என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, March 11, 2021

இல்லுமினாட்டி 93



சொல்வது உண்மையாக இருந்தால் நான் கண்டிப்பாக வருத்தப்பட மாட்டேன்என்று சிந்து சொன்னதில் அவளுடைய சாமர்த்தியத்தை க்ரிஷால் பார்க்க முடிந்தது. சொன்ன பிறகுநீ சொல்வது உண்மையல்ல. அதனால் தான் வருத்தப்படுகிறேன்என்று சொல்ல வழியை ஏற்படுத்திக் கொண்டே அவள் பேசுகிறாள்...

க்ரிஷ் சொன்னான். “சரி நான் சொல்கிறேன். நான் பேசும் போது நீ குறுக்கே பேசக்கூடாது. முழுவதும் கேட்க வேண்டும். உனக்கு எதாவது சொல்ல இருந்தால் நான் பேசி முடித்த பிறகு நீ சொல்லலாம். நீ பேசும் போது நானும் குறுக்கிட மாட்டேன். சரியா?”

சிந்துவுக்கு அவனுடைய அந்த நிபந்தனை பிடிக்கவில்லை. உண்மையைப் பேசுபவனை முழுவதும் பேச அனுமதித்தால் அது ஆபத்து. அவன் முடித்த பின் பேச ஒன்றுமிருக்காது...  ஆனால் அவள் அந்த நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டால் ஒழிய அவன் எதுவும் சொல்ல மாட்டான் என்று அவனைப் பார்க்கையிலேயே புரிந்தது. இருந்தாலும்  அவன் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் படுகிற மன உளைச்சலை உடனடியாக முடித்துக் கொள்ள தீர்மானித்து விட்டு வந்திருப்பதால் அவள் சரியென்று தலையசைத்தாள்.

க்ரிஷ் எழுந்து ஒரு நாற்காலியை சிந்துவுக்கு முன்னால் இழுத்துப் போட்டு அதன் நுனியில் உட்கார்ந்தான். பின் மிக மென்மையான குரலில் அவன் சொல்ல ஆரம்பித்தான். “சிந்து உலகத்தில் அன்பானவர்கள், அன்பில்லாதவர்கள் என்று இரண்டு பிரிவிலும் நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக உன் வாழ்க்கையில் சிறிய வயதில் உனக்கு அன்பானவர்கள் கிடைக்கவில்லை. பிஞ்சு வயதில் அப்படிப்பட்ட அனுபவம் கஷ்டம் தான். ஆனால் பெற்றோரும், உறவுகளும் அமைவது நம் தீர்மானத்தில் இல்லை. அன்பு கிடைக்காத அந்தச் சூழ்நிலையில் உன்னைத் தவிர வேறு எந்தக் குழந்தையாவது வளர்ந்திருந்தால் உடைந்து போயிருக்கும், நீ திடமான மனதுடன் அருமையாகச் சமாளித்தாய். ஆனால்  அன்பை எதிர்பார்த்தால் மனம் ரணமாகும் என்ற தப்பான பாடத்தையும் நீ படித்துக் கொண்ட மாதிரி எனக்குத் தெரிகிறது. தனியாகவே இருப்பது மன வலியையும், ஏமாற்றங்களையும் தவிர்க்க நல்ல வழி என்று ஒரு தீவாகவே நீ வாழ்ந்து விட்டாய்...”

சிந்து எதை எதிர்பார்த்திருந்தாலும் இதைச் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அவளைப் பார்க்கும் போதே தெரிந்தது. க்ரிஷ் தொடர்ந்தான். “அன்பான குடும்பம் அமையாததால் அன்பே தேவையில்லை என்று நீ இருந்து விட்டது சரியல்ல. குடும்பத்தில் கிடைக்காதது வெளியேயும் கிடைக்காது என்று நினைத்ததும் சரியாகத் தெரியவில்லை. நீ முயற்சி செய்திருந்தால் உனக்கு  நல்ல நண்பர்கள், தோழிகள் கிடைத்திருப்பார்கள். ஒரு அன்பான, இயல்பான வாழ்க்கையை அவர்கள் மூலம் நீ வாழ்ந்திருக்கலாம். அதற்குப் பதில் நீ உன் தாயின் தவறுக்கும், தந்தையின் தவறுக்கும் உன்னையே தண்டித்துக் கொண்டிருக்கிறாய். அது தேவையாக இருந்திருக்கவில்லை.”

சிந்து சிலை போல அமர்ந்திருந்தாள். அவள் பேச நினைத்திருந்தாலும் அவளால் பேச முடிந்திருக்காத நிலையில் இருந்தாள். அவள் இதயத்தின் ரணத்தை அவன் இப்படி வெளிப்படையாகப் பேசி உரசுவான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. உதய்க்கு க்ரிஷ் சொல்வதெல்லாம் உண்மையாக இருந்தாலும் இப்போது தேவையில்லாமல் அவளுடைய சின்ன வயதுக் கஷ்டத்தைச் சொல்லிக் காட்டியிருக்க வேண்டாம் என்று தோன்றியது. இப்போது அவள் மாறி அவனைக் காதலிக்க ஆரம்பித்திருக்கிறாள், அவர்கள் குடும்பத்தை நேசிக்க ஆரம்பித்திருக்கிறாள். அப்படி இருக்கையில் என்றோ இருந்த நிலைமையைப் பற்றி ஏன் இவன் பேசுகிறான் என்று நினைத்தான். மேலும் க்ரிஷ் கடைசியாகச் சொன்ன வார்த்தையில் தவறுதலாகத்தாய்என்று சொல்லி விட்டதாக நினைத்தான். அவன் தம்பியிடம் சொன்னான். “க்ரிஷ் சிந்து சின்னவளாக இருக்கும் போதே  அம்மா இறந்துட்டாங்க. நீ அவளோட சித்தியைச் சொல்றாய்ன்னு நான் நினைக்கிறேன்

க்ரிஷ் அண்ணனிடம் ஒன்றும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்து விட்டுத் தொடர்ந்தான். ”உனக்கு யாரும் அவசியமில்லை, யாருடைய அன்பும் அவசியமில்லை, உனக்கு வேண்டிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் அளவு நீ சம்பாதிக்கிறாய். அதை வைத்துக் கொண்டு நிம்மதியாய் வாழ்வாய் என்று நம்பிக் கொண்டிருக்கிறாய். அது தவறு சிந்து

உதய் முதல் முறையாய் தம்பி மேல் குறை கண்டுபிடித்தான். க்ரிஷ் அறிவுஜீவி தான். அவள்  இங்கு வரும் வரை இருந்த நிலைமையை அவன் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் அதை இப்போது அலச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்தவனாய் சொன்னான். “அந்தப் பழைய கதை எல்லாம் இப்ப எதுக்குடா? சிந்து இப்ப என்னைக் காதலிக்க ஆரம்பிச்சிருக்கா. நம் குடும்பத்தை நேசிக்க ஆரம்பிச்சிருக்கா. அவள் மாறுவதற்கு இப்போது தான் அவளுக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. அவ மாறிட்டா.”

