில சமயங்களில் அந்த அலைவரிசைகள் அசாதாரண வெப்பத்தையும் உருவாக்குமாம். அந்த நேரங்களில் கடுங்குளிர் காலத்திலும், சூரிய ஒளியே விழாத போதும் கூட இமயமலையின் பனி உருகுவது உண்டாம். அதை இமயமலையில் பனியில் ட்ரெக்கிங் போகிறவர்கள் கூடக் கண்டிருக்கிறார்கள், அதை அதிசயமாக நினைத்து ரிப்போர்ட் செய்திருக்கிறார்கள் என்று அந்த விஞ்ஞானி சொன்னார். அவர்களுக்கு அந்த யோகிகள் செயல் என்று தெரிவதில்லை என்றார் அவர். விஞ்ஞான பூர்வமாக முழுமையாக நிரூபிக்க அவர்களுக்கு இன்னும் அதிக ’டேட்டாஸ்’ தேவைப்படுகின்றது என்றாலும் இதைப் பூரணமாக நம்புவதாகச் சொன்னார்…. அது மட்டுமல்லாமல் அந்தக் கருப்புப் பறவையின் புகைப்படங்களை நம் இஸ்ரோ விஞ்ஞானிகள் மேலும் நுணுக்கமாக ஆராய்ந்ததில் அது ஒரு சக்தி வாய்ந்த விண்கலம் என்று தெரிய வந்திருக்கிறது. வெளித்தோற்றம் மட்டுமே பறவையினுடையதாக இருந்திருக்கிறது……”  


டைரக்டர் போனில் பேசிக் கொண்டிருக்கும் போது தனக்குள்ளே யாரோ புகுந்து கொண்டு கேட்பது போல் புதுடெல்லி உயரதிகாரி உணர்ந்தான். இந்த ரகசிய மனிதருக்குத் தெரிவிக்க வேண்டிய விஷயங்கள் எல்லாவற்றிலும் இது போன்ற உணர்வு வருவது வாடிக்கையாகி விட்டது….. மற்ற சமயங்களில் இந்தத் தொந்திரவு இல்லை….

அந்த ரகசிய மனிதருக்குப் போன் செய்து டைரக்டர் சொன்னதை உடனே சொன்னான். “சரி” என்ற ஒற்றைச் சொல்லோடு மறுபக்கம் முடித்துக் கொண்டது. ஐந்தே நிமிடத்தில் அவன் கணக்கில் பணம் வந்து சேர்ந்த செய்தி வந்து சேர்ந்தது.


ர்ம மனிதனுக்கு டைரக்டர் சொன்ன தகவலின் மூலமாகத் தனக்குத் தேவையான மிக முக்கிய வேறொரு தகவல் தெரிய வரலாம் என்று உள்ளுணர்வு சொன்னது. அதனால் அவன் தீவிரமாக யோசித்தான். அலெக்சாண்டிரியா நகர் மூதாட்டி காளி கோயிலில் கிடைத்த வரைபடத்தை வைத்துச் சொன்ன விவரங்கள் நினைவில் மறுபடி ஓடின.

”குளிர்கிறது…….. பனிமலைப்பகுதி………. பிரம்மாணடமான மலை போல் தெரிகிறது…… கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பனி படர்ந்திருக்கிறது….. பனிக்கு சொருகப்பட்டிருக்கிறது…… அந்தப் பாறைக்கு அடியில் ஒரு குகை……..” அடியில் ஒரு மிகப்பெரிய பாறை……  பாறையின் மேல் ஒரு ஆயுதம்….. அந்தக் கோயிலில் பெண் தெய்வம் கையில் இருந்தது போல் ஆயுதம்… ”குளிர்கிறது…….. பனிமலைப்பகுதி………. பிரம்மாணடமான மலை போல் தெரிகிறது…… கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பனி படர்ந்திருக்கிறது….. பனிக்கு சொருகப்பட்டிருக்கிறது…… அந்தப் பாறைக்கு அடியில் ஒரு குகை…….. அடியில் ஒரு மிகப்பெரிய பாறை……  பாறையின் மேல் ஒரு ஆயுதம்….. அந்தக் கோயிலில் பெண் தெய்வம் கையில் இருந்தது போல் ஆயுதம் ….என்ன ஆச்சரியம்…… குகைக்குள்ளே ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான்…… மிக வயதானவன்……. இடுப்பில் ஆரஞ்சு நிறத்துணியை உடுத்தியிருக்கிறான்….. கண்களை மூடித்தியானத்தில் இருக்கிறான்…… வேறு உடை எதுவும் உடலில் இல்லை…. ஆனால் இந்தக் குளிரிலும் அவன் உடம்பு நடுங்கவில்லை….. என்ன ஆச்சரியம் அவன் மூச்சு விடமாட்டேன்கிறான்….. உடலில் உயிர் இருக்கிறது……….ம்ம்ம்ம்ம்…… இப்போது ஒரு முறை மூச்சு விட்டான்……. பல நிமிடங்களுக்கு ஒரு முறை தான் மூச்சு விடுகிறான் போலிருக்கிறது…… அதுவும் ஒரு மூச்சு தான் விடுகிறான்……..”

