சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 21, 2013

பரம(ன்) ரகசியம் – 32




ந்தனின் அனுபவத்தை ஈஸ்வரிடம் சொல்லி விட்டு பார்த்தசாரதி “நீங்க என்ன நினைக்கிறீங்க?என்று கேட்டார். அவர் அவன் அபிப்பிராயத்தைப் பெரிதும் மதித்தார். நல்ல புத்திசாலி, இது போன்ற விஷயங்களை ஆராய்ச்சி செய்து வருபவன், விருப்பு வெறுப்பு இல்லாமல் அலசக் கூடியவன் என்பதெல்லாம் அவன் கருத்துகள் மீது நல்ல மதிப்பை அவருள் ஏற்படுத்தி இருந்தது.

எல்லாமே சுவாரசியமா இருக்குஎன்றான் ஈஸ்வர்.

“நிஜமாவே அவன் அந்தக் காட்சியைப் பார்த்திருந்தால் முனுசாமியும் அவனும் பார்த்தது அந்த சித்தரைத்தான்னு வச்சிக்கலாமா?

“அப்படித் தான் தோணுது

அந்த மூணாவது ஆள் யாராய் இருக்கும்? அந்த ஆளும் ஒரு சித்தரா இருப்பாரோ?

எல்லாக் கேள்விகளுக்கும் அவனிடம் பதில் இருக்கும் என்பது போல் அவர் கேள்விகள் கேட்பது அவனுக்கு வேடிக்கையாய் இருந்தது. “தெரியலைஎன்றான்.

“அந்த சிவலிங்கம் பத்தி கூடுதலா ஏதாவது தெரிஞ்சா மேற்கொண்டு துப்பு துலக்கறது சுலபமாய் இருக்கும்....என்று ஏதோ யோசித்தபடியே பார்த்தசாரதி சொன்னார்.

ஈஸ்வருக்கு அந்த சிவலிங்கம் பற்றி படித்த அந்த தாள் பற்றி சொன்னால் என்ன என்று தோன்றியது. மேற்கொண்டு துப்பு துலக்குவதற்கு அது உதவலாம். ஆனால் அதைச் சொன்னால் கண்டிப்பாக அந்தத் தாளை அவர் கேட்பார். தந்தால் அது திரும்பக் கிடைப்பது கஷ்டம். வழக்குக்கு வேண்டிய முக்கிய ஆவணம் என்று அவர் வைத்துக் கொண்டால் ஒன்றும் செய்ய முடியாது. தகவலையும் தெரிவிக்க வேண்டும், அந்தத் தாளையும் தரக்கூடாது, அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து அவன் சாமர்த்தியமாக சொன்னான்.

ஆன்மிக பாரதம் (Spiritual India) என்கிற பழைய புத்தகத்தில் விசேஷ மானஸ லிங்கம்னு சித்தர்கள் பூஜித்து வந்த சக்தி வாய்ந்த சிவலிங்கம் இந்தியாவில் இருக்கிறதை படிச்சதாக எங்கப்பா கிட்ட யாரோ ஒரு நண்பர் எப்பவோ சொன்னாராம். அந்த சிவலிங்கமும், இந்த சிவலிங்கமும் ஒன்றாய் இருக்குமோன்னு எங்கப்பா சந்தேகப்பட்டார்...

விசேஷ மானஸ லிங்கம் என்ற பெயரை இரண்டு முறை சொல்லிப் பார்த்துக் கொண்ட பார்த்தசாரதி ஆவலுடன் கேட்டார். “அது ஆங்கில புத்தகமா, இல்லை தமிழ் புத்தகமா?

ஆங்கிலம்னு தான் நினைக்கிறேன்

எழுதின ஆள் பெயர் ஏதாவது அந்த நண்பர் சொன்னாரா?

ஈஸ்வர் ஆழமாய் யோசிக்கிற மாதிரி நடித்தான். பின் சொன்னான். “நீலகண்ட சாஸ்திரின்னு சொன்ன மாதிரி ஞாபகம்...

