என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, August 27, 2026

சதுரங்கம் 33


 

ர்ஜுன் தன்னை சித்தப்பா இவ்வளவு சீக்கிரம் பேச அழைப்பார் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. பத்திரிக்கைத் துறையில் அவன் இருப்பதால் அவர் எவ்வளவுபிசியானவர் என்பதை அறிவான். பல அரசியல் தலைவர்களும், அறிஞர்களும், மற்ற பிரபலங்களும் அவரைச் சந்தித்துப் பேச மாதக்கணக்கில் காத்திருக்கிறார்கள் என்பதை அடிக்கடி கேள்விப்படுகிறான். அதனால் தனக்கு இந்த அளவு சித்தப்பா முக்கியத்துவம் தந்து பேச அழைத்திருப்பது அவர் அவன் மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்துவதாக அவனுக்குத் தோன்றியது. அவன் இதுவரை அவரை வீட்டில் மட்டுமே சந்தித்துப் பேசி இருக்கிறான். ஆனால் அவர் இம்முறை மகாபலிபுரத்திற்கு அருகில் உள்ள அவருடைய பங்களாவிற்கு அழைத்திருக்கிறார். பல முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகள் அந்தப் பங்களாவில் நடந்திருப்பதை அவன் கேள்விப்பட்டு இருக்கிறான். வரலாற்று திருப்புமுனைகளைத் தந்திருக்கும் அந்த இடத்தில் அவனுடன் பேச அவர் அழைத்திருப்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.  

 

அந்தப் பங்களாவிலும் பலத்த போலீஸ் காவல் இருந்தது. அவன் அவர் சொல்லியிருந்த நேரத்தில் அங்கு சென்று சேர்ந்த போது அவர் இன்னமும் வந்து சேர்ந்திருக்கவில்லை. மிகுந்த மரியாதையுடன் அங்கிருந்த அவனை வரவேற்று அமர வைத்த ஒரு போலீஸ் அதிகாரி, அவர் பத்து நிமிடங்களில் வந்து விடுவாரென்றும், அது வரை காத்திருக்கும்படியும் சொல்லி விட்டுப் போனார். அவன் அங்கு செல்வது முதல் முறை என்பதால், அவன் சும்மா அமர்ந்திருக்காமல், அந்தப் பங்களாவைச் சுற்றிப் பார்த்தான். பரப்பளவில் சிறியதாக இருந்தாலும், வீடு ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலைப் போல் மிக அழகாகவும் ஆடம்பரமாகவும்  இருந்தது. பகட்டான மின் விளக்குகளும், சோபாக்களும், அலங்காரப் பொருள்களும் கண்களைக் கவர்ந்தனஹாலில் இருந்த பெரிய திரையை விலக்கிய போது கண்ணாடிக் கதவுகளைத் தாண்டி சற்று தொலைவில் கடல் தெரிந்தது. நித்யாவை ஒரு முறை இங்கு அழைத்து வந்து காண்பிக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. சலிக்காமல் கடலைப் பார்த்து ரசிக்கும் ரசிகை அவள்….   

 

சித்தப்பாவின் குரல் கேட்டது. “எப்படிடா இருக்கு வீடு?”

 

அர்ஜுன் திரும்பி அவரைப் பார்த்து புன்னகைத்தான். “சூப்பர் சித்தப்பா. ரொம்ப அழகாயிருக்கு.”

 

ராஜாராம் புன்னகைத்தார். அவனுடைய பாராட்டு அவருக்குத் திருப்தியைத் தந்தது. “வாடா. உட்கார். எதாவது சாப்பிடறயாடா. ரெண்டு கிலோமீட்டர் தள்ளி ஒரு நல்ல ஓட்டல் இருக்கு. எதாவது வரவழைக்கட்டா?”

 

வேண்டாம் சித்தப்பா.” என்றபடி அவன் அவர் அருகில் வந்தமர்ந்தான்.

 

அப்பறம் என்னடா? எதாவது விசேஷம் உண்டா?”