அவள் சொன்ன இடம் இமயமலை என்பதிலும், அந்த மனிதன் ஒரு யோகி என்பதிலும் அவனுக்குச் சிறிதும் சந்தேகமில்லை. அந்தக் கடும்பனிக் குளிரிலும் உடல் நடுங்கவில்லை என்றால் அவன் யோகசக்தியே அந்தக் குளிர் பாதிக்காத அளவு வெப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்…. நாஸா விஞ்ஞானி சூரிய வெப்பம் படாமலேயே பனி உருகுவதாகவும், அதை ட்ரெக்கிங் போகிற சிலர் பார்த்திருக்கிறார்கள் என்று சொன்னதும் அது யோகிகளால் தான் என்று நம்புவதாகச் சொன்னதும் எல்லாம் சேர்த்துப் பார்த்தால் அந்த வரைபட இடத்தைக் கண்டுபிடித்து விடலாம் என்றே தோன்றியது.

ஒரு மாபெரும் புத்துணர்ச்சி பெற்றவனாய் மர்ம மனிதன் இணையத்தில் பனிக்காலத்தில் ட்ரெக்கிங் போகிறவர்கள் பற்றித் தேடினான். ஹிமாச்சல பிரதேச அரசாங்கமும், சில ட்ரெக்கிங் பயிற்சியாளர்களும் எழுதியிருக்கும் பக்கங்களை மேலோட்டமாகப் பார்த்து விட்டு மேலும் தேடினான். ‘இமயத்தின் பனிமலையேற்ற வீரர்கள் குழுமம்’ என்ற அமைப்பு ஒன்று தெரிந்தது. அதில் பல வீரர்கள் உறுப்பினர்களாக இருந்தார்கள். அவர்கள் அனைவரும் இமயத்தின் பனிமலைகளில் ட்ரெக்கிங் போன போது தங்களுக்கு ஏற்பட்ட சுவையான அனுபவங்களை விவரித்திருந்தார்கள். 127 இணையப் பக்கங்களில் அந்த அனுபவங்கள் இருந்தன. மர்ம மனிதன் பொறுமையாக  படிக்க ஆரம்பித்தான்.   அவனுக்குத் தேவையான தகவல் 116வது பக்கத்தில் இருந்தது. ரிச்சர்ட் டவுன்செண்ட் என்ற ஐரோப்பியர் மூன்று வருடங்களுக்கு முன் எழுதியிருந்தார்.