எந்த வருஷம் எழுதினது, பிரசுரம் செய்தது யார்ங்கிறது தெரியுமா?

ஈஸ்வர் உண்மையாகச் சொன்னான். “தெரியலை

பார்த்தசாரதி விசேஷ மானஸ லிங்கம், ஆன்மிக பாரதம், நீலகண்ட சாஸ்திரி என்று குறித்துக் கொண்டார். பின் கேட்டார். “பின் ஏன் நீங்கள் இதைப்பத்தி முதல்லயே சொல்லலை

அந்த புத்தகத்துல சொல்லி இருக்கற சிவலிங்கமும், இந்த சிவலிங்கமும் ஒன்னு தானான்னு அப்பாவுக்கே குழப்பமா இருந்தது. இருக்கலாம்னு சந்தேகப்பட்டார் அவ்வளவு தான்... சரியா தெரியாததை ஏன் சொல்வானேன்னு நினைச்சேன்....

பார்த்தசாரதி ஒன்றும் சொல்லவில்லை. அவன் சொன்னது போல் இந்த சிவலிங்கம் நீலகண்ட சாஸ்திரி தன் புத்தகத்தில் எழுதிய விசேஷ மானஸ லிங்கம்  என்ற பெயர் பெற்றதாக இருந்தால் அதை வைத்து மேலும் பல தகவல்களைப் பெற்று விட முடியும் என்று நினைத்தார்.

“நெட்டுல அந்த புத்தகம் பத்தியோ, ஆசிரியர் பத்தியோ தேடிப் பார்த்திருக்கீங்களா?

நேற்று இரவு முழுவதும் அவன் மணிக்கணக்கில் தேடிப்பார்த்திருக்கிறான். ஒரு பயனும் இல்லை. அவன் சொன்னான். “அமெரிக்கால இருக்கறப்பவே தேடிப்பார்த்திருக்கேன். பிரபலமான புத்தகம் இல்லை போல இருக்கு. நீலகண்ட சாஸ்திரின்னு தேடினா கே.ஏ. நீலகண்ட சாஸ்திரின்னு ஒருத்தர் பெயர் தான் அதிகமா நெட்டுல இருக்கு. அவர் வரலாற்று நூல்கள் நிறைய எழுதியிருக்கார். சோழர்கள் காலம், தென்னிந்தியா பத்தியெல்லாம் நிறைய எழுதியிருக்கார். ஆனா ஆன்மிக பாரதம் பேர்ல எதுவும் எழுதினதா குறிப்பு இல்லை. அதனால இந்த நீலகண்ட சாஸ்திரி வேற ஆளா தான் இருக்கணும்...

பார்த்தசாரதி சொன்னார். “அதை என் கிட்ட விடுங்க. எங்க டிபார்ட்மெண்ட்ல சிலர் கிட்ட சின்ன நூல் முனை அளவு தகவல் கிடைச்சாலும் அதை வச்சு அவங்க மொத்த விஷயத்தையும் தோண்டி எடுத்துடுவாங்க. அதனால நான் பார்த்துக்கறேன்.... உங்களுக்கு வீட்டுக்குள்ளே போய் பார்க்கணும்கிற ஆவல் இருக்கா?

ஈஸ்வர் சொன்னான். “இருக்கு. ஆனா பூட்டி வச்சிருக்கீங்களே

“சாவி என் கிட்ட இருக்கு. வாங்க பார்க்கலாம்....என்ற பார்த்தசாரதி அவனை அழைத்துச் சென்றார். போகும் போது சொன்னார். “எதையும் தொடாமல் பாருங்க. ரேகைகள் எல்லாமே எடுத்தாச்சுன்னாலும் விடுபட்டுப் போனது எதோ இருக்குங்கற மாதிரி ஒரு எண்ணம் எனக்கு தொடர்ந்து இருக்கு. அதனால தான் இன்னும் பூட்டியே வச்சிருக்கேன்....