க்ரிஷ் பொறுமையாய் அண்ணனிடம் சொன்னான். “இப்பவும் கூட சில சமயங்கள்ல சிந்து அவள் போட்டுகிட்ட வட்டத்துக்குள்ளயே வாழற மாதிரி தோணுதுண்ணா. முழுசா வெளியே வர முடியலைன்னு பார்க்கறேன். இங்க இருக்கிறப்ப கூட அவள் மனசு அவள் குடும்பத்தை, அவர்கள் நடந்துகிட்டதை, அப்பப்ப ஒப்பிட்டுப் பார்த்துக்கற மாதிரி தோணுது. அவள் எதை எல்லாம் இழந்தாள்னு அவள் கணக்கெடுக்கற மாதிரி பட்டதால தான் சொன்னேன்...”

சிந்து தன் வாழ்க்கையின் மிக உச்சக்கட்ட வலியில் அந்தக் கணம் இருந்தாள். அவள் தன் மனக்காயங்களை இன்று வரை யாரிடமும் காட்டிக் கொண்டதில்லை. அவள் தந்தையிடமோ, சித்தியிடமோ, தங்கையிடமோ கூடக் காண்பித்துக் கொண்டதில்லை. அவர்களுடைய பாராமுகத்தினால், வெறுப்பினால் எந்தப் பாதிப்பும் அடையாதபடி அமைதியாகவும், அழுத்தமாகவுமே அவள் அவர்களுக்குக் காட்சியளித்திருந்தாள். முதல் முறையாக ஒருவன் அவள் அனுபவித்த வலிகளை உணர்ந்து சொல்கிறான். அந்த வீட்டில் அவள்  அவர்கள் குடும்பத்தோடு தன் குடும்பத்தை ஒப்பிட்டுப் பார்த்ததைக்கூட துல்லியமாக உணர்ந்து கொண்டு பேசுகிறான். அவளுக்கு அந்தக் கணமே செத்து விட்டால் கூட தேவலை என்று தோன்றியது. அடுத்தவர்கள் இரக்கத்தை விட அது மேலானது என்றே நினைத்தாள். அவள் கட்டுப்பாட்டையும் மீறி அவள் உணர்ந்த கடுமையான வலி அவள் முகத்தில் தெரிந்தது.   

க்ரிஷுக்கு அதைப் பார்க்கையில் தாங்க முடியவில்லை. அவன் எதிரியிடம்  கூட இந்த வலியை ஏற்படுத்துவதை அவனால் தாங்க முடியாது. அவளை அவன் இப்போது எதிரியின் ஆளாகப் பார்க்கவும் இல்லை. அநியாயமாகத் துன்புறுத்தப்பட்ட ஒரு பாவப்பட்ட பெண்ணாக மட்டுமே அவளைப் பார்க்க முடிந்தது. லேசாகக் கண்கள் ஈரமாக அவள் கையைத் தன் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு மானசீகமாகச் சொன்னான். “உன்னைக் காயப்படுத்தவோ, பழைய காயங்களைக் கிளறிப்பார்க்கவோ இதை எல்லாம் நான் சொல்லவில்லை சிந்து. நீ இது வரை அனுபவித்த வலி போதும். இனியும் நீ அதைச் சுமந்து கொண்டே இருக்கக்கூடாது. அதை உதறி விட்டு முழு மனதோடு புதிய வாழ்க்கை வாழ முடிவு செய்ய வேண்டும். அன்பே பிரதானம். வாழ்க்கையில் நேசிப்பவர்களுடன் இருப்பதே சொர்க்கம் சிந்து. அன்பின் இடத்தை பணமோ, சொத்துக்களோ, ஏன் சாதனைகளோ கூட ஈடுகட்டி விட முடியாது. உண்மையான நேசம் தரும் சந்தோஷத்தையும், நிறைவையும் அது எதுவுமே தந்துவிட முடியாது.... நீ புத்திசாலி.... தைரியமானவள். நீ முயற்சி செய்தால் உனக்கு எதுவும் முடியாததல்ல. நீ மாற வேண்டும். பழைய வாழ்க்கையிலிருந்து விலகி புதிய வாழ்க்கைக்கு முழுமையாய் வர வேண்டும் சிந்து...”

சிந்து மாபெரும் உணர்ச்சிப் போராட்டத்தில் இருந்தாள். அவளுடைய பழைய வாழ்க்கையைப் பற்றி அவன் அறிந்திருந்தது அதிர்ச்சியைத் தந்தது. அவளுடைய தாய் இறந்ததாய் தான் அவள் இது வரை எல்லோரிடமும் சொல்லி வந்திருக்கிறாள். ஆனால் அவள் தாய் ஓடிப்போனதை அவன் தெரிந்து வைத்திருக்கிறான் என்பதுஉன் தாயின் தவறுக்கும்என்று சொன்னது மூலம் தெரிகிறது. அவள் எப்படியெல்லாம் தன் சிறு வயதில் உணர்ந்தாள் என்பதையும், அன்பே தேவையில்லை என்று முடிவெடுத்தாள் என்பதையும் கூட அவன் தெரிந்து வைத்திருக்கிறான். அவர்கள் வீட்டில் இருந்த போது தன் வீட்டை அவள் நினைத்து ஒப்பிட்டுப் பார்த்ததைக் கூடத் தெரிந்து வைத்திருக்கிறான். க்ரிஷ் அவன் மனதில் இருப்பதைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து வந்த அவளிடம் அவள் மனதை இருப்பதை எல்லாம் சொல்லி முடித்திருக்கிறான்...

ஏதாவது பேசினால் தவறாகப் பேசி விடுவோமோ என்று சிந்து பயப்பட்டாள். உணர்ச்சிக் கொந்தளிப்புகளை அடக்கிக் கொண்டு, அவன் கைகளில் இருந்து அவளுடைய கையை விடுவித்துக் கொண்டு க்ரிஷிடம் சொன்னாள். “நன்றி.”

பின் எழுந்தவள் உதயிடம் சொன்னாள். “நான் கிளம்புகிறேன். நாளைக்குப் பேசுவோம்அவன் பதிலேதும் சொல்வதற்கு முன் வேகமாக அவள் வெளியேறி விட்டாள்.

