சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, September 7, 2009

விட்டதைப் பிடிக்கும் வியாதி

மகாபாரதத்தில் தர்மபுத்திரனைப் போல் தர்மம் அறிந்தவர் யாருமில்லை. எமதர்மனால் முன்பு நச்சுப்பொய்கையிலும் பின்பு சொர்க்கத்திலும் பரீட்சிக்கப்பட்டு தேர்வு பெற்றவன் அவன். தன் தேகத்துடன் சொர்க்கம் போக முடிந்தவன் அவன் ஒருவனே. அப்படிப்பட்டவன் சூதாட்டத்தில் கலந்து போன போது கடைநிலை மனிதன் கூடச் செய்யத் தயங்கும் காரியத்தைச் செய்தான். தன் சகோதரர்களையும், மனைவியையும் பணயம் வைத்து ஆடினான். சூதாட்டம் ஆனானப்பட்ட தர்மபுத்திரனையே அப்படிச் செய்ய வைத்தது என்றால் மற்றவர்கள் விஷயத்தில் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை கேட்க வேண்டுமா?

சூதாட்டத்தில் பங்கேற்கும் பலரும் விட்டதைப் பிடிக்கும் வியாதியால் பீடிக்கப்படுகிறார்கள். அடுத்த முறை வென்று விடுவோம், விட்டதை எல்லாம் பிடித்து விடுவோம் என்று சூதாட்டத்தைத் தொடர்கிறார்கள். கடைசியில் எல்லாவற்றையும் இழந்து ஓட்டாண்டியாகி விடுகிறார்கள். அது வரை அவர்களை சூதாட்டம் விடுவதில்லை.

தர்மபுத்திரன் விஷயத்திலேயே சூதாட்ட நாள் நடந்த கடைசி நிகழ்ச்சி பல பேர் கவனத்தை எட்டவில்லை. பாஞ்சாலியின் மானத்தைப் பகவான் காப்பாற்றிய பிறகு நரிகள் ஊளையிட, நாலா பக்கங்களில் இருந்தும் கழுதைகளும், பிணந்தின்னிக் கழுகுகளும் விகாரமாய் கத்த குலநாசம் வரப் போகிறதென்று பயந்து திருதராஷ்டிரன் தர்மபுத்திரன் இழந்ததை எல்லாம் அவனுக்குத் திருப்பித் தந்தான். பாண்டவர்களை இந்திரப்பிரஸ்தத்திற்குத் திரும்பிப் போகச் சொன்னான். ஆனால் அப்படிக் காப்பாற்றப்பட்டும் கூட தர்மபுத்திரனுக்குப் புத்தி வரவில்லை. சபையோர் தடுத்தும் கூட கேட்காமல் மீண்டும் ஒருமுறை சகுனியுடன் ஆடி 12 வருடம் வனவாசம், ஒரு வருடம் அஞ்ஞாத வாசம் என்ற நிபந்தனையுடன் ஆடித் தோற்றான். வியாசர் அவன் கடைசியாக ஆடியதை "கலிபுருஷனால் பீடிக்கப்பட்டவனாய் மறுபடி ஆட உட்கார்ந்தான்" என்கிறார். கடைசியில் கூட விட்டதைப் பிடிக்கும் வியாதி அவனையும் விட்டு வைக்கவில்லை.

இன்றைய காலத்தில் சூதாட்டம் பல ரூபங்களில் நடக்கின்றது. கஷ்டப்படாமல் சம்பாதிக்கும் ஆசை பலரையும் படாத பாடு படுத்துகிறது. உழைத்து சம்பாதித்து நாலு காசு சேர்க்க ஆகும் கால அளவு வரை பொறுத்திருக்க பலருக்கும் பொறுமை இல்லை. சூதில் இப்படி ஒரு பேராசையுடன் தான் அனைவரும் நுழைகிறார்கள். பின் சூது அவர்களை விடுவதில்லை. கடைசி வரை தன் தூண்டிலைப் போட்டு அது சபலப் படுத்துகிறது. இனியொரு முறை ஆடு, விட்டதைப் பிடித்து விடலாம் என்று ஆசை காட்டுகிறது.