அவன் சரியென்றான். செருப்பை வெளியே கழற்றி விட்டு அந்த வீட்டினுள் நுழையும் போது அவனுக்கு மிகவும் பரபரப்பாக இருந்தது.  முனுசாமி அவனிடம் சொன்னது போல அந்த வீடு ஒரு கோயிலைப் போல் தான் இருந்து வந்திருக்கிறது. அறுபது வருடங்களாக அந்த சிவலிங்கம் இருந்த இடத்தில் கண்டிப்பாக அந்த சக்தி அலைகள் இருக்கும் என்பதில் அவனுக்கு சந்தேகமில்லை.

அவனுக்கு முன்பே செருப்போடு நுழைந்திருந்த பார்த்தசாரதி அவனைப் பார்த்து மீண்டும் வெளியே சென்று செருப்பை கழற்றி விட்டு வந்தார். அவரைப் பொருத்தவரை அது கொலை நடந்த சம்பவ இடம்’. ஆனால் அவனைப் பொருத்த வரை அது சிவலிங்கம் பூஜிக்கப்பட்டு வந்த புனித இடம். எனவே அவன் உணர்வுக்கு மதிப்பு தரத் தோன்றியது.

ஈஸ்வர் ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு அந்த வீட்டினுள் சுற்றிப் பார்த்தான். ஹாலில் பசுபதி இறந்து கிடந்த இடத்தை சாக்பீசால் குறித்து வைத்திருந்தார்கள். ஹால், சமையலறை, படுக்கையறை என ஒவ்வொரு இடமாய் சென்று பார்த்தான். அந்தத் திருடன் குறைபட்டுக் கொண்டதில் தவறே இல்லை என்று தோன்றியது. விலை உயர்ந்த பொருள் என்று அங்கு எதுவுமே இருக்கவில்லை. எல்லாம் அடிப்படைத் தேவைகளுக்கான விலை குறைந்த, விலை போகாத பொருள்களாகவே இருந்தன.

பூஜையறைக்குள் நுழைந்தான். எல்லோரையும் குழப்பிய தேவார, திருவாசக, ஸ்தோத்திர புத்தகங்கள் ஒரு ஓரமாக அடுக்கப்பட்டிருந்தன. பெரிதாய் இரண்டு விளக்குகள், விளக்குத்திரிகள், எண்ணெய் பாட்டில், தீப்பெட்டி, கற்பூர டப்பா இருந்தன. துடைக்கும் துணி ஒன்றும் இருந்தது. எல்லாம் சாதாரணமாய் ஒரு பூஜை அறையில் இருக்கக்கூடியவையே. அவனுக்குப் புதியதாய் தகவல் தரக்கூடிய ஏதோ ஒன்று அங்கிருக்காதா என்று மிகவும் கவனமாய் அந்த அறையை அலசினான். அப்படி எதுவும் இருக்கவில்லை....

பார்த்தசாரதியைப் பார்த்து ஈஸ்வர் கேட்டான். “இங்கே நான் கொஞ்ச நேரம் கண்ணை மூடிட்டு உட்கார்ந்துக்கலாமா?

“தாராளமா

அவன் அங்கே சுவரை ஒட்டினாற்போல் கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்து கொண்ட பின் பார்த்தசாரதி அவனையே சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டு நின்றார். தியானம் செய்கிறானா என்ன?