(தொடரும்)
என்.கணேசன்


Monday, March 8, 2021

யாரோ ஒருவன்? 22


ரத் அதிகாலை நடைப்பயிற்சியை முடித்துத் திரும்பிக் கொண்டிருந்தான். கல்யாணின் வீட்டைக் கடக்கையில் அந்தப் பக்கத்து வீட்டை அவன் ஆர்வத்துடன் கவனித்தான். கல்யாண் அவனிடம் பக்கத்து வீட்டில் நாகசக்திகள் படைத்த நாகராஜ் என்ற ஆள் வந்திருக்கிறான், தினமும் இரவில் அவன் வீட்டில் பாம்புகள் சீறும் சத்தம் கேட்கிறது, அவன் ஒரு நாளைக்கு அரை மணி நேரம் சந்திக்க ஐந்து லட்சம் ரூபாய் வாங்குகிறான் என்ற தகவல்களைச் சொல்லியிருந்தான். அதனால் சரத்துக்கு ஒரு முறை நாகராஜைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் கிளம்பியிருந்தது. ஆனால் நாகராஜோ அவன் வேலையாளோ வீட்டுக்கு வெளியே தென்படவில்லை. கல்யாண் வீட்டு வாட்ச்மேன் அவனைப் பார்த்து சல்யூட் அடித்தான்.  அவனைப் பார்த்துப் புன்னகையுடன் தலையசைத்து விட்டு நடையைத்  தொடர்ந்த சரத் பதினைந்து நிமிடங்களில் தன் வீட்டை அடைந்தான்.

வீட்டின் வெளி கேட்டில் இருந்த தபால் பெட்டியில் ஒரு உறை பாதி வெளியே எட்டிப் பார்த்தது. காலையில் கிளம்பும் போது அந்த உறை இருக்கவில்லை என்பது நிச்சயம். ஏனென்றால் சரத் காலையில் வீட்டை விட்டுக் கிளம்பும் போது அந்தப் பெட்டியைப் பார்த்திருந்தான். ஏதாவது விளம்பரமாகத் தான் இருக்க வேண்டும்.... என்று எண்ணியபடி அலட்சியமாக உறையை எடுத்துப் பார்த்தான். உறையில் அவன் பெயர் எழுதப்பட்டிருந்தது. ஆச்சரியத்துடன் உறையைத் திறந்து பார்த்தான்உள்ளே எதோ ஒரு வெள்ளைக் காகிதம் இருந்தது. அதை எடுத்துப் பிரித்தான். அதில் எழுதப்பட்டிருந்த்து.      

அன்றைய அந்த மரணம் இயற்கை அல்ல. அந்த ஆத்மா உன்னைத் தேடி வந்திருக்கிறது.”

படித்தவுடன் சரத் அப்படியே நின்று விட்டான். அவன் கைகள் லேசாக நடுங்கின. இதயம் வேகமாகப் படபடத்ததுஉடலெல்லாம் வியர்த்தது.

போர்ட்டிகோவில் சிலை போல நிற்கும் கணவனை ஜன்னல் வழியாகக் கவனித்த ரஞ்சனி பயந்து போனாள். “என்ன ஆச்சு இவருக்குஎன்று முணுமுணுத்தபடி வேகமாய் வெளியே வந்தாள். அவளைப் பார்த்தவுடன் அவசர அவசரமாக அந்தக் காகிதத்தை மடித்து, கையில் இறுக்கிப் பிடித்துக் கொண்ட சரத் அவளைப் பார்த்துப் புன்னகைக்க முயன்றான். புன்னகை வரவில்லை. மனைவியை அவன் வெறித்த பார்வை பார்த்தான்.

ரஞ்சனி திகைப்புடன் கேட்டாள். “என்ன ஆச்சு?”

சரத் கஷ்டப்பட்டுச் சொன்னான். “ஒன்னுமில்லையே

அந்தப் பேப்பர்ல இருக்கறதைப் படிச்சுட்டு அப்படியே அதிர்ந்து போய் நின்ன மாதிரி இருந்துச்சு. அதனால தான் பயந்து போய்க் கேட்டேன்

அது ஒரு பொருட்காட்சி விளம்பரம். அதைப் பார்க்கறப்ப தான் நேத்தே செஞ்சு முடிக்க வேண்டியிருந்த ஒரு முக்கியமான வேலை ஞாபகத்துக்கு வந்துச்சு. அதனால அப்படியே நின்னேன்….” நல்ல வேளையாக பொய் சரளமாய் வந்தது.

அவள் நிம்மதியடைந்து உள்ளே போனாள். பின்னாலேயே வீட்டுக்குள் நுழைந்த சரத் கேட்டான். “தீபக் எழுந்திருக்கலயா?”

ரெண்டு தடவை கூப்பிட்டாச்சு. அஞ்சு நிமிஷம்மா, அஞ்சு நிமிஷம்மான்னு சொல்லிட்டே தூங்கறான். நீங்களே எழுப்புங்க. ராத்திரி எல்லாம் முழிச்சுட்டு நெட்ல எதையோ பாத்துட்டிருக்க வேண்டியது. காலைல எழுந்திருக்க அவ்வளவு கஷ்டம்….” என்று சொல்லிக் கொண்டே அவள் சமையலறைக்குப் போக சரத், மனதில் உறுத்திய அந்தக் கடிதத்தை எண்ணியபடியே சோபாவில் ஒரு நிமிடம் அமர்ந்திருந்தான்.

அந்தக் கடிதத்தில் குறிப்பாக யார், என்ன என்றெல்லாம் சொல்லவில்லை. பொத்தாம் பொதுவாக ஏதோ ஒரு கிறுக்கன் எழுதிப் போட்டிருக்கிறான். அவ்வளவு தான். ஆனால் உறையில் அவன் பெயரிட்டுப் போட்டிருப்பது தான் நெருடலாக இருந்தது.   ’அந்த ஆத்மா உன்னைத் தேடி வந்திருக்கிறதுஎன்று வேறு எழுதியிருக்கிறான். யார் அந்த விஷமி?

தீபக்கை எழுப்பினீங்களா? நேரமாச்சுஎன்று சமையலறையிலிருந்து ரஞ்சனி சத்தமாகச் சொன்னாள்.

சரத் எழுந்து மகன் அறைக்குப் போனான். தீபக் போர்த்திக் கொண்டு படுத்திருந்தான். “தீபக் எழுந்திருடா. நேரமாச்சு

தீபக் ஏதோ அரற்றினான். சரத் அவனை உலுக்கி எழுப்பினான். “டேய் காலேஜுக்குப் போக நேரமாச்சு

தீபக் எழுந்து உட்கார்ந்தான். “நல்ல வேளை எழுப்பினீங்க.” என்று கண்களைக் கைகளால் தேய்த்துக் கொண்டே சொன்னான்.

ஏன், என்னாச்சு?”

