என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, May 26, 2025

யோகி 104


பாண்டியனின் அலைபேசி இசைத்தது. அழைப்பது யாரென்று அவர் பார்த்தார். டாக்டர் சுகுமாரன்! ”ஹலோ என்ன டாக்டர்? எப்படி இருக்கீங்க? சௌக்கியம் தானே?”

 

சுகுமாரன் மனமுடைந்து பேசினார். “அப்படி சௌக்கியம்னு சொல்ல முடியாத நிலைமைல இருக்கேன். நம்ம மேல ஏவல் சக்தியை அனுப்பி வெச்ச சில்லறைப்பயலைக் கண்டுபிடிச்சு அவனைத் தீர்த்துக் கட்டினால் ஒழிய நான் சௌக்கியமாய் இருக்கவே முடியாது.”

 

ஏன் டாக்டர் என்ன ஆச்சு?”

 

யாரோ எதோ செய்வினை செஞ்சு எனக்கு பைத்தியம் பிடிச்சிருக்குன்னு என் மனைவி சந்தேகப்படறா. அதைச் சரி செய்ய அவள் ஒரு மந்திரவாதியைத் தேட ஆரம்பிக்கற அளவுக்கு நிலைமை மோசமாயிடுச்சு.”

 

பாண்டியன் வாய் விட்டுச் சிரிக்காமல் இருக்க பெருமுயற்சி எடுக்க வேண்டி வந்தது. ”எதனால அவங்க சந்தேகப்படறாங்க டாக்டர்

 

அவளுக்கு நான் தாயத்து கட்டிகிட்டதையாவது சகிச்சுக்க முடிஞ்சுது. ஆனால் டாமிக்கு தாயத்து கட்டினதை சகிச்சுக்க முடியலை. அவளோட சிநேகிதிகள்ல்லாம் வந்து பார்த்தா கைகொட்டி சிரிப்பாங்களாம். இது உலகத்துல எங்கேயுமே பார்க்க முடியாத மூட நம்பிக்கையாம். நான் இத்தனை நாள் அவளைக் கேலி பண்ணினதை எல்லாம் சேர்த்து வெச்சு இப்போ எனக்கே திருப்பி விடறாள். என் நிலைமை எப்படி ஆயிடுச்சு பார்த்தீங்களா? நானே என் கைலயும், டாமி கழுத்துலயும் இருக்கற தாயத்தை பார்க்கறப்ப எல்லாம் நொந்து நூலாய்கிட்டிருக்கேன். இப்ப அவளும் கிண்டல் பண்றாள். ஆனாலும் நான் அதைக் கழட்டி வீச முடியாத ஒரு  துர்ப்பாக்கியசாலியாய் இருக்கேன்.”

 

அவர் சொன்ன விதம் வேடிக்கையாக இருந்தாலும், பாண்டியனுக்குத் தன் கையிலிருந்த தாயத்தையும் பார்த்த போது சிரிக்க முடியவில்லை. “அப்பறம் எப்படி சமாளிச்சீங்க?”

 

நமக்கு ஆகாதவங்க யாரோ துஷ்ட சக்தியை ஏவி விட்டிருக்காங்க, அதுல இருந்து தற்காத்துக்க தான், யோகிஜி சொல்லி, இப்படி தாயத்து கட்டிகிட்டு இருக்கேன். இதை எடுத்துட்டா குடும்பத்துல இருக்கற எல்லாருக்கும் ஆபத்துன்னு சொன்னேன். யோகிஜி பெயரை சொன்னவுடனே அவள் வில்லங்கமாய் எதுவும் பேசாம சரின்னு சொல்லிட்டாள். ஆனா அவளோட சினேகிதிகள்ல்லாம் வர்றப்ப டாமி எதிர்ல வராதமாதிரி பின்பக்கத்துலயே கட்டி வைக்கணுமாம். சரின்னு சொல்லி இன்னொரு மந்திரவாதி கிட்ட இருந்து தப்பிச்சிருக்கேன். இந்தப் பிரச்சனைக்கு காரணமானவனை கண்டுபிடிச்சு தீர்த்துக் கட்டற வரைக்கும் நாம நிம்மதியாய் இருக்க முடியாது பாண்டியன். அவனைக் கண்டுபிடிச்சிட்டீங்களா?”

 

இல்லை அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாய் நடந்துகிட்டிருக்கு. சீக்கிரத்துலயே கண்டுபிடிச்சுடுவோம் டாக்டர், கவலைப்படாதீங்க

 

இந்த ஒரு மண்டலம் முடியறதுக்குள்ளே அவனைக் கண்டுபிடிச்சுட்டா நல்லா இருக்கும்.”

