சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, January 20, 2012

திட்டமில்லாமல் திண்டாடாதீர்கள்



வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 21
திட்டமில்லாமல் திண்டாடாதீர்கள்

வாழ்க்கையில் அலட்டிக் கொள்ளாமல் அதிகம் சாதித்த மனிதர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் கடுமையாக உழைப்பது போல் பார்வைக்குத் தெரியாது. ஆனாலும் அவர்கள் நிறைய சாதனைகள் புரிந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் வாழ்க்கை முறையைக் கூர்ந்து பார்த்தால் அதற்கு காரணம் கண்டிப்பாக விளங்கும். அவர்கள் திட்டமிட்டு ஒரு ஒழுங்குமுறையுடன் செயல்படுபவர்களாக இருப்பார்கள்.

அந்தோணி ராபின்ஸ் என்ற பிரபல சுயமுன்னேற்ற எழுத்தாளர் திட்டமில்லாமல் வாழ்பவர்கள் நயாகரா சிண்ட்ரம் (The Niagara Syndrome) என்ற பிரச்னையில் கண்டிப்பாக ஒரு நாள் மாட்டிக் கொள்வார்கள் என்று கூறுகிறார். அந்தப் பிரச்னையில் திட்டமில்லா மனிதர்கள் எப்படி மாட்டிக் கொள்கிறார்கள் என்பதை அவர் வார்த்தைகளிலேயே பார்ப்போம்.

“வாழ்க்கையை ஒரு நதியாகச் சொல்லலாம். பெரும்பாலான மக்கள் எங்கே போய் முடிய வேண்டும் என்ற சிந்தனை இல்லாமலேயே அதில் குதித்து விடுகின்றனர். விரைவிலேயே வாழ்க்கை நதியின் அவ்வப்போதைய நீரோட்டத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். அப்போதைய நிகழ்வுகள், அப்போதைய பயங்கள், அப்போதைய சவால்களை எதிர்கொள்வதிலேயே அவர்கள் மும்முரமாக இருக்கிறார்கள். வாழ்க்கை நதியில் கிளைகள் வரும் போதும் அவர்கள் எந்தப் பக்கம் போவது என்றோ, எதில் செல்வது இலாபகரமானது என்றோ கவனம் கொடுத்து தீர்மானிப்பதில்லை. தானாக எதில் கொண்டு போய் விடுகிறதோ அதில் பயணிக்கிறார்கள். அதனால் அவர்கள் வாழ்க்கை அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. இப்படி அரை மயக்கத்தில் செல்லும் வாழ்க்கையிலிருந்து அவர்களைத் தட்டி எழுப்புவது தண்ணீர் ஆர்ப்பரித்து விழும் ஓசை தான். விழித்துக் கொள்ளும் போது தான் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு ஐந்தடி தூரத்தில் துடுப்பில்லாத படகில் வேகமாக வந்து கொண்டு இருப்பது தெரிகிறது. ஆனால் அந்த நேரத்து ஞானோதயம் காலம் கடந்ததாக இருந்து விடுகிறது. அந்த வீழ்ச்சியில் விழுந்தே தீர வேண்டியிருக்கிறது. அது உணர்ச்சிகளின் வீழ்ச்சியாக இருக்கலாம், ஆரோக்கியத்தின் வீழ்ச்சியாக இருக்கலாம், பொருளாதார வீழ்ச்சியாக இருக்கலாம். எதுவாக இருப்பினும் ஆரம்பத்திலேயே புத்திசாலித்தனமாக சரியான முடிவுகளைத் திட்டமிட்டு எடுத்திருந்தால் இதைக் கண்டிப்பாக தடுத்திருக்க முடியும்.