கனவுல யாரோ கிணத்துக்குள்ள இருந்துநான் இயற்கையா சாகலை. என்னைக் கொன்னுட்டாங்கன்னு சொல்ற மாதிரி கேட்குது. சுத்தி முத்திப் பார்த்தா யாருமே இல்லை. ஆனா மெல்லமா அந்தச் சத்தம் கேட்டுகிட்டே இருக்கு. என்னடா இதுன்னு ஒரே பேஜாரா போச்சு. நல்ல வேளையா நீங்க கூப்பிட்டீங்க

சரத் அப்படியே கட்டிலில் உட்கார்ந்து விட்டான். இதயம் வெடித்து விடும் போல வேகமாகத் துடித்தது. நல்ல வேளையாக தீபக் எழுந்து பாத்ரூம் போய் விட்டதால் அவனைப் பார்க்கவில்லை. சரத்துக்கு இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. அந்த மொட்டைக் கடிதமாவது யாரோ ஒரு விஷமி எதையோ அரைகுறையாகக் கேள்விப்பட்டு எழுதியது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தீபக்கின் கனவில் இந்த மாதிரி அதுவும் இதே சமயத்தில் வருகிறதென்றால்….

சரத் கஷ்டப்பட்டு எழுந்து ஹாலுக்குப் போய் தினசரிப் பத்திரிக்கையைப் பிரித்தபடி சோபாவில் அமர்ந்தான். மனதில் பத்திரிக்கைச் செய்தி எதுவும் பதியவில்லை. அந்தக் கடிதமும், தீபக் கனவைப் பற்றிச் சொன்னதுமே மனதில் மாறி மாறி வந்தது. சிறிது நேரம் கழித்து சமையலறையில் தீபக் தாயிடம் அந்தக் கனவை விவரித்துக் கொண்டிருப்பது கேட்டது.  அவன் அவளிடம் சொல்வதைக் கேட்கையில் மாரடைப்பே வந்துவிடும் போல் சரத் உணர்ந்தான்.

ரஞ்சனி சொன்னாள். “ராத்திரியெல்லாம் துப்பறியும் சீரியல்கள் பாத்துட்டு இருந்தால் அப்படித்தான் கனவு வரும். ஒன்னா பாம்பு வீடியோவா பார்க்கறே. இல்லாட்டி திகில் சீரியல், படமா பார்க்கிறே. ரெண்டுமே ராத்திரி பார்க்கறது நல்லதல்ல….”

சும்மா சொல்லாதம்மா. நான் எத்தனை வருஷமா அதையெல்லாம் பார்க்கறேன். இத்தனை நாளா அந்த மாதிரி கனவு வந்துதா. இன்னைக்குத் தானே வந்திருக்கு….   நான் மட்டும் டாக்டருக்குப் படிக்காமல் இருந்திருந்தா ஒரு துப்பறியும் நிபுணராவோ, பாம்பு ஆராய்ச்சியாளனாவோ மாறியிருப்பேன். அது டாக்டராகறதை விட த்ரில்லிங்கா இருந்திருக்கும் என்னம்மா சொல்றே

ரஞ்சனி மகனைத் திட்டினாள். “சீக்கிரம் குளிச்சு சாப்பிட வாடா. காலேஜுக்கு நேரமாச்சுடா…”

நல்ல வேளையாக தீபக் குளித்து விட்டுச் சாப்பிட வந்த போது பழைய பேச்சே தொடரவில்லை. அவனுடைய கல்லூரி நண்பர்கள் பற்றி பேச்சு வந்தது. சரத்தும் தொடர்ந்து அது சம்பந்தமான கேள்விகளையே கேட்டுக் கொண்டிருந்தான். தப்பித் தவறிப் பேச்சு அந்தக் கனவுப்பக்கம் திரும்பி விடாமல் பார்த்துக் கொண்ட அவன் சாப்பிட்டு முடித்தவுடன் அவசரமாக வேலைக்குக் கிளம்பினான். காரில் செல்லும் போதும் மனமெல்லாம் பழைய நினைவுகளே நிறைந்திருந்தன. எதையெல்லாம் அவன் நினைக்கவே கூடாது என்று எண்ணியிருந்தானோ அதெல்லாம் படையெடுத்துக் கிளம்பி வந்தன. அந்த நினைவுகளில் இருந்து தப்பிப்பதற்காகவே போவது போல் காரில் தன்னையறியாமல் வேகமாகப் போனான். ஆனால் மனோவேகத்துக்குக் கார் வேகம் போதவில்லை….  

சரத் தன் நண்பன் கல்யாணின் கம்பெனியில் தான் ஜெனரல் மானேஜராக இருந்தான். அவன் கம்பெனி கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திய போது கல்யாணின் கார் முன்பே வந்திருப்பதைக் கவனித்தான். கல்யாண் சீக்கிரம் வந்திருப்பது நல்லதாயிற்று

கம்பெனிக்குள் நுழைந்தவன் கல்யாணின் செகரட்டரியிடம் கேட்டான். “சார் கிட்ட யாராவது பேசிகிட்டிருக்காங்களா?”

இல்லை சார்…”

மானேஜிங் டைரக்டர் என்று தங்க எழுத்துக்களில் எழுந்தியிருந்த கதவைத் தள்ளிக் கொண்டு சரத் நண்பனின் அறைக்குள் நுழைந்தான். “குட்மார்னிங்என்று சொல்லி அவன் எதிரே உட்கார்ந்தவன் சட்டைப்பையிலிருந்து அந்த வெள்ளைத் தாளை எடுத்தான்.

கல்யாண் திகைப்புடன் அதை வாங்கிப் படித்து விட்டு மவுனமாகத் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்து அவனிடம் நீட்ட சரத் கண்கள் விரிய அதை வாங்கிப் படித்தான். இரண்டிலும் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் ஒன்றாகவே இருந்தன. கையெழுத்தும் கூடத் தான்.

எங்க வீட்டில் இது மட்டுமல்ல. தீபக்குக்கு இன்னைக்குக் காலைல ஒரு கனவும் வந்திருக்கு…” என்று ஆரம்பித்து அந்தக் கனவையும் சரத் சொன்ன போது கல்யாண் ஒருவித அமானுஷ்யத்தை உணர்ந்தான். கடிதத்தை எழுதியது எவனோ அதிகப்பிரசங்கி என்று சொல்லலாம். ஆனால் கனவும் அந்த வகையிலேயே வருவதை எப்படி விளக்க  முடியும்?

                                                     


(தொடரும்)
என்.கணேசன்

Sunday, March 7, 2021

எல்லைகளை நீட்டி முன்னேறுங்கள்!

ஜோனாதன் லிவிங்க்ஸ்டன் கடல்பறவையின் கதை சொல்லும் சாதனைகளின் ரகசியம் அறியுங்கள்!

