சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 20, 2014

பரம(ன்) ரகசியம் – 85



ணபதியைக் கொன்று விட்டால் எதிர்ப்பு சக்தியை அழித்து விடலாம் என்று கேள்விப்பட்டவுடன் மறுபடி வீடியோ கான்ஃப்ரன்சிங்கில் ஆலோசனை செய்தார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டபடி பாபுஜி ஜான்சனை அழைத்துப் பேசினார்.

“ஏன் ஜான்சன் அந்தப் பையன் கணபதி விசேஷ மானஸ லிங்கத்துக்கு அவசியம் தானா?

ஜான்சன் சொன்னார். “தெரியலை. தென்னரசும், குருஜியும் தான் அந்த சிவலிங்கத்திற்கு நித்ய பூஜை தடைபட்டு விடக் கூடாதுன்னு சொல்லிகிட்டு இருந்தாங்க. அப்படி பூஜை அவசியம்னா கணபதியை விட்டால் நமக்கு வேற வழி கிடையாது

அந்த விசேஷ மானஸ லிங்கத்துக்கு பூஜை செய்யாட்டி என்ன ஆகும்?ஜெர்மானியப் பெண்மணி கேட்டாள்.

“தெரியலை. குருஜியைத் தான் கேட்கணும்”  ஜான்சன் சொன்னார்.

உடனடியாக குருஜியிடம் ஜான்சனும், பாபுஜியும் போனார்கள். கணபதியைக் கொன்றால் என்ன என்கிற ரீதியில் பாபுஜி கேட்ட்தும் குருஜிக்கு வந்த கோபத்திற்கு அளவில்லை. ஆனால் கண்ணைக் கூட இமைக்காமல், பாதிப்பையே காட்டாமல் குருஜி பாபுஜியைப் பார்த்தார். இவனிடம் நல்லது கெட்டது பேசிப் புண்ணியம் இல்லை. வியாபாரியிடம் லாப நஷ்டக் கணக்கு தான் பேச வேண்டும். விசேஷ மானஸ லிங்கம் சக்தி வாய்ந்ததாய் இருக்கணும்னா அதுக்கு தொடர்ந்து நித்ய பூஜை நடந்து தானாகணும்.  இவனுக்கு முன்னாடி ரெண்டு நாள் அதுக்குப் பூஜை செய்தவன் பயந்து ஓடினதுக்கப்புறம் இவனைக் கூட்டிகிட்டு வர ஒரு நாளுக்கு மேல ஆச்சு. அந்த நாள்ல வேதபாடசாலையில் சித்தரே ரகசியமாய் வந்து பூஜை செய்துட்டுப் போயிருக்கார். அப்படின்னா நித்ய பூஜை எவ்வளவு முக்கியம்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கணும். அவனைக் கொன்னுட்டா அந்த சிவலிங்கத்தோட மதிப்பு வெறும் ரெண்டாயிரம் ரூபாய் ஆயிடும். உனக்கு கேட்டதெல்லாம் கொடுக்கிற கல்பவிருக்‌ஷம்  வேணுமா இல்லை ரெண்டாயிரம் ரூபாய் அவசரமாய் தேவைப்படுதா?

பாபுஜிக்கு அந்த நாளில் அந்த சிவலிஙகத்தின் மீது  திபெத் பகுதியில் பூக்கும் காட்டுப் பூக்கள் இருந்ததாய் கேள்விப்பட்டதும் ஞாபகம் வந்தது.  மன உளைச்சலுடன் பாபுஜி அழாத குறையாகக் கேட்டார். அப்படின்னா என்ன தான் செய்யறது குருஜி

“எல்லாருமா சேர்ந்து வேறெதாவது வழியை யோசிங்க பாபுஜி. எனக்கு உடம்பு சரியாயிருந்தா நானே ஏதாவது வழி கண்டுபிடிச்சுச் சொல்லி இருப்பேன்...என்று சொல்லி குருஜி கண்களை மூடிக் கொள்ள வேறு வழியில்லாமல் இருவரும் வெளியே வந்தார்கள்.