“டிசம்பர் 25. என்னுடைய கிறிஸ்துமஸ் இமயமலையில் கடும்பனியில் கொண்டாடினேன். எத்தனை தான் தயாராக வந்திருந்த போதும் இமயத்தின் பனி என்னை வதைக்கவே செய்தது. என்னுடன் ட்ரெக்கிங் வந்திருந்த டேவிட்சனும், சட்டர்ஜியும் பின் தங்கி விட்டார்கள். கிட்டத்தட்ட அரை கிலோமீட்டராவது கீழேயே இருப்பார்கள் போலிருந்தது. அவர்கள் வருவதற்காகக் காத்திருந்தேன். அப்போது தான் பக்கத்து மலையில் அந்த அதிசயக் காட்சியைப் பார்த்தேன். அங்கு திடீரென்று பனி உருக ஆரம்பித்தது. பனிப்புயலோ என்று ஆரம்பத்தில் பயந்தேன். அந்த மலையில் ஒரு இடத்தில் மட்டும் ஏற்படுகிற மாற்றம் எப்படி பனிப்புயல் ஆகும்..? பயம் தணிந்து ஆச்சர்யத்துடன் கவனிக்க ஆரம்பித்தேன். என் பார்வை மட்டத்திற்குச் சற்று கீழே அந்த அதிசயம் நடந்து கொண்டிருந்ததால் எனக்கு அது மிகத் தெளிவாகத் தெரிந்தது. பனி உருகி உருகி ஏதோ ஒரு இரும்பு ஆயுதம் தெரிய ஆரம்பித்தது. அந்த இரும்பு ஆயுதத்தை இந்தியாவில் சில கோயில்களில் பார்த்திருக்கிறேன். மூன்று சிறிய கூர்மையான அம்புகளைக் கொண்ட ஒரு ஈட்டி அது. அங்கும் ஏதாவது சிறிய பனிக்கோயில் இருக்கிறதோ என்னவோ? இமயத்தில் கோடைகாலத்தில் மட்டும் வழிபாடு நடக்கும் எத்தனையோ சிறிய கோயில்கள் இருக்கின்றன. அவற்றில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். திடீர் என்று ஒரு கழுகு எங்கிருந்தோ வந்து அந்த இடத்தை வட்டமிட ஆரம்பித்தது. இதுவரை இமயத்தில் இந்தப் பனிக்காலத்தில் அப்படிப்பட்ட கழுகை நான் பார்த்ததில்லை. திடீரென்று நான் நின்றிருந்த இடம் லேசாகி நானும் வழுக்க ஆரம்பித்தேன். நான் சுதாரித்து ஒரு உறுதியான இடத்தில் நிற்பதற்குள் நிறையவே கீழே வந்து விட்டேன். டேவிட்சனும் சட்டர்ஜியும் பார்வைக்குத் தெரிந்தார்கள். அவர்கள் கையசைத்தார்கள். நானும் கையசைத்து விட்டுப் பக்கத்து மலையைப் பார்த்தேன். உருகிய பனி வழிவது லேசாகத் தெரிந்தாலும் அந்த ஈட்டி என் பார்வைக்குத் தெரியவில்லை. சற்று முன் வட்டம் போட்ட கழுகும் கூடத் தெரியவில்லை. நான் டேவிட்சனிடமும், சட்டர்ஜியிடமும் நான் பார்த்த காட்சியைச் சொன்னேன். அவர்களும் ஆர்வத்துடன் அந்தக் காட்சியைக் காண ஆசைப்பட்டார்கள். வேகமாக மறுபடி மேலே ஏறினோம். நான் முன்பு இருந்த இடத்தை அடைந்தும் விட்டோம். ஆனால் இப்போது பார்த்த போது பக்கத்து மலையில் சற்று முன் பார்த்த காட்சிக்கான அறிகுறியே இல்லை. கழுகையும் காணோம். டேவிட்சனும், சட்டர்ஜியும் என்னைச் சந்தேகத்துடன் பார்த்தார்கள்……”

மர்ம மனிதன் பரபரப்படைவது மிக அபூர்வம். இப்போது அவன் பரபரப்படைந்தான். அந்தக் குழுமத்தை இணையத்தில் நிர்வகிக்கிற நபரின் போன் நம்பர், விலாசம் கண்டுபிடித்தான். அட்லாண்டாவில் வசிக்கும் அவரைப் போனில் தொடர்பு கொண்டான். ரிச்சர்ட் டவுன்செண்டின் போன் நம்பர், விலாசம் கேட்டான்.

“அவர் இரண்டு வருடங்களுக்கு முன் இமயமலை மலையேற்றத்தின் போது  சறுக்கி விழுந்து இறந்து விட்டார்….”

மர்ம மனிதன் யோசித்து விட்டு  டேவிட்சன், சட்டர்ஜி இருவரின் தொடர்பு எண், விலாசம் கேட்டான்.

“டேவிட்சனும் டவுன்செண்டோடு சேர்ந்து தான் அந்த மலையேற்றத்தின் போது இறந்தார்…”

இரண்டு பேர் அடுத்த வருட மலையேற்றத்திலேயே இறந்து போனது மர்ம மனிதனை நிறைய யோசிக்க வைத்தது.

(தொடரும்)
என்.கணேசன்



7 comments:

  1. An amazing spiritual thriller. The best of its kind. Hats off Ganeshan sir.

    ReplyDelete
  2. இரண்டு ஆண்டுகள் சென்றதே தெரியவில்லை. மிக்க நன்றி!

    ReplyDelete
  3. மர்ம மனிதனுக்கு தெரியப்படுத்துவதற்க்கு தான் டவுன்செண்ட்... தான் பார்த்து..அதை இணையத்தில் பதிவிட்டது போலிருக்கிறது...

    தனக்குக்கு கிடைத்த சில நுண்ணிய தகவல்களை மட்டும் வைத்து இந்த அளவு மர்ம மனிதன் கண்டறிந்தது..சூப்பர்...

    ReplyDelete
  4. மதிப்பிற்கூறிய ஐயா, குழந்தை கடத்தல் ,மற்றும் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடித்து பெற்றோர்களிடம் சேர்க்க அருள் செய்யுங்கள் ஐயா. தாங்களுக்கு கோடனா கோடிகள் நன்றி ஐயா

    ReplyDelete
  5. ம .மனிதனின் அறிவு திறன் சவாலாக உள்ளது ஆக்சுவல்ல இவனின் விருப்பம் என்ன எதை நோக்கி என்று இன்னும் ஒரு புரிதலுக்குள் வரமுடியவில்லை மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும் இல்லை முடிந்தவுடன் ...............

    ReplyDelete