சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, May 2, 2014

விஞ்ஞானத்தால் மெய்ஞானத்திற்கு ஆபத்தா?

பெண்மை.காமில் கொடுத்த பேட்டியின் தொடர்ச்சி...

சரவணகுமார்: Which post has earned highest comments in your blog Ji?

நான்: நிச்சயமாக பரம(ன்) ரகசியத்தின் கடைசி அத்தியாயம் தான். பொதுவாகவே என் மற்ற கட்டுரைகளுக்கு வருவதைக்காட்டிலும் மிக அதிகமான கமெண்ட்கள் பரம(ன்) இரகசியம் அத்தியாயங்களுக்கு வரும். அச்சு நூலாக வெளி வந்த பின் படித்து முடித்த வாசகர்களிடமிருந்து நிறைய போன் கால்கள், மெயில்களில் பாராட்டுகள் வந்தன. ப்ளாகிலும் இந்தக் கடைசி அத்தியாயத்திற்கு இரண்டு நாட்களில் இது வரை 65 கமெண்ட்கள் வந்துள்ளன. எல்லாம் தங்களைப் போன்ற அன்பு வாசகர்களின் ஆத்மார்த்த பாராட்டுகள். மனம் நிறைந்து விட்டது.



தமிழ் நாவலாசிரியை சீதாலட்சுமி: I am a vast reader sir... even a fast reader. I usually read the first para... then the 4th para and will be able to relate them without any slip. I have done this with pages as well. But, I haven't done this ever... ever in your stories! You just keep the reader plugged in to you! I owe all my respect to you! Now to the question, "எனக்கும் கடவுள் மேல் அலாதியான பக்தியுண்டு. அதற்கு... என் வாழ்வில் நடந்த பல விஷயங்கள் ஆதாரம். இருப்பினும்... என்னால் கடவுளை எட்டி நின்றே பார்க்க முடிகிறதோ என்ற எண்ணம். உங்களது எழுத்துகளில் வருவது போல், நமக்கு மேலிருக்கும் சக்தியை உள்வாங்கும் திறன் இல்லையோ என்ற எண்ணம்.உங்களது கதைகளின் ஆழமும், உங்கள் பதிவுகளின் தாக்கமும்... அந்த உள்வாங்கும் திறன் சாத்தியம் என்று எனக்கு உணர்த்துகிறது. அது சாத்தியம் தானா? நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?"


நான்: நமக்கு மேலிருக்கும் சக்தியை உள்வாங்குவது அசாத்தியமான விஷயம் அல்ல. கடவுளை விட நெருக்கமாக யாருமே நம்மிடம் இருக்க முடியாது என்று கூட சொல்லலாம். நிறைய சமயங்களில் இதை நான் உணர்ந்திருக்கிறேன். என்னைப் பொறுத்த வரை பிரச்னையாக நான் உணர்வது அந்த மகாசக்தியுடன் தொடர்ந்து நெருக்கமாக இருக்க முடிவதில்லை என்பது தான். அவ்வப்போது விலகி விடுவது தான். அதை விட மற்ற பல விஷயங்கள் முக்கியமாகி அவற்றை கடவுளுக்கும் நமக்கும் இடையே நாம் இழுத்து வைத்துக் கொள்கிறோம். அதனால் தான் நாம் நீங்கள் சொல்வது போல் எட்டி நின்று பார்க்க நேர்கிறது. எல்லா காலங்களிலும் நமக்கு அந்த மகாசக்தியே முக்கியமாக இருக்குமானால் இடைவெளியும் வராது, விலகி இருக்கவும் நேரிடாது. அந்த ஞானம் என்றாவது ஒரு நாள் வந்து நிரந்தரமாகத் தங்கும். அன்று வரை விலகலும் நெருங்கலும் தொடர்ந்தே ஆக வேண்டும்.