உண்மையில் ஈஸ்வர் அங்கு நிலவி இருந்த அலைகளை உணர முயன்று கொண்டிருந்தான். மூன்று நிமிடங்களில் அவன் மனம் ஓரளவு அமைதியாகியது. வார்த்தைகளில் அடங்காத ஒரு பேரமைதியை அவன் உணர ஆரம்பித்தான். அவ்வப்போது அந்தரத்தில் தொங்கினாற்போல் காட்சி தந்து அவனைத் திகைக்க வைத்த சிவலிங்கம் அது அறுபது வருடங்களாக இருந்த இடத்தில் அவன் அமர்ந்திருக்கையில் ஏனோ அவனை எந்தத் தொந்திரவும் செய்யவில்லை. உண்மையில் அவன் அந்த சிவலிங்க தரிசனத்தை அங்கே எதிர்பார்த்தான் என்று கூட சொல்லலாம். ஆனால் ஆரம்பத்தில் பேரமைதி மட்டும் அவனை சூழ்ந்தது. அவன் காலத்தை மறந்தான்....


பார்த்தசாரதிக்கு அவனைப் பார்க்கும் போது சிறிது ஆச்சரியமாகத் தான் இருந்தது. அவனுடைய அழகான முகத்தில் தெரிந்த அமைதி அவர் அஜந்தா குகைகளில் பார்த்த ஒரு புத்தரை நினைவுபடுத்தியது. அமெரிக்காவில் வளர்ந்த பையன் இந்த அளவு தியானத்தில் ஆழப்பட முடிவது பெரிய விஷயம் தான் என்று நினைத்துக் கொண்டார். அவரும் பல தடவை முயற்சி செய்திருக்கிறார். ஒவ்வொரு தடவை தியானம் செய்ய உட்காரும் பொழுதும் நூற்றுக் கணக்கான விஷயங்கள் என்னைக் கவனி, என்னைக் கவனி என்று படையெடுத்து வந்து மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்தனவே ஒழிய தியானம் என்னவோ அவருக்கு கைகூடினதே இல்லை.....

ஈஸ்வர் அனுபவித்து வந்த அமைதியினூடே திடீர் என்று சிவலிங்கம் தத்ரூபமாக அவன் எதிரில் அந்தரத்தில் காட்சி அளித்தது. சிவலிங்கத்தில் இருந்து ஒரு கண் திறந்து அவனைப் பார்த்தது. பின்னணியில் வேத கோஷம் கேட்டது.  

ஓம் பூர்ண மதப் பூர்ண மிதம்
பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாயப்
பூர்ண மேவா வசிஷ்யதே
ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி

சில வினாடிகள் நீடித்த அந்தக் காட்சி வந்தபடியே திடீர் என்று மறைந்தது. அவனுக்கு மயிர்க்கூச்செரிந்த்து. குப்பென்று வியர்த்தது. அவன் கண்களைத் திறந்தான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த பார்த்தசாரதி கேட்டார். “என்ன ஆச்சு?

அவன் தன் அனுபவத்தை அவரிடம் சொல்லவில்லை. “ஒரு அழகான மன அமைதியை நான் அனுபவிச்சேன்...

உங்களுக்கு தியானம் இவ்வளவு சுலபமா வருமா?

“சுலபமாவா? எனக்கா? இது வரைக்கும் இப்படி வந்ததில்லை. முதல் தடவையா இங்கே தான் இப்படி ஒரு அனுபவம் கிடைச்சிருக்குஈஸ்வர் உண்மையைச் சொன்னான்.

அப்படின்னா இந்த இடத்தோட மகிமை தான் அதுன்னு சொல்றீங்களா?

“ஆமா. அறுபது வருஷமா ஆத்மார்த்தமா எந்த கள்ளங்கபடமும் இல்லாம இந்த இடத்துல சிவலிங்கத்தை வச்சு அந்தப் பெரியவர் பூஜை நடத்தி இருக்கார். அந்த தியான அலைகள் இங்கே நிறையவே இருக்கு. அதனால தான் இங்கே எனக்கு தியான மனநிலை சீக்கிரமாவே வந்ததுன்னு நினைக்கிறேன்.

