சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, December 28, 2011

உயிரோடு புதைந்து பின் எழுவது எப்படி?


பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 12
உயிரோடு புதைந்து பின் எழுவது எப்படி?

“உயிரோடு புதைந்து பல மணிகள் கழித்தும், பல நாட்கள் கழித்தும் பின் பிழைத்தது எப்படி? என்ற கேள்விக்கு டெஹ்ரா பே விரிவான விளக்கம் தந்தார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவைப் போல எகிப்திலும் இது போன்ற சாகசங்கள் சர்வ சாதாரணமாகச் செய்யப்பட்டன. அந்தக் காலத்தில் இன்றைய காலத்தைப் போல பணம், பகட்டு, பொருள் மீது மக்களின் கவனம் அதிகமாய் செல்ல ஆரம்பித்திருக்கவில்லை. ஆத்மஞானத்தை அனைவரும் நம்பினார்கள். அதனால் இது போன்ற சாகசங்கள் குறித்து அவர்கள் தெளிவாக அறிந்திருந்தார்கள்.

ஆத்மா உடலல்ல என்பதையும் அது உடலை விட்டும் இருக்கக் கூடிய சக்தி என்பதையும் உடலையும், விழிப்புணர்வையும் இயக்கும் சக்தி என்பதையும் அனைவரும் நம்பினார்கள். உடல் அழிந்து அதன் வேதியியல் அணுக்கள் கார்பன், பொட்டாசியம், ஹைடிரஜன், ஆக்ஸிஜன் ஆகிய வடிவங்களில் திரும்ப மண்ணிற்கே திரும்பச் செல்லும் போது அதை இயக்கிய ஆன்ம சக்தி தன் மூலசக்தியாகிய நாம் முழுவதும் அறியாத, என்றும் நிலைத்திருக்கக் கூடிய, அந்த பெரும் சக்திக்கே திரும்புகிறது. இதை லௌகீகத்தில் மூழ்கி விட்ட இன்றைய மனிதர்கள் உணரத் தவறி விடுகிறார்கள்.

என்னுடைய தந்தை இது போன்ற செயல்களுக்காக என்னை நான் நான்கு மாதக் குழந்தையாக இருந்த போதிலிருந்தே தயார்ப்படுத்த ஆரம்பித்து விட்டார். அதனால் இன்று என் விருப்பப்படி பல நாட்கள் மண்ணில் புதைந்திருந்து எந்த பாதிப்பும் அடையாமல் திரும்புவது முடிகிறது”.

பால் ப்ரண்டன் சொன்னார். “ஆனால் சந்தேகப்படுபவர்கள் கேட்கிறார்கள்- “மனிதனால் மூச்சு விடாமல் மண்ணுக்கடியில் வழ்வது எப்படி முடிகிறது?என்று

டெஹ்ரா பே பல உதாரணங்களைச் சொன்னார். “கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளை ஒட்டிய கடல்களில் முத்து எடுப்பவர்கள் கிட்டத்தட்ட எட்டு அல்லது ஒன்பது நிமிடங்கள் மூச்சு விடாமல் கடலுக்கடியில் தங்குகிறார்கள். தவளை வேகமாக மூச்சு விடக்கூடியது ஆனால் அது தண்ணீருக்கடியில் இருக்கையில் நான்கு மணி நேரம் மூச்சு விடாமல் இருக்க முடிகிறது. வெளியே இருக்க முடிந்த  கடல் ஆமைகளும் அப்படியே சில மணி நேரங்கள் கடலுக்கடியில் இருக்க முடிகிறது. ஆனால் கடல் ஆமையைக் கட்டாயப்படுத்தி தண்ணீருக்குள் அழுத்தி வைத்தால் அது மூச்சு முட்டி இறந்து போகும். காரணம் கடல் ஆமை தண்ணீருக்குள் மூச்சு விடாமல் இருக்க முன்னமே தன்னை தயார் செய்து கொண்ட பிறகு தான் அப்படி மணிக்கணக்கில் இருக்க முடியும்....