ஜான்சனையும் கூட்டிக் கொண்டு தனதறைக்குப் போன பாபுஜி மறுபடியும் அந்த அறுவருடனும் ஆலோசனை நடத்தினார். ஆறு பேரும் பரபரப்புடனும், டென்ஷனுடனும் பைத்தியம் பிடித்தது போல இருப்பதாக ஜான்சனுக்குத் தோன்றியது. அவருக்கு அதைத் தப்பு சொல்லத் தோன்றவில்லை. இப்படியொரு மகாசக்தி நிரூபணமாகி அவர்கள் வசம் இருக்கையில் அதை உபயோகிக்க வழியில்லாமல் போனால் பின் எப்படித் தான் இருக்கும்? அவருக்கே இப்போது பணம் நிறைய வேண்டி இருக்கிறது. விவாகரத்து செய்த மனைவிக்குத் தரவேண்டிய பணம் அற்ப சொற்பம் அல்ல. இந்த ஆராய்ச்சிகள் வெற்றி பெற்று விட்டால் அவரும் பின் எப்போதும் பணத்திற்குக் கவலைப்பட வேண்டியதில்லை... விசேஷ மானஸ லிங்கம் தயவு செய்யுமா?

குருஜி அவன் அறைக்குள் வந்த போது கணபதிக்கு பரபரப்பு தாங்கவில்லை. “கூப்பிட்டிருந்தால் நானே வந்திருப்பேனே குருஜி என்று ஆதங்கப்பட்டுக் கொண்டே வரவேற்றான்.

குருஜி அவனைக் கனிவுடன் பார்த்துச் சொன்னார். “நான் கிளம்பறேன் கணபதி உன் கிட்ட சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்

அவருக்கு வேறுபல வேலைகள் இருப்பதால் அதையெல்லாம் கவனிக்கப் போகிறார் என்று நினைத்த கணபதி தலையாட்டினான். குருஜி அவனிடம் ஒரு உறையை நீட்டினார். “இது உனக்கு நான் தர வேண்டிய பணம். இன்னும் ரெண்டு அல்லது மூணு நாளைக்கு மேல் நீ இங்கே இருக்க வேண்டி வராதுன்னு நினைக்கிறேன். அதனால அது வரைக்கும் கணக்கு போட்டு தந்திருக்கேன்

அந்தப் பணத்தை வாங்க அவனுக்கு கூச்சமாய் இருந்தது. பணத்திற்காகத் தானே எனக்கு பூஜை செய்தாய் என்று சிவன் கேட்பது போல இருந்தது. ஆனால் அம்மாவிடம் அவன் நல்ல தொகை கிடைக்கும் என்று சொல்லி விட்டுத் தான் கிளம்பி வந்திருக்கிறான். சுப்புணிக்கும் அவன் பிள்ளையாருக்குப் பூஜை செய்ததுக்குப் பணம் தர வேண்டும். என்ன தான் செய்வது என்ற தர்மசங்கடம் அவன் முகத்தில் தெரிந்தது.

குருஜிக்கு அவன் தர்மசங்கடம் புரிந்தது. புன்னகையோடு சொன்னார். “நான் கிளம்பறேன்னு நினைச்சவுடனே என் கனவுல உன்னோட சிவன் கணபதி கணக்கை செட்டில் பண்ணாம போயிடாதேன்னு உத்தரவு போட்டுட்டார். அதனால தான் உடனே கொண்டு வந்துட்டேன்...

கணபதிக்கு கண்கள் நிறைந்தன. ‘இந்த சிவனுக்குத் தான் எத்தனை பாசம் என் மேல. என் நிலைமையைப் புரிஞ்சு வச்சுட்டு குருஜி கிட்ட இப்படி சொல்லி இருக்காரே”. சிவனே சொன்ன பிறகு பணம் வாங்க அவனுக்குத் தயக்கம் இருக்கவில்லை. சந்தோஷமாக வாங்கிக் கொண்டான்.

