சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 24, 2009

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-3

"என் மகளை நீங்கள் தான் குணப்படுத்திக் காப்பாற்ற வேண்டும்" என்று உள்ளூர் செல்வந்தர் ஒருவர் எட்கார் கேஸ் என்பவரிடம் போய் வேண்டிக் கொண்டார்.

அவரது ஐந்து வயது மகள் தன் இரண்டு வயதில் ·ப்ளூவால் தாக்கப்பட்ட பிறகு படுத்த படுக்கையாகவே இருந்தாள். தினமும் வலிப்புகள் பல முறை வந்து தாக்க மகள் துடித்த துடிப்பை அவராலும், அவர் மனைவியாலும் சகிக்க முடியவில்லை. மூளை, மன வளர்ச்சிகளும் அந்த சிறுமிக்கு பாதிக்கப் பட்டிருந்தன. செல்வந்தரான அவர் பல மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளித்துப் பார்த்தும் எந்தச் சிகிச்சையும் பலனளிக்கவில்லை. அப்போது தான் அவர் உறங்கும் ஞானி என்று பலராலும் அழைக்கப்பட்ட எட்கார் கேஸைப் பற்றிக் கேள்விப்பட்டார்.


எட்கார் கேஸ் ஆறாம் வகுப்பு வரை தான் படித்தவர். மருத்துவத்தைப் பற்றி எதுவும் அறியாதவர். சிறு வயதில் நோய்வாய்ப் பட்டு கோமா நிலைக்குப் போன அவர் தனக்கு எந்த மருந்து எப்படித் தர வேண்டும் என்று கோமா நிலையிலேயே சொல்ல அதிர்ந்து போன மருத்துவர்கள் அப்படியே தந்து பார்க்க அவர் உடனடியாக குணமான பிறகு அவரிடம் தங்கி விட்டது அந்த அபூர்வ சக்தி. எட்கார் கேஸ் ஒருவித அரைமயக்க நிலைக்குச் சென்று பலருடைய நோய்களுக்குத் தக்க மருந்துகள் சொல்ல அது பலர் நோயைத் தீர்க்க உதவியது. இதைக் கேள்விப்பட்ட போது அந்த சிறுமியின் தந்தை கேஸின் உதவியை நாடுவதில் நஷ்டமெதுவும் இல்லை என்று தோன்றியிருக்க வேண்டும்.

எட்கார் கேஸ் அரைமயக்க நிலைக்குச் சென்று அந்தச் சிறுமி ·ப்ளூவால் தாக்கப்படுவதற்குச் சில தினங்கள் முன்பு கீழே விழுந்ததில் தண்டுவடத்தின் அடிப்பாகத்தில் அடிபட்டு பாதிக்கப்பட்டிருக்கின்றது, அந்தப் பகுதியின் வழியாகத் தான் ·ப்ளூவின் கிருமிகள் சென்று தாக்கியிருக்கின்றன, அந்தப்பகுதியைச் சரி செய்தால் ஒழிய இந்த நோயைக் குணப்படுத்த முடியாது என்று தெளிவான குரலில் கூறினார். எந்த மாதிரியான சிகிச்சை செய்து அப்பகுதியைச் சரி செய்ய வேண்டும் என்றும் சொன்னார்.