அப்படியே முதலைகளையும் வவ்வால்களையும் கூட மூச்சு விடாமல் நீண்ட காலத்திற்கு அப்படியே இயக்கமில்லாமல் இருக்க முடிவதை டெஹ்ரா பே விளக்கிய போது பால் ப்ரண்டனுக்கு வியப்பாக இருந்தது.

டெஹ்ரா பே கேட்டார். “விலங்குகளாலேயே முடிகிற விஷயம் மனிதனால் ஏன் முயன்றால் முடியாது? அதை எங்களைப் போன்ற பக்கிரிகள் செய்தும் காட்டி நிரூபித்து இருக்கிறோம். ஆனால் கடல் ஆமையைச் சொன்னது போல நானும் முன்னமே தயாராகி அரை மயக்க நிலைக்குச் சென்றால் தான் அப்படி புதைந்து கிடக்க முடியும். இல்லா விட்டால் நானும் பத்து நிமிடங்களில் மூச்சுமுட்டி செத்து விடுவேன்.

பால் ப்ரண்டன் சற்று யோசித்து விட்டு ஒரு பொருள் பொதிந்த கேள்வியைக் கேட்டார். அப்படி புதைந்து கிடக்கையில் உங்கள் ஆத்மா உடலை விட்டு வெளியேறுகிறதா? அப்படி வெளியேறி நீங்கள் சொன்னது போல மூலமான பெரும் சக்தியுடன் கலக்கிறதா? அந்த சமயத்தில் என்ன தான் நடக்கிறது?

டெஹ்ரா பே நேர்மையுடன் அந்த நேரத்தில் நிகழ்வது என்ன என்பதை தன்னால் சொல்ல முடியவில்லை என்பதை ஒத்துக் கொண்டார். புதைந்த நிலையில் மிக ஆழமான உறக்கத்தில் இருப்பதைப் போல இருக்கிறோம். நினைவு திரும்பும் போது எதுவுமே நினைவுக்கு வருவதில்லை. அந்த மயக்க நிலையில் ஆன்மா நாமறிய முடியாத பயணங்களை மேற்கொண்டு இருக்கக் கூடும். ஆனால் விழிப்புணர்வு முடக்கப்பட்ட அந்த நிலையில் நடப்பது எதுவும் நினைவுக்கு வந்ததில்லை.

பல முறை அப்படி மண்ணில் புதைந்த மனிதனாலேயே கூட அந்த மயக்க நிலையில் ஆன்மாவின் செயல்பாடு என்ன என்பதைச் சொல்ல முடியவில்லை என்பது பால் ப்ரண்டனுக்கு ஏமாற்றமாக இருந்தது.

அதைப் புரிந்து கொண்ட டெஹ்ரா பே சொன்னார். “சில யதார்த்த உண்மைகளை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி. கிட்டத்தட்ட மரணத்தைப் போன்ற நிலையில் விலகி மறுபடி அந்த உடலில் ஆன்மா சேரமுடிவதே அது மரணமில்லாதது, நிலையானது என்பதற்கு ஆதாரமாக எனக்குத் தெரிகிறது

பால் ப்ரண்டனுக்கு அவருடைய நேர்மை பிடித்திருந்தது. தெரியாததைத் தெரியாது என்று அந்த அளவு சாதனை புரிந்த மனிதரால் சொல்ல முடிந்தது உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்று எண்ணிக் கொண்டார்.