ஆனா எனக்கு இங்கே எந்த ஒரு தியான மனநிலையும் வரலையே

“ஒவ்வொருத்தனும் எதைத் தேடிட்டு போறானோ அதுக்கேத்த மாதிரி தான் அவன் அனுபவமும் அமையுது சார். நீங்க இங்கே போலீஸ்காரரா தான் வந்திருக்கீங்க. அதனால உங்களுக்கு எதாவது தடயம் இங்கே கிடைக்கலாமே ஒழிய இந்த மாதிரி தியான அனுபவம் கிடைக்காது....

அவனது வார்த்தைகள் அவரை யோசிக்க வைத்தன. அவர் சிறிது மௌனமாக இருக்க அவனும் சற்று முன் மனக்கண்ணில் அந்தரத்தில் சிவலிங்கம் தோன்றிய விதத்தையும் ஒரு கண் திடீர் என்று திறந்து அவனைப் பார்த்த விதத்தையும், பின்னணியில் கேட்ட வேத கோஷத்தையும் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.  கண் (நெற்றிக் கண்ணாக இருக்குமோ?) திறந்ததும், வேத கோஷமும் அவனுக்குப் புதிதான அனுபவங்கள். இதன் அர்த்தம் என்னவாக இருக்கும் என்று அவன் யோசித்தான். ஆனால் அவன் மனக்கண்ணில் அந்த சிவலிங்கத்தைப் பார்த்து வேத கோஷம் கேட்ட அதே நேரத்தில் அந்த வேத பாடசாலையில் ஓம் பூர்ண மதப் பூர்ண மிதம்...என்ற சுலோகத்தை மாணவர்கள் சேர்ந்து உச்சஸ்தாயியில் சொல்லிக் கொண்டு இருந்ததையும் அதை சிவலிங்கம் முன்பு அமர்ந்தபடி கணபதி ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்ததையும் அவன் அறிய மாட்டான்...

ந்த மனிதன் சிலமணி நேரங்களாகவே ஒரு அசௌகரியத்தை உணர்ந்து கொண்டிருந்தான். வாய்விட்டுச் சொல்ல முடியாத பிரச்சினையில் தனியாகத் தவிப்பது ஒரு கொடுமையான அனுபவம் என்று தோன்றியது. குருஜியை உடனடியாக சந்தித்து அந்தத் தகவலைச் சொல்ல முடியாதது அவனுக்கு தலையை வெடிக்கச் செய்து விடும் போல் தோன்ற வைத்தது. தன்னுடைய சகாவிடம் தன் எண்ணங்களை எல்லாம் சொல்ல அவனுக்கு முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் சகாவினுடைய அறிவுகூர்மைக்கு சில விஷயங்கள் எட்டாது என்பது தான். எல்லாம் கேட்டு விட்டு அடிப்படை விஷயங்களிலேயே சந்தேகம் கேட்கக் கூடியவன் அவன். அதனால் அவனிடம் சிக்கலான, ஆழமான விஷயங்களைப் பேசக்கூடாது என்பதை அவன் என்றோ கற்றுக் கொண்டிருந்தான்.....

செல்போன் அவன் சிந்தனைகளைக் கலைத்தது. ஜான்சனின் நம்பர். பரபரப்புடன் எடுத்தான். ஹலோ

என்ன ஆச்சு குருஜிக்கு. நான் அவரைக் கூப்பிட்டால் ஸ்விட்ச்டு ஆஃப் மெசேஜ் தான் வருகிறது

அவர் தனிமைல இருக்கார். பூகம்பமே வந்தாலும் அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம்னு சொல்லி இருக்கார். சாப்பாடு கூட வேண்டாம்னு சொல்லி இருக்கார். யாரும் மறந்து கூட தொந்திரவு செய்துடக் கூடாதுன்னு வீட்டுக்கு வெளியே காவலுக்கு ஒரு தடியனை வேற நிறுத்தி இருக்கார். அவன் அந்த வீட்டுக்கு நூறடி தூரத்துலயே எல்லாரையும் நிறுத்தி அப்படியே அனுப்பிச்சுடறான்...

“என்ன திடீர்னு...?

