சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, August 20, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-43




தியானம்-சில நடைமுறை சிக்கல்களும் காரணங்களும்

பல வகை தியானங்களை விரிவாகப் பார்த்தோம். தியானத்தைப் பற்றி படித்தோ, ஒரு குருவிடம் பயிற்சி பெற்றோ பயிற்சி முறையைத் தெரிந்து கொள்ள முடியுமே தவிர தியான அனுபவத்தை உணர அது என்றும் போதுமானதாகாது. பயிற்சி முறைகளை அறிந்து கொள்வது வழிகாட்டிப் பலகையையோ, வரைபடத்தையோ பார்ப்பது போல. அது வழிகாட்டுமே தவிர வழிநெடுகக் கூடத் துணைக்கு வராது. அந்த இலக்கிற்குச் செல்ல வேண்டுமானால் அது காட்டிய பாதையில் பயணிக்க வேண்டும். அதற்கான விருப்பத்தையும், மன உறுதியையும் மற்றவர் தர முடியாது. இதை மனதில் இருத்திக் கொள்வது மிக முக்கியம்.

எல்லா வகை தியானங்களும் எல்லோருக்கும் ஏற்றதல்ல. அவரவர் தன்மைக்கு ஏற்ப சில வகை தியானங்கள் சிலருக்கு மிக எளிதாகவும், சில வகை தியானங்கள் மிக கஷ்டமானதாகவும் இருக்கலாம். அவை தியானம் செய்யும் ஆரம்ப நாட்களிலேயே தெரிந்து விடும். உங்களுக்கேற்ற ஒரு தியானத்தை ஏற்றுக் கொண்டு தொடர்ச்சியாக அதைச் செய்வது மிக முக்கியம். முதலில் ஒரு தியானம் நம் மனதில் வேரூன்ற ஆரம்பிக்க குறைந்த பட்சம் 21 நாட்கள் அவசியம் அனுபவஸ்தர்கள் சொல்கிறார்கள். எனவே 21 நாட்களாவது தேர்ந்தெடுத்த தியானத்தை ஒரு நாள் கூட தவறாமல் செய்வது முக்கியம். அதன் பின் ஒரிரு நாள் விட்டுப் போனாலும் பரவாயில்லை. (அந்த ஓரிரு நாட்கள் பல நாட்களாக மட்டும் அனுமதிக்காதீர்கள்).

உற்சாகமாக தியானம் செய்ய ஆரம்பித்து அதைத் தொடர்ந்து செய்ய முடியாமல் கைவிட்டு விடும் மனிதர்கள் ஏராளம். கைவிரலிடுக்கில் விழும் மணல் குறைய ஆரம்பித்து பின் தீர்ந்து விடுவது போல் ஆரம்ப உற்சாகம் சொற்ப காலத்தில் காணாமல் போகிறது. பலரும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தியானத்தைக் கைவிட்டு விடுகிறார்கள். சில சமயங்களில் கைவிடா விட்டாலும் தியானம் எந்திரத்தனமான ஒரு வேலை போல ஆகிறது. அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

முதலாவதாக, ஒரு மகத்தான அனுபவத்திற்கு தயாராகி நாம் தியானம் செய்ய ஆரம்பிக்கிறோம். பலரும் அதைப் பற்றிப் படித்தும் கேட்டும் நிறைய எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பிக்கிற தியான அனுபவம் நாம் எதிர்பார்க்கிற விதத்திலும், எதிர்பார்க்கிற வேகத்திலும் நமக்குக் கிடைப்பதில்லை. அதனால் அலுப்பு தட்ட ஆரம்பிக்கிறது. சிலர் வேறு குருவைத் தேடிப் போவதுண்டு. வேறு சில பயிற்சி முகாம்களை நாடிப் போவதுண்டு. அங்கும் ஆரம்பத்தில் ஒரு உற்சாகம், ஒரு எதிர்பார்ப்பு பின் ஏமாற்றம், அலுப்பு என்று சரித்திரம் தொடர்கிறது. யதார்த்தத்திற்கு ஒத்து வராத நம் எதிர்பார்ப்புகளே தியானம் தொடர முடியாமைக்கு முதல் காரணம் என்று சொல்லலாம்.

இரண்டாவது, தியானத்திற்குப் பொருத்தமான சூழ்நிலைகள் பயிற்சி இடங்களில் கிடைக்கின்றன. அங்கு தியானத்தின் மூலம் நல்ல அமைதி கிடைப்பது போல பயில்பவர்கள் உணர்கிறார்கள். ஆனால் தேனிலவு முடிந்து இயல்பு வாழ்க்கையைத் தொடங்கும் போது சில கசப்புகளையும், சிக்கல்களையும் உணர ஆரம்பிக்கிற தம்பதியர் போல தினசரி வாழ்விற்குத் திரும்பும் போது தியானப் பயிற்சியாளர்களும் தியானத்திற்கு அனுகூலம் இல்லாத சூழ்நிலையை உணர ஆரம்பிக்கிறார்கள். எனவே தான் சிலர் ”நான் அங்கு சென்று பத்து நாட்கள் தியானம் பயின்ற போது புதிய மனிதனாக உணர்ந்தேன், புத்துணர்ச்சியுடன் திரும்பினேன், ஆனால் நாளாக நாளாக பழையபடியே ஆகி விட்டேன்” என்று சொல்லும் நிலை ஏற்படுகிறது.