Saturday, March 6, 2021

இறைவன் தர்மத்தின் பக்கமே!

கீதை காட்டும் பாதை 16

இறைவன் அவதாரம் ஏன் எடுக்கிறார்? நாம் ஏன் பிறவிகள் எடுக்கிறோம்? தர்மத்தின் பக்கம் நாம் ஏன் நிற்க வேண்டும்?

Thursday, March 4, 2021

இல்லுமினாட்டி 92


லைபேசி அலற ஆரம்பித்தது. கர்னீலியஸ் அதை மௌனமாக்கி விட்டு இந்தப் பயிற்சியைச் செய்ய ஆரம்பித்திருக்க வேண்டும் என்று தன்னையே கடிந்து கொண்டார். அலட்சியம் செய்து விட்டுத் தொடர அந்தச் சத்தம் அனுமதிக்கவில்லை. பெருமூச்சு விட்டவராக அந்தக் கடைசி வாசகத்தை மறுபடி நினைவுபடுத்திக் கொண்டார். உங்கள் மகாகவி ஒருவன் அற்புதக் கவிதை ஒன்றை எழுதிய அவ்விடம் இரு தளம்  கொண்டது....” .  அதை மனதின் ஒரு மூலையில் நினைவுபடுத்திக் கொண்டே அலைபேசியில் அழைப்பது யாரென்று பார்த்தார். வாங் வே.

அலைபேசியை எடுத்துப் பேசிய கர்னீலியஸ் எந்த சந்தர்ப்பத்தில் அவருடைய அழைப்பு வந்திருக்கிறது என்று விளக்கிய போது வாங் வே பல முறை மன்னிப்பு கேட்டார். அது சம்பிரதாயமான வார்த்தைகளாக இருக்காமல் உண்மையாகவே அவர் உணர்ந்ததாய் இருந்தது. தினமும் ஏதாவது கூடுதலாகத் தெரிந்ததா, தெரிந்ததா என்று கேட்கும் அவர் இந்த முறை, தெரிய ஆரம்பித்ததை இடைமறித்து விட்டோமே என்று பச்சாதாபப்பட்டார். எல்லா நேரங்களிலும் பயிற்சி பலனளிப்பதில்லை, சில அபூர்வ சமயங்களில் மட்டுமே மனம் லயித்து வெற்றி கிடைக்கிறது என்று கர்னீலியஸ் அவரிடம் முன்பே சொல்லியிருந்தது அவருடைய குற்றவுணர்ச்சியை அதிகரித்திருந்தது. அவர் மட்டும் இப்போது ‘ஏதாவது கூடுதலாகத் தெரிந்ததா?’ என்று கேட்கப் போன் செய்யாமல் இருந்திருந்தால் முழுமையாகவே எல்லா விவரங்களும் கிடைத்திருக்கலாம்; அவர் என்ன செய்வது என்று அதற்கேற்றபடி தீர்மானித்திருக்கலாம்...

இந்த எண்ண ஓட்டத்தில் மனம் நொந்தவராக வாங் வே ”இனிமேல் நான் போன் செய்ய மாட்டேன். நீங்களே போன் செய்யுங்கள்...” என்று சொல்லி, கூடுதலாகத் தெரிந்த அந்த ஒரு வாக்கியத்தை அவரிடம் கேட்டு எழுதிக் கொண்டார்.


மாலை நேரத்தில் சிந்து உதயின் வீட்டுக்குப் போன போது வீட்டில் பத்மாவதி இருக்கவில்லை. அவள் ஏதோ கோயிலுக்குப் போயிருந்தாள். உதயும், கிரிஷும் மட்டும் தான் வீட்டில் இருந்தார்கள்.

வாசலுக்கு வந்து வரவேற்ற உதயிடம் சிந்து கேட்டாள். “நான் வருவது க்ரிஷுக்குத் தெரியாது தானே? நீங்கள் சொல்லவில்லை அல்லவா?”

அவன் புன்னகையுடன் “சொல்லவில்லை” என்று சொன்னான். சிந்துவுக்குத் திருப்தியாக இருந்தது. இருவரும் சேர்ந்து க்ரிஷ் அறைக்குப் போனார்கள். உள்ளே க்ரிஷ் தரைவிரிப்பு ஒன்றில் தியானத்தில் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு எதிரே ஒரு தேஜஸ்வியான மனிதரின் புகைப்படம் இருந்தது. அவள் வாயைத் திறந்து யாருடைய புகைப்படம் அது என்று கேட்க முற்பட்ட போது உதய் அவள் உதடுகளில் விரலை வைத்து ‘சத்தம் வேண்டாம்’ என்று எச்சரிக்கை செய்தான்.

சிந்து தலையசைத்தாள். ஆனாலும் உதய் அவள் உதடுகளில் இருந்து அவனுடைய விரலை எடுக்காமல் அவளைக் காதல் பார்வை பார்க்க அவள் அவன் விரலுக்கு முத்தமிட்டு வைத்தாள். இது போன்ற செய்கைகளில் ஆரம்பத்தில் உணர்ந்த அருவருப்புகளை அவள் உதறித்தள்ளப் பழகியிருந்தாள். சின்ன சந்தோஷத்துடன் அவன் விரலை எடுத்தான். சிந்துவுக்கு ஒருவிதத்தில் க்ரிஷ் தியானத்தில் இருந்தது வசதியாக இருந்தது. க்ரிஷையும் அவன் அறையையும் அவன் அறியாமல் ஆராய அவளுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

க்ரிஷ் சிலை போல அமர்ந்திருந்தான். அவன் முகத்தில் தெரிந்த அமைதி அவளுக்கு அசாதாரணமாகத் தெரிந்தது. அவன் ஏதோ ஒரு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறான் என்று தோன்றியது. அவனுடைய பெரிய அறையில் இரண்டு அலமாரிகளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அறிவியலில் இருந்து ஆன்மிகம் வரை எல்லாத் துறைகளிலும் புத்தகங்கள் இருந்தன.  சில புத்தகங்களை எடுத்துப் பார்த்தாள். எடுத்துப் பார்த்த எல்லாப் புத்தகங்களிலும் பல பக்கங்களில் பக்கவாட்டில் க்ரிஷ் எழுதிய குறிப்புகள் இருந்தன. அவன் படிக்காமல் வெறுமனே எடுத்து வைத்திருக்கிற புத்தகங்கள் எதுவும் இல்லை என்பது புரிந்தது. அவனைப் பற்றி அவள் படித்திருந்த குறிப்புகளில் எத்தனையோ படித்திருந்த போதும் நேரில் பார்த்து உணர்வது கூடுதல் பிரமிப்பாக இருந்தது...

க்ரிஷின் குரல் கரகரத்துக் கேட்டது. “என்ன ரெண்டு பேரும் திடீர்னு?”