“நாளைக்கு அவர் சிவலிங்கத்தைப் பார்க்கப் போகப் போகிறார்...

ஜான்சன் பரபரப்பானார். “அப்படியா வெரி குட். ஆமா அவர் வீட்டுக்குள்ளே என்ன செய்துட்டு இருக்கார்னு எதாவது ஐடியா இருக்கா?

இல்லை...

“மத்தபடி எல்லாம் நல்லபடியா தானே போயிட்டிருக்கு...

அப்படி நல்லபடியா போக சிவலிங்கம் விடற மாதிரி தெரியலை.

“என்ன ஆச்சு?

“அந்த ஈஸ்வர் வேதபாடசாலைக்கு வரப் போறதா தகவல் வந்திருக்கு. யாரோ அவன் நண்பன் போய் பார்த்துட்டு வரச் சொன்னானாம்....

ஜான்சன் ஒரு நிமிடம் பேச்சிழந்தார். பின் படபடப்புடன் கேட்டார். எப்ப வர்றானாம்?

அது தெரியலை. எப்ப வேணும்னாலும் வரலாம். இதை குருஜி கிட்ட சொன்னா எப்படி சமாளிக்கிறதுங்கறதை அவர் பார்த்துக்குவார். ஆனா அவரை இப்போதைக்கு பார்க்க முடியாதுங்கறது தான் பிரச்சினையே....

ஜான்சன் சொன்னார். “என்ன ஆனாலும் சரி அந்த சிவலிங்கத்தையோ, கணபதியையோ அவன் பார்த்துடாம பார்த்துக்கோங்க. அதே மாதிரி அவனுக்குக் கொஞ்சமும் சந்தேகம் வராமல் பார்த்துக்குங்க. அவன் எமகாதகன். ஜாக்கிரதை....

முதலிலேயே உணர்ந்து வந்த அசௌகரியம் ஜான்சனின் எச்சரிக்கையால் இப்போது வளர்ந்து பெரிதாகி விட அன்றிரவெல்லாம் அந்த மனிதன் உறங்காமல் விழித்திருந்தான். அவன் மூளை ஓவர் டைம் வேலை செய்ய ஆரம்பித்தது.

(தொடரும்)

-என்.கணேசன்

  

14 comments:

  1. வாராவாரம் பரபரப்பு கூடிக்கொண்டே போகிறது......வாழ்த்துகள்.....

    ReplyDelete
  2. அர்ஜுன்February 21, 2013 at 6:14 PM

    //அவன் மனக்கண்ணில் அந்த சிவலிங்கத்தைப் பார்த்து வேத கோஷம் கேட்ட அதே நேரத்தில் அந்த வேத பாடசாலையில் ”ஓம் பூர்ண மதப் பூர்ண மிதம்...” என்ற சுலோகத்தை மாணவர்கள் சேர்ந்து உச்சஸ்தாயியில் சொல்லிக் கொண்டு இருந்ததையும் அதை சிவலிங்கம் முன்பு அமர்ந்தபடி கணபதி ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்ததையும் அவன் அறிய மாட்டான்...//

    எனக்கு படிக்கையில் சிலிர்த்து விட்டது சார். சூப்பராக போகுது. அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள். உரையாடல்கள் இயல்பாகவும், மனதில் நிற்கும்படியும் இருக்கின்றன.

    ReplyDelete
  3. நான் புதிதாக சேர்ந்த வாசகன் மிகவும் அருமையாக உள்ளது.

    சுந்தர் - ஈரோடு

    ReplyDelete
  4. அவனுடைய அழகான முகத்தில் தெரிந்த அமைதி அவர் அஜந்தா குகைகளில் பார்த்த ஒரு புத்தரை நினைவுபடுத்தியது. அமெரிக்காவில் வளர்ந்த பையன் இந்த அளவு தியானத்தில் ஆழப்பட முடிவது பெரிய விஷயம் தான்..