 

நான் உங்களை விட ரெண்டு மடங்கு தீவிரமாய் அதை நினைக்கிறேன் டாக்டர்....”

 

ரண்டு நாட்கள் இரவு நேரத்தில் முக்தானந்தாவின் வசனம் எதுவும் இருக்காததால் ஷ்ரவன், இடையில் கலையாத நிம்மதியான முழுத்தூக்கம் தூங்கி எழுந்தான்.  இரண்டு நாளும் வழக்கம் போயின. ஒருசில சமயங்களில் அவனைக் கூர்ந்து பார்த்த முக்தானந்தா, மற்ற சமயங்களில் அவனைக் கண்டுகொள்ளாமல் தன்னுடைய உலகத்தில் ஆழ்ந்திருந்தார். தியானமும், தோட்ட வேலைகளும் வழக்கம் போல் போயின. துப்பறியும் வேலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மூன்றாவது நாள் காலை தியான வேளையில் அவன் கண்களை மூடி மந்திரம் ஜபித்துக் கொண்டிருக்கையில் தீ உமிழும் கண்களுடன் ஓநாய் அவனுக்குக் காட்சி அளித்தது. அவன் அதைப் பார்த்து சந்தோஷமாய் புன்னகைத்தான். “ஹாய் நண்பா நலமா?” என்று அதனிடம் கேள்வி கேட்டான்.

 

அது அவனையே பார்த்துக் கொண்டு மிக அருகில் நின்றது. அதனிலிருந்து கிளம்பும் ஏதோ ஒரு சக்தி லேசான வெப்பத்துடன் அவனை ஆக்கிரமிப்பதை ஷ்ரவன் உணர்ந்தான். முதல் முறையும், அது அவன் மேல் தாவிய போது,  இப்படித் தான் ஏதோ நடந்திருக்கிறது என்று அவனுடைய உள்ளுணர்வு தெரிவித்தது. ஆனால் அப்போது அவனால் தாங்க முடிந்திருக்கவில்லை. இப்போதோ அவன் உடல் அந்தச் சக்தியைப் பெற்றிருக்கிறது. அவன் தொடர்ந்து அந்த மந்திர ஜபத்தைச் செய்து கொண்டிருப்பதால் தான் அது சாத்தியமாகி இருக்கிறது என்று அவன் நம்பினான். இப்போதும் அவன் பரசுராமனை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறான்.

 

கண்களில் நெருப்பு உமிழ்ந்து நிற்கும் அந்த ஓநாயிடம் ஷ்ரவன் மனம் விட்டு பிரார்த்தித்தான். “நண்பா. இங்கே வந்து சேர்ந்து விட்டேன். என் வழக்கமான முறைகளின்படி எதையும் கண்டுபிடிக்க நிலைமை இங்கே எனக்குச் சாதகமாய் இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை. நிறைய காலமும் இல்லை. தேவானந்தகிரி இன்னொரு முறை இங்கே வருவதற்குள் நான் வேலை முடிந்து இங்கிருந்து போய்விட வேண்டும். அதனால் மாந்திரீகத்தைத் தான் நான் இங்கே ஆயுதமாகப் பயன்படுத்தப் போகிறேன். அதற்கு நீ தான் எனக்கு வழிகாட்டி உதவ வேண்டும்.”

 

ஓநாய் சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு பின் முக்தானந்தா பக்கம் திரும்பியது. பின் வெளியேறியது. சென்ற முறை இந்த ஓநாய் கல்பனானந்தாவைப் பார்த்துக் கொண்டு நின்றதும், இப்போது முக்தானந்தாவைப் பார்த்து விட்டுப் போவதும், இவர்கள் இருவரையும் கவனிக்கச் சொல்வதாகவோ, இருவரையும் பயன்படுத்திக் கொள்ளச் சொல்வதாகவோ இருக்கலாம்

 

அன்று காலை உணவுக்கு அவர்கள் செல்கையில் ஒரு இளந்துறவி ஷ்ரவனிடம் வந்துஇன்று காலை உங்களுக்கு வேறு ஒரு வேலை ஒதுக்கப்பட்டுள்ளது. நீங்கள் சாப்பிட்டு விட்டு அலுவலகத்துக்கு வாருங்கள்என்று சொல்லி விட்டுப் போனார். 

