சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 25, 2013

பரம(ன்) ரகசியம் – 41


 பரம(ன்) ரகசியம் – 41

பூஜை அறையை நோக்கி நடந்த குருஜி சிவலிங்கம் பார்வையில் பட ஆரம்பித்தவுடன் தன்னை அறியாமல் சிலையாய் சிறிது நேரம் நின்றார். சிவலிங்கம் ஜோதி சொரூபமாய் ஜொலித்துக் கொண்டிருந்தது. ஒளி வெள்ளத்தில் சிவலிங்கம் மிதப்பது போல் தோன்றியது. சிவலிங்கத்தின் அடிப்பாகம் அந்த ஒளி வெள்ளத்தில் மறைந்து விட்டிருந்தது தான் அப்படித் தோன்றக் காரணமா, இல்லை அந்த இடத்தில் சிவலிங்கம் முறைப்படி பிரதிஷ்டை ஆகாதது காரணமா என்பதை குருஜியால் யூகிக்க முடியவில்லை.

சில பேர் சில அபூர்வ சமயங்களில் சில வினாடிகள் மட்டுமே பார்க்க முடிந்த அந்தக் காட்சியைக் கண்டு பிரமித்த குருஜி சில நிமிடங்கள் தன்னை மறந்து நின்றார். அந்த சிவலிங்கம் காந்தமாய் அவரைத் தன்னிடத்திற்கு இழுத்தது. தன்னை அறியாமல் சில அடிகள் முன்னோக்கி வைத்த குருஜி பூஜை அறை வாசலை நெருங்கிய போது சுயநினைவுக்கு வந்து அப்படியே நின்றார்.

இரண்டடிகள் பின்னுக்கு வைத்து சற்று இடைவெளியினை அதிகப்படுத்திக் கொண்டு  சாஷ்டாங்கமாய் வணங்கி விட்டு அங்கேயே குருஜி அமர்ந்தார். தன்னை மறந்து முன்பு ரசித்த அந்தக் காட்சியை குருஜி ஆராய்ச்சிக் கண்ணோடு சிறிது நேரம் பார்த்தார். பின் கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்யப் பார்த்தார். அவர் மனம் முற்றிலுமாக சிவலிங்கம் மீது குவிய மனமே கரைவது போல் ஒரு உணர்வு ஏற்பட பலவந்தமாகக் கண்களைத் திறந்து மனதைத் தன்னிடமே தக்க வைத்துக் கொண்டார்.

குருஜி பின் மெல்ல புன்னகைத்தார். “நான் உன்னிடம் என்னை இழப்பதற்காக வரவில்லை விசேஷ மானஸ லிங்கமே. உன்னை என் வசப்படுத்தப்படுத்த வந்திருக்கிறேன். அதற்காக உன் சக்திகளை நான் அளக்க வந்திருக்கிறேன். அளந்து உன்னை என் வசப்படுத்த அடுத்ததாக நான் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வந்திருக்கிறேன்....

குருஜி ஏதாவது ஒரு வகையில் சிவலிங்கத்திடம் இருந்து பதில் வரும் என்று எதிர்பார்த்தது போல சிவலிங்கத்தையே பார்த்தபடி ஒரு நிமிடம் மௌனமாக இருந்து பார்த்தார். ஜொலித்த சிவலிங்கம் அப்படியே அமைதியாக இருந்தது.

குருஜி தொடர்ந்தார். ஒரு தனிப்பட்ட உருவம் இருக்கிற கடவுளை நம்பும் கட்டத்தை என் வாழ்க்கையில் நான் என்றோ தாண்டி விட்டேன் மானஸ லிங்கமே. மொழி, மதம், தேசம் கடந்த ஒரு மகாசக்தியை, இந்தப் பிரபஞ்சத்தையே இயக்குகின்ற அந்தப் பெரும் சக்தியைத் தான் மனிதர்கள் கடவுள் என்ற பெயரில் அழைக்கிறார்கள் என்றால் அந்தக் கடவுள் விருப்பு வெறுப்பு இல்லாத்தாகத் தான் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் இந்த உலகத்தில் எல்லா மகாசக்திகளும் அப்படித் தான் இருக்கின்றன...