 

ஒன்னுமில்லை சித்தப்பா

 

அவன் அத்திவாக்கம் போய் வந்ததைப் பற்றி, தனியாகச் சந்திக்கும் இந்த சந்தர்ப்பத்திலாவது சொல்வான் அல்லது மகுடபதி பற்றி ஏதாவது கேட்பான் என்று ராஜாராம் எதிர்பார்த்திருந்தார். இருவர் மட்டுமிருப்பதால் அவன் தயக்கமில்லாமல் கேட்கும் சூழ்நிலை தான் இருக்கின்றது. அல்லது அவனுடைய காதல் பற்றியும் திருமணம் பற்றியும் கூட எதாவது சொல்லக்கூடும் என்று எதிர்பார்த்திருந்தார். எனவே அவன் ஒன்றுமில்லை என்று சொன்னது அவரை ஏமாற்றமடையச் செய்தது. அழுத்தக்காரன் என்று நினைத்துக் கொண்டாலும் அவர் முகத்திலிருந்த புன்னகை குறையவில்லை.

 

அவன் அவரைக் கேள்விக்குறியோடு பார்த்தான். எதற்காக என்னை அழைத்தீர்களோ அதைச் சொல்லுங்கள் என்பது போலிருந்தது அவன் பார்வை. இது அவருடைய அண்ணாவின் குணாதிசயம். தேவையில்லாமல் சுற்றி வளைத்துப் பேசுவதை விரும்பாதவர் அவர். அவருடைய சில விசேஷ குணங்கள் அவனுக்கும் அப்படியே வந்திருக்கின்றன.

 

ராஜாராம் மனதில் ஒரு பாரத்தை உணர்ந்தார். பின் மெல்ல பேச ஆரம்பித்தார். “உனக்கு என் மேல கோபம் இருக்குங்கறது எனக்குத் தெரியும் அர்ஜுன். அரசியல்ல நான் என் அண்ணாவை ஆதரிக்காமல், ஆளும் கட்சியை ஆதரிக்கிறது தப்புன்னு நீ நினைக்கிறாய்னும் தெரியும். எதனால நான் அதைச் செய்யறேன்னு உனக்கு நான் சொல்லணும்னா காரணத்தை நான் உன் தாத்தா கிட்ட இருந்து தான் ஆரம்பிக்கணும்….”

 

அவன் ஆர்வத்துடன் கவனமானான். அவர் தொடர்ந்தார். “இந்த உலகத்தில் நான் ரொம்ப நேசிச்ச மனுஷன், அதிகமாய் மதிச்ச மனுஷன் யாருன்னா அது என் அப்பா தான் அர்ஜுன். ஆனால் அவர் பிழைக்கத் தெரியாதவராகவே கடைசி வரைக்கும் இருந்துட்டார். ஆட்சிக்கு வர்றதே சம்பாதிக்கறதுக்காகங்கறது இந்தக் காலத்துல சின்னப் பசங்களுக்குக் கூட புரிஞ்ச உண்மை. ஆனால் உன் தாத்தா ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியும் சம்பாதிக்கலை. ஆட்சிக்கு வந்த பின்னாடியும் சம்பாதிக்கலை. ஆனாலும் கூட, எந்த மக்களுக்காக அவர் எல்லாத் தியாகங்களையும் செஞ்சு வாழ்ந்தாரோ, அந்த மக்களுக்கு அவர் வாழ்ந்த வரைக்கும் அவரோட அருமை முழுசா தெரியலை. அவருக்கு சாகற காலத்தில் தான் முதல்வராகவே முடிஞ்சுது. மூன்றரை வருஷங்கள் தான் ஆட்சி செஞ்சார்.”

 

அர்ஜுன் சொன்னான். “ஆனாலும் தாத்தா மக்கள் மனசுல நீங்காத இடத்தைப் பிடிச்சிருக்கார் இல்லையா சித்தப்பா. இன்னைக்கும் மக்கள் அவரைப் புகழ்றாங்க.”

 

இப்ப அவரை ஆஹா ஓஹோன்னு புகழ்கிற மக்கள் அவரைப் புகழ்ந்த வாயாலேயே அவருக்கு கொஞ்சமும் இணையில்லாத தலைவர்களையும் புகழறாங்க. அதையும் நீ பார்க்கணும் அர்ஜுன். அந்தத் தலைவர்கள் அவரை மாதிரியே செத்துப் போனவர்கள்ங்கறதைத் தவிர வேறெந்த விதத்திலும் சரிசமமானவங்க அல்ல. தரம் தாழ்ந்தவங்களுக்கு இணையாய் உயரத்தில் இருக்கிறவங்களையும் புகழறது, தாழ்த்தறதுக்கு சமமல்லவா?”