கேட்டுக் கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர்கள் திகைத்துப் போனார்கள். ஏனென்றால் குழந்தை ·ப்ளூ காய்ச்சலால் தாக்கப்படுவதற்கு முன் கீழே விழுந்தது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. 1902ல் இந்தக் காலத்தைப் போல் ஒரு வியாதிக்கு முழு உடலையும் பரிசோதனை செய்யும் முறையோ, இன்றைய நவீன பரிசோதனை எந்திரங்களோ இருக்கவில்லை. பெற்றோர்கள் அந்தச் செய்தியை எடுத்துக் கொண்டு மருத்துவர்களிடம் விரைந்தார்கள். மருத்துவர்கள் எட்கார் கேஸ் சொன்னதைப் போல அந்தப் பகுதி பாதிக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அவர் கூறிய படியே சிகிச்சையும் செய்தனர். சிறுமி குணமாகி பிறகு விரைவில் தன் வயதையொத்த மற்ற குழந்தைகளைப் போலவே மாறி விட்டாள். அவளுடைய பெற்றோர் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எல்லா மருத்துவர்களும் முயன்று தோற்ற இந்த சிறுமி விஷயத்தில் எட்கார் கேஸ் சொன்ன சிகிச்சை குணப்படுத்தியது என்ற செய்தி காட்டுத் தீயாகப் பரவியது. அது வரை உள்ளூரில் மட்டும் ஓரளவு பிரபலமாயிருந்த எட்கார் கேஸ் புகழ் மற்ற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்தது.

வெஸ்லி எச்.கெட்சும் என்ற இளம் டாக்டர் எம்.டி பட்டம் பெற்றவர். திறமைசாலி. அவரிடம் ஒரு நாள் ஒரு இளைஞனை சிகிச்சைக்கு அழைத்து வந்தார்கள். கால்பந்து விளையாட்டின் போது மயங்கி விழுந்த அந்த இளைஞன் சுய நினைவுக்கு வந்த போது அவனால் பேசவோ, செயல்படவோ முடியவில்லை. கேட்கும் கேள்விகளுக்கு ஒருசில நேரங்களில் ஆம் அல்லது இல்லை என்று மட்டும் தெளிவில்லாதபடி சொல்ல முடிந்த அவன் மற்ற நேரங்களில் வெறித்துப் பார்த்தபடி ஒரு ஜடமாக அமர்ந்திருந்தான். அவனுடைய பிரச்னை மூளையில் என்பதை உணர்ந்த டக்டர் கெட்சும் பல சோதனைகள் செய்து பார்த்தும் அவரால் தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. நியூயார்க்கின் பிரபல மூளை சிகிச்சை நிபுணரிடம் அனுப்பினார். அவர் அனைத்து சோதனைகளும் செய்து பார்த்து விட்டு மூளையில் ஏற்பட்ட அந்த கோளாறு நிவர்த்தி செய்ய முடியாதது என்று சொல்லி விட்டார். அந்த இளைஞனின் பெற்றோர் எப்படியாவது குணப்படுத்துங்கள் என்று டாக்டர் கெட்சுமிடம் கெஞ்சினார்கள். அப்போது அவருக்கு எட்கார் கேஸ் பற்றி கேள்விப்பட்டது நினைவுக்கு வந்தது.

அவருக்கு கேஸ் மீது பெரிதாக நம்பிக்கை இருக்கவில்லை என்றாலும் பரிசோதித்து விடுவது என்று எண்ணி அவர் யாருக்கும் தெரிவிக்காமல் கேஸ் இருந்த ஊருக்குப் பயணம் செய்தார். அங்கு சென்று எட்கார் கேஸிடம் அந்த இளைஞன் பெயர், வயது, அவன் இருக்கும் ஆஸ்பத்திரி விலாசம் மட்டும் தந்து இந்த இளைஞனுக்கு என்ன நோய் என்று சொல்ல முடியுமா என்று கேட்டார். அரை மயக்கநிலைக்குச் சென்ற எட்கார் கேஸ் "அந்த இளைஞன் மூளை தீயில் உள்ளது போல் சிவந்து தகிக்கிறது. நீங்கள் உடனடியாக மருத்துவம் செய்யா விட்டால் அவனுக்குப் பைத்தியம் பிடிப்பது உறுதி" என்று சொன்னார்.