“... சூரியன் பிடித்தவர்களுக்கு மட்டும் ஒளிகாட்டி மற்றவர்களிடம் தன் ஒளியை மறைத்துக் கொள்வதில்லை. மழை தன்னை வரவேற்பவர்கள் மீது மட்டும் பெய்வதில்லை. சகலருக்கும் பெய்யும். சுடும் விஷயத்தில் தீ பட்சபாதம் காட்டுவதில்லை. அது யார் தொட்டாலும் சுடும்.  இதெல்லாம் இயற்கையின் நியதிகள். இந்தப் பிரபஞ்சம் உருவான காலத்தில் இருந்து இப்படித்தான் இருந்து வருகிறது. ஏன் பிரபஞ்சமே இந்த இயற்கையின் விதிகளின் படியே உருவானது என்பதால் இந்த விதிகளை மாற்ற முடிவது பிரபஞ்சத்தையே அழிக்க முடிவது போலத் தான் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை....

”...  அதே வழியில் விருப்பு வெறுப்பில்லாதது தான் கடவுள் சக்தி என்றால் அந்தக் கடவுளை வணங்குவதில் அர்த்தம் இல்லை அல்லவா? வணங்குவதால் அந்த சக்தி ஒருவருக்கு வாரி வழங்கி விடவும் போவதில்லை. வணங்க மறுப்பதால் ஒருவர் பெற இருப்பதை அந்த சக்தி தடுத்து விடவும் போவதில்லை. அந்தக் கடவுள் சக்தியே ஒருவன் தன்னை வணங்குகிறானா இல்லையா என்று கவனிப்பதும் இல்லை, அதை ஒரு பொருட்டாக நினைப்பதும் இல்லை என்று நான் புரிந்து கொண்ட பிறகு நான் கடவுளை வணங்கியது இல்லை. வணங்கி என்ன லாபம், வணங்காமல் இருந்து என்ன நஷ்டம்?...

“...அப்படியானால் நீ கேட்கலாம் நான் ஏன் உன்னை வணங்கினேன் என்று. நான் வணங்கியது உன்னை அல்ல. உன்னை உருவாக்குவதில் பல நூறு வருஷங்களாக ஈடுபட்ட என் குருநாதர் போன்ற சித்தர்களைத் தான் நான் வணங்கினேன். அந்த முயற்சி வணங்க வேண்டியது. அங்கீகரிக்கப்பட வேண்டியது. உன் மேல் பிரம்மாண்டமான சக்தியை ஆவாகனம் செய்து இன்று உன்னை இந்த அளவில் ஜொலிக்க வைத்திருக்கும் அவர்கள் முயற்சிகளுக்கு என் சாஷ்டாங்கமான நமஸ்காரம்...

”... மனிதன் எந்த சக்திக்கும் பயப்பட வேண்டியதில்லை. அந்த சக்தி எத்தனை பிரம்மாண்டமாக இருந்தாலும் நிலைகுலைய வேண்டியதில்லை. அவனுக்குத் தந்திருக்கும் பேரறிவைப் பயன்படுத்தினால் எந்த சக்தியையும் தனக்கு வேண்டிய வகையில் அவன் பயன்படுத்திக் கொள்ளலாம். அவன் அப்படிப் பயன்படுத்த முடிந்ததால் தான் இன்று வானத்தில் பறக்கிறான், அடுத்த கிரகங்களுக்கு செல்கிறான், எத்தனையோ புதிது புதிதாய் கண்டு பிடித்து சாகசங்கள் செய்கிறான். அவனால் எதுவும் முடியும். ஏனென்றால் அவனே அந்த பிரபஞ்ச சக்தியின் ஒரு அம்சம்....

“...மனிதன் எதையும் வணங்கி சாதிப்பதில்லை மானஸ லிங்கமே, அவன் எதையும் புரிந்து கொண்டு தான் சாதிக்கிறான். தன் முயற்சியினால் தான் சாதிக்கிறான். இது தான் சரித்திரம். இது தான் விதி... அதனால் தான் நான் உன்னைப் புரிந்து கொள்ள வந்திருக்கிறேன்...