டெஹ்ரா பே இப்படி உயிரோடு மண்ணில் புதைவதில் இருந்த வெற்றி தோல்விகளையும் மற்ற சாதனையாளர்களை உதாரணம் காட்டி சொன்னார். “நான் சிறுவனாக இருந்த போது எங்கள் நகரத்தில் ஒரு பக்கிரி மண்ணில் புதைந்து பல வருடங்கள் கழித்து குறிப்பிட்ட நாளில் தன்னை எழுப்பச் சொன்னார். அப்படியே பல வருடங்கள் கழிந்து தோண்டி எடுத்த போதும் அவர் உயிரோடு இருந்தார். ஆனால் பேச்சு சக்தி மட்டும் இழந்திருந்தார். ஆறு மாத காலம் கழித்து இறந்து போனார். மூச்சு இல்லாமல் சில நாட்கள் இருப்பது விரத சமயத்தில் வயிற்றைப் பட்டினி போடுவது போல உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அப்படி எழும் போது உடலுக்கு அருமையான ஓய்வு கிடைத்திருப்பதால் எத்தனையோ வியாதிகள் கூட குணமாகி இருப்பதைக் கண்டிருக்கிறோம் ஆனால் இப்படி வருடக்கணக்கில் அப்படிச் செய்யும் போது சில அபாயங்கள் இருக்கத் தான் செய்கின்றன.

“எனக்குத் தெரிந்த சையது என்ற 18 வயது பக்கிரி சரியான பயிற்சி பெற்று பல முறை மண்ணில் புதைந்து மறுபடி எழுந்தவன். ஒரு முறை அவன் ஆறு வருடங்கள் மண்ணில் புதைந்து காட்ட முடிவெடுத்து அப்படியே ஒரு பிரத்தியேக சமாதியில் புதைக்கப்பட்டான். அவனுடைய முஸ்லீம் நண்பர்கள் வருடா வருடம் ரம்சான் நோன்பு சமயத்தில் அவன் உடலை எடுத்துப் பார்த்து மறுபடி புதைத்தனர். முதலிரண்டு வருடங்களில் அவன் உடல் நன்றாகவே இருந்தது. மூன்றாம் வருடம் திறந்து பார்க்கையில் அவன் உடல் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்ததைப் பார்த்து நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

“ஏன் அப்படி ஆயிற்று?பால் ப்ரண்டன் கேட்டார்.

“இது போன்ற சாகசங்களில் ஈடுபடும் முன் தகுந்த முன்னேற்பாடுகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். உடலை மென்மையான மெழுகால் பூச வேண்டும். சவப்பெட்டியில் உள்ள தூசிகளை முழுமையாக அப்புறப்படுத்தி விட வேண்டும். இது போன்ற முன்னேற்பாடுகளை சையது செய்யத் தவறி விட்டார். மூன்றாவது வருடம் எகிப்தில் உள்ள சிறிய சக்தி வாய்ந்த பாம்புகளில் ஏதாவது ஒன்று சவப்பெட்டியில் புகுந்திருக்கலாம். இப்படி அரை மயக்க நிலைக்குச் சென்ற உடலில் ஆக்சிஜன் சுத்தமாக இல்லாத போது எந்த மைக்ரோப்களும், பூச்சிகளும் தீண்டாமல் இருக்கும். சவப்பெட்டியில் புகுந்த சிறிய பாம்பு சையதின் மூக்கில் நுழைந்திருக்கலாம். அந்த நேரத்தில் சையதின் உடலில் சிறிது ஆக்சிஜன் புகாமலிருக்கும் அளவு கட்டுப்பாட்டை வைக்கத் தவறி இருக்கலாம். அதன் விளைவாக உடல் தன் பாதுகாப்பை இழந்திருக்கலாம். அது புழுக்களும் பூச்சிகளும் படையெடுத்து உடலை உண்ண வழி செய்திருக்கலாம்

சிறிது ஏமாந்தாலும் இதில் எப்படிப்பட்ட அபாயங்கள் எல்லாம் உள்ளன என்பதை உணர்ந்த பால் ப்ரண்டன் பிரமிடுகளில் புதைக்கப்பட்டிருந்த மம்மிகளின் உடலைப் பாதுகாத்திருந்த விதத்தையும், அவற்றை மிக உறுதியான கற்களால் மூடியிருந்த விதத்தையும் நினைவுகூர்ந்தார்.