அவர் சொன்னது சரியாயிருந்ததால் "என்ன மருத்துவம் செய்ய வேண்டும்?" என்று டாக்டர் கெட்சும் கேட்க, கேஸ் அவ்வளவாக பிரபலமாகாத ஒரு மருந்தைச் சொல்லி அதை தினமும் மூன்று வேலையும் அவனுக்குத் தர வேண்டும் என்றார்.

கேஸிற்கு மயக்க நிலையிலிருந்து மீளும் போது தான் என்ன சொன்னோம் என்பது நினைவிருப்பதில்லை. கடினமான மருத்துவச் சொற்றொடர்களையும் சரளமாக உபயோகித்த அவர் ஆறாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறார், சுயநினைவில் இருக்கும் போது மருத்துவத்தைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது என்பதைக் கேள்விப்பட்ட டாக்டர் கெட்சும் சொன்னார். "கேஸ். நீங்கள் மிகப்பெரிய பொய்யரா, இல்லை அற்புத மனிதரா என்று எனக்குத் தெரியவில்லை."

ஆனால் அவர் சொன்ன மருந்தை கெட்சும் அந்த இளைஞனுக்குத் தர ஆரம்பித்தார். முதல் மாதம் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை என்றாலும் இரண்டாம் மாதத்தில் அந்த இளைஞன் குணமாக ஆரம்பித்து பின் பூரண நலமடைந்தான். அதன் பின் கெட்சும் மிகவும் கடினமான சிகிச்சைகளுக்கு கேஸிடம் ஆலோசனைக்கு வர ஆரம்பித்தார். பல நூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் நோயாளிகளின் நிலைமையையும், செய்ய வேண்டிய சிகிச்சையையும் மிகச்சரியாக கேஸ் சொன்னார். ஒரு முறை அப்படி சொல்லிக் கொண்டிருக்கையில் நிறுத்தி கேஸ் சொன்னார். "அந்த மனிதர் இறந்து விட்டார்". உண்மையில் அவர் சொன்னது போலவே அதே நேரத்தில் தான் அந்த நோயாளி இறந்து விட்டார் என்பதை பின்னர் டாக்டர் தெரிந்து கொண்டார். நாளடைவில் கெட்சுமைப் போலவே வேறு பல மருத்துவர்களும் கேஸிடம் வர ஆரம்பித்தனர்.

பல சமயங்களில் கேஸ் சொன்ன மருத்துவம் அக்கால மருத்துவத்திற்கு சிறிதும் ஒத்துப் போகாததாக இருந்தது. ஆனாலும் அவர் சொன்னபடி மருந்தை உட்கொண்டவர்கள் அனைவரும் குணமானார்கள். சில சமயங்களில் கேஸ் சிகிச்சைக்கு சில மருந்துகளின் கலவையைச் சொல்வார். ஒரு மருந்தின் தயாரிப்பே அப்போது நின்று போயிருந்தது. அதன் தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொண்டு அந்த மருந்தின் உட்பொருள்களையும், கலந்த விகிதத்தையும் கேட்டு தயாரிக்க வேண்டியிருந்தது. இன்னொரு மருந்து அடுத்த மாதம் தான் வெளி வருவதாக இருந்தது. எங்கு தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கேஸ் சொல்ல கேள்விப்பட்ட அந்தத் தயாரிப்பாளர்களே திகைத்துப் போனார்கள். 'மார்க்கெட்டுக்கே வராத மருந்தைப் பற்றி அவருக்கு எப்படித் தெரியும்?'

இன்னொரு சமயம் கேஸ் சொன்ன மருந்து அவர் சொன்ன கடையிலேயே இல்லையென்று சொல்லி விட்டார்கள் என்று சம்பந்தப்பட்டவர் வந்து சொன்ன போது கேஸ் அரை மயக்க நிலைக்குச் சென்று அந்தக் கடையில் உள்ள மேல் அலமாரியில் அந்த மருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதைக் கூடத் தெரிவித்தார். பின்பு அந்த கடைக்காரர் அசடு வழிந்து கொண்டே அந்த மருந்தை அவர் சொன்ன இடத்திலிருந்து தேடி எடுத்துத் தந்திருக்கிறார்.