ஸ்ரீமதி வெங்கட்: நான் உங்க கதை எல்லாத்தையும் படிச்சிருக்கேன்,இந்த கதை உங்க ப்ளோக்ல படிச்சேன் ரொம்ப நல்லா இருந்தது,ஆனா இப்போ யோகா சொல்லி கொடுப்பவங்களும் ,தியானம் சொல்லி கொடுப்பவங்களும்,கடவுள் இல்லைன்னு ரொம்ப ஆணிதரமா அடிச்சி சொல்லுறாங்களே?ஒருத்தர் அணு லிங்க வடிவில் இருப்பதால் பூமியில் லிங்கம் தோன்றியதுன்னு சொல்றாங்க?இன்னொருத்தங்க இறை துகள் மட்டும் தான் உண்மை அதற்கு மேல் வெறும் வெட்ட வெளின்னு சொல்றாங்க ,நீங்க இதை பத்தி என்ன நினைக்கறீங்க?வளரும் இந்து சமுதாயத்துக்கு இது ரொம்ப ஆபத்து இல்லையா?


நான்: இறைவன் அருவமா உருவமா என்ற தலைப்பில் நான் ஒரு கட்டுரையே அறிவார்ந்த ஆன்மிகம் பகுதியில் எழுதி உள்ளேன். சுருக்கமாகச் சொல்வதானால் கடவுள் என்ற மகாசக்தி ஒரு உருவத்திலோ வடிவத்திலோ இயல்பாய் அமைந்தது அல்ல. ஆனால் எந்த வடிவத்தையும் அது எடுக்க முடியாததும் அல்ல. உருவமில்லாத இறைவன் மீது மனதைக் குவிப்பது கஷ்டம் என்பதால் நம் முன்னோர் இறைவனை உருவகப்படுத்தி வணங்கினார்கள்.

இறை துகள் உட்பட பல விஞ்ஞானக் கருத்துக்கள் உண்மையின் ஒவ்வொரு கோணங்களே. ஆனால் அவை மட்டுமே முழுமையான உண்மை அல்ல. விஞ்ஞானம் எதிர்காலத்தில் இன்னும் நிறைய கண்டுபிடிக்கக்கூடும். அவை மேலும் வித்தியாசமாகவும், புதிராகவும் கூட இருக்கக்கூடும். முடிவான உண்மை என்று ஒன்றை விஞ்ஞானம் எட்ட முடியுமானால் அப்போது அது நம் முன்னோர் சொல்லி இருப்பதை ஒத்திருக்கும் என்பதே என் கருத்து.

இந்த விஞ்ஞானக் கருத்துக்கள் நம் மெய்ஞானத்திற்கு எதிரானதோ சவாலோ அல்ல. எதிர் கேள்விகளும், சந்தேகங்களும் தவறு அல்ல. இதனால் இந்திய ஆன்மிகத்திற்கு ஆபத்தும் அல்ல. என்றுமே உண்மையான ஆபத்து மூடநம்பிக்கையும், போலித்தனமும் தான். இந்த இரண்டுமே ஆன்மிகப் போர்வையில் இருந்த போதிலும் மிக மிக ஆபத்தானவை.


நாராயணி: என்னோட என்னத்தை அப்படியே சொல்லிடீங்க. நீங்க சொல்ற மாதிரி தான் இனி இதை கண்டிப்பாக follow பண்ணனும்னு resolution எடுப்பேன். அனால் முடியவில்லை.

நீங்களே இரண்டு வழியை சொல்லி இருக்கீங்க, இப்ப நான் இரண்டாவது வழியில் தான் பயணிக்கிறேன். புத்தகங்களை படித்து தான் பாசிடிவாக இருக்கிறேன். நீங்கள் சொன்ன முதல் வழியில் எப்படி ஆழம் வரை செல்வது என்று சற்று புரியவில்ல. உங்களால் முடிந்தால் அதையும் விளக்குங்களேன்.