ஒரு நம்பர் லாட்டரி நம் நாட்டில் எத்தனை குடும்பங்களை நிர்க்கதியாக்கியது என்பது நமக்குத் தெரியும். எத்தனையோ தினக்கூலிக்காரர்கள் தினமும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு போய் லாட்டரிக் கடை முன் நிற்பதை சில வருடங்களுக்கு முன் பலரும் பார்த்திருக்கலாம். அன்றைய அனுபவம் அவர்களுக்கு அடுத்த நாளுக்கு உதவியதில்லை. விட்டதைப் பிடிக்கும் வியாதி தினம் தினம் அவர்களை லாட்டரியின் பக்கம் திருப்பியிருக்கிறது.

எனக்கு மிக நன்றாகத் தெரிந்த ஒருவர் அரசாங்க உத்தியோகத்தில் மிக சௌகரியமாக இருந்தார். அவருக்கு ஷேர் பிசினஸில் ஆரம்பத்தில் சிறிது லாபம் வர பின் அவர் தன்னுடைய சேமிப்பு எல்லாவற்றையும் அதில் போட்டார். சமீபத்திய நிலவரத்தில் அவர் எல்லா பணத்தையும் இழக்க நேரிட்டது. பல வெளிநாட்டு வங்கிகளில் க்ரெடிட் கார்டுகள், கடன்கள் எல்லாம் வாங்கி அதையும் ஷேரில் போட்டார். நண்பர்களிடமும் கடன் வாங்கிப் போட்டார். எல்லாம் இழந்து விட்டார். இழந்த அத்தனையையும் திரும்பப் பெறும் நம்பிக்கையில் கடைசியில் அரசாங்க வேலையையும் விட்டு அதில் கிடைத்த பிராவிடண்ட் ·பண்ட் முதலான தொகைகளைப் பெற்று அதையும் ஷேரில் போட்டு அத்தனையும் இழந்து இன்று மனைவி, இரண்டு குழந்தைகளுடன் கிட்டத்தட்ட நடுத்தெருவில் நிற்கிறார். விட்டதைப் பிடிக்கும் வியாதி அவரை எந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டது பாருங்கள்.

அந்த வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் அறிவைப் பயன்படுத்துவதில்லை. அடுத்தவர் அறிவுரையைப் பொருட்படுத்துவதில்லை. அதைத் தவிர வேறு எதையும் நினைத்துப் பார்க்க
மனம் வைப்பதில்லை.

உண்மையான புத்திசாலித்தனம் இந்த சூதாட்டத்தில் ஈடுபடாமலேயே இருப்பது தான். ஈடுபட்டபின் அதற்கு அடுத்தபடியான புத்திசாலித்தனம் விரைவிலேயே அதிலிருந்து மீள்வது தான். இழந்தவை நமக்குப் படிப்பினைகளாக இருக்கட்டும் என்று உணர்வது தான். அதை விட்டு அதை மீட்க மீதி இருப்பதையும் பணயம் வைக்கத் துணியாமல் இருப்பது தான். அப்படி மீட்டு விடுவேன் என்று பிடிவாதத்துடன் மீண்டும் அதில் புகுவது புதைகுழியில் கால் வைப்பது போல் ஆபத்தானது. எனவே இந்த வியாதிக்கு ஆளாகாமல் இருப்போமாக!.

- என்.கணேசன்

3 comments:

  1. //உண்மையான புத்திசாலித்தனம் இந்த சூதாட்டத்தில் ஈடுபடாமலேயே இருப்பது தான்//

    சரியாக சொன்னீர்கள்.

    ரேகா ராகவன்

    ReplyDelete
  2. நல்ல அறிவுரை. நல்ல உதாரணம்.

    ReplyDelete
  3. நல்ல பயனுள்ள தகவல். நன்றி.

    ReplyDelete