எட்கார் கேஸ் புகழ் நாடு முழுவதும் பரவியது. 9-10-1910 அன்று புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை அவரைப் பற்றி வியப்புடன் எழுதியது. "சுய நினைவில் இருக்கையில் மருத்துவத்தைப் பற்றி எள்ளளவும் அறியாத எட்கார் கேஸ் அரை மயக்கநிலையில் மருத்துவர்களுக்கே விளங்காத பல நோய்களுக்கு மருத்துவம் சொல்வதை மருத்துவ உலகம் ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்திருக்கிறது". அவர் ஆரம்பத்தில் குணப்படுத்திய ஐந்து வயதுச் சிறுமி தற்போது மிக நலமாக இருப்பதையும், அவருடைய வேறு சில சிகிச்சைகளையும் பற்றி அக்கட்டுரையில் எழுதியிருந்தது.

1945ல் இறந்து போன கேஸ் ஒவ்வொரு சிகிச்சைக்காகவும் சொன்ன சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துக்களின் முறையை இன்றும் விர்ஜீனியா பீச்சில் உள்ள ஒரு அசோசியேஷன் (Association for Research and Enlightenment in Virginia Beach, VA 23451, USA) பாதுகாத்து வருகிறது. சுமார் 14000க்கும் மேற்பட்ட அந்த ஆவணங்களை இன்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இரத்தம் மனிதனின் ஒட்டு மொத்த உடல்நலத்தைப் பிரதிபலிக்கிறது என்று எட்கார் கேஸ் சொன்னார். "மனிதர்களின் ஒரு துளி இரத்தத்தை வைத்து எத்தனையோ விஷயங்களை பரிசோதனையின் மூலம் அறியலாம்" என்றும் சொன்னார். அவர் இறந்து சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு தான் இரத்தப் பரிசோதனை முறை அறியப்பட்டு நடைமுறைக்கு வந்தது. மேலும் அவர் சொன்ன சில வித்தியாசமான மருந்துக்களையும், சிகிச்சை முறைகளையும் அவர் மரணத்திற்குப் பின்னும் பலர் பயன்படுத்தி குணமடைந்த விவரங்கள் அந்த அசோசியேஷனில் பதிவாகி உள்ளன.

எட்கார் கேஸ் மருத்துவம் சம்பந்தமாக மட்டுமல்லாமல் வரவிருக்கும் உலக நிகழ்வுகளையும் பற்றி பல சொல்லியிருக்கிறார். அவற்றில் பல பலித்தன. சில பலிக்கவில்லை. ஆனால் மருத்துவத்தில் மட்டும் அவர் சொன்னது பலிக்காமல் போனதேயில்லை. அந்த அபூர்வ சக்தி அவர் காலத்தில் மட்டுமல்ல அவர் காலம் கழிந்த பின்னும் பயன்படுகிறது என்பது ஆச்சரியமே அல்லவா?

மருத்துவத்தில் அவரே அறியாத பல பிரம்மாண்டமான உண்மைகளை அவரால் எப்படிச் சொல்ல முடிகிறது என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் சுவாரசியமானது.....

- என்.கணேசன்

(தொடரும்)

நன்றி: விகடன்

6 comments:

  1. very interesting. Pl continue...

    ReplyDelete
  2. nantraha ullathu thodrungal

    ReplyDelete
  3. wat a intresting article..thanks...i am new viewr to ur blog.....all the best

    ReplyDelete
  4. வாவ்.....ஆச்சர்ய்யமா இருக்கு

    ReplyDelete
  5. Our traditional medical science (Ayurvedic and Siddha) has documented long long ago categorically that the complete body health and diseases of human body are very tightly connected to our blood cells (raththam). How many of the above readers and many others have realized this truth?!!

    ReplyDelete