குருஜி அந்த விசேஷ மானஸ லிங்கத்தைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு ஆத்மார்த்தமான தொனியில் தொடர்ந்தார். ”...உன்னைப் பராமரிக்கும் மூவரில் ஒருவராக என் குருநாதர் இருந்த போதும், அவர் சீடனாக நான் இருந்த போது  கூட ஒரு நாளும் உன்னைப் பற்றி என்னிடம் அவர் சொன்னதில்லை. நான் சீடனாக இருந்த அதே காலத்தில் தான் உன்னைக் கொண்டு வந்து பசுபதியிடம் ஒப்படைத்தார். உலகமெல்லாம் பிரபலமாய் இருந்திருக்க வேண்டிய உன்னை பசுபதியும் தன் தனிப்பட்ட ரகசிய சொத்தாய் அறுபது வருஷங்களாய் பாதுகாத்தார். அவரைச் சொல்லித் தப்பில்லை. அவருக்கு முந்தியவர்களும் உன்னை அப்படித்தான் வைத்திருந்தார்கள்...

“... பிரமிக்க வைக்கும்  நேர்த்தியுடனும், அழகுடனும் ஒரு ஓவியத்தை வரைந்து விட்டு அதை ஒளித்து வைப்பதில் என்ன அர்த்தம் என்று எனக்குப் புரியவில்லை. உனக்குப் புரிகிறதா?

குருஜி கேட்டு விட்டு ஏதாவது ஒரு சங்கேத மொழியிலாவது மானஸ லிங்கத்திடம் இருந்து ஒரு பதிலை எதிர்பார்த்தது போல இருந்தது. எந்த விதத்திலும் எந்த பதிலும் கிடைக்காமல் போனாலும் தொடர்ந்தார்.

”... நான் படிக்காத சாஸ்திரம் இல்லை, நான் அறியாத வேதாந்தம் இல்லை, நான் அலசாத தத்துவம் இல்லை. அப்படிப்பட்ட நான் பிரபஞ்ச சக்தி அல்லது கடவுள் சக்தியின் ஒரு அங்கம் என்பதில் அர்த்தம் இருக்கிறது, பெருமை இருக்கிறது. ஆனால் இதில் எதுவும் தெரியாத, புரியாத ஒரு குப்பனும், சுப்பனும் கூட அந்த சக்தியின் அங்கம் என்பதை ஒத்துக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை மானஸ லிங்கமே. வரலாறு படைக்கப் போகிற நானும் வரலாறே தெரியாத குப்பனும் சுப்பனும் ஒன்றானால் நான் வாழ்நாள் முழுவதும் சாதித்து அடைந்த உயரங்களுக்கு எல்லாம் என்ன அர்த்தம் இருக்கிறது. எல்லாம் ஒன்று என்று என் தனித்தன்மையை இழந்து விட நான் விரும்பவில்லை. அது இறைசக்தியே ஆனாலும் கூட அதில் எனக்கு சம்மதமில்லை. மந்தை ஆடுகளில் ஒன்றாக வாழ்ந்து மடிவதில் எனக்கு விருப்பமில்லை. மந்தைகளை மேய்ப்பவனாக இருந்து வழிநடத்த நான் ஆசைப்படுகிறேன்...

”... நான் குருஜி என்றழைக்கப்படுகிற ராமகிருஷ்ணன். இது வரை எனக்குக் கிடைத்த பெருமை எல்லாம் நான் அறிந்த விஷயங்களை வைத்துத் தான். ஆனால் நான் எதையும் புதிதாக இந்த உலகத்தில் அறிமுகப்படுத்தி விடவில்லை. எத்தனையோ ஞானிகள் சொன்னதையும், முன்பே இந்த உலகத்தில் இருந்த விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறேன் என்பது மட்டுமே என் சாதனையாக இருந்திருக்கிறது. அந்த சாதனையில் எனக்கு திருப்தி இல்லை மானஸலிங்கமே. நான் புதியதாக ஒரு வரலாற்றை இந்த உலகத்தில் உருவாக்கப் போகிறேன் உன் மூலமாக. நான் உன் சக்தியைப் பயன்படுத்தி புதிய பாதையை இந்த உலகில் உருவாக்கப் போகிறேன். அந்த விதத்தில் இந்த உலக வரலாற்றில் என் பெயர் சாசுவதமாகப் பதிவாகப் போகிறது...