அவனையே பார்த்துக் கொண்டிருக்கையில் குருஜி மனம் லேசாகியது. கிளம்பினார். கணபதி அவர் காலில் விழுந்து நமஸ்கரித்தான். குருஜிக்கு கால்களும் மனதும் கூசின. உன்னை ஆசிர்வதிக்கிற அளவுக்கு எனக்கு வயசு ஒன்னைத் தவிர வேற எந்த தகுதியும் இல்லையே கணபதி!என்று மனதில் அழுதார்.

வாசல் வரை போனவர் திரும்பி அவனைப் பார்த்துக் கேட்டார். “எனக்கு ஒரு உபகாரம் செய்வியா கணபதி?

“என்ன இப்படிக் கேட்கறீங்க குருஜி. உத்தரவு போடுங்க. நான் செய்யறேன்

“நீ உன் சிவனையும் பிள்ளையாரையும் கும்பிடறப்ப எனக்காகவும் வேண்டிப்பியா? சொல்லும் போதே அவர் குரல் உடைந்தது.

அவர் தமாஷ் செய்கிறாரோ என்ற சந்தேகம் கணபதிக்கு வந்தது. ஆனால் அவர் உணமையாகவே கேட்கிறார் என்பது புரிந்த போது அவன் நெகிழ்ந்து போனான். என்னையும் ஒரு பொருட்டாய் மதித்து இப்படிக் கேட்கிறாரே இத்தனை பெரிய மனிதர்என்று நினைத்தவனாய் கைகூப்பியபடி சொன்னான். “கண்டிப்பா வேண்டிக்கறேன் குருஜி”.
கடைசியாக ஒரு முறை கண்கள் நிறைய அவனைப் பார்த்து விட்டு குருஜி அங்கிருந்து கிளம்பினார்.

பாபுஜி மறுபடியும் மற்றவர்களைக் கலந்தாலோசித்தார். எகிப்தியர் திட்டவட்டமாகச் சொன்னார். “பாபுஜி. நீங்கள் இனி எதற்கும் குருஜியை நம்பிப் பயனில்லை.... நமக்கு உதவ வேறு யாரையாவது கண்டுபிடிப்பது நல்லது

தென்னாப்பிரிக்கர் சொன்னார். “யாரோ தடுப்பு மந்திரமோ, சூனியமோ செய்திருக்கிறார்கள். அதை உடைக்க ஒரு திறமையான ஆளைப் பிடிப்பது நல்லது பாபுஜி. எங்கள் நாட்டில் இருந்து கூட என்னால் ஆளை அனுப்ப முடியும். ஆனால் உடனடியாக  அனுப்புவதில் விசா, போலீஸ் கண்காணிப்பு என்று நிறைய சிக்கல் இருக்கிறது. உங்கள் நாட்டிலேயே ஒரு ஆளைப் பிடித்து உடனடியாக அந்த தடுப்பு சக்தியை உடைக்கப் பாருங்கள்... உதயன் சுவாமியை வரவழைக்க முடியுமா என்று இன்னொரு தடவை குருஜியிடம் கேட்டுப் பாருங்களேன்.

இதற்கு முன்னால் அதைக் கேட்டதற்கு என்னை ஏதோ அபசாரம் செய்தது மாதிரி குருஜி பார்த்தார். பணத்தினால் வாங்க முடியாத விஷயங்கள் உலகத்துல இருக்குன்னு கடுமையாய் சொன்னார். அதனால இன்னொரு தடவை கேட்கறதில் அர்த்தமே இல்லை

அப்படியானால் வேறு யாராவது ஆளைச் சீக்கிரமாய் பார்த்துச் செய்ய வேண்டியதை உடனடியாகச் செய்யுங்கள்என்றார் எகிப்தியர்.