சிந்து திரும்பி க்ரிஷைப் பார்த்தாள். தியானத்திலிருந்து மீண்டிருந்த அவன் முகத்தில் அந்தப் புகைப்படத்தில் இருந்த ஆளைப் போலவே தனி தேஜஸ் தெரிந்த மாதிரி உணர்ந்தாள். ஏதோ ஒரு பேரின்ப அனுபவத்திலிருந்து திரும்பியவன் போல் அவன் குரல் மென்மையும் நிறைவும் கொண்டதாய் இருந்தது.  அந்தத் தியான அனுபவத்தினாலோ என்னவோ வழக்கமாய் பார்க்கும் சந்தேகத்துடன் சேர்ந்த கூரிய பார்வையையும் காணோம். அவளை அன்பாகவே அவன் பார்த்த மாதிரி இருந்தது.

சிந்து சொன்னாள். “உங்க கிட்டே எனக்கு கொஞ்சம் கேட்க வேண்டியிருந்தது. அதனால் தான் நேரிலேயே பார்த்துப் பேசலாம் என்று வந்தேன்.”

உதய் லேசாய் சிரித்துக் கொண்டே சொன்னான். “உன் கிட்டே சொல்ல வேண்டாம்னு சொன்னாள். திடீர்னு வந்து கேட்டால் தான் நீ உள்ளதை உள்ளபடி சொல்வாயாம்”

சிந்து முதலில் அந்தப் புகைப்படத்தைக் காட்டிக் கேட்டாள். “இது யார் ஃபோட்டோ”

க்ரிஷ் புன்னகையுடன் சொன்னான். “இது என் குரு. மாஸ்டர்னு கூப்பிடுவோம்... இதைக் கேட்கத் தான் வந்தாயா என்ன?”

உதய் சிந்துவிடம் சொன்னான். “முதல்ல உட்கார். அவன் அறைக்கு வந்தால் அவனாய் எப்போதும் உட்காரச் சொல்ல மாட்டான். ஏன்னா நாம உட்கார்ந்தா சீக்கிரம் வெளியேற மாட்டோம். அவனோட படிப்பு, ஆராய்ச்சி எல்லாம் தடைப்பட்டுப் போகும்னு நினைப்பான். அதனால நமக்கு வேணும்னா நாமளா உட்கார்ந்துக்கணும்”

சொல்லி விட்டு அங்கிருந்த இருக்கை ஒன்றில் சிந்துவை அமர வைத்து விட்டுத் தானும் ஒரு இருக்கையில் உதய் உட்கார்ந்து கொண்டான். க்ரிஷ் அண்ணனைப் பார்த்து அசட்டுச் சிரிப்பு சிரித்தது அவன் சொன்னது பொய் அல்ல என்று ஒத்துக் கொள்வதாய் இருந்தது.  

சிந்து ஒரு புன்னகை உதிர்த்து விட்டுச் சொன்னாள். “இல்லை நான் என்னைப் பற்றிக் கேட்க வந்தேன். ஹரிணி என்னைப் பற்றி நீங்க எதோ ஆராய்ச்சி செய்துகிட்டிருக்கிறதா சொன்னாள் அல்லவா. அதனால் தான் என்ன கண்டுபிடித்திருக்கிறீர்கள் என்று உங்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று வந்தேன்....”

உதயை வைத்துக் கொண்டே இப்படித் தைரியமாகக் கேட்கும் அவள் துணிச்சலை க்ரிஷால் மெச்சாமல் இருக்க முடியவில்லை. புத்திசாலித்தனத்தோடு சேர்ந்திருக்கும் இந்தத் தைரியத்திற்காகத் தான் விஸ்வம் இவளைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்....

உதய் சொன்னான். “பத்திரிக்கைகளில் வரும் சைக்காலஜிகல் க்விஸ் மாதிரி கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லி என்ன கணிப்பு கொடுத்திருக்கிறார்கள் என்று படித்துப் பார்ப்பதில் எல்லாம் இவளுக்கு ஆர்வமாம்...”

க்ரிஷ் உடனடியாக எதையும் சொல்லாமல் யோசித்தான். முடிவில் அவன் “நான் உன்னை வைத்து ஆராய்ச்சி எல்லாம் செய்யவில்லை. அவர்கள் சும்மா சொல்கிறார்கள்” என்று சொல்வான் என்று சொல்லித் தவிர்க்கப் பார்ப்பான் சிந்து எதிர்பார்த்தாள்.  

ஆனால் க்ரிஷ் அப்படிச் சொல்லாமல் அவளை அசத்தினான். “சிந்து. உண்மை எல்லா நேரங்களிலும் கசப்பானது தான். அதனால் தான், சொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வரும் போது கூட, அதற்குக் கொஞ்சம் தேன்பூசி இனிமையாகச் சொல்லி, புத்திசாலிகள் எதிர்ப்பு வராதபடி தப்பிக்கிறார்கள். எனக்கு அப்படி இனிமையாகச் சொல்லும் வித்தை எல்லாம் தெரியாது. உள்ளதை உள்ளபடி சொல்வேன். நீயும் வாய் வார்த்தைக்கு அப்படிச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து வந்ததாய்ச் சொன்னாலும், நான் சொல்வதை எப்படி எடுத்துக் கொள்வாய் என்று எனக்குத் தெரியாது.  நீ வருத்தப்பட்டால் இவன் என்னைச் சும்மா விட மாட்டான். கோபம் வந்து என்னோடு சண்டைக்கு வருவான். எதற்கு வம்பு? நான் எதுவும் சொல்லா விட்டால் உனக்கும் நிம்மதி. இவனுக்கும் திருப்தி”

சிந்து க்ரிஷின் இந்த உபாயத்தை எதிர்பார்க்கவில்லை. என்ன சொல்லப் போகிறான் என்று தெரியாவிட்டாலும் கசப்பானதாகத் தான் இருக்கும் என்று சொல்கிறான். அதைக் கேட்டு அவளுக்கு வருத்தமாகும் என்கிறான். உதய்க்குக் கோபம் வரும் என்கிறான். அப்படியும் சொல்லச் சொன்னால் ஏடாகூடமாய் என்னென்ன சொல்வான் என்று சொல்ல முடியாது. சொல்லி அவள் மறுத்தால் ‘இதற்காகத் தான் நான் சொல்ல மாட்டேன். நீ தான் என்னை வற்புறுத்திக் கேட்டாய்’ என்று சொல்வான்....

ஆனால் எதையும் தெரிந்து கொள்ளாமல் திரும்பிப் போய் குழப்பத்திலும், பயத்திலுமேயே மறுபடியும் தங்கியிருக்க சிந்துவுக்குச் சிறிதும் விருப்பமிருக்கவில்லை. என்ன ஆனாலும் சரி அவன் மனதில் உள்ளதை வாய் விட்டுச் சொல்ல வைக்காமல் அவள் திரும்பிப் போவதாய் இல்லை.