    //அவன் மனக்கண்ணில் அந்த சிவலிங்கத்தைப் பார்த்து வேத கோஷம் கேட்ட அதே நேரத்தில் அந்த வேத பாடசாலையில் ”ஓம் பூர்ண மதப் பூர்ண மிதம்...” என்ற சுலோகத்தை மாணவர்கள் சேர்ந்து உச்சஸ்தாயியில் சொல்லிக் கொண்டு இருந்ததையும் அதை சிவலிங்கம் முன்பு அமர்ந்தபடி கணபதி ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்ததையும் அவன் அறிய மாட்டான்...//

    நிகழ்ச்சிகளின் அற்புதமான கோர்வை ரசிக்கவைக்கிறது .....


    ReplyDelete
  5. நேரில் பார்க்கிற மாதிரி மிக இயல்பான கதாபாத்திரங்களும், நிகழ்வுகளும்... மிக அருமை. மிக்க நன்றி.

    ReplyDelete
  6. உங்கள் சொல் நடை . அருகில் இருந்து அனுபவிப்பது போல் உள்ளது . நன்றி

    ReplyDelete
  7. ​பரம(ன்) ரகசியம் படிக்க ஆரம்பித்த உடன் நான் இந்த உலகிலே இல்லை அண்ணா... படிக்கும் ஒவ்வொரு சம்பவமும் கண் முன்னே நடப்பது போல இருக்கு பிரம்மாதம் அண்ணா..., ஒரு பெரிய REQUEST வாரத்துக்கு இரண்டு முறை வெளிவந்தால்... கதையின் தாக்கம் மனதில் குறையாமல் தொடரும்..,

    ReplyDelete
  8. Very nice to read your blog. I feel like you are helping my spiritual journey through your articles and stories. :-)

    ReplyDelete
  9. ஈஸ்வர் அனுபவித்து வந்த அமைதியினூடே திடீர் என்று சிவலிங்கம் தத்ரூபமாக அவன் எதிரில் அந்தரத்தில் காட்சி அளித்தது. சிவலிங்கத்தில் இருந்து ஒரு கண் திறந்து அவனைப் பார்த்தது. பின்னணியில் வேத கோஷம் கேட்டது. //

    கண்முன்னே காட்சி விரிந்தது.

    ReplyDelete
  10. சுந்தர்February 22, 2013 at 9:07 PM

    மூன்று நான்கு வாரம் சேர்த்து வைத்து படித்தால் டென்ஷன் குறையும் என்று ஒவ்வொரு வாரமும் நினைப்பதுண்டு. ஆனால் வியாழன் 6 மணிக்கு நீங்கள் பதிவு போட்டால் 7 மணி வரை கூட வெயிட் பண்ண முடிவதில்லை சார். அடுத்த வார வியாழனுக்குள் பரமரகசியத்தின் சில அத்தியாயங்களை திரும்பத் திரும்ப படித்து விடுகிறேன். அத்தனை நன்றாக உள்ளது. மனப்பூர்வ பாராட்டுக்கள். முடிந்தால் வாரம் இரு முறை பதிவு போடுங்கள். நன்றி

    ReplyDelete
  11. Hi sir,

    I try to order your book ஆழ்மனதின் அற்புத சக்திகள் via site https://www.nhm.in/shop/home.php?cat=886.
    Here have Blackhold media books. But, I can't find this book in the list.

    I am in pune, I hate to purchase online like this site only.
    Any other site for onlie order your book like flipkart.com

    regards
    sankar

    ReplyDelete
    Replies
    1. Dear Sir,

      Please contact Blackhole Media Publisher Mr.Yaanan through his cell no. 9600123146. He will help you.

      Thank you.

      Regards
      N.Ganeshan

      Delete
  12. sivalingam kan thirandhadhum vedha manthirangalin oli kettadhum mayir koocherindhadhu easwarukku mattumalla. enakkum than.

    Sakthi

    ReplyDelete