பரபரப்புடன் யோசித்து விட்டு பாபுஜி உடனடியாகத் தன் நெருங்கிய நண்பர்களுக்குப் போன் செய்தார். விசேஷ மானஸ லிங்கத்தைப் பற்றிச் சொல்லாமல் மந்திரம் சூனியம் ஆகியவற்றை உடைக்க முடிந்த நம்பகமான ஆள்கள் இருக்கிறார்களா என்று விசாரித்தார். இரண்டு நண்பர்கள் கேரளாவில் இருக்கும் நம்பீசன் என்ற ஒரு மந்திரவாதியைச் சொன்னார்கள். செய்யும் வேலைக்கு அவர் வாங்கும் கூலி அதிகம் என்றாலும் அவர் சக்தி வாய்ந்தவர், ரகசியம் காக்கும் நம்பிக்கையான மனிதர், அவரை சில வேலைகளுக்குப் பயன்படுத்தி இருக்கிறோம், அவர் சக்தியை நேரடியாக உணர்ந்திருக்கிறோம் என்று சொன்னார்கள். அதற்கு மேல் யோசிக்காமல் உடனடியாக பாபுஜி அந்த மந்திரவாதியைத் தொடர்பு கொண்டார். என்ன பணம் வேண்டுமானாலும் தருகிறேன். உடனே விமானத்தில் கிளம்பி வாருங்கள்”.  ஒப்புக் கொண்டு நாளை அதிகாலை வந்து சேர்வதாக அந்த மந்திரவாதி உறுதியளித்தார்.

பாபுஜி தயக்கத்துடன் தான் நாளை காலை ஒரு மந்திரவாதி வரப் போவதாக குருஜியிடம் தெரிவித்தார். தன்னைக் கேட்காமல் அந்த ஏற்பாட்டைச் செய்ததற்காக அவர் கோபிப்பாரோ என்று நினைத்தார். ஆனால் குருஜி “நல்லதுஎன்று சொன்னார். எப்போதோ மனதளவில் விலகி விட்ட பிறகு யார் வந்தால் எனக்கென்ன என்ற எண்ணம் தான் குருஜியிடம் மேலோங்கி இருந்தது.  

குருஜியும் பாபுஜியிடம் இன்னொரு தகவலைத் தெரிவித்தார். “எனக்கு உடம்பு எதனாலேயோ சுகமில்லை. குணமாகிற மாதிரியும் தெரியலை. அதனால நான் இப்பவே கிளம்பிப் போயிடலாம்னு நினைக்கிறேன் பாபுஜி

உபகாரமில்லாத ஆள் இருந்தென்ன போயென்ன என்ற எண்ணத்தில் இருந்த பாபுஜி முகத்தில் மட்டும் கவலையையும், அக்கறையையும் காட்டி கடைசியில் சம்மதித்தார். ”..... என்னால ஏதாவது ஆக வேண்டி இருந்தால் சொல்லுங்கள் குருஜி

குருஜி தலையசைத்தார். குருஜி கிளம்பிப் போகிறார் என்பதை பாபுஜி மூலம் அறிந்து ஜான்சனும், மகேஷும் உடனடியாக வந்தார்கள். இருவர் முகத்திலும் அதிர்ச்சி தெரிந்தது. எல்லாவற்றையும் ஆரம்பித்து வைத்தவரே இப்படி பாதியில் விலகிப் போகிறாரே  என்று ஜான்சன் உண்மையிலேயே வருத்தப்பட்டார். குருஜி இருக்கும் போது அவருக்கு தைரியமாய் இருந்தது. அவர் விஞ்ஞானமும், குருஜியின் அனுபவ ஞானமும் நல்ல கூட்டு சக்தியாக இருந்தது. குருஜி அளவுக்கு வரப் போகிற மந்திரவாதிக்கு இந்த விஷயத்தில் ஆழமான ஞானம் இருக்க வாய்ப்பில்லை என்று அவர் நிச்சயமாக நம்பினார். “ஆராய்ச்சியில் பங்கெடுக்கா விட்டாலும் பரவாயில்லை குருஜி  ஆலோசனை தரவாவது நீங்கள் இருந்தால் நல்லாயிருக்கும்என்று சொல்லிப் பார்த்தார். உடல்நலத்தைக் காரணம் காட்டி குருஜி மறுத்து விட்டார்.