டெஹ்ரா பே சிரித்துக் கொண்டே தொடர்ந்தார். “நான் புதையுண்டிருந்த சமயங்களில் ரகசிய பைப்கள் வழியாக காற்று வரும்படி செய்திருக்கக் கூடும் என்று சந்தேகப்பட்டவர்களின் சந்தேகம் அர்த்தமில்லாதது என்பதை நீங்கள் தற்போது உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்

பிறகு பால் ப்ரண்டன் அவரிடம் இது போன்ற அற்புதங்களைச் செய்யும் சிலர் அதற்கு மத ரீதியாக விளக்கம் அளிப்பது பற்றி கேட்டார்.

டெஹ்ரா பே தன் கருத்தை வெளிப்படையாகச் சொன்னார். “இது போன்ற சாகசங்கள் உடலியல் அறிவியல் விதிகளுக்கு உட்பட்டு செய்பவை. இதில் ஆழ்மன சக்தியும் சேரும் போது அற்புதங்களாக தோன்றுகின்றன. இதில் மதத்தையோ, மூட நம்பிக்கைகளையோ சேர்த்து விளக்கம் அளிப்பது உண்மை சார்ந்ததாக இருக்காது. அவர்கள் செய்கின்ற அற்புதங்கள் உண்மையானவை என்றாலும் விளக்கங்கள் மூட நம்பிக்கையை வளர்க்கும் விதங்களில் இருந்து விடுகிறதை நான் அதிகம் பார்க்கிறேன். அவர்களில் சிலர் தாங்களே இதை நம்புகிறார்கள். பலர் மற்றவர்கள் முன்னால் அசாதாரண மனிதர்களாகவும், கடவுளருள் பெற்றவர்களாகவும் காட்டிக் கொள்ள அப்படி செய்கிறார்கள். உள்ளதை உள்ளபடியே பார்க்க வேண்டுமே ஒழிய இதில் கற்பனைகளை சேர்ப்பதையும், மூட நம்பிக்கையை வளர்ப்பதையும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை

டெஹ்ரா பே ஆன்மாவையும் ஆழ்மனசக்தியையும் நம்பிய அளவிற்கு மதக்கோட்பாடுகளை பெரிதாக நம்பவில்லை. அதில் ஈடுபட்டு உண்மையான தெய்வீக உணர்வுகளை அனுபவித்தவர்கள் ஒருசிலர் இருக்கக்கூடும் என்று ஒத்துக் கொண்ட அவர் தன் ஆராய்ச்சிகளும், பயிற்சிகளும் மதக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டதாகவே இருந்ததாகச் சொன்னார்.

இப்படியாக டெஹ்ரா பேயிடம் பேசிய போது பால் ப்ரண்டன் கேட்டறிந்தது எல்லாமே அறிவியல் ரீதியாகவும் அறிவுபூர்வமாகவும் இருந்தது. எந்த இடத்திலும் டெஹ்ரா பே தன்னை தெய்வீக மனிதராகச் சொல்லிக் கொள்ளவில்லை என்பதோடு எதிலும் கற்பனை கலக்காமல் தெரிந்ததை விளக்கமாகச் சொல்லியும் தெரியாததை தெரியாது என்று ஒப்புக் கொண்டும் பால் ப்ரண்டன் மதிப்பில் உயர்ந்து போனார்.

அடுத்ததாக பால் ப்ரண்டன் எகிப்தில் கண்ட சுவாரசியமான நிகழ்வுகளைப் பார்ப்போமா?

-என்.கணேசன்

4 comments:

  1. அருமையான பதிவு.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  2. Nalla seithi nandri genesen sir...........

    ReplyDelete
  3. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
    எனது ப்ளாக்கில்:
    பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
    புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
    A2ZTV ASIA விடம் இருந்து.

    ReplyDelete
  4. Wish you very happy and prosperous
    New year 2011 sir.

    Sakthi
    Tiruppur

    ReplyDelete