இன்னுமொரு கேள்வி ப்ளீஸ்,

எனக்கு தன்னம்பிக்கை சில சமயங்களில் மிகவும் குறைந்து என் இலட்சியங்கள், கனவுகள் அனைத்தும் உடைந்து போனது போல் உணர்கிறேன். இதிலிருந்து எப்படி வெளி வந்து தன்னம்பிகையுடன் இலட்சியத்தை அடைவது.


நான்: ஆழம் வரை போவது என்றால் ரமண மகரிஷியின் “நான் யார்?” என்ற கேள்வியின் பின் போவது போல் தான். ஒவ்வொரு பதிலிலும் கேள்வி கேட்டு மேலும் ஆழமாய் போவது. இதை வார்த்தைகளில் விளக்குவது கஷ்டம் என்றாலும் முயற்சிக்கிறேன். நெகடிவ் எண்ணங்களின் அஸ்திவாரமே அதன் தவறான அனுமானங்கள், பயமுறுத்துதல் ஆகியவை தான். அது சொல்வதை எல்லாம் ‘அது எப்படி சரி?” என்றோ ‘அதனால் என்ன?’ என்றோ கேட்டுக் கொண்டே போங்கள். சில இடத்தில் மேலே தொடர்ந்து சொல்ல நெகடிவ் எண்ணங்களுக்கு எதுவுமே இருக்காது. தானாக வலுவிழந்து போகும்.


தன்னம்பிக்கை குறைந்து எல்லாமே தகர்ந்து விட்டது போலத் தோன்றுவது எல்லாருக்கும் சில சமயங்களில் நிகழக் கூடியதே. அதே போல் சில சமயங்களில் நாம் எல்லாவற்றையும் ஜெயித்து விட்டது போல கர்வம் கூட சில வெற்றிகளின் போது வரும். இரண்டும் பொய்யானவை. உண்மையின் அடிப்படைத் தன்மை இல்லாதவை. இந்த இரண்டும் தானாக வடிந்து போய் விடக் கூடிய உணர்வு. பெரிதுபடுத்தாதீர்கள். அந்த நேரங்களில் எந்த அவசர முடிவுக்கும் வராதீர்கள். எதையும் செயல்படுத்தாதீர்கள். ஒன்றுமே செய்யாதீர்கள். பொறுங்கள். ஓரிரு நாட்களில் போய் விடும். சொல்கிற அளவுக்கு சுலபம் அல்ல தான். ஆனால் பொறுத்துப் பார்த்தால் மறுபடி நிதானம் திரும்பி விடும். நல்ல புத்தகங்கள், நல்ல மனிதர்கள், நல்ல இசை, நல்ல இயற்கைக் காட்சிகள் எல்லாமே நம்மை நெகடிவ் சமயங்களில் பாசிடிவ் பக்கம் இழுப்பவை. அவற்றின் உதவியை நாடலாம்.


(தொடரும்)

2 comments:

  1. Parama(n) Rakasiyam :- Still the words are running in my mind. Excellent.

    ReplyDelete
  2. "என்னைப் பொறுத்த வரை பிரச்னையாக நான் உணர்வது அந்த மகாசக்தியுடன் தொடர்ந்து நெருக்கமாக இருக்க முடிவதில்லை என்பது தான். அவ்வப்போது விலகி விடுவது தான். அதை விட மற்ற பல விஷயங்கள் முக்கியமாகி அவற்றை கடவுளுக்கும் நமக்கும் இடையே நாம் இழுத்து வைத்துக் கொள்கிறோம். அதனால் தான் நாம் நீங்கள் சொல்வது போல் எட்டி நின்று பார்க்க நேர்கிறது"

    I agreed the same, Could we go much deeper and come back and say it in simpler way that anytime when you feel resistance in mind then you are away from God.

    It is kind of "no ball", everyone wants to do well, but no ball scenario is not accepted.

    ReplyDelete