“பரவாயில்லை சொல்லுங்கள். சொல்வது உண்மையாக இருந்தால் நான் கண்டிப்பாக வருத்தப்பட மாட்டேன்.” என்று சிந்து தைரியமாகச் சொன்னாள்.

(தொடரும்)
என்.கணேசன்



Monday, March 1, 2021

யாரோ ஒருவன்? 21


ல்யாண் அவசர அவசரமாகக் கீழே இறங்கித் தந்தையின் அறைக்குப் போனான். இருட்டில் ஜன்னலருகே நின்றிருந்த அவர் தாழ்ந்த குரலில் சொன்னார். “அங்கே விளக்கு பத்த வெச்சு ஏதோ பூஜை நடக்கற மாதிரியிருக்கு.”

அவர் சொல்வதை மெய்ப்பிப்பது போல ஊதுபத்தி மணம் அந்த நள்ளிரவில் அங்கிருந்து வந்தது. ஜன்னல் வழியே மெல்லிய விளக்கொளியும் தெரிந்தது. பக்கத்து வீட்டு ஜன்னலில் கீழ்பாதி மூடியிருந்தது. மேல்பாதி மட்டும் தான் திறந்திருந்தது. இங்கிருந்து நின்றபடி பார்க்கையில் சரியாகப் பார்க்க முடியவில்லை என்பதால் வேலாயுதம் அவசரமாய் ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு மகனை அதில் ஏறிப் பார்க்கச் சொல்லி சைகை காட்டினார்.

கல்யாண் அதில் ஏறிப் பார்த்தான். அந்த மேல்பாதி ஜன்னல் வழியே தெரிந்த அறையும் பாதி தான் தெரிந்தது. அதைத் தாண்டித் தெரிந்த ஹாலில் இருந்து வந்த விளக்கு வெளிச்சத்தில் அந்தப் பாதி அறையும் காலியாகத் தான் தெரிந்தது. ஹாலில் தெரிந்த வெளிச்சம் மின்விளக்கு ஒளியல்ல. தீப விளக்கொளி தான். திறந்திருந்த அறைக்கதவு வழியாகத் தெரிந்த அளவில் ஹாலில் ஒரு பகுதி தெரிந்தது. அங்கும் ஆட்கள் யாரும் தெரியவில்லை. சத்தம் எதாவது கேட்கிறதா என்று காதைக் கூர்மைப்படுத்தி கல்யாண் கேட்டான்இன்னதென்று அடையாளப்படுத்த முடியாத ஏதோ மெல்லிய ரீங்கார ஒலி கேட்பது போல் இருந்தது.

திடீரென்று ஒரு பெரிய பாம்பு ஹாலில் அந்தப் பகுதியைத் தாண்டிச் சென்றது. கல்யாண் தன்னையுமறியாமல் நாற்காலியில் இருந்து கீழே குதித்தான். அவன் இதயத் துடிப்புகள் சம்மட்டி அடிகளாக மாறின.

வேலாயுதம் மகனைக் கேட்டார். “என்ன ஆச்சு?”

கல்யாணுக்கு உடனடியாகப் பேச வரவில்லை. ஒரு நிமிடம் கழித்து மெல்லச் சொன்னான். “பாம்பு

வேலாயுதம் ஆவலுடன் கேட்டார். “எத்தனை பெரிய பாம்பு?”

கல்யாண் விவரிக்க வார்த்தை வராமல் இரண்டு கைகளையும் மிக அகலமாய் விரித்து அளவைக் காட்டினான்.

வேலாயுதம் அந்தச் சைகை பதிலில் திருப்தியடையாமல் தானே அந்த நாற்காலியில் கஷ்டப்பட்டு ஏற முயன்றார். கல்யாணுக்கு அந்த அதிர்ச்சி நிலைமையிலும் தந்தையின் குறையாத ஆர்வம் சிரிப்பை வரவழைத்தது. அவர் கீழே விழுந்து விட்டால் கஷ்டம் என்று எண்ணிய கல்யாண் அவரைத் தள்ளி நிறுத்தி விட்டு மறுபடி தானே நாற்காலியில் ஏறினான். ஆனால் அவன் ஏறிப்பார்த்த போது அறைக்கதவு சாத்தப்பட்டு விட்டிருந்தது. அதனால் அறையில் இருட்டு நிலவியதோடு ஹால் பகுதியும் தெரியவில்லை.   

கீழே இறங்கிய கல்யாண் தந்தையிடம் தான் கண்ட காட்சியை விளக்கினான். வேலாயுதம் கேட்டு விட்டுத் திகைப்புடன் சொன்னார். “பாம்போடு எப்படிடா இவங்களுக்கு அந்த வீட்டில் நிம்மதியாய் இருக்க முடியுது. அங்கே நீ அதைப் பாத்தேன்னு சொன்னதுக்கப்புறம் எனக்கு வழக்கமா வர்ற கொஞ்சம் தூக்கமும் இனி வருமான்னு தெரியலயே. ஏன்டா அந்தப் பாம்பு இடம் மாறி இங்கே வந்துடாது இல்லையா?”

கல்யாண் யோசனையுடன் சொன்னான். “எதுக்கும் ஜன்னலைச் சாத்தியே படுங்க.”

ஆனால் ஜன்னலைச் சாத்திப் படுத்தும் வேலாயுதத்திற்கு உறக்கம் சீக்கிரம் வர மறுத்தது. நேரம் கழித்து உறக்கம் வந்த போதும்  பாம்பு கனவாக வந்தது. அந்தக் கனவில் பக்கத்து வீடும் சேர்ந்து வந்தது. அவர் அந்தப் பக்கத்து வீட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் மெல்ல நுழைகிறார். நாகராஜனோ, சுதர்ஷனோ காணோம். ஒரு அறை மட்டும் பூட்டி இருக்கிறது. அந்த அறையின் ஜன்னல் மட்டும் திறந்திருக்கிறது. உள்ளே எட்டிப் பார்க்கிறார். உள்ளே நிறைய பாம்புகள் இருந்தன. அவர் பார்க்கப் பார்க்க ஒவ்வொரு பாம்பும் ரத்தினக்கல்களை உமிழ்கின்றன. எல்லாக் கல்களும் சேர்ந்தாற்போல் ஒளிவீசுகின்றன…. அந்தப் பேரொளியைப் பார்க்க முடியாமல் அவர் கண்கள் கூசுகின்றன. கண்களைக் கசக்கிக் கொண்ட போது விழிப்பு வந்து விட்டது. அந்த நேரத்தில் பக்கத்து வீட்டிலிருந்து பாம்பு சீறும் சத்தம் லேசாகக் கேட்டது.  