 

அவர் சொன்ன இதே விஷயத்தை அர்ஜுனும் பல முறை நினைத்திருக்கிறான். இப்போது ஆளும்கட்சி சுவரொட்டிகளிலும், அறிவிப்புகளிலும், வாசுதேவனும், தணிகாச்சலமும் கண்ட கனவுகளை நனவாக்கிக் கொண்டிருக்கும் மாபெரும் தலைவர் சரவணன் என்ற வாசகம் அடிக்கடி வருகின்றது. வாசுதேவன் கண்ட கனவு தமிழக மக்களின் முன்னேற்றமும் சுபிட்சமுமாக இருந்தது, ஆனால் தணிகாச்சலத்தோட கனவோ கூடுமான அளவு சம்பாதிப்பதாகத் தான் இருந்தது. இருவரின்  கனவும் ஒன்றே என்று சொல்வதே வாசுதேவனைக் கீழே இறக்குவது போலத் தான். ஆனால் அந்த ஆளுங்கட்சிக்குத் தான் இப்போது ராஜாராம் ஆதரவு தந்து வருகிறார். அவர் ஆதரவு தருவது ஒருவகையில் ஆளுங்கட்சி விளம்பரத்தை அங்கீகரிப்பது போலத் தான் என்று எண்ணிய அர்ஜுனின் முகத்தில் புன்னகை அரும்பியது.

 

அதைக் கவனித்த அவருக்கு அவனுடைய புன்னகைக்குப் பின்னாலிருந்த எண்ண ஓட்டமும் புரியாமலில்லை. அவர் லேசாகச் சிரித்தபடி சொன்னார். “என் நிலைப்பாட்டை நான் கடைசில சொல்றேன். முழுசாய் கேட்டு முடியற வரைக்கும் தீர்ப்பு எழுதாதே.”

 

அர்ஜுனின் புன்னகை விரிந்தது. அவனுடைய எண்ணத்தை எவ்வளவு சீக்கிரம் அவர் படித்து விட்டார்

 

ராஜாராம் தொடர்ந்தார். “எங்கப்பா செஞ்ச முட்டாள்தனத்தை இப்ப எங்கண்ணா ஆரம்பிச்சிருக்கான். எங்கப்பாவாவது கடைசி காலத்துல தமிழ்நாட்டுக்கு முதலமைச்சரானார். அவரோட கடைசி காலத்திலாவது அதற்கு சாதகமான சூழல் வந்துச்சு. ஆனால் எங்கண்ணன் அதிகபட்சமா எப்பவாவது ஒரு எம்.எல்.ஏ ஆகலாம். அதுக்கும் மேல முன்னேறப் போறதில்லை அர்ஜுன். ஏன்னா இப்போதைய அரசியல் சூழலும் சரியில்லை, மக்களும் முட்டாள்கள்.”

 

கிட்டத்தட்ட அர்ஜுனின் அபிப்பிராயமும் அதுவாகத் தான் இருந்தது. ஆனால் அதை சித்தப்பா வாயால் கேட்கும் போது அவனுக்கு வலித்தது. அதை உணர்ந்த அவர் அவனிடம் மென்மையாகச் சொன்னார். “கண்டிப்பாய் வெற்றியடையப் போறதில்லைன்னும், இந்த அரசியல் களத்துல கஷ்டப்படத் தான் போறான்னும் எனக்கு உறுதியாய் தெரிஞ்ச பிறகு நான் ஏன் அண்ணாவை ஆதரிக்கணும் அர்ஜுன்? மக்கள் நல்லதுக்கும் கெட்டதுக்கும் வித்தியாசம் தெரியாதவங்க. தந்திரமான பேச்சால் அவங்களை யாரும் எப்பவும் சுலபமாய் ஏமாற்றவோ, திசை திருப்பவோ முடியும். நல்லதையும், கெட்டதையும் சீக்கிரமே மறந்துடற வியாதியும் அவங்களுக்கு இருக்கு. இந்த மாதிரி மக்களுக்காக, என் அண்ணன் தன் வாழ்க்கையை அர்ப்பணிச்சுகிட்டு அழியறதை என்னால பார்க்க முடியலை அர்ஜுன். அதனால தான் நான் அரசியல்ல எங்கண்ணாவை ஆதரிக்கலை.”


(தொடரும்)

என்.கணேசன்

No comments:

Post a Comment