சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 10, 2014

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் – 8



·         றவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
(எத்தனை பெரிய உண்மை. போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு நிலைக்கும். கொடுத்த கடனைக் கேட்டுக் கொண்டே இருந்தால் தான் திரும்பக் கிடைக்கும்)

·          உதவாத செட்டிக்கு சீட்டு அனுப்பிக் கேட்டது போல!
(நேரில் போய் கேட்டாலே உதவாத ஆளிடம் சீட்டு அனுப்பிக் கேட்டால் தருவானா?)

·         அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமிர்தமுமா?
      (இன்று பலரும் இப்படித்தானே இருக்கிறார்கள்?)

·         ஆனை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது! 
   (எல்லாம் காலத்தின் கோலம்!)


·         அறப்படித்தவன் அங்காடிக்குப் போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.
(அதிகமாய் படித்தவர்கள் பலரும் இப்படித்தான்)


·        உள்ள பிள்ளை உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்கு திருப்பதிக்கு நடக்கிறாள்.
(இருக்கிற குழந்தைக்கு சோறு போடாமல் அது உரலில் ஒட்டிக் கொண்டிருக்கும் தானியத்தை நக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையில் அடுத்த பிள்ளை வேண்டும் என்று திருப்பதிக்கு வேண்டிக் கொண்டு நடக்கிறாளாம். இப்படியும் இருக்கிறார்கள்)

·         இறுகினால் களி. இளகினால் கூழ்.
(பல இல்லத்தரசிகளின் சமையல் இந்த லட்சணம் தான்)

·         ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது.
(யாருக்கு உதவுகிறோம் என்று சிந்தித்து உதவா விட்டால் இப்படித்தான்)

·         எடுப்பது பிச்சை. ஏறுவது பல்லாக்கு.
(பலருடைய போக்கு இப்படித்தான் இருக்கிறது)


·         எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?
(எட்டி பழுத்தாலும் அதன் கசப்பால் சாப்பிட உதவாது. கஞ்சனுக்கு எத்தனை செல்வம் வந்தாலும் அதில் யாரும் பலன் அடைய முடியாது)


தொகுப்பு: என். கணேசன்


8 comments:

  1. அருமையான தொகுப்பு... நன்றி... பலதும் உண்மைகள்...

    ReplyDelete
  2. "எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?"
    (எட்டி பழுத்தாலும் அதன் கசப்பால் சாப்பிட உதவாது. கஞ்சனுக்கு எத்தனை செல்வம் வந்தாலும் அதில் யாரும் பலன் அடைய முடியாது)
    அதேபோல்,
    அன்பு பாசம் அற்ற வறட்சி இதயம் உள்ளவர்கள் வாழ்ந்த என்ன யாருக்கு பலன்?

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. இன்றுதான் உங்கள் தளத்திற்கு வரும் வாய்ப்புக் கிடைத்தது.
    சில பழமொழிகளுக்கு உங்கள் விளக்கம் போதாது (அ)பொருந்தாது -உ-ம் இறுகினால் களி) என்றாலும், நமது மக்களின் பழமொழி, சொலவடைகளைத் தொகுத்துத் தரும் அரிய பணி பாராட்டுக்குரியது. தொடருங்கள் நன்றி.

    ReplyDelete
  4. பல பழ மொழிகள் புது மொழிகளாகவே இருந்தன, ஆம், இதற்கு முன் கேட்டிராத அருமையான பழ மொழிகள். பகிர்ந்தமைக்கு நன்றி.

    உங்கள் தளத்திற்கு முதன் முறையாக வருகிறேன். படைப்புகளை கண்டு வியக்கிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. கேள்விப்படாத பழமொழிகள் , தொடருங்கள் !!!. அருமை

    ReplyDelete
  6. அருமை அருமை அருமை பழமை இன்னும் உயிரோடு இருக்குது...

    ReplyDelete
  7. நல்ல தொகுப்பு
    மிக்க நன்றி

    ReplyDelete