திட்டமிடா விட்டாலும் வாழ்க்கை நகரத்தான் போகிறது. ஆனால் அது போகும் பாதை நமக்கு அனுகூலமாக இருக்கத்தான் வாய்ப்பில்லை. அந்தோணி ராபின்ஸ் கூறுவது போல அது ஏதோ ஒரு வீழ்ச்சியில் என்றோ ஒரு நாள் உங்களை வீழ்த்தக்கூடும். திட்டமில்லா மனிதர்களுக்குத் திறமையும், உழைப்பும், உற்சாகமும் பெரிதாக பயன்பட்டு விடப்போவதில்லை. காரணம் அவற்றைத் தக்க வைத்துக் கொள்வதில் அவர்கள் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. காட்டாறு போல பிரவாகம் எடுத்து வரும் அனைத்தும் கட்டுப்பாடான கரைகளுக்குள் இல்லாமல் கண்டபடி எல்லா பக்கங்களிலும் போவதால் சீக்கிரமே வடிந்து விடுகிறது. அதனால் ஒரு சமயத்தில் பிரம்மாண்டமாகத் தெரிகிற வளர்ச்சி இன்னொரு சமயத்தில் கண்ணிற்கே தென்படுவதில்லை.

திட்டமிடாதவர்கள் வாழ்க்கையை அவர்களைத் தவிர அனைவரும் தங்கள் விருப்பத்திற்கு நகர்த்துகிறார்கள். மற்ற சூழ்நிலைகளும் அவர்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. மற்ற மனிதர்களும் சூழ்நிலைகளும் தீர்மானிக்கும் போது அதை எதிர்க்கும் சக்தி திட்டமில்லா மனிதர்களுக்கு இருப்பதில்லை.

வாழ்க்கை என்ற நீண்ட ஓட்டத்தை விடுங்கள். ஒரு விடுமுறை நாள் என்ற குறுகிய காலம் கூட திட்டம் என்று ஒன்று இல்லா விட்டால் நமக்கு பயன்படும்படி அமைவதில்லை. அந்த நாளில் ஒரு பகுதியை வம்புப் பேச்சு கழித்து விட முடியும். இன்னொரு பகுதியை டிவி திருடிக் கொண்டு விட முடியும். இன்னொரு பகுதியைத் தேவையோ, உபயோகமோ இல்லாத இன்னொரு செயல் இழுத்துச் சென்று விட முடியும். மீதிப்பகுதியை சோம்பலோ, ஊர்சுற்றலோ எடுத்துக் கொண்டு விட முடியும்.

ஆனால் முன்கூட்டியே திட்டம் என்று ஒன்றிருக்குமானால், நாம் செய்ய வேண்டியவை இன்னதெல்லாம் என்று முன்கூட்டியே தீர்மானம் ஒன்று இருக்குமானால் அந்த நாளை மேலே சொன்ன எதுவும் நம்மிடம் இருந்து பிடுங்கிச் சென்று விட முடியாது. அதற்கான அவகாசத்தையே நாம் தந்து விடப் போவதில்லை.

திட்டமிட்டால் மட்டும் அப்படியேவா நடத்தி விட முடிகிறது என்ற நியாயமான கேள்வியைக் கேட்கலாம். நாம் ஒன்று நினைத்தால் நாம் சற்றும் எதிர்பாராத சூழ்நிலை அத்தனை திட்டத்தையும் பாழடிக்கிற மாதிரி வந்து சேரலாம். அது தான் வாழ்க்கையின் யதார்த்தமும். ஆனால் திட்டம் என்று ஒன்று இருக்கையில் அந்த சூழ்நிலையில் இருந்து எவ்வளவு வேகமாக வர முடியுமோ அந்த அளவு வேகமாக வெளியே வந்து விடுகிறோம். முன்னமே திட்டம் இட்ட சில வேலைகளையாவது செய்து முடிக்கிறோம்.

நமக்கு என்னவெல்லாம் ஆக வேண்டி இருக்கிறது, நம் வாழ்க்கை எந்தப்பாதையில் செல்ல வேண்டும் என்ற தெளிவு நமக்கு உறுதியாக இருக்குமானால் அது நம் தினசரி வாழ்க்கையிலேயே சிறு சிறு மாற்றங்களை அவ்வப்போது செய்ய வைக்கும். பாதை விலக ஆரம்பிக்கும் போதெல்லாம் ஆரம்பத்திலேயே உணர வைத்து மாற வைக்கும். தேவை இல்லாத, பயனில்லாத செயல்களில் இறங்க ஆரம்பத்திலேயே அனுமதிக்காது. நம் சக்தியையும், காலத்தையும் வீணாக்குவது மிக மிகக் குறையும். ஊர்வம்பில் சேர்வதற்கோ, அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பதற்கோ நம்மை அது விடாது. இப்படி நமக்கு பயன்படுவதற்கு மட்டுமல்லாமல் அடுத்தவரைத் தொந்திரவு செய்யாமல் இருப்பதற்கும் திட்டமிட்டு செயல்படுவது உதவும்.