மகேஷிற்கும் குருஜி போவது வருத்தமாய் இருந்தது.  முதலில் தென்னரசு... இப்போது குருஜி... குருஜி சொல்லிக் கொண்டாவது போகிறார். தென்னரசு அதைக் கூடச் செய்யவில்லை. திடீர் என்று மாயமானவர் பின் அவனைத் தொடர்பு கொள்ளவே இல்லை. அவர் செல் போனிற்கு போன் செய்த போதெல்லாம் “ஸ்விட்ச்டு ஆஃப்என்ற தகவலே வந்து கொண்டிருந்தது. குருஜியிடம் மகேஷ் கேட்டான். “தென்னரசு அங்கிள் உங்க கிட்டயாவது  போறதுக்கு முன்னாடி சொல்லிட்டு போனாரா குருஜி?

“இல்லை...குருஜிக்கு தென்னரசு நினைவும் மனதை அழுத்தியது. எல்லாம் ஏதோ ஒரு உத்தேசத்தில் ஆரம்பித்து எப்படி எல்லாமோ முடிந்து விட்டதே!

மகேஷிற்கு சந்தேகம் வலுத்தது. அவனிடம் சொல்லா விட்டாலும் கூட தென்னரசு குருஜியிடம் சொல்லாமல் போகிறவர் அல்ல.....

குருஜி கிளம்பி விட்டார். அவரை வழியனுப்ப பாபுஜி, ஜான்சன், மகேஷ் மூவருமே வந்தார்கள். குருஜி யாரிடமும் எதுவும் பேசவில்லை. தியான மண்டபத்தைத் தாண்டித் தான் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்குப் போக வேண்டி இருந்தது. அவருக்கு கடைசியாக ஒரு முறை விசேஷ மானஸ லிங்கத்தைப் பார்க்கத் தோன்றியது. வாசலில் இருந்தே எட்டிப் பார்த்தார். விசேஷ மானஸ லிங்கம் ஒருவித வித்தியாச ஜொலிப்பில் இருப்பது போல் அவருக்குத் தோன்றியது. ஹரிராம் அவரது வழக்கமான இடத்தில் தியானத்தில் அமர்ந்திருந்தார்.  அவரிடமும் அந்த ஜொலிப்பு பிரதிபலிப்பது போலத் தோன்றவே குருஜிக்கு உள்ளே ஒரு பொறி தட்டியது. ஹரிராம் தான் அந்த மூன்றாவது ஆள்...!

பாபுஜி ஜான்சனைக் கேட்டார். “இவர் மட்டும் ஏன் இன்னும் தனியா உட்கார்ந்து தியானம் செய்யறார்

ஜான்சன் சொன்னார். தினமும் மணிக்கணக்கில் தியானம் செய்கிறவர் அவர். இந்த ஆராய்ச்சியில் சிவலிங்க சக்தியில லயிக்க முடியாட்டியும் தன்னோட வழக்கமான தனிப்பட்ட தியானத்தையாவது செய்யலாம்னு உட்கார்ந்த இடத்திலேயே அதைச் செய்ய ஆரம்பிச்சிருப்பார்....

‘இந்த மாதிரி ஆளெல்லாம் நம் பக்கம் இருந்து கூட எல்லாம் இப்படி திடீர் என்று தடைப்பட்டு நிற்கிறதேஎன்று பாபுஜி ஆதங்கப்பட்டார்.

இப்படி அவர்களால் பேசப்பட்டும் எண்ணப்பட்டும் இருந்த ஹரிராம் EEG மெஷினை மட்டும் போட்டுக் கொண்டிருந்தால் அவர் ஐந்து சிபிஎஸ் தீட்டா அலைகளில் மிக ஆழ்ந்த தியானத்தில் இருப்பதைக் காட்டி அவர்கள் கவனத்தை மேலும் கவர்ந்திருக்கும்.