“...மகாசக்தியான உனக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கப் போவதில்லை. உன் சக்திக்கு இசைவாக அணுகுபவர்கள் எவருக்கும் எதையும் நீயும் மறுக்கப் போவதில்லை. பிரச்சினை உன்னிடம் இருந்து வரப் போவதில்லை. அது எனக்குத் தெரியும். பிரச்சினை சக்திகளால் உண்டாவதில்லை. மனிதர்களால் தான் உண்டாகிறது. அப்படித் தான் உன்னை வணங்கி வந்தவர்களால் பிரச்சினையை சந்திக்கிறோம். உன்னைப் பற்றி பேசக் கூட பசுபதி தயாராக இருந்திருக்கவில்லை. அவரை சாகடித்ததில் எங்களுக்குத் துளி கூட பெருமை இல்லை. வருத்தம் தான். ஆனால் வேறு வழி எதையும் அவர் விட்டு வைக்கவில்லை... அந்தக் கொலைகார முட்டாளிடம் கூட படித்துப் படித்து சொல்லி இருந்தோம்... உன்னை நெருங்க வேண்டாம் என்று. பசுபதியைக் கொன்ற அவன் எங்கள் பேச்சைக் கேட்காமல் உன்னை நெருங்கி வீணாக உயிரை விட்டான். அதில் எங்கள் பங்கு எதுவும் இல்லை....

குருஜி திடீரென்று நிறுத்தி வாய் விட்டுச் சிரித்தார். பல வருஷங்கள் தவம் இருந்து அறிந்த வித்தையை மூன்று நாள் பயிற்சி செய்து விட்டு வந்து உன்னை இந்த ஒளிக்கோலத்தில் பார்க்க முடிந்த நானே உன்னை நெருங்கினால் என் தனித்தன்மையை இழந்து விடுவேன் என்று பயப்படுகிறேன். அப்படி இருக்கையில் அந்த முட்டாள் அத்தனை வேகமாய் உன் அருகே போனது எமனுக்கு அழைப்பு விட்ட மாதிரி தான்... அவன் விதி அவனை அப்படி இழுத்திருக்கிறது....

“...அதிருக்கட்டும். எனக்கு ஒரு சந்தேகம். உன்னைக் கேட்கலாமா? என் குருநாதர் போன்ற பெரிய சித்தர்கள் பூஜை செய்த உன்னை இப்போது கணபதி என்கிற ஒன்றும் தெரியாத ஒரு பையன் பூஜை செய்வது உனக்கு எப்படி இருக்கிறது. மௌனமும் அமைதியுமாக உன்னைப் பூஜித்து வந்தவர்களுக்குப் பிறகு இப்போது சலிக்காமல் எல்லாவற்றைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கும் பையன் கிடைத்திருப்பது எப்படி இருக்கிறது. உனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லாததால் நீ ஒரு சலனமும் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் கணபதியைத் தேர்ந்தெடுத்து நான் உன்னைப் பூஜை செய்ய வைத்திருப்பதற்கு என் குருநாதர் என்ன நினைப்பார்? இது வரை பூஜை செய்வது யார் என்பதை தீர்மானம் செய்தது அவர்கள் கூட்டமாகத் தான் இருந்தது. இப்போது அந்த அதிகாரத்தை நான் எடுத்துக் கொண்டதைப் பற்றி அவர் அபிப்பிராயம் என்ன? யாரும் இல்லாத போது உனக்கு இங்கே பூஜை செய்து விட்டுப் போன அவர், கணபதியிடம் கூட ஒரு தடவை பேசி பூக்களைக் கொடுத்து விட்டுப் போன அவர் ஏன் என் கண்ணில் மட்டும் படவில்லை என்று தெரியவில்லை. அவரைப் பார்க்க முடிந்திருந்தால் இதைக் கண்டிப்பாகக் கேட்டிருப்பேன்.....

மனம் விட்டுப் பேசி முடித்த குருஜி மறுபடி சிரித்தார். “...கணபதி பேச்சைக் கேட்டு உனக்கும் இடைவிடாத பேச்சு பழக்கமாயிருக்கும் மானஸ லிங்கமே. அதனால் என் பேச்சையும் நீ பொறுமையாய் கேட்டிருக்கிறாய். நன்றி. புதியதொரு உலகத்திற்கு உனக்கு நல்வரவு. எங்கள் ஆராய்ச்சிக்கு நீ ஒத்துழைப்பாயா?