மூன்றாவது, சடங்குகளிற்கு அளவுக்கதிக முக்கியத்துவம் தந்து சத்தான விஷயங்களை புறக்கணிப்பது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் தியானம் காலக் கணக்கிலேயே முழுவதும் அளவிடப்படுவதும், மதிப்பிடப்படுவதும். நான் தினமும் அரை மணி நேரம் தியானம் செய்கிறேன் என்று சொல்லி பெயருக்கு ஆண்டாண்டு காலம் தினமும் அரைமணி நேரம் தியானத்திற்காக அமர்ந்தாலும் பயன் இருக்காது. தொடர்ந்து தியானத்தில் ஈடுபடுவது என்பது வேறு, தொடர்ந்து தியானம் என்ற பெயரில் எந்திரத்தனமாய் அமர்ந்திருப்பது என்பது வேறு. தியானம் வெறும் சடங்காகும் போது அர்த்தமில்லாததாகப் போகிறது.

ஆரம்ப காலங்களில் அரைமணி நேரம் தியானப் பயிற்சி செய்வோமானால், அதில் ஒருசில வினாடிகள் மனம் தியானத்தில் லயிக்குமானால் அதுவே பெரிய வெற்றி. உண்மையில் தியானம் வெற்றிகரமாக கைகூடினால் மனதில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒருவித அமைதி கண்டிப்பாக உணரப்படும். அது தொடருமேயானால் உங்கள் முகத்தை மாற்றும். உங்கள் பேச்சை மாற்றும். நீங்கள் வாழ்க்கையைப் பார்க்கும் விதத்தை மாற்றும். நீங்கள் செயலாற்றும் முறையை மாற்றும். நீங்கள் அறிகிறீர்களோ இல்லையோ உங்களிடம் பழகுபவர்கள் அதை உங்களிடம் உணர ஆரம்பிப்பார்கள்.

தியானத்தில் நீங்கள் வேரூன்றிய பின் தியானத்தின் போது நீங்கள் அனுபவித்த அமைதி உங்கள் தினசரி வாழ்க்கையிலும் தொடரும். காலப்போக்கில் நீங்கள் எங்கும், எப்போதும் உங்கள் விருப்பப்படி தியான நிலைக்குள் புக முடியும் என்ற நிலை ஏற்படும். ஓஷோ சொல்வது போல சந்தையில் கூட நீங்கள் தியானத்தில் மூழ்க முடியும்.

ஆனால் இதெல்லாம் நிகழ்வது ஒரு நேர்கோடு போன்ற சீரான, தொடர்ச்சியான முன்னேற்றத்தில் அல்ல என்பதை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். சில நாட்கள் நல்ல முன்னேற்றம் இருந்து திடீரென்று ஓரிரு நாட்கள் ஆரம்பத்தில் இருந்ததை விட மோசமான சறுக்கலை ஒருவர் சந்திக்க நேரிடலாம். மன அமைதி காணாமல் போய் தியானத்திற்கு எதிமாறான உணர்ச்சிக் கொந்தளிப்பை உணரலாம். தியான நிலைக்கே மனம் போகாமல் போகலாம். அதைக் கண்டு ஒருவர் பின்வாங்கி விடக்கூடாது. உள் மனதில் உறங்கிக் கிடந்த ஏதோ ஒரு குப்பையை மனம் மேல் தளத்திற்கு எறிந்திருக்கின்றது என்று அர்த்தம். அதைக்கவனியுங்கள். அதற்கான காரணம் உங்களுக்குள்ளே இருந்திருக்கின்றது என்பதை அங்கீகரியுங்கள். விருப்பு வெறுப்பில்லாமல் ஆராயுங்கள். பின் அது குப்பை என்பதை உணர்ந்து, தெளியுங்கள். இதை ஒழுங்காகச் செய்தீர்களானால் இனி அந்தக் குப்பை திரும்பி வந்து உங்களைத் தொந்திரவு செய்யாது. மறுபடி முன்னேற்றம் தொடரும். திடீரென்று இன்னொரு நாள் இன்னொரு குப்பை மேலே வரலாம். இதுவும் சறுக்கல் போல் தோன்றலாம். முதல் குப்பையைக் கையாண்டது போலவே இதையும் நீங்கள் கையாண்டு விலக்கி விடுங்கள். உள்ளே ஆழத்தில் உள்ள குப்பைகள் முழுவதுமாக நீக்கப்படும் வரை இந்த அனுபவங்கள் நிச்சயமாய் தொடரும்.

ஆனால் தியானத்திற்கான பயணத்தில் இது போன்ற அனுபவங்கள் சகஜம் என்பதைப் புரிந்து கொண்டு தியானத்தைத் தொடருங்கள். விடாமுயற்சியோடு தொடர்ந்தால் பின் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்கள் அளவிட முடியாதவை.

இனி அடுத்த கட்டத்திற்குச் செல்வோம்....

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி:விகடன்

2 comments:

  1. ஆனால் தியானத்திற்கான பயணத்தில் இது போன்ற அனுபவங்கள் சகஜம் என்பதைப் புரிந்து கொண்டு தியானத்தைத் தொடருங்கள். விடாமுயற்சியோடு தொடர்ந்தால் பின் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்கள் அளவிட முடியாதவை. //

    94m வருடத்த்லிருந்து தியானம் செய்து வருகிறேன் சில சமயம் இடையூருகஃளால் தொடரமுடியாவிட்டாலும் இதை மனதில் நினைத்துக் கொண்டு இருந்தாலே ஆனந்தம் தான். பலனகள் அளவிட முடியாதவை தான் .

    போதுமென்ற நிறைவு ஏற்படுகிறது அதுவே ஆனந்தம் தானே.

    ReplyDelete
  2. முற்றிலும் உண்மையான பதிவு. அதை உணரும்போது இருக்கும் சந்தோசம் வேறு ஜென்மத்தில் கிடைக்குமா என்பது சந்தேகமே?
    நன்றி .

    ReplyDelete