இது வரை அவர் விசேஷ மானஸ லிங்கத்தின் முன் அமர்ந்து செய்த தியானங்களில் மிகவும் கவனமாக ஒரு எல்லைக்குள் இருந்திருந்தார். விசேஷ மானஸ லிங்கம் இழுப்பது போல் தோன்ற ஆரம்பித்த முதல் கணத்திலேயே பின்வாங்கி வந்திருந்தார். அன்று காலை ஆராய்ச்சியின் போது மந்திரக் காப்புச் சுவரை விசேஷ மானஸ லிங்கத்தின் முன்பு எழுப்பும் போது கூட, முன்பு கற்றிருந்த வித்தை தான் வேலை செய்ததே ஒழிய விசேஷ மானஸ லிங்கத்தின் அலைகளோடு அவருக்கு முழுமையாக ஐக்கியமாக முயல முடியவில்லை.

ஆராய்ச்சிகள் தடைப்பட்டு மற்றவர்கள் எல்லோரும் போன பிறகு அவருக்கு தியானத்தில் அமரத் தோன்றியது. யார் தொந்திரவும் இல்லாமல் அமர்ந்த அவர் எந்தவிதக் கட்டுப்பாட்டையும் வைத்துக் கொள்ளாமல் தியானத்தை ஆரம்பித்து பின் விசேஷ மானஸ லிங்கத்தில் கவனத்தைக் குவித்து அதன் அலைகளுடன் ஐக்கியமாக ஆரம்பித்தார். வழக்கம் போலவே பிரம்மாண்ட உணர்வுகளுடன் கூடிய மிக அழகான அனுபவம்... விசேஷ மானஸ லிங்கம் ஜெகஜோதியாய் மின்ன ஆரம்பித்தது.... பின் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது.....  தீஜ்வாலையாய், அக்னிமலையாய் கண்ணுக்கும் கருத்துக்கும் அடங்காத விஸ்வரூபம் அது..  அதற்கடுத்ததாய் அது தன்னிடம் அவரை இழுப்பது போலத் தோன்றியது. முன்பு போல அதற்குச் சிக்காமல் மீண்டு வரும் முயற்சி எதிலும் அவர் ஈடுபடவில்லை. அந்த விசேஷ மானஸ லிங்கம் அவரை ஆட்கொள்ள விட்டார்.

ஒரு கணம் ஒரு பெருஞ்சுழியில் அவர் சிக்கிக் கொண்டது போல இருந்தது. மறு கணம் அவர் தலைக்குள் அக்னிப்பந்து ஒன்று புகுந்து கொண்டது போல் இருந்தது. எதுவும் அவர் கட்டுப்பாட்டில் இல்லை. அவர் எதையும் கட்டுப்படுத்தவும் விரும்பவில்லை. அந்த மகாசக்தியின் பிரவாகத்தில் பல நிலைகளுக்கு அடித்துச் செல்லப்படும் சிறு துரும்பாக அவர் உணர்ந்தார். என்னென்னவோ ஆகியது... வார்த்தைகளுக்கு சிக்காத எத்தனையோ நிலைகள்.... எத்தனையோ பயணம்... ‘ஹரிராம்என்ற அடையாளத்துடன் கூடிய நான் ஒரு கட்டத்தில் மறைந்தே போனது. சர்வமும் அமைதியாகியது. ஒரு மகத்தான மௌனம் மட்டுமே நிலவியது.....

எத்தனை காலம் அந்த மோன நிலையில் இருந்தார் என்று அவருக்கே தெரியவில்லை. சிறிது சிறிதாக அவர் நினைவு திரும்பிய போது அவர் புடம் போட்ட தங்கம் போல ஒளிர்ந்து கொண்டிருந்தார்.