எழுந்து படுக்கையில் அமர்ந்தவர் கடிகாரத்தைப் பார்த்தார். மணி மூன்று. வேகமாக எழுந்து போய் சத்தமில்லாமல் ஜன்னலைத் திறந்தார். உண்மையாகவே பக்கத்து வீட்டின் ஜன்னலில் மின்னல் போல பச்சையும், நீலமுமாய் கலந்த பேரொளி ஒன்று தோன்றியது. அவர் நாற்காலியை மறுபடி இழுத்துப் போட்ட போது பக்கத்து வீட்டில் அந்த அறைக் கதவைச் சாத்தும் சத்தம் மெல்லக் கேட்டது. அந்த ஒளி மறைந்து விட்டது. நாற்காலியில் ஏறிப் பார்த்த போது பக்கத்து வீட்டின் அந்த அறையில் இருட்டைத் தான் பார்க்க முடிந்தது. சற்று முன் பார்த்த அந்தப் பேரொளியும் அதற்கு முன் கண்ட கனவையும் எண்ணிப் பார்த்த போது அவர்  உடல் ஏனோ சிலிர்த்தது. என்ன நடக்கிறது பக்கத்து வீட்டில் என்பதைத் தெரிந்து கொள்ளா விட்டால் மண்டை வெடித்து விடும் போல் தோன்றியது.

அவர் ஆறு மணி வரை படுக்கையில் பல யோசனைகளுடன் புரண்டு கொண்டிருந்து விட்டு எழுந்தார். அவர் வாசற்கதவைத் திறந்து வெளியே வந்த போது அவரைப் பார்த்து விட்டு கூர்க்கா வாட்ச்மேன் ஓடி வந்தான். அவன் கையில் ஒரு உறை இருந்தது. “ஐயா போஸ்ட் பாக்ஸ்ல யாரோ போட்டுட்டுப் போயிருக்காங்க. இப்ப தான் கவனிச்சேன்என்றான்.

வேலாயுதம் சுவாரசியம் இல்லாமல் அதை வாங்கினார். பக்கத்து வீட்டு விஷயங்களைத் தவிர வேறெதுவும் அவருக்கு இப்போது முக்கியமாகப் படுவதில்லை…. அந்த உறையின் மீது கல்யாண் என்று எழுதியிருந்தது. தபால்தலையோ, தபால் முத்திரையோ இல்லை. உறையில் விலாசமும் இல்லை

பின்னாலிருந்து கல்யாணின் குரல் கேட்டது. ”என்ன கவர் அது?”

வேலாயுதம் எதுவும் சொல்லாமல் அந்த உறையை அவனிடம் நீட்டினார்.  அவன் அதை வாங்கிப் பார்த்தான். திரு, ஸ்ரீ அல்லது மிஸ்டர் என்ற எந்த மரியாதையும் இல்லாமல் வெறுமனே கல்யாண் என்று எழுதியிருந்ததைப் பார்த்து அவன் முகம் சுளித்தான். மரியாதை தெரியாத மனிதர்கள்.

வேலாயுதம் சொன்னார். “ஏதாவது கோயில் திருவிழா நோட்டீஸாய் இருக்கும். அதை விடு. நேத்து ராத்திரி எனக்கு வந்த கனவையும், பிறகு நான் பார்த்ததையும் கேளு

கல்யாண் வாட்ச்மேனைப் பார்த்து நீ போகலாம் என்ற பாவனையோடு தலையசைத்தான்.  வாட்ச்மேன் போன பிறகு தந்தையைப் பார்த்தான். அவர் பரபரப்புடன் கனவில் பார்த்ததையும் பின் நிஜத்தில் பார்த்ததையும் சொன்னார். கல்யாணும் திகைத்தான். கனவில் கண்டதையே சில நிமிடங்களில் நிஜத்திலும் அவரால் பார்க்க முடிந்தது அபூர்வமான தற்செயல் தானா? இல்லை சதா அவர் அதையே நினைத்துக் கொண்டிருப்பதால் இப்படிக் கனவு கண்டிருக்கிறாரா?

யோசித்தபடியே கல்யாண் அந்த உறையைப் பிரித்தான். உள்ளே ஒரு வெள்ளைக் காகிதத்தில் ஏதோ எழுதியிருந்தது. அப்பா சொன்னது போல இது கோயில் திருவிழா நோட்டீஸ் அல்ல. மரியாதையில்லாமல் வெறுமனே கல்யாண் என்று எழுதி இருக்கும் அதிகப்பிரசங்கி யார் என்றறிந்து கொள்ள அந்த காகிதத்தில் எழுதி இருந்ததை அவன் படித்தான்

அன்றைய அந்த மரணம் இயற்கை அல்ல. அந்த ஆத்மா உன்னைத் தேடி வந்திருக்கிறது.”

கல்யாண் முகம் திடீரென்று வெளுத்ததைப் பார்த்து திகைத்த வேலாயுதம்என்னடா?” என்று கேட்டார்.

அவன் சுதாரிக்க இரண்டு நிமிடங்கள் தேவைப்பட்டன. பின் அவன் அந்தக் காகிதத்தை மெள்ள நீட்டினான். அவர் அதை வாங்கிப் படித்தார். அவரும் அதிர்ந்து போனார்.  தந்தையும் மகனும் பார்த்துக் கொண்டார்கள்.

சிறிது நேரம் கழித்து வேலாயுதம் மெல்லச் சொன்னார். “மொட்டையா தான் சொல்லியிருக்கு. எப்படி வேணும்னாலும் இதை எடுத்துக்கற மாதிரி எவனோ ஒரு அதிகப்பிரசங்கி எழுதியிருக்கான்….”

இருவரும் வாட்ச்மேனை அழைத்து விசாரித்தார்கள். அரை மணி நேரத்திற்கு முன்பு தான் திடீரென்று தபால் பெட்டியில் ஏதோ ஒரு உறை எட்டிப்பார்த்ததைக் கவனித்ததாக அவன் சொன்னான். அதிகாலையில் யாரோ தபால் பெட்டியில் போட்டு விட்டுப் போயிருக்க வேண்டும். வேலாயுதம் சொன்னது போல எந்த மரணம், யாருடைய மரணம், என்றைய மரணம் என்ற தகவல்கள் எல்லாம் இல்லாமல் மொட்டையாகத் தான் எழுதியிருக்கிறதுஅதனால் அது பெரிய விஷயமில்லை தான் என்றாலும் அந்த ஆத்மா தேடி வந்திருக்கிறது என்ற வாக்கியத்தை கல்யாண் ரசிக்கவில்லை.


(தொடரும்)
என்.கணேசன்