 

ஷ்ரவன் எதிர்பார்ப்புடன் போனான். கம்ப்யூட்டரில் யார் யாருக்கு என்னென்ன வேலைகள் ஒதுக்கியுள்ளனர் என்பதைப் பதிவு செய்யும் வேலை அது. முதல் அறையில் உள்ள கம்ப்யூட்டரிலேயே செய்வதாய் அந்த வேலை இருந்தது. வழக்கமாய் அந்த வேலையைச் செய்யும் துறவி பிரம்மானந்தாவுடன் நாளை அதிகாலையில் வெளியூர் பயணம் செய்வதால் அந்த வேலையை அவர் அவனுக்குக் கற்றுத்தரப் போகிறார். அந்த வேலை மூன்று நாட்களுக்கு அவனுக்குக் கிடைத்திருக்கிறது. முற்பகல் மட்டுமே அந்த வேலை. பிற்பகலில் அவன் வழக்கம் போல் தன்னுடைய தோட்ட வேலையைச் செய்ய வேண்டும்.

 

ஷ்ரவன் அந்தத் துறவியிடமிருந்து வேலை கற்றுக் கொள்ளும் போது அருகில் அமர்ந்து கண்ணன் பார்த்துக் கொண்டே இருந்தார். ஷ்ரவன் அந்த வேலையை வேகமாகக் கற்றுக் கொண்டதுடன் வழக்கமாய் அந்த வேலையை அத்துறவி செய்யும் வேகத்தில் செய்தது கண்ணனுக்கு ஆச்சரியமாய் இருந்தது.

 

ஒவ்வொரு துறவிக்கும் ஒரு எண் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதே போல் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு எண் ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்தத் துறவியின் எண்ணை ஒரு கட்டத்தில் டைப் செய்தவுடன் மற்ற கட்டங்களில் அவர் பெயர், அவர் தங்கியிருக்கும் அறை எண் தானாக வந்து விடும். அதன் பின் உள்ள கட்டத்தில் அவர் நேற்று செய்த வேலை இருக்கும். இன்றும் அதே வேலை என்றால் மாற்ற வேண்டியதில்லை. வேறு வேலை என்றால், பழைய வேலையை நீக்கி விட்டு, அந்தக் கட்டத்தில் அந்தப் புதிய வேலைக்கான எண்ணை டைப் செய்தால் அந்த வேலையின் பெயர் வந்து விடும். எல்லோருடைய அன்றைய வேலையையும் டைப் செய்து முடித்த பின் கடைசியில் எந்த வேலைக்கு எத்தனை பேர் ஒதுக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற தகவல் கம்ப்யூட்டரில் தானாகத் வரும்படி அதன்ப்ரோகிராம்போடப்பட்டு இருந்தது. 

 

சிறிது நேரம் அவர்கள் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்த கண்ணன் பிறகு போய் விட்டார். அவர் போகும் வரை ஒருவித இறுக்கத்தில் இருந்த அந்த இளம் துறவி, அவர் போன பின் இறுக்கம் தளர்ந்து இயல்பு நிலைக்கு மாறியதை ஷ்ரவனால் கவனிக்க முடிந்தது. அந்த இளம் துறவியிடம் பேச்சுக் கொடுத்த போது நாளை பிரம்மானந்தாவுடன் பயணம் போவதில் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது தெரிந்தது. அங்கே அவர் வந்து சேர்ந்து மூன்று வருடங்களாகின்றன என்றும், இப்போது தான் யோகிஜியுடன் செல்லும் முதல் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் உற்சாகம் பொங்கச் சொன்னார்.

 

இப்படி யோகிஜியுடன் பயணம் போகிறவர்களை யார் தேர்ந்தெடுப்பது, யோகிஜியேவாஎன்று ஷ்ரவன் அவரிடம் கேட்டான்.

 

இல்லை. யோகிஜி இதில் அதிகம் தலையிடுவதில்லை. மேனேஜர் பாண்டியன்ஜியும், சுவாமிஜி கண்ணனும் தான் தேர்ந்தெடுப்பவர்கள்  என்றார் அவர்.

 

ஷ்ரவன் தலையசைத்தான். அவனுக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் சுவாரசியமாக இருக்கும் என்று ஷ்ரவன் நினைத்தான். அவனையே பார்த்துக் கொண்டிருந்த அந்த இளம் துறவி சொன்னார். “உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் என்னைப் போல் நீங்கள் மூன்று வருஷங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. சீக்கிரமாகவே கிடைக்கலாம்.”

 

ஷ்ரவன் புன்னகைத்தான்.


(தொடரும்)

என்.கணேசன்





 

1 comment:

  1. ஷர்வனின் அடுத்த நகர்வுக்கு முக்தானந்தா உதவுவார் என்பதை ஓநாய் கூறுகிறது.

    ReplyDelete