திட்டமில்லாத மனிதர்கள் கடைசி நேரத்தில் பரபரப்பு காட்டுவார்கள். என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்கு கடைசி நேரத்தில் தான் உறைக்கும். நயாகரா சிண்ட்ரம் என்று அந்தோணி ராபின்ஸ் சொன்னது போல என்ன நிலவரம் என்பது வீழ்ச்சிக்கு முன்னால் தான் புரியும். அந்த நேரத்தில் என்ன தான் ஆர்ப்பாட்டம் செய்தாலும், அதிக வேகமும், செயல்திறனும் காட்டினாலும் அது பயன் தருவது மிக அபூர்வமே.

ஒரு நாளை, ஒரு வாரத்தை, ஒரு மாதத்தை, ஒரு வருடத்தை, மொத்த வாழ்க்கையை இப்படி இருக்க வேண்டும், இத்தனை சாதிக்க வேண்டும் என்று திட்டமிடுங்கள். உங்கள் திட்டம் நூறு சதவீதம் நிறைவேறாது. முன்பே சொன்னது போல நாம் நினைத்திராத எத்தனையோ தடைகளும், சூழ்நிலைகளும் வந்து சேரலாம். அதற்கென்று திட்டமே வேண்டாம் என்று முடிவு கட்டி  விடாதீர்கள். தடைகளைத் தாண்ட முடியுமா என்றும் சூழ்நிலைகளை மாற்ற முடியுமா என்றும் பாருங்கள். முடிந்தால் செய்யுங்கள். அப்போது தான் நம் திறமைகளே நமக்கு அறிமுகமாகும்.  அப்படி முடியா விட்டாலும் எவ்வளவு சீக்கிரம் அதிலிருந்து விடுபட்டு பழையபடி திட்டமிட்ட வாழ்க்கைக்கு வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திரும்பி வாருங்கள். செய்ய வேண்டியதைத் தொடர்ந்து செய்யுங்கள்.

திட்டமிடும் வாழ்க்கையில் 100 சதவீத வெற்றி கிடைக்காமல் போனாலும் சுமார் 60 சதவீத வெற்றியாவது கிடைக்கும். ஆனால் திட்டமே இல்லாத வாழ்க்கையில் ஒரு சதவீதம் கூட வெற்றி நமக்கு நிச்சயமல்ல. மேலும் திட்டமிட்டு வாழும் வாழ்க்கையில் எதிர்பார்த்த நன்மைகள் நினைத்த அளவுக்கு கிடைக்கா விட்டாலும் தீமைகள் கண்டிப்பாக விளைய வாய்ப்பே இல்லை. ஆனால் திட்டமிடாத வாழ்க்கையில் தீமையே அதிகம் விளையும். எனவே திட்டமிடுங்கள். வாழ்க்கையை ஒரு அர்த்தத்தோடு கொண்டு செல்லுங்கள். அப்படிச் செய்தீர்களானால் பின்னால் என்றும் நீங்கள் வருந்தக் காரணமிருக்காது.

-என்.கணேசன்
நன்றி: வல்லமை

6 comments:

  1. வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான தகவல் ....பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. திட்டமிட்டு வாழும் வாழ்க்கையில் எதிர்பார்த்த நன்மைகள் நினைத்த அளவுக்கு கிடைக்கா விட்டாலும் தீமைகள் கண்டிப்பாக விளைய வாய்ப்பே இல்லை. ஆனால் திட்டமிடாத வாழ்க்கையில் தீமையே அதிகம் விளையும். எனவே திட்டமிடுங்கள். வாழ்க்கையை ஒரு அர்த்தத்தோடு கொண்டு செல்லுங்கள். //

    ஆம், திட்டமிட்டு வாழ்ந்து வாழ்க்கையை அர்த்தத்தோடு கொண்டு செல்வோம்.
    நன்றி.

    ReplyDelete
  3. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  4. Its like especially said for me!!!!!!
    Thanks a lot...

    ReplyDelete
  5. thank u. I am 100 feets away from niagra falls. but i will use my boat as parachute to land safely in the water.

    ReplyDelete