மறுபடி மானஸ லிங்கம் மௌனம் சாதித்தது. அத்துடன் பேச்சை நிறுத்திக் கொண்ட குருஜி செயலில் இறங்கினார். பூஜை அறைக்குள் தப்பித் தவறிக் கூட நுழையாத அவர் அடுத்த சில மணி நேரங்கள் பூஜை அறைக்கு வெளியே இருந்த ஹாலில் அமைதியாக உலாவினார். ஒவ்வொரு இடைவெளியிலும் விசேஷ மானஸ லிங்கத்தை ஆராய்ந்தார். தனக்கு ஏற்படும் உணர்வுகளை மனதில் குறித்துக் கொண்டார். உலகையே மறந்து வித விதமான இடைவெளிகளில் விசேஷ மானஸ லிங்கம் ஏற்படுத்த முடிந்த தாக்கத்தை ஆராய்ந்து முடித்து அங்கிருந்து வெளியேறிய போது தான் களைப்பை உணர்ந்தார்.

அவர் வெளியே வந்த போது வாசலிலேயே ஈஸ்வர்-கணபதியின் தற்செயலான சந்திப்புச் செய்தி அவருக்காகக் காத்திருந்தது. செய்தியைக் கேட்டு முடித்த போது அவருக்கு அந்த சந்திப்பைத் தற்செயல் என்று நம்ப முடியவில்லை. சந்திக்கவே எந்த வகையிலும் வாய்ப்பில்லாத இந்த சந்திப்பு தற்செயலாக இருக்க வழியில்லை. ஏதோ ஒரு உணர்வால் உந்தப்பட்டு அவர் மறுபடி உள்ளே எட்டிப் பார்த்தார். ஏதோ ஒரு சிரிப்புச் சத்தம் கேட்டது போல் தோன்ற அவருக்கு மயிர்க் கூச்செறிந்தது.

தன்னை சுதாரித்துக் கொண்ட குருஜி கணபதி இங்கே வந்து சாயங்கால பூஜை முடிந்தவுடன் என்னை வந்து பார்க்கச் சொல்என்று தகவல் சொன்னவனிடம் அறிவித்து விட்டு தன் இருப்பிடத்திற்குச் சென்றார்.

ணபதியின் பஞ்சமுக ஆஞ்சநேயரின் தரிசனம் திருப்திகரமாக இருந்தது. கோயிலில் அதிக கூட்டமிருக்காததால் சாவகாசமாக ஆஞ்சநேயரைத் தரிசிக்க முடிந்தது. அவனைக் கூட்டிக் கொண்டு வந்த டிரைவர் தான் ஏதோ வலியில் துடிப்பது போல இருந்தான். உங்களுக்கு உடம்பு சுகமில்லையோ?

டிரைவர் மறுத்தான். “அப்படியெல்லாம் இல்லை

திரும்பி வருகின்ற போது சிறிது நேரம் கணபதியின் சிந்தனையெல்லாம் மின்சாரம் பாய்ச்சி விட்டுப் போன ஆசாமி மீதே இருந்தது. அந்த ஆள் கையில் கரண்ட் கம்பி ஏதாவது இருந்திருக்குமோ?”.  இன்னமும் லேசாக ஏதோ ஒரு மின்சார அதிர்வு அவனிடம் தங்கி இருப்பது போன்ற உணர்வு அவனிடம் இருந்தது.

காரின் சீட்டில் வைத்திருந்த அந்த ஜவுளிக்கடை பையைப் பார்த்த போது அவன் சிந்தனை ஈஸ்வர் மீது சென்றது. எத்தனை நல்ல மனசு. அத்தனை படிச்சிருக்கார். பார்க்க அழகாய் சினிமா ஸ்டார் மாதிரி இருக்கார். ஆனால் கொஞ்சம் கூட கர்வம் அவர் கிட்ட இல்லையேஇந்த ஏழை கிட்ட எவ்வளவு பாசம் கட்டினார்...

சீக்கிரமாகவே அவன் தூங்கிப் போனான். வேதபாடசாலை வந்த பிறகு தான் அவன் கண்விழித்தான். இறங்கியவுடனேயே பூஜை முடித்து விட்டு குருஜியைச் சென்று சந்திக்க வேண்டும் என்ற தகவல் தெரிவிக்கப் பட்டது.