இத்தனை கால அவர் வாழ்க்கையில் எத்தனையோ கோடிட்ட இடங்கள் இருந்தன. அர்த்தம் புரியாத, அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாத இடங்கள் இருந்தன. இப்போதோ அவர் வாழ்க்கையின் அத்தனை கோடிட்ட இடங்களும் அர்த்தத்தோடு நிரம்பி இருந்தன. மிகப் பெரிய புரிதல் நிகழ்ந்திருந்தது. யாருமே கற்றுத் தர முடியாத, கடைசியில் மட்டுமே அந்தராத்மாவில் உணரக் கூடிய ஞானம் கிடைத்திருந்தது. அது கேள்விகள் இல்லாத, பதில்கள் தேவைப்படாத ஒரு பரிபூரணமான நிலை. ஜன்ம ஜன்மாந்திரங்களாய் தேடியும், காத்தும் இருந்த உன்னதமான நிலை....!

குருஜியும் போன பிறகு மகேஷிற்கு அங்கிருக்கவே மனமில்லை. தனிமைப்படுத்தவன் போல அவன் உணர்ந்தான். போரடித்தது. அப்பாவிற்குப் போன் செய்தான். “அங்கே எல்லாம் எப்படிப்பா இருக்கு?

விஸ்வநாதன் சொன்ன தகவல்கள் இடியாய் அவன் தலையில் விழுந்தது. விஷாலி இப்போது அவன் வீட்டில் இருக்கிறாள். ஈஸ்வரும் அவளும் சீக்கிரமே திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள். ஈஸ்வரின் அம்மா அமெரிக்காவில் இருந்து வந்து விட்டாயிற்று....

மகேஷ் உள்ளே அணு அணுவாய் நொறுங்க ஆரம்பித்தான். இனி வாழ்வதில் அர்த்தமில்லை என்று தோன்றியது.

(தொடரும்)


என்.கணேசன்

10 comments:

  1. Very Nice Episode as Usual and I am very happy that I have read this post as a first person and got to know Hariram's situation than others :)

    ReplyDelete
  2. "Close Encounters of the 4th kind"

    ReplyDelete
  3. முடிவை நோக்கி மிக வேகமாகப்பயணிக்கிறது கதை..!

    ReplyDelete
  4. அற்புதமான பதிவு சார்....அதுவும் குருஜியின் இந்த நிலை அவர் உணர்வை அழகாக சொல்லிஇருந்திங்க சார்.....அனைத்துத்தும் ஆரம்பித்த குருஜி தென்னரசு இருவருமே இப்பொழுது இங்கு இல்லை அதுவும் தென்னரசு என்ன ஆனார் என்று கூட தெரியவில்லை....

    ReplyDelete
  5. சுந்தர்February 20, 2014 at 6:25 PM

    விறுவிறுப்பான இந்த அத்தியாயத்தில் இழையூடி வந்த குருஜி-கணபதி காட்சி மனதை நெகிழ வைத்தது. ஹரிராமின் அனுபவத்தை உங்களைப் போன்ற ஒருவரால் தான் இத்தனை தத்ரூபமாக எழுத வரும். வணங்குகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சரியாக சொன்னீங்க சுந்தர்

      Delete
  6. Great episode with all elements.

    ReplyDelete
  7. #தலைக்குள் அக்னிப்பந்து ஒன்று புகுந்து கொண்டது போல்#
    #அத்தனை கோடிட்ட இடங்களும் அர்த்தத்தோடு நிரம்பி இருந்தன#
    # நான் ஒரு கட்டத்தில் மறைந்தே போனது#
    இதுதான் ஞானமோ ?

    வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஹரிராமின் அனுபவத்தை தங்களின் விழிப்புணர்வுள்ள வார்த்தைகளால் உணர செய்ததற்கு நன்றி ஜீ.
    https://www.facebook.com/groups/nganeshanfans/

    ReplyDelete
  8. மிகவும் அருமை...
    அருமையானதொரு கதையை அழகான எழுத்து நடையில் அற்புதமாக கொண்டு செல்கிறீர்கள் அண்ணா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. லக்‌ஷ்மிFebruary 21, 2014 at 6:50 PM

    எனக்காகவும் வேண்டிப்பியா என்று குருஜி கேட்டதை படிக்கும் போது என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

    ReplyDelete