“இந்த குருஜி இன்னொரு நல்ல மனுஷன். ஏ.சி கார்ல ஆஞ்சநேயர் கோயிலுக்கு அனுப்பிச்சதும் அல்லாமல் திரும்பி வந்தவுடனே தரிசனம் நல்லபடியா ஆச்சான்னு கேட்க கூப்பிட்டனுப்பி இருக்கார். பிள்ளையாரே நான் உன் கிட்ட நேர்ல வந்து சொல்ல வேண்டியது நிறைய இருக்கு. உன் தயவுலயும் உங்கப்பா தயவுலயும் நிறைய நல்லது நடந்திருக்கு...

சிவலிங்கத்திற்குப் பூஜை செய்யச் செய்ய கணபதியை ஒரு குற்ற உணர்ச்சி அழுத்தியது. தனக்கொரு பட்டுவேட்டியும், பிள்ளையாருக்கு ஒரு பட்டு வேட்டியும் வாங்கிக் கொண்டு வந்திருக்கும் போது சிவலிங்கத்திற்கு மட்டும் எதையும் வாங்கிக் கொண்டு வர முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சி அது. “என் கிட்ட காசு இருந்திருந்தா கண்டிப்பா வாங்கிட்டு வந்திருப்பேன். ஓசியில வாங்கிக் கொடுக்கிற மனுஷன் கிட்ட எத்தனை தான் வாங்க முடியும் நீயே சொல்லு”.

ஆனாலும் அவனுக்கு மனம் கேட்கவில்லை. தனக்குக் கிடைத்த பட்டு வேட்டியை சிவலிங்கத்தின் மீது சாத்தினான். “நான் இங்கிருந்து போகிற வரைக்கும் உனக்கு இது இருக்கட்டும். போகிறப்ப கொண்டு போகிறேன். சரியா.... இதை உனக்கே கொடுத்துட்டும் போகலாம் தான். ஆனா எனக்குன்னு வாங்கிக் கொடுத்த அந்த நல்ல அண்ணனை நான் அலட்சியம் செஞ்ச மாதிரி ஆயிடும்.. அதான்...

பட்டுவேட்டி கட்டப்பட்ட சிவலிங்கத்தின் அழகு கூடி இருப்பது போல அவனுக்குத் தோன்றியது. என்னோட பிள்ளையாருக்கும் இது ரொம்பவே நல்லா இருக்கும்.என்று நினைக்கையில் அவன் முகத்தில் பெருமிதப் புன்னகை அரும்பியது.

பூஜையை முடித்து விட்டு கணபதி குருஜியைப் பார்க்கச் சென்றான். அவன் உள்ளே நுழைகையில் குருஜி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருந்தார். அவன் வரும் சத்தம் கேட்டவுடன் அவன் பக்கம் திரும்பியவர் திடுக்கிட்டார். மூன்று நாள் தியானப் பயிற்சி மூலம் அடைந்திருந்த உயர்ந்த நுண்ணிய உணர்வு நிலையில் விசேஷ மானஸ லிங்கத்தின் ஜொலிப்பைப் பார்க்க முடிந்த அவருக்கு கணபதியைச் சூழ்ந்திருந்த ஏதோ ஒரு சக்தி வட்டத்தையும் பார்க்க முடிந்தது தான் அந்தத் திகைப்பின் காரணம். இது முன்பிருந்தே இவனிடம் உள்ளதா இல்லை புதியதா?...!

(தொடரும்)
-          என்.கணேசன்
  

17 comments:

  1. I opened a couple of times since morning to read this episode eagarly. Thank you and as usual awesome.

    ReplyDelete
  2. சுவாரஸ்யம்... திகைப்பான முடிவு... தொடர்கிறேன்...

    ReplyDelete
  3. Guruji's dialogue is the best intellectual argument and his sharpness in thought has been beautifully illustrated by you. Really you are a versatile writer Ganesan sir. In this chapter the way Ganapathi is seeing sivalingam is good contrast of Guruji's seeing. I love Ganapathi character. Please continue

    ReplyDelete
  4. arumaiya poguthu sir.... nandri ka. amarnath

    ReplyDelete
  5. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சுவாரஸ்யமான தொடர்கதை.. just great!

    ReplyDelete
  6. Guruji's argument with Shiva lingam is superb. We love Ganapathi character. Thanks

    ReplyDelete
  7. தற்சமையம் நன் நான் அமெரிக்காவில் உள்ளத்தால் என்னாள்
    காலையில் படிக்க முடிகிறது..முன்பு மாலை வரை கஷ்டப்பட்டு காத்திருப்பேன்...

    ReplyDelete
  8. நான் படிக்காத சாஸ்திரம் இல்லை, நான் அறியாத வேதாந்தம்
    இல்லை, நான் அலசாத தத்துவம் இல்லை. அப்படிப்பட்ட நான் பிரபஞ்ச சக்தி அல்லது கடவுள்
    சக்தியின் ஒரு அங்கம் என்பதில் அர்த்தம் இருக்கிறது, பெருமை இருக்கிறது. ஆனால்
    இதில் எதுவும் தெரியாத, புரியாத ஒரு குப்பனும், சுப்பனும் கூட அந்த சக்தியின்
    அங்கம் என்பதை ஒத்துக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை மானஸ லிங்கமே. வரலாறு
    படைக்கப் போகிற நானும் வரலாறே தெரியாத குப்பனும் சுப்பனும் ஒன்றானால் நான்
    வாழ்நாள் முழுவதும் சாதித்து அடைந்த உயரங்களுக்கு எல்லாம் என்ன அர்த்தம்
    இருக்கிறது. எல்லாம் ஒன்று என்று என் தனித்தன்மையை இழந்து விட நான் விரும்பவில்லை.
    அது இறைசக்தியே ஆனாலும் கூட அதில் எனக்கு சம்மதமில்லை. மந்தை ஆடுகளில் ஒன்றாக
    வாழ்ந்து மடிவதில் எனக்கு விருப்பமில்லை. மந்தைகளை மேய்ப்பவனாக இருந்து வழிநடத்த
    நான் ஆசைப்படுகிறேன்...”

    God is everwhere and he is also inside of both kuppan and suppan. This is the first reason why guruji could not have the Manasa lingam for himself.

    Really you are explaining a very big things in the form of story. Enjoying and waiting to learn more from you.

    ReplyDelete
  9. நன்றாக போகின்றது

    ReplyDelete
  10. . பிரமிக்க வைக்கும் நேர்த்தியுடனும், அழகுடனும் ஒரு ஓவியத்தை வரைந்து விட்டு அதை ஒளித்து வைப்பதில் என்ன அர்த்தம் என்று எனக்குப் புரியவில்லை. உனக்குப் புரிகிறதா?”

    குருஜி அவர்களின் எண்ண ஓட்டம் பிரமிக்கவைக்கிறது ...

    ReplyDelete
  11. migavum arumaiyaga irukkirathu.thodaravum.

    ReplyDelete
  12. ஆழ்ந்த அறிவுடன் கூடிய லேசான அகம்பாவம் உடைய குருஜி. நல்ல பாத்திரப் படைப்பு.

    ReplyDelete
  13. இந்த வாரம் குருஜியின் என்கிற ராமகிருஷ்ணனின் விவாதம் மிக மிக அருமை.......சொல்வதற்கு வார்த்தைகளில்லை.......

    கண்மூடித்தனமாக நம்புபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய வரிகள்.....

    மிக எளிமையாக அனைவரும் அறியும்,புரியும் வண்ணமாக தந்துள்ளீர்கள்......

    கதையில் அனைவரைவிடவும் கணபதிதான் மனதில் ஆழமாக நிற்கிறார் மானஷலிங்கத்தை போலவே......

    வாழ்த்துகள்

    ReplyDelete
  14. Sir, How did you develop the wonderful dialogues of Guruji with Manasalingam? It gives few answers and leaves 1000 questions!
    I m reading it again & again...

    ReplyDelete
  15.  ெவலாத தாகட ச எறாஅத கடைளவணவ அத இைல அலவா? வணவதா அத ச ஒவ வாவழ ட ேபாவைல. வணக மபதாஒவ ெபற இபைத அத சத ட ேபாவைல. அத கட சேய ஒவ தைன வணறானா இைலயா எகவப இைல, அைத ஒ ெபாடாக ைனப இைல எ நா ெகாட ற நா கடைளவணயஇைல. வண என லாப, வணகாம இ என நட?...”
    புதிய கருத்து
    எனக்கு இந்த கருத்து ஏற்பு உடையதாக உள்ளது
    அன்புவாசகன்
    ராஜகவி

    ReplyDelete